Wednesday, May 28, 2025
இசை இறைவனின் தரிசனம்
Sunday, March 16, 2025
தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை
Wednesday, March 12, 2025
நவோதையா பள்ளிகள் - தமிழ்நாட்டுக்கு தேவையா?
Monday, February 10, 2025
ஈரோடு கிழக்கு சொல்லும் செய்திகள்
Saturday, February 1, 2025
திமுக - எதிர்கொள்ள வேண்டிய மாயவலை
2021 ஆம் ஆண்டு திமுகவுக்கு தந்த வாய்ப்பு அலாதியானது.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா பெற்று தந்த வெற்றி.. அவரது மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி என மாறி மாறி 2021 தேர்தலில் திமுக தவிர நமக்கு வேறு யாரும் இல்லை என்கிற முடிவுக்கு பெரும்பாலான தமிழ்நாடும் வந்து ஒன்று சேர்ந்து கொடுத்த அற்புதமான வெற்றி அது.
நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கும் போது, திமுகவை வென்றெடுக்க கூடிய வலுவான எதிர்கட்சி என்று எதுவுமே இல்லை.
அதிமுக வலு இழந்து நிற்கிறது. எடப்பாடி அவர்கள் மீதான அதிருப்தி கட்சிக்குள்ளேயே அதிகரித்து வரத் தொடங்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என புரியாது தவிக்கும் அதிமுக ஒரு பக்கம்.
திடீர் என இறக்குமதி செய்யப்பட்ட தலைவரை கொண்டு தட்டு தடுமாறி பாஜக தவழ தொடங்கி உள்ளது. ஆனால் தன்னால் தன் சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு செல்வாக்கு (!) கொண்டு இருக்கும் மாநில தலைவரையும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ள இணைய பதிவர்களை மட்டுமே நம்பி இருக்கும் ஐடி விங்கையும் வைத்துக்கொண்டு தமிழ்நாடு தேர்தலில் வென்று விட முடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில் உழன்று கொண்டு இருக்கும் பாஜக ஒரு பக்கம்.
பன்னிரண்டு ஆண்டுகளாக கட்சி நடத்தியும் சட்டமன்றத்துக்கு நுழைய முடியாமல் தவிக்கும் நா.த.க ஒரு பக்கம்.
திடீர் என முகிழ்த்து அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கும் த. வெ.க ஒரு பக்கம்.
என பல பல கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுகவை திமுக கூட்டணியை வென்று விடக்கூடிய அளவுக்கான மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி என்று இப்போது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் களம் வரை இதே நிலை நீடிக்குமா? காட்சிகள் மாறுமா என தெரியாது.
அதனால் தானோ என்னவோ திமுக அதீத நம்பிக்கையுடன் வலம் வந்து கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.
நிற்க!
2021 ஆம் ஆண்டு திமுகவை அரியணை ஏற்றி அழகு பார்த்த தமிழக மக்களுக்கு நிறைய நிம்மதியும் அதை விட கூடுதலான எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதில் பெரும்பாலானவற்றை திமுக நிறைவேற்றியும் விட்டது.
ஆனால் கட்சி அமைப்பாக எங்கேயோ திமுக சறுக்கிக் கொண்டு இருக்கிறதோ என்கிற கவலையும் இல்லாமல் இல்லை.
திமுக என்பது தீரர்களால் செயல் வீரர்களால் தொண்டர் பாசறைகளால் காத்து வரப்பட்ட இயக்கம். அந்த அடிப்படை கட்டமைப்பு இருக்கும் வரை திமுகவை யாராலும் வெல்ல முடியாது.
மாவட்ட அளவில், வட்ட அளவில், கிளைக்கழக அளவில் கட்சியை வலுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மக்கள் மனதில் திமுகவை பற்றி தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பது, கழக ஆட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வது, திரும்ப திரும்ப திமுகவின் அடிப்படை கொள்கைகளை மக்கள் மனதில் பதியச் செய்து கொண்டே இருப்பது ஆகியவையும் முக்கியம்.
சமூக வலை தளங்கள் இல்லாத கால கட்டத்தில் கூட தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக தம்பிகளுக்கு கடிதம் என தன் மனதில் நினைப்பதை எல்லாம் எழுதி அதை நாளிதழ் மூலமாக கழக உடன் பிறப்புகள் மட்டும் அல்லாது பொது மக்களும் அறிய செய்து வந்தார். அந்த கடிதங்களில் பெரும்பாலும் அரசின்/கட்சியின் முடிவுகள், நிலைப்பாடுகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்து சொல்லுவார்.
