Monday, June 27, 2022

வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டண சர்ச்சை

மிழ் நாட்டில் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்று ஒரு பொய்யான புரளி பரவலாக சுற்றலில் விடப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அதாவது இந்து கோவில்களுக்கு ₹8.00/- என்றும் கிறித்தவ சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதிகளுக்கு ₹2.85/- என்றும் ஒரு யூனிட்டுக்கு மின் கட்டணம் வசூலிக்க படுகிறது எனவும் இது இந்து மதத்துக்கு காட்டப்படும் பாகுபாடு எனவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக மின்சார துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் விரிவாக விளக்கம் அளித்த பிறகும் வதந்தி நின்ற பாடில்லை.

உண்மையில் என்ன தான் பிரச்சனை என பார்ப்போம்.

தமிழ் நாட்டை பொறுத்த வரை மின்சார கட்டணம் விதிக்க வழிபாட்டு தலங்கள் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

1. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்கள். அதாவது அந்த கோவில்களின் அனைத்து நிர்வாகமும் சொத்துக்களும் அரசுக்கு சொந்தமானது. அதை நிர்வாகம் செய்வதும் அரசு தான். எனவே அது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என வகைப்படுத்த பட்டு உள்ளது.

2. இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ள இந்து கோவில்கள். கோவிலின் அறங்காவலர் குழு கோவில் நிர்வாகத்தையும் சொத்துக்களையும் நிர்வகிக்கும். இந்து சமய அறநிலைய துறை அந்த ஆலயத்தின் வருவாயை, கணக்கு வழக்குகளை கண்காணிக்கும். எனவே இது இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

3. கிறித்தவ மத சர்ச்சுகள்

4. இசுலாம் மத மசூதிகள்

இந்த நான்கு வகை வழிபாட்டு தலங்களும் மின்சார கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ₹2.85/- செலுத்தினால் போதும். இது முதல் 120 யூனிட் வரையான கட்டணம்.

120 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹5.75/- செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த கட்டண விகிதத்தில் எந்த பாகுபாடும் இல்லை.

இந்து கோவில்கள், கிறித்தவ சர்ச்சுகள், இசுலாம் மசூதிகள் என அனைத்தும் ஒரே கட்டண விகிதம் தான் நிர்ணயம் செய்யப்பட்டு செலுத்தி வருகின்றன. இதில் யாருக்கும் உயர்வு தாழ்வு சலுகை எதுவும் இல்லாமல் ஒரே மாதிரியான மின் கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர, இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, தனியாரால் நடத்தப்படும் வணிக ரீதியான கோவில்கள், வழிபாட்டு தலங்கள் என்கிற வரையறைக்குள் வராது.

இவை தனியாரால் நடத்தப்பட்டு, அதன் வருவாய் எல்லாம் தனியாராலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதால், வழிபாடு என்பதை ஒரு பகுதி ஆக்கி பெரும்பாலான பகுதி வணிக நோக்கில் அமைக்கப்பட்டு, வியாபார ரீதியிலான வர்த்தகம் அதிகமாக நடைபெறும் இடங்கள் எனில் அவை வணிக இடங்கள் என வகைப்படுத்தப்பட்டு வணிக ரீதியிலான மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதாவது, முதல் 100 யூனிட்டுகளுக்கு ₹5.00/- அதற்கு மேல் என்றால் யூனிட்டுக்கு ₹8.05 வசூலிக்கப்படும்.

உதாரணமாக வழிபாட்டுக்கு என ஒரு சிறு இடம் ஒதுக்கி, பெரும்பாலான இடங்களில் வணிக வளாகம் நடத்தி வருவாய் பார்க்கும் இடங்கள். அவற்றில் பெரும்பாலும் வணிகமே நடப்பதாலும், தனியாறால் நடத்தப்பட்டு வருவதாலும், இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு இல்லாமல் அங்கே வசூல் ஆகும் அனைத்து வருவாயும் தனியார் நிறுவனமே நிர்வகிப்பதாலும், அவை போன்ற இடங்களில் வழிபாட்டு தலங்கள் என்று அல்லாமல் வணிக இடங்கள் என்று வகைப்படுத்தி வணிக ரீதியிலான மின்சாரக் கட்டணம் வசூலிக்க பட்டு வருகிறது.

மேலே சொன்னது எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு உதாரணத்துக்கு சொல்லப்பட்டவை. இவை போல பல இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதாவது இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் இல்லாமல் தனியாரே நிர்வகித்து வருவாயை அவர்களே வைத்து கொள்ளும் இடங்கள்.

