Sunday, September 1, 2019

பாலகுமாரனும் பெரியாரும்

எழுத்தாளர  பாலகுமாரன் முன்பு தனது முகநூல் பதிவில் சொல்லி இருந்த ஒரு விஷயம் இப்போது மீண்டும் சமூக வலை தளங்களில் உலாவருகிறது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பக்தி அதிகரித்து இருப்பதாகவும், எல்லா கோவில்களிலும் கூட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதற்கு பெரியார் கட்சி தான் காரணம் என்றும் எழுதி இருந்தார்.



இதனை இப்போது வெளியிட்ட நண்பர்கள், அவர் சொல்ல வந்தது பெரியார் கட்சி இருந்தும் பக்தர்கள அதிகரித்து இருப்பது பெரியாரின் தோல்வி என்கிற வாதததை முன் வைக்கிறார்கள்.


பாலகுமாரன் சொல்லி இருக்கும்
இந்த விஷயம் உண்மை தான்.

முன்பு குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பெரியார் நடத்திய போராட்டங்கள், திராவிட இயக்கங்கள் ஆட்சி ஆகியவை அனைவரையும் கோவிலுக்கு செல்ல வழிவகை செய்தது.

அதனால், கூட்டமும் வருமானமும் அதிகரித்தது.

மேலும் இந்த பதிவில் பாலகுமாரன் வேளாங்கண்ணி, நாகூர் எல்லாம் போய் வந்ததாக சொல்லி உள்ளார்.

இந்த மத நல்லிணக்கம் பெரியார் கொண்டு வந்தது. திராவிட கட்சிகள் தந்தது.

அதற்கு முன்பு பாலகுமாரன் போன்றோர் இப்படி சர்ச் தர்கா எல்லாம் போய்விட்டு வருவது எளிதல்ல.. பல எதிர்ப்புகள் இருந்தன.


பேருந்துகள் தேசிய உடமை ஆக்கப்பட்டு கடைக்கோடி கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுத்தது திமுக அரசு.

அதுவரை கிராமங்களில் அதிகம் பயணிகாத மக்களும் மெல்ல வெளி வந்து தொழில் கல்வி என வளர தொடங்கினார்கள்

அதுவரை பார்க்க நினைத்த ஆலயங்களுக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள்..


பல புகழ்பெற்ற ஆலயங்கள் ஒரு கால பூஜைக்கு கூட வழியின்றி இருந்த நிலையில், ஒரு கால பூஜை அனைத்து ஆலயங்களிலும் நடைபெற திமுக அரசு நிதி உதவி அளித்தது.

குடமுழுக்கு நடைபெறாது இருந்த ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது குடமுழுக்கு செய்யப்பட்டது

அனைவரும் வழிபாடு செய்ய வழி செய்யப்பட்டது

இவைகள் எல்லாம், மக்களுக்கு வெவ்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபட ஊக்கம் தந்தது.

திருவில்லிபுத்தூர் கோபுரத்தை அரசு முத்திரையாக அறிவித்த அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்த கோபுரத்தை பார்ப்பதற்கென்றே அந்த கோவிலுக்கு சென்றவர்கள் பலர்.

இதுபோன்ற மறைமுக ஊக்குவித்தல் திராவிடம் கொடுத்த வளர்ச்சி

ஆலயங்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்து கால பூஜைகள் தவறாமல் நடைபெற வழி செய்தது

ஒடாதிருந்த தேர் திருவிழாக்களை மீண்டும் முன்னெடுத்து ஓட்டி காட்டியது என மக்கள் வழிபாட்டுக்கு உரிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது திராவிடம்

இவை தான் இன்றைய கூட்டத்துக்கு வருவாய்க்கு காரணம்.

எனவே, பாலகுமாரன் அவரத பதிவில் சொல்ல வந்தது, இப்போதைய மக்கள் இத்தனை அதிகமாக ஆலையம் சென்று வழிபட வேண்டிய உரிமைகளையும் அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தது பெரியார் கட்சி (திராவிட இயக்கம்) என்பதை தான் என விளங்கி கொள்ள முடிகிறது.



Friday, August 30, 2019

வங்கிகள் இணைப்பு சரியா?

இன்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நடத்திய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்

அதாவது இப்போது இருக்கும் 27 பொதுத்துறை வங்கிகளில் சில வங்கிகளை இணைப்பதன் மூலம் 12 வங்கிகளாக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்பது தான் அந்த முடிவு

எந்தெந்த வங்கிகள் எப்படி இணைக்கப்படுகிறது என்பதை இந்த படம் விளக்கும்



இந்த முடிவு சரியா?

