Sunday, April 26, 2020

எளிய மக்களும் லாக் டவுனும்

ந்த ஊரடங்கு இது வரை செய்ததை விட மிக மிக மோசமான செயல்களை இனிமேல் தான் எளிய மக்களுக்கு செய்ய போகிறதோ என்கிற அச்சம் மெல்ல மெல்ல எழ தொடங்குகிறது எனக்கு.

அரசு நிறுவனங்கள், பெரு தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகள் போன்றவை தப்பித்தன
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்சி கடைகள், சாலையோர உணவகங்கள், ஃபோட்டோ ஸ்டுடியோ, மெக்கானிக்குகள், பிளம்பர், எலக்டிரிசியன், துணிக்கடைகள், டெய்லர்கள், பாத்திரக் கடைகள், மொபைல் கடைகள், புத்தகக்கடைகள், சிறு குறு தொழிற்சாலைகள் என பல பல தொழில்களை பற்றி யோசிப்போம்

இவர்கள் பொதுவாக அந்தந்த மாத சம்பளத்தை வைத்தும் போதாக்குறைக்கு கடன் வாங்கியும் தான் மாதா மாதம் வாழ்வை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்

லாக்டவுன் மே 4 ஆம் தேதி முடிவடைந்தாலும் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எப்படியும் ஆகஸ்ட் ஆகி விடும்.

கடந்த ஒன்றரை மாதமாக வருமானம் இல்லை. கையில் இதுவரை சேமித்து வைத்து இருந்த எல்லாம் (அப்படி ஏதேனும் இருந்தால்) காலி ஆகி இருக்கும். அங்கும் இங்குமாக கடன் கூட வாங்கி இருப்பார்கள் பலர். செலவுகள் செய்து கொண்டே தானே இருக்கணும்? அன்றாட தேவைகள் நிற்காதே?

பூஜியத்துக்கு வந்துவிட்ட இவர்கள் இனி வேலைக்கு போக தொடங்கி சம்பாதித்து மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்

அதை செய்ய மன வலிமை இருக்கலாம்.. எத்தனையோ இழப்புக்களை கடந்து மீண்டு வந்தவர்கள் தானே அவர்கள்? ஆனால் இப்போதைய பிரச்சனை கொஞ்சம் அதீதம்

லாக் டவுன் முடிந்த உடனே பள்ளிகள் திறக்கும். அந்த செலவுகள் அதிகம்.

வேலை ஆரம்பத்தில் எல்லாவரும் சம்பளத்தை குறைக்க முயல்வார்கள். காரணம் ரெண்டு மாசமா வியாபாரம் இல்லை. தொழிலாளர்கள் இந்த சம்பள குறைப்புக்கு உடன்படவும் வாய்ப்பு உள்ளது. வருமானமே இல்லை என்பதை விட கொஞ்சம் குறைத்து கொண்ட வருமானம் ஓகே என நினைக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

இன்னொர புறம், விலை வாசி ஏறும். காரணம் அதே ரெண்டு மாசமா வியாபாரம் இல்லாதது தான். எந்த இழப்பும் இல்லாத நெடுஞ்சாலை சுங்கமே ஒரு மாச லாக்டவுனை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தும் பொழுது, இந்த சிறு குறு நிறுவனங்கள் விலை உயர்வு செய்வதை குற்றம் சொல்ல முடியாது

சுருக்கமாக, வேலை இருக்கணும், சம்பளம் குறைவாக கிடைக்கும், வழக்கமான செலவுகள் அதிகரிக்கும், பள்ளிகள் திறக்கும், ரெண்டு மாதம் கொடுக்காத வாடகை, கரண்ட் பில் எல்லாம் சேர்த்து கட்ட வேண்டி வரும்.. இது தவிர அன்றாட செலவுகள்

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு மிக பெரிய அழுத்தத்தை எளிய மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனும் கவலை சூழ்கிறது

அரசு ₹1000 கொடுத்து ரேஷனில் சில பொருட்கள் கொடுத்ததுடன் முடித்து கொண்டது. இது போதுமா என்ன?

எதிர் கொள்ள இருக்கும் செலவுகள், அதன் இயலாமை சிலருக்கு குழந்தைகளின் படிப்பையே பாதிக்குமே? அது எத்தனை பெரிய இழப்பு? பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் போவது எல்லாம் கொடுமை.

மன உளைச்சல், கவலை, கடன், பொருளாதார சமபளமின்மை, விலைவாசி உயர்வு என அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மிகப்பெரியது. அவற்றை அவர்கள் வெற்றிகரமாக வென்று வர வேண்டும்

அரசு ஏதேனும் பொருளாதார உதவி அறிவித்தால் கூட பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1℅ இவர்களுக்காக ஒதுக்கினால் கூட போதும். இவர்கள் பிழைத்து கொள்வார்கள். அரசுக்கும் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

பார்க்கலாம் அரசு உதவுமா என

அதை விட முக்கியம், மே 4 ஆம் தேதியோடு முடியுமா என்பது.. அதற்கு மேலும் நீண்டால் இவர்களின் நிலை மிக மிக மோசமாகிவிட கூடும்

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

Monday, April 20, 2020

கொரோனா Rapid Test Kit விலை பிரச்சனை

தமிழக அரசு கொரோனா தொற்று கண்டறிவதற்கான Rapid Test Kit வாங்கிய விவகாரத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு உள்ளது

