Tuesday, November 8, 2022

EWS வழக்கு தீர்ப்பு

டந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி, என பல கட்சிகளும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்து இருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக இந்த சட்டத்தை ஆதரித்தது. திமுக இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.

Economically Weaker Section எனும் EWS சட்டம் சமூக நீதிக்கு எதிரானது என பல எதிர்ப்புகள் வந்து, இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டன.

இந்த சட்டத்தின் படி ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு கீழே உள்ள முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெற தகுதி பெறுவார்கள். வேறு எந்த இட ஒதுக்கீட்டிலும் வராதஅ சமூகத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

சுருக்கமாக சொன்னால் முற்பட்ட அல்லது சமூக ரீதியாக முன்னேறிய வகுப்பினரில் உள்ள பொருளாதார நலிவடைந்த மக்கள்.

ஆனால் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வாங்கும் ஒருவர் எப்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவில் வர முடியும்? என்கிற கேள்விக்கு இது வரை விடை இல்லை.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் சாசனத்தில் வழி இல்லை. சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. எனில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம் செல்லுமா என்பதும் மற்றொரு கேள்வி.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், மொத்த இட ஒதுக்கீடு என்பது 50% க்கு கூடுதலாக கொடுக்க முடியாது என சொல்லி இருக்கிறது. ஏற்கனவே 22.50% தாழ்த்தப்பட்ட பழஙகுடி மக்களுக்கும் 27% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கீடு கொடுத்து மொத்தம் 49.50% ஒதுக்கீடு கொடுத்து விட்டதால் இதற்கு மேல் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனில் இப்போது கூடுதலாக 10% இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும்? என்பதும் கேள்வியே. 

(இந்த 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. தமிழ் நாட்டை பொறுத்தவரை 69% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டு இருப்பதால் சட்ட ரீதியான பாதுகாப்பும் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்த 50% உச்ச வரம்பு எல்லாம் இல்லை)

இப்படியான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சமூக நீதிக்கான போராட்டத்தை எப்போதும் முன்னெடுத்து செல்லும் இயக்கமான திமுக இந்த வழக்கில் தொடர்ந்து ஆணித் தரமான வாதஙகளை எடுத்து வைத்து, EWS ஒதுக்கீடு எந்த அளவுக்கு சட்டத்தின் பார்வையில் தவறானது என விரிவாக வாதாடியது.

இந்த வழக்கில் நேற்று வந்த தீர்ப்பு, இந்த வழக்குக்கான தீர்வாக அமையாமல் மேலும் பல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு எல்லோரையும் தள்ளும் அளவுக்கு புதிய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. அதில் நீதியரசர்கள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்டிவாலா ஆகிய மூன்று நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லும் என்றும், நீதியரசர்கள் ரவீந்திர பட், யூ. யூ.லலித் ஆகிய இரண்டு நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்து உள்ளனர்.

இது தவிர நேற்றைய தீர்ப்பு இன்னும் பல விஷயங்களையும் குறிப்பிடுகிறது. அதாவது மிக நீண்ட காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடர முடியாது என்றும், விரைவில் இட ஒதுக்கீடு முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், எல்லா வகுப்பினருக்கும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்கிறது.

பொருளாதாரம் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது. இன்றைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நாளையே கல்வி கற்று நல்ல வேலை நல்ல பதவி பெற்று பொருளாதார ரீதியாக முன்னேறி விட முடியும். ஆனால் சமூக ரீதியான ஒடுக்குமுறை என்பது எவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தாலும் மாறவே மாறாது. எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு எல்லோரையும் போல சமமான உரிமைகள் கிடைப்பது இல்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

எனவே பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பதே அடிப்படையில் தவறான முடிவு.

ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் மூன்று நீதிபதிகளின் கருத்துப் படி, இப்போதைக்கு EWS ஒதுக்கீடு செல்லும் எனபது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் செய்தி. எனவே இப்போதைக்கு EWS ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

EWS ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்பது தான் ஆச்சர்யம்.



ஏற்கனவே சொன்னது போல இந்திய அரசியல் சாசனம் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகுக்கவே இல்லை எனும் போது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுக்க முடியுமா என்கிற புதிய கேள்வி இப்போது எழுகிறது.

எனவே, இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அரசியல் சாசன பெஞ்ச் முன் விவாதிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் சாசன சட்ட விதிகளில் இல்லாத ஒரு விதியை நீதிபதிகள் உருவாக்க முடியுமா? 50% ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்க முடியுமா? என்பன போன்ற ஆக்கப்பூர்வமான விவாதஙகளை இனி எதிர்பார்க்கலாம்.

1990 களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்ட உடனே நம்முடைய மிகப்பெரிய போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக கருதி ஓய்வெடுக்க தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு மேலிடுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு எதற்காக தேவை என்பதே புரியவில்லை. EWS ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்படும் மக்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அரசியல் ரீதியாக தாங்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே ஆதரித்து வரும் மக்களாக அவர்கள் மாறிப் போயிருக்கும் நிலையில், நம்முடைய முதல் கட்ட நடவடிக்கை இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதல்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டியதாக இருக்க வேண்டும். அதற்காக, சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நேற்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை கூட அதை தான் சொல்லி இருக்கிறது. 

சமூக ரீதியான விளக்க கூட்டஙகள், அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் ஆகியவற்றுடன் சட்ட ரீதியான போராட்டமும் ஒருங்கிணைந்து தான் கால காலமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கான நீதியை பெற்று தர முடியும்.

நேற்றைய தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்யப்படும் என நம்புகிறேன். இதுவரை அரசியல் சாசன பெஞ்ச் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுத்தது இல்லை என்பதால் அங்கே இந்த சமூக நீதி போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்.



Monday, October 24, 2022

தீபாவளி கொண்டாட்டம்

ல்லா சிறுவர்களை போலவே எனது பால்யமும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்தே கழிந்ததால் பண்டிகைகளை பல நேரங்களில் நான் சிறப்பாக எல்லாம் கொண்டாடியது இல்லை.