எனவே நாம் இந்த முக்கியமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

வழிபாட்டு தலங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அனைத்து இடங்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியான கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறது.

இப்போதைய சர்ச்சை என்னவென்றால், வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் இடங்களுக்கும் இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் இருக்கும் கோவில்களுக்கு வசூலிப்பது போல குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது.

இதில் இன்னும் சிலர் மேலும் ஒரு படி மேலே போய், அப்படி குறைந்த கட்டணத்தில் வசூலிக்க முடியாது என்றால், சர்ச் & மசூதிகளுக்கு்ம் வணிக ரீதியிலான அதிக மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது.

அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என வழங்கும் ஒரு சொலவடை போல, மத வேற்றுமை மனதுக்குள் வன்மமாக உருவெடுத்த மக்களால் மட்டுமே இப்படி எல்லாம் குரூரமாக யோசிக்க முடியும்.

தமிழக அரசை பொறுத்த வரை தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. வழிபாட்டு தலங்கள் எல்லாவற்றையும் ஒரே கணக்கீட்டில் கொண்டு வந்து குறைந்த கட்டணமும், வணிக ரீதியிலான இடங்களுக்கு அதிக கட்டணமும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.

இந்த புரிதல் இல்லாமல் வெறும் வதந்திகளை புரளிகளை மட்டுமே நம்பி, தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து விட்டதாக கருதி கிடக்கும் மிகச் சிலரின் அறியாமையை நீக்கி உண்மை என்ன என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களை அவ்வப்போது விளம்பரமாக வெளியிடுவது, கட்சி சார்பாக மக்களுக்கு விளக்குவது போன்றவை அரசின் மீதான தவறான புரிதல்களை குறைக்க உதவும் 

பொய்யான தகவல்களை வைத்து மக்களிடம் குழப்பத்தையும், மத ரீதியான வேற்றுமையையும் பரப்பி வருவோர் மீது தயவு தாட்ஷனியம் இல்லாமல் கடுமையாக நடவடிக்கை எடுப்பது, வேறு யாரும் அத்தகைய செயலில் ஈடுபடாமல் தடுக்க உதவும்.

மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டியது அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் மக்களிடம் பரவும் பொய்யான தகவல்களை தடுத்து விளக்கம் அளித்து புரிய வைப்பதிலும் வேண்டும்.

 

சாகித்ய அகாடமி விருதும் மாலனும்

எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான "சாகித்ய அகாதமி" விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு சின்னதாக ஒரு சர்ச்சையை எழுப்பி இருக்கிறது



எழுத்தாளர் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய 'Chronicle of a Corpse Bearer' என்னும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காக திரு மாலன் அவர்களுக்கு இந்த சாகித்ய அகாதமி விருது "மொழி பெயர்ப்பு நூல்" பிரிவில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசால் எழுத்தாளர்கள், நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்திய அகாடமி விருது கருதப்பட்டு வருகிறது. 1955 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதேபோல் மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம், சால்வை செப்பு பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.

இந்த மொழி பெயர்ப்பு பிரிவில் தான் திரு. மாலன் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

திரு. மாலன் அவர்கள் மிக பிரபலமான எழுத்தாளர். குமுதம், குங்குமம், புதிய தலைமுறை, இந்தியா டுடே போன்ற பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர். 

இவரது எழுத்துக்களுக்கு என்று ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு உள்ளது.

"வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்", 'நந்தலாலா", "தப்புக் கணக்கு" போன்ற நூல்களும், "மனம் எனும் வனம்" கவிதை தொகுப்பும் எல்லோரும் படித்து இருக்கலாம். இவை தவிர எழுத்தாளர் திரு லா.சா.ராமாமிர்தம் அவர்களை பற்றி எழுதிய "மனவெளிக் கலைஞன்" புத்தகம் மிக நெகிழ்ச்சியான ஒன்று.

மேலும் நிறைய புத்தகங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர் அவர். அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இந்த விருது சர்ச்சை ஆனதற்கு காரணம் அவர் தகுதி இல்லாதவர் என்று எல்லாம் அல்ல. அவர் தகுதியானவர் தான்.

