Tuesday, June 21, 2011

மாணவர்கள் படும் பாடு

கல்விக்கூடங்களில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை நீக்கும் நோக்கிலும், அனைத்து வகையான கல்வியும் சீரான ஒரே தரத்தில் அமையவேண்டும் என்கிற நோக்கிலும் கொண்டு வரப்பட்டது தான் தமிழக சமசீர் கல்வி சட்டம்.

ஒரே வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனுக்கும், தனியார் / மெட்ரிக் பள்ளி மாணவனுக்கும் இடையே நிலவும் ஏற்ற தாழ்வு என்பது பாட திட்டத்தின் அடிப்படையிலும் கூட பெரும்பாலும் அமைவதால், ஒரே சீரான பாட திட்டம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டது.

அகில இந்திய தேர்வுகளிலும் இதர போட்டி தேர்வுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பாலான மாணவர்கள் நகர்புறத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதும், கிராமப்புற மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், சமூக வாழ்க்கையில் அவர்களுக்கு மனதளவில் ஒரு தேக்க நிலை இருப்பது தெரிய வருவதுமாக பல காரணிகள் சமசீர் கல்வியின் அவசியத்தை எடுத்து சொல்வதாக அமைந்துள்ளது.

இத்தகைய சூழலில், முறையாக கல்வியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கான  புத்தகங்களுடன் கடந்த ஆண்டு சமசீர் கல்வி திட்டம் தமிழகத்திலே அமலானது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அதிமுக அரசானது, என்ன காரணம் என்கிற அடிப்படை தகவலை கூட தெரிவிக்காமல் திடுதிப்பென்று அமைச்சரவை கூட்டி அதில் விவாதிக்கப்பட்டதாக சொல்லி, சமசீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்கில், அரசின் தடை ஆணை செல்லாது என தீர்ப்பானத்தை அடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்திருக்கிறது.

அந்த மேல் முறையீட்டின் மீது தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்றம், மீண்டும் ஒரு குழு அமைத்து சமசீர் கல்வி தொடருவதா வேண்டாமா / அப்படி தொடருவதாக இருந்தால் என்ன மாதிரியான பாட திட்டங்கள் தேவை எனபதை எல்லாம் ஆராய வேண்டும் என சொல்லி இருக்கிறது.

இது, தேவையில்லாமல் மாணவர்களின் கல்வி உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிற ஒரு நிலையை உண்டுபண்ணி இருக்கிறது.  

மேலும், உச்ச நீதிமன்ற அறிவுரை படி அமைக்க்கப்பட்ட குழுவில், அரசு உயர் அதிகாரிகளும், மெட்ரிக் பள்ளிக்கூட முதல்வர்களுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதும், அரசு பள்ளி கூட தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர் / மாணவர் பிரதிநிதிகளோ, கல்விக்கான சமூக அமைப்புக்களோ அந்த குழுவில் இடம் பெறாமல் இருப்பதும், அரசின் முடிவை 'முறைப்படி' செயல்படுத்தவே இந்த குழு அமைக்க பட்டு இருக்கிறது என்கிற ஐயத்தை உறுதிபடுத்துவது போல இருக்கிறது.

அதிமுகவும் - மாணவர்களும்:

பொதுவாகவே அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்களாகவே இருப்பது எதேச்சையானதாக நடப்பது தானா என்பது இன்னமும் புரியவில்லை.

கடந்த முறை, அதிமுக ஆட்சியில், கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்த ஓராசிரியர் பள்ளிகள் அனைத்திற்கும் மூடுவிழா அறிவிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இருக்கின்ற நிலையாலும், அவர்கள் பல்வேறு வயதுகளில் இருப்பதாலும் பள்ளிக்கூடங்கள் அமைப்பது சரியான முடிவாக இருக்காது என்பதால், ஓராசிரியர் பள்ளிகள் அமைக்கப்பட்டது. நடுநிலை கல்வி வரையும், சில மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்படுவதால், அனைவரும் கல்வி கற்கும் சூழல் இருந்தது. அதிமுக அரசின் அறிவிப்பால், பல பல கிராமங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

பின்னர், தமிழக அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழக தேர்வாணைய தேர்வுகளை ரத்து செய்து, வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்ததன் மூலம்,  ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பட்டதாரியும் அரசு வேலைக்கான முயற்சியை செய்ய முடியாமல் முடக்கி வைக்க பட்டனர்.

