Saturday, April 21, 2012

இட ஒதுக்கீடு அவசியமா? இல்லையா?

இட ஒதுக்கீடு – சமீப காலங்களில் என் நண்பர்களுடன் விவாதிக்கையிலெல்லாம் தவறாது இடம் பிடிக்கும் விஷயங்களுள் ஒன்று.




இட ஒதுக்கீட்டுக்கான அவசியம்!



முந்தைய காலங்களில், சாதீய ஆதிக்கம் அதிகமாக இருந்த கால கட்டத்தில், ஆதிக்க மனப்பான்மை கொண்ட சாதியினரால் ஒடுக்கப்பட்ட பிற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு (இனி நாம் பொதுவக பிற்படுத்தப்பட்டவர்கள் என்றே குறிப்பிடுவோம் – வசதிக்காக!) எந்த விதமான அடிப்படை உரிமைகளும் கிடைக்காமல் மறுக்கப்பட்டு வந்தது. கொத்தடிமை போன்று பணியாளர்களாக, வம்சாவழியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் படிக்கும் அதே பள்ளிக்கூடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பிள்ளைகளும் சரிசமமாக கல்வி பயிலுவதை பலரும் விரும்பவில்லை.அதனால் பிற்பட்டவர்களுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வந்தது.

ஆதிக்க சமூகத்தினரை பகைத்துக்கொள்ள விரும்பாத பலரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்து பிள்ளைகளை பள்ளிகளில் அனுமதிக்க தயங்கி வந்தனர். பெரும்பாலான பள்ளிகளின் கொடையாளிகளாக ஆதிக்க சமூகத்தினர் இருந்து வந்தது ஒரு காரணம்.

ஒரு சமூகம் முன்னேறுவதற்கான முக்கிய தேவை கல்வி அறிவு தான். ஆனால் அதை கூட பெற முடியாதபடிக்கு ஆதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகள் இருந்ததால், அரசு தலையிடவேண்டியதாயிற்று. அப்போதைய நீதிகட்சி, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வகுப்புவாரி விகிதாச்சார பிரதிநிதித்துவ சட்டம் என ஒன்றை கொண்டு வந்தது. அது தான் சமூக நீதிக்காக வித்திடப்பட்ட முதல் விதை.

பள்ளிகளில் குறிப்பிட்ட இடங்களை கட்டாயமாக பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என சட்டம் இயற்றியது அரசு. இதன் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைக்க துவங்கியது. இப்படி தான் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.



இட ஒதுக்கீடு – இப்பொழுது!



அடிப்படை கல்வியில் துவங்கிய இட ஒதுக்கீடு, உயர் கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா இடங்களிலும் அமலாக்கப்பட்டது. அவ்வப்போது ஆட்சியிலிருந்தவர்களின் கொள்கைகளை அனுசரித்து மெல்ல மெல்ல விரிவாக்கப்பட்டு இப்பொழுது 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் உள்ளது. இது குறித்தான் போராட்டங்கள், சட்ட சர்ச்சைகள், கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. நாம், சுருக்கமாக, மிக சுருக்கமாக, இட ஒதுக்கீட்டின் தாக்கத்தை பற்றி விவாதிப்போம்!



தன் பிள்ளை படிக்கும் இடத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்து பிள்ளை சரி சமமாக கல்வி பயில்வதை விரும்பாத ஆதிக்க சமூகத்தினரின் எதேச்சதிகாரத்தினை கட்டுப்படுத்தி, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கும் உரிய கல்வி உரிமையை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு முறை. இதன் பின் விளைவாக பலரும் தங்கள் சாதியை மறைத்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையின் பலனை அனுபவிப்பதற்காக, போலி சாதி சான்றிதழ் பெறுவது வாடிக்கை ஆனது. இது உண்மையான இட ஒதுக்கீட்டு உரிமைதாரர்களுக்கு பாதிப்பை உருவாக்கியதில் வியப்பில்லை. மேலும், சலுகை கிடைப்பதால், அதை அனுபவிக்க அனைவரும் ஆசைப்பட்டதால், கால காலத்துக்கும் அவர்கள் சாதி சான்றிதழை கைகொண்டிருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. சாதி தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டது. கல்வி சாலைகளில் குழந்தைகளை சேர்க்கும் பொழுதே, சலுகைகளை அனுபவிக்க விரும்புபவர்கள் சாதி குறிப்பிடவேண்டியதாயிற்று.



இன்னொரு புறம், என் பிள்ளை சரியாக படிக்க மாட்டார், அதனால் அவனுக்கு சலுகை இடம் தேவையாயிருக்கிறது, அதனால் சாதி அடிப்படையில் அவனுக்கு முன்னுரிமை வேண்டும் என்கிற நோக்கில் சாதியை உயர்த்திப்பிடிப்பதும், இட ஒதுக்கீட்டு முறையை நீட்டித்துக்கொண்டிருப்பதுமான ஒரு நிலை தோன்றிவிட்டது.



எனவே, இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவிப்பதற்காக சாதியும், சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபடாதிருப்பதால் இட ஒதுக்கீடு முறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆதாரமாக நிலைத்துவிட்டது.



இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்றொரு கோரிக்கை விடப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளவும் பட்டது. பொது துறை பணிகளில் மட்டுமன்றி, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறை வேண்டும் எனவும் ஒரு கோரிக்கை உள்ளது. சில இடங்களில் அது அமலாகவும் செய்யப்பட்டது.



திறமை, அறிவு, தனிப்பட்ட குணநலன் போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டிய பதவியமர்த்தல்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டதின் விளைவுகள் கொடூரமானவை. அதனால் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை கூட முடக்கி இருக்கின்றன.



இன்னொரு பக்கம், சமூகத்தின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் விட்டதால், மற்றொரு விபரீத நிலைப்பாடும் ஏற்பட்டது.



முன்னேறிய வகுப்பினர் என்பதாலேய பல உரிமைகளும் கிடைக்காமல், அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஏழ்மை நிலையில் பரிதவிக்கும் முன்னேறிய வகுப்பினரையும், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தும், பிற்பட்டோருக்கான சலுகைகளை மேலும் மேலும் அனுபவித்து சொகுசு வாழ்வு வாழும் படாடோப பிற்பட்டோரையும் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறது, இந்த இட ஒதுக்கீட்டு முறை.



இதை முன்பே உணர்ந்து தான், மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், இட ஒதுக்கீடு முறையை சாதீய அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



ஆதிக்க சாதியின் அடக்குமுறை இப்போது பெரும்பாலான அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாலும், அரசு பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் ஏற்படுத்தி அனைத்து சமூகத்தினருக்கும் தயக்கமின்றி கல்வி பயிலும் உரிமையை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாலும், சாதிய அடிப்படையிலான கல்வி உரிமை என்பது அவசியமற்றது என அவர் கருதினார்.