என்னை பொறுத்த வரையில் இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு தான்.

அரசு துறை வங்கிகள் 12 என்பதே கூட அதிகம் தான். அதன் ஒரு படியாகக் கூட 27 வங்கிகள் என்கிற நிலையில் இருந்து 12 ஆக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கலாம்.

நிர்வாக செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் லாபமாக செயல்பட இது போன்ற இணைப்புக்கள் அவசியம் ஆகின்றன. தெளிவான கட்டுப்பாடுகளை கண்காணிக்கவும் இந்த இணைப்பு உதவும்

இதனால் ஆட்குறைப்பு இருக்குமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய பணிகள் வெகுவாக குறைந்து விட்டது என்பதை நாம் அறிவோம்.

உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு பல்கலை கழகத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், வங்கிக்கு சென்று டிடி எடுப்பது வழக்கம்.

அதற்கு கேஷியர், அதற்கான அப்ரூவர், டிடி பிரிண்ட் எடுப்பவர், அதை கையெழுத்து இட்டு அப்ரூவல் கொடுப்பவர் என குறைந்தது 3 அலுவலர்கள் தேவையாக இருந்தது.

இப்போது நாமே நாம் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழி இந்த கட்டணத்தை செலுத்த முடியும். அந்த 3 அலுவலர் அவசியம் இல்லாமல் போய்விட்டது.

டிடி மட்டும் அல்ல, வைப்பு நிதி, சேமிப்பு கணக்கு, காப்பீடு என அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனைகள் இப்போது அவரவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.

கிட்டத்தட்ட 60% வங்கி பரிமாற்றங்கள் வங்கிக்கு வெளியே நிகழ்வதால், வங்கி ஊழியர் எண்ணிக்கை என்பது அளவுக்கு அதிகமாகவே உள்ளது

இந்த வங்கிகள் இணைப்பு காரணமாக ஊழியர்கள் ஒருங கிணைக்க வழி பிறக்கும்.

ஒவ்வொரு வங்கி கிளையிலும் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறையாது, ஆனால் உயர் அதிகாரிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

ஒரே நகரில் இருக்கும் வெவ்வேறு வங்கி கிளைகள் ஒவ்வொரு தலைமை அலுவலகம், அதிகாரிகளின கீழ் இயங்கிய நிலை மாறி அத்தனை வங்கி கிளைகளும் சில அதிகாரிகளின கண்காணிப்பில் வரும். எனவே உயர் பதவிகளில் ஆட்கள் குறைய வாய்ப்பு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டில் இப்போது 27 வங்கி உயர் அதிகாரிகள் இருக்கும் நிலை மாறி இனி 12 அதிகாரிகள் போதும். இதுவே தான் அவர்களின் கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கும்.

அதுவும் அரசு ஆட்குறைப்பு செய்யும் என நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக காலியாகும் பதவிகளுக்கு, அதாவது ஓய்வு பெற்று செல்வோர், ராஜினாமா செய்வோர் ஆகிய பதவிகளுக்கு, புதிய ஆட்களை தேர்வு செய்வது குறையலாம். இருக்கும் அலுவலர்க ளை வெவ்வேறு பதவிகளுக்கு மாற்றி இயஙக முடியும்.

இது வங்கி நிர்வாகத்தின் செலவுகளை குறைப்ப தோடு, தெளிவான கண்காணிப்பு செய்யவும் உதவும்

வங்கி இணைப்பால் மக்களுக்கு என்ன பயன்?

நகர மக்களுக்கு பெரிய அளவில் பயன் இல்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு பல வகைகளில் இது உதவும்.

ஒரே ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு வங்கியில் கண்க்கு வைத்து இருப்பவர்கள் வேறொரு வங்கி ATM மூலம் பணம் எடுக்க இப்போது கட்டுப்பாடுகள் இருக்கிறது. இப்போது இணைக்கப்பட்ட வங்கிகளில் எடுக்க கட்டுப்பாடு இருக்காது.

சிற்சில ஊர்களில் 2 அல்லது 3 ATM மட்டுமே இருக்கும் நிலையில் அவை வெவ்வேறு வங்கி ATM ஆக இருந்தால் வரும் சிரமங களை எல்லோரும அறிவீர்கள். நமது வங்கியில் பணம் இல்லாத நிலையில் வேறு ATM மூலம் ₹200 பணம் எடுக்க ₹50 கட்டணம் கொடுக்க மனம் இல்லாமல் கொடுக்க வழி இல்லாமல் தவித்த நிலை நான் அனுபவித்து இருக்கிறேன்.