கிராமங்களுக்கு சென்று கொண்டு இருந்த சிற்றுந்துகளை நிறுத்தியதன் மூலம்,  கிராமங்களில் இருந்து பயணித்து மேல்நிலை / உயர்நிலை படிப்பு படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இடை நிறுத்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

இப்போதைய புதிய அரசின் முதல் நாளிலேயே, சமசீர் கல்வி பாடு பட தொடங்கி, இந்த நிமிடம் வரை, என்ன பாட திட்டம் / என்ன மாதிரியான நடைமுறை / என்ன புத்தகங்கள் / எப்போது பள்ளி திறக்கும் என்கிற எந்த விவரமும் அறியாமல் அந்தகாரத்தில் இருக்கின்றனர் மாணவர்கள்.

மேலும் ஒரு கூடுதல் இணைப்பாக, பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் நடக்காது என்றும், அனைவரும் சென்னைக்கு தான் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இது வீணான அலைச்சலையும் போருளிழப்புகளையும் மன உளைச்சளையுமே உண்டு செய்யும்.

இவ்வாறு பல பல வழிகளில் மாணவர்கள் மீது இந்த அரசு நடத்தும் மறைமுக தாக்குதலின் காரணம் என்ன / இதன் விளைவு என்ன என்பதை எல்லாம் யார் தான் தெளிவுபடுத்த முடியும்?

Sunday, May 15, 2011

தமிழக தேர்தல் முடிவு!

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிவுற்றது! யாரும்.. யாருமே எதிர்பாராத ஒரு தேர்தல் முடிவாக தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இவ்வாறான ஒரு தேர்தல் முடிவினை முன்பே கணித்தவர் ஜெ. ஒருவர் தான் என்பது ஆச்சரியகரமான உண்மை!

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி தொகுப்பு என்ன?
- காங். கட்சிக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாக ராகுல் சொல்லிய சொல்லாடல்கள் கற்பனை என்பது தெளிவாகி இருக்கிறது.
- சீட்டு எண்ணிக்கை உயர்த்துவதற்காக காங். கட்சி திமுகவுடன் நடத்திய அநாகரீக பேச்சுவார்த்தை முறைகள், மக்களுக்கு அந்த கூட்டணி மீதான நம்பிக்கையை உடைத்து, வெறுப்பை வளர்த்துவிட்டிருக்கிறது.
- மீடியாக்கள் தங்கள் செல்வாக்கை நிருபித்து இருக்கின்றன. தாங்கள் விரும்பிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்த அவர்கள் எடுத்த முயற்ச்சிகள் வெற்றி.
- கேப்டன் கட்சிக்கு என்று சொந்த செல்வாக்கு எதுவும் இல்லாதபோதும், மதிமுக, பாமக போன்ற கட்சிகளை அரவணைத்து அவற்றுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கி தந்த அதிமுக தேமுதிகவுக்கும் அவ்வாறே ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்து இருக்கிறது.
- நான் மாறி விட்டேன் என்ற ஜெ.வின் கூற்றுக்கு தமிழகம் மதிப்பு அளித்து இருக்கிறது.
- மக்கள் நல திட்டங்கள் பலவற்றை சிறப்பாக செயல்படுத்தினாலும், கடைசி நேரத்தில் மீடியாக்களால் பெரிது படுத்தப்பட்ட அலைக்கற்றை ஊழல்கள் அவற்றை எல்லாம் மறக்கடிக்கவைத்து விட்டன.
- இலவசங்கள் என்பதை யார் சொன்னாலும், அதன் எண்ணிக்கையை பொறுத்து செல்வாக்கு இருக்குமே தவிர, அது நிறைவேறுமா இல்லையா என்பது பற்றி மக்கள் அக்கறை கொள்வதில்லை என்பதை ஜெ. நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்!
- நலத்திட்டங்கள், மக்கள் பணிகள் ஆகியவற்றை விடவும், கவர்ச்சி வாக்குறுதிகள் வலிமையானவை என்பது புரியவைக்கப்பட்டு இருக்கிறது.
- ஈழ பிரச்னையை கையில் எடுத்த கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன.
- சாதி ரீதியான கட்சிகளை மக்கள் ஒரே அடியாக புறக்கணிக்கவில்லை என்பதும் தெரிகிறது.
- ஜெ. மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனினும் விஜயகாந்த் மீதோ, மற்ற கூட்டணி கட்சிகள் மீதோ அவர்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பது அந்தந்த கட்சிகள் பெற்ற குறைவான வாக்குகள் தெளிவாக்குகின்றன. (தேமுதிக இருபத்து ஒன்பது லட்சம் வாக்குகள், பாமக முப்பத்துநான்கு லட்சம் வாக்குகள்)
- திமுக மீதான மக்கள் வெறுப்பு என்ன தான் பலமாக இருந்தாலும், சில அமைச்சர்களின் வெற்றி அவர்களது சொந்த செல்வாக்கை காட்டுகிறது.
- இது முழுக்க முழுக்க ஜெ.வின் பிரச்சாரத்துக்கும், தேர்தல் வியூகத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதன் மூலம், "நான் யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற செய்ய வைக்க என்னால் முடியும்" என்கிற ஜெ.வின் பழைய அறிக்கையின் சத்தியம் மீண்டும் உறுதியாகிறது.

