Tuesday, January 6, 2015

ரஹ்மான்


ன் வாழ்வின் மிக அதிக நிகழ்வுகளையும் நினைவுகளையும் கொடுத்த அதே 1992 ஆம் ஆண்டு. நாங்கள் அப்போது கோவை காளப்பட்டியில் குடியிருந்தோம்.

ஷார்ப் கம்பெனி வழியாக வரும் 16B பஸ்ஸில் எப்போதும் ஒலிப்பதாக இருந்தது ரோஜா பட பாடல். வித்தியாசமான இசை நின்று கேட்கவைக்கும். ஜங்ஷன் டீக்கடை அருகில் (இப்போது ரவுண்டானா வந்தபின் அந்த கடை  இல்லை) இதற்காகவே நின்று காத்திருந்து அந்த பாடல்களை முழுமையாக கேட்டு முடிப்பேன், பஸ் மீண்டும் புறப்படும் வரை.

பலகாலமாக இரும்பு கோட்டையாக இருந்த தமிழ் திரை இசையை மொத்தமாக உடைத்து புதுப்புது வடிவங்களும் புதுப்புது குரல்களும் புதுப்புது இசையமைப்புமாய் புறப்பட்டிருந்தார் ரஹ்மான். பாட வாய்ப்பு கிடைப்பது என்பது அத்தனை எளியது அல்ல. அசோசியேஷன், மெம்பர்ஷிப், இசையமைப்பாளரிடத்தில் அறிமுகம், ரெக்கமண்டேசன் என பல விஷயங்கள் இருந்தது. இசையமைப்பாளரை தேர்ந்தெடுப்பது வேண்டுமானால் டைரக்டராகவோ தயாரிப்பாளராகவோ இருக்கலாம். ஆனால் பாடகர்களை, இசை வல்லுனர்களை தேர்ந்தெடுப்பது இசையமைப்பாளர்களே என்பதால் உள்ளே நுழைவது அவ்வளவு சுலபமில்லை. ரிஸ்க் எடுக்க பயந்த பல ஜாம்பவான்கள் பிரபலமான குரல்களை கொண்டே காலத்தை ஒட்டிக்கொண்டிருந்த கால கட்டம் அது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் ரஹ்மானின் முயற்சி வித்தியாசமானதாக தெரியும்.

திரை இசை என்பது ஒரு கூட்டு முயற்சி. என்றாலும் மொத்த லகானும் இசையமைப்பாளர்கள் கையில் தான். பாடல்கள் வெற்றிபெறாவிட்டால் மொத்த சுமையும் இசையமைப்பாளர்களுக்கு தான். எனவே புதிய முயற்சிகளை அதிகம் பரீட்சித்து பார்க்காமல், அதே பாரம்பரியமான, ஒரு  பல்லவி இரண்டு சரணம் டைப்பிலான பாடல்கள், அதே ஏழு பிரபலமான பாடகர்கள் என ஒரு புரோட்டோடைப் இசையாகவே இருந்துவந்த தமிழ் திரையிசையில் ரஹ்மான் பல புதிய பரிமாணங்களை புகுத்தினார். புதிய குரல்களை பரீட்சிக்க கூட தயங்கி ஆண்டாண்டு காலமாக முடங்கி கிடந்தவர்களிடையே பரவை முனியம்மா முதல் பாம்பே ஜயஸ்ரீ வரை, தேனி குஞ்சரம்பாள் முதல் தேன்குரல் நித்யஸ்ரீ வரை அனைத்து விதமான குரலையும் பரீட்சித்து பார்த்து வெற்றி கண்டவர் ரஹ்மான். சபாக்களில் கிளாசிக் பாடிக்கொண்டிருந்த உன்னிக்கிருஷ்ணனை வெஸ்டெர்ன் கிளாசிக், குத்துப்பாட்டு என முயற்சித்ததும், கிராமிய பாடகர் புஷ்பவனம் போன்றோரை திரையிசையில் இழுத்ததுமாக பல வித்தியாச முயற்சிகள் ஒருபுறம், எல்லா படங்களிலும் ஏதேனும் ஒரு பாடலிலாவது ஏதேனும் ஒரு இசைக்கருவியின் ஒட்டுமொத்த பிரவாக பிரமாண்டத்தை புரிய வைத்த லாவகம் என விரைவில் ரஹ்மான் எனக்கு மிக பிடித்தமானவராக ஆனார்.

மேமாதம் படத்தில் மின்னலே நீ வந்ததேனடி பாடலின் இன்டர் லூடில் வரும் ஒற்றை வயலினுக்கு சில காலம் நான் அடிமையாக இருந்திருக்கிறேன். கேட்கும் போதெல்லாம் கண்ணீர் உகுத்தபடி. டூயட்டில் சாக்சபோன் தீம் மற்றுமொரு வெள்ள பிரவாகம்.



என்னை ஆச்சர்ய படுத்திய மற்றுமொரு விஷயம், மொத்தமாக இசை – ரஹ்மான் என கிரெடிட்டை அள்ளிக்கொள்ளாமல், சிறப்பு வாத்தியங்கள் இசைத்தவர்களுக்கான கிரெடிட்டையும் தனித்தனியாக அங்கீகரித்தது. வயலின் – கார்த்திக் என பல கேசட்டுகளில் பார்த்தபோது தான் அதை  புரிந்து கொண்டேன், இசை எந்த வடிவத்தில் வரவேண்டும் என ஒரு அவுட்லைன் தருவது தான் இசையமைப்பாளரின் பொறுப்பு. அதை அதே வடிவில் கொண்டுவருவது கலைஞனின் திறமை. அதை அங்கீகரித்தவர் முதலில் ரஹ்மான் தான். திரைத்துறையில் இது புதிய நடைமுறை அல்ல. கிட்டத்தட்ட டைரக்டர் நடிகர் சிஸ்டம் தான். எப்படி நடிப்பு இருக்கவேண்டும் என டைரக்டர் அவுட்லைன் தருகிறார். அதை சிறப்பாக வெளிப்படுத்துபவர் நடிகர். அதனால் நடிகருக்கு கிரெடிட் கிடைக்கிறது. அதேமாதிரி அவுட் லைன் தரும் இசையமைப்பாளர் அதை வெளிப்படுத்திய கலைஞருக்கு கிரெடிட் தரவேண்டும் என்கிற அவரது நிலைப்பாடு, அவர் மீதான மதிப்பை அதிகரிக்க செய்தது.

ஆரம்பகால இசையில் மெல்லிசையும் பியூஷனும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்த பாடல்கள் என்னை கவர்ந்தது.

ஜெண்டில்மேன், வண்டிச்சோலை சின்னராசு, மேமாதம், ரிதம், மிஸ்டர் ரோமியோ, திருடா திருடா, ரட்சகன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, லவ் பேர்ட்ஸ், காதலன், காதலர் தினம், முத்து, இந்தியன், முதல்வன், காதல் தேசம், புதிய மன்னர்கள், பவித்ரா, டூயட், உயிரே, இருவர், ஜோடி, ஜீன்ஸ் என பல பல படங்கள் வீட்டில் ஆடியோ கேசட்டுகளாக சிடிக்களாக குவிந்து கிடந்தன.

பார்த்தாலே பரவசம், ஆயுத எழுத்து, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், விண்ணை தாண்டி வருவாயா மாதிரியான படங்களின் பாடல்கள் மனதுக்கு மிக நெருக்கமானவை. பாரதிராஜா, பாலச்சந்தர், மணி ரத்னம், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களின் ஆஸ்த்தான இசையமைப்பாளராக ரஹ்மான் ஆனதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. அதே சமயம் புதுமுக இயக்குனர்கள், குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்திருக்கிறார்.

ஹிந்தி பாடல்கள் மீது எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு காதல் இருந்தது. அனுமாலிக் தான் ஆதர்சம். நம்ம ஊர் தேவாவையும் இளையராஜாவையும் மிக்ஸ் செய்த கலவையில் இருக்கும் அவரது பாடல்கள். அனைத்து ரகத்திலும் பாடல்கள் இயற்றியவர். ரஹ்மான் பெரும்பாலும் தமிழில் இட்ட பாடல்களையே ஹிந்தியில் இசை அமைத்திருந்தாலும், ரங்கீலா முழுமையாக ஹிந்திக்காக அமைத்த ஆல்பம். தமிழில் அது வராமல் இருந்ததில் எனக்கு மிக பெரிய வருத்தம் இருந்தது. லகானும் தாலும் கேட்காத நாளில்லை ஒரு காலத்தில். ககனு ககனு (லகான்) பாடல் முணுமுணுப்பில் ரிப்பீட்டில் இருந்தது. டெல்லி 6, ஜோதா அக்பர் ஆகியவையும் அப்படியே.

திருடா திருடா படத்தின் ராசாத்தீ என் உசுரு என்னதில்லை முழுமையாக வோக்கல் மியூசிக்கல். அதன் பிரமிப்பு இத்தனை காலம் கழிந்தும் இன்னும் மாறவில்லை. தாளம் லயம் ஸ்ருதி ஆகியவற்றுக்கு தக்கபடி கவிப்பேரரசர் வைரமுத்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தி இருந்த வார்த்தைகள் எந்த இன்ஸ்டிருமெண்டும் இல்லாமலேயே ரிதம் சேர்த்து பாடலை முழுமை செய்தன. கேட்டு பாருங்கள். “தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலயே... மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே...” வார்த்தைகளே தாளமிடும் ஜாலம். வீரபாண்டி கோட்டையிலே, ஒருவன் ஒருவன் முதலாளி ஆகியவை ஆர்கேஸ்டிராவின் சிகரம்.


புதிய புதிய குரல்களை பயன்படுத்துவதில் வல்லவர். எஸ்.பி.பி யின் மகள் பல்லவியின் 'காதலிக்கும் பெண்ணின் கைகள்', சுசீலாம்மாவின் உறவினர் சந்தியா பாடிய 'பூ கொடியின் புன்னகை', சுக்வீந்தரின் தையா தையா’, இளா அருணின் முத்து முத்து மழை’, சாதனாவின் சினேகிதனே’, சுவர்ணாலதாவின் போறாளே பொன்னுத்தாயி சுஜாதாவின் சொட்ட சொட்ட நனையுது ஸ்ரீநிவாசின் அழகே சுகமா எம்.ஜி.ஸ்ரீகுமாரின் சின்ன சின்ன மழை துளியை ஹரிணியின் நிலா காய்கிறது சின்மயியின் மையா மையா ஜெயச்சந்திரனின் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் ஆகியவை மிக பிடித்தவை. சாகுல் ஹமீது, ஃபெபி, பென்னி தயாள், பிளசி, சித்ரா சிவராமன், மகாலக்ஷ்மி ஐயர், மின்மினி, நரேஷ் ஐயர், சோனு நிகாம், கிளிண்டன், என ஒரு பெரும் படையே திரை இசைக்கு இவரால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.  ஒரு பென் டிரைவ் முழுக்க அவரது கிளாசிக் மெலடிக்களும், கிராமிய மெல்லிசையுமாக நிரப்பி வைத்திருக்கிறேன்.