வங்கி கடன், கணக்குகள் என பலவற்றை இப்போது அந்தந்த வங்கிகள் கொஞ்சம் அதிகமாகவே தீர்மானிக்க முடியும்

மொத்த வங்கி பரிமாற்ற அளவு அதிகரிப்பதால், சில சலுகைகளை, சேமிப்புக்கு வட்டி உயர்வை வங்கிகளால் தாராளமாக கொடுக்க முடியும்

இது போல பல நல்ல விஷயங்கள் இந்த இணைப்பு மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

இந்த இனைப்பால் பொருளாதாரத்துக்கு என்ன பலன்?

இப்போது இந்தியா ஒரு பொருளாதார மந்த நிலையில் இருந்து பொருளாதார சிக்கலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தம், செலவு குறைப்பு ஆகியவை தேவை படுகிறது. தொலைபேசி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், என பலவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டு இருப்பதும் அதனால் தான். அதை போலவே வங்கிகளும் இணைக்கப்படுகின்றன.

இது வங்கி கடனை அதிகமாக வெளியிட்டு, மக்கள் செலவிடும் சக்தியை அதிகரிக்கும். அது பொருட்களின் விற்பனையை கூட்டி அதன் பயனாக உற்பத்தி துறைக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்.

கொஞ்சம் நீண்ட கால திட்டம் தான். ஆனால் இதை விட இதை செய்ய நல்ல தருணம் வேறு இல்லை.

பொறுத்து இருந்து பார்ப்போம்.





Tuesday, August 6, 2019

காஷ்மீர் சட்ட திருத்தம்

பின் கதை சுருக்கம்:

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பொது இந்தியாவில் 526 சமஸ்தானங்கள் இருந்தன. அவை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு தான் இந்தியா எனும் ஒரு நாடு உருவாக்கப்பட்டது.

இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் தனி நாடாக உதயமான பொழுது, காஷ்மீரின் அரசரான ராஜா ஹரி சிங், தனது அரசு தனித்து இயங்கும் எனவும் பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ சேராது எனவும் அறிவித்தார். அவ்வாறே காஷ்மீர் தனித்து இயங்கும் வகையில் நாடு பிரிக்கப்பட்டது

ஆனால் அதே ஆண்டு ஆக்டொபர் மாத இறுதியில் பாகிஸ்தான் காஷமீர் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க முனைந்ததால், ராஜா ஹரி சிங், இந்தியாவின் உதவியை நாடினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்து, அவ்வாறே ராஜா ஹரி சிங்கிடம் இருந்து எழுதியும் வாங்கி கொண்டது இந்தியா.
அந்த அடிப்படையில்1947 ஆம் ஆண்டு ஆக்டொபர் மாதம் 27 ஆம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சில நிபந்தனைகளுடன்.



ராஜா ஹரி சிங்

ராஜா ஹரி சிங் இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஒரு IoA (Instrument  of  Accession ) வரையறை செய்யப்பட்டது. அதில் சொல்லப்பட்ட நிகழ்வுகளுக்கு  எல்லாம் காஷ்மீரின் ஆலோசனை இல்லாமல் காஷ்மீர் கட்டுப்பட வேண்டியது இல்லை. அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவானாலும் அதற்கு காஷ்மீரின் ஒப்புதல் தேவை.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் 1950  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலான இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு தனி அலகு 370  இணைக்கப்பட்டு, 'இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், காஷமீர் மாநிலத்தை பொறுத்தவரை அந்த மாநில சட்டமன்றத்தின் முடிவின் படியே அது அங்கு ஏற்புடையதாகும்' என தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

மேலும், அந்த சிறப்பு அந்தஸ்தின் படி, காஷ்மீர் மாநிலத்துக்கு என தனி கொடி வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதும் தடை செய்யப்பட்டது.



இதே போன்ற சிறப்பு அந்தஸ்துக்கள் பிற மாநிலங்களுக்கும் தரப்பட்டது. அவை அலகு 371A முதல் 371I வரை விவரிக்கப்பட்ட உள்ளன. அவை நமது கட்டுரைக்கு அவசியம் இல்லாதது.

