Wednesday, July 21, 2021

GST வரி வசூலும் மாநில உரிமைகளும்

சமீப காலங்களாக இணையத்தில் பெரும் விவாதம் ஆன விஷயங்களில் ஒன்று GST வரி வசூல் குறித்தது.

ஒன்றிய அரசு எல்லா வரியையும் வசூலித்து மாநிலங்களுக்கு தராமல் ஏமாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது.
மாநிலங்களுக்கு வரி பங்கு முறையாக ஒன்றிய அரசு தரவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஒட்டுமொத்தமாக மாநிலங்களுக்கு வரி வசூல் எதுவுமே கிடைக்கவில்லை என்பது சரியல்ல.

விளக்கமாக சொல்கிறேன்.

GST வருவதற்கு முன்னர், உற்பத்தி நிறுவனஙகள் Excise வரி செலுத்த வேண்டும். சேவை நிறுவனங்கள Service Tax செலுத்த வேண்டும். இந்த இரண்டும் ஒன்றிய அரசின் கணக்குக்கு போகும்.

விற்பனையை பொறுத்த வரை, மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு VAT வரியும் மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு CST வரியும் அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இதில் VAT வரி மாநில அரசுக்கும், CST வரி ஒன்றிய அரசுக்கும் போகும்.

அதாவது Excise, Service Tax, CST ஆகியவை ஒன்றிய அரசுக்கும், VAT வரி மட்டும் மாநில அரசுக்கும் கிடைக்கும்.

GST யிலும் இதே முறை தான் சற்றே மாறுதலுடன் அமல் படுத்தப்பட்டது.

Excise Service Tax ஆகியவை ஒழிக்கப்பட்டு, GST யின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு SGST & CGST ஆகியவையும், மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு IGST வரியும் இப்போது நிறுவனங்கள் கட்ட வேண்டும்

இதில் SGST நேரடியாக முழுமையாக மாநில அரசுக்கு கிடைத்து விடும்.

CGST முழுமையாக ஒன்றிய அரசின் கைக்கு போகும்

IGST வரியில் தான் மாநிலங்களுக்கு உரிய பங்கு பகிர்ந்து அளிக்கப் படும்.

இவை தவிர CESS வரி என்று ஒன்று ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வரியை மாநிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையாக (Compensation CESS) ஆக கொடுக்கப் படுகிறது. இந்த CESS பற்றி பிறகு சொல்கிறேன்.
இதில் இருந்து VAT வரி போலவே SGST வரியும் மாநிலங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது என்பது புரியும்.

GST என்பது மாநிலங்களின் உரிமையை மனதில் வைத்து இயற்றப் பட்ட சட்டம் என்பதால், சேவைகளுக்கும், உற்பத்திக்கும் கூட GST வரி அமல் ஆனது. இதன் மூலம் GST க்கு முன்பு கிடைக்காத வரிகளும் மாநிலத்துக்கு கிடைக்கத் தொடங்கி உள்ளது

உதாரணமாக ஒரு சேவை நிறுவனம் (service Industry) எடுத்து கொள்வோம். Contract Labour Supply செய்யும் நிறுவனத்தை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஆபீஸ் சென்னையில் உள்ளது. கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும் அவர்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள் என்றால் அவர்களின் பில் இப்படி இருக்கும்

கோவை நிறுவனத்துக்கு - SGST 9% & CGST 9% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் SGST மாநிலத்துக்கு நேரடியாக கிடைக்கும்.

பெங்களூர் நிறுவனத்துக்கு - IGST 18% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் மாநிலத்தின் பங்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

GST வருவதற்கு முன்பு இந்த மாதிரி அல்லாமல் மொத்தமாக Service Tax 14.50% வரி கட்டி அது மொத்தமும் ஒன்றிய அரசுக்கு மட்டுமே போகும். மாநிலத்துக்கு உள்ளே நடந்தாலும் மாநிலத்துக்கு வெளியே நடந்தாலும் எல்லா வரியும் ஒன்றிய அரசுக்கு தான் போய் கொண்டு இருந்தது.