மற்றொரு பக்கம், பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினரின் குழந்தைகள், போதிய கல்வி பெற முடியாமல் தவிப்பதையும், வசதி படைத்த பிற்படுத்தப்பட்ட சமூக குழந்தைகள், சலுகை அடிப்படையில் கல்வியை அனுபவித்து வருவதையும் அவர் கண்டார்.



அதனால் தான், பொருளாதார ரீதியாக பிந்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனால், பல்வேறு காரணங்களால், அது நிறைவேற்றப்படாமலேயே போய்விட்டது.



இட ஒதுக்கீடு – எனது பார்வையில்!



கல்வி தான் ஒருவனின் வளர்ச்சிக்கான ஆதார அடிப்படை. அது கிடைப்பதற்கான தடையாக சாதி அடக்குமுறை இருந்ததால் தான் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது!



ஒருவனுக்கு கல்வி என்பது கைவரப்பெற்று, சுயமாக சிந்திக்கும் திறன் வந்துவிட்டால், தனது வாழ்வை தீர்மானித்து சரியான திசையில் தன்னை பயணித்து கொள்வதில் அவனுக்கு எந்த சிரமும் இருக்காது.



எனவே, கல்வியில் இட ஒதுக்கீடு முறை என்பது இருந்தாக வேண்டிய நிலை இன்னமும் இருக்கிறது. அது சாதீய அடிப்படையிலா, பொருளாதார அடிப்படையிலா, அல்லது சாதீய அடிப்படையில் கிரீமி லேயர் பகுப்புக்களை புகுத்தியா என்பது விவாதத்துக்குரிய விஷயம் எனினும், இட ஒதுக்கீடு முறை என்பது தற்போதைய சமூக சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று.



ஆனால், அதே நேரத்தில், உயர்கல்வி, பணியிடம் போன்றவற்றில் இட ஒதுக்கீடு முறை அவசியமற்றது என கருதுகிறேன். பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிபெற்ற அனைவரும் ஒரே தகுதியுடையவர்களாக கருதி, அதற்கு மேற்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் பொதுவாக போட்டியிடுவது தான் அவர்களது தகுதியை சீராக்குவதாகவும், உயர்கல்வி தரம், பணியிட வெளிப்பாடு தரம் ஆகியவை மேம்படவும் உதவும்.



நமக்கு நாமே, பிற்படுத்தப்பட்டவர்களால், இவ்வளவு தான் மதிப்பெண் வாங்க முடியும், இவ்வளவு தான் திறமை இருக்கும் என குறைத்து மதிப்பிட்டு, அவர்களை கட்டுப்படுத்தி வைப்பது, தரத்தை குறைப்பதோடு, அவர்களது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடக்கூடும்.



அடிப்படை கல்விக்கு மட்டும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, அவர்களுக்கு உரிய தரமான கல்வியை போதித்து, எல்லா சமூகத்தினருடனும் சரி சமமான கல்வியறிவை பெறுவதற்கான வழி செய்யும் வரை மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் எனவும், அதற்கு மேலான நிலைகளில், அது உயர்கல்வியாகட்டும், வேலை வாய்ப்பு ஆகட்டும், ஒரே நிலையிலான போட்டியின் அடிப்படையில் போட்டியிட வாய்ப்பினை வழங்கி அவர்களது தன்னம்பிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.

















Sunday, March 18, 2012

இந்திய பட்ஜெட் 2012 - என்ன தரும்?



ந்திய பட்ஜெட் இந்த ஆண்டுக்காக தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கலாக்கி   ஒரு மிக  பெரிய அறிவிப்புக்களின் பட்டியலை வெளியிட்டார். அந்த அறிவிப்புக்களின் சாரம் என்ன? அடுத்து எதிர்வரும் காலங்களில் இந்திய பொருளாதாரம் என்னவாக இருக்கும்? இந்த பட்ஜெட் நமக்கு சொல்ல வருவது என்ன?

முதல் பகுதி உரையை காண்கையில் ஒரு முற்போக்கான வளர்ச்சி பாதையை நோக்கிய முன்னேற்றத்துக்கான பட்ஜெட்டுக்காக காட்சி அளித்தது. காரணம் வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தம், வரி சீரமைப்பு, ஜி.எஸ்.டி amalaakkam, சுகாதார திட்டங்கள், அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள், விவசாய ஊக்குவிப்பு திட்டங்கள் என மகிழ்ச்சியான விஷயங்கள் தான் வெளியானது. அப்படியே இருந்திருந்தால் இந்தியா மிக சிறப்பான வகையில் தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக கருதி சந்தோஷப்பட்டிருக்க முடியும்.  ஆனால் பிரனாபின் முழுமையான பேச்சை படித்தபின் ஏற்பட்டிருக்கும் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.

பிரணாப் பேச்சின் இரண்டாம் பகுதியை பார்க்கையில் முழுமையாக முதலாளித்துவத்துக்கான ஆதரவான பட்ஜெட்டாக தெரியும் நிலை இருக்கிறது. விமானபோக்குவரத்தில் அந்நிய கடனுக்கு அனுமதி, விமான உதிரிபோருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து, விமான எரிபொருளை நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி என விமான நிறுவனங்களை மகிழ்ச்சி படுத்தும் அறிவிப்புக்களும், பிற தொழில் கூறுகளில் மிக பெரிய சலுகைகளும், நடுத்தரவர்க்கத்டுக்கான அதிகபட்ச தண்டனையும் வெளியாக தொடங்கியது.

வரிகளை பொறுத்தவரை  உற்பத்தி வரி மற்றும் சேவைவரி  2 % உயர்வு, அனைத்து சேவைகளும் வரிக்கு கொண்டு வருதல், ஏற்றுமதி சேவைக்கான வரி, இறக்குமதிக்கான வரி ரத்து, வருமான வரி சலுகையில் மிக குறைந்த முன்னேற்றம், ஜி.எஸ்.டி திட்டத்தில் தெளிவின்மை போன்றவற்றால், உள்நாட்டு தொழில்கள் முடங்கவும், வெளிநாட்டு மற்றும் இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வளரவுமான வரி விதிப்புமுறை  அமல் செய்யப்பட்டு இருக்கிறது. பணவீக்கத்தின் தற்போதைய நிலையம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சியும் ரூபாயின் மதிப்பு சரிவு  எல்லாம் சேர்ந்து பொதுமக்களின் சம்பாத்தியத்தின் பலனை பாதியாக குறைத்திருக்கும் நிலையில், வரி உயர்வு, அதிலும் சேவை வரி உயர்வு என்பது அவனது திட்டமிட்ட செலவினங்களில் திட்டமிடாத கூடுதல் செலவாக கூடுதல் சுமையாக அவனை அமிழ்த்தக்கூடும்.

பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு அதிகரித்திருப்பதும், போர் விமானங்கள்  வாங்குவதற்கான முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்திருப்பதன் காரணம் புரியவில்லை. அடிப்படை வசதிகளில் போதிய வளர்ச்சி இல்லை என பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்ளும் மத்திய அரசு, அத்தகைய அடிப்படை வசதிகளுக்கான முக்கியத்துவத்தி குறைத்துவிட்டு போர் விமானங்களை ஆர்வமாகவும் அவசரமாகவும் வாங்குவது உறுத்துகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துவதற்காக மிக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது வரவேற்க்கத்தக்கது. சாலைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் முன்னெடுத்து செல்லும் காரணி என்பது சற்று தாமதமாகவேனும் புரியதுவங்கி இருக்கிறோம். குறிப்பாக, பின்தங்கிய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு அப்பகுதிகளை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்.

நிர்வாகத்தை பொறுத்தவரை, 3 % என எதிர்பார்க்கப்பட்ட நிர்வாக செலவு 13 % என உயர்ந்திருப்பது சுத்தமாக நிர்வாக திறமை இல்லை என்பதையும், ஒட்டு மொத்த நிர்வாகமும் சீர் கேட்டு போயிருக்கிறது என்பதையும் தான் காட்டுகிறது.  22 % வருவாயை கடனை நம்பி இருக்கும் இந்திய பட்ஜெட்டில் 18 % செலவினம் கடனுக்கான வட்டியாக  இருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. இதை விட மிக மோசமான பொருளாதார திட்டமிடல் வேறு என்ன இருக்க முடியும்?  வளர்ச்சி பணிகளுக்கு 7 % மட்டுமே நிதி ஒதுக்கும் ஒரு நாட்டில் 22 % கடனுக்கு 18 % வட்டி என்பது கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதை போன்றது.

சுருக்கமாக சொல்வதானால், முற்போக்கான திட்டங்களை தருவதாக சொல்லப்பட்டாலும், அவை அனைத்தும் பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், நடுத்தர மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமாகவும் இருக்க கூடியதாக இருக்கிறது இந்த பட்ஜெட்.






Monday, March 12, 2012

உ.பி தேர்தல் முடிவு - இந்தியாவின் எதிர்காலம்?

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

மேலும் 3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து தலை குனிந்து நிற்கிறது.

ஒரு முக்கியமான காலகட்டத்தில், பொருளாதார மேம்பாடை எதிர்நோக்கி காத்திருக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்? இந்த தேர்தல் நமக்கு சொல்ல வருவது என்ன?


உத்தரபிரதேசம் இந்தியாவின் மிக பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால், இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கை அது வகிக்கிறது.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியமான பங்கை வகிக்கும் என பலமாக எதிர்பார்க்கப்பட்டாலும், சமாஜ்வாடி கட்சி தனி பெரும் கட்சியாக முகிழ்த்து இந்தியாவின் முக்கிய கனவுகளை எல்லாம் மாற்றிப்போட்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் அலசல்களான, காங்கிரஸ் தோல்விக்கான காரணம், மாயாவதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள், முலயாமின் மீள் வருகை என்பதை எல்லாம் விவாதப்பொருள் அல்ல இங்கு.  இந்த தேர்தல் முடிவு, இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்கும் என்பதை மட்டுமே பொருளாக கொள்கிறேன்.

காங்கிரஸ் தயவின்றி சமாஜ் வாடி ஆட்சி அமைப்பதால், இன்றைய தேதியில், பலமான மாநில கட்சியாக சமாஜ்வாடியும் உருப்பெற்றிருக்கிறது.  தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் தத்தம் பெயரையும் பெருமையையும் போட்டி போட்டு கெடுத்துக்கொண்டதில், இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இச்சூழலில், மாநில கட்சிகள் பரவலாக பெற்றுவரும் வெற்றிகள் சற்று யோசிக்க வைக்கிறது. மாநிலங்களுக்கான அதிகாரங்கள், உரிமைகள் என்கிற நோக்கில், மாநில கட்சிகள் வலுப்பெறுவது ஆதரிக்கக்கூடியது என்றாலும் கூட, இப்போது வெற்றிபெற்றிருக்கின்ற மாநில கட்சிகள் பலவும் மத்திய அரசை குறிவைத்து இயங்குபவை என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இப்போதைய மாநில கட்சிகள் பெற்றிருக்கின்ற வெற்றி குழப்பத்தை தருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலிதளம் கட்சி ஆட்சி அமைத்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் செல்வி. ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜி என பரவலாக முக்கிய மாநில கட்சிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன.

காங்கிரஸ் அரசின் மீதான அதிருப்தி பெருகி வரும் வேளையில், காங்கிரஸுக்கு மாற்றான வலுவான கட்சியாக எதுவும் இப்போது இல்லை. தேசிய கட்சியான பா.ஜ.க சொந்த கட்சியின் பிரச்சனைகளில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இருப்பதாக கருதப்பட்ட செல்வாக்கின் மாயை மெல்ல மெல்ல விலகி வருகிறது.

மற்றொரு தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கத்தை விட்டு விலகி பயணித்து, மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. கேரளம், திரிபுரா, மே.வங்காளம் ஆகிய மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஆழமாக வேரூன்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், பாட்டாளிகள், ஏழை எளிய மக்களுக்கான எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் ஆக்கப்பூர்வமாக எடுக்காமல் பெயரளவிற்கு இயங்கி வருகின்றன.

இது நாள் வரையும் மாநில அளவில் ஆங்காங்கு இயங்கி வந்த மாநில கட்சிகளும் ஒருவாறு தேசிய சிந்தனை இல்லாமல், நம்பிக்கை இல்லாமல் தான் இயங்கி வந்தன.  இவ்வாறான சூழலில் தான் உத்திர பிரதேச தேர்தல் வெற்றியை பார்க்க வேண்டி இருக்கிறது.

பீஹார் மாநிலத்தின் வலுவான தலைவராக, நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். ஒரிசாவில் பிஜு ஜனதா தளம், கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பஞ்சாபில் அகாலி தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் என மாநில கட்சிகள் வலுவாக இருக்கிற கால கட்டம் இது.

அடுத்த ஆண்டு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் விரைவில் எதிர்பார்க்கக்கூடியது, வழக்கமாக தேர்தல் காலங்களில் தோன்றக்கூடிய மூன்றாவது அணி.

மமதா போன்ற வலுவான அரசியல் தலைவர்கள் வேறு வழியின்றி இது வரையும் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்து வருவதாகவே உணரப்படுகிறது. உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் அவரை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தரக்கூடும். ஏற்கனவே மூன்றாவது அணியில் பங்கெடுத்த பாதல், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா போன்றவர்களும், தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி, முலயாம், நிதிஷ் என ஒரு மிகப்பெரிய மாநில கட்சிகளின் கூட்டணியை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அவ்வாறு ஒருவேளை மூன்றாவது அணி தோற்றுவிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தொங்கு பாராளுமன்றம்

அதிகார கைப்பற்றல்களுக்கான போட்டிகள்

யார் தலைவர் என்கிற மோதல்கள்

திறனற்ற நிர்வாகம்

பொருளாதார நிச்சயமற்ற தன்மை

வளர்ச்சி விகித பாதிப்பு

இன்றைக்கு இந்தியா இருக்கும் சூழலில் இதுபோன்ற ஒரு நிலையற்ற அரசியல் சூழலை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்திய தொழில்துறையும், பொருளாதாரமும் என்ன ஆகும் என்பதெல்லாம் இனி வரும் ஒன்றரை ஆண்டுகளை பொறுத்தே அமையும்.