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கள்:

- சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதும் சீர்திருத்தப்படவேண்டும். அதே சமயம், வழக்கமாக அதிமுக ஆட்சியில் நடைபெறும், "தனிநபர்" அத்துமீறல்கள், காவல்துறையின் அராஜகம், இந்த முறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கடந்த முறைகளை போல அல்லாமல், இந்த முறையேனும், வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல பணிகளுக்கு ஜெ. முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- அசுர பலம் கிடைத்திருப்பதாலும், கூட்டணி கட்சியே அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருப்பதாலும், என்ன வேண்டுமானாலும் சட்டமியர்றலாம் என்கிற வழக்கமான மனோநிலை வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறைகளில் இருக்கும் தேக்கநிலை போக்க வேண்டும்
- மக்களை அவதிக்குள்ளாக்கி நிறுத்திவைத்து கடந்து செல்லும் தண்டனை இந்த முறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- விமரிசனங்களை எதிரி மனோபாவத்துடன் பாராமல், விமரிசனங்களை ஏற்று கொண்டு அதில் நியாயம் இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விமரிசகர்கள் மீதான வழக்கமான அடக்குமுறை தவிர்ப்பது நலம்.

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு எப்போதுமே இருக்கும் ஒரே குற்றச்சாட்டு, தொலை நோக்கு பார்வையோ, அனுசரனையோ இல்லாமல் இருப்பது என்பது. இந்த முறை அதெல்லாம் இருக்காது என்கிற ஜெ.வின் வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதை ஆறு மாதங்களுக்கு பிறகு தான் முடிவு செய்ய முடியும்.


Wednesday, March 2, 2011

தமிழக தேர்தல் 2011


தமிழகத்துக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏப்ரில் மாதம் 13  ஆம் தேதி தேர்தல்; மே மாதம் 13  அம தேதி ஒட்டு எண்ணிக்கை.  வெறும் 40 நாட்களில் தேர்தல். 15  நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம். அதுவும் ஒரே ஒரு வாரம் தான் அவகாசம் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்துகொள்ளவும் வாபஸ் வாங்கவும். ( ஆனால் ஒட்டு எண்ணிக்கைக்கு மட்டும் ஒரு மாத இடைவெளி?? )

இன்றைய தேதியில் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது?

திமுக, காங்கிரஸ், விசி, கூட்டணியில் "போட்டு வாங்கிய" இன்னொரு கட்சியாக பாமகவும் இணைந்து இருக்கிறது. (போட்டு வாங்கிய என்று சொல்ல காரணம், டெல்லி பயணத்தில் கருணாநிதி சொன்ன பாமக அணியில் இருக்கிறது என்கிற பதிலும், அதை தொடர்ந்து பாமக தாங்கள் இல்லை என்று மறுத்த மறுப்பும், அப்படியானால் sari நான் தான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்ற கருணாநிதியில் ஜகஜால வேலையும், அதை தொடர்ந்து, இல்லை இல்லை இதோ இருக்கிறோம் என்று ஓடி வந்து ஒட்டிக்கொண்ட அதிசயமும் தான்.  அதோடு பாமகவின் பேரம் பேசும் சக்தி குறைந்து, இடம் கிடைச்சதே போதுமடா சாமி என 31  இடங்களுக்கு செட்டில் ஆகி கொண்டது)

காங்கிரஸ் இந்த நிமிஷம் வரையிலும் திமுக அணியிலே இருந்தாலும் கூட, எனக்கென்னவோ அவர்கள் வெளியே வந்து விஜியுடன் அணி சேர்ந்து போட்டி இடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.  அதற்காக தானோ என்னவோ சாத்தியமற்ற கோரிக்கைகளை அடுக்குவதாக தகவல்கள் கசிகிறது. திமுகவுக்கும் கூட காங்கிரஸ் வெளியேறினால் போதும் என்று தோன்றி இருக்குமோ என்னவோ, "இளவல்" வீரமணி மூலமாக காட்டமாக காங்கிரசை எதிர்த்து மறைமுக குத்தலுடன் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. (இப்போதைக்கு திமுகவின் மனசாட்சி அவர் தானே!)