சட்டீஸ்கார் அரசு தென் கொரியாவில் இருந்து Rapid Test Kit ஒன்றுக்கு ₹337 எனும் விலையில் வாங்கப்போவதாக அறிவித்ததில் கிளம்பியது பிரச்சனை

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசு வாங்கும் விலை என்ன என்பதை வெளியிடவேண்டும் என கேட்டார்

அதை அடுத்து தமிழக அரசும் சீனாவில் இருந்துநாம் Kit ஒன்றுக்கு ₹600 (வரிகள் தனி) என வாங்குவதாகவும் இந்த விலை ICMR ஆல் நிர்ணயிக்கப்பட்டது எனவும் சொல்லி அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டது.

இத்துடன் முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனை.. வேறு வகையில் மற்றவர்களால் திருப்பப்பட்டது

அதாவது சட்டீஸ்கார் ₹337 க்கு வாங்கும் kit ஐ எதற்காக தமிழகம் ₹600 க்கு வாங்க வேண்டும்? டெல்லி சொல்வதை தான் தமிழகம் கேட்க வேண்டுமா? தமிழக அரசும் டெண்டர் முறையில் வாங்கினால் குறைவாக கிடைக்குமே என்று எல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகள் அனைத்தும் முதல் நோக்கில் நியாயமானவை எனினும் சற்றே இதன் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி தினசரி 100 என்கிற எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்ப்ட்டு வந்தது. பரிசோதனை நிலையங்கள் குறைவு. பரிசோதனை முடிவுகள் தாமதமாக வந்து கொண்டு இருந்தன.

நமக்கு கிட்கள் மிக அவசரமாக தேவைப்பட்டது. ICMR ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் பட்டியலை இறுதி செய்து இருந்ததாலும், மத்திய அரசின் முடிவுப்படி ICMR தான் கொரோனா நோய்த் தடுப்பு பணியின் Nodal Agency என்பதாலும், அவர்கள் ஏற்கனவே சீன நிறுவனமான Wondfo வின் kit வாங்க ஆர்டர் செய்து இருப்பதாலும், தமிழகமும் அதே கருவியை அதே விலைக்கு ஆர்டர் செய்து இருக்கக் கூடும். இதில் தவறு ஒன்றும் இல்லை.

சட்டீஸ்கார் நிலைமை வேறு. 

நேற்று வரை அங்கே 36 பேருக்கு தான் பாதிப்பு (தமிழகத்தில் சுமார் 1500). அவர்கள் நிதானமாக டெண்டர் கோரி தென் கொரிய நிறுவனத்தை இறுதி செய்து உள்ளனர். இனி ஆர்டர் கொடுத்து எப்போது வரும் என்பது தெரியாது. நமக்கு கிட் வந்து சேர்ந்து சோதனைகள் செய்ய தொடங்கியாகி விட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. இரண்டும் வெவ்வேறு நாட்டு பொருள் (சட்டீஸ்கார் வாங்குவது தென் கொரியா பொருள், தமிழகம் வாங்குவது சீன பொருள்). 
மேலும் இரண்டு பொருட்களின் specification உம் வெவ்வேறு. எனவே இரண்டுக்கும் ஒரே விலை எதிர்பார்ப்பது தவறு.

எனவே, சட்டீஸ்கார் ₹337 கொடுத்து வாங்கிய பொருளை தமிழகம் ₹600 கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்வது சரி அல்ல. தமிழகம் வாங்கி இருப்பது சட்டீஸ்கார் வாங்கிய பொருள் அல்ல. இந்த புரிதல் அவசியம்.

அடுத்ததாக ICMR முடிவு செய்த விலைக்கு தான் தமிழகமும் வாங்கி உள்ளது. 

அவசர நிலையில் டெண்டர் வழிமுறைகளில் விலக்கு உள்ளது. அதிக விலை கொடுத்தாவது உடனடியாக kit வாங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் ICMR நிர்ணயித்த விலைக்கே தமிழக அரசும் வாங்கி உள்ளது.  ஒரு ரூபாய் கூட அதிகம் இல்லை.

இன்னொரு குற்றச்சாட்டு என்னவெனில் ஆர்டர் ஏன் சென்னையில் ஒரு சிறு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது என்பது.

மருத்துவ பொருட்கள் இறக்குமதி லைசன்ஸ், அதன் பகிர்மானம், வினியோகம் என்பது குறித்த புரிதல் உள்ளவர்கள் நிச்சயமாக இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். 
ICMR டெல்லியில் Aark Pharmaceutical எனும் நிறுவனம் மூலமாகவும் தமிழக அரசு சென்னையில் Shan Biotech எனும் நிறுவனம் மூலமாகவும் ஆர்டர் கொடுத்து உள்ளது. இரண்டு நிறுவனங்களும் சீனாவின் Wondfo நிறுவனத்தின் அதே Test Kit ஐ தான் வாங்கி கொடுக்கிறது. விலையும் அதே ₹600 (வரிகள் தனி) தான். இதில் என்ன தவறு உள்ளது என்றும் புரியவில்லை.