ஃபாஸ்ட் பீட்டுக்களிலும் ஒரு மெல்லிய நளினம் இருக்கும். மாயா மச்சிந்திரா (இந்தியன்), முக்காலா முக்காபுலா (காதலன்), சிக்கு புக்கு (ஜெண்டில் மேன்) ஆகியவை சிறந்த உதாரணம். குத்து, கிராமியம், ராப், ஜாஸ், என எல்லா பரிமாணங்களிலும் அவர் பாடல் இசைத்திருந்தாலும் சில கிளாசிக்கல் பாடல்கள் நெகிழ வைத்து விடுகிறது. சிவாஜியின் சஹானா (விஜய் ஏசுதாஸ்) பாடலின் இடையே ஆழி மழை கண்ணா..’, காதலனின் இந்திரையோ இவள் சுந்தரியோ.. ஆகியவை குறிப்பிடலாம்.

மின்சார கனவின் அன்பென்ற மழையிலே இந்த நிமிடம் வரை கிறித்துவ பாடல்களை திரையிசையில் கொணர்ந்ததில் சிறப்பான பாடல் என்பது எனது கருத்து. அந்த ஃபீல், இன்ஸ்ட்ரூமென்ட், குரல், டியூன் ஆகியவை நம்மை அந்த சர்ச்சுக்குள்ளேயே கொண்டு சென்று விடுகிறது.

பல சிறு சிறு பாடல்களை படங்களில் ஆங்காங்கே அள்ளி தெளிப்பதிலும் வல்லவர். அதில் மிக பிடித்தது கன்னத்தில் முத்தமிட்டாலின் சைனோரே...சைனோரேவும் சட்டென நனைந்தது நெஞ்சமும்.


சோக பாடல்களை இசையமைப்பதில் தனி கவனம் செலுத்துவார். மிக எமோஷணலான பாடல்கள் எனில் வேறு யாரையும் அல்லாமல் தானே பாடிவிடுவதும் உண்டு. உயிரேவில் 'கண்ணீரே கண்ணீரே' அப்படியான பாடல்களுள் ஒன்று. பவித்ராவில் 'அழகு நிலவே..' சித்ராவின் குரலில் தாய்மையடையாத பெண்ணின் ஏக்கத்தை உருக்கி தந்தது என்றால், அலைபாயுதேவில் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்'உம்  கருத்தம்மாவின் 'போறாளே பொன்னுத்தாயியும்' சுவர்ண லதாவின் குரலில் மொத்த துயரத்தையும் கொண்டுவந்து நாம் முன் வந்து கொட்டிவிட்டு கதறடித்து போகும். உருக்கமான பாடல் எனிலும் ஜாலியான பாடல் எனிலும் இரண்டின் உச்சத்தையும் தொட்டு பார்த்துவிடும் ஆர்வம் அவரிடத்தில் எப்போதும்.

எம்.எஸ்.வீ, யுவன் என பலரையும் எந்த ஈகோவும் பார்க்காமல் தனது பாடலுக்கு ஏற்ற குரல் என்றால் பயன்படுத்தி கொள்வார்.

அவரது இசை என எடுத்துக்கொண்டால் அது மிக சாதாரணமானது தான். வித்யாசாகர், ஹாரிஸ், ஜீவிபி போன்றோர் கூட அதே தரத்தில் பாடல்கள் தருகிறார்கள். ஆனால் ரஹ்மானின் சிறப்பே அதை ரசிக்கும் வகையில் கொடுப்பதில் தான் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ரசிகனாக அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு கேட்டு எந்த இடத்தில் எந்த இன்ஸ்ட்ருமெண்ட் ஒலியை அதிகரிக்கவேண்டும், எதை குறைக்கவேண்டும் என கணித்து கொடுப்பதில் தான் இருக்கிறது அவரது வெற்றி. புது வெள்ளை மழை பாடல் சரணத்தின் இறுதியின் வரும் வயலின் இசை, பதிவு செய்தபோது ஒரே சப்தத்தில் இருந்தாலும், பாடலின் இறுதி வடிவத்தில், மெல்ல மெல்ல சப்தத்தை அதிகரித்துக்கொண்டே வந்து சரணம் முடிகையில் சட்டென நிறுத்தி அமைதி தருவதை சொல்லலாம். எந்த ஒலி எப்படி இருக்கவேண்டும் என கணிப்பதில் தான் அவரது வெற்றி இருப்பதாக நினைக்கிறேன். அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நல்ல ரசிகர் என்பதாலும் கூட இருக்கலாம்.

ரஜினியின் தீவிர விசிறியாக இருந்ததாலோ என்னவோ எனக்கு தேவாவை ரொம்ப பிடிக்கும். காரணம் மற்றவர்கள் இசையை முதன்மை படுத்துகையில் தேவா மட்டும்தான் ரஜினியை முதன்மைப்படுத்தி அதற்கு தக்கவாறு இசை அமைத்தவர். ரஹ்மானும் அதே பாலிசியை கையாண்டு ரஜினி படங்களில் ரஹ்மான் பாடல்கள் இல்லாமல் ரஜினி பாடல்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டது எனக்கு மிக பிடித்தது (பாபா தவிர)

எத்தனை புகழும் பெருமையும் விருதும் கிடைத்தாலும் தளும்பாத நிறைகுடமாய் அமைதிகாத்தாலும், உண்மையில் மிக கலகலப்பான எளிமையான நபர் அவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக என்பதை விட ஒரு மனிதராக எனக்கு அவர் பிடித்து போனதற்கு அதுவும் ஒரு காரணம்,

மெல்ல கொல்லும் விஷம் என்பார்கள் ரஹ்மான் இசையை. முதலில் கேட்கும்போது பிடிக்காது. ஆனால் கேட்க கேட்க நம்மை அடிமைப்படுத்தி விடும். மிக சத்தியமான வார்த்தை அது.

 

 

Saturday, December 27, 2014

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில்


டந்த 19.12.2014 அன்று மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், இந்திய அரசியல் சாசனத்தை 122 ஆம் முறையாக திருத்துவதற்கான வேண்டுகோளை சமர்ப்பித்தார். இதன் படி இந்தியாவில் வரும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜி.எஸ்.டி என்னும் ஒருமுக வரிவிதிப்பு முறை அமல்ப்படுத்தப்படுகிறது. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் புதிதாக 246A மற்றும் 279A ஆகிய புதிய சரத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன.
இது புதிய திட்டம் அல்ல. கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட 115 ஆம் அரசியல் சாசன திருத்தம் ஏற்கனவே ஜி.எஸ்.டி அமல்ப்படுத்துவதற்கான வழிமுறைகளை அனுமதித்து விட்டது. அப்போது பலமாக எதிர்த்து அந்த சட்டத்தை அப்போது முடக்கி போட்டவர்கள் இப்போது அதை அமல்ப்படுத்த சிறு திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவ்வளவு தான். அந்த அரசியலுக்குள் போகாமல் நாம் ஜி.எஸ்.டி என்றால் என்ன? அது எந்த வகையில் எல்லாம் உபயோகம், எந்த வகையில் எல்லாம் உபத்திரவம் என்பதை பற்றி மட்டும் விவாதிக்கலாம்..

இந்தியாவில் இப்போதைய வரி விதிப்பு முறையில் ஜி.எஸ்.டி தரும் மாற்றம் :.

இந்தியாவில் இப்போதைக்கு மாநிலத்துக்குள் நடக்கும் வியாபாரங்களுக்கு வாட் வரியும் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வியாபாரங்களுக்கு சி.எஸ்.டி வரியும், உற்பத்தி பொருட்களுக்கு எக்ஸைஸ் வரியும், இறக்குமதி பொருட்களுக்கு கஸ்டம்ஸ் வரியும், சேவைகளுக்கான சர்வீஸ் வரியும், இது தவிர என்ட்ரி டாக்ஸ், ஆக்டிராய், என்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், என பல பல வரிகள் உள்ளது. மாநிலங்களும் மத்திய அரசும் தனித்தனியாக விற்பனைக்கு தகுந்த படி வரி விதிக்கின்றன. அதாவது வாட் வரி, ஆக்டிராய், என்ட்ரி டாக்ஸ், எண்டேர்டெயின்மேண்ட் டாக்ஸ் போன்றவை மாநிலங்களும், எக்ஸைஸ், கஸ்டம்ஸ், சர்வீஸ், சி.எஸ்.டி போன்றவை மத்திய அரசும் விதிக்கின்றன..

இதில் மாநிலங்கள் விதிக்கும் மாநில வாட் வரியை மொத்தமாக மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம். மத்திய அரசு விதிக்கும் சி.எஸ்.டியில் மாநிலங்களுக்கான பங்கு தொகை மட்டும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒரு வியாபாரத்துக்கு ஒரே ஒரு விற்பனை வரி தான் விதிக்கப்படுகிறது. அதில் வாட் வரியை மட்டும் வியாபாரிகள் கழித்துக்கொண்டு பாக்கியை அரசுக்கு கட்டினால் போதும்..

இப்போது அறிமுகப்படுத்தப்படும் ஜி.எஸ்.டி படி இனி, மாநிலத்துக்குள்ளான விற்பனைக்கு இரு அரசுகளும் ஒரே சமயத்தில் வரி விதிக்கும் (SGST & CGST). மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு மத்திய அரசு மட்டும் IGST விதிக்கும். இந்த IGST வரி விதிப்புமுறை மாநிலங்களுக்கு பெருந்த இழப்பு என்பதால் சில மாநிலங்கள் அதனை எதிர்க்கின்றன. எதிர்ப்பு கண்ட மத்திய அரசு, ஐந்து வருடங்களுக்கு இழப்பினை மாநிலங்களுக்கு திருப்பி தருவதாக சொல்லி இருக்கிறது. அதுவும் எப்படி? முதல் மூன்று ஆண்டுகளுக்கு 100% நான்காம் வருடம் 75% ஐந்தாம் வருடம் 50% மாநிலங்களுக்கு கிடைக்கும். ஆறாம் வருடம் முதல் அனைத்து வரியும் மத்திய அரசுக்கு மட்டுமே. மாநிலங்களுக்கு அதில் சல்லி காசு கிடையாது. அந்தந்த மாநிலங்கள் அந்தந்த வரி வருவாயை வைத்து அவர்களே நிர்வகித்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெளிவாக சொல்லி விட்டது..