கழக அமைப்பு என்பதும் சுற்றி சுற்றி சுழன்று கொண்டே இருக்கும். பொதுக்கூட்டம், மாநாடு, பேரணி, சாதனை விளக்க கூட்டம், பட்ஜெட் விளக்க கூட்டம், மாநில உரிமை குறித்த கருத்தரங்கம் என தொய்வில்லாமல் மக்கள் மனதில் திமுகவை திமுக அரசை திமுகவின் நிலைப்பாட்டை பதிய செய்து கொண்டே இருப்பார்.
இப்போது அதில் எல்லாம் ஒரு சிறு சுணக்கம் வந்து விட்டதோ என ஐயமாக இருக்கிறது.
திமுக பற்றி பொய்களும் புனை கதைகளும் சரளமாக பரப்பட்டு வரும் சூழலிலும், அதற்கு தகுந்த பதில் கொடுக்காமல் இருப்பது, எதிர் விளக்கம் கொடுக்காமல் இருப்பது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்றவை அப்படியான பொய்களை, புனை கதைகளை திமுக பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லையா என்கிற கேள்வியை எழுப்பாமல் இல்லை.
அவை சின்ன சின்ன பொய்களாக, கட்டு கதைகளாக, அவதூறுகளாக, மெல்ல மெல்ல திமுகவுக்கு எதிராக பின்னப்பட்டு வரும் மாயவலை. அந்த வலையை எதிர்கொண்டு அறுத்து எறியாமல் போனால் அந்த வலையில் சிக்கிக் கொள்ளும் சூழல் கூட ஏற்பட்டுவிட கூடும். அது மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை சிதைப்பதாகவும் ஆகிவிடும்.
பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் உழலும் மக்களுக்கு எதையும் நின்று நிதானமாக படித்து பார்த்து ஆராயும் பொறுமையோ அதற்கான நேரமோ இருப்பது இல்லை. உள்ளங்கைகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் செல்பேசி திரைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு சில நொடி செய்தி துனுக்கிகளின் இருவரி தலைப்புகள் போதுமானதாக இருக்கிறது மனதில் தங்கி கொள்ள.
எத்தனை பக்கத்துக்கு பத்திரிகைகளில் பின்னாளில் விளக்கங்கள் வந்தாலும், மனதில் உட்கார்ந்து கொண்ட அந்த சில வரிகள் அத்தனை சீக்கிரம் அழிவது இல்லை.
இந்த சில வரிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது தான். ஆனால் இது போல பல செய்திகள் தொடர்ச்சியாக திமுக குறித்தான தவறான கண்ணோட்டத்தை கொடுத்து கொண்டே இருந்தால் மனதில் திமுக மீதான மதிப்பு குறைய தொடங்கும் என்பது இயல்பு. அந்த பொய்களுக்கான மறுப்பு உடனடியாகவும் வீரியமாகவும் வராத வரை அந்த பொய்கள் உண்மை என்றே உட்கார்ந்து கொள்ளும். தாமதமாக வரும் தர்க்கங்கள் அதனை அவ்வளவு சீக்கிரமாக நீர்த்து போகச் செய்து விட முடியாது.
இது ஒரு வகையான உளவியல். இந்த உளவியல் கருத்தாக்கத்தை நிறுவ பல கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதை மறுப்பதும் திமுகவின் சாதனைகளை தொடர்ச்சியாக மக்கள் மனதில் பதிய வைப்பதும் இந்த வேகமான வாழ்க்கை முறையில் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. இதை கட்சி உணர்ந்து இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
எத்தனையோ நல்ல விஷயங்களை செய்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருப்பது, பிற கட்சிகள் ஏற்படுத்தும் களங்கங்களை துடைத்து எறியாமல் விடுவது ஆகிய இரண்டும் அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் இரண்டு நிமிடம் மட்டுமே வாக்குப் பதிவு எந்திரத்தின் முன் நிற்கும் வாக்காளனின் மனதை மாற்றி விட முடியும்.
இந்த விழுமியங்களை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது அவசியம். நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, காலச்சூழலில் அதற்கு ஒப்ப பயணிப்பதே எந்த ஒரு இயக்கத்தையும் உயிர்ப்போடு வைக்கும்.
