Thursday, December 31, 2009

புத்தாண்டு சிந்தனைகள்


வழக்கமா எப்பவும் செய்யுற அதே விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமா செய்யனும்ன்கறது இந்த புது வருஷத்து தீர்மானங்களுள் ஒன்னு!

ஒவ்வொரு வருஷமும் தீர்மானங்கள் எடுக்கறதும், அதை ஒத்திவெக்கறதும், பின்னர் கைவிடுறதும் ரெகுலர் மேட்டர் ஆயிருச்சு!

அப்பா இந்தவருஷத்துக்கான தீர்மானம் இதுன்னு சொல்லிட்டு ரெண்டே நாளில் அதை மறந்து வழக்கமான வேலைகளில் வழக்கமான முறையில் ஈடுபடறது தானே நம்ம பொழப்பே??

சரி, இந்த வருஷத்துக்கு என்ன தீர்மானம் பண்றதுன்னு நேத்து முழுக்க யோசிச்சு பாத்து, மேலே சொன்னபடி, எப்பவும் செய்யறதையே கொஞ்சம் வித்தியாசமா இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்!  அது தானே ஈசி?

Learning from the Past and Continuous Improvement தான் வாழ்க்கை! ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி உக்காந்துட்டு இந்த வருஷம் என்ன எல்லாம் தப்புக்கள் பண்ணினோம், அந்த தப்புக்களை அடுத்த வருஷம் எப்படி தவிர்க்கறது, அப்படி தப்புக்கள் வராம எப்படி தற்காத்துக்கறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?  எந்த ஹோட்டல்லே  இன்னைக்கு என்ன பார்ட்டி, ஸ்பெஷல் கெஸ்ட் யாரு, பீஸ் என்னன்னு அலைஞ்சு திரியறதுக்கே நேரம் பத்தமாட்டேங்குது!

இப்போ புதுசா கொலம்பஸ் மாதிரி ரூட்டு தேடி அலையணும்!  காமராஜர் சாலை ஈசி ஆர் சாலை ரெண்டிலேயும் வாகன போக்குவரத்துக்கு இன்னைக்கு ராத்திரி தடா!  கால்நடையா(!) போயிக்கவேண்டியது தான்.

அந்த கஷ்டத்தை விடுங்க... நாம புத்தாண்டை பத்தி புலம்பலாம்!

ஒருபக்கம் நம்ம பிரண்டு ஒருத்தரு, இன்னும் ரெண்டு வருஷத்திலே உலகமே அழியப்போகுதாம் மச்சான், அதனால் எவ்வளவு என்ஜாய் பண்ணணுமோ பண்ணிக்கோன்னு சூதானமா அடுவைசு கொடுத்துட்டு பறந்துட்டாரு!  ஆனா புதுசு புதுசா வர்ற முதலீடுகளையும் வளர்ச்சி திட்டங்களையும் பாத்தா உலகம் அழியும்ங்கற நம்பிக்கை சுத்தமா எனக்கு இல்லை.  அதனால் நிதானமாவே யோசிப்போம்!

2009 எனக்கு ரொம்ப மறக்கமுடியாத வருஷம்!  எதையெல்லாம் நல்லா பண்ணனும்னு நெனச்சேனோ அதையெல்லாம் அக்ஷரம் பிசகாம சொதப்பி தொலைச்சேன்.  நிறைய பயணங்கள், நிறைய செலவுகள், நிறைய குழப்பங்கள், நிறைய நஷ்டங்கள், நிறைய சங்கடங்கள்ன்னு நெகடிவ் விஷயங்கள் அதிகமா இருந்தது.

இதுக்கு, சனி சரியா உக்காரலை, ராகு ராங்கா நிக்கிறாரு, கேது எது சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாருன்னு ஏகப்பட்ட அலப்பறை வேற.  அதுக்கு பரிகாரம் பண்ணினா அவங்க எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்கன்னு வேற சொன்னாங்க!  இப்படி பரிகாரம் பண்ணியே தப்பை திருத்திக்கலாம்னா நிறைய பரிகாரம் பண்ணலாமேன்னு தோணிச்சு!

இந்த அஜால் குஜால் வேலையெல்லாம் தூக்கி தூரப்போட்டுட்டு, ஒழுங்கா எதை எப்படி செய்யணுமோ அதை அப்படி தெளிவா திருத்தமா செஞ்சு பாத்தா என்னன்னு ஒரு யோசனை. 

2010 இல் அதை அமல்ப்படுத்திட்டு அதன் சாதக பாதகங்கள் பத்தி அடுத்த வருஷம் இதே நாள் இதே நேரம் புலம்பி வெக்கறேன்.

நல்லபடியா புத்தாண்டு வந்து எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும்! என்ஜாய்!  

Wednesday, December 30, 2009

தமிழக தொழில் துறை !



தமிழகத்தில்  துறையின் அதீத வளர்ச்சி அனைவராலும் அண்ணாந்து பார்க்கப்படும் உயரத்தை உடையது.  மிக மிக அபரிமிதமான தொழில் வளர்ச்சி இந்த குறுகிய காலத்திலேயே வந்து நிறைந்து இருக்கிறது!

