Wednesday, March 2, 2011

தமிழக தேர்தல் 2011


தமிழகத்துக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏப்ரில் மாதம் 13  ஆம் தேதி தேர்தல்; மே மாதம் 13  அம தேதி ஒட்டு எண்ணிக்கை.  வெறும் 40 நாட்களில் தேர்தல். 15  நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம். அதுவும் ஒரே ஒரு வாரம் தான் அவகாசம் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்துகொள்ளவும் வாபஸ் வாங்கவும். ( ஆனால் ஒட்டு எண்ணிக்கைக்கு மட்டும் ஒரு மாத இடைவெளி?? )

இன்றைய தேதியில் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது?

திமுக, காங்கிரஸ், விசி, கூட்டணியில் "போட்டு வாங்கிய" இன்னொரு கட்சியாக பாமகவும் இணைந்து இருக்கிறது. (போட்டு வாங்கிய என்று சொல்ல காரணம், டெல்லி பயணத்தில் கருணாநிதி சொன்ன பாமக அணியில் இருக்கிறது என்கிற பதிலும், அதை தொடர்ந்து பாமக தாங்கள் இல்லை என்று மறுத்த மறுப்பும், அப்படியானால் sari நான் தான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்ற கருணாநிதியில் ஜகஜால வேலையும், அதை தொடர்ந்து, இல்லை இல்லை இதோ இருக்கிறோம் என்று ஓடி வந்து ஒட்டிக்கொண்ட அதிசயமும் தான்.  அதோடு பாமகவின் பேரம் பேசும் சக்தி குறைந்து, இடம் கிடைச்சதே போதுமடா சாமி என 31  இடங்களுக்கு செட்டில் ஆகி கொண்டது)

காங்கிரஸ் இந்த நிமிஷம் வரையிலும் திமுக அணியிலே இருந்தாலும் கூட, எனக்கென்னவோ அவர்கள் வெளியே வந்து விஜியுடன் அணி சேர்ந்து போட்டி இடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.  அதற்காக தானோ என்னவோ சாத்தியமற்ற கோரிக்கைகளை அடுக்குவதாக தகவல்கள் கசிகிறது. திமுகவுக்கும் கூட காங்கிரஸ் வெளியேறினால் போதும் என்று தோன்றி இருக்குமோ என்னவோ, "இளவல்" வீரமணி மூலமாக காட்டமாக காங்கிரசை எதிர்த்து மறைமுக குத்தலுடன் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. (இப்போதைக்கு திமுகவின் மனசாட்சி அவர் தானே!)

திமுகவின்  கணக்கு ஒரு வகையில் சரியாக கூட இருக்கலாம்.  காங்கிரசை வைத்து கொண்டு போட்டி இடுவதை விட, காங்கிரசை எப்படியாவது மூன்றாவது அணி அமைக்க செய்துவிட்டால், திமுகவின் வெற்றி மிக மிக எளிமை ஆகிவிடும்.  இன்றைய சூழலில் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் தான் அதிகம். அது ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு போய்விடாமல், அதிமுக காங்கிரஸ் என இரண்டாக பிரிந்தால், சைக்கிள் கேப்பில் ஜல்சா பண்ணிக்கொள்ளலாம் என திமுக மனதில் ஏதேனும் ஓட்டம் இருக்கிறதோ என்னவோ?

அதிமுக அணியின் நிலைமை இன்னமும் புரியாமல் இருக்கிறது.  லெட்டர் பேடு கட்சிகளுடன் எல்லாம் தொகுதி பங்கீடு (!) வெற்றிகரமாக முடிந்து விட்ட நிலையில் கூட்டணியின் முக்கிய கட்சிகளான சி.பி.எம்; சி.பி.ஐ போன்றவற்றின் நிலை பாடு என்னவென்று தெளிவாக இல்லை.  மதிமுகவை பொறுத்துவரை பிரச்சனையே இல்லை. என்ன கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். (இங்கே இன்னொன்றை சொல்லணும் போல இருக்கிறது. எனக்கு மதிமுகவை பிடித்ததற்கு காரணமே அதன் நேர்மை தான்.  1996  தேர்தலில் தனித்து களம் கண்ட கட்சி அது. 211  தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. பாக்கி 23  இடங்களில் என் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு, நிறுத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த நேர்மை 'ஹமாமையே' மிஞ்சிய ஒன்று!)