சந்திரபாபு நாயுடு, முலயாம், ஜெயலலிதா, நிதிஷ்குமார் என பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் மூன்றாவது அணியில் அதிகமாக இருக்கும் நிலையில், காங்கிரசும் பாஜகவும் இனியேனும் சுதாரித்து, தத்தம் தவறுகளை திருத்தி, மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற்று வலுவான ஒரு கட்சி ஆட்சி முறைக்கு வழிவகுத்தால் ஒழிய, இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியானதே என கருதுகிறேன்!

Monday, February 6, 2012

Railway Budget 2012 - Expectations of TN


Its February again.. the season of Budgets


Due to the Assembly elections in UP, this year, Budgets will be little delayed and probably Railway Budget may be presented by the Honorable Railway Minister Mr. Trivedi.

As far as Tamilnadu is concerned, so far the Railways have given an average preferences for schemes and new trains. When we have 10 years of Railway Ministers from our state (Mr. A.K Moorthy and Mr. R. Velu) we have introduced many new trains and new schemes. Later there is a delay of executing the projects in Tamilnadu as usual.

Tamilnadu is the Highly Revenue Generating state for Indian Railways and the percentage of malpractices and ticketless travel is too less, compared to the Northern States. Unlike other states, Tamilnadu is the only state in India, which is fully urbanized / semi-urbanized thanks to the prominent rulers who ruled the state with the view of future. In Tamilndau people are moving to every nook and corner of the state almost daily for various reasons like employment, education, business etc., Tamilnadu is the state which is having 10 Cities and 140+ Towns. Thus the occupying level of Railways is higher, in fact over whelming in Tamilnadu. This is why Railways have made an excellent network of Railway Tracks covering all the districts.

Though we are little happy to see the statistics and geographical data bases regarding the traffic of Railways in Tamilnadu, still the demand is too high and the services are too less, leaving the people unsatisfying.

So, what will be the expectations of Tamilnadu from this years Railway Budget. I have tried to summarise few of the major things:

Doubling & Electrifying TPJ-CAPE section to enable more trains at lesser transit period helps the people of southern districts to reach the Capital City. This is a very long pending request, which is not at all ignored but done with very slow pace. Now the electrification works completed upto Madurai, but operations are upto Trichy only. Faster execution of the Doubling and Electrification can help operating more new trains.

Conversion of Broad Guage from Metre Guage tracks are going on several sections and that could be speeded up and to complete within this Financial Year. This includes

1. Podanur / Palakkad – Pollachi – Dindigul

2. Thiruvarur – Thirutturaipoondi – Karaikkudi

3. Madurai – Bodinayakkanur

4. Sengottai – Punalur – Quilon

5. Virudhunagar – Manamadurai

New Trains are Expected in the following routes

1. Chennai – Madurai Day Services (opposite to Vaigai on the same timings from here)

2. Chennai – Tiruchirappalli Morning Intercity Express (Opposite to Pallavan)

3. Chennai – Palani Express (since DDL-PLN BG conversion was already completed)

4. Chennai – Coimbatore Express (via Villupuram – Attur – Salem)

5. Coimbatore – Trivandrum Central Express (Night)

6. Coimbatore – Bangalore – Mysore Express (Night) (via Hosur)

7. Coimbatore – Karaikkal Express (Night)

8. Coimbatore – Rameswaram Express (Night)

9. Coimbatore – Sengottai Express (Night) (via Erode-Karur-Madurai)

10. Madurai – Bangalore Express (Night)

11. Madurai – Mangalore Express (Night)

12. Madurai – Trivandrum Express (Night) (via Tirunelveli)

Electric/Diesel Multiple Units may be introduced on the following routes to transit mass people who are travelling daily. These trains should be shuttle service with regular frequencies and the routes may include

1. Tiruchchirappalli – Kumbakonam

2. Tiruchchirappalli – Madurai

3. Tiruchchirappalli – Karaikkudi

4. Madurai – Karaikkudi

5. Madurai – Palani

6. Coimbatore – Palakkad

7. Coimbatore – Tiruppur – Erode

8. Coimbatore – Mettuppalayam

9. Salem – Hosur

10. Salem – Vellore

11. Salem - Namakkal

New Routes under progress (Salem – Namakkal – Karur) should be quicken to complete in a faster pace

Exploration of New Routes (Coimbatore – Sathiyamangalam – Chamrajnagar; Dindigul – Bathlagundu – Bodinayakkanur; Jolarpettai – Hosur link) should be speeded up

Apart from these, the innovative scheme of Honorable Railway Minister, which is to enable Confirmed Tickets for all those who are booking Tickets and no more waitlisting is an welcomeable one.  This idea can be modified further, based on the Wait Listed Passengers. Depending on the quantum of the passengers either additional coaches or additional train can be rolled out on any particular day to accommodate all the passengers who have booked tickets.

With this the most of the major requests of Tamilnadu may get fulfilled.

Will the Railway Budget satisfy us??

Sunday, January 1, 2012

அதிமுக - இழந்த பெருமையை மீட்குமா?

அதிமுக செயற்குழு

தமிழக அரசியலை பொறுத்தவரை, சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு மிகுந்த சிறப்பு வாய்ந்தது.

அதிமுக தமிழகத்தின் தனிப்பெரும் பலம்வாய்ந்த கட்சி என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை, அந்த கட்சி அதற்கு உரிய அங்கீகாரத்தையும் பெருமையையும் பெறவில்லை என்பது.  அதிமுகவின் இயக்க வரலாறு முறையாக இது வரை பதிவு செய்யப்படாமலேயே போனது ஒரு முக்கிய காரணமாக கருதுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவுக்கு அடுத்தபடியாக மக்களை பற்றியும், சமூகத்தை பற்றியும் தீர்க்கமாக சிந்தித்து பல பல புரட்சிகரமான முன்னோடி திட்டங்களை வகுத்து மாநிலத்தை வலப்படுத்தியத்தில் அதிமுகவின் பங்கு மகத்தானது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது காலத்தில் தமிழகம் வளர்ந்ததை போல, இந்தியாவின் எந்த மாநிலமும் வளரவில்லை என்றே நான் கருதுகிறேன்.

இன்றைக்கும் இந்தியாவில் பரவலாக பயணிக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம், தமிழகம் மட்டும் தான் மாநிலம் முழுமையாக நகர்ப்புறமாக வளர்ந்திருக்கிற மாநிலம் என்பது. (மற்ற எல்லா மாநிலங்களிலும் பல நகரங்கள் மட்டுமே நகர்ப்புறமாக ஆகி இருக்கும், பெரும்பாலான பகுதிகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும்.)