எனினும், எல்லோரையும் போலவே எனக்கும் தீபாவளி பண்டிகை என்பது கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது தான்.

எந்த பண்டிகை கொண்டாடாமல் போனாலும், தீபாவளிக்கு எப்படியாவது புது துணி, பட்டாசு, பலகாரம் கிடைத்து விடும். வருஷம் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது என்னளவில் தீபாவளி தான்.



உறவுகள் என்று எல்லாம் அப்போது பெரிதாக யாரும் கண்டு கொள்வது இல்லை என்பதால், உறவினர் வீடு விஜயம், கூடி கொண்டாடுதல் போன்றவை எதுவும் இருந்தது இல்லை. ஆனாலும் எப்படியாவது தீபாவளிக்காக புது துணி கடைசி நேரத்திலாவது எடுத்து பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவது தடைபட்டது இல்லை.

முக்கியமான விஷயம், தீபாவளிக்கு கண்டிப்பாக புதுப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்பது. தீபாவளி ரிலீஸ் படங்களை தீபாவளி அன்றே பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது.

குணா, தளபதி இரண்டும் ஒரே நாளில் பேக் டூ பேக் பார்த்த பரவச நினைவுகள் எல்லாம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

வளர்ந்து எப்படியோ தட்டு தடுமாறி படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாக சம்பாதிக்க தொடங்கிய காலத்தில் மெல்ல மெல்ல இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் குறைந்து போய் விட்டது.

அதிகமாக புத்தகஙகள் படிக்க ஆரம்பித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். புத்தகம் வாசித்தல், சிந்தித்தல்,  சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவை இது போன்ற பண்டிகைகள் பற்றி நமக்குள்ளேயே கேள்விகளை எழுப்ப தொடங்கி விடும். அவற்றுக்கான சரியான, நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் கிடைக்கும் வரையும் அந்த கேள்விகள் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.

அந்த கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காததாலோ என்னவோ மெல்ல மெல்ல தீபாவளி பண்டிகை மீதான ஆர்வம் எனக்கு குறைய தொடங்கி விட்டது.

அப்படியான கேள்விகள் நமக்கு அமையும் ஆசிரியரை பொறுத்தும் அமையலாம். 

என் பள்ளிக் காலங்களில் தீபாவளி பண்டிகையின் வரலாறு குறித்து என் ஆசிரியர்களில் ஒருவர் சுருக்கமாக சொன்னது இங்கே பலரும் விளக்கமாக இப்போது பல நண்பர்கள் இணையத்தில் விரிவாக எழுதுவதை பார்க்கையில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் சந்தோஷமான பண்டிகையாகவும், தமிழ் நாட்டில் முன்னோர்/நீத்தோர் வழிபாடாகவும் கொண்டாடப்படும் வித்தியாசம் எதனால்? என என் சக மாணவர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார்.

இது குறித்து எனது ஆசிரியர் சொன்ன காரணங்களில் ஒன்று.. "நரகாசுரன் என சொல்லப்படும் அசுரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பவர் தென்னாட்டு கடைநிலை மக்கள் என்பதை போன்ற புனைவுகள் தான் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.



இறைவனின் பிரியத்துக்குரிய உயர் வகுப்பு தேவர்கள் யாகம் செய்வதற்கு நரகாசுரன் இடையூறாக இருப்பதாக கிருஷ்ணரிடம் தேவர்கள் புகார் சொல்ல அவர்களுக்காக நரகாசுரனை பகவான் கிருஷ்ணன் வெற்றி கொள்கிறார். அந்த வெற்றியை கொண்டாடும் பண்டிகையாக வட மாநில மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

அசுரர்கள் என குறிப்பிடப்படும் மக்களாகிய நாம், தோல்வி உற்ற காரணத்தால் நீத்தார் வழிபாடாக முன்னோர் வழிபாடாக இந்த நாளை கொண்டாடுகிறோம். அதனால் தான் தீபாவளி அன்று உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து குளிப்பது (பெல குளி போல), முன்னோருக்கு படையல் வைப்பது போன்ற சடஙகுகள் நாம் செய்கிறோம். காரணம் இது நம் முன்னோர்கள் இழந்த நாள். அதனால் இதில் நாம் மகிழ்ச்சியாக கொண்டாட எதுவும் இல்லை" என சொல்வார் ஆசிரியர்.

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இது என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் சென்று தங்கிக் கொண்டது. 

எனது ஆசிரியர் அப்போத  சொண்ணதைப் போன்ற கருத்துக்களைக் கொண்ட பல பதிவுகள் இங்கே சமீப காலமாக இணையத்தில் காணக் கிடைக்கிறது. 

நான் ஏற்கனவே சொன்னதை போல, சம்பாதிக்க தொடங்கிய பிறகான பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு இருக்கையில் கொண்டாட்டங்கள் குறைந்து போக தொடங்கியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. 

எந்த குழப்பமும் இல்லாத பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட எந்த தயக்கமும் வந்தது இல்லை. ஆனால், விடை தெரியாத கேள்விகள் வேறு உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்ததால் தீபாவளிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டேன்.

சில வருடங்கள் இப்படி போக, சிவகாசி பட்டாசு ஆலை விபத்து ஒன்று 2000 களின் துவக்கத்தில் நிகழ்ந்து பல குழந்தை தொழிலாளர்கள் உயிரிழந்த செய்திக்கு பின் பட்டாசு வாங்குவது குறைந்து, பண்டிகை ஆர்வமே இல்லாத போது புது துணி எதுக்கு என அதுவும் நின்று, நாம் தோற்ற நிகழ்வுக்கு வாழ்த்து எதற்கு என வாழ்த்து அட்டை அனுப்புவதற்கும் மனமின்றி நிறுத்தி.. சில ஆண்டுகள் இப்படியே கழிந்தது.

ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே.

மீண்டும் குடும்பம், புதிய உறவுகள், சம்பாத்தியம், விட்டு போன உறவுகள் என எல்லாம் சேர சேர.. நாமும் ஊருடன் சேர்ந்து வாழ தயார் ஆகி தீபாவளி கொண்டாடும், புது துணி எடுக்கும், குழந்தைக்காக பட்டாசு வாங்கும், இனி பிரிந்து போய் விடாமல் தக்கவைத்து கொள்வதற்காக தேடி தேடி போய் உறவுகளுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் நிகழ்வாக தீபாவளி என் வாழ்வில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.