விஜி அதிமுக அணிக்கு வருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அவர் காங்கிரசுடன் அணி அமைக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவார் என தோன்றுகிறது.  அப்போ தான் அதிக இடங்களில் போட்டி இட முடியும்.  அதிமுகவில் அதிகம் தேற வழி இல்லை. 

திமுக அணியை  பொறுத்தவரை அரசின் செயல் திட்டங்கள் பெரிதும் கை கொடுக்கும் என்கிற பெரும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்ளுகிறது.  என்ன இருந்தாலும் எத்தனின் எத்தனையோ திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த அரசு என்பதை பொதுவாக எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். மேலும் இன்றைய தலை முறை, பிரச்சாரங்களை விட அதிகமாக செயல்பாடுகளையே எடை போடுபவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிமுக கூட, குப்பை அல்லாததை கண்டித்து _____ நகராட்சியை எதிர்த்து போராட்டம், குண்டும் குழியுமான சாலையை கண்டித்து ஆர்பாட்டம் என்று ஒரு சிறு சங்கத்தை போல செயல்பட்டதே அல்லாமல், பெரும் தவறு என்று அரசிடம் எதையும் சுட்டி காட்டி பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யாமல் இருந்ததே, திமுக ஆட்சிக்கு ஒரு மறைமுக நற்சான்றாக அமைந்து விட்டது. 

இந்த நிலையில் திடீர் என்று என்ன குற்றச்சாட்டை கையில் எடுத்து அதிமுக பிரச்சாரம் செய்யும் என்பதை அறிய எல்லோரையும் போல எனக்கும் ஆவலாக தான் இருக்கிறது.  (அதை விட ஆர்வம், அதிமுகவுக்காக யார் பிரச்சாரம் செய்ய போகிறார்கள் என்பது.  ஜே.நலிவுற்று இருப்பதால், முழுக்க முழுக்க வைகோவை நம்பியே இருக்கிறது தேர்தல் பிரச்சாரம். விஜி வந்தால் அவர் கொஞ்சம் பார்த்துப்பார்!)

தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய திருப்புமுனையான பிரச்சனை என்று இப்போதைக்கு ஒன்றுமே இல்லை என்பதும் கவனிக்க தக்கது.

கிட்டத்தட்ட, தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கூட மந்தமான சூழல் தான் நிலவுகிறது தமிழகத்தில். எந்த பரபரப்போ, சுறுசுறுப்போ, அட சுவர் விளம்பரங்களோ கூட அவ்வளவாக இல்லை. எதுக்குடா தேர்தல் வருது.. இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்கிற மனநிலையில் எல்லோருமே இருப்பது மாதிரியான ஒரு பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


முதலில் அணிகள் இறுதியாகட்டும். அதை வைத்து தான் களம் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.   பத்தே  நாளில் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தலை எழுத்து எப்படி அமையும் என்பது குறித்து ஒருவாறான யூகம் கிடைத்து விடும். 

அதுவரை காத்திருப்போம்!

Sunday, February 27, 2011

ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.

யில்வே பட்ஜெட் தாக்கல் ஆகி இருக்கிறது.. இந்த ஆண்டும்.

வழக்கம் போலவே தமிழகம் ஏமாற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறது அதே வழக்கமான அமைதியுடன்.

ஐந்து மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையிலும், முக்கியமான மாநிலமான தமிழகம் போதிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாமல் இருப்பதன் பின்னணி அரசியல் சார்ந்தவையாக இருக்கக்கூடும். எனினும் ஒரு தமிழனாக நம் மாநில தேவைகள், எதிர்பார்ப்புக்கள் அதன் ஏமாற்றங்களை அசைபோட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

முதலில் இந்த பட்ஜெட் நமக்கு குறிப்பாக கொடுத்தவை என்ன என்று பார்க்கலாம்.

சென்னை - மதுரை; சென்னை - மதுரை - திருவனந்தபுரம்  ஆகிய வழி தடங்களில் துரந்தோ ரயில் விடப்படுகிறது.  இது பெரும் தொழிலதிபர்களுக்கே வசதியாக இருக்கும்.. எனினும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விடப்படும் ரயில் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது புரியவில்லை. காரணம் விமான கட்டணமும் அதே அளவுக்குள் வருகிறது.. பயண நேரமோ 2 மணி நேரம் தான்.

கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் கோவை நாகர்கோவில் ரயிலில் சில இணைப்பு பேட்டிகள் மட்டும் என்று சுருங்கி போனதில் சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு நாகூர் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் லிங்க் ரயில் தான்.  திருவாரூரில் இருந்து சில பெட்டிகள் தனியாக நாகூர் வரை சென்று கொண்டிருந்தது.  அகல பாதை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இப்போது மீண்டும் விடப்பட்டு இருக்கிறது.  புதிய மொந்தையில் பழைய கல்.

தருமபுரி - பெங்களூர் இடையே விடப்பட்டு இருக்கும் ரயில் எக்ச்பிரசாக இயங்காமல் பயணிகள் ரயிலாக இயங்குவதாக இருந்தால் நலம்

விழுப்புரம் இப்போது தேர்மினலாக உருவெடுத்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து காரக்பூருக்கு ரயில் சேவை வேலூர் வழியாக துவக்கபடுகிறது..நல்ல விஷயம்.


சென்னை திருச்செந்தூர் ரயில் தினசரி இயக்கப்படும் (முன்பு வாரம் ஒரு முறை); கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் என்பவை வரவேற்க்கப்படவேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள்.

காஞ்சீபுரம் - திருப்பதி; பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் வழித்தடத்துக்கான ஒப்புதல் ஆச்சரியம் கொடுக்கிறது.. எனினும் சேலம் நாமக்கல் பழனி வழித்தடம் என்ன ஆயிற்று என்பது விளக்கப்படவில்லை.  நாமக்கல் வரை பணிகள் முடிவடைந்தும் ரயில் சேவை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது

சென்னையில் இருந்து மதுரைக்கு காலை நேர விரைவு ரயில் ஒன்றும், சென்னை நெல்லை வழியில் இன்னும் ஒரு ரயில் வேண்டும் என்றும் உள்ள தேவைகள் கவனிக்கப்படவில்லை.  கோவை நெல்லை, கோவை திருவனந்தபுரம், கோவை பெங்களூரு மார்க்கத்தில் தனி ரயில் வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை

கோவை சென்னை துறந்தோ ரயில் நேரம் கிட்டத்தட்ட கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை ஒட்டியே இருப்பதும், கட்டணமும் கூடுதலாக இருப்பதும், கவனத்தில் கொண்டு, துறந்தோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் வீணாயிற்று.

எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுவதாக இருக்கும் இண்டர்சிட்டி ரயிலும், திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்த ரயிலும் கோவை வரை நீட்டிக்கப்படவேண்டும்.

உள்கட்டமைப்பு, பாலங்கள், போன்ற பணிகளுக்கு தமிழகத்துக்கு இந்த முறை அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

மிக மிக நீண்ட காலமாக பனி நடந்து வரும் கோவை - திண்டுக்கல்; மதுரை - போடி; திருவாரூர் - காரைக்குடி அகல பாதை திட்டங்கள் இந்த ஆண்டும் கனவாக போய் விட்டது.

சென்னை - மதுரை; சென்னை - நெல்லை; சென்னை - பெங்களூரு; சென்னை - கோவை மார்க்கங்களில் இன்னமும் ரயில் தேவை இருந்துகொண்டே இருப்பதை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில்கள் விடப்படவேண்டும் என்கிற நம்பிக்கை நப்பாசை ஆகிக்கொண்டு இருக்கிறது.

சென்னையை போலவே.. கோவையை மையமாக கொண்டு, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர்/ஈரோடு, பொள்ளாச்சி வழித்தடங்களிலும்; திருச்சியை மையமாக கொண்டு, தஞ்சாவூர், மதுரை, கரூர், விழுப்புரம் வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்கிற ஆசையும் நப்பாசை பட்டியலில் சேர்ந்து கொள்கிறது.

போதுமான ரயில்கள் விடப்படாமல், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல், வேற்று கவர்ச்சியாக சில ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் இனிதே தாக்கல் ஆகி விட்டது தமிழகத்தை பொறுத்தவரை.

அடுத்த ஆண்டுக்காக ஆசையை தள்ளி வைப்போம்...

Thursday, February 3, 2011

2G - கைது சரியா?

இந்திய ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்கிற பட்டம் மட்டும் தான் பாக்கி!

அட்டகாசமாக அரங்கேறிவிட்டது தொலைதொடர்பு ஊழல், விசாரணை, அறிக்கை, கைது படலங்கள்.

சுருக்கமாக பார்த்தால் ஒரு யூகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது தான் உறுத்துகிற நிஜம்.