திமுகவின்  கணக்கு ஒரு வகையில் சரியாக கூட இருக்கலாம்.  காங்கிரசை வைத்து கொண்டு போட்டி இடுவதை விட, காங்கிரசை எப்படியாவது மூன்றாவது அணி அமைக்க செய்துவிட்டால், திமுகவின் வெற்றி மிக மிக எளிமை ஆகிவிடும்.  இன்றைய சூழலில் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் தான் அதிகம். அது ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு போய்விடாமல், அதிமுக காங்கிரஸ் என இரண்டாக பிரிந்தால், சைக்கிள் கேப்பில் ஜல்சா பண்ணிக்கொள்ளலாம் என திமுக மனதில் ஏதேனும் ஓட்டம் இருக்கிறதோ என்னவோ?

அதிமுக அணியின் நிலைமை இன்னமும் புரியாமல் இருக்கிறது.  லெட்டர் பேடு கட்சிகளுடன் எல்லாம் தொகுதி பங்கீடு (!) வெற்றிகரமாக முடிந்து விட்ட நிலையில் கூட்டணியின் முக்கிய கட்சிகளான சி.பி.எம்; சி.பி.ஐ போன்றவற்றின் நிலை பாடு என்னவென்று தெளிவாக இல்லை.  மதிமுகவை பொறுத்துவரை பிரச்சனையே இல்லை. என்ன கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். (இங்கே இன்னொன்றை சொல்லணும் போல இருக்கிறது. எனக்கு மதிமுகவை பிடித்ததற்கு காரணமே அதன் நேர்மை தான்.  1996  தேர்தலில் தனித்து களம் கண்ட கட்சி அது. 211  தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. பாக்கி 23  இடங்களில் என் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு, நிறுத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த நேர்மை 'ஹமாமையே' மிஞ்சிய ஒன்று!)

விஜி அதிமுக அணிக்கு வருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அவர் காங்கிரசுடன் அணி அமைக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவார் என தோன்றுகிறது.  அப்போ தான் அதிக இடங்களில் போட்டி இட முடியும்.  அதிமுகவில் அதிகம் தேற வழி இல்லை. 

திமுக அணியை  பொறுத்தவரை அரசின் செயல் திட்டங்கள் பெரிதும் கை கொடுக்கும் என்கிற பெரும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்ளுகிறது.  என்ன இருந்தாலும் எத்தனின் எத்தனையோ திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த அரசு என்பதை பொதுவாக எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். மேலும் இன்றைய தலை முறை, பிரச்சாரங்களை விட அதிகமாக செயல்பாடுகளையே எடை போடுபவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிமுக கூட, குப்பை அல்லாததை கண்டித்து _____ நகராட்சியை எதிர்த்து போராட்டம், குண்டும் குழியுமான சாலையை கண்டித்து ஆர்பாட்டம் என்று ஒரு சிறு சங்கத்தை போல செயல்பட்டதே அல்லாமல், பெரும் தவறு என்று அரசிடம் எதையும் சுட்டி காட்டி பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யாமல் இருந்ததே, திமுக ஆட்சிக்கு ஒரு மறைமுக நற்சான்றாக அமைந்து விட்டது. 

இந்த நிலையில் திடீர் என்று என்ன குற்றச்சாட்டை கையில் எடுத்து அதிமுக பிரச்சாரம் செய்யும் என்பதை அறிய எல்லோரையும் போல எனக்கும் ஆவலாக தான் இருக்கிறது.  (அதை விட ஆர்வம், அதிமுகவுக்காக யார் பிரச்சாரம் செய்ய போகிறார்கள் என்பது.  ஜே.நலிவுற்று இருப்பதால், முழுக்க முழுக்க வைகோவை நம்பியே இருக்கிறது தேர்தல் பிரச்சாரம். விஜி வந்தால் அவர் கொஞ்சம் பார்த்துப்பார்!)

தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய திருப்புமுனையான பிரச்சனை என்று இப்போதைக்கு ஒன்றுமே இல்லை என்பதும் கவனிக்க தக்கது.