சாகித்ய அகாதமி பொது ஆலோசனை குழுவில் தமிழ் நாடு சார்பாக திரு. மாலன் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

அவர் ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கும் நிலையில் அவருக்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது அறத்தின் அடிப்படையில் சரியா என்பது தான் விவாதமே.

தார்மீக அடிப்படையில் திரு. மாலன் அவர்கள் இந்த விருதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது அவரது எழுத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு, அவர் குழு உறுப்பினர் என்பதால் கிடைத்த விருது என சிறுமைப் பட்டு விடக் கூடும். 

பாரம்பரியம் மிக்க சாகித்ய அகாதமி விருது தேர்வு முறையையும் அது இனி சந்தேகத்துக்கு உள்ளாக்கி விடக்கூடும்.

பொதுவாகவே, அங்கீகாரம் அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்காக அந்த அங்கீகாரத்தை எடுத்து கொள்வதை சரியானது என சொல்ல மாட்டார்கள்.

அப்படியான ஒரு விமர்சனத்தில் இருந்து திரு மாலன் அவர்கள் வெளி வர இன்னமும் காலம் இருக்கிறது


Thursday, June 9, 2022

திருமணம் என்பது யாதெனின்

திருமணம் 

இந்த ஒற்றை சொல் தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் உந்து சக்தியாக உள்ளது.



பெற்றோர், தங்கள் மகளுக்கு / மகனுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என போராடுகிறார்கள். அதற்காக நல்ல கல்வி, கௌரவமான வேலை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என மெனக்கெடுகிறார்கள். பிள்ளைகளின் எதிர்காலம், அவர்கள் மண வாழ்க்கை, அவர்களை நம்பி வருபவர்களை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைப்பதற்கான முயற்சிகள் என போகிறது பட்டியல். இது தவிர திருமணச் செலவுகள், நகைகள் என அதற்கான மெனக்கெடல் எல்லாம் தனி.

இவற்றை சமாளிக்க பெற்றோர் பெரிய வேலைகளுக்கு முயற்சிப்பது, அதிக வருமானம் உள்ள வேலைகளுக்கு மாறுவது, இருக்கும் வேலையை விட்டு பிசினஸ் செய்வது, இருக்கும் வேலையில் கிடைக்கும் வருவாய் போதாமல் பார்ட் டைம் வேலைக்கு செல்வது என எல்லா வகையிலும் முயற்சி செய்கிறார்கள்.

எல்லாம் பிள்ளைகளின் எதிர்காலம் என்கிற ஒற்றை புள்ளியை நோக்கி. அந்த எதிர்காலம் எனப்படுவது பிள்ளைகளின் கல்வி வேலை வாய்ப்பு என சுருக்கிக் கொண்டாலும், அதன் நீட்சி அவர்களுக்கு நல்ல ஒரு இடத்தில் நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்து அந்த திருமண வாழ்வை தானாகவே சமாளிக்கும் நிலைக்கு பிள்ளைகளை தயார் படுத்துதல் என்கிற புள்ளியில் கொண்டு போய் தான் நிறுத்துகிறது.

சுருக்கமாக சொன்னால் இந்திய வாழ்வியலில் திருமணம் என்பதை மையப் புள்ளியாக வைத்தே பெரும்பாலான குடும்பங்கள் இயங்கி வருவதாக பார்க்கலாம்.

தனது திருமண வாழ்வு, அதன் பொறுப்புகள் கடமைகள், பிள்ளைகளின் வாழ்வு, அவர்களது திருமணம், இதற்கான பொருளாதார தேவை, அதை ஈடு செய்யும் வேலை.. என எல்லாமே ஏதோ ஒரு வகையில் திருமணம் என்கிற புள்ளியை சுற்றியே இயங்கி வருவதாக ஒரு உணர்வு.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமணம் என்பது என்ன?

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அதிகாரப்பூர்வமாக இணைந்து தங்கள் வாழ்க்கையை இணைந்து முன்னெடுத்து செல்லும் ஒரு வைபோகம் என பொதுவாக சொல்லலாம்.

அது ஒரு ஆண் ஒரு பெண் இணைப்பு மட்டும் அல்ல, இரு வேறு குடும்பங்கள், அவர் தம் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் ஆகியவையும் இணைந்து கொள்ளும் வைபோகம் என்றும் விரிவாக சொல்லலாம்.

இதனாலேயே, தன் பிள்ளைகளுக்கு வரப்போகும் மணமகன்/மணமகள் பற்றி மட்டும் அல்லாமல் அவர்களது வேலை, குடும்பம், சொந்தம் பற்றி எல்லாம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

இவை எல்லாம் கலாச்சார ரீதியான விஷயங்கள். 