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஹோசூர் ஆகியவை தான் தொழில் மையங்களாக இருந்தன.  வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக சமீபத்தில் தொழில் வளம் வரபெற்ற வரம் பெற்றன. இப்போது பின் தங்கிய பகுதிகளுக்கும் தொழில் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரிய வாய்ப்பு உள்ளதால், திருவண்ணாமலை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தொழில்மயம் ஆக்க முனைந்து இருக்கிறது தமிழக அரசு! வரவேர்கப்படவேண்டிய முயற்சி தான் ஒரு வகையில்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு புதிதாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறது. காண்க http://investingintamilnadu.com.  இந்த தளத்தில் இருக்கும் பெரும்பான்மையான தகவல்கள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகள்.  இத்தனைக்கும் கடந்த வாரம் தான் இந்த இணைய தலமே துவக்கப்பட்டது.  துவக்கும்போது சமீபத்திய தகவல்களை இணைத்து துவக்கி தொலைத்து இருந்தால் முதலீடு செய்ய வருவோருக்கு உதவியாக இருந்திருக்கும்.. இத்தனைக்கும் சென்னை தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக பெருமை பேசிக்கொண்டு வேறு இருக்கிறோம்.

2004-05 ஆம் ஆண்டைய புள்ளி விவரங்களை அள்ளி தெளித்து உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த இணைய தளம் முதலீடு செய்வோரின் கொஞ்சநஞ்ச ஆர்வத்தையும் முடக்கி போட்டுவிடக்கூடும்.

அதுபோகட்டும், இதுவரை முதலீடு செய்திருப்போரின் நிலை என்ன??

அமைதியான மாநிலம், ஆக்கப்பூர்வமான தொழிலாளர்கள், கடின உழைப்புக்கும், தெளிந்த விசுவாசத்துக்கும் பேர் போன மக்கள், நிலையான பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து வசதி என்று பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு இப்போது ஒட்டுமொத்த பேரிடியாக வந்து சேர்ந்தது மின்வெட்டு.  சென்னையில் இரண்டு மணிநேரம், பிற பகுதிகளில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் வரை.  இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு, நஷ்டம் போன்ற பலவற்றை பற்றி விரிவாக தனியே விரிவாக பேசவேண்டிய அளவுக்கு இருக்கிறது தற்போதைய முதலீட்டாளர்களின் நிலை.

வளர்ந்துவரும் பொருளாதார சூழலில் புதிய புதிய முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலமாக தமிழகம் மிளிருவதர்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்து செய்யவேண்டும்.

அதுவரை "புதிய" இணைய தளத்தை யாரேனும் திருத்த முனையுங்களேன்!

ஹெல்மெட் இம்சைகள்


நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம்.  நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு. எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது வண்டி.

தண்டலம் தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு.  அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில் என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட் எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால் கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார் ஆயிருச்சு.  முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு.

தப்பு என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே??  ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது.

அது பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க் அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங் வருமே... தலைவலி!!  மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட் என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.

இன்னொரு அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு.  பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம.  சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம்.  எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற நம்ம ஜனங்களும் தெரியாது.  ரெம்ம்ம்மம்ப  கஷ்ட்டம்ம்ம்ம்..

மழை காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.

இது தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற வலிகள் இனாம்.  என்ஜாய்!

சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்?  ஆமாம் கட்டாயம் தான்.

சாலை விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது.  அதை தடுக்கணும்னா என்ன செய்யணும்??

என்ன சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது.. வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம் செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???

இல்லீங்க...நீங்க எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்.. அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான் போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும் ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ  இதை எல்லாம் எதுவும் செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்!  இது தான் சட்டம்.

ஆக்சுவல்லா.. இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு.  அதாவது விபத்துக்களை குறைக்கறது பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால் ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு போட்டுச்சு நீதிமன்றம்.  இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை.  தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?

சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!

16-09-2005 அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும்.  டூ வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால் தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது.  ஹெல்மெட் என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.

ஆனா எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை.  அப்படி எந்த நிறுவனமும் கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை பத்தி கவலையே படலை.  பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை.  அதுக்காக வாதாட யாருமே இல்லை.

இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும் ஒரு உத்தரவை  போட்டுது. கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு.  அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.

இப்படியான சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு.  அவரை மக்கள் நல விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை!  அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும் பெரிசா எடுத்துக்கலை!

இன்னைக்கு எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க?? சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்?  (எல்லா சட்டத்தையும் அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது)

சரி... இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள் குறைஞ்சுதா??  இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா குறைஞ்சிருக்கு!

அரசோட கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால் ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை.  ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை.   சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும்.  சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள் இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.

அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!


Sunday, December 27, 2009

சாலை பாதுகாப்பு வார விழா!

சாலை பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது! வரும் ஜனவரி மாதத்துக்கான விழா ஏற்பாடுகள் இப்போதே களை கட்ட துவங்கி விட்டது.