GST அதை மாற்றி, மாநிலத்தில் நடைபெறும் சேவையில் பாதி வரி நேரடியாக மாநிலத்துக்கு கிடைக்க வழி செய்து உள்ளது. 

இது தவிர முன்பு மாநிலத்துக்கு உள்ளே விற்பனை ஆகும் பொருளுக்கு VAT வரி 5% என்று இருந்தது. ஆனால் GST சட்டம் மூலம் அதற்கு சராசரியாக 18% வரி விதிக்கப்பட்டு அதில் பாதியான 9% வரி மாநிலத்துக்கு கிடைக்கிறது. இது முன்னர் கிடைத்த 5% வரியை விட 4% அதிகம் ஆகும்.

இதனால் மாநில வரி வருவாய் உயரும் என்பது தான் நோக்கம்.

முன்னர் Excise வரி செலுத்தும் உற்பத்தி நிறுவனங்களின் வரி முழுமையும் ஒன்றிய அரசுக்கு தான் போகும். இப்போது அதுவும் GST மூலம் மாநிலத்துக்கு உரிய வரி நேரடியாக கிடைக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
இவை எல்லாம் வைத்து பார்த்தால் மாநிலங்கள் வரி வருவாயில் அதிக லாபம் அடைவதை போல தோன்றும்.

ஆனால் சட்டம் சரியாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் ஒன்றிய அரசு அதை முறையாக செய்யாமல் இருப்பதால் தான் மாநிலங்கள் கஷ்டப்படுகின்றன.

மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் இருப்பதால் மாநிலங்கள் கடன் வாங்கி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

GST செய்த முக்கியமான மற்றும் ஒரு மாற்றம், பொருள் சென்று சேரும் இடம் எதுவோ அந்த மாநிலத்துக்கு தான் பங்கு என மாற்றியது. (Consumption based tax)

இதனால் உற்பத்தி மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு, பொருட்களை பெறும் மாநிலங்களான பீகார் அசாம் போன்ற மாநிலங்களுக்கு வரி பங்கு அதிகம் கிடைக்க தொடங்கி உள்ளது.

இது வளர்ச்சியை நோக்கி திட்டங்கள் தீட்டும் மாநிலங்களுக்கான தண்டனையாக அமைந்து விட்டது

மாநில உரிமையின் அடிப்படையில், வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்களுக்கு வரி பங்கு கிடைக்குமாறு சட்டத்தை மாற்ற வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் இதுவரை செய்யவில்லை.

முறையாக வரி பங்கீட்டை மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையும் மாநிலங்கள் செய்யவில்லை. அல்லது வலியுறுத்தியும் அது நடைபெறவில்லை.

இவைகளால் தான் மாநில பொருளாதாரம் சிக்கலுக்கு ஆளாகிறது.

இனி CESS விஷயத்துக்கு வருகிறேன்.

GST வருவதற்கு முன்பு மாநிலங்களுக்கு கிடைத்த வரியையும், GST வந்த பிறகு மாநிலங்களுக்கு கிடைக்கும் வரியையும் ஒப்பிட்டு GST காரணமாக வரி வருவாய் குறைந்து இருந்தால் அதை ஈடு கட்ட உருவாக்கப்பட்டது தான் இந்த Compensation CESS. இதுவும் 5 ஆண்டு காலத்துக்கு தான் தர முடியும் என சட்டம் சொல்கிறது. அதற்கு பிறகு அந்தந்த மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்து கொள்ள வேண்டும்.

இது மாநில உரிமைக்கு எதிரானது.

ஏற்கனவே சொன்னது போல, நாம் உற்பத்தி செய்து பின் தங்கிய மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் அதற்கான பலன் பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் செல்லும் எனில், நமக்கான வரி இழப்பை எப்படி ஈடு கட்டுவது?