வாழ்க்கையில் நமது கொள்கைகளை விடவும் மேலானதாக ஆகி விடுகிறது குடும்பத்திற்கான சில சடஙகுகள்.

அப்படி ஒரு சடங்காக, சம்பிரதாயமான நிகழ்வாக, இன்றைக்கும் கழிந்து போய் கொண்டு இருக்கிறது இந்த தீபாவளி. 

இனி என்றைக்கும்.. 


Monday, August 22, 2022

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்

ர்ச்சகர்கள் வழக்கில் இன்று திமுக அரசின் முடிவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உள்ளது.

பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்கிற நிலையை மாற்றி, பிராமணர் அல்லாத ஹிந்துக்கள் எல்லோரும் முறையாக வேதாகமம் படித்தால் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுகவின் சட்டம் உறுதி செய்து உள்ளது.

அந்த சட்டத்தை எதிர்த்து பிராமணர்கள் தாக்கல் செய்த வழக்கில் தான் இன்றைக்கு திமுக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பு ஆகி இருக்கிறது.



இந்துக்களாய் ஒன்றிணைவோம் என தேர்தலுக்காக மட்டும் பேசும் பாஜக போல அல்லாமல், உண்மையிலேயே இந்துக்களாக ஒன்றிணைத்து உள்ளது திமுக.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என ஹிந்துக்களை இரண்டாக பிரித்து வைத்து பாகுபாடு பார்த்து பதவி கொடுத்த நிலையை மாற்றி எல்லா ஹிந்துக்களும் ஹிந்துக்களே எனும் ஒற்றை புள்ளியில் கொண்டு வந்து எல்லோரையும் சமமாக பாவித்து பதவி கொடுக்க திமுகவின் புதிய சட்டம் வழி செய்கிறது.

ஹிந்துவாக இருந்தும் இறைவனுக்கு சேவை செய்ய முடியவில்லையே என வருந்திய பிராமணர் அல்லாத ஹிந்துக்களுக்கு அந்த வாய்ப்பை அந்த உரிமையை இன்றைக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறது திமுக.

இந்துக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய பாராட்டத்தக்க செயல் இது என்பதில் சந்தேகம் இல்லை.



நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அப்படி நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்படும் உரிமை பிரச்சனைகளில் கூட திமுக பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக நின்று அவர்களுக்கான உரிமை கிடைக்க எப்போதும் போராடும் என்பதற்கு இன்றைய தீர்ப்பு இன்னும் ஒரு சான்று

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் திமுக 🙏🙏

Sunday, August 14, 2022

வீட்டு வாடகைக்கு GST - விளக்கங்கள்

நடந்து முடிந்த GST கவுண்சில் கூட்டத்தில் நிறுவனஙகள் வாடகைக்கு எடுக்கும் வீடுகளுக்கும் இனி GST வரி செலுத்த வேண்டும் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிறுவனஙகள் எதற்காக வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்?



உதாரணமாக அரியலூர் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த தொழிற்சாலைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள், அதிகாரிகள், பொருட்கள் வழங்கும் நிறுவனததினர், சேவை வழங்கும் நிறுவனத்தினர், புதிய ஆர்டர்கள் வாங்க வருவோர் என பலரும் தொழில் நிமித்தமாக வந்து செல்வார்கள்.

திருச்சியில் தங்கி அங்கே வந்து செல்ல சிரமப்படுவதை தவிர்க்க தொழிற்சாலை நிர்வாகம் அந்த ஊரிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும். 

தொழில் நிமித்தமாக தொழிற்சாலைக்கு வருவோர் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி செல்ல அந்த வீடு பயன்படும். 

அந்த தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கிறது என வைத்து கொள்வோம். அங்கிருந்து இதே நிறுவனத்தின் அதிகாரிகள் தொழிற்சாலையில் மீட்டிங், ரிவியூ போன்றவற்றுக்கு வரும் போதும் அந்த வீட்டை பயன் படுத்தி கொள்வார்கள்.

இது ஒரு உதாரணமாக சொன்னது தான்.

டெல்லி மும்பை சென்னை பெங்களூரு ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் தலைமை அலுவலகம் கொண்ட நிறுவனஙகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தங்கள் நிறுவன ஊழியர்கள் அதிகாரிகள் தங்க அங்கே பல வீடுகளை வாடகைக்கு எடுத்து வைக்கும்.

ஒரு சில பெரிய நிறுவனஙகள் தங்கள் நிறுவன இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றவர்களுக்கு தங்குமிடம் கொடுப்பது வழக்கம். கம்பெனி செலவில் வீட்டு வசதி கொடுப்பது.. குறிப்பாக அந்த அதிகாரிகள் வெளியூர் ஆட்களாக இருந்து இந்த வேலைக்காக இந்த ஊருக்கு வரவேண்டும் என்று இருந்தால்.. அவர்களை போன்றவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது நிறுவனஙகள் வழக்கமாக செய்வது தான்.

இப்படியாக தொழில் நிமித்தமாக கெஸ்ட் ஹவுஸ், transit accommodation, employee accommodation என பல காரணங்களுக்காக வீடு வாடகைக்கு எடுப்பது உண்டு.

அவ்வாறு எடுக்கப்படும் வாடகை வீடுகளுக்கு இனி GST வரி உண்டு என்பது தான் GST கவுண்சில் எடுத்து இருக்கும் முடிவு.

ஒரு நிறுவனம் தனது தொழில் சார்ந்து வாடகைக்கு எடுக்கும் அலுவலகம், தொழிற்சாலை, கடை, வணிக வளாகம் போன்றவற்றுக்கு எப்படி வரி கட்டுகிறதோ அதே போல தொழில் நிமித்தமாக எடுக்கும் வீடுகளுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது சரியான முடிவு தான்.

இந்த வரியை கூட வீட்டு உரிமையாளர் செலுத்த தேவை இல்லை. 