மத்திய தணிக்கை அதிகாரி ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதில் 2G அலைக்கற்றைகளை ஏல முறையில் விற்பனை செய்திருந்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என அறிவிக்கிறார்.  அந்த கூடுதல் வருமானம் என்பது சுமார் 1,76,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறார்.  அதாவது, அலைக்கற்றைகளுக்கு அந்த அளவுக்கு தேவை இருந்து, இத்தனை போட்டியாளர்கள் இருந்து, அவர்கள் ஏலத்தில் பங்கேற்று இந்த அளவுக்கு விலையை ஏற்றி இருந்தால், ஒருவேளை அரசுக்கு இந்த கூடுதல் வருமானம் கிடைத்து இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடுகிறார்.  மேலும், இந்த கணக்கீடு ஒரு யுகமான மதிப்பீடு தான் என்றும் அவரே சொல்லி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூக்குரல் இட்டு இன்று ராசாவும் கைது செய்யப்பட்டாயிற்று.

சரி... தணிக்கை துறை இதை மட்டும் தான் சொல்லி இருக்கிறதா?

விவசாயம், கல்வி, பெட்ரோல், சுகாதாரம் போன்ற பலவற்றுக்கும் அரசு தருகிற மானியங்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும் என்று கூட தான் சொல்லி இருக்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அல்ல பல்வேறு மாநில அரசுகளுக்கான தணிக்கை அறிக்கையிலும் இது போன்ற மானியங்களை / கடன் தள்ளுபடிகளை / சலுகைகளை குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.  இதன் அடிப்படையில் மானியங்களை குறைத்து வருவாயை ஈட்டி அரசு கஜானாக்களை நிரப்பி இருக்கலாமே?  அப்படி செய்யாமல் இருந்த அனைவருமே அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தியவர்கள் என்று பட்டயம் கட்டிவிடலாமா?

பொதுவாக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்பது மரபு.  தணிக்கை துறையை பொறுத்த மட்டில், வெறும் வருவாய் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே பார்த்து தணிக்கை செய்து கூடுதல் வருவாய்க்கான வழிகளை சொல்லி வைக்கிற ஒரு ஆலோசனை குழு தானே தவிர, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல.  மானியங்கள் கொடுப்பது என்பது அந்த அந்த துறையை பொறுத்து தேவையை பொறுத்து அரசாங்கங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

இலவச கல்வி கொடுக்கவேண்டும், அதன் மூலம் தான் கல்வி அறிவு வளரும் என்று ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தலாம்.  ஆனால் தணிக்கை துறையை பொறுத்தவரை , கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் விட்ட வகையில் இத்தனை கோடி வருவாய் இழப்பு என்று தான் அறிக்கை தரும்.

2G விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது விசாரணையில் இருக்கிறது. எனினும் தணிக்கை துறை சொல்கிற அளவுக்கான ஊழல் நடைபெற சாத்தியமே இல்லை என்று பாஜக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரே சொல்லி இருக்கிறார்.  அவரது கணிப்பு படி, ஒருவேளை வருவாய் இழப்பு என்பதை  காரணமாக கொண்டாலும் கூட அதிகபட்சம் 30,000 கோடி வரை தான் இருக்கக்கூடும் என்கிறார்.

ஒதுக்கீட்டில் முறைகேடு, லஞ்சம் பெற்று கொண்டு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை தான் நடந்திருக்கக்கூடும் எனபதும், அத்தகைய முறை கேடு என்பது கூட தண்டனைகுரிய குற்றம் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.  அதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை, தக்க ஆதாரங்களுடன் கைது செய்வதை எல்லோருமே ஏற்று கொள்ள தான் செய்வார்கள்.

ஆனால், ஏல முறை ஒதுக்கீட்டை மேற்கொள்ளாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று காரணம் சொல்லி, அதன் பேரில் கைது என்பது நெருடலாகவே உள்ளது.

ஒரு எளிய உதாரணம் சொல்வது இங்கே பொருந்தும்:

2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் BPL, Aircel ஆகிய இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் செல்போன் சேவைக்கான ஒதுக்கீடு பெற்றது.  பின்னர் சில ஆண்டுகள் கழித்து BSNL, Airtel, Reliance (CDMA), Tata Indicom(CDMA) ஆகியவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது.  இவை போக மிச்சம் இருக்கும் அலைவரிசைகள் தான் இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் MTS, Reliance GSM, Tata Docomo, Uninor, Videocon, Idea போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் தங்கள் சேவையை தொடங்கின.