CESS பங்கீடு ஒழுங்காக செய்யப்படவில்லை என்கிற குறை ஒருபுறம் இருந்தாலும், CESS பங்கீடு அடுத்த ஆண்டு முடிவுக்கு வந்து விட்டால், அதன் பிறகு எந்த இழப்பீடும் இல்லாமல் மாநிலங்கள் எப்படி சமாளிக்கும் என்பது தான் முக்கியமான கேள்வி

ஆனால், இது குறித்து கூட பெரிதாக எந்த மாநிலங்களும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

கவுன்சில் கூட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவு போன்ற முக்கியமல்லாத விஷயங்களை விவாதிப்பதை விடவும் அவசியமானது Consumption Based Taxing முறையை மாற்றுவது என்பதை யாரும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

அடுத்த ஆண்டு CESS முடிவுக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலமும் இழப்பை நோக்கி செல்கையிலாவது சுதாரித்து கொள்கிறார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்



Thursday, July 8, 2021

எழுவர் விடுதலையும் அதன் அரசியலும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு உடைய எழுவர் விடுதலை தொடர்பாக இப்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்று உள்ள திமுக, அந்த எழுவரில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களுக்கு சட்ட விதிகளை தளர்த்தி சிறப்பு விடுமுறை கொடுத்து வெளியே அனுப்பியது. அந்த விடுமுறை மீண்டும் நீட்டிக்கப் பட்டு உள்ளது. இப்படியே அந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற விடுதலையாக அது மாறும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சி.

மீதம் உள்ள ஆறு பேரின் (முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்) விடுதலைக்காகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 

இணையத்தில், இந்த எழுவர் விடுதலை என்பது "ஈழ மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்பு" என்கிற கருத்துருவாக்கம் இன்னொரு புறம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

ஈழ மக்களுக்காக நாம் செய்ய கூடிய செய்தே ஆக வேண்டிய மிக மிக முக்கியமான விஷயமாக இந்த எழுவர் விடுதலை முன்வைக்கப் பட்டு வருகிறது.

அநேகமாக இப்போது எடுக்கும் வேகமான நடவடிக்கைகளை பார்த்தால் அடுத்த ஓராண்டு காலத்துக்குள் அவர்கள் விடுதலை ஆவதற்கான வாய்ப்புக்கள் தெரிகின்றன. 

இவை எல்லாம் இப்போது நடைபெற்று வருபவை.

எழுவர் விடுதலை என்பது எந்த வகையில் ஈழ மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை என்பது மட்டும் இங்கே பலருக்கும் புரியவில்லை. அப்படியானால் ராஜீவ் கொலை என்பது ஈழ மக்கள் நலன் சார்ந்த ஒன்றா என்பதையும் யாரும் இன்னமும் தெளிவு படுத்தவில்லை.

ராஜீவ் கொலை என்பது வெறும் ராஜீவ் கொலை மட்டுமல்ல. அது அந்த வழக்கின் தீர்ப்பிலேயே விவரிக்கப்பட்டது போல "மிக மிக அரிதிலும் அரிதான திட்டமிட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல்".

ராஜீவ் கொலைக்கு இந்த வெடிகுண்டு தாக்குதல் முறையை தேர்ந்தெடுத்தவர்கள், அந்த பொது கூட்டத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினால் பல அப்பாவி பொதுமக்களும் இறந்து போவார்கள் என நன்றாக தெரிந்தவர்கள் தான். அது தெரிந்தும், தமிழக தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை என திட்டமிட்டு செயல்படுத்திய பயங்கரவாத தாக்குதல் அது.

அப்பாவி பொது மக்கள், தமிழ் நாட்டு தமிழர்கள் 15 பேர் வரை பலியான நிகழ்வு அது. 40 பேருக்கு மேல் மிக கடுமையாக காயம்பட்டு உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வாதாரம் நொடிந்து போனது எல்லாம் தனி கதை.