நல்லவேளையாக தமிழக அரசு விலை விவரத்தை வெளியிட வேண்டும் என கேட்ட திமுக தலைவர், விலை விவரம் மற்றும் ஆவணங்கள் வெளியான பின் அதை வைத்து அரசியல் செய்ய முயலவில்லை. 

இரண்டும் வெவ்வேறு நாட்டு நிறுவனங்கள்.. வெவ்வேறு கருவிகள்.. அதனால் வெவ்வேறு விலை இருப்பது இயல்பு என்கிற புரிதல் திமுக தலைமைக்கு நிச்சயமாக இருக்கும். அதனால் தானோ என்னவோ இன்று வரை இந்த விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் எதையும் கேட்காமல் பொறுப்போடு நடந்து கொண்டு வருகிறது தான்.

ஆனால் திமுகவின் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் ₹337 பொருளை ₹600 கொடுத்து வாங்கி முறைகேடு செய்து இருப்பதாக சமூக வலை தளத்தில் குற்றம் சாட்டுவது.. பொதுவாக திமுகவின் நற்பெயரை களங்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும் என்கிற விஷயத்தை திமுக உணர்வது நல்லது.

வெவ்வேறு பொருளுக்கு ஒரே விலை எதிர்பார்க்கலாமா என்கிற லாஜிக்கான கேள்விகள் கேலியாக எழுமானால், திமுக போன்ற இயக்கத்தின் இமேஜுக்கு அது நல்லது அல்ல என்பதை திமுக தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது நலம்.

இந்த நிமிடம் வரை திமுக தலைவரோ அல்லது முக்கியஸ்தர்களோ இந்த மாதிரி கேள்விகளை முன் வைக்காமல் இருப்பதே அவர்களது புரிதலுணர்வையும் பக்குவத்தையும் நிர்வாக அறிவையும் உணர்த்துகிறது.

தமிழக மக்களின் நலன், அவர்களது ஆரோக்கியம் ஆகியவை முதன்மையாக கருதி எல்லோரும் களத்தில் சுழன்று கொண்டு இருக்கும் நிலையில் இல்லாத ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டு இருப்பது சரியல்ல என்பதை திமுக தலைவர்கள் உணர்வார்கள் என நம்பலாம். 

மாறாக, தமிழகத்துக்கு வரவேண்டிய kit களை சீனா அமேரிக்காவுக்கு திருப்பி விட்டதன் தாமதத்தையும், மத்திய அரசு இடை புகுந்து தமிழக ஆர்டரில் இருந்து பிரித்து பிற மாநிலங்களுக்கு வழங்குவதையும் தமிழக அரசுடன் இணைந்து கேள்வி கேட்பது தான் தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய கடமையாக இருக்கும் என்பதையும் யாரேனும் எடுத்து சொல்வது நலம்.


Wednesday, April 8, 2020

தொழிற்சாலை அனுமதி குழப்பம்

மிழக அரசு 24.03.2020 இல் வெளியிட்ட lockdown அறிவிப்பில் துறை வாரியாக சில விதிவிலக்குகள் கொடுத்து இருந்தது

அதில் தொழிற்சாலை தொடர்பானது இது


இந்த விதி விலக்கு பட்டியலில் வரிசை எண் iii, தொடர்ச்சியான செயல்பாடு உடைய நிறுவனங்கள் என பொதுவாக சொல்லப்பட்டு அவைகளுக்கு அப்போதே Lockdown இல் இருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டு இருந்தது

ஆனால் இவை என்னென்ன தொழில்கள் என்கிற தெளிவான வரையறை இல்லை.

எனவே பல தொழிற்சாலைகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது உற்பத்தி தொடர்ச்சியான இயக்கம் தேவையான நிறுவனம் என சொல்லி தொழிற்சாலை இயக்க அனுமதி கோரினர்

மாவட்ட ஆட்சியர்கள் எந்தெந்த தொழிற்சாலைகளை அனுமதிக்கலாம் என்பதை வரையறை செய்யவே நேற்று இந்த விளக்க Circular வெளியிட்டது 

இது புதிய அனுமதி அல்ல.. ஏற்கனவே கொடுத்து இருக்கும் அனுமதி எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும் என்பதற்கான விளக்கம் மட்டுமே

தமிழக மீடியா இதை புதிய அனுமதி என கருதி செய்தி வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

முதன்மை செயலாளர் தலையிட்டு அந்த விளக்க அறிவிப்பை ரத்து செய்து உள்ளார்

Circular குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கலாம் என்று கட்டுப்பாடு கொடுத்த நிலையில், இதை ரத்து செய்தது மூலம், தொடர்ச்சியான செயல்பாடு உள்ள அனைத்து தொழிற்சாலையும் இயங்க வழி ஏற்பட்டு உள்ளது.

Media பரபரப்பு ஏற்படுத்தியது நேர்ந்த குழப்பம் இது


அரசு இப்போதேனும் தெளிவாக விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டு, எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுக்கலாம், இது வரை இந்த Circular அடிப்படையில் அல்லது மற்ற வகையில் கொடுக்கப்பட்ட அனுமதியை பரிசீலித்து அதன் மீது முடிவு எடுக்கலாம்.

இது தொழில் துறையின் குழப்பத்தை தீர்க்கும்.

Tuesday, February 18, 2020

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

மதிய உணவு என்பது தமிழகத்தை பொறுத்த மட்டில் சமூக நீதிக்கான விதை.

