Monday, August 3, 2020

புதிய தேசிய கல்வி கொள்கை

த்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்த நிமிடத்தில் இருந்து தொடங்கியது வாதப்பிரதி வாத யுத்தம்.

இந்த கொள்கையை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என தமிழக எதிர் கட்சிகளும், ஆதரிக்க வேண்டும் என பாஜக ஆதரவு இயக்கங்களும் குரல் கொடுத்து கொண்டு இருக்க, தமிழக அரசோ வழக்கம் போல மௌனம் காத்து வந்தது.

இன்றைக்கு தமிழக அரசு கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் எனவும் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் எனவும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எல்லா எதிர்கட்சிகளும் பாராட்டை தெரிவித்தன.

இதோடு நில்லாமல், புதிய தேசிய கல்வி கொள்கையை விரிவாக ஆராய ஒரு குழு அமைக்கப்படும் எனவும், அவர்களது பரிந்துரையின் பேரில், தமிழக அரசு மற்ற விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதில் யோசிக்க எதுவுமில்லை. உடனடியாக புதிய தேசிய கல்வி கொள்கையை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். குழு அமைத்து ஆராய்வது எல்லாம் காலம் கடத்தும் வேலை என்கிற விமர்சனமும் எழ தொடங்கி உள்ளது.

உண்மையில் அந்த கொள்கை முற்றிலுமாக எதிர்க்கப்பட வேண்டியதா? ஆதரிக்க வேண்டிய ஒன்றா?

அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் புறம் தள்ளி வைத்து மாணவர்கள் நலன் என்கிற பார்வையில் இதை நான் பார்க்க விரும்புகிறேன்.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு தேவையான உதவிகள், எளிய சிறப்பான பாட திட்டம், செயல் வழி கற்றல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, கிராமங்கள் வரை பள்ளிகளின் வீச்சு, தாலுக்கா தோறும் கல்லூரிகள் என பலமான வலை பின்னலையும், சமூக நல திட்டங்களையும் கொண்டு கல்வியில் நம் மாணவர்களை முன்னேற செய்கிறோம்.

தமிழகத்தில் GER 49% ஆக இருக்க கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசு எடுத்து வந்த பல்வேறு திட்டங்கள் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இன்னொரு புறம் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போதுமான கல்வி கட்டமைப்பை ஏற்படுத்தாத காரணத்தால், அங்குள்ள மாணவர்கள் சரியான கல்வியை கற்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது இப்போதும் எட்டா கனி தான்.

இந்த நிலையை மாற்றி எல்லா மாநிலத்திலும் எல்லா மாணவர்களுக்கும் சரியான கல்வி, எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவக்கூடிய கல்வி கொடுப்பதற்கான கொள்கையை வகுக்க குழு அமைக்கப்பட்டு, எல்லா மாநிலத்திலும் இப்போது உள்ள கல்வி முறையையும் உலகின் மற்ற நாடுகளில் உள்ள கல்வி முறையையும் ஆராய்ந்து, இந்திய சூழலுக்கு, நம் நாட்டின் பொருளாதார சமூக கட்டமைப்புக்கு உகந்த முறையில் கல்வியை கொடுப்பதற்கான கொள்கை வகுக்கப்பட்டது.

அப்படி வகுக்கப்பட்ட கொள்கையின் வரைவு மாதிரியை கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டது அரசு. அதில் உள்ள நிறை குறைகளை தேசம் முழுவதும் உள்ள வல்லுனர்கள் ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை திருத்தங்களை எல்லாம் அரசுக்கு அனுப்பினார்கள். பல அரசியல் தலைவர்கள் கூட தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இவைகளை எல்லாம் மீண்டும் ஆராய்ந்து, திருத்தப்பட்ட கொள்கை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போதும் பெரும் விவாதம் நடந்து மீண்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி கொள்கை கடந்த மாதம் வெளியானது.

மத்திய அரசு அந்த கொள்கையை ஏற்றுக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது.

62 பக்க கொள்கை விளக்க அறிக்கை அரசு இணைய தளத்திலும் வெளியிடப் பட்டது.

இதிலே ஏற்கனவே சொன்னது போல கல்வியை பரவலாக்க, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேண, எதிர்காலத்தில் தொழில் தொடர்பான அறிவை பெற என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தின் வெற்றிகரமான திட்டங்களான மதிய உணவு & காலை உணவு திட்டத்தை, ஓராசியர் பள்ளி முறையை, செயல் வழி கற்றல் திட்டம் போன்றவற்றை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவு செய்வது இதில் பரிந்துரைக்க பட்டு உள்ளது.

