Sunday, January 13, 2019

கொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்

சமீபத்திய பரபரப்பு கொடநாடு.

டெல்லியில் இருந்து வெளியாகும் 'தெஹல்கா' பத்திரிக்கையின் 'முன்னாள் ஆசிரியர்' சாமுவேல் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு பேரை வைத்து ஒரு பரபரப்பான பேட்டியை அளித்தார்.

பேட்டியின் சாரம்சம் கொடநாடு ஜெயலலிதா வீட்டில் நடந்த கொள்ளைகள் அது தொடர்பான கொலைகள் ஆகியவற்றை நடத்தியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்பது. எடப்பாடி அவர்களது திட்டப்படி தான் அந்த கொள்ளைகள் நடத்தப்பட்டது எனவும், அதிமுக பிரமுகர்கள் பலரது ஆவணங்கள வீடியோ பதிவுகள் அங்கிருந்து கொள்ளை அடிக்கப்பட்டன எனவும், அவை இப்போது எடப்பாடியாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன எனவும், அதை வைத்து தான் கட்சியினரை மிரட்டி பணிய வைத்திருக்கிறார் எனவும் குற்றம் சுட்டப்பட்டுள்ளது.

அந்த இருவரும் அந்த கொள்ளையில் தொடர்புள்ளதாக சொல்லப்படுபவர்கள். அவர்களது 'வாக்குமூலமாக'வே பலரும் இதை பார்க்கிறார்கள்.

விஷயம் வெளியானதும் திமுகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் இதனை பெரிய அளவில் பரபரப்பாக்கி இருக்கின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையும், உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
திமுக இதனை சட்டப்போராட்டமாக முன்னெடுக்கவும் முனைப்பு காட்டுகிறது.

இதில் எனக்கு சில மாற்று கருத்துக்கள் உள்ளன.

கொடநாடு கொள்ளைகள் மற்றும் அது தொடர்பான கொலைகள் ஆகியவற்றில் மறைந்திருக்கும் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சரியே. ஒன்றரை வருடங்களாக இது குறித்து வலியுறுத்தாமல் இருப்பதன் ஆச்சர்யம் இனியும் விலவில்லை.

ஆனால் அதில் எடப்பாடி தொடர்புடையவர் எனக் கூறி பதவி விலகச்சொல்வது கொஞ்சம் அதீதமாகவே படுகிறது எனக்கு. ஆட்சிக்கு எதிரான இன்னொரு வாய்ப்பாக இதனை திமுக கருதுவது சரிதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

முதலாவதாக, பேட்டி அளித்தவர் 'தெஹல்கா'வின் 'முன்னாள் ஆசிரியர்'. அந்த இருவரும் ஏற்கனவே போலீஸால் விசாரிக்கப்பட்டவர்கள். அப்போது இது குறித்து எதுவும் சொல்லாதவர்கள்.

இப்போது சொல்லி இருப்பது உண்மை என உறுதியாக தெரிந்திருந்தால் சாமுவேல் அதனை ஏதேனும் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்ய செய்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அது அசைக்கமுடியாத ஒரு ஆவணமாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

ஆனால் இப்போதைக்கு இதை ஒரு பரபரப்புக்கான பேட்டியாக மட்டுமே வெளியிட்டதால் அதன் நம்பகத்தன்மை உறுதியாக இல்லை. யார் வேண்டுமானாலும் யாரை குறித்து வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டியாக குற்றச்சாட்டு கூற முடியும். அதன் அடிப்படையில் எல்லாம் ஒருவரை பதவி விலக சொல்லி கேட்க முடியாது என்பது திமுகவுக்கு தெரியாததல்ல. இதே கருத்தை தலைவர் கலைஞர் பலமுறை சொல்லியும் இருக்கிறார்.

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியாருக்கு உண்மையில் தொடர்பு இருக்கலாம். அல்லது தொடர்பு இல்லாமலும் இருக்கலாம். வெறும் ஒரு பேட்டியின் அடிப்படையில் அதனை உறுதி செய்துவிட முடியாது. ஒரு முறையான முதற்கட்ட விசாரணை நடத்தி அது எடப்பாடியாரை நோக்கி சென்றால் மட்டுமே அந்த கோரிக்கைக்கு மரியாதை இருக்கும்.