ராஜா ஹரி சிங் எழுதி கொடுத்த IoA வில் Clause 5 & Clause 7 ஆகியவை முக்கியமானது. அவற்றின் படி, ராஜா ஹரி சிங் அல்லது அவருக்கு பிந்தையவர்கள் சம்மதம் இல்லாமல் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது.  இந்தியா தன்னிச்சையாக எடுக்கும் எந்த முடிவுகளும் காஷ்மீரை கட்டுப்படுத்தாது.

Article 370 அமலான போதும் இந்த சலுகை அப்படியே சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதாவது காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக இந்தியா எடுக்காது என லார்டு மவுண்ட் பேட்டன் அவர்களும் ஜவஹர்லால் நேரு அவர்களும் வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள்.

மேலும் காஷ்மீர் மாநில பிரதமர் திரு ஷேக் அப்துல்லா அவர்கள் (அப்போது முதல்வர் பதவி இல்லை, பிரதமர் தான்) 1949  ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் காரணமாக, சர்தார் வல்லபாய் படேல் அவர்களும், இந்திய அரசியல் சாசனத்தை வரையறை செய்த திரு N கோபாலசாமி அய்யங்கார் அவர்களும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு கொடுத்த மற்றுமொரு வாக்குறுதியில், காஷமீர் மாநிலத்தை பொறுத்தவரை, அந்த மாநில மக்களின் முடிவே இறுதியானது என்பது முடிவு செய்யப்படட ஒன்று என வாக்கு கொடுத்து இருந்தார்.

அந்த வாக்குறுதி அடிப்படையில் இந்தியாவுடன் 1950 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநிலமாக காஷ்மீர் இருந்து வருகிறது.

மற்ற எல்லா மாநிலங்களையும் போலவே அங்கும் இந்திய தேர்தல் ஆணையம் தான் தேர்தல் நடத்தும், இந்தியாவின் சட்டங்கள் எல்லாம் அங்கேயும் செல்லுபடியாகும். ஆனால் அப்படி செல்லு படி ஆகும் முன்பாக காஷமீர் மாநில சட்டமன்றம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

இப்போதைய நிகழ்வு:

நேற்றைய தினம் நாடாளுமன்ற மேலவையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அரசியல் சாசன திருத்த மசோதாவை கொண்டுவந்து, அரசியல் சாசன பிரிவு 370 ஐ நீக்குவதாக அறிவித்தார்.

இதன் படி இந்தியாவுடன் காஷ்மீர் முழுமையாக இணைத்து கொள்ளப்படுவதாக அறிவித்து இருக்கிறார். அதாவது 1950 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன இணைந்து இருக்கும் காஷ்மீரை மீண்டும் இப்போது இணைத்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்து பேசின. மற்றும் ஒரு கிழக்கு தைமூராக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வைகோ அவர்களும் எச்சரித்தார்.

ஆனால் எல்லா எதிர்ப்பையும் மீறி அந்த சட்ட திருத்தம் நேற்று நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறி உள்ளது

இது சட்டப்படி சரியா?

Article 370 வரையறை செய்யப்பட்டபோது மிக மிக புத்திசாலித்தனமாக வரையறை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரிவின் படி, இந்திய நாடாளுமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அது காஷ்மீர் மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீரில் செல்லுபடி ஆகும்.

Article 370 நீக்கப்பட வேண்டும் என்றாலும் கூட, காஷமீர் மாநில மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரவே முடியும்.

இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், அரசியல் சாசன பிரிவு 368 சொல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்ட திருத்தம், காஷ்மீரை கட்டுப்படுத்தும் என்பதை உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன பென்ச் தான் தீர்மானிக்கும்.

இந்த 70  ஆண்டு கால இந்திய வரலாற்றில் எத்தனையோ அரசுகள் வலுவாக இருந்தும் இந்த முடிவை எடுக்க தயங்கின. காரணம், நாடாளுமன்றத்தில் வலுவாக இருக்கும் கடைசி காஷ்மீர் மாநிலத்தில் வலுவாக இல்லாத நிலையே இருந்து வந்தது.

