Wednesday, September 29, 2021

பெட்ரோல் டீசல் GST யின் கீழ் வருமா?

சமீப காலமாக மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது, பெட்ரோல் மற்றும் டீசலை GST ககுள் கொண்டு வரவேண்டும் என்கிற விவாதம்.

பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது குறித்த விவாதம் GST council கூட்டத்தில் விவாதிக்க படாமலேயே சென்று கொண்டு இருக்கிறது.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றை GST வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். என்னிடம் பல நண்பர்கள் அவர்களது சந்தேகங்களை கேட்டார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு இங்கே முக்கியமான ஐந்து கேள்விகளுக்கு சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்.

1. GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வந்தால் அதன் விலை குறையுமா?

குறையும். எப்படி என சொல்கிறேன்.

இப்போது GST இல்லாத காரணத்தால் GST க்கு முன்பு இருந்த சட்டங்களின் அடிப்படையில் தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோலை உதாரணமாக எடுத்து கொள்வோம். (விலை ஒரு லிட்டருக்கு)

பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40

அதன் மீது மத்திய அரசு விதிக்கும் Excise மற்றும் CESS வரி (இது மொத்தமும் மத்திய அரசுக்கு போகும்) - ₹32

பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4

இவை மூன்றையும் சேர்த்தால் - ₹76

இந்த ₹76 மீது மாநில அரசு விதிக்கும் வரி - ₹23

இதையும் சேர்த்தால் விற்பனை செய்யப்படும் விலை - ₹99

GST குள் கொண்டு வரப்பட்ட பிறகு இது என்ன ஆகும் என பார்ப்போம்.

பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40

Excise மற்றும் CESS வரி (GST வந்தால் இந்த வரிகள் ரத்து ஆகி விடும்) - ₹0

பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4

இவை மூன்றையும் சேர்த்தால் - ₹44

இந்த ₹44 மீது GST வரி - ₹12 (இதில் மாநில அரசுக்கு ₹6 மத்திய அரசுக்கு ₹6 போகும்)

GST யின் படி அதிக பட்ச வரி 28% என்பதால் அதை கணக்கு இட்டு உள்ளேன்.

GST லும் CESS உள்ளது. ஆனால் அது Luxury Items வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் டீசல் Luxury Item ஆக வராது.

எனவே இப்போது ₹99 ஆக இருக்கும் பெட்ரோல் விலை GST யின் கீழ் ₹56 ஆகும்.

2. மாநிலங்கள் பெட்ரோல் டீசலை GST குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மேலே சொன்ன கணக்கீடு படி, மத்திய அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹32 என்பது ₹6 ஆக குறைகிறது. மாநில அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹23 என்பது ₹6 ஆக குறைக்கிறது.

அதாவது சுருக்கமாக சொன்னால் ஒரு லிட்டருக்கு, மத்திய அரசுக்கு ₹26 மாநில அரசுக்கு ₹17 இழப்பு ஆகும்.

இப்போதைய சூழலில் மாநில அரசுக்கான பெரும் வருவாய் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இருந்தும், மது விற்பனையில் இருந்தும் தான் கிடைக்கிறது. எனவே இந்த இழப்பு மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும்

ஏற்கனவே, GST வந்த பிறகு ஏற்கனவே கிடைத்து வந்த வரி வருவாய் கிடைக்காமல் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் வருகின்ற கொஞ்ச நஞ்ச வருவாயையும் இழக்க மாநிலங்கள் தயாராக இல்லை.

3. GST குள் கொண்டு வந்த பின்னால் வரியை அரசுகள் உயர்த்தி இப்போதைய விலைக்கே கொண்டு வராதா?

GST சட்டம் அதிக பட்சமாக 28% வரி கொண்டது. அதை விட அதிகமாக வரி விதிக்க இப்போதைக்கு சட்டத்தில் இடம் இல்லை.

GST விதிக்கும் போது வேறு வரிகள் நிழைக்கவும் சட்டத்தில் இடம் இல்லை.

ஒன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய விலையை இப்போது இருக்கும் ₹40 லிருந்து உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் அதன் அடிப்படையில் வரியும் உயரும். ஆனால் அது பெரிய அளவுக்கு அரசுக்கு பயன் தராது.

4. பெட்ரோலுக்கு வசூல் ஆகும் வரிகள் மாநிலத்துக்கு கிடைக்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உள்ளதா?