வாடகைக்கு வீடு எடுக்கும் நிறுவனமே Reverse Charge Mechanism (RCM) முறையில் இந்த GST வரியை கட்டி விடும்.

அப்படி கட்டிய வரியை Input Tax Credit ஆக மீண்டும் அந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். தொழில் நிமித்தமாக எடுத்த வீடு என்பதால் ITC கு தடை இல்லை.

இதனால் அரசுக்கு ஒரு பைசா வருமானமும் இல்லை. நிறுவனஙகளுக்கு ஒரு பைசா நஷ்டமும் இல்லை.

யார் யாருக்கு வாடகையாக எவ்வளவு தொகை ஒரு ஆண்டில் கொடுக்கப் படுகிறது. அப்படி வாடகையாக வாங்கும் வருவாயை வீட்டு உரிமையாளர் தனது வருமான வரி விவரஙகளில் முறையாக காட்டி இருக்கிறாரா போன்ற தகவல்களை ஆராய இந்த புதிய நடைமுறை உதவும்.

இதன் மூலம் இது வரை இருந்த வருமான வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்படும்.

இந்த செய்தியின் உண்மை தன்மை புரியாமல் இனி வாடகை வீடுகளுக்கு எல்லாம் GST வரி விதிக்கப்பட்டு உள்ளது என ஒரு தவறான செய்தி இணைய தளங்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

தனி நபர் தனது குடும்பத்துக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு GST கிடையாது.

நிறுவனஙகள் தங்கள் தொழில் தேவைக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு மட்டுமே GST வரி விதிக்கப்படும்.

அந்த வரியை நிறுவனஙகள் செலுத்தி திரும்ப எடுத்துக் கொள்ளும்.

யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாத வெறும் declaration process தான் இது.

நன்றி




Monday, June 27, 2022

வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டண சர்ச்சை

மிழ் நாட்டில் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்று ஒரு பொய்யான புரளி பரவலாக சுற்றலில் விடப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அதாவது இந்து கோவில்களுக்கு ₹8.00/- என்றும் கிறித்தவ சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதிகளுக்கு ₹2.85/- என்றும் ஒரு யூனிட்டுக்கு மின் கட்டணம் வசூலிக்க படுகிறது எனவும் இது இந்து மதத்துக்கு காட்டப்படும் பாகுபாடு எனவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக மின்சார துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் விரிவாக விளக்கம் அளித்த பிறகும் வதந்தி நின்ற பாடில்லை.

உண்மையில் என்ன தான் பிரச்சனை என பார்ப்போம்.

தமிழ் நாட்டை பொறுத்த வரை மின்சார கட்டணம் விதிக்க வழிபாட்டு தலங்கள் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

1. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்கள். அதாவது அந்த கோவில்களின் அனைத்து நிர்வாகமும் சொத்துக்களும் அரசுக்கு சொந்தமானது. அதை நிர்வாகம் செய்வதும் அரசு தான். எனவே அது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என வகைப்படுத்த பட்டு உள்ளது.

2. இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ள இந்து கோவில்கள். கோவிலின் அறங்காவலர் குழு கோவில் நிர்வாகத்தையும் சொத்துக்களையும் நிர்வகிக்கும். இந்து சமய அறநிலைய துறை அந்த ஆலயத்தின் வருவாயை, கணக்கு வழக்குகளை கண்காணிக்கும். எனவே இது இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

3. கிறித்தவ மத சர்ச்சுகள்

4. இசுலாம் மத மசூதிகள்

இந்த நான்கு வகை வழிபாட்டு தலங்களும் மின்சார கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ₹2.85/- செலுத்தினால் போதும். இது முதல் 120 யூனிட் வரையான கட்டணம்.

120 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹5.75/- செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த கட்டண விகிதத்தில் எந்த பாகுபாடும் இல்லை.

இந்து கோவில்கள், கிறித்தவ சர்ச்சுகள், இசுலாம் மசூதிகள் என அனைத்தும் ஒரே கட்டண விகிதம் தான் நிர்ணயம் செய்யப்பட்டு செலுத்தி வருகின்றன. இதில் யாருக்கும் உயர்வு தாழ்வு சலுகை எதுவும் இல்லாமல் ஒரே மாதிரியான மின் கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர, இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, தனியாரால் நடத்தப்படும் வணிக ரீதியான கோவில்கள், வழிபாட்டு தலங்கள் என்கிற வரையறைக்குள் வராது.

இவை தனியாரால் நடத்தப்பட்டு, அதன் வருவாய் எல்லாம் தனியாராலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதால், வழிபாடு என்பதை ஒரு பகுதி ஆக்கி பெரும்பாலான பகுதி வணிக நோக்கில் அமைக்கப்பட்டு, வியாபார ரீதியிலான வர்த்தகம் அதிகமாக நடைபெறும் இடங்கள் எனில் அவை வணிக இடங்கள் என வகைப்படுத்தப்பட்டு வணிக ரீதியிலான மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதாவது, முதல் 100 யூனிட்டுகளுக்கு ₹5.00/- அதற்கு மேல் என்றால் யூனிட்டுக்கு ₹8.05 வசூலிக்கப்படும்.

உதாரணமாக வழிபாட்டுக்கு என ஒரு சிறு இடம் ஒதுக்கி, பெரும்பாலான இடங்களில் வணிக வளாகம் நடத்தி வருவாய் பார்க்கும் இடங்கள். அவற்றில் பெரும்பாலும் வணிகமே நடப்பதாலும், தனியாறால் நடத்தப்பட்டு வருவதாலும், இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு இல்லாமல் அங்கே வசூல் ஆகும் அனைத்து வருவாயும் தனியார் நிறுவனமே நிர்வகிப்பதாலும், அவை போன்ற இடங்களில் வழிபாட்டு தலங்கள் என்று அல்லாமல் வணிக இடங்கள் என்று வகைப்படுத்தி வணிக ரீதியிலான மின்சாரக் கட்டணம் வசூலிக்க பட்டு வருகிறது.