ஜி.எஸ்.டி – சாதக பாதகங்கள்:.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. பல பல வரிகள் செலுத்துவதற்கு பதில் ஒரே வரி, ஒரே ரிட்டர்ன்ஸ் என்கிற முறை பெரிய சுமையிலிருந்து விடுதலை அளித்தது போல் இருக்கிறது வியாபாரிகளுக்கு. . இந்த ஜி.எஸ்.டி மூலம் மொத்தம் 17 வகையான வரிவிதிப்புகள் ரத்து செய்யப்பட்டு ஒரே வரியாக அமலாகிறது. நாடு முழுவதும் சீரான வரி என்பது மாநிலங்களுக்கிடையேயான ஏற்ற தாழ்வை குறைக்கும். பொருட்களுக்கான போட்டியினை சமன் படுத்தும். .

அதே சமயத்தில் பல பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. எனது பார்வையில் அவற்றுள் சில:.

1. நாடு முழுவதும் சீரான வரி விதிப்பு என்பது இந்தியாவுக்கு ஒத்து வராது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் வளர்ச்சி, சீதோஷண நிலை, விளைச்சல், பூகோள வாய்ப்புகள் அடிப்படையில் மாநிலங்கள் தங்கள் மாநில தொழில் துறையினரின் வளர்ச்சிக்காக சில வரி சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இனி அது முடியாது. பஞ்சாபில் கோதுமைக்கும் தமிழகத்தில் அரிசிக்கும் கொடுக்கப்படும் முக்கியத்தும் இருக்காது. எல்லா பொருட்களுக்கும் எல்லா மாநிலத்திலும் ஒரே விதமான வரி விதிப்பு. இது பல வகைகளில் சிக்கலை ஏற்படுத்தும்.

2. பெட்ரோல் ஜி.எஸ்.டி வரியில் கொண்டுவரப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அதே சமயம் ஜி.எஸ்.டி தவிர சிறப்பு எக்ஸைஸ் வரி மத்திய அரசால் பெட்ரோலுக்கு விதிக்கப்படுவதால் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும்..

3. ஸ்டாம்ப் டியூட்டி (முத்திரைத்தாள்), மது போன்றவற்றுக்கான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே இருக்கும். மாநிலங்கள் அவர்களது விருப்பப்படி வரி விதித்து கொள்ளலாம். இது விலைகளில் ஏற்ற தாழ்வை கொண்டுவந்து நாடு முழுதுமான சீரான வரி என்னும் சித்தாந்தத்தையே சிதைத்து விடும். மது உற்பத்தி / விற்பனை உள்ள மாநிலங்களுக்கு அதிக வருவாயும் மது விலக்கு கொள்கை உள்ள மாநிலங்களுக்கு வரியின்மையும் ஏற்படுத்தும். எல்லா மாநிலங்களும் மதுவை ஊக்குவிக்கும் நிலைக்கு தள்ளப்படும்..

4. வரிவிதிப்பு முறையை அமல் செய்ய ஜி.எஸ்.டி கவுன்சில் என ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் மத்திய மாநில அமைச்சர்கள் உறுப்பினர்கள். இவர்களது ‘ஒருமித்த’ கருத்தின் அடிப்படையில் பொருட்களுக்கான வரி விதிப்பு முறை கொண்டுவரப்படும். இதில் பல வட மாநில பிரதிநிதிகள் சிண்டிகேட் அமைத்து சில குறிப்பிட்ட பொருட்களுக்கு லாபி செய்ய முடியும். உதாரணமாக சணல் (ஜூட்) தமிழகத்தில் அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் வட மாநிலங்களில் அது மிக பெரிய வியாபாரம். அதே போல ஸ்பைசஸ் கேரளா கர்நாடகாவில் முக்கியம் மற்ற மாநிலங்களுக்கு முக்கியமில்லை. எனவே எந்த விதத்தில் வரி விதிப்பு இருக்க போகிறது. அதில் என்னென்ன உள்ளடி அரசியல் விளையாடும். அவை எந்தெந்த வகையில் மாநில தொழில்துறை, விவசாயம், ஆகியவற்றை பாதிக்கும் என்பதை எல்லாம் கணிக்க முடியவில்லை. மேலும் மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசின் பிரதிநிதிகள் கவுன்சிலுக்கு அனுப்பப்படும் பொழுது அவர்களது மாறுபாடான கொள்கையும் பாதிக்கும். எல்லா வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதால், இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் முறை எந்த அளவுக்கு செயல்படும் என்பதே கேள்விக்குறியே. தமிழகம் போன்ற மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளில் ஏழு அமைச்சர் ஒரே துறைக்கு மாறி மாறி வருகையில் என்ன மாதிரியான கொள்கை முடிவு எடுக்க முடியும் என்பதும் புரியவில்லை..

5. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு ஜி.எஸ்.டி பொருந்துமா என்பதை மத்திய அரசு தெளிவு படுத்தவில்லை. இப்போதே ஆர்ட்டிக்கள் 370 கொடுக்கும் சிறப்பு சலுகை காரணமாக இந்திய சட்டங்கள் அங்கே செல்லாது. அவர்கள் விரும்பினால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஜி.எஸ்.டி அங்கே பொருந்தாது என்கிற நிலையில் நமது பொருட்களுக்கு அங்கெயும், அங்குள்ள பொருட்களுக்கு (குங்குமப்பூ, கம்பளி, மலர்கள்) இங்கேயும் வித்தியாசமான வரிவிதிப்பின் கீழ் வரும். ஜம்மு காஷ்மீரை நமது நாட்டின் ஒரு பகுதியாக ஒப்புக்கொள்வதில் காங்கிரஸை போலவே பாஜகவுக்கும் தயக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது..

6. மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தில் மாநிலங்கள் விரும்பினால் 1% கூடுதல் வரி விதிக்கலாம் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதுவும் சீரான வரிவிதிப்பை தகர்க்கும். அதோடு விலை ஏற்றமும் தவிர்க்க முடியாது..

7. ஜி.எஸ்.டி வரி என்பது சேருமிடம் சார்ந்த வரியாக கொண்டு வரப்படுகிறது. (இப்போது அமலில் இருப்பது உற்பத்தி இடம் சார்ந்த வரி). இதன் படி தமிழகம், கேரளம், மராட்டியம், வங்காளம், குஜராத், கர்நாடகம், ஆந்திரா போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்கள் பாதிக்கப்படும். அதாவது உதாரணமாக இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பிகாருக்கு விற்கப்படும் பொருளுக்கான வரி அக்ரூ ஆவது பீகாரில். எனவே பீகார் அரசுக்கு வரி வருவாய் அதிகம். ஆனால் உற்பத்தி செய்யும் நமக்கு வரி வருவாய் கிடைக்காது. இதன் பின் விளைவுகள் தொழில் துறைக்கான முக்கியத்துவம் குறையும், வேலையின்மை அதிகாரிக்கும். எல்லா மாநிலங்களும் வரி வருவாய்க்காக, உற்பத்தியை விட உபயோகத்தையே அதிகம் விரும்பக்கூடும். இது தொழில் வளர்ச்சியை பாதிக்கும்..

8. சேவை துறையினரும், உற்பத்தி துறையினரில் பல்வேறு மாநிலங்களில் வேர் ஹவுஸ் வைத்து வியாபாரம் செய்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். லாஜிஸ்டிக்ஸ் துறை பற்றிய தெளிவான திட்டமிடல் இந்த அரசிடம் இல்லை என்பது மிக அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது. முந்தய அரசு சப்ளை செயின், லாஜிஸ்டிக்ஸ், வேர் ஹவுசிங் போன்ற துறைகள் தான் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவில் முக்கியமான தொழிலாக இருக்கும் என தீர்க்கதரிசனமாக கணித்து அதற்கு தக்கவாறு கொள்கைகளை வெளியிட்டது. ஆனால் அப்படியான முன் யோசனை எதுவும் இந்த அரசிடம் காணப்படவில்லை..

9. அரசியல் சட்டம் விதி 366 (29A) படியான வரி விதிக்கும் பிரிவுகள் பற்றி இந்த அரசிடம் எந்த விளக்கமும் இல்லை. இப்போது சமர்ப்பிக்கப்பட திருத்தத்தில் கூட அதை பற்றி எந்த விளக்கமும் இல்லாமல் இருக்கிறது. ஆகவே ஹயர் பர்ச்சேஸ், வாடகை, லீஸ், போன்றவை குறித்த கொள்கைகள் என்னவென்றே இன்னமும் தெரியவில்லை. இந்தியாவின் மிக பெரிய வணிகமான ஹயர் பர்ச்சேஸ் பற்றி இந்த அரசு முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கிப்போட்டு விடும்..

தமிழகத்தின் பார்வை:.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி திருத்த சட்ட முன்வடிவை அது தாக்கல் செய்யப்பட மறுநாளே, அதாவது 20.12.2014 லேயே தமிழக அரசு மிக கடுமையாக எதிர்த்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் மிக முக்கியமானது. தொழில்வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான பங்காற்றுதல் ஆகியவற்றில் தமிழகம் எப்போதுமே முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போதைய திருத்தத்தின் படி, மாநில அரசுகளுக்கான பங்கு முடக்கப்படுவதும், உற்பத்தி மாநிலங்களை விட உபயோகிக்கும் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பது போல சட்டத்தை திருத்தி இருப்பதும் தமிழகம் போன்ற மாநிலங்களை வஞ்சிப்பது போலிருக்கிறது. மேலும் அவர் தனது கடிதத்தில் வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக எந்த விளக்கமும் இல்லை. எப்படி பட்ட கணக்கீடு பின்பற்ற படும் என சொல்லப்படவில்லை என்றெல்லாம் தெளிவாக சுட்டி காட்டி இருக்கிறார். அதாவது தமிழகம் பரந்துபட்ட தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியதற்கான தண்டனையாக இந்த சட்டம் வந்திருக்கிறது. நாம் உற்பத்தி செய்தும் நமக்கு வருவாய் இல்லை. ஆனால் நம்மிடம் வாங்கும் பயனாளி மாநிலங்களுக்கு வரி வருவாய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது..