பெட்ரோலை பொறுத்த வரை, பங்கில் இருந்து வாகனத்துக்கு செலுத்துவது தான் விற்பனை எனப்படும். இரண்டும் ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடியும் (பெட்ரோல் பங்க்).

எனவே GST யின் Place of Supply Rules படி, இது மாநிலத்திலேயே நடக்கும் விற்பனையாகத் தான் கருதப்படும்.
பெட்ரோல் பங்க் தமிழகத்தில் இருந்தாலும் பெட்ரோல் வாங்கும் வாகனம் டெல்லியை சேர்ந்தது ஆக இருந்தாலும் அது Interstate வியாபாரம் ஆகாது. Intra-State வியாபாரமாக தான் கருதப்படும்.

எனவே இதற்கான வரி, CGST & SGST கணக்கில் தான் வரவு வைக்கப்படுமே தவிர IGST கணக்கில் வராது.

SGST தொகை நேரடியாக மாநிலத்துக்கு கிடைத்து விடும். CGST தொகை நேரடியாக மத்திய அரசுக்கு சென்று விடும்.

எனவே, மத்திய அரசு மாநிலத்துக்கு வரி தராமல் இழுத்தடிக்கும் வாய்ப்பு இதில் ஏற்படாது. ஏனெனில் மாநிலத்தின் பங்கு நேரடியாக மாநிலத்துக்கு வந்து விடும்.

5. எல்லா வகையிலும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஏன் கொண்டு வரக்கூடாது?

மக்கள் நலன் முக்கியம் எனில் தாராளமாக GST குள் பெட்ரோல் டீசலை எப்போதோ கொண்டு வந்திருக்க முடியும் 

அவ்வளவு ஏன், இப்போது இருக்கும் Excise வரியை 23 முறைக்கு மேல் உயர்த்தி இருக்கும் மத்திய அரசு, மக்கள் நலன் முக்கியம் எனில் அப்படி உயர்த்தாமல் தவிர்த்து இருக்கும்.

GST குள் கொண்டு வராமலேயே விலையை குறைத்து இருக்க முடியும்.

ஆனால் இங்கே எல்லா அரசுகளும் பார்ப்பது வரி வருவாய் எனும் ஒரே விஷயத்தை தான்.

பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் வரி வருவாயை இழக்க எந்த அரசும் விரும்பவில்லை. இப்போது கிடைத்துக் கொண்டு இருக்கும் வரியே குறைவு எனும் நிலையில் மேலும் குறைக்க யாரும் தயார் இல்லை.

அப்படி ஆனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். அதற்கான வட்டி கட்ட கூட மேலும் வரி உயர்த்தும் நிலை வரும்.

GST வரம்பில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வர மாநிலங்கள் சம்மதித்தால் கூட மத்திய அரசு சம்மதிக்காது. ஏனெனில் அதிக இழப்பு மத்திய அரசுக்குத் தான்.

எனவே இது முடிவு இல்லாமல் நீண்டு கொண்டு இருக்கும் பிரச்சினையாகவே என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

****
உங்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்.

அடுத்த பாகத்தில் விளக்க முயற்சி செய்கிறேன்.






Saturday, September 18, 2021

ஏர் இந்தியா விற்பனை

ஏர் இந்தியாவை விற்கும் முடிவில் உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு, அதற்கான விருப்பங்ளை கோரி இருந்தது.

டாடா நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கடந்த செப் 15 ஆம் தேதி தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளது.

யார் அந்த நிறுவனத்தை பெற போகிறார்கள் என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

*****

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இப்போது சுமார் ₹43,000 கோடி கடன் உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தது ஒன்றிய அரசு.

ஏர் இந்தியா  நிறுவனம் முழுமையும், விமானங்கள், பராமரிப்பு நிறுவனம், நிலங்கள், அலுவலகங்கள், வீட்டு குடியிருப்புக்கள் என எல்லாவற்றையும் விற்பனைக்கு அறிவித்து இருக்கிறது அரசு.

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, விமான பயணங்கள் அதி வேகமாக வளர்ந்து வரும் இப்போதைய காலகட்டத்தில் ஏன் நஷ்டம் ஆனது, ஏன் அதனை சீரமைக்காமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது எல்லாம் மிகப் பெரிய புதிர் தான்

உள்நாட்டு விமான சேவை கொள்கையில் அரசால் செய்யப்பட்ட மாறுதல்கள் காரணமாக ஏர் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய லாபகரமான வழித்தடங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தன.

அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் ஏர் இந்தியாவை விட அதிகமாக தனியாருக்கு அனுமதி கொடுத்தது.. அதிக பயணிகள் இல்லாத இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஏர் இந்தியாவை இயக்க செய்ததும் தான் நஷ்டத்தில் மிக முக்கிய காரணி

சுமார் 127 விமானங்கள் கொண்டது ஏர் இந்தியா. அதில் 4 ஜம்போ ஜெட் (B 747) விமானங்களும் அடக்கம். இது தவிர ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சுமார் 24 விமானங்கள் வைத்து இருக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பாலான சேவை முக்கியம் அல்லாத வழித் தடங்களில் தான் அமைந்து இருக்கின்றன.

அதிக பயணிகள் தேவை உள்ள வழித்தடங்களில் ஏர் இந்தியாவுக்கு கிடைத்த அனுமதி மிகக் குறைவே.

இது தவிர மற்றொரு முக்கிய காரணி, ஏர் இந்தியாவை முழு சேவை கொண்ட நிறுவனமாக (Full Service Carrier) நடத்துவது.

இந்தியாவில் இப்போது குறைந்த செல்லவுள்ள விமான  சேவைகள் (LCC - Low Cost Carriers) தான் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எல்லா முக்கிய வழி தடங்களும் சுமார் 2 மணி நேரத்துக்குள் பயணிக்கத் தக்கவை என்பதால் முழு சேவை அவசியம் இல்லை.

உணவு தேவைப்படும் பயணிகள் அதை தனியாக வாங்கி கொள்ளலாம். இப்படி தான் தனியார் விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அவற்றின் கட்டணங்களும் குறைவே.

ஆனால் ஏர் இந்தியா இன்னமும் Full Service Airline ஆக செயல்பட்டு சில வழித் தடங்களில் தனியாரின் போட்டியை சமாளிக்க கட்டண குறைப்பையும் அறிவிப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.

உணவு மற்றும் பிற சேவைகளுக்காக கொடுத்த காண்டிராக்ட் ரத்து செய்யும் துணிச்சலான முடிவை எடுக்க முடிந்தால், ஏர் இந்தியாவையும் LCC ஆக மாற்ற முடிவு எடுக்கக் கூடிய திராணி உள்ள ஒரு அரசு அமைந்தால், நிச்சயமாக operating cost கணிசமாக குறைந்து நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ அரசு இந்த முடிவை எடுக்கவே இல்லை.

UDAAN போன்ற சேவைகள் வரக்கூடிய நேரத்தில் ஏர் இந்தியாவுக்கு மிகப் பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன.

Indigo நிறுவனம் 200+ விமானங்கள் இப்போது கைவசம் வைத்து இருந்த போதும் இன்னமும் 500+ விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதில் இருந்தே இந்திய விமான சேவை துறைக்கு உள்ள வாய்ப்புக்கள் எவ்வளவு என்பது தெளிவு ஆகும்.

இச்சூழலில் 127 விமானங்கள் கொண்ட ஏர் இந்தியா முழு கொள்ளளவு நிறைய பயணிகளை கொண்டு பறப்பது சுலபம். இன்னமும் கூட விமானங்களை வாங்கி அவற்றையும் முழு கொள்ளளவுடன் இயக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன? நல்ல டிமாண்ட் உள்ள வழித்தடங்களை ஏர் இந்தியாவுக்கு அரசு கொடுக்க வேண்டும்.

உதாரணமாக சென்னை - மும்பை வழி தடத்தில் 11 விமானங்கள் இயங்கினால் அதில் 3 தான் ஏர் இந்தியா. கோவை மும்பை வழித்தடத்தில் 7 க்கு 1 தான் ஏர் இந்தியா. அதிலும் ஏர் இந்தியாவுக்கு PHS எனும் Peak Hour Service நேரமான காலை மாலை வேளைகளில் அனுமதி கொடுக்காமல் அதிக பயணிகள் இல்லாத மதிய நேரத்தை கொடுத்து இருக்கிறது அரசு. எப்படி ஏர் இந்தியா வருவாய் பார்க்கும்?

எனவே எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கையில் திட்டமிட்டே அரசு ஏர் இந்தியாவை நஷ்டத்துக்கு தள்ளி விட்டதோ? அதையே காரணம் காட்டி தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்கிறதோ? என்கிற சந்தேகங்கள் பலருக்கும் வருவதில் வியப்பு இல்லை.

அதை மேலும் அதிகரிக்கும் விதமாக, தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க காட்டும் ஆர்வம், ஏர் இந்தியா ஒரு மதிப்பு மிக்க, வருவாய் ஈட்டும் வாய்ப்பு கொண்ட நிறுவனம் என அவர்கள் புரிந்து கொண்டதை தெளிவு ஆக்குகிறது.