மேலே சொன்னது எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு உதாரணத்துக்கு சொல்லப்பட்டவை. இவை போல பல இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதாவது இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் இல்லாமல் தனியாரே நிர்வகித்து வருவாயை அவர்களே வைத்து கொள்ளும் இடங்கள்.

எனவே நாம் இந்த முக்கியமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

வழிபாட்டு தலங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அனைத்து இடங்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியான கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறது.

இப்போதைய சர்ச்சை என்னவென்றால், வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் இடங்களுக்கும் இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் இருக்கும் கோவில்களுக்கு வசூலிப்பது போல குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது.

இதில் இன்னும் சிலர் மேலும் ஒரு படி மேலே போய், அப்படி குறைந்த கட்டணத்தில் வசூலிக்க முடியாது என்றால், சர்ச் & மசூதிகளுக்கு்ம் வணிக ரீதியிலான அதிக மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது.

அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என வழங்கும் ஒரு சொலவடை போல, மத வேற்றுமை மனதுக்குள் வன்மமாக உருவெடுத்த மக்களால் மட்டுமே இப்படி எல்லாம் குரூரமாக யோசிக்க முடியும்.

தமிழக அரசை பொறுத்த வரை தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. வழிபாட்டு தலங்கள் எல்லாவற்றையும் ஒரே கணக்கீட்டில் கொண்டு வந்து குறைந்த கட்டணமும், வணிக ரீதியிலான இடங்களுக்கு அதிக கட்டணமும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.

இந்த புரிதல் இல்லாமல் வெறும் வதந்திகளை புரளிகளை மட்டுமே நம்பி, தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து விட்டதாக கருதி கிடக்கும் மிகச் சிலரின் அறியாமையை நீக்கி உண்மை என்ன என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களை அவ்வப்போது விளம்பரமாக வெளியிடுவது, கட்சி சார்பாக மக்களுக்கு விளக்குவது போன்றவை அரசின் மீதான தவறான புரிதல்களை குறைக்க உதவும் 

பொய்யான தகவல்களை வைத்து மக்களிடம் குழப்பத்தையும், மத ரீதியான வேற்றுமையையும் பரப்பி வருவோர் மீது தயவு தாட்ஷனியம் இல்லாமல் கடுமையாக நடவடிக்கை எடுப்பது, வேறு யாரும் அத்தகைய செயலில் ஈடுபடாமல் தடுக்க உதவும்.

மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டியது அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் மக்களிடம் பரவும் பொய்யான தகவல்களை தடுத்து விளக்கம் அளித்து புரிய வைப்பதிலும் வேண்டும்.

 

சாகித்ய அகாடமி விருதும் மாலனும்

எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான "சாகித்ய அகாதமி" விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு சின்னதாக ஒரு சர்ச்சையை எழுப்பி இருக்கிறது



எழுத்தாளர் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய 'Chronicle of a Corpse Bearer' என்னும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காக திரு மாலன் அவர்களுக்கு இந்த சாகித்ய அகாதமி விருது "மொழி பெயர்ப்பு நூல்" பிரிவில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசால் எழுத்தாளர்கள், நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்திய அகாடமி விருது கருதப்பட்டு வருகிறது. 1955 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதேபோல் மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம், சால்வை செப்பு பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.

இந்த மொழி பெயர்ப்பு பிரிவில் தான் திரு. மாலன் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

திரு. மாலன் அவர்கள் மிக பிரபலமான எழுத்தாளர். குமுதம், குங்குமம், புதிய தலைமுறை, இந்தியா டுடே போன்ற பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர். 

இவரது எழுத்துக்களுக்கு என்று ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு உள்ளது.

"வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்", 'நந்தலாலா", "தப்புக் கணக்கு" போன்ற நூல்களும், "மனம் எனும் வனம்" கவிதை தொகுப்பும் எல்லோரும் படித்து இருக்கலாம். இவை தவிர எழுத்தாளர் திரு லா.சா.ராமாமிர்தம் அவர்களை பற்றி எழுதிய "மனவெளிக் கலைஞன்" புத்தகம் மிக நெகிழ்ச்சியான ஒன்று.

மேலும் நிறைய புத்தகங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர் அவர். அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இந்த விருது சர்ச்சை ஆனதற்கு காரணம் அவர் தகுதி இல்லாதவர் என்று எல்லாம் அல்ல. அவர் தகுதியானவர் தான்.

சாகித்ய அகாதமி பொது ஆலோசனை குழுவில் தமிழ் நாடு சார்பாக திரு. மாலன் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

அவர் ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கும் நிலையில் அவருக்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது அறத்தின் அடிப்படையில் சரியா என்பது தான் விவாதமே.

தார்மீக அடிப்படையில் திரு. மாலன் அவர்கள் இந்த விருதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது அவரது எழுத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு, அவர் குழு உறுப்பினர் என்பதால் கிடைத்த விருது என சிறுமைப் பட்டு விடக் கூடும். 

பாரம்பரியம் மிக்க சாகித்ய அகாதமி விருது தேர்வு முறையையும் அது இனி சந்தேகத்துக்கு உள்ளாக்கி விடக்கூடும்.

பொதுவாகவே, அங்கீகாரம் அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்காக அந்த அங்கீகாரத்தை எடுத்து கொள்வதை சரியானது என சொல்ல மாட்டார்கள்.

அப்படியான ஒரு விமர்சனத்தில் இருந்து திரு மாலன் அவர்கள் வெளி வர இன்னமும் காலம் இருக்கிறது


Thursday, June 9, 2022

திருமணம் என்பது யாதெனின்

திருமணம் 

இந்த ஒற்றை சொல் தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் உந்து சக்தியாக உள்ளது.



பெற்றோர், தங்கள் மகளுக்கு / மகனுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என போராடுகிறார்கள். அதற்காக நல்ல கல்வி, கௌரவமான வேலை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என மெனக்கெடுகிறார்கள். பிள்ளைகளின் எதிர்காலம், அவர்கள் மண வாழ்க்கை, அவர்களை நம்பி வருபவர்களை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைப்பதற்கான முயற்சிகள் என போகிறது பட்டியல். இது தவிர திருமணச் செலவுகள், நகைகள் என அதற்கான மெனக்கெடல் எல்லாம் தனி.