இப்போதைக்கு மிக குழப்பமான சூழலில் தான் இருக்கிறது ஜி.எஸ்.டி அமலாவதற்கான பாதை. மத்திய அரசு தாக்கல் செய்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட பின்னால், பல பல விடை தெரியாத கேள்விகளுக்கு மத்திய அரசு விடைகளை தெளிவுபடுத்தியபின்னால், மாநிலங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்ட பின்னால், அவர்கள் எடுக்கும் ஒருமித்த கருத்தை அறிந்த பின்னால், எதிர் வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் மாநிலகட்சிகளின் கருத்துக்களையும் அறிந்த பின்னால், தொழில்துறையினரின் பயத்தை எல்லாம் போக்கிய பின்னால் தான் ஜி.எஸ்.டி நமக்கு சரியா இல்லையா என்பதையே சொல்ல முடியும்..

இப்போதைக்கு இது வெறும் அரசியல் கணக்குக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்த வரலாற்று பதிவுக்காக மட்டுமே அவசரம் அவசரமாக அள்ளி தெளித்திருக்கிறது மத்திய அரசு.


References:


1. Constitution Amendment 115 of 2011


2. Summary of Recent Amendment points


3. Constitution Amendment 122 of 2014



Friday, December 26, 2014

பாஜக - அது வேறே வாய்

போன மே மாசம் பாராளுமன்ற தேர்தல் வந்தப்போ மக்கள் கிட்டே இருந்த ஒரே ஒரு எதிர்பார்ப்பு, நமக்கெல்லாம் இனி விடிவு காலமே வராதாங்கறது தான். அந்த அளவுக்கு காங்கிரஸ் மக்களை நோக்கடிச்சதா பெரிய பிரச்சாரம் எல்லா மீடியாக்கள் மூலமாவும் பரப்பப்பட்டிருந்தது.

வராது வந்த மாமணியா வந்தாரையா நரேந்திர மோடி.


குஜராத்தை முன்னேற்றிய (?) அபரிமிதமான நிர்வாகத்திறமை மிகுந்த மோடி கிட்டே இந்த நாட்டை கொடுக்காம போனா நாடு நாலே மாசத்துல நாசமாயிருங்கற லெவலுக்கு பிரச்சாரம் தூள் பறந்துச்சு.

குஜராத் எனும் மாநிலத்தை கட்டி ஆள்றது வேறே, பரந்துபட்ட இந்தியாவை அதன் சிறப்பு கெடாம ஆள்றது வேறெங்கற அடிப்படை விஷயத்துல கூட கவனம் செலுத்த முடியாத படிக்கு மோடி புகழ் பரப்பல்கள் இருந்தது


ஒருவழியா அறுதிப்பெரும்பான்மையையும் மீறி இமாலைய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைச்சாரு மோடி


ஏற்கனவே அவர் மேலே நிறைய குற்றச்சாட்டு இருந்தாலும், காங்கிரஸ் நமக்கு செஞ்சதா நம்பப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்கணும்ங்கற வெறியில் இருந்த மக்கள், அள்ளி அள்ளி கொடுத்த வோட்டுக்கான இப்போதைய மரியாதை என்னன்னு லைட்டா ரிவைண்ட் பண்ணி பார்க்கலாமா.


ரெண்டு கொசுவர்த்தியை கண்ணு முன்னாடி சுத்தவுட்டு, பாஜகவின் தேர்தல் பிரச்சார காலத்துக்கு போனா, பிரச்சாரத்தில் கேட்டதிலெல்லாம் தவறாம இடம்பிடிச்சிருந்ததில் இதெல்லாம் இருக்கு:


1. நடுத்தர வர்க்கத்தை சந்தோஷப்படுத்த வருமான வரியை முற்றிலுமா ஒழிப்போம்
2. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு கொண்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் இனாமா கொடுப்போம்
3. அந்நிய முதலீட்டை தடுப்போம்.
4. சுதேசி திறமைகளை ஊக்குவிப்போம்
5. தொழில் துறையை மேம்படுத்துவோம்
6. பாகிஸ்தானுக்கு பயப்படமாட்டோம். இந்தியாவின் ஒரு உயிர்மீது கைவைத்தாலும் பாகிஸ்தானுடன் போர் புரிவோம்
7. இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவோம்
8. அரசியலில் கிரிமினல்களை அனுமதிக்கமாட்டோம்
9. ஊழலை அடியோடு அகற்றுவோம். ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கரம் கொடுக்கமாட்டோம்.
10. ஸ்பெக்டிரம் நிலக்கரி சுரங்கம் போன்ற பொது ஒதுக்கீடுகளை ஏல முறையில் வெளிப்படையாக விற்போம்
11. திறமையான வெளிப்படையான நிர்வாகத்தை அமைப்போம்.


சூப்பரா இருந்துச்சுல்ல? ஆங்... இதை நம்பித்தான் மொத்த மக்களும் ஓட்டு போட்டாங்க.


இதுல அவங்க கொடுத்த நம்பிக்கை என்னென்னா, இதை எல்லாத்தையும் நூறு நாளுக்குள்ளே நிறைவேத்துவோம்ன்றது தான்.




இப்ப ஆட்சி அமைச்சு இருநூறு நாளுக்கு மேல ஆயிருச்சுல்ல? ரிவியூ என்னன்னு பார்க்கலாமா?



1. வருமான வரியை ஒழிக்க முடியாது. அது நாட்டுக்கு சரிப்படாதுன்னு பட்டவர்த்தனமா சொல்லிட்டாங்க. அட்லீஸ்ட் வருமான வரி உச்ச வரம்பையாவது அஞ்சு லட்சமா உயர்த்துவாங்கன்னு எதிர்பார்த்தா அதுவும் முடியாதுன்னுட்டாங்க. ரிசர்வ் வங்கியின் CRR கொள்கையில் கூட எந்த மாற்றத்தையும் கொண்டு வரலை. கேட்டா, அதெல்லாம் காங்கிரஸ் கொண்டு வந்த கொள்கைகள், அதை மாற்ற விரும்பலைன்னு சொல்லிட்டாங்க.


2. கருப்பு பண மேட்டர்ல அடிச்ச அந்தர் பல்டிகள் தனியா பதிவு எழுதற அளவுக்கு காமெடியானது. உச்ச நீதிமன்றமே கடுப்பாகி கடுமையான உத்தரவு போட்டப்பறம் “எங்க கிட்டே கருப்பு பண லிஸ்டே இல்லை. 2006 ல் HSBC லருந்து திருட்டு தனமா லீக் ஆன அதிகாரப்பூர்வமற்ற லிஸ்ட் மட்டும் தான் இருக்கு. அதுலயும் முக்காவாசி அக்கவுண்ட்ல பத்து பைசா கூட இல்லைன்னு” பவ்யமா சொல்லிருச்சு. அதோட விட்டாங்களா? கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளுடன் போட்டுகிட்ட தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்துலருந்தும் திடீர்னு விலகிட்டாங்க. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைச்சாச்சு. இதுபத்தி கேட்டதுக்கு, வெளிநாட்டு கருப்பு பணத்தை விடுங்க. உள்நாட்டுலேயே நிறைய கருப்பு பணம் இருக்கு. அதை முதலில் கண்டுபிடிப்போம்னு பல்டி அடிச்சாங்க. ஆனா பாருங்க, ஊழல் கருப்பு பணத்தை பாதுகாக்க வசதியா இருந்த கிசான் விகாஸ் பத்திரத்தை 2007 ஆம் வருஷம் ரத்து பண்ணினாங்கல்ல, அதை மீண்டும் கொண்டு வந்திருக்காங்க. இது ஊழலையும் அதன்மூலம் கிடைக்கும் கருப்புப்பணத்தையும் ஊக்குவிக்க வசதியான விஷயம்கறதை தெரிஞ்சும் கிசான் விகாஸ் பத்திரத்தை கொண்டுவந்திருக்காங்க. கருப்பு பணத்தை ஒழிக்கப்போறாங்களாம் (!)


3. அந்நிய முதலீட்டு திட்டத்தை காங்கிரஸ் கொண்டுவந்தப்பல்லாம் ஒரு மணிநேரம் கூட பார்லிமெண்டை நடக்கவிடாம முடக்கி வெச்சப்போ பாஜக சொல்லிச்சு, இந்திய தொழில்களை அன்னியருக்கு கொடுக்கக்கூடாது. இந்தியாவை விக்க போறீங்களான்னு கூட கேட்டாங்க. ஆனா காங்கிரசாவது முதலீட்டு தேவைக்காக 25% அனுமதிச்சாங்க. அதிலும் அதிக முக்கியத்துவமில்லாத துறைகளில் தான் அனுமதிச்சாங்க. சில்லறை விற்பனையில் அனுமதிக்கற ஐடியா வந்தப்பவே பாஜக கடுமையா எதிர்த்துச்சு. ஆனா இப்ப என்னடான்னா, மருத்துவம், கல்வி, வியாபாரம்னு எல்லாத்துலயும் அந்நிய முதலீட்டை அனுமதிச்சிருக்காங்க. அதுவும் 100% வரை. இன்னும் ஒரு படி மேலே போய் ராணுவம், ராணுவ தளவாடங்கள், ரயில்வே போன்ற முக்கியமான சென்ஸிடிவான துறைகளில் கூட அந்நிய முதலீடு. சூப்பருல்ல?


4. மேக் இன் இந்தியா மேட் இன் இந்தியான்னு ஒரு வாசகத்தை உருவாக்கி எல்லா முதலீட்டாளர்களையும் ஈர்க்க ஆரம்பிச்சப்போ நான் கூட சந்தோஷப்பட்டேன். இனி சுதேசி இயக்கம் மீண்டும் வலுப்பெரும்னு. ஆனா விசாகப்பட்டிணம் மாஸ்டர் பிளான், டெல்லி சென்னை புல்லட் ரயில் மாதிரி நம்ம ஆளுகளே செய்ய கூடிய திட்டங்களை கூட வெளிநாட்டுகிட்டே ஒப்படைச்சிருக்காங்க. மேக் இன் இந்தியானா இந்தியர்களின் தயாரிப்பு இல்ல. வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் வெச்சு உற்பத்தி செய்யும் பொருட்கள்னு ஒரு புது வியேக்கியானத்தை வேற கொடுத்து நம்மை ஷாக் அடிக்கிறாங்க.