தமிழ் நாட்டு தமிழர்கள் மீது, அவர்களுக்கான உதவிகள் மீது அக்கறை கொண்டு, உயிர் இழந்தவர்களுக்கு, படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்காக போராட வேண்டிய தமிழ் நாட்டு இயக்கங்கள், அதில் போதுமான கவனம் செலுத்தாமல், அந்த பயங்கரவாத நிகழ்வுக்கு துணை நின்றவர்களை பாதுகாப்பதில் காட்டும் அரசியல் தான் முப்பது ஆண்டுகளாக இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

****
முப்பது ஆண்டுகள் சிறையில் அவர்கள் தண்டனை பெற்று வந்தார்கள் என்கிற பரிதாபமான குரல்களும் இப்போது அதிகமாக கேட்க தொடங்கி இருக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டப்படி, பயங்கரவாத நிகழ்வு நடக்கப் போவது குறித்த தகவல் தெரிந்தாலே அரசிடம் அதை சொல்ல வேண்டும். தகவல் தெரிந்து அரசிடம் சொல்லாமல் இருப்பதே தண்டனைக்கு உரிய குற்றம். 

இந்நிலையில் அந்த பயங்கரவாத செயல் நிகழ்த்த தேவைப்படும் உதவிகள் செய்து, அந்த பயங்கரவாதிகளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வைத்தது எல்லாம் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக TADA & POTA சட்டங்கள் வரையறை செய்து உள்ளது.

அந்த வகையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உச்ச பட்ச தண்டனையை, குறைப்பதற்கான மேல் முறையீடு, கருணை மனு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான கால அவகாசம் வரை அவர்களுக்கான தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. ஆதனால் முப்பது ஆண்டு காலம் "தண்டனை" என்பதை விட அவர்களுக்கான சலுகை பெறுவதற்கான கால அவகாசம் என்றே சட்டம் பார்க்கும்.

அவர்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படவே பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த பதினைந்து ஆண்டுகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளி வைக்கப்பட்டு தண்டனை குறைபுக்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.

இதில் இன்னொரு புறம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் தண்டனையை பற்றி புரியாமல் சாதாரண குற்றவியல் தண்டனை சட்ட விதிமுறைகளின் படி நினைத்து பேசும் பெரும் தலைவர்களின், அவர்தம் தொண்டர் அடிபொடிகளின் விவாதங்கள் வேறு ஆச்சர்யம் தருகின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கொடுக்கப் பட்ட தண்டனை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் (remission) இன்னும் ஒரு தண்டனை குறைப்பு (second remission) சாத்தியமா என்பது போக போக தான் தெரியும்.

ஆனால் இந்தியாவில் சட்டத்தை விட அரசியல் தானே சக்தி வாய்ந்தது? 

தேவைப்பட்டால் சட்டத்தையே கூட திருத்தி முன் தேதி இட்டு வெளியிட செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.

****

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், பேருந்தை எரிப்பது தான் நோக்கம், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூன்று மாணவிகளும் பலியானார்கள் என்கிற வாதத்தை நாமெல்லாம் எந்த அளவுக்கு கடுமையாக எதிர்த்தோம் என்பது தெரியும். 

ஆனால் ராஜீவ் கொலையின் போது உடன் இறந்த அப்பாவி தமிழர்கள் பற்றி எந்த கவலையும் இன்றி கொலைக்கு உதவி செய்தவர்களை காப்பாற்றும் முனைப்பில் மட்டுமே தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டு இருப்பது வியப்பு தான்.

ஈழ மக்கள் நலன் என்கிற ஒற்றை புள்ளியில் நாம் நமது மக்களை சமரசம் செய்து கொள்கிறோமோ என தோன்றுகிறது.

எனினும் நான் முன்பே சொன்னது போல, ராஜீவ் கொலைக்கான பயங்கரவாத நிகழ்வு நடைபெற உதவியவர்களை காப்பாற்றுவது என்பது எந்த வகையில் ஈழ மக்களின் நலனுக்கு உதவும் என்பதை யாராவது விளக்கினால் நல்லது.

ஈழ மக்களின் நலம் என்பது எழுவர் விடுதலையில் தான் இருக்கிறது என்கிற கட்டமைப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது என்பதையும் விளக்கினால் மேலும் நல்லது.

என்னை போன்ற சாமானியர்கள் அதன் தொடர்பை, அதன் பின்னுள்ள அரசியலை பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

யாரேனும் விளக்குவார்களா?


Printfriendly