ஏர் இந்தியாவிடம் போயிங் மற்றும் ஏர் பஸ் ஆகிய இரண்டு வகை விமானங்களும் உள்ளன. மேலும் ATR விமானங்களும் உள்ளன. அவற்றுக்கான ரிப்பேர் & சேவை அமைப்பும் சொந்தமாக உள்ளன.

இத்தனை பெருமையும் வசதிகளும் கொண்ட நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் வாங்க துடிப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

தனியார் நிறுவனங்களால் ஏர் இந்தியாவை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றால், அரசால் ஏன் அதை செய்ய முடியவில்லை?
சரியான நிர்வாகிகளை நியமித்து, விமான கொள்கைகளை சீர் திருத்தினால் ஏர் இந்தியா மீண்டும் பழைய பெருமையை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. சரியான நிர்வாகி கிடைக்கவில்லை எனில், மூன்றாம் நபர் நிர்வாக அமைப்பை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம். Contract based third party administrator. 

ஏர் இந்தியாவை சீர் செய்ய வேண்டும் என நினைத்தால் அரசுக்கு அது மிக மிக எளிதான காரியம் தான்.

அதிலும் வெறும் ₹43,000 கோடி கடனுக்காக அதை விட அதிக மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்வது எல்லாம் பலருக்கும் பல விதமான சந்தேகத்தை கிளப்பாமல் இல்லை.

பெட்ரோல் டீசல் போன்றவற்றின் வரி வருவாய் மூலம் மட்டுமே சுமார் ₹3 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஒரு அரசுக்கு, ₹43,000 கோடி ரூபாய் எல்லாம் ஒரு விஷயமே அல்ல.

ஆனால் அரசு ஏனோ ஏர் இந்தியாவை விற்றே ஆக வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி கொண்டு இருக்கிறது.

BSNL நிறுவனத்தை போலவே ஏர் இந்தியாவையும் அவற்றுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கூட கொடுக்காமல் மறுதலித்து நஷ்டத்துக்கு உள்ளாக்கி தனியாருக்கு தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு கிளம்பி இருந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் ஏர் இந்தியாவை விற்பனை செய்வதில் உறுதியாக இருக்கிறது அரசு.

அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்பது தெளிவான பிறகு நாம் இனி அதை யார் வாங்குவார்கள்? ஏர் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? ஊழியர்கள் நிலை என்ன என்பதை பற்றிய கவலைக்கு திரும்புவதே சரியாக இருக்கும்

அதற்கு.. யார் வாங்க போகிறார்கள் என தெரிய வேண்டும்.

அது வரை காத்திருப்போம்.





Wednesday, September 1, 2021

திருக்கோவிலில் திருக்குறள்

நடைபெற்று வரும் தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் "தமிழ் வளர்ச்சி துறை" மானிய கோரிக்கை குறித்த விவாத்துக்கு பதில் அளித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதில் ஒன்று இந்து சமய அறநிலைய துறையுடன் இணைந்து, கோவில்களில் திருக்குறள் வகுப்பு நடத்தப்படும் என்பதும் ஒன்று.

தேவாரம், திருவாசகம் ஆகியவை கோவில்களில் வகுப்பு எடுப்பதை போல திருக்குறளையும் கோவில்களில் வகுப்பாக எடுக்க தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இது தமிழை வளர்க்கும் மற்றும் ஒரு திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

ஆனால் இதன் பின்னே இருக்கும் சில சிக்கல்களை இந்த அரசு ஆராய்ந்து பார்த்ததா என தெரியவில்லை.

சமீப காலங்களாக தமிழ்நாட்டில் திருவள்ளுவரை வைத்து சர்ச்சைகள் உருவாகி வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்றும் திருக்குறள் இந்து மத நூல் என்றும் பாஜகவும் அதன் துணை அமைப்புக்களும் ஒரு புனை கதையை ஏற்கனவே பரப்பி விட தொடங்கி இருக்கிறது.

திருவள்ளுவர் இந்து முனிவர் அல்ல, திருக்குறள் இந்து மத நூல் அல்ல, திருக்குறள் அனைத்து மதங்களுக்கும் பொதுவான கருத்துக்களை வாழ்வியல் அறிவுரைகளை கொண்ட "உலக பொது மறை" என விளக்கங்கள் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போய் கொண்டு இருக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

இதற்கிடையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் குதர்க்க புத்தியுடன் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிந்து இருப்பது போல ஒரு போலி படம் ஒன்றை உருவாக்கி பரப்ப தொடங்கினர்.