முன்பெல்லாம் பள்ளிக்கு செல்லாத பிள்ளைகள் அதிகம். அவர்கள் வேலைக்கு சென்றார்கள். படிப்பதை விட வேலைக்கு சென்றால் ஒரு நேர உணவுக்காவது சம்பாதிப்பார்கள் என்கிற மனோநிலை தான் பெரும்பாலான ஏழைகளுக்கு இருந்தது.

பட்டாசு தொழிற்சாலை, வயல் வேலை, கதிர் அறுத்தல், செங்கல் சூளை, கடைகள், தொழிற் சாலைகளில் என குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இடமே இல்லை

நீதி கட்சி (திராவிட இயக்கங்களின் முன்னோடி) ஆட்சியில் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்பது முக்கியமான பணியாக எடுத்து கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழஙகும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இது சமூக படிநிலைகளை மெல்ல உடைக்க தொடங்கியது.  பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மெல்ல பள்ளிக்கு வர தொடங்கினார்கள். உணவுக்காக வந்து கல்வியும் கற்றார்கள். அது சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்க தொடங்கியது

சுதந்திரத்துக்கு பின்னர் காமராஜர் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டினார். பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிய உணவு திட்டமும் விரிவானது.

இவை எல்லாம் மிக சொற்ப அளவிலேயே இருந்து வந்தன.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் மிக பெரியது.

கல்வி தான் ஒருவனை எல்லா சமூக தளைகளில் இருந்தும் விடுதலை கொடுத்து முன்னேற வைக்கும் என்பதை உணர்ந்த திராவிட அரசுகள் கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்ல எல்லா வகையான திட்டஙகளையும் செயல் படுத்தியது.

கட்டணம் செலுத்த வசதி இல்லையா? கல்வி இலவசம்

புத்தகம் வாங்க பணம் இல்லையா? புத்தகஙகள் இலவசம்

உடை வாங்க வழி இல்லையா? சீருடை இலவசம்

நடந்து செல்ல காலணி இலவசம்

பள்ளிக்கூடம் தூரமாக இருக்கிறதா? தொடக்க பள்ளி, நடு நிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என பிரித்து எல்லா ஊர்களிலும் ஏதேனும் ஒரு பள்ளி இருக்கும் வகையில் கட்டப்பட்டது.

அப்படியும் தூரமாக இருக்கிறதா? அரசு பேருந்தில் போய் கொள். கட்டணம் இல்லை.

மேல்நிலை பள்ளிகளில படிப்போருக்கு சைக்கிள் இலவசம்.. மடிக்கணினி இலவசம்.

இப்படி எல்லா சலுகைகளும் கொடுக்கப்பட காரணம், எப்படியாவது நம் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலைக்கு முன்னேறி வாழ்க்கையை வெல்ல வேண்டும் என திராவிட அரசுகள் நினைத்ததால் தான்.

அதன் ஒரு பகுதியாக தான் மதிய உணவும். பள்ளிக்கு போனால் ஒரு நேரமாவது வயிறார உணவு உண்பான் என்பதாலேயே பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தொடங்கினார்கள். அது அவனுக்கு கல்வியையும் கொடுத்தது. அப்படி படித்து பெரிய நிலைக்கு சென்றவர்கள் பல லட்சம் பேர்

சொந்த கிராமத்தில் இடுப்பில் துணி கட்டி காலில் செருப்பின்றி கூனி குறுகி நடந்து கொண்டு இருந்தவர்களின் பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்கு சென்று தங்கள் சமூகத்தை நிமிர்த்தி தலை உயர்த்தி வாழ வைத்தார்கள்.

அதற்கு காரணம் கல்வி. அதை ஊக்குவித்தது இலவச திட்டம். அதன் மதிய உணவு திட்டம். ஆகியவை.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த வேளையில் UNICEF அறிக்கை ஒன்று, ஊட்டச்சத்து குறைப்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் ஊரக குழந்தைகள் போதுமான உட்டச்சத்து இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதை விவரித்து எழுதி இருந்தது.

அதை படித்த எம்.ஜி.ஆர், பள்ளியில் செயல் பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவு திட்டம் ஆக மாற்றினார்.

ஊட்டச்சத்து மிக்க பருப்பு காய்கறிகள் என உணவு முறையை மாற்றி மாணவர்களின் பசியையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் கவனித்து கொண்டார்

இப்படி சமூக நோக்கில் செயல்படுத்த படும் மதிய உணவுத் திட்டத்தை தான் இப்போது இன்னமும் விரிவு படுத்தி காலை உணவையும் கொடுக்க திட்டம் இட்டு உள்ளது தமிழக அரசு.

இது ஒரு வரவேற்க வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலை உணவு உண்ணாத மாணவர்கள் பாடத்தில் கவனம் கொள்வது இல்லை என பல சமூக ஆய்வாளர்கள் சொல்லிய விஷயத்தை வைத்து இதை பார்க்க வேண்டும்.

ஆனால் இதை அரசே செய்யாமல் தனியாரிடம் கொடுப்பது தான் இப்போது விமர்சனம் ஆகி உள்ளது.