அந்த ஒரு வாரம் மட்டும் (!) சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வர்ணங்கள் பூசுவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது, பிரச்சார இயக்கம் நடத்துவது, துண்டு அறிக்கைகள் கொடுப்பது, பேரணி நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொடுப்பது என்று காவல் துறை பரபரப்பாக இருக்கும்.  அந்த வாரம் முடிந்தவுடன் அவ்வளவு தான்.  நாடு சுபிட்சமாக ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் தங்கள் இயல்பான வேலையை செய்ய சென்று விடுகிறார்கள்.

அதிகரித்து வரும் விபத்துக்களுக்கான காரணிகள் என்ன??  நான்குவழிப்பாதையும் நடுவில் காங்கரீட் தடுப்பு சுவரும் அமைத்தும் கூட அதிகமான விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது??

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை எதிர் எதிர் மோதல்களோ, திருப்பங்களிலான மோதல்களோ கிடையாது.

பெரும்பாலான வாகனங்கள், வண்டியின் முன்பும் பின்பும் அவசியமான விளக்குகளை இயங்க செய்வதில்லை.  திரும்பும்போதும், நிறுத்தும்போதும் சைகையாக காட்டப்படவேண்டிய பல விளக்குகள் இயக்கப்படுவதில்லை.  இதனால் தான் பின்னே வருகிற வண்டிகள் மோதுவது ஏற்படுகிறது. 

அப்படியானால் அந்த வண்டிகளுக்கான தர சான்றிதழ்களை தருகின்ற போக்குவரத்து துறை அதிகாரிகளோ, அந்த வாகனம் இயங்கும்போது சாலையில் அவற்றை கண்காணிக்கிற கடமையும் அதிகாரமும் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளோ எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்??

நகரங்களை பொறுத்தவரை முன் முகப்பு விளக்குகளின் பங்கு விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று!  கண்கூசும் முகப்பு விளக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன, எனினும் எல்லா வாகனங்களும் ஒளிர் விளக்குகளுடனேயே விரைகின்றன.  இந்த விளக்குகளால் சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் குறுக்கே வரும் இரு சக்கர வாகனங்களோ, சாவகாசமாக சாலையை கடக்கும் பாதசாரிகளோ கண்ணுக்கு தெரிவதே இல்லை.

போதா குறைக்கு சாலைகளின் தரம் வேறு சந்தி சிரிக்கிறது!  ஒரே ஒரு கிலோமீட்டருக்கேனும் ஒட்டோ, குழியோ, மேடோ, சதுப்போ இல்லாத ஒரு சாலையும் சென்னையில் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு நன்கு தெரியும், கைப்பிடி அதிராத ஒரு பயணமும் சென்னையில் சாத்தியம் இல்லை என்று. அந்த லட்சணத்தில் இருக்கிறது சென்னையின் சாலைகளின் தரம். புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் கூட சமமான பரப்பில் சமதள சாலைகள் இல்லை என்பதன் வருத்தம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் மட்டுமே உணரப்படுகிறது!

எல்லா சாலைகளிலும் போதுமான வெளிச்சமும், சாலைகளின் ஓரத்தில் சாலை விதி சங்கேத குறிகளும் கட்டாயமாக வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது விதி.  இப்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசு தனியான ஒரு சட்டத்தையே போட்டு இருக்கிறது.  இதற்காக தனி நிதியத்தை ஏற்படுத்தி அந்த நிதியை கொண்டு 27 வகையான சாலை மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சட்டம்.  எத்தனையோ சட்டங்களை போலவே இந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது.  சாலை குறிப்புக்களோ, தடுப்புக்களோ, முறையான போக்குவரத்துக்கான வசதிகளோ இது வரையும் செய்து கொடுக்கப்படவே இல்லை.  எனினும் செலவுகள் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, எதற்காக என்றே தெரியாமல்.  பல
 பல சிக்னல்கள் சென்னை நகரில் வேலை செய்வதே இல்லை என்பது நகரா வாசிகள் அனைவரும் அறிந்த ரகசியம்.  அதை பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தமும் செலவும் செய்தும் இது வரை பயனில்லை.

சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் முறையான வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஒட்டாமல் இருப்பதும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம்.  சட்டென்று திரும்புவது, திடீரென்று நிறுத்துவது, போதிய எச்சரிக்கை விளக்குகளை உமிழ விடாதது போன்ற காரணிகளால் பிற வாகனங்கள் மோதலுக்கு உள்ளாகிறது.

நகரங்களில் வாகன சோதனை நடத்தும் காவலர்கள் ஆவணங்களை சரிபார்ப்பதோடு நின்று விடாமல், வாகனங்களின் / வாகன ஓட்டிகளின் இத்தகைய முறையற்ற தன்மைகளையும் தணிக்கை செய்வதும், அதற்கான கடுமையான நடவடிக்கைகளுமே ஒழுங்கான வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும்.

இரு சக்கர வாகன விபத்துக்களுக்கான காரணிகளை தவிர்க்க முனையாமல், குறைக்காமல், விபத்து ஏற்பட்டால் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கான ஹெல்மெட்டை கட்டாயம் செய்திருக்கிறது நீதிமன்றம்.  விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமே தவிர விபத்தில் மரணத்தை தவிர்ப்பது அல்ல!  இது எந்த செவியிலும் நுழையவேயில்லை. (ஹெல்மெட் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுத  அவசியம் ஏற்பட்டு இருக்கிறது... எனவே, விரைவில்!)