என்னை பொறுத்த வரை..
எதிர்கட்சிகளின் பொய்களை தோலுறிப்பது, திமுகவின் சாதனைகளை விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பது ஆகியவை மக்களின் மனதில், நாம் தேர்ந்தெடுத்த திமுக நம் நம்பிக்கையை குலைக்கவில்லை.. நமக்காக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்கிற உத்திரவாதத்தை நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கும்.
கடைசி நேரத்தில் தேர்தல் அறிவித்த பிறகு பிரச்சாரத்தில் பார்த்து கொள்ளலாம் என்கிற நிலைப்பாடு எடுப்பதாக இருந்தால்.. இன்றிலிருந்து மக்கள் மனதில் எதிர்கட்சிகள் விதைத்து வரும் பொய்களை எல்லாம் மொத்தமாக அகற்றும் அளவுக்கு பெரும் பலமான பிரச்சாரமாக அது இருக்க வேண்டும்.
அதை விட எளிமையான வழி.. அவ்வப்போது வரும் பொய்களை அவ்வப்போது உடைத்து எறிவது. இது தான் மக்கள் மனதை தெளிவாக வைக்க உதவும்.
கிடைத்து இருக்கும் ஆட்சி மிக முக்கியமானது. இதனை இன்னும் சில காலங்கள் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றால், தொடர்ந்து வெல்ல வேண்டும் என்றால், தொடர்ச்சியாக மக்கள் மனதில் கழகம் குறித்து நல்ல விஷயங்களை பதிய செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உரியவர்கள் ஆவன செய்வார்களா அல்லது கடைசியில் பார்த்து கொள்ளலாம் என இருக்க போகிறார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
Thursday, May 30, 2024
இந்திய நாடாளுமன்ற தேர்தல் - 2024
2024-29 கால கட்டத்துக்கான இந்திய அரசை நடத்தப்போவது யார் எனும் தேடல் இந்திய நாடாளுமன்ற தேர்தலாக தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் இது வரை ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து அதன் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் முதல் நாள் நடைபெறும். ஜூன் நான்காம் நாள் வாக்கு எண்ணிக்கை. ஜூன் ஐந்தாம் தேதி மாலை அடுத்த ஆட்சி யார் கையில் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும்.
என்னுடைய ஊகம் என்னவென்றால், மூன்றாவது முறையாகவும் பாஜக தான் ஆட்சி அமைக்கக் கூடும், ஆனால் அது நிச்சயமாக அறுதி பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக அல்லாமல் சிறுபான்மை ஆட்சி / கூட்டணி ஆட்சியாக அமையவே வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். காரணம் காங்கிரஸ் தலைமையிலான "INDIA" கூட்டணியின் எழுச்சியும் அதற்கு மக்களிடம் கிடைத்து வரும் அமோக வரவேற்பும் தான்.
ஒருவேளை கடைசி நேர சுதாரிப்பாக அல்லாமல் முன் கூட்டியே இந்த அணி அமைக்கப்பட்டு தேர்தல் கால பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடத்தி இருந்தால் ஆட்சியை பிடிக்கக்கூடிய வாய்ப்பை கூட பெற்று இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
இந்திய அரசை ஆட்சி செய்ய 272 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் இப்போதும் பாஜக வலுவாக உள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் மத ரீதியான உணர்வுகள் அடிப்படையில் வாக்குகளை தீர்மானிப்பதால் பாஜகவும் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் முழுமையும் மத ரீதியாகவே செய்து வந்தது. ஆகையால் அந்த மாநிலங்களில் எல்லாம் பெருவாரியாக வெற்றி பெற பாஜகவுக்கு கஷ்டம் ஒன்றும் இருக்காது.
தென் மாநிலங்களை பொறுத்த வரை பாஜகவுக்கு கஷ்டம் தான். ஆனால் தென்மாநிலங்களில் ஒரே ஒரு உறுப்பினர் கூட கிடைக்காமல் போனாலும் 272 உறுப்பினர்களை பிற மாநிலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது பாஜகவுக்கு சுலபமே.