இஸ்கான் அமைப்பின் அக்ஷய பாத்திரம் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த அமைப்புக்கு சுமார் ₹200 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தையும் கொடுத்து, மின்சாரம் குடிநீர் ஆகியவையும் இலவசமாக கொடுத்து இந்த திட்டத்தை செயல் படுத்த போகிறது தமிழக அரசு.

அப்படியான திட்டத்தில் அவர்கள் இட்லி, உப்புமா ஆகியவை கொடுப்பார்களாம். அதுவும் வெங்காயம் பூண்டு ஆகியவை சேர்க்காமல்.

அரசின் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது அரசின் நெறிமுறைகள் படி தான் எல்லோரும் செயல் படுத்துவது வழக்கம். ஆனால் இந்த திட்டத்தை பொருத்த வரை, தனியாரின் விருப்பப்படி செயல்பட அரசு அனுமதி கொடுத்து உள்ளது.

அதாவது தனியாரின் கொள்கைகள் அடிப்படையில் தான் அவர்களது சமையல் இருக்கும். அதை தான் மாணவர்கள் சாப்பிட்டு ஆகவேண்டும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட எந்த அரசும் இப்படியான விதிகளை ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

நாளை வேறொரு தனியார் அவர்களது கொள்கை படி தான் சமைப்பார்கள் என்றால் அதையும் அரசு ஒப்பு கொள்ளுமா?

இப்படியான நிலையில் மாணவர்கள் மனதுக்கு பிடிக்காத உணவை உண்ண முடியாமல், அந்த மன நெருக்கடி சுமந்த படி கல்வியிலும கவனம் இல்லாமல் படிப்பை சரியாக படிக்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

இத்தனை ஆண்டு காலமாக தமிழக அரசு எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் ஒரே திட்டம் மூலம் செயலிழக்க செய்ய இந்த காலை உணவு திட்டம் போதும்

இதை இப்படியே விடாமல் தமிழக அரசு மறு பரிசீலனை செய்து அரசே திட்டத்தை செயல்படுத்துவது நல்லது.

ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு கூடங்களும் சத்துணவு அமைப்பாளர் களும் உள்ளனர். எல்லா வச திகளும் உள்ளதால் அரசே இந்த திட்டத்தை நேரடியாக நடததுவதே நல்லது.

மாணவர்களின் எதிர்காலம் கருதி இதை அரசு செய்ய வேண்டும்

Sunday, September 1, 2019

பாலகுமாரனும் பெரியாரும்

எழுத்தாளர  பாலகுமாரன் முன்பு தனது முகநூல் பதிவில் சொல்லி இருந்த ஒரு விஷயம் இப்போது மீண்டும் சமூக வலை தளங்களில் உலாவருகிறது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பக்தி அதிகரித்து இருப்பதாகவும், எல்லா கோவில்களிலும் கூட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதற்கு பெரியார் கட்சி தான் காரணம் என்றும் எழுதி இருந்தார்.



இதனை இப்போது வெளியிட்ட நண்பர்கள், அவர் சொல்ல வந்தது பெரியார் கட்சி இருந்தும் பக்தர்கள அதிகரித்து இருப்பது பெரியாரின் தோல்வி என்கிற வாதததை முன் வைக்கிறார்கள்.


பாலகுமாரன் சொல்லி இருக்கும்
இந்த விஷயம் உண்மை தான்.

முன்பு குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பெரியார் நடத்திய போராட்டங்கள், திராவிட இயக்கங்கள் ஆட்சி ஆகியவை அனைவரையும் கோவிலுக்கு செல்ல வழிவகை செய்தது.

அதனால், கூட்டமும் வருமானமும் அதிகரித்தது.

மேலும் இந்த பதிவில் பாலகுமாரன் வேளாங்கண்ணி, நாகூர் எல்லாம் போய் வந்ததாக சொல்லி உள்ளார்.

இந்த மத நல்லிணக்கம் பெரியார் கொண்டு வந்தது. திராவிட கட்சிகள் தந்தது.

அதற்கு முன்பு பாலகுமாரன் போன்றோர் இப்படி சர்ச் தர்கா எல்லாம் போய்விட்டு வருவது எளிதல்ல.. பல எதிர்ப்புகள் இருந்தன.


பேருந்துகள் தேசிய உடமை ஆக்கப்பட்டு கடைக்கோடி கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுத்தது திமுக அரசு.

அதுவரை கிராமங்களில் அதிகம் பயணிகாத மக்களும் மெல்ல வெளி வந்து தொழில் கல்வி என வளர தொடங்கினார்கள்

அதுவரை பார்க்க நினைத்த ஆலயங்களுக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள்..


பல புகழ்பெற்ற ஆலயங்கள் ஒரு கால பூஜைக்கு கூட வழியின்றி இருந்த நிலையில், ஒரு கால பூஜை அனைத்து ஆலயங்களிலும் நடைபெற திமுக அரசு நிதி உதவி அளித்தது.

குடமுழுக்கு நடைபெறாது இருந்த ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது குடமுழுக்கு செய்யப்பட்டது

அனைவரும் வழிபாடு செய்ய வழி செய்யப்பட்டது

இவைகள் எல்லாம், மக்களுக்கு வெவ்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபட ஊக்கம் தந்தது.

திருவில்லிபுத்தூர் கோபுரத்தை அரசு முத்திரையாக அறிவித்த அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்த கோபுரத்தை பார்ப்பதற்கென்றே அந்த கோவிலுக்கு சென்றவர்கள் பலர்.