அதிமுகவின் அரசு பணிகள் சமூக திட்டங்கள், மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை என்பதெல்லாம் இப்போதைய எனது பதிவுக்கு சம்மந்தமர்ரவை. நான் அதிமுக என்கிற அரசியல் இயக்கத்தை பற்றி மட்டுமே இங்கே பதிய விரும்புகிறேன்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தவரை, திமுகவின் பாதையை தான் அவர் தனது அதிமுகவுக்கும் பின்பற்றினார்.  உட்கட்சி ஜனநாயகம், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கான முக்கியத்துவம், கட்டுக்கோப்பான கட்சிக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள், மக்களிடம் நேரடியான தொடர்பு என திமுகவின் பாதையிலேயே பயணித்த அதிமுகவின் பயணம், புரட்சி தலைவரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தலைமைக்கு வந்தபின் முற்றிலுமாக மாறிவிட்டது.

முக்கியத்துவம் பெற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரும் கட்சியை விட்டு புறக்கணிக்கப்பட்டனர், இன்னும் சொல்வதானால் கட்சியை விட்டே வெளியேற்றப்பட்டனர். தான் சொல்வதை மட்டுமே கேட்கக்கூடிய, தவறான முடிவுகளை எடுத்தாலும் அதை அப்படியே கேட்கக்கூடிய நபர்களை மட்டுமே பதவியில் அமர்த்தினார்.  அப்படி அமர்த்தப்படும் நபர்களும் நிரந்தரமானவர்கள் அல்ல என்பது மட்டும் தான் அங்கே நிரந்தரமான உண்மை. 

சசிகலா

1982 முதல் தனது தோழியாக இருக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் கட்சியையும் அரசையும் விவ்வுவிட்டு ௧௫ ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் பெருமையை வீணடித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டை ஜெ. மீது சுமத்துவதற்கான சரியான காலகட்டத்தை எதிர்பார்த்து அரசியல் விமரிசிகர்கள் காத்திருக்கும் வேளையில், ஒரு அதிரடியை அரங்கேற்றி அனைவரையும் இனிய அதிர்த்திச்சிக்கு ஆளாக்கி இருக்கிறார்.

 இத்தனை காலம் நிழல் அரசை நடத்திவந்ததாக கருதப்பட்ட சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியிலிருந்து முற்றாக நீக்கி தான் எப்போதுமே கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டவர் என காட்டி இருக்கிறார்.

முன்பே இதுபோலோருமுறை சசிகலாவை அவர் நீக்கியதும், பின்னர் இணைத்துக்கொண்டதும் தமிழகம் அறிந்த வரலாறு.  சசிகலா நீக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில், சசிகலாவை விமரிசித்த அனைத்து அதிமுகவினரும், மீண்டும் சசிகலா அதிமுகவுக்குள் வந்தபின்னர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர் அல்லது ஒதுக்கப்பட்டனர். அதனால், இப்போதைய சசிகலா நீக்கத்தை பற்றி கருத்து சொல்ல கூடிய நிலையில் அதிமுகவில் யாரும் இல்லை.  மீண்டும் சசிகலா கட்சிக்கு வந்தால் தங்கள் நிலை என்ன ஆகும் என்பதை அவைகள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இப்படியான ஒரு மவுன வெதும்பல் கட்சியில் நிலவி வருவதை ஜெ. உணர்ந்திருப்பதை அவரது செயற்குழு பேச்சு தெரிவிக்கிறது.  "கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இப்போது கட்சியில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு, மீண்டும் நாங்கள் கட்சிக்கு வருவோம் என்று, பேசிவருவதை அறிவேன். அப்படி தலைமை மீதே சந்தேகத்தை விதைக்கும் அவர்களது செயலையும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களையும் மன்னிக்கவே மாட்டேன்" என உறுதியாக தெரிவித்து இருப்பது, அதிமுகவினரை மட்டும் அல்ல, மொத்த தமிழகத்துக்கே ஒரு மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறேன்!

அதிமுக - தொண்டனின் பார்வையில்


அதிமுக இயக்கத்தை பொறுத்தவரை தமிழகத்தின் மிக பெரும் தொண்டர்பலம் உள்ள கட்சியாகும். அப்படியான தொண்டர்கள் நீண்ட காலமாக உரிய அங்கீகாரம் கிடைக்காமல் மனம் வேதும்பிக்கொண்டிருப்பதை இது வரை தலைமை கண்டு கொள்ளவில்லை. திமுகவில் எல்லா தரப்பினருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் சிபாரிசுகளின் அடிப்படையிலும், முகஸ்துதியின் அடிப்படையிலும் மட்டுமே அங்கீகாரம் கிடைத்து வருவது, அடிப்படை தொண்டர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உற்பத்தி செய்து வந்தது.

எல்லா தரப்பினருக்கும் மனதின் ஆழத்தில் இருக்கிற ஒரு எண்ணம் என்பது, "ஜெ. திறமையானவர், மக்களை பற்றியும் கழகத்தை பற்றியும் தொண்டர்களை பற்றியும் அதிக அக்கறை கொண்டவர். எம்.ஜி.ஆரின் அதே குணநலன்களை கொண்டவர். இடையில் வந்த சிலரால் தான் அவர் மாறிவிட்டார். இப்போது அவர்கள் நீக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் கழகத்துக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உரியதை செய்வார்" என்கிற எண்ணமாகும். அதை முற்றிலுமாக தவறு என்றும் சொல்லிவிட முடியாது, முற்றிலுமாக உண்மை என்றும் சொல்லிவிடமுடியாது.

இப்போதைய அதிமுக அடித்தள தொண்டன், சரியான உறுதியான தலைமை இல்லாத காரணத்தால் மனம் குழம்பி இதர கட்சிகளிலும், இயக்கங்களிலும் சிதறி கிடப்பதும், மற்றும் சிலர் மனமின்றி எம்.ஜி.ஆருக்காக கட்சியில் தொடர்ந்து கொண்டிருப்பதுமாக கழிந்துகொண்டிருக்கின்றனர்.

இப்போதைய ஜெ.வின் மனமாற்றம் நிலையானதாக இருந்து, கட்சியினருக்கு உரிய அங்கீகாரத்தை செய்தால், இயக்கத்தில் இருந்து சென்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தவறான தகவல்களால் நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் மீண்டும் விரும்பி வந்து இணைவார்கள் என்பதில் மாற்று கருத்து எதுவும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்பு

அதிமுக வலுவடைவது மட்டுமே தமிழகத்துக்கு நன்மையை தரும் என்பது பொதுவான ஒரு கருத்து. அதன் முக்கியமான காரணம் திமுகவின் நிலைப்பாடுகளில் சமீப காலமாக நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை.  தமிழக மக்களை பற்றி உணமையிலேயே கவலைப்படக்கூடிய, மக்களிடம் ஆதரவை பெற்றிருக்கிற வேறு கட்சிகள் எதுவும் இப்போது இல்லை.