திருமணம் - இதை சட்ட ரீதியாக பார்த்தால் வேறு வகையான புரிதல்கள் வருகிறது.

சட்டத்தின் பார்வையில் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதற்கு, நட்பாக இருப்பதற்கு, காதலிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவர்கள் ஒன்றாக பொது இடங்களுக்கு, கோவில், பூங்கா, திரையரங்கு என போய் வருவதற்கும் சட்டம் எந்த தடையும் சொல்வது இல்லை.

நீங்கள் ஏன் பழகுகிறீர்கள், காதலிக்கிறீர்கள் என்று சட்டம் கேள்வி கேட்பது இல்லை. அப்படி பழகுகிறவர்களை யாரேனும் தொந்தரவு செய்தால், அது குறித்து சம்பந்தப் பட்டவர்கள் புகார் அளித்தால், தொந்தரவு செய்பவர்களை தண்டிக்கவும் சட்டம் தயஙகுவது இல்லை.

பருவம் பூர்த்தி அடைந்த ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சட்டம் தடை சொல்வது இல்லை. மேலே நாம் விரிவாக பார்த்த கலாச்சார ரீதியான எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகள் எதையும் சட்டம் எதிர்பார்ப்பது இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

இன்னும் ஒரு படி மேலே போய், இப்போது ஒரு பாலின திருமணங்களைக் கூட சட்டம் அங்கீகரிக்க தொடங்கி உள்ளது.

ஆக சட்டத்தின் பார்வையில் திருமணம் என்பது வேறு. அது பொறுப்பு சம்பந்தப்பட்டது. அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியான பொறுப்பு சம்பந்தப்ப ட்டது.

ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தனது பாதுகாப்பு, எதிர்காலம், வருமானம், சொத்து (தனக்கு பாரம்பரியமாக கிடைத்த சொத்து / தான் உழைத்து சேர்த்து வைத்த சொத்து) ஆகியவற்றை தனக்கு பின் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது எனதற்கான ஆவணப் பதிவாகவே திருமணம் பார்க்கப்படுகிறது.

திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ யார் யாருடன் பழகினாலும், உறவு கொண்டாலும் சட்டம் அது பற்றி கேள்வி கேட்பது இல்லை. சட்டத்தின் பார்வையில் அது தவறும் இல்லை. 

ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒருவரை திருமணம் செய்து இவர் தான் இனி தனது பொறுப்பு, தனது பொருளாதார ரீதியான செயல்களுக்கு பொறுப்பு என்று அங்கீகரித்த பிறகு, இன்னொருவரை திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்காது. 

திருமணம் செய்யாமல் பழகுவது, திருமணம் மீறிய உறவு, அவர்களுக்கு செலவு செய்வது போன்றவற்றை கூட சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவரை திருமணம் செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்வதை மட்டுமே தவறு என்கிறது. சுருக்கமாக ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக ஒருவர் தான் பொறுப்பாக இருக்க முடியும். அவரை விவாக ரத்து செய்து விட்டு தான் இன்னொருவரை திருமணம் செய்து பொறுப்பாளர் ஆக்க முடியும்.



சுருக்கமாக பார்த்தால் சொத்துக்கள், வருமானம் ஆகியவற்றுக்கான வாரிசு பொறுப்பு யார் என்பது மட்டுமே சட்ட ஆவணம் கவனிக்கும் ஒரே செயல். ஒருவரை திருமணம் மூலம் அங்கீகரித்து விட்டால் அது யார் எவர் என்ன என்று எல்லாம் ஆராயாமல் சட்டமும் அவர்களை தான் பொறுப்பான நபராக பார்க்கும். அவரை சட்டப்பூர்வமாக விவாக ரத்து செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும். விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்தால் அதை சட்டம் ஏற்காது. அதாவது இரண்டு பொறுப்பாளர்களை ஏற்காது. அதிலும் விதி விலக்கு உண்டு. முதல் பொறுப்பாளர் சம்மதத்துடன் இரண்டாம் பொறுப்பாளராக ஒருவரை அங்கீகரிக்கும்.

முதல் பொறுப்பாளர் இருக்கும் போது, வேறு ஒருவருடன் பழகினாலும் வாழ்ந்தாலும் சட்டப்படி முதல் பொறுப்பாளர் தான் சட்டபூர்வமான வாரிசுதாரர். விவாக ரத்து என்பது ஆகும் வரை அவர் தான் பொறுப்பாளர்.