எத்தனையோ சட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறை நண்பர்கள் போக்குவரத்து சட்டங்களையும் அலட்சியம் செய்வதால் தான் இத்தனை மரணங்கள் வாகன விபத்துக்களில் ஏற்ப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே சற்றேனும் மனிதாபிமானம் கொண்டு இந்த ஒரு சட்டத்தையாவது கடுமையாக அமல்படுத்த முனையவேண்டும்.

முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது வாகன தணிக்கையும், அதில் சிக்கும் தவறு செய்வோருக்கு தக்க நடவடிக்கையும் எடுப்பது தான், வாகன போக்குவரத்தில் ஒழுக்கத்தையும் சுமுகமான சூழலையும் கொண்டு வரும்.

மனிதம் காப்பார்களா மரியாதைக்குரிய காவலர்கள்??

காவிரியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா?

"நாடெங்குமே செழிக்க,
நன்மையெல்லாம் பிறக்க,
நடந்தாய் வாழி காவேரி."

இது அகத்தியர் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் எட்டு திக்கும் பரவிய புகழ் பெற்ற பாடல்..


(ஆர்ப்பரிக்கும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி)


ஆனால் உண்மையில் நடந்து அல்ல, ஆர்ப்பாட்டமாக தான் நுழைகிறாள் காவேரி நம் அன்னை தமிழகத்துக்குள்.  தருமபுரியில் நுழைந்து மீண்டும் கொஞ்சம் கர்நாடகம் சென்று திரும்ப தமிழகத்துக்குள் நுழைந்து பின் நில்லாத ஓட்டம் தான் கொள்ளிடம் வரை.


ஆனால் வளம் கொழிக்க, வழி சிறக்க வந்த காவிரியை நாம் முறையாக தான் பயன்படுத்தி கொள்கிறோமா?


உபரி நீரோ, மழை நீரோ எதோ ஒன்றை எல்லா வருடமும் கர்நாடகத்தில் இருந்து காவிரி தமிழகத்துக்கு கொண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.  அப்படி சில மாதங்களில் மட்டும் கிடைக்கும் சில டி.எம்.சி தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்??  சேமிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததால், தண்ணீர் வரும்போது எவ்வளவு உபயோகிக்க முடியுமோ 'அதை மட்டும்' உபயோகித்து மீதத்தை வீணாக கடலில் வீணடித்து வாளாவிருக்கிறோம்.   நீர் வரும் வேளைகளில் அதனை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை தமிழகம் எடுக்கவேயில்லை.



(மேட்டூர் நீர்தேக்கத்தின் எழில் வடிவம்)

தமிழகம் வந்து சென்று மீண்டு திரும்பும் இடத்தில் மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இருக்கிறது.  இது வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது.  அங்கே ஒரு நீர்த்தேக்கம் இருந்தால் தான் (அப்போதைய)ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் விவசாய தேவைக்கும் நீர்தேவைக்கும் உதவியாக இருக்கும் என்று அறிந்து கட்டப்பட்டது.  இந்த அணையின் மூலமாக பாசன வசதிக்கும், மின் உற்பத்திக்கும் குடிநீர் தேவைக்கும் நீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  சேலம், ஈரோடு மாவட்டங்கள் இதனால் பயன் அடைகின்றன.


சரி, மேட்டூரில் இருந்து விடப்படும் நீர் நேராக எங்கே செல்கிறது??


(திருச்சியில் முக்கொம்பு அணை)

 மேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் தங்கு தடை எதுவும் இன்றி நேராக சென்று அடைவது திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருக்கும் தடுப்பணைக்கு தான்.  அதுவரை நில்லாமல் ஒரு ஓட்டம் ஓடுகிறாள் காவேரி.

மேட்டூரில் இருந்து முக்கொம்பு வருவதற்குள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி என்று நான்கு மாவட்டங்கள் கடக்கிறாள்.  மேலும் பவானி, நொய்யல், அமராவதி என்று மூன்று சகோதரி நதிகளையும் தன்னுடன் இணைத்து கொள்கிறாள்.

நான்கு மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் காவிரிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு தடுப்பணையாவது கட்டி தொலைத்து இருந்தால், அந்தந்த மாவட்டங்களின் பாசன, நீர் தேவைகளை ஈடு செய்திருக்க முடியுமே?? ஆனால் அதை செய்யக்கூடிய நிலையை நாம் அடையவே இல்லை!  நமக்கு எப்போதுமே எதிர்கால சிந்தனை என்பதே இல்லை!

ஒவ்வொரு மாவட்டத்திலும் அணைகள் கட்டி, வாய்க்கால்கள் வெட்டி, ஏரி குளங்கள், நீர்தேக்கங்கள் அமைத்து, நீரை அங்கே கொண்டு சென்று சேமித்து வைத்திருப்பது அந்தந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்பதை ஏனோ நாம் யோசித்து பார்ப்பதே இல்லை. 

நீர் வரும் காலங்கள் குறைவு. ஆனால் வருகிற நீர் மிக அதிகம். அதனை கடலில் வீணடிப்பதை விட, அங்கங்கே தேக்கி வைத்தால் என்ன என்கிற கேள்வி ஏனோ இத்தனை ஆண்டுகளில் நமக்கு எழாமலேயே போய்விட்டது.