இதுவரையும் இருந்த அரசுகள் எல்லாம் இந்திய அரசியல் சாசனத்தையும் இந்திய சட்டங்களையும் உயர்வாக மதித்த காரணத்தால், காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பரிந்துரை இல்லாமல் அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வர தயங்கின. சட்டம் அனுமதிக்காத ஒன்றை, சட்டப்படி செல்லுபடி ஆகுமா என்கிற சந்தேகத்தில் உள்ள ஒரு நடவடிக்கையை எடுக்க சட்டத்தை மதித்த எந்த அரசும் எடுக்கவில்லை. அது மொரார்ஜி தேசாய் அவர்களின் ஜனதா அரசானாலும் சரி, வாஜ்பாயி அவர்களின் பாரதிய ஜனதா அரசானாலும் சரி, யாரும் அடைய முடியாத மிகப்பெரிய பலம் பெற்றிருந்த ராஜீவ் காந்தி அவர்களின் காங்கிரஸ் அரசானாலும் சரி, இப்படி ஒரு சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆனால் சட்ட நெறி முறைகள் எதையும் கண்டு கொள்ளாமல், நேற்றைய தினம் மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உள்ளது.

பார்ப்போம், இது சட்டத்தின் முன் நின்று வெல்கிறதா அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா என்பதை.

அதுவரையும், காஷ்மீர் மக்களுக்கு எல்லா விதமான பாதுகாப்பையும் தரும் கடமை நமது அரசுக்கு உள்ளது.

.

Saturday, July 20, 2019

தமிழ்நாடு நாள்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நவம்பர் மாதம் முதல் நாள், இனி ஆண்டு தோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு.

இது சரியான முடிவா என கேட்டால் நிச்சயமாக இல்லை என்பேன்.

இந்தியா 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் விடுதலை அடைந்தது. 1950 ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு ஆனது. அன்று முதல் சென்னை மாகாணமாக இருந்துவந்த நமது மாநிலம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது.

கன்னட மொழி பேசும் பகுதி கர்நாடகம் என்றும், தெலுங்கு மொழி பேசும் பகுதி ஆந்திர பிரதேசம் என்றும், மலையாளம் மொழி பேசும் பகுதி கேரளா என்றும் பிரித்து கொடுக்கப்பட்டது. மீதம் இருந்த பகுதி தான் சென்னை மாகாணமாக தொடர்ந்தது.

இப்படி மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்படும் போது, எல்லை பிரிப்பதில் பல பல பிரச்சனைகள் எழுந்து பல போராட்டங்கள் நடத்தி தான் இன்றைய எல்லை வகுக்கப்பட்டது.

திருப்பதியை தமிழகத்துக்கு தர மறுத்து ஆந்திரா எடுத்து கொண்டது. தேவிகுளம் பீர்மேடு போராட்டம் நமக்கும் கேரளாவுக்கும் இடையில் நடந்தது. கன்னியாகுமரி நம்மிடமே தக்க வைத்துக்கொள்ள நாம் பெரும் போராட்டம் நடத்த வேண்டி வந்தது.

இதில் நாம் இழந்தவைகள் அதிகம்.

இந்த பிரிவினை நமக்கு சந்தோஷம் தந்த நிகழ்வு அல்ல. எனவே இதில் கொண்டாட எதுவும் இல்லை.

அப்படியென்றால், தமிழ்நாடு நாள் என நாம் கொண்டாட வேண்டாமா?

கேரளா, கர்நாடகா, எல்லாம் நவம்பர் முதல் நாளை தங்கள் மாநில நாளாக கொண்டாடுவதை போல நமக்கும் ஒரு நாள் வேண்டாமா? அது எந்த நாள்?

தமிழ்நாடு நாள் என நாம் கொண்டாட பொருத்தமான நாள் எனில் அது ஜனவரி மாதம் 14 ஆம் நாள் தான். தை திங்கள் முதல் நாள்.

1969 ஆம் ஆண்டு, ஜனவரி 14 தேதி வரை சென்னை மாகாணம் என் இருந்த நமது மாநிலத்தின் பெயர் அன்று முதல் தான் ' தமிழ்நாடு ' என மாற்றப்பட்டது.

இந்த சிறப்புமிகு தீர்மானத்தை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, நமது மாநிலத்துக்கு ' தமிழ்நாடு ' என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

எனவே தமிழ்நாடு நாள் என்பதை நவம்பர் முதல் நாளுக்கு பதிலாக ஜனவரி 14 அல்லது தை முதல் நாளில் கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும்

தமிழக அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

Sunday, January 13, 2019

கொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்

சமீபத்திய பரபரப்பு கொடநாடு.

டெல்லியில் இருந்து வெளியாகும் 'தெஹல்கா' பத்திரிக்கையின் 'முன்னாள் ஆசிரியர்' சாமுவேல் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு பேரை வைத்து ஒரு பரபரப்பான பேட்டியை அளித்தார்.