5. இந்த நிமிஷம் வரைக்கும் புதிய பொருளாதார கொள்கையோ, தொழில் கொள்கையோ வெளியிடலை. இந்த அரசின் தொழில் கொள்கை என்னன்னு தொழில் துறைக்கும் தெரியலை, தொழில் துறை அமைச்சருக்கும் தெரியலை. போன காங்கிரஸ் ஆட்சியின் தொழில் கொள்கையே அபாரமா இருக்கரதாலேயோ என்னவோ அதையே இன்னும் தொடர்ந்து பயன்படுத்த சொல்லி உத்தரவும் போட்டிருக்காங்க. 2013 ஆம் வருஷம் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட ‘பொருளாதார மேம்பாட்டுக்கான பத்து கட்டளைகள்’ பக்காவா பலன் கொடுக்க ஆரம்பிச்சிருக்கறதை புரிஞ்சுகிட்ட பாஜக, அதை அப்படியே தீவிரமா அமல்படுத்தி வர்றாங்க. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் ‘அது காங்கிரஸ் திட்டம்னு’ சொல்லாம மோடியின் திட்டம்னு கிரெடிட் எடுத்துக்காராங்க. என்னமோ போங்க நாடு நல்லா இருந்தா சரி.


6. காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தான் அத்து மீறி நுழைஞ்சு இந்திய ராணுவ வீரர்கள் ரெண்டு பேர் தலையை வெட்டி எடுத்துட்டு போனப்போ பாஜக கொந்தளிச்சிருச்சு. இதே இந்நேரம் நாங்களா இருந்திருந்தா பாகிஸ்தானை நிர்மூலமாக்கி இருப்போம். காங்கிரஸ் அரசாங்கம் பயந்தாங்கொள்ளி. ஆனா மோடிக்கு 56 இன்ச் மார்பு இருக்கு. அதனால அவர் தான் வீரர். எங்ககிட்டே ஆட்சியை கொடுத்து பாருங்கன்னு சொன்ன பாஜக ஆட்சியில் இப்ப தினம் பீரங்கி தாக்குதல் தான். சாப்பாடு பார்சல் கட்டிட்டு வந்து கண்டிநியூவா அடிக்கிறான். அதை விட கொடுமை ஒரே நாளில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைஞ்சு 23 பேரை கொன்னுட்டு போயிருக்காங்க. இந்தியா என்ன பண்ணுச்சா? கோபமா முறைக்க கூட தெம்பில்லாம ஒரு கடுதாசியை தட்டி விட்டாங்க. காங்கிரஸ் அட்லீஸ்ட் பாக், தூதரை சம்மநனுப்பி கூப்பிட்டு மிரட்டியாவது அனுப்பிச்சாங்க. இவங்க பம்மிட்டு இருக்காங்க. தீவிரவாதிகள் ஊடுருவல் நடக்க வாய்ப்பிருந்தாலே விமானப்படையை உசுப்பேத்தி தயார்ப்படுத்தி எல்லையில் ரோந்து அனுப்பி அவங்களை லைட்டா பயப்படுத்திட்டு இருந்த காங்கிரஸை கிண்டல் பண்ணினவங்க, இப்ப சமீபத்தில் பரூச், ராஜோரி செக்டார்ல அத்து மீற 200 தீவிரவாதிகள் முகாமிட்டிருக்கிற தகவல் தெரிஞ்சதும் அதிரடியா நடவடிக்கை எடுத்தாங்க. எதுக்கு? மக்களை எல்லாம் அங்க்கிருந்து காலி பண்ணி பாதுகாப்பான இடத்துக்கு மாத்தறதுக்கு. இதுக்கு பதிலா, பேசாம போயி ஃபோர்சா மொறைச்சிட்டாவது வந்திருக்கலாம்.


7. சீனா இந்திய பெருங்கடல்ல நிலைகொண்டிருக்கு. இலங்கைல கடற்படை தளம், மாலத்தீவுல பாலங்கள், நேபாலுக்கு ரயில், பாகிஸ்தானுக்கு ரோடுன்னு நம்மளை சுத்தி சுத்தி சிவில் வர்க் பண்ற மாதிரி தன்னுடைய ஆதிக்கத்தை கொண்டு வந்துட்டு இருக்காங்க. இந்த நிலையில் தென் பிராந்தியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெண்டு கடற்படை கப்பல்களை எக்சிபிஷனா மாத்தி கொல்லத்திலேயும் கோழிக்கோட்டுலயும் கண்காட்சி நடத்திட்டு இருக்காங்க. விமான படையில் ஒரே ஒரு விமானம் ரிப்பேர் ஆனதை அடிப்படையா வெச்சு 200 போர் விமானங்களை பறக்க கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காங்க. நாமளே போர் விமானங்களை செய்வோம்னு சொல்லி லக்ஷ்யாவுக்கு (இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த எடை போர் விமானம்) காத்திருக்காங்க. நாம காத்திருக்கலாம். அவன் காத்திருப்பானான்னு தான் தெரியலை. சீனா மெல்ல மெல்ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தன் காலை வைக்குது. ஆனா அதில் கவலைப்பட எதுவும் இல்லைன்னு இந்திய அரசாங்கம் சொல்லுது. நல்ல லட்ஷனத்தில் இருக்குல்ல இந்திய பாதுகாப்பு?


8. மொத்த அமைச்சரவையில் 36% பேர் கிரிமினல்கள், மொத்த பாஜக எம்பிக்களில் 54% பேர் கிரிமினல்கள்னு புள்ளிவிவரங்களா பறக்குது. வன்முறையில் ஈடுபட்டவங்க மேல நடவடிக்கைகள் எடுத்த காலம் போய், அவங்களை கூப்பிட்டு அமைச்சராக்குற பண்பாடு வந்திருக்கு.


9. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் கருணை காட்டுதுங்கரதெல்லாம் தனி கதை. ஆனா தன்னுடைய கூட்டணி கட்சி செஞ்சதா சொல்லும் ரூ. 6000 கோடி டிரக் ஊழலுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லி அவங்களை காப்பாத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்காங்க பாஜக. (திமுக செஞ்சதா சொல்லப்படும் 2G ஊழல் குற்றச்சாட்டு வந்தப்ப, கூட்டணி கட்சி ஊழல் செஞ்சா அதுக்கு ஆளும் கட்சியும் தான் பொறுப்புன்னு ஒரு புது வியாக்யானம் சொன்ன அதே கோஷ்டி தான் இது!). ஊழல் வாதிகள் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறவர்கள் எல்லாரும் மன்னிப்பு கேட்டாலே, ‘அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்கல்ல?? எல்லாம் முடிஞ்சுபோச்சு!! கிளம்புங்க கிளம்புங்க’ டைப் நாட்டாமை தீர்ப்புகள் வேறே இப்ப பிரபலமாகிட்டு வருது.


10. ஸ்பெக்டிரத்தை ஒதுக்கீடு செஞ்சது தவறு. அதை ஏலத்தில் விட்டிருக்கணும்னு அந்த குதி குதிச்சவங்க, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏல முறையில் தான் விடணும்னு வற்புறுத்துனவங்க பாஜக. இத்தனைக்கும் நிலக்கரி சுரங்க விஷயத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதல் உரிமை கொடுத்து அவங்களுக்கெல்லாம் ஒதுக்கீடு செஞ்சப்பறம் மிச்சம் மீதி இருக்கிற சுரங்கங்களை தான் மத்தவங்களுக்கு ஒதுக்கீடு செஞ்சுது காங்கிரஸ். ஆனா இப்ப பாஜக அரசு போட்டிருக்கிற ஒரு புதிய உத்தரவுப்படி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பொதுவாக நடத்தப்படும். இதில் ‘பொது துறை நிறுவனங்களும் விரும்பினால் பங்கு பெறலாம்’னு ஒரு சுற்றறிக்கை அனுப்பிருக்காங்க. அதாவது பொது துறைக்கு முன்னுரிமை இல்லை. அவங்களுக்கும் பொது போட்டி & ஒதுக்கீடு தான். இதன் மூலம் அருமை நண்பர் ஆதானி வளம்பெறுவார்ங்கறதெல்லாம் நான் சொல்ல விரும்பாத விஷயங்கள். அதான் சொல்லலை.


11. கிசான் டிவின்னு ஒரு திட்டம். பேரை அறிவிச்சாங்க. ஆனா என்ன செய்யுறது அதில்னு தெரியாம, யோசனை கேட்டு விளம்பரம் பண்ணிருக்காங்க. பழைய கிளீன் இந்தியா மூவ்மெண்டை ஹிந்திப்படுத்தி சுவச்பாரத் யோஜனா ஆக்கிட்டாங்க. ஆதார் வேண்டாம்னு சொன்னவங்க 2000 நிரந்தர மையங்கள் ஏற்படுத்த உத்தரவு போட்டிருக்காங்க. ரயில் நிலையங்களை பராமரிக்கிறது அரசாங்க வேலை இல்லைன்னு சொல்லி அதை தனியார் வசம் ஒப்படைக்க போறாங்களாம். ரேஷன்ல மண்ணெண்ணை எல்லாம் மானியத்தில் கொடுக்க முடியாதுன்னு சொல்லீட்டாங்க. டீசல் விலை நிர்ணயத்தையும் ஆயில் கம்பெனிகளுக்கே கொடுக்க போறாங்க. சிம்பிலான ஜி.எஸ்.டி வரி முறையை கூட செம்மையா சோதப்பி குழப்பி வெச்சிருக்காங்க (ஜி.எஸ்.டி பத்தி டீட்டயிலா அப்பாலிக்கா ஒரு ஸ்பெஷல் எடிசன் போடுறேன்!) கூட்டாட்சி தத்துவத்தையே உடைச்சு எறியுர மாதிரி, மாநிலங்கள் இனி மத்திய அரசுகிட்டே இருந்து மானியம் எதிர்பார்க்க கூடாது. அந்தந்த மாநிலங்கள் அவங்கவங்களுக்கு கிடைக்கிற வரி வருவாயை வெச்சு அவங்கவங்க தேவைகளை ஈடு செஞ்சுக்கொங்காண்ணு சொல்லிருக்காங்க. என்னா திறமை என்னா திறமை.. நிர்வாகம்னா இது நிர்வாகம்.


இன்னொருபக்கம், தேர்தல் அறிக்கைல சொன்ன சில விஷயங்களை அட்சரம் பிசகாம செஞ்சிருக்காங்க. கங்கையை சுத்தப்படுத்தறது, மதமாற்ற எதிர்ப்பு, 100% பூரண இந்து நாடு அமைய மத்த மதங்களை ஒழிப்போம்னு சவால் விடுறது, சமஸ்கிருதத்தை பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கிறது, ஹிந்தியை வலுக்கட்டாயமா திணிக்கிறது, இட ஒதுக்கீடு முறையை குறைக்கிறதுன்னு அவங்களோட அஜெண்டாக்களை நிறைவேத்த எந்த தயக்கமும் காட்டுறதே இல்லை. மத்த முக்கிய விஷயங்களுக்கு தான் அவங்ககிட்டே நேரம் இல்லாம இருக்கு.