அல்லது இந்த குற்றச்சாட்டை வைத்தது ஒரு நம்பகத்தன்மை கொண்ட அமைப்பாக இருக்கவேண்டும். போலீஸ் ஆவணம், நீதிமன்ற குறிப்பு, புலனாய்வு அமைப்புக்களின் குறிப்பு போன்றவை

2ஜி விவகாரத்தில் கூட ராசா அவர்களை ராஜினாமா செய்யக் கோரும் முன்பாக CAG கொடுத்த அறிக்கை மற்றும் அதன் அடிப்படையிலான முதற்கட்ட விசாரணை இருந்தது. அந்த குற்றச்சாட்டுக்கள் தவறு என பின்னர் நிரூபிக்கப்பட்டாலும் கூட முதற்கட்ட வலுவான ஆவணம் இல்லாமல் பதவி விலக சொல்லி கேட்க முடியாது என்பதை அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இப்போது யாரோ ஒரு தனி நபர், ஒரு முன்னாள் பத்திரிக்கை ஆசிரியர் ஆகியோரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவி விலகச்சொல்லி கேட்பது சரியென தோன்றவில்லை.

எடப்பாடி அவர்கள் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருப்பதுடன், சாமுவேல் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார். தமிழக போலீஸ் டெல்லியில் பேட்டி அளித்தவர்களை கைதும் செய்திருக்கிறது.

இந்த சூழலில், நீதிமன்றத்தில் கொடுக்காமல் பேட்டியில் கொடுத்த அந்த வாக்குமூலம் உண்மையாகவே இருந்தாலும் போலீஸை வைத்து அதை பொய்யென சொல்ல வைக்க அரசுக்கு எளிதாக முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒரு வாரத்திலேயே இது பலவீனமாகிப்போய்விட கூடிய விஷயமாகவே படுகிறது. உண்மையில் இந்த வாக்குமூலத்தை சட்டரீதியாக செய்யாமல் பரபரப்பு பேட்டியாக மட்டுமே செய்திருப்பதே ஒரு மிகப்பெரிய நெருடலை தருகிறது.

இந்த சூழலில் இந்த பேட்டியை வைத்து ஓரிரு சாதாரணர்களின் குற்றச்சாட்டை வைத்து எல்லாம் முதல்வரை பதவி விலக வைக்கலாம் என எதிர்பார்க்கும் அளவுக்கு திமுக இறங்கி விடவில்லை என்றே நான் நம்புகிறேன்

திமுக செய்யக்கூடியதெல்லாம், கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை கேட்கலாம். அவ்வளவு தான். அந்த விசாரணை தான் அதில் யார் தொடர்புடையவர் என்பதை தீர்மானிக்கும். விசாரணைக்கு முன்பாகவே ஒருவரை நோக்கி அந்த வழக்கை செலுத்துவது சரியல்ல.

எடப்பாடி குற்றம் செய்தவராகவே கூட இருக்கலாம். ஆனால் அதை கொடநாடு குறித்த விசாரணை தான் தெளிவாக்கவேண்டும். ஒருவேளை எடப்பாடி அல்லாமல் வேறு யாரேனும் கூட காரணமாக இருக்கலாம்.

திமுகவின் கோரிக்கை விசாரணையை நோக்கி தான் இருக்கவேண்டுமே தவிர விசாரணைக்கு முன்பே எடப்பாடியாரை குற்றவாளி ஆக்குவதாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

ஒருவேளை, அந்த பேட்டியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு தவறாக இருக்கும் பட்சத்தில் அதை நம்பி திமுக முன்னெடுத்த நடவடிக்கைகள் கேலிக்குள்ளாவது எதிர்வரும் தேர்தலில் எதிர்மறை இமேஜை உருவாக்கும் ஆபத்து உள்ளது.

வேகத்தை விட இப்போதைய அவசியம் விவேகம் தான்.

Wednesday, January 2, 2019

சபரிமலை பெண்கள் தரிசனம்

இன்று சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.

இதுவரை தரிசனம் செய்ய வந்த பெண்கள் பலத்த விளம்பரங்களை செய்து விட்டு வந்ததால் பல பல பிரச்சனைகள் ஏற்பட்டன. சில அரசியல் கட்சியினரும் சில இயக்கங்களும் தொடர்ந்து அங்கே முகாமிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனால் தானோ என்னவோ, இன்று காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களின் பலத்த பாதுகாப்புடன் விடியற்காலை நேரத்தில் அந்த இரண்டு பெண்களையும் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களது தரிசனம் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்ப்படுத்தி தனது கடமையை நிறைவேற்றி விட்டது கேரள அரசு.

விஷயம் தெரியவந்ததும், கேரளம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்ததோடு நாளைய தினம் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தரிசனம் செய்ய விரும்பவேயில்லை என நிறுவ, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிற்சில இயக்கங்கள் ஒரு சிலரை ஆங்காங்கே அழைத்து வந்து ஐயப்ப ஜோதி என்றொரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியது.