பேட்டியின் சாரம்சம் கொடநாடு ஜெயலலிதா வீட்டில் நடந்த கொள்ளைகள் அது தொடர்பான கொலைகள் ஆகியவற்றை நடத்தியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்பது. எடப்பாடி அவர்களது திட்டப்படி தான் அந்த கொள்ளைகள் நடத்தப்பட்டது எனவும், அதிமுக பிரமுகர்கள் பலரது ஆவணங்கள வீடியோ பதிவுகள் அங்கிருந்து கொள்ளை அடிக்கப்பட்டன எனவும், அவை இப்போது எடப்பாடியாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன எனவும், அதை வைத்து தான் கட்சியினரை மிரட்டி பணிய வைத்திருக்கிறார் எனவும் குற்றம் சுட்டப்பட்டுள்ளது.

அந்த இருவரும் அந்த கொள்ளையில் தொடர்புள்ளதாக சொல்லப்படுபவர்கள். அவர்களது 'வாக்குமூலமாக'வே பலரும் இதை பார்க்கிறார்கள்.

விஷயம் வெளியானதும் திமுகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் இதனை பெரிய அளவில் பரபரப்பாக்கி இருக்கின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையும், உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
திமுக இதனை சட்டப்போராட்டமாக முன்னெடுக்கவும் முனைப்பு காட்டுகிறது.

இதில் எனக்கு சில மாற்று கருத்துக்கள் உள்ளன.

கொடநாடு கொள்ளைகள் மற்றும் அது தொடர்பான கொலைகள் ஆகியவற்றில் மறைந்திருக்கும் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சரியே. ஒன்றரை வருடங்களாக இது குறித்து வலியுறுத்தாமல் இருப்பதன் ஆச்சர்யம் இனியும் விலவில்லை.

ஆனால் அதில் எடப்பாடி தொடர்புடையவர் எனக் கூறி பதவி விலகச்சொல்வது கொஞ்சம் அதீதமாகவே படுகிறது எனக்கு. ஆட்சிக்கு எதிரான இன்னொரு வாய்ப்பாக இதனை திமுக கருதுவது சரிதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

முதலாவதாக, பேட்டி அளித்தவர் 'தெஹல்கா'வின் 'முன்னாள் ஆசிரியர்'. அந்த இருவரும் ஏற்கனவே போலீஸால் விசாரிக்கப்பட்டவர்கள். அப்போது இது குறித்து எதுவும் சொல்லாதவர்கள்.

இப்போது சொல்லி இருப்பது உண்மை என உறுதியாக தெரிந்திருந்தால் சாமுவேல் அதனை ஏதேனும் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்ய செய்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அது அசைக்கமுடியாத ஒரு ஆவணமாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

ஆனால் இப்போதைக்கு இதை ஒரு பரபரப்புக்கான பேட்டியாக மட்டுமே வெளியிட்டதால் அதன் நம்பகத்தன்மை உறுதியாக இல்லை. யார் வேண்டுமானாலும் யாரை குறித்து வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டியாக குற்றச்சாட்டு கூற முடியும். அதன் அடிப்படையில் எல்லாம் ஒருவரை பதவி விலக சொல்லி கேட்க முடியாது என்பது திமுகவுக்கு தெரியாததல்ல. இதே கருத்தை தலைவர் கலைஞர் பலமுறை சொல்லியும் இருக்கிறார்.

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியாருக்கு உண்மையில் தொடர்பு இருக்கலாம். அல்லது தொடர்பு இல்லாமலும் இருக்கலாம். வெறும் ஒரு பேட்டியின் அடிப்படையில் அதனை உறுதி செய்துவிட முடியாது. ஒரு முறையான முதற்கட்ட விசாரணை நடத்தி அது எடப்பாடியாரை நோக்கி சென்றால் மட்டுமே அந்த கோரிக்கைக்கு மரியாதை இருக்கும்.

அல்லது இந்த குற்றச்சாட்டை வைத்தது ஒரு நம்பகத்தன்மை கொண்ட அமைப்பாக இருக்கவேண்டும். போலீஸ் ஆவணம், நீதிமன்ற குறிப்பு, புலனாய்வு அமைப்புக்களின் குறிப்பு போன்றவை

2ஜி விவகாரத்தில் கூட ராசா அவர்களை ராஜினாமா செய்யக் கோரும் முன்பாக CAG கொடுத்த அறிக்கை மற்றும் அதன் அடிப்படையிலான முதற்கட்ட விசாரணை இருந்தது. அந்த குற்றச்சாட்டுக்கள் தவறு என பின்னர் நிரூபிக்கப்பட்டாலும் கூட முதற்கட்ட வலுவான ஆவணம் இல்லாமல் பதவி விலக சொல்லி கேட்க முடியாது என்பதை அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இப்போது யாரோ ஒரு தனி நபர், ஒரு முன்னாள் பத்திரிக்கை ஆசிரியர் ஆகியோரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவி விலகச்சொல்லி கேட்பது சரியென தோன்றவில்லை.