பாஜக எந்த தப்பை செஞ்சாலும் ‘அதுக்கு எதுனா காரணம் இருக்கும்யா. ஏதோ ஐடியாவோட தான் இதெல்லாம் செய்யுராறு. வெயிட் பண்ணி பார்க்கலாம்னு’ நம்பிட்டு இருக்கிற திருவாளர் பொது ஜனம் இருக்கும் வரை அவருக்கு என்ன கவலை. நிஜமாவே நாட்டு மேலயும் வளர்ச்சி மேலயும் அக்கறை இருக்கிறவங்க தானே இதுக்கெல்லாம் கவலைப்படணும்?


இன்னும் நிறைய இருக்கு சொல்ல. இன்னொரு தபா பேசுவோம்.



Thursday, December 11, 2014

நகைக்கடையும் இந்திய பொருளாதாரமும்


மீபத்தில் நண்பன் நகை வாங்க துணைக்கு கூப்பிட்டதால் அவனுடன் ஒரு புகழ்பெற்ற நகைக்கடைக்கு போகவேண்டியதாச்சு.

நகை வாங்கியபின் ஒரு சீட்டு கொடுத்தாங்க. அதில் நகையின் எடை, விலை, கூலி, சேதாரம் எல்லாம் கணக்கு போட்டு பணத்தை கட்ட சொன்னாங்க. பில் கிடையாது. பில் போட்டா டேக்ஸ் வரும் அதனால வேண்டாமேன்னு கடைக்காரனே ரொம்ப அக்கறையா சொன்னான். அப்படியும் நம்ம நண்பர் விடாம பரவாயில்லை பில்லே போடுங்கன்னு சொன்னதும் ஒரு பில் பிரிண்ட் அவுட் கொடுத்தாங்க. அது ஆக்சுவல்லா பில்லே அல்ல. ஒரு எஸ்டீமேட். திரும்பவும் பொலைட்டா சொல்லி எங்களுக்கு எஸ்டீமேட் வேண்டாம் டேக்ஸ் பில் கொடுங்கன்னு சொல்லி வாங்கிட்டு வந்தோம்.

இது பத்தின விரிவான விவாதம் அன்னைக்கு ரா முச்சூடும் எங்களுக்குள்ளே ஓடிச்சு. அதன் சில துளிகள் இங்கே.

இன்னைய தேதியில் மளிகைக்கடைகளுக்கு அடுத்தபடியா மிக பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்வதும் கருப்புப்பண பரிவரத்தனை நடப்பதும் நகைக்கடையில் தான்.

மிக அதிக தொகையில் வியாபாரம் ஆனாலும் அதை அரசுக்கு அவங்க கணக்கு காட்டுறது கிடையாது. என்னா ஜஸ்ட் ஒரு துண்டு சீட்டில் கணக்கெழுதி காமிச்சிட்டு காசு வாங்கிடுவாங்க. சிலர் கொஞ்சம் புரஃபஷணலா, பிரிண்ட் செய்த மெமோ சீட்டில் எழுதி தருவாங்க. பெரிய கடைகளில் இன்னும் ஒரு படி மேலே போய், பிரிண்டடு பில் மாதிரியே இருக்கும் எஸ்டீமேட் தருவாங்க. அதில் டாக்சும் போட்டிருப்பாங்க. ஆனா இதை எதுவும் அரசாங்கத்தின் விற்பனை வரி கணக்குக்கு சமர்பிக்க மாட்டாங்க. டாக்ஸ் பில் / டாக்ஸ் இன்வாய்ஸ் போட்டா மட்டும் தான் கணக்கு காட்டி அதுக்கான வரி கட்டனும். டாக்ஸ் இன்வாய்ஸ் போடாம எஸ்டீமெட்டிலேயே வரி வசூலிச்சாலும் அதை அரசுக்கு கட்டமாட்டாங்க. என்னா அது வெறும் எஸ்டீமேட் தான். அந்த வரி அவங்களுக்கு கூடுதல் லாபம்.

தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நிறைய கட்டுப்பாடுகளை விதிச்சிருக்கு. அதனால இறக்குமதி குறைவு. அதே சமயம் பல்வேறு வழிகளில் தங்கம் இந்தியாவுக்கு கணக்கில் காட்டாமல் கொண்டு வரப்படுது. இப்படி கொண்டு வரப்படும் தங்கத்தின் அளவு அரசுக்கு தெரியாது. அதனால அதன் மூலமா கிடைக்கக்கூடிய சுங்க வரி அரசுக்கு கிடைக்கறதில்லை.

இப்படி கொண்டு வரப்படும் தங்கம் நகைகளா சிறு சிறு பட்டறைகளில் செய்யப்பட்டு பெரிய நகைக்கடைகளுக்கு விற்கப்படுது. மிக அதிக விலையுள்ள இந்த நகைகளை செய்யும் பட்டறைகள் அதுக்கான சேவை வரியையும் செலுத்தறது கிடையாது. பல பட்டறைகள் முறையா பதிவு கூட செய்யப்படுறதில்லை.

நகை கடைகளை பொருத்தவரைக்கும், கணக்கில் வராமல் கிடைக்கும் தங்கத்தை கணக்கில் காட்டாம தானே வித்தாகனும்? தங்கம் விற்பனைக்கு அரசாங்கம் வரி விதிக்குது. அதனால நகை விற்கும்போது அதுக்கு டேக்ஸ் பில் போட்டு அதுக்குண்டான வரியை அரசாங்கத்துக்கு கட்டணும். அதுல ஒரு சிக்கல் இருக்கு.

கணக்கு காட்டி வாங்கிய நகைகளை விட கணக்கில் காட்டாம வேறு வழிகளில் வாங்கிய நகைகள் அதிகமா இருக்கும் பட்சத்தில், அதை வித்ததா கணக்கு காட்டினாலும் மாட்டிப்பாங்க. அந்த நகை எப்படி கிடைச்சுதுன்னு விளக்கம் சொல்ல முடியாம போகுமே. அதனால் ஒரு சின்ன உபாயம் பண்ணுறாங்க.

முடிஞ்ச வரைக்கும் நகையை பில் இல்லாமல் விற்பது. பில் கேட்டாலும் பில்லுக்கு பதிலா எஸ்டீமேட் மட்டும் போட்டு வித்துடுறது. ரொம்ப விவரம் தெரிஞ்சு வற்புறுத்தி கேக்குறவங்களுக்கு மட்டும் பில் போட்டு தர்றது. இதன் மூலம் கணக்கில் வராத தங்கத்தை கணக்கில் வராமலேயே வித்துர முடியும். கணக்கில் காட்டிய தங்கத்தின் ஸ்டாக்கை அடிப்படையா வெச்சு அது மட்டும் தான் வித்துதுன்னு கணக்கு காட்டி அதுக்கு மட்டும் வரிக்கட்டினா போதும்.

சரி, இதில் நமக்கென்ன பிரச்சனை? ஒண்ணும் இல்லை. அரசாங்கத்துக்கும் இந்திய பொருளாதாரத்துக்கும் தான் பிரச்சனை.

உதாரணத்துக்கு ஒரு கடையில் ஒரு மாசத்துக்கு ரெண்டு கோடிக்கு நகை விற்பனையாகுதுன்னு வெச்சுக்குவோம். இதில் அம்பது லட்ச ரூபாய்க்கான நகை மட்டும் தான் முறைப்படி வாங்கப்பட்டிருந்தா, அந்த அம்பது லட்ச ரூபாய்க்கான நகை விற்பனைக்கு மட்டும் தான் அரசுக்கு கணக்கு காட்டி வரி கட்டுவாங்க. பாக்கியுள்ள ஒன்னரை கோடி ரூபாய் நகைக்கு வெறும் துண்டு சீட்டு / மெமோ / எஸ்டீமேட் போட்டு சமாளிச்சிருப்பாங்க. அதனால் அதுக்கு கணக்கும் காட்டாம வரியும் கட்டாம விட்டிருவாங்க. அதெல்லாம் அவங்களுடைய லாபம். புது புது பிரமாண்ட கடைகள் தொடங்குவதற்கான முதலீடு. நமக்கு அதனால எந்த நஷ்டமும் இல்லை.

ஆனா அரசாங்கத்தின் பார்வையில், அந்த ஒன்னரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வாங்கும்போது செலுத்தி இருக்க வேண்டிய சுங்க வரியும், விற்கும் போது கட்டி இருக்க வேண்டிய விற்பனை வரியும் மொத்தமா நஷ்டம். ரெண்டு கோடி ரூபாய் வியாபாரத்துல அம்பது லட்சத்துக்கான வரி தான் வந்திருக்கு. இது ஜஸ்ட் உதாரணத்துக்கு சொன்னது. அப்படின்னா, நாடு முழுதும் எத்தனை நகை கடை, எத்தனை வியாபாரம், எத்தனை வரி ஏய்ப்பு அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பெருத்த இழப்பு எல்லாம் எவ்வளவுன்னு நீங்களே யூகமா ஒரு கணக்கு போட்டு பார்த்துக்கோங்க, தங்கம் விலை ஏன் தாறுமாறா ஏறுதுன்னு புரியும்.

சேதாரத்துக்கான தொகை வாங்குறதே தவறுங்கறது மற்றுமொரு பெரிய விஷயம. சேதாரத்துக்கு தொகை வாங்கினா அந்த சேதார தங்கத்தை நம்ம கிட்டே கொடுக்கணும். அப்படி கொடுக்கலைன்னா சேதார தொகை கொடுக்கவேண்டியது இல்லை, என்றாலும் கூட அதுக்கெல்லாம் சண்டை போட்டுட்டு இருக்க நம்ம கவுரவம் இடம் கொடுக்காது என்பதால் பேசாம வந்துடுறோம். இது கடைக்காரங்களுக்கான டபுள் தமாக்கா.

பத்து கிராம் நகை வாங்கி அதில் சேதாரம் 7% னு வெச்சுக்கோங்க, அது கிட்டத்தட்ட 0.7 கிராம். அதுக்கான தொகையை நம்ம கிட்டே வாங்கிருவாங்க. அந்த 0.7 கிராமை நம்ம கிட்டே தரவும் மாட்டாங்க. அந்த 0.7 கிராமை மற்றொரு நகையில் போட்டு அதையும் வித்து காசாக்கிருவாங்க.

விடுங்க. நான் என் நண்பர் கிட்டே சொன்னது இது தான்.