இதுபோன்ற மறைமுக ஊக்குவித்தல் திராவிடம் கொடுத்த வளர்ச்சி

ஆலயங்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்து கால பூஜைகள் தவறாமல் நடைபெற வழி செய்தது

ஒடாதிருந்த தேர் திருவிழாக்களை மீண்டும் முன்னெடுத்து ஓட்டி காட்டியது என மக்கள் வழிபாட்டுக்கு உரிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது திராவிடம்

இவை தான் இன்றைய கூட்டத்துக்கு வருவாய்க்கு காரணம்.

எனவே, பாலகுமாரன் அவரத பதிவில் சொல்ல வந்தது, இப்போதைய மக்கள் இத்தனை அதிகமாக ஆலையம் சென்று வழிபட வேண்டிய உரிமைகளையும் அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தது பெரியார் கட்சி (திராவிட இயக்கம்) என்பதை தான் என விளங்கி கொள்ள முடிகிறது.



Friday, August 30, 2019

வங்கிகள் இணைப்பு சரியா?

இன்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நடத்திய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்

அதாவது இப்போது இருக்கும் 27 பொதுத்துறை வங்கிகளில் சில வங்கிகளை இணைப்பதன் மூலம் 12 வங்கிகளாக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்பது தான் அந்த முடிவு

எந்தெந்த வங்கிகள் எப்படி இணைக்கப்படுகிறது என்பதை இந்த படம் விளக்கும்



இந்த முடிவு சரியா?

என்னை பொறுத்த வரையில் இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு தான்.

அரசு துறை வங்கிகள் 12 என்பதே கூட அதிகம் தான். அதன் ஒரு படியாகக் கூட 27 வங்கிகள் என்கிற நிலையில் இருந்து 12 ஆக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கலாம்.

நிர்வாக செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் லாபமாக செயல்பட இது போன்ற இணைப்புக்கள் அவசியம் ஆகின்றன. தெளிவான கட்டுப்பாடுகளை கண்காணிக்கவும் இந்த இணைப்பு உதவும்

இதனால் ஆட்குறைப்பு இருக்குமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய பணிகள் வெகுவாக குறைந்து விட்டது என்பதை நாம் அறிவோம்.

உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு பல்கலை கழகத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், வங்கிக்கு சென்று டிடி எடுப்பது வழக்கம்.

அதற்கு கேஷியர், அதற்கான அப்ரூவர், டிடி பிரிண்ட் எடுப்பவர், அதை கையெழுத்து இட்டு அப்ரூவல் கொடுப்பவர் என குறைந்தது 3 அலுவலர்கள் தேவையாக இருந்தது.

இப்போது நாமே நாம் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழி இந்த கட்டணத்தை செலுத்த முடியும். அந்த 3 அலுவலர் அவசியம் இல்லாமல் போய்விட்டது.

டிடி மட்டும் அல்ல, வைப்பு நிதி, சேமிப்பு கணக்கு, காப்பீடு என அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனைகள் இப்போது அவரவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.

கிட்டத்தட்ட 60% வங்கி பரிமாற்றங்கள் வங்கிக்கு வெளியே நிகழ்வதால், வங்கி ஊழியர் எண்ணிக்கை என்பது அளவுக்கு அதிகமாகவே உள்ளது

இந்த வங்கிகள் இணைப்பு காரணமாக ஊழியர்கள் ஒருங கிணைக்க வழி பிறக்கும்.

ஒவ்வொரு வங்கி கிளையிலும் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறையாது, ஆனால் உயர் அதிகாரிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

ஒரே நகரில் இருக்கும் வெவ்வேறு வங்கி கிளைகள் ஒவ்வொரு தலைமை அலுவலகம், அதிகாரிகளின கீழ் இயங்கிய நிலை மாறி அத்தனை வங்கி கிளைகளும் சில அதிகாரிகளின கண்காணிப்பில் வரும். எனவே உயர் பதவிகளில் ஆட்கள் குறைய வாய்ப்பு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டில் இப்போது 27 வங்கி உயர் அதிகாரிகள் இருக்கும் நிலை மாறி இனி 12 அதிகாரிகள் போதும். இதுவே தான் அவர்களின் கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கும்.

அதுவும் அரசு ஆட்குறைப்பு செய்யும் என நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக காலியாகும் பதவிகளுக்கு, அதாவது ஓய்வு பெற்று செல்வோர், ராஜினாமா செய்வோர் ஆகிய பதவிகளுக்கு, புதிய ஆட்களை தேர்வு செய்வது குறையலாம். இருக்கும் அலுவலர்க ளை வெவ்வேறு பதவிகளுக்கு மாற்றி இயஙக முடியும்.

இது வங்கி நிர்வாகத்தின் செலவுகளை குறைப்ப தோடு, தெளிவான கண்காணிப்பு செய்யவும் உதவும்

வங்கி இணைப்பால் மக்களுக்கு என்ன பயன்?

நகர மக்களுக்கு பெரிய அளவில் பயன் இல்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு பல வகைகளில் இது உதவும்.