ஒரு வேளை கூட்டணி ஆட்சி, சிறுபான்மை ஆட்சி என்கிற நிலையில் பாஜக ஆட்சி செய்யும் எனில் எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக அமையும் என்பதால் பாஜகவின் கனவு திட்டங்கள் எதையும் அமல் செய்ய முடியாமல் போகும். பாஜகவின் எதேச்சாதிகார போக்குக்கு காங்கிரஸ் அணி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்து தவறான முடிவுகளை பாஜக எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.
தமிழ்நாடு & புதுவையை பொறுத்தவரை, 40/35 திமுக கூட்டணி நிச்சய வெற்றி பெறும். அதிமுக இரண்டு இடங்களிலும் (கோவை, ஈரோடு) பாஜக அணி மூன்று இடங்களிலும் (நெல்லை, வேலூர், தர்மபுரி) வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என்றாலும் அங்கேயும் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை.
கேரளாவில் பாஜக ஒரே ஒரு இடத்தில் (திருச்சூர்) வெற்றி பெற வாய்ப்பு உண்டு. மற்றவற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் YSR காங்கிரஸ் கட்சியும் கர்நாடகத்திலும் தெலுங்கானாவிலும் எல்லாம் காங்கிரஸ் கட்சியும் வலுவாக உள்ளது. அங்கே சிற்சில இடங்களை பாஜக வெல்லக்கூடும் எனினும் அவை ஒற்றை இலக்க எண்களாக தான் இருக்கக்கூடும்.
எனவே, தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இனி இந்திய நாட்டின் வரலாற்றை தீர்மானிக்க போகிறவர்கள். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக கூட்டணி உறுப்பினர்கள். அவர்கள் எதை அனுமதிக்க போகிறார்கள் எதிர்க்க போகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டங்களும் திட்டங்களும் அமையும். அந்த வகையில் நாடு முழுமையும் இனி ஸ்டாலின் ஆட்சி என சொன்னாலும் அது மிகை அல்ல.
அடுத்த வாரம் முடிவுகள் வந்த பின் விரிவாக அலசுவோம்.
Saturday, April 22, 2023
வேலை நேர சட்ட திருத்தம்
தமிழ்நாடு அரசு நேற்று சட்டமன்றத்தில் விவாதம் எதுவும் இல்லால் 17 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது.
அதில் ஒன்றாகதொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை உயர்த்தி ஒரு சட்ட திருத்தம் Factories Act இல் கொண்டு வந்து உள்ளது.
இந்த சட்டத்திருத்தம், ஒரு நாளுக்கு இப்போது இருக்கும் 8 மணி நேர வேலை என்பதில் இருந்து 12 மணி நேரம் ஆக இயல்பான வேலை நேரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்கிறது.
இது எதற்காக கொண்டு வரப்பட்டது யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் காரணம் என்னவாக இருந்தாலும் இது சரியானது அல்ல.
இளைஞர்களின் வேலை வாய்ப்பை குறைக்கும், வேலை செய்வோரை மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் இந்த சட்டம், இன்னும் ஒரு வாரத்தில் மேதினம் கொண்டாட இருக்கும் நேரத்தில் வந்து இருப்பது ஆச்சர்யம் தான்.
அதற்காக மே தினம் முடிந்த பிறகு கொண்டு வந்தால் ஓகேவா என சிலர் கிண்டல் செய்ய கூடும்.
மே தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்கிற அடிப்படை விஷயம் தெரிந்த யாரும் இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு மனிதனுக்கு இயல்பாக தேவைப்படும் ஓய்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதனை உறுதி செய்வதற்காக போராடி பெற்ற உரிமை தான் இந்த மே தின கொண்டாட்டத்தின் அடிப்படை.
நேற்று சட்டமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகம் ஆனபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினருக்கு வாழ்த்துக்கள்.
இந்த சட்ட திருத்தம் முழுக்க முழுக்க உற்பத்தி துறை சார்ந்த Factories Act உட்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 50 பேருக்கு மேல் பணி செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அப்படியான தொழிற்சாலைகளில் இயல்பான வேலை நேரம் 8 மணி நேரம் என்றாலும் கூட, விதிவிலக்காக வேலை அவசரம், அல்லது வேலை எதிர்பார்த்த நேரத்தில் முடியவில்லை போன்ற தருணங்களில் கூடுதல் நேரம் (Over Time) வேலை செய்ய வைக்கலாம் என Factories Act ஏற்கனவே வழி வகை செய்து உள்ளது.