ஜஸ்ட் எப்ப நகை வாங்கினாலும், அல்லது எந்த பொருளை வாங்கினாலும் அதுக்கான முறையான பில்லை போட்டு வரி கட்டி வாங்கு. அதெல்லாமே கணக்கில் வரும். அரசுக்கும் வரி வருவாய் உயரும். கணக்கில் காட்டாத கருப்பு பண பரிமாற்றம் குறையும். ஆட்டோமேட்டிக்கா விலைகள் குறையும். நம்ம பொருளாதாரம் சீர்படும். மறைமுகமா நம்ம வாழ்க்கைத்தரம் உயரும்.

வரி அதிகமெல்லாம் கிடையாது. குறைந்தபட்சம் 1% லருந்து அதிகபட்சம் 14.5% தான். பொருளுக்கு பொருள் மாறுபடும். டாஸ்மாக் சரக்கை 58% வரி கட்டி வாங்க தயாரா இருக்கிற நமக்கு அத்தியாவசிய பொருளுக்கு 14.5% வரி கட்டி வாங்க எந்த தயக்கமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

முதல்வன் படத்துல அர்ஜூன் சொன்ன அதே கருத்து தான். ஆனா, இப்ப பொருளாதார நிலையும் பணவீக்கமும் விலையேற்றமும் உச்சத்தை நோக்கி போயிட்டிருக்கிறதுக்கு நாமளும் முக்கிய காரணம்னு தெரிஞ்சப்பறமும் சுதாரிச்சு திருந்தலைன்னா நல்லாருக்காதுல்ல? டிரை பண்ணி பார்ப்போமே?

அட்லீஸ்ட் சமூக இணைய தளங்களில் விலையேற்றம், பொருளாதார பணவீக்கம், கருப்புப்பணம் பத்தியெல்லாம் அறச்சீற்றம் செய்யும்போது உறுத்தாமலாவது இருக்கும்ல?

Wednesday, November 12, 2014

கோயம்பேடு CMBT உருவானதில் எனது சிறு பங்கு



நான் முதன் முதலில் ‘ஊழ் வினை துரப்ப’ சென்னை வந்தது 1992 ஆம் ஆண்டு. பின்னர் சில மாதங்கள் வேட்டையாடி ஒரு வழியாக ஒரு வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலில் வந்த ஆசை தனியாக ஊருக்கு பயணிப்பது.

அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தை ஒட்டி திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்கு என ஒரு பேருந்து நிலையமும், ஆந்திரா பகுதிகளுக்கு செல்ல வால்டாக்ஸ் ரோடு அருகில் ஒரு பேருந்து நிலையமும் இருந்தது.

தந்தை பெரியார் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு என எம்.யூ.சி கிரவுண்டு கொடுக்கப்பட்டிருந்தது. அதே இடத்தில் அவர்களது ‘அதிகாரப்பூர்வமற்ற’ பணிமனையும் செயல்பட்டு வந்தது. பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக வால்டாக்ஸ் ரோடு பேருந்து நிலையத்தையும் எம்.யூ.சி க்கே மாற்றி, திருப்பதி செல்லும் பேருந்துகளுக்கெனே ஒரு அலுவலகமும், பயணிகள் கியூவும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இதுதவிர, தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கு செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளுக்கெல்லாம் உயர்நீதிமன்றத்தை சுற்றி இருக்கும் சாலைகள் ஒதுக்கப்பட்டது. அவை வரிசையாக உயர்நீதிமன்றத்தை சுற்றி நிற்கும். அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் போலீசார் வந்து அவற்றை விரட்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். பஸ்கள் நீதிமன்றத்தை ஒரு முறை சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தில் நிற்கும். கண்டெக்டர் மட்டும் அங்கேயே இருந்து கூவி கூவி எங்களை அழைத்து பஸ் சுற்றி சுற்றி வரும்போதெல்லாம் நிறுத்தி அதில் அழைத்துக்கொள்வார். இதில் கொடுமை என்னவென்றால், பிராட்வே சாலையில் நடைபாதை பழக்கடைகள் அதிகம். அதனால் அங்கே சுகாதாரமின்றி சேறும் சகதியுமாக இருக்கும். அதில் விழுந்தடித்து கொண்டு தான் பஸ் பிடிக்க ஓடவேண்டும்.
இது எனக்கு மிக விசித்திரமாக பட்டது.

அந்த பஸ்களும் அரசு போக்குவரத்து கழகங்கள் தான். ஆனால் அவற்றுக்கு என பேருந்து நிலையம் இல்லை. பயணிகள் நீதிமன்றத்தை சுற்றி சுற்றி ஓடுவது பார்க்கவே மிக பரிதாபமாக இருக்கும். சில ஆண்டுகள் இப்படி தான் எனது பயணங்களும் அமைந்தது. அத்தனை கஷ்டத்திலும் நான் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் திருவள்ளுவரை புறக்கணித்துவிட்டு ரோட்டோர சேரனை தான் நாடி பயணிப்பேன். சேரனை தவறவிட்டாலோ, சேரனில் இடம் இல்லாவிட்டாலோ தான் திருவள்ளுவரின் வெண்ணிலாவோ டெக்ஸ் சிட்டியோ கிடைக்கிறதோ என முயற்சிப்பேன்..

மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் எல்லாம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் இருக்க, தமிழகத்தின் தலைநகர் என விளங்கும் சென்னையில் ஒரு முறையான பேருந்து நிலையம் இல்லாமல் இருப்பது என்னை உண்மையில் ஆச்சரியப்படவே வைத்தது.

அப்போது முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள், ‘முதலமைச்சர் தனிப்பிரிவு’ எனும் ஒரு முன்னோடி திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக அமைத்திருந்தார். அந்த தனிப்பிரிவுக்கு யார் என்ன மனு அனுப்பினாலும் அது உடனடியாக கவனிக்கப்படு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

அந்த முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நான் 28.04.1994 அன்று இந்த பேருந்து நிலைய அவஸ்தை குறித்து விளக்கமாக கடிதம் எழுதியதுடன், அதில் எம்.யூ.சி கிரவுண்டை மறு சீராய்வு செய்து, வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு திசைகள் நோக்கிசெல்லும் பஸ்களுக்காக, திசைக்கொன்றாக நான்கு நடைமேடைகளுடைய ஒரு பேருந்து நிலையமாக ஆக்கலாம் என்றும் ஒரு ஆலோசனை தெரிவித்து இருந்தேன். ஒவ்வொரு நடைமேடையிலும் அதிகபட்சமாக மூன்று பேருந்துகள் மட்டும் தான் நிறுத்தமுடியும் என்பதால் குறிப்பிட்ட நேர அட்டவணைப்படி பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றி செல்லலாம் எனவும், இதன் மூலம், உயர்நீதிமன்றத்தை சுற்றி வரும் அவஸ்தை இல்லாமல் ஒரே இடத்தில் பயணிகளுக்கு எல்லா பஸ்களும் கிடைக்கும் எனவும் தெரிவித்து இருந்தேன். (இதே முறையிலான திட்டம் பின்னர் பெங்களூரு சாந்தி நகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்டது)

ஒரு ஆர்வக்கோளாரில் அப்படி ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்தேனே ஒழிய அது கண்டுகொள்ளப்படும் என்கிற நம்பிக்கை எல்லாம் எனக்கு அப்போது இல்லாமல் இருந்ததால், நானும் என் வேலையுமாய் அப்படியே இருந்துவிட்டேன்.

‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’க்கு நான் கடிதம் அனுப்பிய மூன்று மாதம் கழித்து எனக்கு ‘பல்லவன் போக்குவரத்து கழக பொது மேலாளரிடமிருந்து’ ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் தான் நீங்கள் இங்கே பார்ப்பது. கடிதத்தை படித்ததுமே எனக்கு விஷயம் புரிந்துவிட்டது.
எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.

“தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான நிலையம், சென்னை புறநகரில் அமைப்பது குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்த உத்தேசித்துள்ளது என தெரிவித்துக்கொள்கிறோம்”
இந்த மூன்று மாதங்களில், என் கடிதத்தின் அடிப்படையில் பல பல உயர்நிலை கூட்டங்கள் நடந்திருப்பதை கடிதத்தின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கடிதங்கள் குறித்த குறிப்புகள் எனக்கு உணர்த்தின.

எவ்வளவு விரைவாகவும், அக்கறையாகவும் முக்கியத்துவம் கொடுத்தும் எனது கடித விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்த பொழுது, ஜனநாயகத்தின் வலிமை கண்டு, அரசின் பொறுப்புணர்வு அறிந்து, நான் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டேன்.
ரத்தின சுருக்கமாக சொல்கிறேன்.

1. நான் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பியது 28.04.1994.

2. முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது 09.05.1994.

3. பின்னர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தையும் இதில் ஆலோசித்து இருக்கிறார்கள்.

4. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கான வரைவு திட்டத்தையும் அரசிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

5. இவை எல்லாம் முடிந்து பல்லவன் போக்குவரத்து கழக பொது மேலாளர் மூலமாக எனக்கு கடிதம் அனுப்பட்டது 31.07.1994

இத்தனையும் மூன்று மாத காலங்களுக்குள் நடைபெற்று முடிந்திருக்கிறது என்பதை விட எனக்கு மகிழ்ச்சி அளிப்பது, அப்படி எடுக்கப்பட நடவடிக்கைகளை உடனடியாக முறைப்படி எனக்கு அறிவித்தது தான்.

பின்னர் சில மாதங்கள் கழித்து ‘புறநகர்’ என குறிப்பிடப்பட இடத்துக்காக வண்டலூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக கோயம்பேட்டில் ஒருங்க்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுத்திருப்பதாக மற்றுமொரு கடிதம் அனுப்பி தெரிவித்து இருந்தார்கள்.

1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்தபோது, முந்தைய அதிமுக அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றத்தையும் வருத்தாமல் திட்டமிட்டபடி அதே இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சி நடத்துவதற்காக அங்கே இருந்த முள்ளு காடுகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வந்ததை அந்த வழியே செல்லும்போதெல்லாம் கவனித்து வருவேன். பூமி பூஜை நடைபெற்ற பொழுது, பக்கத்திலிருந்த மெட்ரோ வாட்டர் நீரேற்று நிலைய சுற்று சுவர் மதில்மீது அமர்ந்து தூரத்தே நடந்த அந்த பெரும் நிகழ்வை எட்டி எட்டி பார்த்த தருணத்தில் என் மனதில் பொங்கிய மகிழ்ச்சியின் அளவையும் பெருமிதத்தையும் வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

இப்போதும் சிலர், கோயம்பேடு பேருந்து நிலையம் திமுகவின் திட்டம் என சொல்லும் பொழுது மெல்ல எனக்குள்ளே நகைத்துக்கொள்வதுண்டு.