கிட்டத்தட்ட, தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கூட மந்தமான சூழல் தான் நிலவுகிறது தமிழகத்தில். எந்த பரபரப்போ, சுறுசுறுப்போ, அட சுவர் விளம்பரங்களோ கூட அவ்வளவாக இல்லை. எதுக்குடா தேர்தல் வருது.. இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்கிற மனநிலையில் எல்லோருமே இருப்பது மாதிரியான ஒரு பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


முதலில் அணிகள் இறுதியாகட்டும். அதை வைத்து தான் களம் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.   பத்தே  நாளில் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தலை எழுத்து எப்படி அமையும் என்பது குறித்து ஒருவாறான யூகம் கிடைத்து விடும். 

அதுவரை காத்திருப்போம்!

Sunday, February 27, 2011

ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.

யில்வே பட்ஜெட் தாக்கல் ஆகி இருக்கிறது.. இந்த ஆண்டும்.

வழக்கம் போலவே தமிழகம் ஏமாற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறது அதே வழக்கமான அமைதியுடன்.

ஐந்து மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையிலும், முக்கியமான மாநிலமான தமிழகம் போதிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாமல் இருப்பதன் பின்னணி அரசியல் சார்ந்தவையாக இருக்கக்கூடும். எனினும் ஒரு தமிழனாக நம் மாநில தேவைகள், எதிர்பார்ப்புக்கள் அதன் ஏமாற்றங்களை அசைபோட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

முதலில் இந்த பட்ஜெட் நமக்கு குறிப்பாக கொடுத்தவை என்ன என்று பார்க்கலாம்.

சென்னை - மதுரை; சென்னை - மதுரை - திருவனந்தபுரம்  ஆகிய வழி தடங்களில் துரந்தோ ரயில் விடப்படுகிறது.  இது பெரும் தொழிலதிபர்களுக்கே வசதியாக இருக்கும்.. எனினும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விடப்படும் ரயில் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது புரியவில்லை. காரணம் விமான கட்டணமும் அதே அளவுக்குள் வருகிறது.. பயண நேரமோ 2 மணி நேரம் தான்.

கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் கோவை நாகர்கோவில் ரயிலில் சில இணைப்பு பேட்டிகள் மட்டும் என்று சுருங்கி போனதில் சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு நாகூர் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் லிங்க் ரயில் தான்.  திருவாரூரில் இருந்து சில பெட்டிகள் தனியாக நாகூர் வரை சென்று கொண்டிருந்தது.  அகல பாதை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இப்போது மீண்டும் விடப்பட்டு இருக்கிறது.  புதிய மொந்தையில் பழைய கல்.

தருமபுரி - பெங்களூர் இடையே விடப்பட்டு இருக்கும் ரயில் எக்ச்பிரசாக இயங்காமல் பயணிகள் ரயிலாக இயங்குவதாக இருந்தால் நலம்

விழுப்புரம் இப்போது தேர்மினலாக உருவெடுத்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து காரக்பூருக்கு ரயில் சேவை வேலூர் வழியாக துவக்கபடுகிறது..நல்ல விஷயம்.


சென்னை திருச்செந்தூர் ரயில் தினசரி இயக்கப்படும் (முன்பு வாரம் ஒரு முறை); கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் என்பவை வரவேற்க்கப்படவேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள்.

காஞ்சீபுரம் - திருப்பதி; பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் வழித்தடத்துக்கான ஒப்புதல் ஆச்சரியம் கொடுக்கிறது.. எனினும் சேலம் நாமக்கல் பழனி வழித்தடம் என்ன ஆயிற்று என்பது விளக்கப்படவில்லை.  நாமக்கல் வரை பணிகள் முடிவடைந்தும் ரயில் சேவை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது

சென்னையில் இருந்து மதுரைக்கு காலை நேர விரைவு ரயில் ஒன்றும், சென்னை நெல்லை வழியில் இன்னும் ஒரு ரயில் வேண்டும் என்றும் உள்ள தேவைகள் கவனிக்கப்படவில்லை.  கோவை நெல்லை, கோவை திருவனந்தபுரம், கோவை பெங்களூரு மார்க்கத்தில் தனி ரயில் வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை

கோவை சென்னை துறந்தோ ரயில் நேரம் கிட்டத்தட்ட கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை ஒட்டியே இருப்பதும், கட்டணமும் கூடுதலாக இருப்பதும், கவனத்தில் கொண்டு, துறந்தோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் வீணாயிற்று.

எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுவதாக இருக்கும் இண்டர்சிட்டி ரயிலும், திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்த ரயிலும் கோவை வரை நீட்டிக்கப்படவேண்டும்.

உள்கட்டமைப்பு, பாலங்கள், போன்ற பணிகளுக்கு தமிழகத்துக்கு இந்த முறை அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

மிக மிக நீண்ட காலமாக பனி நடந்து வரும் கோவை - திண்டுக்கல்; மதுரை - போடி; திருவாரூர் - காரைக்குடி அகல பாதை திட்டங்கள் இந்த ஆண்டும் கனவாக போய் விட்டது.

சென்னை - மதுரை; சென்னை - நெல்லை; சென்னை - பெங்களூரு; சென்னை - கோவை மார்க்கங்களில் இன்னமும் ரயில் தேவை இருந்துகொண்டே இருப்பதை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில்கள் விடப்படவேண்டும் என்கிற நம்பிக்கை நப்பாசை ஆகிக்கொண்டு இருக்கிறது.

சென்னையை போலவே.. கோவையை மையமாக கொண்டு, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர்/ஈரோடு, பொள்ளாச்சி வழித்தடங்களிலும்; திருச்சியை மையமாக கொண்டு, தஞ்சாவூர், மதுரை, கரூர், விழுப்புரம் வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்கிற ஆசையும் நப்பாசை பட்டியலில் சேர்ந்து கொள்கிறது.

போதுமான ரயில்கள் விடப்படாமல், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல், வேற்று கவர்ச்சியாக சில ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் இனிதே தாக்கல் ஆகி விட்டது தமிழகத்தை பொறுத்தவரை.

அடுத்த ஆண்டுக்காக ஆசையை தள்ளி வைப்போம்...

Thursday, February 3, 2011

2G - கைது சரியா?

இந்திய ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்கிற பட்டம் மட்டும் தான் பாக்கி!

அட்டகாசமாக அரங்கேறிவிட்டது தொலைதொடர்பு ஊழல், விசாரணை, அறிக்கை, கைது படலங்கள்.

சுருக்கமாக பார்த்தால் ஒரு யூகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது தான் உறுத்துகிற நிஜம்.

மத்திய தணிக்கை அதிகாரி ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதில் 2G அலைக்கற்றைகளை ஏல முறையில் விற்பனை செய்திருந்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என அறிவிக்கிறார்.  அந்த கூடுதல் வருமானம் என்பது சுமார் 1,76,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறார்.  அதாவது, அலைக்கற்றைகளுக்கு அந்த அளவுக்கு தேவை இருந்து, இத்தனை போட்டியாளர்கள் இருந்து, அவர்கள் ஏலத்தில் பங்கேற்று இந்த அளவுக்கு விலையை ஏற்றி இருந்தால், ஒருவேளை அரசுக்கு இந்த கூடுதல் வருமானம் கிடைத்து இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடுகிறார்.  மேலும், இந்த கணக்கீடு ஒரு யுகமான மதிப்பீடு தான் என்றும் அவரே சொல்லி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூக்குரல் இட்டு இன்று ராசாவும் கைது செய்யப்பட்டாயிற்று.

சரி... தணிக்கை துறை இதை மட்டும் தான் சொல்லி இருக்கிறதா?

விவசாயம், கல்வி, பெட்ரோல், சுகாதாரம் போன்ற பலவற்றுக்கும் அரசு தருகிற மானியங்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும் என்று கூட தான் சொல்லி இருக்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அல்ல பல்வேறு மாநில அரசுகளுக்கான தணிக்கை அறிக்கையிலும் இது போன்ற மானியங்களை / கடன் தள்ளுபடிகளை / சலுகைகளை குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.  இதன் அடிப்படையில் மானியங்களை குறைத்து வருவாயை ஈட்டி அரசு கஜானாக்களை நிரப்பி இருக்கலாமே?  அப்படி செய்யாமல் இருந்த அனைவருமே அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தியவர்கள் என்று பட்டயம் கட்டிவிடலாமா?

பொதுவாக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்பது மரபு.  தணிக்கை துறையை பொறுத்த மட்டில், வெறும் வருவாய் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே பார்த்து தணிக்கை செய்து கூடுதல் வருவாய்க்கான வழிகளை சொல்லி வைக்கிற ஒரு ஆலோசனை குழு தானே தவிர, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல.  மானியங்கள் கொடுப்பது என்பது அந்த அந்த துறையை பொறுத்து தேவையை பொறுத்து அரசாங்கங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

இலவச கல்வி கொடுக்கவேண்டும், அதன் மூலம் தான் கல்வி அறிவு வளரும் என்று ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தலாம்.  ஆனால் தணிக்கை துறையை பொறுத்தவரை , கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் விட்ட வகையில் இத்தனை கோடி வருவாய் இழப்பு என்று தான் அறிக்கை தரும்.