ஒரே தொலை தொடர்பு வட்டத்தில், ஒரே தொழில் நுட்பத்தில் மூன்று முறை ஒதுக்கீடுகள் நடைபெற்றதால், ஒரே மாதிரியான ஒதுக்கீடு விதிமுறைகளும், கட்டணங்களும் தான் இருக்க முடியும் என்பது பொது விதி.  அப்போது தான் போட்டியாளர்களுக்கிடையே சமநிலை (Level Playing Field) இருக்கும். அப்படி இல்லாமல், ஒரே மாதிரியான சேவைக்கான லைசன்சுக்கு வெவ்வேறு வகையான கட்டணங்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு முறைகள் என்று  இருந்தால் அது சரியான வழி முறையாக இருக்க நியாயம் இல்லை.

அனைவருக்கும் ஒரே வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான், தொலை தொடர்பு சேவைக்கான கட்டணமும் சீராக இருக்கும்.  அதில்லாமல், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டால், கட்டண விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, அதிக கட்டணம் உள்ள நிறுவனங்கள் நாளாவட்டத்தில் செயலிழந்து போக கூடிய அபாயம் இருக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் அதே சமயம், ராசா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது போன்ற விசாரணைகள் அவசியமானவையே.

விசாரணையில் என்ன வெளிவருகிறது என்பதில் இருக்கிறது எதிர்கட்சிகளின் எதிர்காலம்!


Sunday, September 19, 2010

இலவச செல்போன் - ரொம்ப முக்கியம்!

வித்தியாசமான காமடிகளை அரங்கேற்றுவதில் அரசாங்கங்களை அடிச்சுக்கவே முடியாது என்பதற்கு மற்றும் ஒரு சம்பவம் கிடைத்திருக்கிறது.

இலவசம் இலவசம்னு எல்லாத்தையும் இலவசமா கொடுத்து கொடுத்து மக்களை மட்டம் தட்டி வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டும் மத்திய அரசு, புதிதாக அதிரடியாக அறிவித்திருக்கும் ஒரு திட்டம் ஆச்சரிய படுத்துகிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் சச்சின் பைலட்.  இவர் இப்போது தொலை தொடர்பு துறைக்கான இணை அமைச்சராக இருக்கிறார்.  இவரோட பாராளுமன்ற தொகுதில்  இருக்கும் "வறுமை கோட்டுக்கு கீழே" உள்ள மக்களுக்கு பி.எஸ்.என்.எல் சார்பாக இலவச சிம் கார்டு, இலவச இன்கமிங் கால் வசதியுடன் இலவச செல்போன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் என்கிற வரையறை மத்திய அரசால் எப்படி செய்யப்படுகிறது என்றால், மாதம் 600 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்யக்கூடியவர்கள் என்று.  அப்படி கஷ்டப்படும் ஜீவன்களுக்கு மத்திய கிடங்குகளில் வீணாகி கொண்டு இருக்கும் உணவு தானியங்களை இலவசமாக கொடுப்பதற்கு வீம்பாக மறுப்பு தெரிவித்து மல்லு கட்டும் மத்திய அரசு, அதே ஜீவன்களுக்கு இலவசமாக செல்போன் கொடுக்கிறது!

கால கொடுமை!

இப்படி செல் போன் கொடுப்பது, சமூகம் மீதான தன நிறுவனத்தின் அக்கறையை வெளிப்படுத்துவதாக பி.எஸ்.என்.எல் சொன்னாலும், அதனை   தொலை தொடர்பு துறை ராஜாங்க அமைச்சர் தொகுதியில் மட்டும் கொடுத்து இருப்பதில் என்ன விதமான சமூக அக்கறை இருக்கிறது என்பது புரியவில்லை.

மேலும், இப்படியான இலவச செல்போன் என்பது வறுமையில் வாடும் மக்களுக்கு மேலும் கூடுதல் செலவாக தான் அமையுமே அல்லாமல், அவர்களுக்கு அதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.

வறுமையில் வாடுகிற மக்களுக்கு, வேலை வாய்ப்புக்களை பெருக்குவது, வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுப்பது, கல்வி, சுயதொழிலுக்கான வழிகளை காட்டுவது, வீணாகும் தானியங்களையாவது கொடுத்து உதவுவது என்பன போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை யோசிக்காமல் அவர்களுக்கு செல்போன் கொடுப்பது என்பது செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவுக்கும் மட்டுமே பயனளிக்க கூடியதாக இருக்குமே தவிர, வறுமையில் வாடும் ஜீவன்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இருக்க நியாயம் இல்லை.