இவற்றை சமாளிக்க பெற்றோர் பெரிய வேலைகளுக்கு முயற்சிப்பது, அதிக வருமானம் உள்ள வேலைகளுக்கு மாறுவது, இருக்கும் வேலையை விட்டு பிசினஸ் செய்வது, இருக்கும் வேலையில் கிடைக்கும் வருவாய் போதாமல் பார்ட் டைம் வேலைக்கு செல்வது என எல்லா வகையிலும் முயற்சி செய்கிறார்கள்.

எல்லாம் பிள்ளைகளின் எதிர்காலம் என்கிற ஒற்றை புள்ளியை நோக்கி. அந்த எதிர்காலம் எனப்படுவது பிள்ளைகளின் கல்வி வேலை வாய்ப்பு என சுருக்கிக் கொண்டாலும், அதன் நீட்சி அவர்களுக்கு நல்ல ஒரு இடத்தில் நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்து அந்த திருமண வாழ்வை தானாகவே சமாளிக்கும் நிலைக்கு பிள்ளைகளை தயார் படுத்துதல் என்கிற புள்ளியில் கொண்டு போய் தான் நிறுத்துகிறது.

சுருக்கமாக சொன்னால் இந்திய வாழ்வியலில் திருமணம் என்பதை மையப் புள்ளியாக வைத்தே பெரும்பாலான குடும்பங்கள் இயங்கி வருவதாக பார்க்கலாம்.

தனது திருமண வாழ்வு, அதன் பொறுப்புகள் கடமைகள், பிள்ளைகளின் வாழ்வு, அவர்களது திருமணம், இதற்கான பொருளாதார தேவை, அதை ஈடு செய்யும் வேலை.. என எல்லாமே ஏதோ ஒரு வகையில் திருமணம் என்கிற புள்ளியை சுற்றியே இயங்கி வருவதாக ஒரு உணர்வு.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமணம் என்பது என்ன?

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அதிகாரப்பூர்வமாக இணைந்து தங்கள் வாழ்க்கையை இணைந்து முன்னெடுத்து செல்லும் ஒரு வைபோகம் என பொதுவாக சொல்லலாம்.

அது ஒரு ஆண் ஒரு பெண் இணைப்பு மட்டும் அல்ல, இரு வேறு குடும்பங்கள், அவர் தம் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் ஆகியவையும் இணைந்து கொள்ளும் வைபோகம் என்றும் விரிவாக சொல்லலாம்.

இதனாலேயே, தன் பிள்ளைகளுக்கு வரப்போகும் மணமகன்/மணமகள் பற்றி மட்டும் அல்லாமல் அவர்களது வேலை, குடும்பம், சொந்தம் பற்றி எல்லாம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

இவை எல்லாம் கலாச்சார ரீதியான விஷயங்கள். 

திருமணம் - இதை சட்ட ரீதியாக பார்த்தால் வேறு வகையான புரிதல்கள் வருகிறது.

சட்டத்தின் பார்வையில் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதற்கு, நட்பாக இருப்பதற்கு, காதலிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவர்கள் ஒன்றாக பொது இடங்களுக்கு, கோவில், பூங்கா, திரையரங்கு என போய் வருவதற்கும் சட்டம் எந்த தடையும் சொல்வது இல்லை.

நீங்கள் ஏன் பழகுகிறீர்கள், காதலிக்கிறீர்கள் என்று சட்டம் கேள்வி கேட்பது இல்லை. அப்படி பழகுகிறவர்களை யாரேனும் தொந்தரவு செய்தால், அது குறித்து சம்பந்தப் பட்டவர்கள் புகார் அளித்தால், தொந்தரவு செய்பவர்களை தண்டிக்கவும் சட்டம் தயஙகுவது இல்லை.

பருவம் பூர்த்தி அடைந்த ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சட்டம் தடை சொல்வது இல்லை. மேலே நாம் விரிவாக பார்த்த கலாச்சார ரீதியான எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகள் எதையும் சட்டம் எதிர்பார்ப்பது இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

இன்னும் ஒரு படி மேலே போய், இப்போது ஒரு பாலின திருமணங்களைக் கூட சட்டம் அங்கீகரிக்க தொடங்கி உள்ளது.

ஆக சட்டத்தின் பார்வையில் திருமணம் என்பது வேறு. அது பொறுப்பு சம்பந்தப்பட்டது. அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியான பொறுப்பு சம்பந்தப்ப ட்டது.

ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தனது பாதுகாப்பு, எதிர்காலம், வருமானம், சொத்து (தனக்கு பாரம்பரியமாக கிடைத்த சொத்து / தான் உழைத்து சேர்த்து வைத்த சொத்து) ஆகியவற்றை தனக்கு பின் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது எனதற்கான ஆவணப் பதிவாகவே திருமணம் பார்க்கப்படுகிறது.

திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ யார் யாருடன் பழகினாலும், உறவு கொண்டாலும் சட்டம் அது பற்றி கேள்வி கேட்பது இல்லை. சட்டத்தின் பார்வையில் அது தவறும் இல்லை. 

ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒருவரை திருமணம் செய்து இவர் தான் இனி தனது பொறுப்பு, தனது பொருளாதார ரீதியான செயல்களுக்கு பொறுப்பு என்று அங்கீகரித்த பிறகு, இன்னொருவரை திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்காது. 

திருமணம் செய்யாமல் பழகுவது, திருமணம் மீறிய உறவு, அவர்களுக்கு செலவு செய்வது போன்றவற்றை கூட சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவரை திருமணம் செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்வதை மட்டுமே தவறு என்கிறது. சுருக்கமாக ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக ஒருவர் தான் பொறுப்பாக இருக்க முடியும். அவரை விவாக ரத்து செய்து விட்டு தான் இன்னொருவரை திருமணம் செய்து பொறுப்பாளர் ஆக்க முடியும்.