அதிமுக, இதுவரை செய்த அனைத்து தவறுகளை எளிதாக மன்னித்து விட முடியும் ஒரு தொண்டனாலும், பொதுமக்களாலும். எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருப்பது, அதிமுக மீண்டும் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கவேண்டும், தமிழகத்தின் தமிழகமக்களின் பிரதிநிதியாக தனது குரலை வழக்கம்போல உயர்த்தி ஒலிக்கவேண்டும் என்பது தான்.

நடக்குமா?


Saturday, December 31, 2011

திமுகவின் குடும்ப அரசியல்!



இணைய தளங்களிலும் அரசியல் அரங்கத்திலும் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் திமுகவின் குடும்ப அரசியல் என்பது. திமுக என்றாலே வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்கிற ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை!

வாரிசு முறை என்பது உலகம் முழுதும் அனைத்து துறைகளும் இருக்கக்கூடிய ஒன்று தான். இந்தியாவும் தமிழகமும் அதில் விதி விலக்கல்ல. தொழில்துறை, விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளிலும் வழி வழியாக வாரிசு முறை கொண்டு வரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் பல கட்சிகளிலும் நீண்டகாலமாக நிலவி வரக்கூடியது தான் குடும்ப அரசியல்  / வாரிசு அரசியல் என்பது. இதில் விதி விலக்கான கட்சிகளே இல்லை. தமிழகத்தை எடுத்ஹ்டுக்கொண்டால், திமுக பெரும் இயக்கமாக இருப்பதால் அது முன்னிலைப்படுத்தப்படுகிறது.  அதை சற்று விரிவாக பார்க்கலாம்!


குடும்ப கட்சியா கட்சி குடும்பமா?

திமுக என்பது குடும்பத்தை கட்சியாக கொண்டது என்கிற கருத்து ஊடக துறையினராலும் பிற அரசியல் இயக்கங்களாலும், அரசியல் அறியாத பல எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எனது பார்வையில் திமுக கட்சியை குடும்பமாக கொண்டது எனவே கருதுகிறேன்.

கழகம் 1949 ல் துவங்கப்பட்டு பல்வேறு கடினமான காலகட்டங்களையும் கடந்து வந்ததும், தமிழகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் திமுக ஆற்றிய சேவைகள், அதற்கான போராட்டங்கள், கைதுகள் என பலவும் எல்லோரும் அறிந்த ஒன்றே. எனவே அதை பற்றி எல்லாம் விவாதிக்காமல் குடும்ப அரசியல் என்கிற ஒன்றை மட்டும் இப்போது விவாதிப்பது தகும் என கருதுகிறேன்.




திமுகவில் இப்போது முதன்மை குடும்பத்தின் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே சமீபத்தில் தான் பொறுப்புக்களும் பதவிகளும் கொடுக்கப்பட்டன.

ஸ்டாலினை பொறுத்த வரை கட்சியில்
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைகளை அனுபவித்து படிப்படியாக கிளைக்கழகம், இளைஞ்சர் அணி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர், கட்சியின் பொருளாளர், துணை பொதுசெயலாளர் என முன்னேறியவர். ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு தாமதாமாக தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என மாற்று கட்சியினரும் கருத்து தெரிவித்தது உண்டு.

சரி! அப்படியானால் கட்சிக்காக உழைத்தவர்களை கண்டுகொள்ளவில்லையா கழகம்?

குடும்ப வாரிசுகளுக்கு பதவிகளும் பொறுப்புக்களும் கொடுப்பதற்கு முன்பாக பல காலமாகவே கழகத்துக்காக பாடுபட்டவர்களை உரிய முறையில் கவுரவித்து வந்திருக்கிறது திமுக.

மிக சில உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தங்கபாண்டியனின் பிள்ளைகள்.  பரிதி இளம் வழுதி இளம்பரிதியின் மகன். பழக்கடை ஜெயராமனின் மகன் தான் ஜெ. அன்பழகன். கீதா ஜீவன் கருப்பசாமி பாண்டியனின் மருமகள்.   பூங்கோதை அருணா, ஆலடி அருணாவின் மகள். ஐ.பி.செந்தில் திண்டுக்கல் பெரியசாமியின் பிள்ளை.  வானூர் ஏ.ஜி சம்பத் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.கோவிந்தசாமியின் மகன். இப்படி எல்லா மாவட்டங்களிலும் பலப்பல கழக மறவர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும், பதவியும் கொடுத்து அழகு பார்த்ததற்கு பின்னர் தான் முதன்மை குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மொத்த கழகமும் குடும்பம், கழக உறுப்பினர்கள் எல்லோருமே குடும்பத்தினர் என்கிற பார்வை இருந்ததால் தான் இத்தனை முக்கிய பிரமுகர்கள், கொள்கை பிடிப்போடு திமுகவில் இருந்து வருகின்றனர் என்பதை எல்லா கட்சியினருமே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


உட்கட்சி ஜனநாயகம்!

திமுகவில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், உட்கட்சி ஜனநாயகம்.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சியோடு ஒப்பிட்டு பார்த்தாலும், முறையாக தேர்தல் நடத்தி சீராக பல ஆண்டுகளாக இயங்கி வருகிற ஒரு இயக்கம் திமுக.  மேலும் தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக இருப்பதும் திமுகவில் தான்.


 இன்றைய தேதியில் பார்த்தால் கூட, பொன்முடி, துரை முருகன், ஆற்காட்டார், அன்பழகன், வீரபாண்டியார், மூக்கையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூரார் என முக்கிய மூத்த தலைவர்களும், பிராந்திய அளவில் மாவட்ட அளவில் முக்கிய பிரமுகர்களும் உரிய முக்கியத்துவத்தொடும் பிரபல்யத்தொடும் இருப்பதை எல்லோரும் அறிவர்.

இவர்கள் சுயமாக தங்கள் கருத்துக்களை வெளியிடவோ, பொதுக்கூட்டங்களில் சுந்தந்திரமாக கருத்து சொல்வதற்கோ எந்த தடையும் விதிக்கப்பட்டு இருக்க வில்லை. மாற்று கட்சியில் இருந்து வந்து இணைந்தவர்களுக்கும் அதே முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது!

ஒரு ஒப்பீட்டுக்காக தமிழகத்தின் பிற கட்சிகளை எடுத்துக்கொள்வதானால், பெரும்பாலான காட்சிகளில் இரண்டாம் கட்ட செயல் தலைவர்கள் என்பதே இல்லை.

மதிமுக, பாமக, நாம் தமிழர், இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போன்ற எந்த கட்சியாக இருந்தாலும், தலைவர், தலைவர் குடும்பம் தவிர வேறு யாரையும் பிரபலமாக ஆக்க விடுவதில்லை. எல்லோருமே அடக்கி வைக்கப்பட்டவர்கலாகவே இருந்து வருவதை நான் கண்கூடாக கண்டு வருகிறோம்.


அதிமுகவை பொறுத்தவரை இரண்டாம் கட்ட தலைவர்கள் மிக சிலர் இருந்தாலும், அவர்களால் சுயமாக செயல்பட முடிவதுமில்லை, அவர்கள் முக்கியத்துவபடுத்த படுவதும் இல்லை. அப்படி ஒரு வேலை முக்கியத்துவத்தை நோக்கி முன்னேருகையிலேல்லாம் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பல பல உதாரணங்கள் இருந்தாலும், திருநாவுக்கரசர், எஸ்.டி.எஸ், சாத்தூரார், முத்துசாமி என குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிலர்.