அதை முறியடிக்கும் விதமாக கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 'மகளிர் சுவர்' அமைக்க அழைப்பு விடுத்திருந்தது. உண்மையிலேயே பெண்களின் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் ஐயப்ப தரிசனத்தை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா? என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் விதமாக, நேற்றைய தினம் (01.01.2019) மாலை 4 மணி முதல் 4:30 வரை, அரை மணிநேரம் மட்டும் மகளிர் சுவர் அமைக்கவும், சபரிமலையில் பெண்களை ஐயப்ப தரிசனத்துக்கு அனுமதிக்கவேண்டும் என்கிற கருத்துடைய பெண்கள் அதில் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சுமார் 10 லட்சம் பெண்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காசர்கோடு முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரை சுமார் 620 கி.மீ நீளத்துக்கு கிட்டத்தட்ட 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்து நின்று 'சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்கவேண்டும்' என ஆதரவு குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே எதிர்பார்க்காத சந்தோஷ அதிர்ச்சி. இந்த மாபெரும் வெற்றி தந்த உத்வேகத்தில் இன்று காலை தைரியமாக சபரிமலையில் பெண்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து இருக்கிறது கேரள போலீஸ்.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவரம் வெளியானதுமே சபரிமலை கோவில் தந்திரி, ஐயப்பன் சன்னிதானத்தின் நடையை அடைத்து ஒரு மணி நேரம் 'பரிகார பூஜைகள்' நடத்தியபின் மீண்டும் தரிசனத்துக்கு நடை திறந்து விட்டிருக்கிறார்.

பெண்கள் தரிசனம் செய்ததற்காக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்தது என்பது, பெண்களை, அவர்களது வழிபாட்டு உரிமையை, உச்சநீதிமன்றம் தந்த உத்தரவை அவமதிக்கும் செயல் என்கிற எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் 'பரிகார பூஜை என்பது இவ்வளவு தானே? இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? பேசாமல் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை பெண்களுக்கு என தரிசனத்துக்கு ஒதுக்கி தந்து அது முடிந்த பின் இந்த பூஜையை நடத்தி பொது தரிசனத்துக்கு அனுமதிக்கலாமே' போன்ற குரல்களும் கேட்க தொடங்கி இருக்கிறது.

பெண்கள் தரிசனம் செய்தால் அது ஜஸ்ட் ஒரு பரிகார பூஜை செய்தால் நிவர்த்தி ஆகக்கூடிய அளவிலான விஷயம் தான் என தந்திரி மறைமுகமாக புரிய வைத்திருப்பது, இத்தனை நாளும் பலத்த போராட்டங்கள் எல்லாம் நடத்தி வந்த அரசியல் இயக்கத்தினருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பின்னடவை சற்றும் எதிர்பார்க்காத போராட்ட குழுவினர் நாளை முழு அடைப்பை அறிவித்து இருப்பது கூட அவர்களது பதற்றத்தையே காட்டுகிறது. அதிலும், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக சொல்லி போராடி வருவது, 'பரிகார பூஜை செய்தபின் புனிதமாகிவிட்டது'  என உறுதி அளித்த சபரிமலை தந்திரியின் வாக்கை கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

சபரிமலை தந்திரியே சொன்னபின்னும் அதை ஏற்காமல் போராடுவதை பார்த்தால் அவர்களது நோக்கம் ஐயப்பனோ, பக்தியோ, பாரம்பரியமோ, கலாச்சாரமோ, சாஸ்திரமோ, சம்பிரதாயமோ அல்ல.. வெறும் அரசியல் லாபஙகளுக்காகவும், கேரளத்தில் அமைதியின்மை நிகழவேண்டும் என்கிற குறிக்கோளுக்காகவும் தான் இப்படியான போராட்டங்கள் நடக்கிறதோ என்கிற ஐயத்தை எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

எது எப்படியாயினும் கேரள அரசும் கேரள போலீசும் மிக பெரிய விஷயத்தை வரலாற்று நிகழ்வை இன்று நடத்தி காட்டி இருக்கிறார்கள்.

பெண்ணை தன்னில் ஒரு பாதியாக சரிசமமாக நடத்தவேண்டும் என்றுணர்த்த சிவசக்தியை கொடுத்த இந்து மதமும் அதன் உண்மையான பக்தர்களும், பெண்ணுரிமைக்கு ஆதரவானவர்களும் நிச்சயமாய் இதனை பாராட்டுவார்கள்.

வாழ்த்துக்கள்.


Printfriendly