Wednesday, December 30, 2020

ரஜினியின் முடிவு - இனி என்ன?

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வந்து உள்ளது.

அரசியலுக்கு வருவார் ரஜினி, தமிழகத்தை ஆட்சி செய்வார் என்ற அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ரஜினி எனும் பிம்பத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைத்த சில அரசியல் இயக்கங்களையும் ஒரு சேர முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக, ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து விடுவேன்.. அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என சொல்லி இருந்தார். 

பாஜகவின் "அறிவுசார்" அணியின் தலைமை பொறுப்பில் இருந்த திரு.அர்ஜுன மூர்த்தியை அந்த பதவியில் இருந்து பாஜக "விடுவித்து" அவர் ரஜினியுடன் இணைந்து ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் தலைமை ஒருஙகினைப்பாளர் ஆக பொறுப்புக்கு கொண்டு வந்தார்.

ரஜினி சார்பாக கட்சி பெயர் பதிவு, ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு என்றெலலாம் வந்த செய்திகள் அவர் அரசியலுக்கு வருவதில் தீவிரமாக இருப்பதாக நம்ப வைத்தன.

ஆனால் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை முடிவு செய்து அறிவித்து விட்டார். இது இறுதி முடிவா அல்லது வழக்கமான "மாறுதலுக்கு உட்பட்ட" முடிவா என்பது தெரியவில்லை.

ரஜினியின் இந்த முடிவுக்கு பிறகு தமிழக தேர்தல் களம் எப்படி இருக்கும்?

ரஜினி கட்சி தொடங்கி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இட வேண்டும் என்பதில் பாஜக தான் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. அதற்கான கணக்கீடுகள் இல்லாமல் இல்லை.

இன்றைய சூழலில் திமுக மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி திரு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என மக்கள் மனநிலைக்கு வந்து விட்டனர்.

திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களும், நடுநிலை ஓட்டுக்களும் திமுகவுக்கு போகாமல் தடுக்க வேண்டும்.

எனவே ரஜினி கட்சி ஆரம்பிப்பது, அதிமுக & பாஜக கூட்டணிக்கு மிக அவசியமாக இருந்தது.

திமுக & அதிமுகவை விரும்பாத நபர்கள் வாக்கு அளிக்க ஒரு நம்பிக்கையான முகம் தேவை ஆக இருந்தது. எனவே பாஜகவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தே ரஜினியின் பிம்பத்தை மெருகேற்றும் அறிக்கைகள் வெளிப்படையாக வர தொடங்கின.

ரஜினி மிக நல்லவர். மக்களுக்கு ஏதாவது செய்ய ஆசை படுகிறார், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என குருமூர்த்தி போன்ற தீவிர பாஜக ஆதரவாளர்கள் சொல்லியது எல்லாம் பாஜக ரஜினியை எதற்காக முன்னிறுத்திக் கொண்டு உள்ளது என்பதை புரிய வைத்தது.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு, பாஜகவின் தலைவர்கள் வெளிப்படையாக அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தனர். 

"மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தில் இருந்து தான் பொங்கல் பரிசை அதிமுக தருகிறது" என்றும்

"கார் டயரை கும்பிடும் தலைவர்களை கொண்ட கட்சி" என்றும்

"தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் டெல்லி தலைமை தான் அறிவிக்கும். அதிமுக அறிவிப்பை ஏற்க முடியாது" என்றும்

"பாஜகவுக்கு அமைச்சர் பதவி கட்டாயம்" என்றும்

பாஜக துணிச்சலாக பேச ரஜினியின் வருகை ஒரு முக்கிய காரணம்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி ரஜினி தலைமையில் அணி அமைக்க பாஜக காய் நகர்த்துவது போன்ற ஒரு தோற்றம் தெரிய தொடங்கியது.

அதிமுக சமீபத்தில் நடத்திய தேர்தல் பரப்புரை தொடக்க கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தது, அவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்ததை காட்டுகிறது.

இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்ததில் வியப்பு இல்லை.

அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே பாஜக ஆதரவாளர்கள் ரஜினியை விமர்சிக்கத் தொடங்கியது அவர்களது பெருத்த ஏமாற்றத்தை காட்டுகிறது.

இனி என்னென்ன வழிகள் உள்ளது?

பாஜகவுக்கு அதிமுகவுடன் இணைவது தான் அதன் வளர்ச்சிக்கு நல்லது. எனவே அதிமுக குறித்து விமர்சித்து பேசிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிமுகவை சமாதானப்படுத்தும் வழிகளை தான் முதலில் முயற்சி செய்வார்கள் என நினைக்கிறேன்.