பொதுவான நோக்கில் பார்க்கையில், திமுக தனது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதோடு, உரிய பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது, இரண்டாம் நிலை செயல்வீரர்களாக அவர்களை மேம்படுத்துகிறது, உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறது என்பதை அரசியல் அறிந்த விமர்சகர்கள் யாவரும் அறிவர்.

ஏன் இப்போது இந்த பதிவு?

இன்றைக்கு இணைய தளங்களிலும் பிற ஊடகங்களிலும் திமுகவை குறித்து ஒரு தவறான சித்தரிப்பு இருந்து வருகிறது. காரணம் அரசியல் வரலாறு முழுமையாக அறியாத, அறிய முயலாத பல பல எழுத்தாளர்கள் பெருகி விட்டதும், அப்படியான எழுத்தாளர்களின் சொற்கள் வேதவாக்காக கருதப்பட்டு வருவதும், அதில் சில முக்கிய எழுத்தாளர்களின் கருத்துக்கள் பிரபல ஊடகங்களில் வெளியாவதும், உண்மையின் உண்மை நிலையை உண்மையாக உரைத்தாமல் போய்விடுகிறது.  எனவே உண்மையில் எது தான் உண்மை என சீர்தூக்கி பார்க்க விரும்பும் மிக சிலருக்கான பதிவாகவே இதை பதிந்து அமைகிறேன்.

Thursday, December 1, 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. சமீபகாலமாக அதிகம் அடிபடும் வாக்கியம் இது தான்.

கடந்த வாரம் மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து முடிவு எடுத்தது. அது முதலே நாடு முழுதும் பெரும் அளவிலான விவாதங்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் தொடங்கி இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் அளவிலே சென்று கொண்டிருக்கிறது. உண்மையில் என்ன தான் பிரச்சனை?

மத்திய அரசு முடிவு

பொருளாதார சீர்திருத்தத்தின் படிப்படியான அமலாக்கத்தின் ஒரு கட்டமாக சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு கடந்த வாரம் முடிவு எடுத்தது. 51 % வரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை எடுத்த முடிவு, மத்திய அரசின் முடிவு தான் எனவும், மாநிலங்கள் விருப்பப்பட்டால் அதனை அமல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனி வணிகத்தில் 100 % வரையும் பல்பொருள் வணிகத்தில் 51 % வரையும் அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் சில்லறை வணிகத்தின் நிலை.

பொதுவாக இந்தியாவில் பாரம்பரியமாக மளிகை மற்றும் சிறு கடைகளை குடும்ப தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். இப்போது தேவைகள் அதிகமானதாலும், கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனி குடித்தனங்கள்  பெருகி விட்டதாலும், கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. தினசரி தேவைகளுக்கான பொருட்கள் பெரும்பாலும் இவ்வாறான மளிகை கடைகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று விற்கும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை பெற்று விற்பதால் விலை கூடுதலாகவும், பொருட்கள் சில சமயங்களில் நாள்  பட்டதாகவும் இருப்பதை தவிர்க்க முடிவதில்லை. இது போன்ற நிலையை தவிர்க்கவும் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கே கிடைப்பதற்காகவும் சூப்பர் மார்க்கெட்டுகள் தோன்ற துவங்கின. எனினும் அவை பாரம்பரியமான மளிகை கடைகளின் செல்வாக்கை பெற முடியாமல் போனது.

இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்கள் சற்று தாமதாமாக மளிகை பொருட்களுக்கான தேவையின் விஸ்வரூபத்தை அறிந்து கொண்டனர். அதன் விளைவாக மிக பெரிய வர்த்தக விற்பனை நிறுவனங்களை, ரிலையன்ஸ், பிர்லா குழுமங்கள் துவக்கின. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. நாம் உதாரணத்துக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் பிரெஷ் 

அம்பானி குழுமத்தில் இருந்து துவக்கப்பட்ட ரிலையன்ஸ் பிரெஷ் நிறுவனம் பல முன்னோடியான வர்த்தக முறைகளை கையாண்டது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்வது, தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக பல்வேறு நகரங்களிலும் இருக்கும் தங்கள் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்வது பிரம்மாண்டமான கடைகளை நிறுவி டீஸ்பூன் முதல் டெலிபோன் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்க செய்வது போன்றவற்றால், தரமான பொருட்களை குறைவான விலையில் விற்கமுடிந்து மக்களிடம் ஆதரவை பெற்றது.

சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள விவசாய பொருட்கள் கொள்முதல் நிலையத்திற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் இடை தரகர்களின் செலவுகள் இன்றி விலை குறைவாக கிடைப்பதாகவும், விவசாயிகளுக்கும் கூடுதல் தொகை கிடைப்பதாகவும் சொன்னார்கள்.  பல மாநிலங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்கு குறிப்பிட்ட விவசாயிகளிடம் ஒப்பந்தமே போட்டு கொள்கிறார்கள். இதன் மூலம் , விளைச்சலுக்கு பின்னர் தங்கள் விலை பொருட்களை விற்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம் இல்லாமல் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த முடிகிறது. தரமான உற்பத்தி, உறுதியான வியாபார ஒப்பந்தம், அவ்வப்போது முன்தொகை போன்றவை விவசாயிகளின் விளைச்சல் பளுவை குறைக்கிறது. இடைத்தரகர் இல்லாததால் லாபமும் அதிகரிக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நாடு முழுவதுமுள்ள தங்கள் விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதால் ஒரு சிறப்பான Supply Chain System கொண்டு செயல்பட முடிகிறது.  இப்படி தான் பெரிய வணிக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க இன்னொரு நிறுவனம் பிக் பசார். இவர்களும் மொத்த கொள்முதலை விவசாயிகளிடமிருந்தும், உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெற்று விற்பனை செய்து வருகிறார்கள். உற்பத்தியாளர்களும், மொத்தமான கொள்முதல் என்பதால் விலையை அபரிமிதமாக குறைத்து உற்பத்தி செய்து தர முடிகிறது. மார்கெட்டிங் தலைவலியும் உற்பத்தியாளர்களுக்கு இல்லாமல் அவற்றை இது போன்ற வர்த்தக நிறுவனங்களே ஏற்று கொள்கின்றன.