எடப்பாடி அவர்கள் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருப்பதுடன், சாமுவேல் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார். தமிழக போலீஸ் டெல்லியில் பேட்டி அளித்தவர்களை கைதும் செய்திருக்கிறது.

இந்த சூழலில், நீதிமன்றத்தில் கொடுக்காமல் பேட்டியில் கொடுத்த அந்த வாக்குமூலம் உண்மையாகவே இருந்தாலும் போலீஸை வைத்து அதை பொய்யென சொல்ல வைக்க அரசுக்கு எளிதாக முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒரு வாரத்திலேயே இது பலவீனமாகிப்போய்விட கூடிய விஷயமாகவே படுகிறது. உண்மையில் இந்த வாக்குமூலத்தை சட்டரீதியாக செய்யாமல் பரபரப்பு பேட்டியாக மட்டுமே செய்திருப்பதே ஒரு மிகப்பெரிய நெருடலை தருகிறது.

இந்த சூழலில் இந்த பேட்டியை வைத்து ஓரிரு சாதாரணர்களின் குற்றச்சாட்டை வைத்து எல்லாம் முதல்வரை பதவி விலக வைக்கலாம் என எதிர்பார்க்கும் அளவுக்கு திமுக இறங்கி விடவில்லை என்றே நான் நம்புகிறேன்

திமுக செய்யக்கூடியதெல்லாம், கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை கேட்கலாம். அவ்வளவு தான். அந்த விசாரணை தான் அதில் யார் தொடர்புடையவர் என்பதை தீர்மானிக்கும். விசாரணைக்கு முன்பாகவே ஒருவரை நோக்கி அந்த வழக்கை செலுத்துவது சரியல்ல.

எடப்பாடி குற்றம் செய்தவராகவே கூட இருக்கலாம். ஆனால் அதை கொடநாடு குறித்த விசாரணை தான் தெளிவாக்கவேண்டும். ஒருவேளை எடப்பாடி அல்லாமல் வேறு யாரேனும் கூட காரணமாக இருக்கலாம்.

திமுகவின் கோரிக்கை விசாரணையை நோக்கி தான் இருக்கவேண்டுமே தவிர விசாரணைக்கு முன்பே எடப்பாடியாரை குற்றவாளி ஆக்குவதாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

ஒருவேளை, அந்த பேட்டியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு தவறாக இருக்கும் பட்சத்தில் அதை நம்பி திமுக முன்னெடுத்த நடவடிக்கைகள் கேலிக்குள்ளாவது எதிர்வரும் தேர்தலில் எதிர்மறை இமேஜை உருவாக்கும் ஆபத்து உள்ளது.

வேகத்தை விட இப்போதைய அவசியம் விவேகம் தான்.

Wednesday, January 2, 2019

சபரிமலை பெண்கள் தரிசனம்

இன்று சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.

இதுவரை தரிசனம் செய்ய வந்த பெண்கள் பலத்த விளம்பரங்களை செய்து விட்டு வந்ததால் பல பல பிரச்சனைகள் ஏற்பட்டன. சில அரசியல் கட்சியினரும் சில இயக்கங்களும் தொடர்ந்து அங்கே முகாமிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனால் தானோ என்னவோ, இன்று காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களின் பலத்த பாதுகாப்புடன் விடியற்காலை நேரத்தில் அந்த இரண்டு பெண்களையும் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களது தரிசனம் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்ப்படுத்தி தனது கடமையை நிறைவேற்றி விட்டது கேரள அரசு.

விஷயம் தெரியவந்ததும், கேரளம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்ததோடு நாளைய தினம் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தரிசனம் செய்ய விரும்பவேயில்லை என நிறுவ, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிற்சில இயக்கங்கள் ஒரு சிலரை ஆங்காங்கே அழைத்து வந்து ஐயப்ப ஜோதி என்றொரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியது.