இது தவிர கல்வி சுமையை குறைக்கும் நோக்கில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழி / பிராந்திய மொழி வழி கல்வி கற்பிக்க வேண்டும் எனவும் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்து உள்ளது.

குழந்தைகள் மழலையில் வேறொரு மொழியை கற்க தொடங்குவதில் உள்ள சிரமம், கிராமப்புற ஏழை பெற்றோரால் ஆங்கிலம் கற்பித்து கொடுக்க முடியாமல் இருக்கக் கூடிய சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டால், தாய்மொழி வழிக் கல்வியை அவர்களால் கற்று கொடுக்க முடியும் என்பதையும் மனதில் வைத்து பார்த்தால் இது நல்ல விஷயமாக எனக்கு படுகிறது.

அதற்காக ஆங்கிலம் இல்லாமல் போகாது. ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக ஆரம்பத்தில் இருந்தே இருக்கும். ஆனால் அடிப்படை விஷயங்கள் தாய் மொழி / பிராந்திய மொழியில் இருக்கும். இதனால் குழந்தைகள் பாடத்தை படிப்பது / புரிந்து கொள்வது எளிமையாக இருக்கக்கூடும்.

மேலும் தாய்மொழி வழி கல்வியில் அறிவியல் கணிதம் ஆகியவை படிக்கும்போது குழ்ஹந்தைகளுக்கு குழப்பம் வராமல் இருப்பதற்காக Bi-Lingual பாடம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது, நம்ம சுஜாதா அவர்க்ள் சொன்னதை போல கலைஞர் அவர்கள் சொன்னதை போல, எல்லாவற்றையும் தமிழாக்கம் செய்யாமல் சிலவற்றை ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்கிறது புதிய கொள்கை. 

Sulphuric Acid என்பதை கந்தகிஜ அமிலம் என படிக்காமல் Sulphuric Acid என்றே படிக்க வைப்பது மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்கும்.

நான் அதிகம் மகிழ்ந்தது, சைகை மொழி (ISL) இப்போது வெவ்வேறு வகைகளில் உள்ளதை மாற்றி நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி சைகை மொழி கல்வி கொண்டு வரப்படுகிறது. இது மிகப்பெரிய சீர் திருத்தம்.

ஆறாம் வகுப்புக்கு மேல் ஆங்கில வழி கல்வி, கணினி கல்வி, தொழிற்கல்வி ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மும்மொழி கொள்கை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதாவது பிராந்திய மொழி, ஆங்கிலம், அதனுடன் இந்தி / சமஸ்கிருதம். அதாவது இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் இந்தி மூன்றாம் மொழியாகவும், இந்தி தாய்மொழி ஆக உள்ள மாநிலங்களில் இந்தி & ஆங்கிலத்துக்கு அடுத்த படியாக சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாகவும் இருக்கும்.

இந்த மும்மொழி கொள்கையை தான் தமிழக அரசு இன்றைக்கு ஏற்க முடியாது என சொல்லி இருக்கிறது.

தமிழகத்தில் எப்போதும் போல தமிழ் & ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதிய கல்வி கொள்கை, இந்த மும்மொழி திட்டம் தவிர தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளில் இரண்டை எல்லா மாநிலத்திலும் துணை மொழியாக பரிந்துரை செய்து உள்ளது. அதாவது எல்லா மாணவர்களும் ஏதேனும் ஒரு இந்திய செம்மொழி அறிந்து இருக்க வேண்டும். இது தமிழை, தமிழ் பொன்ற பிற செம்மொழிகளை மேலும் பல மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் வழியாக நான் பார்க்கிறேன். 

முறையான பள்ளிக்கூட கட்டமைப்பு இல்லாத கிராமங்களில் புறநகர் பகுதிகளில் ஆசிரியரிடம் சென்று பாடம் கற்கும் "குருகுல" கல்வி முறை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும் குருகுல முறை போலல்லாமல், தமிழகம் முன்பு அமல் செய்த "ஓராசிரியர்" பள்ளி முறை போல இது இயங்கும் என நான் கருதுகிறேன். (குரு=ஆசிரியர், குலம்=வீடு)

ஒரு சிறு கிராமத்தில் குறைந்த அளவில் மாணவர்கள் இருந்து அனைவரும் வெவ்வேறு வகுப்பில் கல்வி கற்பவர் ஆக இருந்தால், அங்கே பள்ளிக்கூடம் எனும் கட்டமைப்பு இல்லாவிட்டால், இது போல ஓராசிரியர் பள்ளி முறையில் எல்லோருக்கும் பாடம் சொல்லி தந்து கல்வியை புகட்டலாம் என்பது கூட இதன் நோக்கமாக இருக்க கூடும்.