எனவே பொருளாதார சார்பு எவரிடத்தில் என்பது மட்டுமே ஆவணங்கள் கவனிக்கும். மற்றப்படி யார் எவருடன் எப்படி பழகினாலும் சட்டம் அதை கேள்வி கேட்காது. 

அவ்வளவு ஏன், பெரு நகரங்களில் இப்போது பரவலாக இருக்கும் லிவ் இன் கலாச்சாரம் கூட சட்டம் தவறு என்று சொல்லி கேள்வி கேட்பது இல்லை. அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டம் தலை இடுவது இல்லை. எல்லோருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை தருகிறது. ஆனால் அங்கீகார பொறுப்பாளர் ஒருவர் தான் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது.

இப்போது மீண்டும் திருமணம் என்பதை பார்ப்போம்.

கலாச்சார பண்பாட்டு ரீதியாக திருமணம் என்பது இரு நபர்கள் இரு குடும்பங்கள் இணையும் விழா.

சட்ட ரீதியாக திருமணம் என்பது பொருளாதார சமூக பொறுப்பு யாரிடம் என்பதை தீர்மானிக்கும் ஒரு ஆவணம்.

குடும்ப ரீதியாக தனக்கும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் சரியான துணையை சரியான குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஒப்படைக்கும் வைபோகம்.

இந்த திருமணம் எனும் ஒற்றை புள்ளி தான் வாழ்வின் பல முடிவுகளை தீர்மானிக்கிறது.

திருமணம் ஒரு சமூக நிகழ்வு, இரு குடும்ப இணைப்பு, இரு பாரம்பரிய ஒட்டுதல், எதிர்கால பாதுகாப்பு என விரிவாக்கம் செய்தும் பார்க்கலாம்.

திருமணம் ஒரு வாரிசு ஆவனத்துக்கான ஆயத்தம் மட்டுமே என சட்ட ரீதியாக சுருக்கியும் பார்க்கலாம்.

அப்போ திருமணமே வேண்டாம் என தனியாக வாழ்பவர்கள்?

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.















Wednesday, June 1, 2022

GST இழப்பீடு குழப்பங்கள்

னைத்து மாநிலங்களுக்கும் உரிய GST நிலுவைத் தொகையை நேற்றைய தினம் ஒன்றிய அரசு விடுவித்து இருப்பதாக நிதி அமைச்சக செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. 



ஒன்றிய அரசின் கையில் Compensation CESS ₹25,000 கோடி தான் இருந்தது. எனினும் பிற கணக்குகளில் இருந்து பாக்கி தொகை போட்டு நிலுவை தொகையை மொத்தமாக ₹86,912 கோடி மாநிலங்களுக்கு கொடுத்து இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கு. 

அதுவும் 31.05.2022 வரை கணக்கிட்டு நிலுவை தொகையை கொடுத்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

முதலில் Compensation CESS என்றால் என்ன என சுருக்கமாக பார்ப்போம்.

GST சட்டம் அமல் ஆகும் முன்பு இருந்த VAT, CST, Central Excise, Service Tax போன்ற வரிகளின் மூலம் மாநிலங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்த வரி வருவாய் எவ்வளவு என பார்த்து..

GST வந்த பிறகு சில குறிப்பிட்ட பொருட்கள் தவிர பெரும்பாலான பொருட்களுக்கு அந்த பழைய வரிகள் எல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்டு GST வரி மட்டும் தான் என ஆன பிறகு, மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயை கணக்கிட்டு..

இரண்டுக்கும் இடையிலான வருவாய் மாறுபாடு பற்றாக்குறை ஆக இருந்தால், அதாவது முன்பு கிடைத்த வரியை விட GST வருவாய் குறைந்து இருந்தால், அந்த பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. 

அந்த வரி வருவாய் பற்றாக்குறையை மாநிலங்களுக்குஈடு செய்வது தான் Compensation CESS வழியிலான இழப்பீடு. 

இந்த Compensation CESS ஐ தான் ஒன்றிய அரசு நேற்று விடுவித்து இருக்கிறது.

இந்த ₹86,912 கோடியில் தமிழக அரசுக்கு நிலுவை தொகையாக ₹9,602 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.



இது தவிர இன்னொரு பங்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கவேண்டும்.