முக்கொம்பு கடந்தால் அடுத்து காவிரி நிற்பது கல்லணையில்

 

இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய அணை.. எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அவன் கட்டி வைத்தது இன்று வரை நமக்கு பயன் கொடுத்து கொண்டே இருக்கிறது.  ஆனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்காக, ஏன் நமக்காகவே கூட என்ன செய்ய போகிறோம் என்பது புரிவதே இல்லை!

சோழ பேரரசில் நீர் தேவையின் முக்கியத்துவம் உணரப்பட்டதால் தான் கல்லணையில் இருந்து அங்காங்கே வாய்க்கால்கள் வேட்டி நீர்த்தேக்கங்கள் அமைத்து, அணையில் இருந்து நீரை எங்கெல்லாம், எவ்வளவு எல்லாம், நீரை தேக்கி வைக்க முடியோ அவ்வளவையும் தேக்கி வைத்து, மிச்சம் இருப்பதை, இதற்கு மேல் தேக்க முடியாது என்கிற நிலையில் உள்ள நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புவது என்று திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.  அந்த திட்டமிடல் தான் தஞ்சைவளநாட்டை தரணி புகழ் நெற்களஞ்சியமாக மாற்றி காட்டி பெருமை பேச வைத்து இருக்கிறது.

இதே போல, மேட்டூருக்கும், முக்கொம்புக்கும் இடையிலான பகுதிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நீர்தேக்கங்கள் அமைத்து வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நீர் தேக்கங்களை அமைத்து நீரை சேமித்து வைப்பது, அணையில் இருந்து நீர் தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்வது என்று திட்டமிட்டால், கர்நாடகத்தில் இருந்து கிடைக்கின்ற நீரை முழுமையாக கடலுக்கு வீணடிக்காமல் பயன்படுத்த முடியுமே?? 

கர்நாடகம் நமக்கு கொடுக்க வேண்டிய நீரை வரையறுக்கப்பட்ட அளவுக்கு கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால் அப்படி கிடைக்கிற நீரை நாம் முறையாக பயன்படுத்தி கொள்கிறோமா என்றால், இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது!  

கர்நாடகத்துக்கு எதிராக சதிராட முனையும் நமக்கு அதே நேரத்தில் சாதுரியமாக நீர் மேலாண்மையும் செய்ய முனைந்தால், தமிழகத்தின் நீர் இருப்பும் கூடும், தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரியின் மூலமான நீர்பாசனம் பெருகும்.

பிற மாநிலங்களோடு முண்டா தட்டுவதற்கும், அதை பேசி தமிழக மக்களை உணர்ச்சிக்கடலில் தள்ளி கொதித்தெழ செய்வதற்கும், உணர்ச்சிப்பிழம்பாக முழங்குவதற்கும், ஆர்பாட்டம் போராட்டம் போன்றவற்றை நடத்தி பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் இங்கே எத்தனை எத்தனை அரசியலாளர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே!  அவற்றில் ஒருவரேனும், தமிழக விவசாயிகள் நலனுக்கான நீர்ப்பாசன திட்டங்களை முன்வைத்ததுண்டா??  நீராதாரம் பெருக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததுண்டா?? 

நாடெங்குமே செழிக்க பாயும் காவேரியை நாம் தஞ்சைக்கான காவேரி என்று சுருக்கிக்கொண்டோமோ என்று ஐயமாக இருக்கிறது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக அரசு அமைகிறதோ அப்போதெல்லாம் தஞ்சை தரணியில் மட்டும் தூர்வாரும் பணிகளும் ஏரிகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  அது போதாது.

காவேரி  நாடெங்கிலும் நீர் கொடுக்க தயாராக தான் இருக்கிறாள்.. பயன் படுத்திக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா....அதற்கான திட்டங்களை யாரேனும் முன்னெடுத்து செய்வார்களா??? 

Saturday, December 26, 2009

ரவிகுமார் நூல்கள் வெளியீட்டு விழா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், அந்த கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருமான திரு ரவி குமார் அவர்களின் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டு இப்போது தான் இல்லம் ஏகினேன்!

எழுத்தாளர், சமூக ஆர்வலர், சிந்தனையாளர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொது செயலாளர் என்று பன்முகம் கொண்டவர் ரவிகுமார்.  அவரை நான் பேஸ்புக் மூலம் தான் அறிமுகம் செய்து கொண்டேன்.

விழா நடைபெற்றது தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம்.  மிதமான குளிரில் அளவான கூட்டம்.  அரங்கம் நுழையும் முன்னேயே தேநீரும் சுவீட்டும் கொடுத்தார்கள்... விற்பனைக்காக பரப்பி வைக்கப்பட்டு இருந்த எண்ணற்ற நூல்களில் நிதானமாக தேடி ஆராய்ந்து மூன்று நூல்கள் வாங்கி கொண்டு அரங்கம் நுழைந்தேன்.