பள்ளிக்கூடத்தில் நவீன தொழில் நுட்ப உதவியுடன், செயல் முறை மூலமான கல்வி கற்பிக்க பரிந்துரைத்து உள்ளது இந்த கொள்கை. ஆறாம் வகுப்பில் இருந்தே கணினி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார காரணங்களுக்காக கல்வியை இடையிலே விட்டு விட கூடாது என்பதற்காக சிறப்பு ஊக்க தொகை திட்டம், நிதி உதவி திட்டம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

மிக மிக முக்கியமாக ஏழை மாணவர்கள் எல்லோரும கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டு உள்ளது.

இவை எல்லாம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் எதிர்காலத்தில் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக்கக் கூடும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கல்வி தகுதி இருக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டு உள்ளது. இப்போது ஆரம்ப பாட சாலைகளில் போதுமான கல்வி தகுதி அல்லது பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் வைத்து பாடம் நடத்தும் முறையை இதன் மூலம் தவிர்க்கலாம்.

உடற்கல்வி, விளையாட்டு என நிறைய விஷயங்களை இந்த கல்வி கொள்கை முன்வைக்கிறது.

இவை எல்லாமே வெறும் கொள்கைகள் தான். 
இந்த கொள்கைகளில் எதை ஏற்பது, எதை புறக்கணிப்பது என்பதை மாநிலங்கள் தீர்மானிக்கும். பாடங்கள் முடிவு செய்வது, புத்தகங்கள் தயாரிப்பது என அனைத்தும் மாநிலங்கள தான் செய்யும். ஆனால் அவை இந்த புதிய கல்வி கொள்கையின் படி இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

அதாவது என்ன பாடம் என்பதை மாநிலம் முடிவு செய்யும். ஆனால் அது செயல்வழி கல்வி, நவீன தொழில்நுட்ப வழியிலான கற்பித்தல், போன்ற கொள்கைகளின் அடிப்படையில் சொல்லி தரப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் தமிழக அரசு இன்றைக்கு, முதல் விஷயமாக, மும்மொழி கொள்கையை ஏற்பதில்லை. இரு மொழி கொள்கை தொடரும் என சொல்லி உள்ளது. மற்ற விஷயங்களில் எதை ஏற்பது எதை மறுப்பது என்பது வல்லுநர் குழு ஆராய்ந்து முடிவு செய்யும்.

இந்த கல்வி கொள்கையில் பல பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் பல தவறான பரிந்துரைகளும் உள்ளன.

மறைமுகமாக திணிக்கப்படும் இந்தி/சமஸ்கிருத மொழிகள், குலக்கல்வி போர்வையில் உள் நுழையும் மனு தர்மம், மூன்றாம் வகுப்பு குழந்தைக்கு பொது தேர்வு, உயர் கல்விக்கு நுழைவு தேர்வு என நாம் எதிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய  இருக்கின்றன.

தமிழக அரசு அமைக்கும் வல்லுநர் குழு இவை எல்லாம் பற்றி விரிவாக ஆராய்ந்து முடிவை சொல்லும் என நினைக்கிறேன்.

எப்படி ஆயினும் இந்த கொள்கை அமல் ஆக 2025 ஆம் ஆண்டு ஆகலாம். 2030 ஆம் ஆண்டு கல்வி எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கு நோக்கி இது அமலாகும்

கொள்கை அறிவிப்பின் கடைசியில் இதை அமல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக சொல்லப்பட்டு உள்ளன. அதன் படி இது அமலாக்க குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்

அதற்கு முன்பாக நாம் இதை விரிவாக ஆராய்ந்து தமிழகத்தில் எது தேவை எது தேவை இல்லை என முடிவு செய்து கொள்ள முடியும்

தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள், குறிப்பாக வட மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையால் நிச்சயம் நல்ல பலன் அடையும் என நம்புகிறேன். எல்லா ஊரிலும், மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க இது வழி செய்யும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என.

1 comment:

  1. Kadangpintar: Online Casino & Sports Betting
    Kadangpintar is the online sportsbook of choegocasino the Gambling 메리트카지노총판 Age, offering betting, kadangpintar lotto and casino games, betting, and bingo.

    ReplyDelete

Printfriendly