Saturday, November 8, 2014

சமூக நீதிக்கு வந்த சோதனை.


சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவையில்லை என்று நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடியான பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் தாக்கங்கள் மிக அதிகமாக பாதிக்க போவது நமது தமிழகத்தை தான். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இதுவரையும் எந்த கருத்தையும் நமது அரசியல் கட்சியினர் வெளியிடாமல் இருப்பது ஆச்சரியம்.


2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எலிபி தர்மாராவ் அவர்கள் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், சென்னை வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களது மனுவை விசாரித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது, “1933 ஆம் ஆண்டு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில் தான் இதுவரையும் இடஒதுக்கீடும் பிற்பட்டோருக்கான இதர சலுகைகளும், நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வந்தது. எனவே இப்போதைய சூழலை கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான தகவல்களையும் சேகரித்தால் தான் தற்போதைய விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கான சலுகைகளை கூட்டியோ குறைத்தோ வழங்க முடியும்” என்பது தான் கிருஷ்ணமூர்த்தியின் மனுவின் சாராம்சம்.


இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி எலிபி தர்மாராவ் அவர்கள், மத்திய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என உத்தரவிட்டார்.


அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பொறுப்பு வகித்த மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சாதிவாரியான விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் கணக்கெடுப்பு நடந்து வந்தது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு என்னை பொறுத்த வரையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இதன்படி, இப்போது நாம் ஊகத்தின் அடிப்படையில் வழங்கி வரும் நலத்திட்டங்களும், உதவிகளும், ஒதுக்கீடு விகிதாச்சாரங்களும் சரியானவை தானா என நம்மை நாமே ஆய்வுக்குட்படுத்த இந்த கணக்கெடுப்பு உதவும். இத்தனை காலங்களில் எந்தெந்த இனம் வளர்ந்து விகிதாச்சார மாறுதல்களை அடைந்திருக்கிறது என உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான ஒதுக்கீடு, நலத்திட்ட உதவிகளை அதற்கு தக்கவாறு திருத்தி அமைக்க இந்த கணக்கெடுப்பு உதவும். எனவே சமுதாய ஏற்ற தாழ்வு நிலையையும், மாறி வரும் விகிதாச்சாரத்தையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கான முறையான உதவிகள் கிடைக்கும்.


ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் 2010 ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நேற்று உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக வலிமையானவை, வருத்தம் தரக்கூடியவை.


அதாவது, இந்த அரசின் இப்போதைய கொள்கை முடிவின் படி, சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை இல்லை என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறது. அந்த வாதத்தின் அடிப்படையில் நீதிபதிகள் 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான விவரங்கள் தேவையில்லை எனவும் தீர்ப்பளித்திருக்கிறது..

இது மிகவும் வருத்தமான விஷயம் தான்.


இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான கருத்தினை கொண்டிருப்பது பா.ஜ.க என்பது அதன் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக சொல்லி இருக்கிறது. இப்போது விகிதாச்சார விவரங்களை கணக்கெடுக்க தேவையில்லை என சொல்லியிருப்பதன் மூலம், நாம் கடந்த 1933 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படியான விகிதங்களில் தான் தொடர்ந்து இட ஒதுக்கீட்டையும், நல திட்டங்களையும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம்.


கடந்த 80 ஆண்டுகளில் பல பல இனங்களில் ஏற்ற தாழ்வுகளும், கலைஞர் கொண்டுவந்த கலப்புமண சட்டத்தின் படியான புதிய இனங்களும் பெருகியும் சிறுகியும் ஆனபின், இப்போது இனங்களின் உண்மையான நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. வகுப்புவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஒழிய ஒவ்வொரு இனத்துக்குமான சரிவிகித ஒதுக்கீடும் உதவிகளும் கிடைக்காது என்பது தெளிவு. .

எனவே, வழக்கறிஞர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பை எதிர்த்து செய்யும் மேல் முறையீட்டில் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்காகவும் சமூக நீதிக்காகவும் நெடுங்காலமாக குரல்கொடுத்துவரும் தமிழக அரசியல் கட்சிகள் தங்களையும் இணைத்து கொண்டு, நேற்றைய தீர்ப்பை மறு ஆய்வுக்குட்படுத்தி சென்னை உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கும், அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களது உத்தரவுக்கும் உரிய அங்க்கீகாரத்தை பெற்று தரவேண்டும் என்பது எனது ஆவல்.

நடக்குமா என்பது தெரியவில்லை.


Thursday, October 30, 2014

கருப்பு பணம் எனும் ஒரு கலாட்டா காமடி


நேற்றைய தினம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் 627 பெயர்கள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்தது தான் இன்றைய தலைப்பு செய்தி.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு ராம் ஜெத் மலானி கருப்பு பணம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தான் மத்திய அரசு இந்த பட்டியலை நேற்று தாக்கல் செய்தது.

ராம் ஜெத் மலானி தீவிர தேசியவாதி என்பதும், ஊழல் கருப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையாக போராடியவர் என்பதும், பொதுவாழ்க்கையிலும் அரசிலும் நிர்வாகத்திலும் தூய்மையை வலியுறுத்துபவர் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்ததே (அதனால் தான் ஜெ. வழக்கில் அவரை வாதாட வைத்து உள்ளே தள்ளியதா அதிமுக? என்றெல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்காம மேல படிங்க)

கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கின்ற இந்தியர்களின் பட்டியலை அந்தந்த நாடுகளிடம் கேட்டும் இதுவரை நமக்கு எந்த பட்டியலும் கிடைக்கவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் திருட்டுத்தனமாக வெளியிட்ட ஒரு பட்டியல் தான் இதுவரையும் நம்மிடம் உள்ள ஒரே பட்டியல். அந்த பட்டியலும் 2006ஆம் ஆண்டில் அந்த வங்கியில் இருந்த கணக்குகளின் பட்டியல். அந்த பட்டியல் உண்மையானதா என்றும் யாருக்கும் தெரியாது. ஏனெனில் அது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல. எந்த அரசும் நம்மிடம் அதிகாரப்பூர்வமாக தரவில்லை. ஏதோ ஒரு தனிநபர், திருட்டுத்தனமாக வெளியிட்ட ஒரு பட்டியல் தான். அதை அவரே கூட தயாரித்திருக்கலாம் என்கிற ஒரு சந்தேகமும் உள்ளது.

இந்த பட்டியல் இந்தியாவிடம் 2011 ஆம் ஆண்டு கிடைத்தபோது அது ஆதாரமற்ற அதிகாரப்பூர்வமற்ற பட்டியல் என்பதாலேயே சட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அதனை வெளியிடாமல் அந்த பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து வந்தது. எல்லா நாடுகளுக்கும் இது பற்றி மிக கடுமையாக அப்போது ப. சிதம்பரம் அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், எந்த நாடும் நமக்கும் போதுமான ஒத்துழைப்பை இதுநாள் வரை வழங்கவில்லை.

இந்நிலையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்து இங்குள்ள மக்களுக்கு ஆளுக்கு ரூ.3 லட்சம் இனாமாக தருவோம் என்கிற கவர்ச்சி முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தது பாஜக.

வழக்கு சூடு பிடித்ததும், உச்ச நீதிமன்றம் போட்ட கிடுக்கி பிடியில் மூன்று பேரின் பட்டியலை முதலில் தாக்கல் செய்தது மத்திய அரசு. (அதில் சிமான்லால் தனக்கு வெளிநாட்டில் அக்கவுண்டே இல்லை என விளக்கம் கொடுத்திருப்பது தனி கதை) அந்த மூன்று பேர் பட்டியலை பார்த்ததும் கடுப்பான உச்ச நீதிமன்றம் 800 பேர் கொண்ட பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும்னு கண்டிப்பா மத்திய அரசுக்கு உத்தரவு போட்டது.

மத்திய அரசு முழு பட்டியலையும் வெளியிடவேண்டும் என காங்கிரசும் வலியுறுத்தியது. அவர்கள் வலியுறுத்துவதிலிருந்தே அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் இந்த பட்டியலில் இல்லை என்பதும், மத்திய அரசு வெளியிட தயங்கியதில் இருந்தே அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் இருக்க கூடும் என்பதும் பரபரப்பை கூட்டியது. உச்சநீதிமன்றத்தில் எத்தனையோ விளக்கங்கள் சொல்லியும் உச்சநீதிமன்றம் அதை ஏற்று கொள்வதாக இல்லை. 24 மணி நேரத்துக்குள் முழு பட்டியலையும் வெளியிட்டாக்கவேண்டும் என கண்டிப்பாக உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தான் இந்த 627 பேர் பட்டியலை நேற்று தாக்கல் செய்தது மத்திய அரசு. மீதமுள்ள 173 பேரை எதற்காக காப்பார்ருகிறார்கள் என்பதெல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

சரி, உச்ச நீதிமன்றம் அந்த பட்டியலை என்ன செய்தது?

அது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அந்த பட்டியலை அனுப்பி வைத்துவிட்டது. இதில் காமெடி என்னவென்றால், இந்த 627 பேர் பட்டியல் பல காலமாக அதே சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருக்கிறது என்பது தான். இப்போது இன்னொரு காப்பி உச்ச நீதிமன்றம் மூலமாக வந்திருக்கிறது. அவ்வளவு தான்.

சரி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

காங்கிரஸ் அரசிடம் இருந்த அதே பட்டியலை தான் இப்போதும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அது அதிகாரப்பூர்வ பட்டியலும் அல்ல. யாரோ ஒரு தனி நபர் கொடுத்த திருட்டு பட்டியல். அந்த பட்டியலும் 2006 ஆம் ஆண்டு கணக்கு வைத்திருந்தவர்களை பற்றியது. அதிலும் 173 பேர் பெயரை மத்திய அரசு காப்பாற்றுகிறது.

ஆக மொத்தம் மத்திய பா.ஜ.க அரசு கருப்பு பண விஷயத்தில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை என்பதோடு, வெற்று விளம்பர பரபரப்புக்காக எதை எதையோ செய்ய முயன்று கொட்டு வாங்கி விழி பிதுங்கி நிற்கிறது.

இனியும் இந்த வழக்கில் நிறைய சுவாரசியமான காமெடிகள் காத்திருக்கிறது. பொதுவாழ்வில் தூய்மை என்பதை நோக்கி பயணிக்கும் ராம்ஜெத்மலானி அவ்வளவு லேசில் இதை விடமாட்டார் என நம்புவோமாக.



Printfriendly