அதிமுக பாஜகவின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதிமுகவின் ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை திமுக சமீபத்தில் தான் ஆளுநரிடம் சமர்ப்பித்து இருக்கிறது. அதை வைத்து பாஜக அதிமுகவை பணிய வைக்கக் கூடும்.

ஒருவேளை அதிமுக பாஜக பிரிந்தால், பாஜக அடுத்ததாக மக்கள் நீதி மையத்தின் உதவியை நாடும். அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டி இடலாம். ஆனால் இதற்கான வாய்ப்பும் இது நடந்தால் வெற்றி வாய்ப்பும் மிக மிக குறைவு.

இந்த நிமிடம் தமிழக தேர்தல் களம் திமுக & அதிமுக இருவருக்கானது.

அவர்களை தலைமையாக கொண்டு இயங்கும் கட்சிகள் அணி சேர்ந்து இரு முனை போட்டியாக தேர்தல் களம் அமையும் என்றே எதிர் பார்க்கிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு சாதாரண கட்சி. புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் பெற்று இருக்கும் மக்கள் ஆதரவு அளவு கூட மக்களிடம் ஆதரவு இல்லாத கட்சி.

எனவே இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதிமுகவின் கீழ் தேர்தலை சந்திப்பது தான் பாஜக எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருக்கும்.

ரஜினி தனது முடிவை மீண்டும் மாற்றி கொள்ளாத வரை, தமிழக தேர்கள் களம் அதிமுக & திமுக அணிகளுக்காக களமாக தொடரும்.

பார்ப்போம்

Friday, December 11, 2020

ரஜினியின் அரசியல் வருகை

1990 க்களின் துவக்கத்தில் இருந்து இதோ வர்றேன் அந்தோ வர்றேன் என போக்கு காட்டி கொண்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு வழியா ஒரு அறிவிப்பை கொடுத்து இருக்கார்

அதாவது, ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் (ஜனவரி 2021 என்றுதான் நினைக்கிறேன்) அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

சோ, அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்கிற அளவில் இப்போது வந்து நிற்கிறது.

இது எதிர்வரும் தமிழக தேர்தல் 2021 இல் என்ன மாதிரியான விளைவுகளை, மாற்றத்தை, ஏமாற்றத்தை, பாதிப்பை தரக்கூடும் என பார்ப்போம்.
அரசியலுக்கு வர தயக்கம் காட்டி பேசி இரண்டு நாளுக்குள் அரசியலுக்கு வருவதை அறிவிக்கும் அளவுக்கு அவருக்கு என்ன பிரஷர் என்கிற குழப்பமான கேள்வியை தவிர்த்து விட்டு போவோம்

தமிழகத்தில் 234 தேர்தலிலும் தனித்து போட்டி இடப்போவதாக ரஜினி ஏற்கனவே சொல்லி இருந்தார். எனவே அவர் எந்த அணியிலும் சேர மாட்டார் என தோன்றுகிறது.

ஆட்சி மாற்றம் தான் குறிக்கோள் என சொல்லி இருப்பதையும் வைத்து பார்த்தால் அவர் அதிமுக & பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகத் தான் கட்சி தொடங்குவதாக தோன்றும்.

ஆனால், பாஜக அவரை ஆதரித்து மகிழ்ந்து துள்ளி குதிப்பதை பார்த்தால் அஜெண்டா வேறு ஏதோ ஒரு ரூட்டில் பயணிப்பது புரியும்.

இப்போதைய சூழலில் அதிமுக ஸ்ட்ராங்கா இல்லை. திமுக மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட நிச்சயம் ஆகிவிட்டது போல ஒரு தோற்றமும் தெரியத் தொடங்கி இருக்கிறது.

பாஜக + அதிமுக அணிக்கு வாக்குகளை கவரக்கூடிய முகம் எதுவும் இல்லை. திமுக மக்களிடம் பெற்று வரும் அசுர பலம் கொண்ட ஆதரவை முறியடிக்க தகுந்த வழிகள் எதுவும் பாஜக + அதிமுக கூட்டணியில் இல்லை. மேலும் அதிமுக மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.