சுருக்கமாக பார்த்தால் சொத்துக்கள், வருமானம் ஆகியவற்றுக்கான வாரிசு பொறுப்பு யார் என்பது மட்டுமே சட்ட ஆவணம் கவனிக்கும் ஒரே செயல். ஒருவரை திருமணம் மூலம் அங்கீகரித்து விட்டால் அது யார் எவர் என்ன என்று எல்லாம் ஆராயாமல் சட்டமும் அவர்களை தான் பொறுப்பான நபராக பார்க்கும். அவரை சட்டப்பூர்வமாக விவாக ரத்து செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும். விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்தால் அதை சட்டம் ஏற்காது. அதாவது இரண்டு பொறுப்பாளர்களை ஏற்காது. அதிலும் விதி விலக்கு உண்டு. முதல் பொறுப்பாளர் சம்மதத்துடன் இரண்டாம் பொறுப்பாளராக ஒருவரை அங்கீகரிக்கும்.

முதல் பொறுப்பாளர் இருக்கும் போது, வேறு ஒருவருடன் பழகினாலும் வாழ்ந்தாலும் சட்டப்படி முதல் பொறுப்பாளர் தான் சட்டபூர்வமான வாரிசுதாரர். விவாக ரத்து என்பது ஆகும் வரை அவர் தான் பொறுப்பாளர்.

எனவே பொருளாதார சார்பு எவரிடத்தில் என்பது மட்டுமே ஆவணங்கள் கவனிக்கும். மற்றப்படி யார் எவருடன் எப்படி பழகினாலும் சட்டம் அதை கேள்வி கேட்காது. 

அவ்வளவு ஏன், பெரு நகரங்களில் இப்போது பரவலாக இருக்கும் லிவ் இன் கலாச்சாரம் கூட சட்டம் தவறு என்று சொல்லி கேள்வி கேட்பது இல்லை. அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டம் தலை இடுவது இல்லை. எல்லோருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை தருகிறது. ஆனால் அங்கீகார பொறுப்பாளர் ஒருவர் தான் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது.

இப்போது மீண்டும் திருமணம் என்பதை பார்ப்போம்.

கலாச்சார பண்பாட்டு ரீதியாக திருமணம் என்பது இரு நபர்கள் இரு குடும்பங்கள் இணையும் விழா.

சட்ட ரீதியாக திருமணம் என்பது பொருளாதார சமூக பொறுப்பு யாரிடம் என்பதை தீர்மானிக்கும் ஒரு ஆவணம்.

குடும்ப ரீதியாக தனக்கும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் சரியான துணையை சரியான குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஒப்படைக்கும் வைபோகம்.

இந்த திருமணம் எனும் ஒற்றை புள்ளி தான் வாழ்வின் பல முடிவுகளை தீர்மானிக்கிறது.

திருமணம் ஒரு சமூக நிகழ்வு, இரு குடும்ப இணைப்பு, இரு பாரம்பரிய ஒட்டுதல், எதிர்கால பாதுகாப்பு என விரிவாக்கம் செய்தும் பார்க்கலாம்.

திருமணம் ஒரு வாரிசு ஆவனத்துக்கான ஆயத்தம் மட்டுமே என சட்ட ரீதியாக சுருக்கியும் பார்க்கலாம்.

அப்போ திருமணமே வேண்டாம் என தனியாக வாழ்பவர்கள்?

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.















Wednesday, June 1, 2022

GST இழப்பீடு குழப்பங்கள்

னைத்து மாநிலங்களுக்கும் உரிய GST நிலுவைத் தொகையை நேற்றைய தினம் ஒன்றிய அரசு விடுவித்து இருப்பதாக நிதி அமைச்சக செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. 



ஒன்றிய அரசின் கையில் Compensation CESS ₹25,000 கோடி தான் இருந்தது. எனினும் பிற கணக்குகளில் இருந்து பாக்கி தொகை போட்டு நிலுவை தொகையை மொத்தமாக ₹86,912 கோடி மாநிலங்களுக்கு கொடுத்து இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கு. 

அதுவும் 31.05.2022 வரை கணக்கிட்டு நிலுவை தொகையை கொடுத்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

முதலில் Compensation CESS என்றால் என்ன என சுருக்கமாக பார்ப்போம்.

GST சட்டம் அமல் ஆகும் முன்பு இருந்த VAT, CST, Central Excise, Service Tax போன்ற வரிகளின் மூலம் மாநிலங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்த வரி வருவாய் எவ்வளவு என பார்த்து..

GST வந்த பிறகு சில குறிப்பிட்ட பொருட்கள் தவிர பெரும்பாலான பொருட்களுக்கு அந்த பழைய வரிகள் எல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்டு GST வரி மட்டும் தான் என ஆன பிறகு, மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயை கணக்கிட்டு..

இரண்டுக்கும் இடையிலான வருவாய் மாறுபாடு பற்றாக்குறை ஆக இருந்தால், அதாவது முன்பு கிடைத்த வரியை விட GST வருவாய் குறைந்து இருந்தால், அந்த பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. 

அந்த வரி வருவாய் பற்றாக்குறையை மாநிலங்களுக்குஈடு செய்வது தான் Compensation CESS வழியிலான இழப்பீடு. 

இந்த Compensation CESS ஐ தான் ஒன்றிய அரசு நேற்று விடுவித்து இருக்கிறது.

இந்த ₹86,912 கோடியில் தமிழக அரசுக்கு நிலுவை தொகையாக ₹9,602 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.



இது தவிர இன்னொரு பங்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கவேண்டும்.

மாநிலம் விட்டு மாநிலம் நடக்கும் வர்த்தகங்களுக்கு (Inter State Transactions) ஒன்றிய அரசு மொத்தமாக வசூலிக்கும் IGST வரியில் இருந்து மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை இன்னமும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.

அந்த வகையில் தமிழகத்துக்கு இன்னமும் சுமார் ₹4,400 கோடி வர வேண்டி உள்ளது.

ஆனால் நேற்றைய ஒன்றிய அரசின் அறிக்கையில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.

அதெப்படி 31.05.2022 வரை இழப்பீட்டை கணக்கிட்டு கொடுத்தார்கள்?