2G விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது விசாரணையில் இருக்கிறது. எனினும் தணிக்கை துறை சொல்கிற அளவுக்கான ஊழல் நடைபெற சாத்தியமே இல்லை என்று பாஜக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரே சொல்லி இருக்கிறார்.  அவரது கணிப்பு படி, ஒருவேளை வருவாய் இழப்பு என்பதை  காரணமாக கொண்டாலும் கூட அதிகபட்சம் 30,000 கோடி வரை தான் இருக்கக்கூடும் என்கிறார்.

ஒதுக்கீட்டில் முறைகேடு, லஞ்சம் பெற்று கொண்டு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை தான் நடந்திருக்கக்கூடும் எனபதும், அத்தகைய முறை கேடு என்பது கூட தண்டனைகுரிய குற்றம் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.  அதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை, தக்க ஆதாரங்களுடன் கைது செய்வதை எல்லோருமே ஏற்று கொள்ள தான் செய்வார்கள்.

ஆனால், ஏல முறை ஒதுக்கீட்டை மேற்கொள்ளாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று காரணம் சொல்லி, அதன் பேரில் கைது என்பது நெருடலாகவே உள்ளது.

ஒரு எளிய உதாரணம் சொல்வது இங்கே பொருந்தும்:

2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் BPL, Aircel ஆகிய இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் செல்போன் சேவைக்கான ஒதுக்கீடு பெற்றது.  பின்னர் சில ஆண்டுகள் கழித்து BSNL, Airtel, Reliance (CDMA), Tata Indicom(CDMA) ஆகியவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது.  இவை போக மிச்சம் இருக்கும் அலைவரிசைகள் தான் இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் MTS, Reliance GSM, Tata Docomo, Uninor, Videocon, Idea போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் தங்கள் சேவையை தொடங்கின.

ஒரே தொலை தொடர்பு வட்டத்தில், ஒரே தொழில் நுட்பத்தில் மூன்று முறை ஒதுக்கீடுகள் நடைபெற்றதால், ஒரே மாதிரியான ஒதுக்கீடு விதிமுறைகளும், கட்டணங்களும் தான் இருக்க முடியும் என்பது பொது விதி.  அப்போது தான் போட்டியாளர்களுக்கிடையே சமநிலை (Level Playing Field) இருக்கும். அப்படி இல்லாமல், ஒரே மாதிரியான சேவைக்கான லைசன்சுக்கு வெவ்வேறு வகையான கட்டணங்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு முறைகள் என்று  இருந்தால் அது சரியான வழி முறையாக இருக்க நியாயம் இல்லை.

அனைவருக்கும் ஒரே வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான், தொலை தொடர்பு சேவைக்கான கட்டணமும் சீராக இருக்கும்.  அதில்லாமல், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டால், கட்டண விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, அதிக கட்டணம் உள்ள நிறுவனங்கள் நாளாவட்டத்தில் செயலிழந்து போக கூடிய அபாயம் இருக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் அதே சமயம், ராசா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது போன்ற விசாரணைகள் அவசியமானவையே.

விசாரணையில் என்ன வெளிவருகிறது என்பதில் இருக்கிறது எதிர்கட்சிகளின் எதிர்காலம்!


Sunday, September 19, 2010

இலவச செல்போன் - ரொம்ப முக்கியம்!

வித்தியாசமான காமடிகளை அரங்கேற்றுவதில் அரசாங்கங்களை அடிச்சுக்கவே முடியாது என்பதற்கு மற்றும் ஒரு சம்பவம் கிடைத்திருக்கிறது.