ஒரே ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு வங்கியில் கண்க்கு வைத்து இருப்பவர்கள் வேறொரு வங்கி ATM மூலம் பணம் எடுக்க இப்போது கட்டுப்பாடுகள் இருக்கிறது. இப்போது இணைக்கப்பட்ட வங்கிகளில் எடுக்க கட்டுப்பாடு இருக்காது.

சிற்சில ஊர்களில் 2 அல்லது 3 ATM மட்டுமே இருக்கும் நிலையில் அவை வெவ்வேறு வங்கி ATM ஆக இருந்தால் வரும் சிரமங களை எல்லோரும அறிவீர்கள். நமது வங்கியில் பணம் இல்லாத நிலையில் வேறு ATM மூலம் ₹200 பணம் எடுக்க ₹50 கட்டணம் கொடுக்க மனம் இல்லாமல் கொடுக்க வழி இல்லாமல் தவித்த நிலை நான் அனுபவித்து இருக்கிறேன்.

வங்கி கடன், கணக்குகள் என பலவற்றை இப்போது அந்தந்த வங்கிகள் கொஞ்சம் அதிகமாகவே தீர்மானிக்க முடியும்

மொத்த வங்கி பரிமாற்ற அளவு அதிகரிப்பதால், சில சலுகைகளை, சேமிப்புக்கு வட்டி உயர்வை வங்கிகளால் தாராளமாக கொடுக்க முடியும்

இது போல பல நல்ல விஷயங்கள் இந்த இணைப்பு மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

இந்த இனைப்பால் பொருளாதாரத்துக்கு என்ன பலன்?

இப்போது இந்தியா ஒரு பொருளாதார மந்த நிலையில் இருந்து பொருளாதார சிக்கலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தம், செலவு குறைப்பு ஆகியவை தேவை படுகிறது. தொலைபேசி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், என பலவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டு இருப்பதும் அதனால் தான். அதை போலவே வங்கிகளும் இணைக்கப்படுகின்றன.

இது வங்கி கடனை அதிகமாக வெளியிட்டு, மக்கள் செலவிடும் சக்தியை அதிகரிக்கும். அது பொருட்களின் விற்பனையை கூட்டி அதன் பயனாக உற்பத்தி துறைக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்.

கொஞ்சம் நீண்ட கால திட்டம் தான். ஆனால் இதை விட இதை செய்ய நல்ல தருணம் வேறு இல்லை.

பொறுத்து இருந்து பார்ப்போம்.





Tuesday, August 6, 2019

காஷ்மீர் சட்ட திருத்தம்

பின் கதை சுருக்கம்:

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பொது இந்தியாவில் 526 சமஸ்தானங்கள் இருந்தன. அவை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு தான் இந்தியா எனும் ஒரு நாடு உருவாக்கப்பட்டது.

இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் தனி நாடாக உதயமான பொழுது, காஷ்மீரின் அரசரான ராஜா ஹரி சிங், தனது அரசு தனித்து இயங்கும் எனவும் பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ சேராது எனவும் அறிவித்தார். அவ்வாறே காஷ்மீர் தனித்து இயங்கும் வகையில் நாடு பிரிக்கப்பட்டது

ஆனால் அதே ஆண்டு ஆக்டொபர் மாத இறுதியில் பாகிஸ்தான் காஷமீர் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க முனைந்ததால், ராஜா ஹரி சிங், இந்தியாவின் உதவியை நாடினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்து, அவ்வாறே ராஜா ஹரி சிங்கிடம் இருந்து எழுதியும் வாங்கி கொண்டது இந்தியா.
அந்த அடிப்படையில்1947 ஆம் ஆண்டு ஆக்டொபர் மாதம் 27 ஆம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சில நிபந்தனைகளுடன்.



ராஜா ஹரி சிங்

ராஜா ஹரி சிங் இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஒரு IoA (Instrument  of  Accession ) வரையறை செய்யப்பட்டது. அதில் சொல்லப்பட்ட நிகழ்வுகளுக்கு  எல்லாம் காஷ்மீரின் ஆலோசனை இல்லாமல் காஷ்மீர் கட்டுப்பட வேண்டியது இல்லை. அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவானாலும் அதற்கு காஷ்மீரின் ஒப்புதல் தேவை.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் 1950  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலான இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு தனி அலகு 370  இணைக்கப்பட்டு, 'இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், காஷமீர் மாநிலத்தை பொறுத்தவரை அந்த மாநில சட்டமன்றத்தின் முடிவின் படியே அது அங்கு ஏற்புடையதாகும்' என தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

மேலும், அந்த சிறப்பு அந்தஸ்தின் படி, காஷ்மீர் மாநிலத்துக்கு என தனி கொடி வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதும் தடை செய்யப்பட்டது.



இதே போன்ற சிறப்பு அந்தஸ்துக்கள் பிற மாநிலங்களுக்கும் தரப்பட்டது. அவை அலகு 371A முதல் 371I வரை விவரிக்கப்பட்ட உள்ளன. அவை நமது கட்டுரைக்கு அவசியம் இல்லாதது.

ராஜா ஹரி சிங் எழுதி கொடுத்த IoA வில் Clause 5 & Clause 7 ஆகியவை முக்கியமானது. அவற்றின் படி, ராஜா ஹரி சிங் அல்லது அவருக்கு பிந்தையவர்கள் சம்மதம் இல்லாமல் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது.  இந்தியா தன்னிச்சையாக எடுக்கும் எந்த முடிவுகளும் காஷ்மீரை கட்டுப்படுத்தாது.