அந்நிய நேரடி முதலீடு - அவசியம் என்ன

இப்போதைய சூழலில் பெரிய வணிகங்களை செய்யக்கூடியவர்களாக ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற மிக சில நிறுவனங்களே இருக்கின்றன. சுபிக்ஷா, திரிநேத்ரா, போன்ற பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கி போய்விட்டன. கிட்டத்தட்ட மறைமுகமாக ஒரு ஒருமுகத்தன்மை (Monopoly) இந்த வியாபாரத்தில் நிலவ தொடங்கி விட்டது.  எனவே எல்லாவரும் இந்த தொழிலே ஈடுபடவேண்டும் என்கிற நோக்கத்திலும், வணிக விற்பனை பரவலாக்கப்படவேண்டும் என்கிற எண்ணத்திலும் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதன் மூலம் அந்நிய பங்குதாரர்களை கொண்டு பெரிய வர்த்தக நிறுவனங்களை இந்தியர்கள் ஏற்படுத்தி கொள்ள முடியும். அதாவது நம்மிடம் தொகை குறைவாக இருப்பதால் ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தை தொடங்க முடியவில்லையே என ஏங்கும் பல இந்தியர்கள், இனி வெளிநாட்டு நிறுவனங்களை துணையாக கொண்டு பெரும் அளவிலே கடைகளை நிறுவ முடியும்.  அவ்வாறு பெறப்படும் முதலீடு என்பது 51 % க்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பது தான் மத்திய அரசின் முடிவு.  இது சில்லறை விற்பனையில் தற்போது இருக்கும் ஒருமுகத்தன்மையை உடைத்து பன்முக தன்மையை ஏற்படுத்துவதோடு, எவர் வேண்டுமானாலும் இத்தொழிலில் இறங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இதன் விளைவுகள்

அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு புதிதல்ல.  ஏற்கனவே ஆட்டோமோட்டிவ் துறையில் இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹிரோ நிறுவனம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ ஹோண்டா நிறுவனமாக அமைத்தது ஒரு உதாரணம். அவ்வாறே, டிவிஎஸ் சுசுகி, எஸ்கார்ட்ஸ் யமஹா, கவாசாகி பஜாஜ், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் மிட்சுபிஷி என பல பல நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து வியாபாரத்தை நடத்தி வருகின்றன. இதன் மூலம் போட்டி அதிகமாகி குறைந்த விலையில் தரமான பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்க துவங்கின.

சில்லறை விற்பனையை பொறுத்தவரை இது தான் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கும் அனுமதி என்பதால் பலத்த எத்ரிப்பு கிளம்பி இருக்கிறது. இவ்வாறான அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் காலூன்ற விட்டு, பாரம்பரியமான மளிகை வியாபாரத்தை சிதைத்து விடும் என்கிற அச்சம் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற மிக பெரிய நிறுவனங்களும்,  ஊர் சார்ந்த வட்டார டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இருந்தாலும் மளிகை கடைகளும் சந்தைகளும் இப்போதும் இயங்கி கொண்டு தான் வருகின்றன. எதுவும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.  ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து இப்போது பரவலாக்க பட்டு இருக்கும் சில்லறை விற்பனை துறை, கூட்டு தொழிலாக ஏற்படுத்தப்படுகிறது என்கிற வித்தியாசத்தை தவிர வேறு இல்லை.

நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால், நாம் அச்சப்படும் அளவுக்கு இந்த அந்நிய முதலீட்டு முடிவில் எந்த அம்சமும் இல்லை.

அரசு நிறுவனங்கள்

அரசே என் நேரடியாக விற்பனை நிலையங்களை ஏற்படுத்தக்கூடாது என்கிற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக தோன்ற கூடியதே. இந்த விஷயத்தில் நான் உதாரணத்துக்காக தமிழகத்தை எடுத்து கொள்ள விரும்புகிறேன்.

விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக வேளாண் விலைபொருள் விற்பனையகம், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. மளிகை பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (TAmilnadu State MArketing Corporation - TASMAC) தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலமாக சிந்தாமணி, அமுதம் போன்ற சிறப்பங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இது தான் தமிழகத்தை பொறுத்தவரை சப்ளை செயின் பலமாக இருந்த சில்லறை விற்பனை அங்காடி (ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் வரும் வரை).

விவசாயிகள் இடை தரகர்களிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைவதை தடுக்கவும், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே இருந்து விலையை கூட்டி வந்த இடை தரகு முறையை ஒழிப்பதற்காகவும் உழவர் சந்தைகளை தமிழக அரசு அமைத்தது. இது விவசாயிகளுக்கு மிக வசதியான ஒரு திட்டமாக செயல்பட்டது.

எனினும் மக்கள் எதிர்பார்க்கும் அளவில் மிக பிரம்மாண்டமான கடைகளை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தும் அளவுக்கு அரசுடன் நிதி ஆதாரம் இல்லை. அவ்வாறு நிதி ஆதாரம் இருந்த பெரும் நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த தொழிலில் எல்லாவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே அந்நிய முதலீடு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

இதன் நன்மைகள்:

மிக பெரிய அளவிலான வியாபார போட்டி, ஒருமுகத்தன்மை உடைத்து பன்முக தன்மை நிலை நாட்டப்படுதல், நேரடி கொள்முதல், விவசாயிகள் உற்பத்தியாளர்களின் உற்பத்திக்கு ஏற்ற விலை, நுகர்வோருக்கு குறைவான விலையில் தரமான பொருட்கள், மிக சிறந்த விநியோக கட்டுமானம், அனைத்து நகரங்களிலும் வணிக வளாகங்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதன் பாதகங்கள்:

அந்நிய நிறுவனம் பின்னர் தங்கள் பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வது, விவசாய பொருட்கள் இறக்குமதி, மளிகை போன்ற சிறு வியாபாரிகளின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை, தரகு தொழிலில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வாதார கேள்விக்குறி, நிலைநின்றபின் விலையை அவர்கள் இஷ்டத்திற்கு நிர்ணயித்து பெரும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஆகியவை இதன் பாதகங்களாக உணரப்படுகின்றன.

அரசு செய்யவேண்டியது.

மொத்த விற்பனையில் 60 % கொள்முதல் உள்நாட்டில் இருந்து செய்யவேண்டும் என வலியுறுத்துவது, நகரங்களில் இவ்வாறான வணிக வளாகங்கள் அமைப்பதில் ஒதுக்கீடு கட்டுப்பாடுகள் கொண்டுவருவது ஆகியவை அனைத்து தரப்பினரும் சமமான போட்டியில் ஈடுபட வாய்ப்பு வழங்கும்.

எனது உரை:

எப்படி பார்த்தாலும், இந்திய பொருளாதாரத்திற்கும், நுகர்வோருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் நன்மைகளை தரக்கூடிய திட்டம் எனினும், தமிழகத்தின் பாரம்பரிய மளிகை கடைகள், சந்தைகள், போன்றவற்றை அழித்து விடக்கூடிய ஆபத்தும், சிறு வணிகர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையம் வர வாய்ப்பிருக்கிறது.

அந்நிய நேரடி முதலீடு தேவைப்படும் போக்குவரத்து, சாலைகள் கட்டுமானம், விமான சேவை என பல துறைகள் ஏங்கி கொண்டிருக்க மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அவசரம் ஏன் என்பது புரியவில்லை. இன்னும் சற்று காலம் பொறுத்து இருந்திருக்கலாம் என கருதுகிறேன்.

Printfriendly