மேலும்,  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், சச்சின் பைலட் தொகுதி என்பதால் அங்கே இந்த இலவச செல்போனை விநியோகித்த பி.எஸ்.என்.எல், அடுத்த படியாக, கடந்த 18.09.2010 அன்று கோவை அடுத்த அவினாஷியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது.  இந்த பகுதி தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்களின் தொகுதிக்குட்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

பி.எஸ்.என்.எல்லை பொறுத்தவரை, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இப்போதைய உடனடி அத்தியாவசிய தேவை என்பது செல்போன் என்று தீர்மானித்து விட்டதாகவும், அப்படியான வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே இருப்பதாக முடிவு செய்துவிட்டதாகவும் தோன்றுகிறது.

பசியால் வாடுவோருக்கு உணவு தானியம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கு வீம்பாக மறுப்புரை வழங்கிய மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு இலவச செல்போன் வழங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை.

சோற்றை விடவா செல்போன் முக்கியம்?

அயோத்தி தீர்ப்பும் - அவசர அறிக்கையும்

பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுமானம், போன்ற பரபரப்புக்களால் கலவர வன்முறை களமான அயோத்தி வன்முறைகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரவிருக்கிறது.

கடந்த வாரம் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சமயம் வெளியூர் செல்லாமல் அவரவர் ஊர்களிலேயே இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.  மேலும், மாயாவதி அவர்கள் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அவ்வேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்லி இருப்பதுடன், காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 16.09.2010 அன்று, மத்திய அமைச்சரவை கூடி எடுத்த மற்றொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே வலியுறுத்தி இருக்கின்றது.  அத்தீர்மானம் அரசின் சார்பில் விளம்பரமாகவும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு அறிக்கைகளின் நோக்கம் என்ன? இவ்வளவு அவசரமாக எதற்காக இப்படியான அறிக்கைகள் வெளியாகின்றன? அரசு ஏதேனும் மிக பெரிய வன்முறையை எதிர்நோக்குகிறதா?  அல்லது அவ்வாறான ஒரு வன்முறை வேண்டும் என்று விரும்புகிறதா?

ஒண்ணுமே புரியலை!

Wednesday, August 18, 2010

புறம்போக்குக்கு பட்டா கிடையாதாம்!

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான முட்டாள்தனமான அரசாணையை வெளியிட்டது.  அது பற்றிய விவரங்கள் ஏற்கனவே இதே மனவுரையில் புறம்போக்குக்கு பட்டாவாம்!   
என்கிற பதிவாக எழுதப்பட்டது.

நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அதிரடி தீர்ப்பாக, தமிழக அரசின் அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது!

பொதுவாகவே, அரசு புறம்போக்கு நிலம் என்பது அரசு சொத்து தான்.  அதனை ஆக்கிரமிப்பவர்களை அகற்றி நிலத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமையே தவிர, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாலர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பது என்பது சட்டவிரோத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக தான் அமையும்.

பார்ப்போம், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்னவாக இருக்கிறது என்று!

Sunday, July 18, 2010

இது தேர்தல் காலம்!

சமீப காலமாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் எழுச்சி பெற்று வருவதை காணலாம். அதிமுக மிக மிக பிரம்மாண்டமான ஒரு கண்டன பொதுக்கூட்டத்தை கோவை மாநகரில் நடத்தி காட்டியது. மதிமுக, கம்மியூநிச்ட்டு கட்சிகள் இணைந்து மயிலை நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்பாட்டம் செய்து வைகோ உட்பட பலர் கைதாகி இருக்கிறார்கள்.




தமிழகத்தை பொறுத்தவரை இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பராமரிப்பில் இருக்கும் மக்களை கொண்ட மாநிலமாக தான் இது வரையும் இருந்து வருகிறது.



பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னதை போல, எதிர்கட்சிகள் என்பவை விளக்கை தூண்டுகின்ற தூண்டுகோலாக இருக்க வேண்டும். அப்படியான தூண்டு கோல் இல்லாவிட்டால் விளக்கு சீராக எரியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1977 க்கு பிறகு எதிர்கட்சிகள் என்பது கிட்டத்தட்ட எதிரி கட்சிகள் என்கிற நிலையிலே மட்டுமே இயங்கி வந்து கொண்டு இருக்கிறது.