அப்படியான Over Time நேரத்தில் இயல்பான நேரத்துக்கு கொடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் ஏற்கனவே உள்ளது.
இப்போது, இயல்பான வேலை நேரமே 12 மணி நேரம் வரை வைத்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் சொல்வதால், Over Time என்று தனியாக கூடுதல் சம்பளம் கொடுத்து வேலை செய்ய வைக்க வெண்டியது இல்லை. இயல்பான சம்பளத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கலாம்.
எப்போதேனும் Over Time என்று அல்லாமல் தினசரி கூட இனி 12 மணி நேரம் வேலை வைக்க முடியும்.
நிச்சயமாக இது உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தான். ஆனால் அதே அளவு நிச்சயம் தொழிலாளர்களின் உடல்நிலை மன நிலையையும் பாதிக்கும் என்பதும்.
ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளதன் பின்னணி எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். போலவே அதில் ஒன்றான இந்த வேலை நேர சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இரண்டு வருஷம் முன்பு இதே போன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்த கழகம் இப்போது அதே சட்டத்தை கொண்டு வந்து இருப்பது வருத்தமானது.
அப்போது இந்த சட்டத்தை எதிர்த்து திமுக சொன்ன விஷயங்கள் எதுவும் இப்போது மாறிவிடவில்லை தானே?
தொழிலாளர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த பணி நேரத்தை தொழிற்சாலைகள் அமல் செய்ய முடியும் என அமைச்சர் சொல்லி இருக்கிறார். தினசரி எல்லா தொழிற்சாலைகளும் என்ன செய்கின்றன என அரசு கண்காணிப்பது சாத்தியம் இல்லை.
Inspector of Factories (தொழிற்சாலை ஆய்வாளர்) இதை தினசரி செய்யவும் முடியாது. தொழிற்சாலை அவரை "ஒப்புக்கொள்ள வைக்க" எதையும் செய்யும். ஊழலுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும் சட்ட திருத்தம் இது.
மேலும், தொழிலாளர் விருப்பம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை. தொழிற்சாலை பணித்தால் தொழிலாளர்கள் அதை செய்து தான் ஆக வேண்டி இருக்கும். அப்படி செய்யாத தொழிலாளர்களுக்கு பதில் மாற்று தொழிலாளர்களை வைக்க தொழிற்சாலைகள் தயஙகாது. எப்படி பார்த்தாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் தான்.
இந்த சட்ட திருத்தத்தின் சாதக பாதகஙகளை பற்றி ஆராய உயர் மட்ட குழு அமைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
எதிர்ப்பு வந்தால் மறு பரிசீலனை என்பதை விட சட்டம் கொண்டு வரும் முன்பு தொழிற் சங்கங்களை ஆலோசித்து கொண்டு வருவது தான் இது வரை ஜனநாயகமாக இருந்தது.
உயர்மட்ட குழு எல்லாம் சட்ட முன்வரைவு நேரத்திலேயே இருந்து இருக்க வேண்டும். அதை மசோதாவாக தாக்கல் செய்த பிறகு உயர்மட்ட குழு அமைப்பது சரியல்ல.
அரசு இது தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் திமுகவின் தொழிற்சங்கம் LPF கருத்தையாவது கேட்டு இருக்கலாம். LPF எல்லா சூழலிலும் தொழிலாளர் பக்கமே நின்ற வரலாறு உண்டு. தவறை தவறு என தயஙகாமல் சொல்லும் துணிவும் உண்டு.
டிரைவர்கள், டீச்சர், மருத்துவர், கட்டிட வேலை செய்வோர், டெக்ஸ்டைல், கணினி துறை, கடைகள், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் போன்ற பல துறைகளில் ஏற்கனவே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே என்பது போன்ற பொருந்தாத ஒப்பீடுகள் கொண்டு வந்து இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசுவோர் எவரும் இந்த துறைகள் எல்லாம் Factories Act இல் வராத துறைகள் என புறியாதவற்களாக தான் இருக்க கூடும். அவர்களின பிரச்சாரத்தை எல்லாம் புறக்கணித்து விட்டு அரசு இந்த சட்ட திருத்தத்தின் உண்மையான பாதிப்பை அனுபவிக்க போகும் தொழிற்சாலை தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டு நல்ல முடிவினை எடுத்தால் நல்லது.

%20(3).jpeg)
%20(9).jpeg)