அதை முறியடிக்கும் விதமாக கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 'மகளிர் சுவர்' அமைக்க அழைப்பு விடுத்திருந்தது. உண்மையிலேயே பெண்களின் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் ஐயப்ப தரிசனத்தை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா? என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் விதமாக, நேற்றைய தினம் (01.01.2019) மாலை 4 மணி முதல் 4:30 வரை, அரை மணிநேரம் மட்டும் மகளிர் சுவர் அமைக்கவும், சபரிமலையில் பெண்களை ஐயப்ப தரிசனத்துக்கு அனுமதிக்கவேண்டும் என்கிற கருத்துடைய பெண்கள் அதில் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சுமார் 10 லட்சம் பெண்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காசர்கோடு முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரை சுமார் 620 கி.மீ நீளத்துக்கு கிட்டத்தட்ட 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்து நின்று 'சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்கவேண்டும்' என ஆதரவு குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே எதிர்பார்க்காத சந்தோஷ அதிர்ச்சி. இந்த மாபெரும் வெற்றி தந்த உத்வேகத்தில் இன்று காலை தைரியமாக சபரிமலையில் பெண்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து இருக்கிறது கேரள போலீஸ்.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவரம் வெளியானதுமே சபரிமலை கோவில் தந்திரி, ஐயப்பன் சன்னிதானத்தின் நடையை அடைத்து ஒரு மணி நேரம் 'பரிகார பூஜைகள்' நடத்தியபின் மீண்டும் தரிசனத்துக்கு நடை திறந்து விட்டிருக்கிறார்.

பெண்கள் தரிசனம் செய்ததற்காக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்தது என்பது, பெண்களை, அவர்களது வழிபாட்டு உரிமையை, உச்சநீதிமன்றம் தந்த உத்தரவை அவமதிக்கும் செயல் என்கிற எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் 'பரிகார பூஜை என்பது இவ்வளவு தானே? இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? பேசாமல் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை பெண்களுக்கு என தரிசனத்துக்கு ஒதுக்கி தந்து அது முடிந்த பின் இந்த பூஜையை நடத்தி பொது தரிசனத்துக்கு அனுமதிக்கலாமே' போன்ற குரல்களும் கேட்க தொடங்கி இருக்கிறது.

பெண்கள் தரிசனம் செய்தால் அது ஜஸ்ட் ஒரு பரிகார பூஜை செய்தால் நிவர்த்தி ஆகக்கூடிய அளவிலான விஷயம் தான் என தந்திரி மறைமுகமாக புரிய வைத்திருப்பது, இத்தனை நாளும் பலத்த போராட்டங்கள் எல்லாம் நடத்தி வந்த அரசியல் இயக்கத்தினருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பின்னடவை சற்றும் எதிர்பார்க்காத போராட்ட குழுவினர் நாளை முழு அடைப்பை அறிவித்து இருப்பது கூட அவர்களது பதற்றத்தையே காட்டுகிறது. அதிலும், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக சொல்லி போராடி வருவது, 'பரிகார பூஜை செய்தபின் புனிதமாகிவிட்டது'  என உறுதி அளித்த சபரிமலை தந்திரியின் வாக்கை கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

சபரிமலை தந்திரியே சொன்னபின்னும் அதை ஏற்காமல் போராடுவதை பார்த்தால் அவர்களது நோக்கம் ஐயப்பனோ, பக்தியோ, பாரம்பரியமோ, கலாச்சாரமோ, சாஸ்திரமோ, சம்பிரதாயமோ அல்ல.. வெறும் அரசியல் லாபஙகளுக்காகவும், கேரளத்தில் அமைதியின்மை நிகழவேண்டும் என்கிற குறிக்கோளுக்காகவும் தான் இப்படியான போராட்டங்கள் நடக்கிறதோ என்கிற ஐயத்தை எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

எது எப்படியாயினும் கேரள அரசும் கேரள போலீசும் மிக பெரிய விஷயத்தை வரலாற்று நிகழ்வை இன்று நடத்தி காட்டி இருக்கிறார்கள்.

பெண்ணை தன்னில் ஒரு பாதியாக சரிசமமாக நடத்தவேண்டும் என்றுணர்த்த சிவசக்தியை கொடுத்த இந்து மதமும் அதன் உண்மையான பக்தர்களும், பெண்ணுரிமைக்கு ஆதரவானவர்களும் நிச்சயமாய் இதனை பாராட்டுவார்கள்.

வாழ்த்துக்கள்.


Printfriendly