அரசு எதை செய்தாலும் அதனை எதிர்ப்பது. அரசு எதை செய்ய எண்ணினாலும் அதனை முட்டுக்கட்டை இட்டு தடுப்பது என்பது மட்டுமே எதிர்கட்சிகளின் பணி என்றாகி போனது. அரசின் நல திட்டங்கள் குறித்த விவாதங்களில் கூட கலந்துகொள்ளாமல் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது என்பது ஒரு கவுரவமான வழக்கமாக இரு இயக்கங்களும் போற்றி பேணி காத்து வருகின்றன.
 
பொதுவாக எதிர்கட்சிகள் என்பவை, மக்களின் குறைகளை அறிந்து அரசுக்கு எடுத்து சொல்லி, அரசை முறைப்படி இயங்கவைக்கும் பெரும் பொறுப்பு கொண்டவையாக நமது இந்திய அரசியல் சாசனம் வடிவுறுத்துகிறது. ஆனால் நிஜத்தில் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி அதிகம் அலட்டி கொள்வதில்லை தமிழக எதிர்கட்சிகள்.




மாற்று கட்சியினருடன் சந்திப்பு நடத்தும் தன் கட்சிக்காரர்களை களை எடுப்பது, அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது, மாற்று கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களை தங்கள் முகாமுக்கு மாற்றுவது போன்றவற்றை மட்டுமே செய்துவரும் தமிழக எதிர்கட்சிகள், ஒரு போதும், தற்கால பிரச்சனைகள் குறித்து கவலை கொள்வதில்லை.



ஐந்தாண்டு காலம் முழுவதும் நித்திரையில் மூழ்கி திளைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளியே எட்டி பார்த்து பத்திரிகை செய்திகளில் தங்களை பிராதன படுத்துவதற்கான அதிரடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. மக்களின் மறதி என்பதை பெரும் வரமாக கொண்டு இயங்கும் எதிர்கட்சிகள், இத்தனை காலம் வாளாவிருந்ததை பற்றி மக்கள் அதிகம் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.



தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தமிழக பிரச்சனைகளுக்காக இதுவரையும் குரல் கொடுக்கவில்லை. தமிழக ரயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர், மின்சார தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, அரசின் சில துறைகளில் காணும் செயலற்ற தன்மை, முற்போக்கான திட்டங்கள் போடாதது, வளர்ச்சி பணிகளின் சுணக்கம், போன்ற எதை பற்றியும் கவலை கொள்ளாமல், தன் இயக்கத்துக்கு நீண்ட விடுப்பு கொடுத்து நித்திரையில் ஆழ்திருந்தது. இடை தேர்தல்கள் அறிவிக்கப்படும் பொழுது மட்டும் அந்தந்தந்த வட்டார பிரச்சனைகளை கையில் எடுத்து குரல் கொடுப்பதும் பின் சுனங்கிவிடுவதுமாக கழிந்தது காலம்.




இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் இருத்தலை வெளிக்காட்டி கொள்ளும் விதமாக, "குப்பை அள்லாததை கண்டித்து ______________ நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்"; " சாலைகளை செப்பனிடாததை கண்டித்து _____________ பேரூராட்சியை கண்டித்து உண்ணாவிரதம்" ; "குடிதண்ணீர் குழாயை சரி செய்யாததை கண்டித்து ___________ பஞ்சாயத்தை கண்டித்து பேரணி" என்றெல்லாம் அங்காங்கே நடத்தி வந்தது அதிமுக. இதில் விசித்திரமாக சில இடங்களில் அதிமுக நிர்வாகத்தையே கண்டித்தும் ஆர்பாட்டங்கள் அதிமுகவால் நடத்தப்பட்டு இருக்கின்றன. இவையன்னி, அரசை எதிர்த்தோ, அரசின் செயலற்ற தன்மைகளை சாடியோ, மக்கள் அவதியுறும் முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தியோ பெரும் போராட்டங்களை நடத்துவதோ, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதோ இத்தனை காலமாக காணவில்லை.



நீண்ட நித்திரை களைந்து, கோவையில் கர்ஜித்த ஜெயலலிதா கூட, திமுக தனது குடும்பத்துக்காக கேபிள் டிவி வருமானத்தை மேம்படுத்துகிறது, மணல் கொள்ளையை அசட்டையாக கையாள்கிறது போன்ற பிசினஸ் விஷயங்களை பற்றி மட்டுமே குற்றம் சாட்டி இருக்கிறார்.