இலவசம் இலவசம்னு எல்லாத்தையும் இலவசமா கொடுத்து கொடுத்து மக்களை மட்டம் தட்டி வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டும் மத்திய அரசு, புதிதாக அதிரடியாக அறிவித்திருக்கும் ஒரு திட்டம் ஆச்சரிய படுத்துகிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் சச்சின் பைலட்.  இவர் இப்போது தொலை தொடர்பு துறைக்கான இணை அமைச்சராக இருக்கிறார்.  இவரோட பாராளுமன்ற தொகுதில்  இருக்கும் "வறுமை கோட்டுக்கு கீழே" உள்ள மக்களுக்கு பி.எஸ்.என்.எல் சார்பாக இலவச சிம் கார்டு, இலவச இன்கமிங் கால் வசதியுடன் இலவச செல்போன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் என்கிற வரையறை மத்திய அரசால் எப்படி செய்யப்படுகிறது என்றால், மாதம் 600 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்யக்கூடியவர்கள் என்று.  அப்படி கஷ்டப்படும் ஜீவன்களுக்கு மத்திய கிடங்குகளில் வீணாகி கொண்டு இருக்கும் உணவு தானியங்களை இலவசமாக கொடுப்பதற்கு வீம்பாக மறுப்பு தெரிவித்து மல்லு கட்டும் மத்திய அரசு, அதே ஜீவன்களுக்கு இலவசமாக செல்போன் கொடுக்கிறது!

கால கொடுமை!

இப்படி செல் போன் கொடுப்பது, சமூகம் மீதான தன நிறுவனத்தின் அக்கறையை வெளிப்படுத்துவதாக பி.எஸ்.என்.எல் சொன்னாலும், அதனை   தொலை தொடர்பு துறை ராஜாங்க அமைச்சர் தொகுதியில் மட்டும் கொடுத்து இருப்பதில் என்ன விதமான சமூக அக்கறை இருக்கிறது என்பது புரியவில்லை.

மேலும், இப்படியான இலவச செல்போன் என்பது வறுமையில் வாடும் மக்களுக்கு மேலும் கூடுதல் செலவாக தான் அமையுமே அல்லாமல், அவர்களுக்கு அதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.

வறுமையில் வாடுகிற மக்களுக்கு, வேலை வாய்ப்புக்களை பெருக்குவது, வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுப்பது, கல்வி, சுயதொழிலுக்கான வழிகளை காட்டுவது, வீணாகும் தானியங்களையாவது கொடுத்து உதவுவது என்பன போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை யோசிக்காமல் அவர்களுக்கு செல்போன் கொடுப்பது என்பது செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவுக்கும் மட்டுமே பயனளிக்க கூடியதாக இருக்குமே தவிர, வறுமையில் வாடும் ஜீவன்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இருக்க நியாயம் இல்லை.


மேலும்,  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், சச்சின் பைலட் தொகுதி என்பதால் அங்கே இந்த இலவச செல்போனை விநியோகித்த பி.எஸ்.என்.எல், அடுத்த படியாக, கடந்த 18.09.2010 அன்று கோவை அடுத்த அவினாஷியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது.  இந்த பகுதி தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்களின் தொகுதிக்குட்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

பி.எஸ்.என்.எல்லை பொறுத்தவரை, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இப்போதைய உடனடி அத்தியாவசிய தேவை என்பது செல்போன் என்று தீர்மானித்து விட்டதாகவும், அப்படியான வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே இருப்பதாக முடிவு செய்துவிட்டதாகவும் தோன்றுகிறது.

பசியால் வாடுவோருக்கு உணவு தானியம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கு வீம்பாக மறுப்புரை வழங்கிய மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு இலவச செல்போன் வழங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை.

சோற்றை விடவா செல்போன் முக்கியம்?

அயோத்தி தீர்ப்பும் - அவசர அறிக்கையும்

பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுமானம், போன்ற பரபரப்புக்களால் கலவர வன்முறை களமான அயோத்தி வன்முறைகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரவிருக்கிறது.

கடந்த வாரம் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சமயம் வெளியூர் செல்லாமல் அவரவர் ஊர்களிலேயே இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.  மேலும், மாயாவதி அவர்கள் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அவ்வேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்லி இருப்பதுடன், காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 16.09.2010 அன்று, மத்திய அமைச்சரவை கூடி எடுத்த மற்றொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே வலியுறுத்தி இருக்கின்றது.  அத்தீர்மானம் அரசின் சார்பில் விளம்பரமாகவும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு அறிக்கைகளின் நோக்கம் என்ன? இவ்வளவு அவசரமாக எதற்காக இப்படியான அறிக்கைகள் வெளியாகின்றன? அரசு ஏதேனும் மிக பெரிய வன்முறையை எதிர்நோக்குகிறதா?  அல்லது அவ்வாறான ஒரு வன்முறை வேண்டும் என்று விரும்புகிறதா?

ஒண்ணுமே புரியலை!

Printfriendly