எனது இருக்கைக்கு அருகில் இருந்த நண்பரை பார்க்க வந்த ரவிக்குமாருடன் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.  சில பத்திரிக்கைகளிலும், அவரது புரோபைல் படத்திலும் தெரிவதை போல அத்தனை வயதானவர் அல்ல.. மேலும் அந்த படங்களையும், அரசியல் பிரமுகர், சட்டமன்ற உறுப்பினர் என்கிற பின்புலத்தோடு வெள்ளை வேட்டி சட்டையில் அவரை கற்பனை செய்து சென்ற எனக்கு ஜீன்ஸ் & டிசைனர் ஷர்ட்டில் மிக மிக இளமையாக வளைய வந்த ரவிகுமார் ஆச்சரியப்படுத்தினார்.

விழா துவங்கியது.... தமிழ் தாய் வாழ்த்து இல்லாமலேயே!

தலைமை தாங்குவதற்காக திரு தொல்.திருமா வளவனும், முன்னிலை வகிக்க அமைச்சர் தங்கம் தென்னரசுவும் வருகை தந்திருந்தனர்.

நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ரவிக்குமார்.  நான்கும் நான்கு திசைகளில் பயணிக்கிறது. 

கற்றனைத்தூறும் - தமிழக கல்வி நிலை பற்றி;
சூலகம் - பெண்ணிய சிந்தனைகள் அவர்களது பிரச்சனைகள் பற்றி;
பிறவழி பயணங்கள் - கட்டுரைகளின் தொகுப்பு;
அவிழும் சொற்கள் - ஆச்சரியகரமாக அவரது கவிதை தொகுப்பு.

கற்றனைத்தூறும் நூலை அலசி ஆராய்ந்து விமரிசிக்க நாவலாசிரியர் இமையம் வந்திருந்தார்.  பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவை முன்னிலையில் வைத்துக்கொண்டே பள்ளி கல்வியின் அத்தனை குறைகளையும் ரவிகுமார் சார்பாக போட்டு கிழி கிழி என்று கிழித்தார்.  அவர் சொன்னவை அனைத்திலும் ஆயிரம் மடங்கு உண்மைகள் பொதிந்திருந்தது... அப்படி கல்வி துறையை விமரிசிக்க அவருக்கு உரிமை இருக்கிறது... அவர் ஆசிரியராக இருந்தவர். (அதை பற்றி தனியாக எழுதவேண்டும்).  இமையம் அவர்களின் நாவல்களில் இருக்கும் தெளிவான நடை, அவரது பேச்சில் இல்லாதது ஒரு குறை.  இத்தனைக்கும் எழுதி வைத்து தான் படித்தார்.. ஆனாலும் அந்த தமிழ் திக்கி திணறி வெளியேறியதை பார்த்தபொழுது அவரது மாணவர்கள் பற்றிய கவலை வந்தது எனக்கு!

சூலகம் நூலை விமரிசித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் (அழைப்பிதழில் முன்னால் என்று இருந்தது) வசந்தி தேவியின் உரை தெளிவாகவும் அழகாகவும் நோக்கத்தை விட்டு பிசிறாமலும் இருந்தது.  பெண்ணியம் பற்றிய நூல் என்று அட்டையில் போட்டு இருந்தாலும், அதன் கட்டுரைகள் பேசியது பெண்ணியம் மட்டுமே அல்ல, பெண்ணியத்தோடு சார்ந்த சமூக அவலங்களையும் பற்றி விரிவாக பேசுவதை தெளிந்த உதாரணங்களோடு எடுத்து காட்டினார்.

பிறவழி பயணத்தை விமரிசித்த ராமசாமியும், அவிழும் சொற்களை விமரிசித்த கவிஞர் சுகுமாரனும் செம்மையாக பேசினார்கள்... அந்தந்த நூலுக்கான தெளிவான விமரிசனம்.

இப்படியான இலக்கிய உரை கேட்டு எத்தனை நாளாயிற்று?? நன்றி ரவிகுமார் அவர்களே!

இந்த நூல்களை வெளியிட்ட உயிர்மை பத்திப்பகத்தின் மனுஷ்ய புத்திரனை இரண்டாவது முறையாக இங்கே சந்திக்கிறேன்.  ஏற்கனவே சாரு நிவேதிதாவின் பத்து புத்தகங்களை ஒரே விழாவில் ஒட்டுமொத்தமாக வெளியிட்ட விழாவுக்கும் சென்றிருந்தேன்.  உடல் ஊனம் எதற்குமே தடையல்ல என்று நிரூபித்த பெரும் சாதனையாளர் மனுஷ்யபுத்திரன்.  இதோ இப்போது  ரவி குமாரின் நான்கு புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  நூல்கள் அதிகமாக வெளியிட வெளியிட புது புது எழுத்தாளர்களுக்கான வாய்ப்பும், புது புது கோணங்களிலான எழுத்துக்கும் வாசல் திறந்து வைக்கப்படுகிறது.

அடுத்து வந்தது இன்னொரு ஆச்சரியம்.

சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் செம்மொழி மத்திய ஆராய்ச்சி நிலைய தலைவர் திரு எஸ். மோகன் தனது கருத்துரை நல்கினார்.  அவரிடம் தமிழ் சிக்கி திணறி மூச்சு முட்டிய அழகை காண (கேட்க?) கண் கோடி வேண்டும்!  செம்மொழி ஆராய்ச்சிக்கு இவர் தான் தலைவர் என்று அறியவந்தபோது தமிழ் மீதான பரிதாபம் இன்னமும் கூடியதை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை.  என்ன அடிப்படையிலே நியமனங்கள் நடைபெறுகின்றன அரசாங்கத்தில் என்கிற கேள்வி இன்னும் ஒரு முறை வந்து போனது மனசுக்குள்!