மாநிலம் விட்டு மாநிலம் நடக்கும் வர்த்தகங்களுக்கு (Inter State Transactions) ஒன்றிய அரசு மொத்தமாக வசூலிக்கும் IGST வரியில் இருந்து மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை இன்னமும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.

அந்த வகையில் தமிழகத்துக்கு இன்னமும் சுமார் ₹4,400 கோடி வர வேண்டி உள்ளது.

ஆனால் நேற்றைய ஒன்றிய அரசின் அறிக்கையில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.

அதெப்படி 31.05.2022 வரை இழப்பீட்டை கணக்கிட்டு கொடுத்தார்கள்?

மே மாத விற்பனை விவரங்களை வணிகர்கள் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தான் தாக்கல் செய்வார்கள். Input Tax Credit (ITC) விவரங்களை ஜூன் மாதம் 20 ஆம் தேதி தான் வணிகர்கள் முழுமையாக தாக்கல் செய்வார்கள். இந்த அனைத்து விவரங்களும் GST இணைய தள ஒருங்கிணைப்பு பிரிவில் ஜூன் மாதம் 21 ஆம் தேதி தான் கிடைக்கும்.

இப்படி இருக்க, மே மாதம் 31 ஆம் தேதி வரையிலான இழப்பீடு என எப்படி கணித்து இருப்பார்கள் என்று புரியவில்லை.



மாதக் கடைசி நாளில் பெரும்பாலும் இரவு வரை விற்பனை இருக்கும். வெளி மாநிலத்துக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் இரவு தான் ஏற்றி அனுப்புவார்கள். 

அப்படியான இறுதி நாள் வர்ததகங்கள் நடைபெறும் முன்பே எப்படி இழப்பீடு கணிக்க முடியும்?

ஒன்று.. குத்து மதிப்பாக கணித்து பணத்தை கொடுத்து இனி கொடுக்க எதுவும் இல்லை என பொறுப்பினை தட்டிக் கழிக்க நடக்கும் முயற்சியாக இருக்கலாம்.

அல்லது, பெருமைக்காக மொத்தமாக கொடுத்து விட்டதாக சொல்லி பின்னர் கணக்கு பார்த்து சரிக் கட்டிக் கொள்ளலாம் என நினைத்து இருக்கலாம்.

இரண்டுமே நிதி அமைச்சகம் மாதிரியான பொறுப்பான துறைக்கு அழகல்ல.

வரும் ஜூன் 2022 வரை தான் Compensation CESS ஒன்றிய அரசால் இழப்பீடு வழங்க முடியும். அதன் பின் மாநிலங்கள் அவரவர் வரி வருவாயை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது சட்டம். 

இந்த கால அளவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டு கொண்டு இருக்கும் வேளையில், எல்லா பாக்கியையும் கொடுத்து விட்டோம் என ஒன்றிய அரசு அவசரம் அவசரமாக கணக்கை முடிக்க முயற்சி செய்வது, கால அளவை நீட்டிக்கும் உத்தேசம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது.

அப்படி கால அளவு நீட்டிக்கப் படாமல் போனால், கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட் காரணமாக பொருளாதாரம் தொய்வு அடைந்து வரி வருவாய் குறைந்து இப்போது தான் அதில் இருந்து மீள தொடங்கி இருக்கும் நிலையில் மாநிலங்கள் எல்லாம் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

அது மற்ற துறைகளை பாதித்து ஒட்டு மொத்தமாக மாநிலங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணவும் சாத்தியம் உண்டு.

நிதி அமைச்சகம் இந்த குழப்பங்களை எல்லாம் போக்கும் விதமாக இப்போது உடனடியாக செய்ய வேண்டியது:

1. நேற்றைய இழப்பீடு எந்த அடிப்படையில் கணக்கிட பட்டு உள்ளது என விளக்குவது.

2. IGST நிலுவை எவ்வளவு என தெளிவு படுத்துவது.

3. மே & ஜூன் நிலுவை எப்போது விடுவிப்பார்கள் என உறுதிப் படுத்த வேண்டியது.

4. Compensation CESS கால அளவை நீட்டிக்கும் எண்ணம் உண்டா என தெளிவு படுத்த வேண்டியது.

இவற்றை பொறுப்போடு செய்வார்களா.. அல்லது வழக்கம் போல பொறுப்பு இல்லாமல் இருப்பார்களா என்பதை நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தான் நமக்கு உணர்த்தும்.
















https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1829777

Printfriendly