மே மாத விற்பனை விவரங்களை வணிகர்கள் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தான் தாக்கல் செய்வார்கள். Input Tax Credit (ITC) விவரங்களை ஜூன் மாதம் 20 ஆம் தேதி தான் வணிகர்கள் முழுமையாக தாக்கல் செய்வார்கள். இந்த அனைத்து விவரங்களும் GST இணைய தள ஒருங்கிணைப்பு பிரிவில் ஜூன் மாதம் 21 ஆம் தேதி தான் கிடைக்கும்.

இப்படி இருக்க, மே மாதம் 31 ஆம் தேதி வரையிலான இழப்பீடு என எப்படி கணித்து இருப்பார்கள் என்று புரியவில்லை.



மாதக் கடைசி நாளில் பெரும்பாலும் இரவு வரை விற்பனை இருக்கும். வெளி மாநிலத்துக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் இரவு தான் ஏற்றி அனுப்புவார்கள். 

அப்படியான இறுதி நாள் வர்ததகங்கள் நடைபெறும் முன்பே எப்படி இழப்பீடு கணிக்க முடியும்?

ஒன்று.. குத்து மதிப்பாக கணித்து பணத்தை கொடுத்து இனி கொடுக்க எதுவும் இல்லை என பொறுப்பினை தட்டிக் கழிக்க நடக்கும் முயற்சியாக இருக்கலாம்.

அல்லது, பெருமைக்காக மொத்தமாக கொடுத்து விட்டதாக சொல்லி பின்னர் கணக்கு பார்த்து சரிக் கட்டிக் கொள்ளலாம் என நினைத்து இருக்கலாம்.

இரண்டுமே நிதி அமைச்சகம் மாதிரியான பொறுப்பான துறைக்கு அழகல்ல.

வரும் ஜூன் 2022 வரை தான் Compensation CESS ஒன்றிய அரசால் இழப்பீடு வழங்க முடியும். அதன் பின் மாநிலங்கள் அவரவர் வரி வருவாயை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது சட்டம். 

இந்த கால அளவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டு கொண்டு இருக்கும் வேளையில், எல்லா பாக்கியையும் கொடுத்து விட்டோம் என ஒன்றிய அரசு அவசரம் அவசரமாக கணக்கை முடிக்க முயற்சி செய்வது, கால அளவை நீட்டிக்கும் உத்தேசம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது.

அப்படி கால அளவு நீட்டிக்கப் படாமல் போனால், கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட் காரணமாக பொருளாதாரம் தொய்வு அடைந்து வரி வருவாய் குறைந்து இப்போது தான் அதில் இருந்து மீள தொடங்கி இருக்கும் நிலையில் மாநிலங்கள் எல்லாம் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

அது மற்ற துறைகளை பாதித்து ஒட்டு மொத்தமாக மாநிலங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணவும் சாத்தியம் உண்டு.

நிதி அமைச்சகம் இந்த குழப்பங்களை எல்லாம் போக்கும் விதமாக இப்போது உடனடியாக செய்ய வேண்டியது:

1. நேற்றைய இழப்பீடு எந்த அடிப்படையில் கணக்கிட பட்டு உள்ளது என விளக்குவது.

2. IGST நிலுவை எவ்வளவு என தெளிவு படுத்துவது.

3. மே & ஜூன் நிலுவை எப்போது விடுவிப்பார்கள் என உறுதிப் படுத்த வேண்டியது.

4. Compensation CESS கால அளவை நீட்டிக்கும் எண்ணம் உண்டா என தெளிவு படுத்த வேண்டியது.

இவற்றை பொறுப்போடு செய்வார்களா.. அல்லது வழக்கம் போல பொறுப்பு இல்லாமல் இருப்பார்களா என்பதை நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தான் நமக்கு உணர்த்தும்.
















https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1829777

Saturday, May 21, 2022

குருகிராம் GST முறைகேடு

 குருகிராம் #GST முறைகேடு வழக்கு முழுசா படிச்சா தெரிவது.. GST யின் IT கட்டமைப்பு வீக்காக இருப்பது தான் காரணம் என்பது..


இதை சரி செய்ய போன வருஷம் ஒரு IT Task Force அமைத்தார்கள்.  அஜித் பவார் அவர்கள் தலைவர். உறுப்பினர்களில் ஒருவர் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்கள்.



அந்த குழு இதுவரை ஒரு முறை கூட கூடவே இல்லை. ஒரு சின்ன பரிந்துரையும் வரவில்லை


குருகிராம் வழக்கு சுருக்கமா:


சில ஆடிட்டர்கள் சேர்ந்து இல்லாத நிறுவனங்கள் பெயரில் போலியாக பில்கள் தயாரித்து முறைகேடாக ITC எடுக்கிறார்கள்..


அந்த ITC ஐ refund கேட்கிறார்கள். சுமார் ₹15 கோடி


இதற்கு அதிகாரிகள் ₹7 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் 


லஞ்சம் கொடுத்த பின், refund application தாக்கல் செய்து ஒன்றரை மணி நேரத்தில் ₹15 கோடி refund கொடுத்து விட்டார்கள்


இதை investigate செய்த மேல் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆடிட்டர்கள் எல்லோரையும் விசாரித்து அதில் இருவரை கைது செய்து உள்ளார்கள்


Refund கொடுத்த அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது 


இந்த மொத்த குழப்பமும் IT network இல் உள்ள குளறுபடியால் வந்தது


ITC முறைகேடான ஒன்று என்பதை realtime ல validate செய்யும் வசதி இல்லை. 


Refund ஸ்டேட்மென்ட் விவரங்களை கூட return filing data உடன் reconconcile செய்ய முடியல


2B data வை 3B data வில் எளிதாக edit செய்ய முடிகிறது


3B data edit செய்ய (கூடுதல் தொகைக்கு) முடியாமல் ஒரு சின்ன validation lock இருந்து இருந்தா கூட இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இருந்து இருக்காது


இனியாவது IT task force செயல்பட்டு network ஐ ஆராய்ந்து உரிய பரிந்துரைகள் கொடுத்து எல்லா ஓட்டைகளையும் அடைத்தால் தான் நல்லது



Printfriendly