முன்னிலை வகித்த தங்கம் தென்னரசு, ஒரு அமைச்சராக தன மீதான விமரிசனங்களை பற்றி அங்கே விவாதிக்காமல் தவிர்த்தார்... அது கண்ணியம்...  என்ன விஷயமாக வந்தோமோ அந்த வேலையை மட்டும் செவ்வனே செய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார்..  நூலை பற்றிய அவரது கருத்துக்கள், ரவிக்குமாருடனான தனது நட்பு, ரவிக்குமாரின் சமூக சிந்தனைகள், சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணி, அவரது எழுத்தின் நேர்மை என்று பலவற்றை சிறப்பாக பேசினார்.  தனது பணியை சிறப்பாக செய்தார்.  இப்படியான அரசியல் வாதிகளை காண்பது அரிதாக இருக்கிறது!  பெரும்பாலும் அரசியல் வாதிகள் எந்த விழாவுக்கு போனாலும் வந்தவேலையை விட்டுவிட்டு சொந்த பிரதாபங்களை முழங்குவது தானே வழக்கம்??

அடுத்ததாக வந்தார் திருமா... அவரது பேச்சை முதல் முதலாக இப்போது தான் கேட்கிறேன்!  கணீர் குரல்.  இன்றைய தினத்துக்கு சிறப்பான பேச்சாற்றல் கொண்ட அரசியல் வாதிகளில் குறிப்பிடத்தக்கவர் அவர்.

ரவிக்குமாருடனான தனது உறவு, கட்சிக்காக ரவி செய்த செயல்கள், அவரது பெருமை என்று பலவற்றை பேசினார்... பின்னர் நூல் விஷயங்களுக்கு வந்தார்.   நேரமின்மையால் நான் அதிக நேரம் இருந்து கேட்க முடியாமல் போனது ஒரு பெரும் குறை!

ஜூனியர் விகடனில் ரவிகுமார் எழுதி வரும் தொடர்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்..  அவர் எங்கேயும் எப்போதும் தனது கட்சி சாயத்தையோ, அரசியல் நிலைப்பாட்டையோ, கட்சியின் கொள்கையையோ எழுத்தில் வடித்து வைக்க மாட்டார்...  எதை பற்றி எழுதுகிறாரோ, அதனை நடுநிலையோடு தீக்கமாக உறுதியாக குறிப்பாக நேர்மையாக எழுதுவார்.    இப்படி எழுதுவதற்கு அவரது தனிப்பட்ட திறம் ஒரு புறம் என்றாலும், கட்சியும் கட்சியின் தலைமையும் அதற்கு ஒத்துழைப்பு தராமல் அது சாத்தியமல்ல.. அந்த வகையில் திருமா பாராட்டாப்படவேண்டியவர்.  வேறு யாரேனும் ஆயின், "நம்ம கூட்டணியில் இருக்கோம், அப்படி இருந்திட்டே திமுக அரசை விமரிசிக்கிறானே" என்று ரவி மீது மாறுபட்ட கருத்தை கொள்வதற்கோ, அவரது எழுத்துக்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கவோ வைத்திருப்பார்கள்.  கட்சி வேறு, கட்சி உறுப்பினரின் சொந்த கருத்து வேறு என்கிற தீர்க்கம் திருமாவுக்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது...

இதே போல எல்லா கட்சி தலைமைக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கமும் வந்து தொலைக்கிறது!

Friday, December 25, 2009

நன்னீர் ஆகுமா கடல் நீர்??



பார்க்க பார்க்க சலிக்காத விஷயங்கள் யானை, ரயில், குழந்தை என்கிற வரிசையில் கடலும் உண்டு!

அப்படி ஒரு சலிக்காத ரசனையோடு இன்றைக்கு கடல் கண்டு கொண்டு இருந்தேன்.  எங்கெங்கு காணினும் நீர் நிலை! ஓயாத அலைகள்! நுரைத்து சிரிக்கும் கடல் நீளமாக விரிந்து கிடக்கிறது!

கடல் கண்டு கொண்டு இருக்கும்போது மனதை கட்டு படுத்த தெரியவில்லை... இயற்கையை ரசிக்கும்போது அறிவை முடக்கி வைக்கவேண்டும் என்பது எவ்வளவு சொன்னாலும் மனதில் ஏறுவதில்லை...

இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே... இதனால் என்ன பிரயோஜனம் என்கிற யோசனை வளர்ந்து பெரிதாக துவங்கியது!

ஒரு பக்கம் நம் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக  குறைந்துவருகிறது; தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் அதை விட வேகமாக வளர்ந்து இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சி வருகிறது;  ஆறுகள் எல்லாம் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகிறது;

இன்னொரு பக்கம் உலகம் வெப்பமயமாவதன் காரணமாக இமையம் போன்ற பனிமலைகள் உருகத்துவங்கி வட மாநில நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டு இருக்கிறது;  கடல்மட்டம் இன்னும் இரண்டடி உயருமானால் கடலோர நகரங்கள் மூழுகும் என்கிற அபாய எச்சரிக்கை ஓலம் கேட்கிறது.