இப்போது இருக்கும் ஒரே வழி.. அதிமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை மொத்தமாக திமுக பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான் அதிமுக + பாஜக வெல்ல ஒரே வழி

எனவே, கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யமும், ரஜினி தலைமையில் "பெயர் சூட்டப் படாத" அவரது கட்சியும் எல்லா 234 தொகுதிகளிலும் போட்டி இடுவது தான் பாஜக + அதிமுக வெல்ல ஒரே வழி

அதிமுக மீது அதிருப்தி கொண்டவர்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டு ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை மாற்றி, கமலுக்கு அல்லது ரஜினிக்கு கூட போடலாமே என்கிற சாய்சை மக்களுக்கு கொடுத்தால் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும்.

அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் திமுகவை நோக்கி செல்லாமல், கமல், ரஜினி, சீமான் என பிரிவது திமுகவை பலவீனம் ஆக்கும். 

அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் எந்த கட்சியும் சாராத நடுநிலை வாக்குகளும் ரஜினி எனும் ஆளுமை மீதான ஈர்ப்பால் அவருக்கு ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. இதை குறி வைத்தே ரஜினி நல்லவர் வல்லவர் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என பாஜக தரப்பில் இருந்தே ரஜினியின் இமேஜை பூஸ்ட் செய்யும் பணிகள் நடக்கிறது.

ரஜினியின் "பெயர் அறிவிக்காத கட்சி"யின் தலைமை ஒருங்கிணப்பாளர் பதவிக்கு பாஜகவில் இருந்து ஆளை அனுப்பி வைத்த நிகழ்வும், குருசாமி போன்றோர் ரஜினி குறித்து கட்டமைத்து வரும் உயர் பிம்பமும் அதை ஆமோதிப்பது போலுள்ளது.

எனவே கமல் & ரஜினி இருவரும் அதிமுக+பாஜக கூட்டணி வெற்றிக்காக மறைமுகமாக செயல்படுவதாக ஒரு தோற்றம் தான் இன்றைய சூழலில் இருக்கிறது.

ஒருவேளை, ரஜினி உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவரது செயல்பாடு வேறு மாதிரி இருக்கும்.

வெறும் சினிமா புகழ் வைத்து அரசியலில் வாக்குகள் பெற முடியாது. அப்படி இருந்தால், சிவாஜி எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் தேர்தலை சந்திக்கும் முன்பே, மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துவது, மக்களுக்காக குரல் கொடுப்பது, மக்களோடு மக்களாக நிற்பது என தங்கள் இமேஜை ஒரு நடிகர் என்பதில் இருந்து மாற்றி, மக்களுக்கான தலைவராக உருமாற்றி பிறகு தான் தேர்தலில் வென்றார்கள்.

எனவே, சினிமா புகழில் யாரும் வென்றிடவில்லை. அரசியல் களமாக தந்து களத்தை மாற்றி அதில் போராடி அதில் இருந்து தான் வென்று வந்தார்கள்.
எந்த ஒரு அரசியலும் களத்தில் நின்று தான் செய்ய முடியுமே தவிர வீட்டு போர்டிகோவில் இருந்தோ ஆபீஸ் அறையில் இருந்தோ டிவி நிகழ்ச்சிகளில் போடியத்தில் இருந்தோ நிகழ்த்த முடியாது.

எனவே ரஜினி உண்மையிலேயே ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைத்தால்.. அவர் செய்ய வேண்டியது எல்லாம்:

- இப்போதைய மக்கள் பிரச்சனைகளில் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்

- மக்கள் பாதிக்கப்படும் போது (இயற்கை சீற்றங்கள்) அவர்களோடு நின்று ஆறுதல் சொல்ல வேண்டும்

- மக்களின் தேவைகளுக்கு அவர்களோடு நின்று குரல் கொடுக்க வேண்டும்

- ஆளும் அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கும் போது அதை எதிர்த்து போராட வேண்டும்

இப்படி எல்லாம் செய்தால் தான் அரசியல் களத்தில் வெல்ல முடியுமே தவிர வெறும் பேச்சுக்கள் உதவாது

எனவே.. முதலில்.. ரஜினி அவர்களது நோக்கம்

மக்களுக்காக ஆட்சி அமைத்து நல்லது செய்வதா

அல்லது

அதிமுக+பாஜக அதிருப்தி வாக்குகளை பிரித்து அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா என்பதை அவர் தெளிவு படுத்தி பேசுவது நல்லது

அது வரை இது வெறும் "அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்படும் அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும்" என்கிற அறிவிப்பாக மட்டுமே நீடிக்கும்

Printfriendly