வைகோ போன்றவர்கள் மிக மிக விசித்திரமானவர்கள். அவர் கையில் எடுக்கும் விஷயங்கள் ஒன்று, இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும் அல்லது கேரளா/கர்நாடக அரசுகளுக்கு எதிராக இருக்கும். மதிமுக போன்றவலிமையான, மாநிலம் முழுமையும் பரவி இருக்கும் ஒரு பேரியக்கம் தமிழக மக்களின் அன்றாட முக்கிய பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் சர்வதேச இயக்கம் போலவே செயல்படுவது தமிழக மக்களுக்கு ஏனோ பெரிய வியப்பை தருவதில்லை.. இதுவரை.




இப்போதும் கூட நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் போராட்டம் செய்திருப்பது, குடிதண்ணீர் பிரச்சனைக்காகவோ, மின் தட்டுப்படுக்காகவோ, விலைவாசி உயர்வுக்காகவோ, அரசின் செயலற்ற தன்மைக்கு எதிராகவோ அல்ல. இலங்கையின் துணை தூதரகம் சென்னையில் செயல்பட கூடாது என்பதற்காக தான். இத்தனை நாளும் செயல்பட்டுக்கொண்டிருக்கையில் வாளாவிருந்துவிட்டு இப்போது திடீரென்று ஆட்டகாசமாக ஆரம்பமாகி இருக்கிறது ஆர்ப்பாட்டம், கைது, ரிமாண்டு. பத்திரிக்கைகளின் முதல்பக்கத்தில் படத்துடன் செய்தி.



சரி, இத்தனை நாள் துயில்கொண்டவர்கள் இப்போது துள்ளி எழுந்திருப்பது ஏன்?



தமிழக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைய இருக்கிறது. தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டைகளை / எண்ணிக்கையை சரிபார்க்க துவங்கி விட்டது. தேர்தல் வாக்குப்பதிவு கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகளை அரசு ஊழியர்களுக்கு கொடுக்க சித்தமாகி இருக்கிறது. அரசின் திட்டங்களை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.



வந்து விட்டது தேர்தல் காலம்.



இந்த நேரத்தில் மக்களின் மனதில் இடம்பிடிப்பதற்கான போட்டி தான் இப்போது திடீரென்று தோன்றி இருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் இத்தியாதி இதியாதிக்கள் எல்லாம்.



மக்களும் சாமானியமானவர்கள் அல்ல... "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்னா பயத்ததோ சார்பு" எனும் குறளுக்கேற்ப, தனக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாத எதிர்கட்சிகளை, சகித்து மன்னித்து, பெரும் வரவேற்போடு ஆரவாரமாக வரவேற்க தயாராகி விட்டார்கள்.



பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, ஆரத்தி, ஊர்வலம், பொதுக்கூட்டம், சாரி சாரியாக அணிவகுத்து வரும் மக்கள் வெள்ளம், இதுவரையும் தங்களுக்காக எதையுமே செய்யாவிட்டாலும், இப்போது செய்யபோவதாக சொல்லும் வர்ண ஜால வார்த்தை சித்தங்களில் மயங்கி மகுடிக்கு ஆடுவது போல ஆட தயாராகி விட்டார்கள்.



அப்படியான மக்களின் மனதில் தங்களை மீண்டும் நிலை நிறுத்தி கொள்வதற்காக விசித்திரமான விஷயங்களுக்காக எல்லாம் போராட்டங்கள் அறிவித்து, கைதாகி, பரபரப்பை ஏற்படுத்தி, அரசை சாடி, சவால் விட்டு, மக்களுக்காகவே உழைப்பதாக உதார் விட்டு, சொந்த விஷயங்களை சற்று பின் தள்ளி, மக்கள் மன்றத்தை நோக்கி ஓடி வர துவங்கி விட்டது எதிர்கட்சியினரின் கூட்டம்.



எழுச்சி பெற்று விட்டனர் எதிர் கட்சியினர்...



ஒரு கவிஞன் சொன்னதை போல, தன முகத்தில் குத்தப்படும் கரும்புள்ளிக்கான முன்னோட்டமாக தன விரலில் கரும்புள்ளி குத்திக்கொள்ள தயாராகி விட்டான் வாக்காளன்.



வந்தே விட்டது தேர்தல் காலம்.

Printfriendly