இரண்டுக்குமான ஒரே தீர்வாக பெரும்பாலானோர் முன் வைப்பது கடல் நீரை குடிநீராக்கும் / நன்னீராக்கும் திட்டம்!


(சென்னைக்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் நீராதார மையங்கள்)

அளவில்லாமல் இருக்கும் கடல் நீரை நன்னீராக மாற்றி தொழிற்சாலை தேவைக்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்தினால், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்க முடியும்.  கடல் நீரை குடிநீராகவே மாற்றி பயன்படுத்த முடியும் என்று பல நாடுகளும் நிரூபித்து இருக்கின்றன.  எனினும் தமிழகத்தில் அதனை எவ்வளவு தூரம் ஏற்று கொள்வார்கள் என்பது தெரியவில்லை.  அதனால் தொழிற்சாலைக்கும் விவசாயத்துக்கும் கடல் நீரை பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

சென்னை, கோவை, திருச்சி, ஹோசூர், மதுரை, கடலூர்,  தூத்துக்குடி ஆகியவை தமிழகத்தின் தொழில் நகரங்களாக இருக்கின்றன.  இதில்  சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களுக்கு தொழிற்சாலை தேவைக்காக கடல் நீரை பயன்படுத்தலாம்.

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாய தேவைக்கும் கடல் நீரை பயன்படுத்தலாம்.  இதன் மூலம் காவிரியை நம்பி மட்டுமே விவசாயம் என்கிற நிலை மாறும்.  உப்பு நீர் ஆயிற்றே  என்கிற தயக்கம் விவசாயிகள் மத்தியில் கொஞ்சம் இருக்கிறது.  இஸ்ரேல் நாட்டில் ஏற்கனவே விவசாயத்துக்கு கடல் நீரை நன்நீராக்கி தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.  எனவே "திட்டமிட்ட சாகுபடிக்கு", கடல் நீர் மிகுந்த உபயோகமாகவும் எப்போதும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இதன் மூலம், கடலில் கலக்கும் உபரி நீரை மிகுதியான அளவில் நாம் பயன்படுத்திக்கொள்ள்வதன் மூலம், கடல் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தி வைக்கவும் முடியும், கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தை குறைக்கவும் முடியும், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்கவும் முடியும்.  இது ஒரு வகையில் பல்நோக்கு திட்டம்.

தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற ஒரு கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது.  சென்னை மெரீனாவில் டீம் நிறுவனம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சில காலம் செயல்படுத்தி வந்தார்கள்.. என்ன காரணத்தாலோ அது திடீரென நிறுத்தப்பட்டது.


(மீஞ்சூரில் கட்டப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் - மாதிரி வரைபடம்)

மத்திய அரசு சார்பில் சென்னைக்கான குடிநீர் தேவைக்காக மீஞ்சூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக நிதி ஒதுக்கியபோதும், அப்போதிருந்த தமிழக அரசு அந்த திட்டத்தை நிராகரித்ததன் காரணமாக முடங்கியது.  பின்னர் வந்த இப்போதைய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தி திட்டம் பயன் தரும் நிலையிலே இருக்கிறது.

இது தவிர மாமல்லபுரம்  அருகே நெமிலியில் இன்னொரு நன்னீராக்கும் திட்டமும் தொடங்கப்படவிருக்கிறது!  மேலும் கல்பாக்கம் அணுமின் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலையம், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் போன்றவைகள் மூலமாக சில கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அவை அந்த அந்த நிறுவனங்களின் நீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் இவை போதாது.  தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்து கடல் நீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சி பயன்படுத்தினால் தான் தமிழகம் தப்பிக்கும் என்பது தான் இப்போதைய நிலை.

சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், கல்பாக்கம், கடலூர், சிதம்பரம், சிர்காழி, நாகபட்டினம், வேதாரண்ணியம், மனோரா, மீமிசல், தேவிபட்டினம், ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விஜயாபதி/மகேந்திரகிரி, கன்னியாகுமரி/வட்டக்கோட்டை, இரணியல் போன்ற பகுதிகளில் புதிய பெரிய அளவிலான நன்னீராக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியாகவேண்டிய நிலையில் இப்போது தமிழகம் இருந்து வருகிறது!

சென்னையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையும், தொழில் துறையும் அதிக அளவில் நீராதாரத்தை தீர்த்து வருகின்றன.  தமிழகமே ஒட்டுமொத்தமாக நீர் தேவையில் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது.  அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நதி நீரை நம்பியே நாம் அதிக காலம் ஓட்டமுடியாது என்பது இன்னமும் தமிழகத்தில் உணரப்படாமலேயே இருக்கிறது!

தமிழகம் இப்போதே தொலைநோக்கு பார்வையை கொண்டு வருங்கால சந்ததியினருக்கான திட்டங்களை ஏற்படுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது!  தற்கால தலைமுறைக்கே நீராதாரத்தை மேம்படுத்தவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது!

எனவே இனியேனும் நம் நீண்ட உறக்கத்தை கலைத்து செயல்பட்டாக வேண்டும்... செயல்படுமா தமிழகம்??? நன்நீராகுமா கடல் நீர்??

Printfriendly