Article 370 அமலான போதும் இந்த சலுகை அப்படியே சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதாவது காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக இந்தியா எடுக்காது என லார்டு மவுண்ட் பேட்டன் அவர்களும் ஜவஹர்லால் நேரு அவர்களும் வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள்.

மேலும் காஷ்மீர் மாநில பிரதமர் திரு ஷேக் அப்துல்லா அவர்கள் (அப்போது முதல்வர் பதவி இல்லை, பிரதமர் தான்) 1949  ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் காரணமாக, சர்தார் வல்லபாய் படேல் அவர்களும், இந்திய அரசியல் சாசனத்தை வரையறை செய்த திரு N கோபாலசாமி அய்யங்கார் அவர்களும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு கொடுத்த மற்றுமொரு வாக்குறுதியில், காஷமீர் மாநிலத்தை பொறுத்தவரை, அந்த மாநில மக்களின் முடிவே இறுதியானது என்பது முடிவு செய்யப்படட ஒன்று என வாக்கு கொடுத்து இருந்தார்.

அந்த வாக்குறுதி அடிப்படையில் இந்தியாவுடன் 1950 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநிலமாக காஷ்மீர் இருந்து வருகிறது.

மற்ற எல்லா மாநிலங்களையும் போலவே அங்கும் இந்திய தேர்தல் ஆணையம் தான் தேர்தல் நடத்தும், இந்தியாவின் சட்டங்கள் எல்லாம் அங்கேயும் செல்லுபடியாகும். ஆனால் அப்படி செல்லு படி ஆகும் முன்பாக காஷமீர் மாநில சட்டமன்றம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

இப்போதைய நிகழ்வு:

நேற்றைய தினம் நாடாளுமன்ற மேலவையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அரசியல் சாசன திருத்த மசோதாவை கொண்டுவந்து, அரசியல் சாசன பிரிவு 370 ஐ நீக்குவதாக அறிவித்தார்.

இதன் படி இந்தியாவுடன் காஷ்மீர் முழுமையாக இணைத்து கொள்ளப்படுவதாக அறிவித்து இருக்கிறார். அதாவது 1950 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன இணைந்து இருக்கும் காஷ்மீரை மீண்டும் இப்போது இணைத்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்து பேசின. மற்றும் ஒரு கிழக்கு தைமூராக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வைகோ அவர்களும் எச்சரித்தார்.

ஆனால் எல்லா எதிர்ப்பையும் மீறி அந்த சட்ட திருத்தம் நேற்று நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறி உள்ளது

இது சட்டப்படி சரியா?

Article 370 வரையறை செய்யப்பட்டபோது மிக மிக புத்திசாலித்தனமாக வரையறை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரிவின் படி, இந்திய நாடாளுமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அது காஷ்மீர் மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீரில் செல்லுபடி ஆகும்.

Article 370 நீக்கப்பட வேண்டும் என்றாலும் கூட, காஷமீர் மாநில மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரவே முடியும்.

இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், அரசியல் சாசன பிரிவு 368 சொல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்ட திருத்தம், காஷ்மீரை கட்டுப்படுத்தும் என்பதை உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன பென்ச் தான் தீர்மானிக்கும்.

இந்த 70  ஆண்டு கால இந்திய வரலாற்றில் எத்தனையோ அரசுகள் வலுவாக இருந்தும் இந்த முடிவை எடுக்க தயங்கின. காரணம், நாடாளுமன்றத்தில் வலுவாக இருக்கும் கடைசி காஷ்மீர் மாநிலத்தில் வலுவாக இல்லாத நிலையே இருந்து வந்தது.

இதுவரையும் இருந்த அரசுகள் எல்லாம் இந்திய அரசியல் சாசனத்தையும் இந்திய சட்டங்களையும் உயர்வாக மதித்த காரணத்தால், காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பரிந்துரை இல்லாமல் அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வர தயங்கின. சட்டம் அனுமதிக்காத ஒன்றை, சட்டப்படி செல்லுபடி ஆகுமா என்கிற சந்தேகத்தில் உள்ள ஒரு நடவடிக்கையை எடுக்க சட்டத்தை மதித்த எந்த அரசும் எடுக்கவில்லை. அது மொரார்ஜி தேசாய் அவர்களின் ஜனதா அரசானாலும் சரி, வாஜ்பாயி அவர்களின் பாரதிய ஜனதா அரசானாலும் சரி, யாரும் அடைய முடியாத மிகப்பெரிய பலம் பெற்றிருந்த ராஜீவ் காந்தி அவர்களின் காங்கிரஸ் அரசானாலும் சரி, இப்படி ஒரு சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆனால் சட்ட நெறி முறைகள் எதையும் கண்டு கொள்ளாமல், நேற்றைய தினம் மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உள்ளது.

பார்ப்போம், இது சட்டத்தின் முன் நின்று வெல்கிறதா அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா என்பதை.

அதுவரையும், காஷ்மீர் மக்களுக்கு எல்லா விதமான பாதுகாப்பையும் தரும் கடமை நமது அரசுக்கு உள்ளது.

.

Printfriendly