தமிழ் நாடு அரசு தீர்க்கமான முடிவை எடுத்து திருவள்ளுவர் என்பவர் அதிகாரப்பூர்வமாக வெள்ளுடை அணிந்து வெண்தாடியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் தான் தமிழ்நாடு அரசு அங்கீகரித்த படம் என சொல்லி அந்த பிரச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.

***

இப்படியான சர்ச்சைகள் ஒரு வழியாக ஓய்ந்து இருக்கும் வேளையில் தான் தமிழ்நாடு அரசு இப்போது திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்பு எடுக்கும் திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் அறிவிப்பு வந்த உடனேயே, பாஜகவின், அதன் துணை அமைப்புக்களின் ஆதரவாளர்கள், "திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்பதையும், திருக்குறள் இந்து மத நூல் என்பதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது" என்பதை போல ஒரு செய்தியை எல்லோருக்கும் பரப்பி வருகிறார்கள். 

அரசு அறிவிப்பின் உண்மை தன்மையை விளக்கி சொல்ல முடியாத நிலையை தமிழக அரசு நமக்கு ஏற்படுத்தி இருப்பது தான் இப்போதைய சிக்கல். 

அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இருக்கையில் அதற்கு வேறு எந்த காரண காரியங்களையும் சொல்லி நம்மால் மடை மாற்றி விட முடியாது.

நோக்கம் என்னவோ திருக்குறளை பரவலாக்க கொண்டு சேர்க்கும் நோக்கம் தான். ஆனால் அதை கோவில்களில் சொல்லி கொடுப்போம் என்பதையும் தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பதும் தான் பிரச்சனையை வேறு வகையில் திருப்பி இருக்கின்றன.

உதாரணமாக, இந்து மத கோவில்களில் இருந்து கொண்டு வரும் பழங்களை கூட ஏற்காத சிலர் பிற மதத்தில் குறிப்பாக கிறித்துவ மதத்தில் இருக்கிறார்கள். வேறு ஒரு மதத்தின் அடையாளமாக எது இருந்தாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

திருக்குறள் இதுவரை பள்ளிகளிலும், பேருந்துகளிலும், அரசு அலுவலகங்களிலும் என பொதுவாக இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தில் திருக்குறளை கொண்டு போய் வைப்பது எத்தகைய மாறுபாடான நிலைப்பாட்டை குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய வைக்க வேண்டியது இல்லை.

திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மக்களிடத்தில் இந்த திட்டம் கொண்டு சேர்த்து விடுமோ என்கிற அச்சம் எழுவது இயல்பே.

இந்து மதம் என சுருக்காமல் எல்லா வழிபாட்டு தலங்களிலும் என சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்து இருக்காது என நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியங்களை பரவலாக்கம் செய்வது தான் நோக்கம் எனில் திருக்குறள் மட்டும் அல்லாமல் வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என எல்லா தமிழ் இலக்கியத்தையும் கொண்டு சேர்த்து இருக்கலாம்.

திருக்குறள் ஏற்கனவே பள்ளிகளில் கட்டாயமாக்கபபட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் பேருந்துகள் என எங்கும் திருக்குறள் சென்று சேர்ந்து இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் திருக்குறள் குறித்த புரிதல் உள்ளது. அதை மீண்டும் கோவில்கள் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அரசு முனைவது எதனால் என்பது புரியவில்லை. 

திருக்குறளை பரவலாக்க பல்வேறு வழி முறைகள் இருக்கின்றன.

தமிழ் இலக்கிய பரவல் தான் நோக்கம் எனில் முன்பே சொன்னது போல இதுவரை பரவலாகக் கிடைக்காத பிற தமிழ் இலக்கியங்களை கொண்டு சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம்

எது எப்படியோ, அரசின் முடிவுக்கு, அது சரியோ தவறோ, ஏதேனும் ஒரு வகையில் நியாயம் கற்பித்து, அரசு செய்வது தான் சரி என சொல்லியாக வேண்டிய நிலையில் பலரும் உள்ளனர்.

ஆழ்ந்து யோசிக்கையில், திருவள்ளுவர் இந்து மத முனிவர் அல்ல என மூச்சு பிடித்து உரக்க சொல்லி களமாடிய நண்பர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்து இருக்கிறது இந்த அரசு என்று தான் சொல்ல வேண்டும்.







Printfriendly