Thursday, August 20, 2020

தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகர்

மீண்டும் கிளம்பி இருக்கிறது, தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் தேவை எனும் விவாதம்.

அதிமுக அமைச்சர்கள் சிலரே மதுரையை இரண்டாம் தலைநகரம் ஆக்க வேண்டும் என கருத்து சொன்னதோடு இந்த விவாதம் மேலும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

ஏற்கனவே 80 களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி காலத்திலேயே இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. 
திருச்சியை தலைநகரம் ஆக்கவெண்டும் என சொல்லப்பட்டதற்கு அது மாநிலத்தில் நடுநாயகமாக இருப்பதும் ஒரு காரணம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அரசு பணிகளுக்காக ஒருவர் சென்னை வரவேண்டும் என்றால் ஒரு வழி பயணமே 15 மணி நேரம் எடுத்தது (1980 ஆம் ஆண்டுகளில்)

ஒரு சாதாரண வேலைக்காக மூன்று நாட்கள் தேவைப்பட்டது.

எனவே திருச்சி என்றால் தூரம் குறையும். வடக்கே சென்னை, தெற்கே குமரி, மேற்கே கோவை, கிழக்கே நாகை என எந்த பகுதியில் இருந்தும் ஏழு மணி நேரத்தில் திருச்சியை அடையலாம் என்பது அதன் பிளஸ் பாய்ண்ட்.

ஆனால், என்ன காரணத்தாலோ, இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் துவங்கி இருக்கும் இரண்டாம் தலைநகர் விவாதம் திருச்சியை அல்லாமல் மதுரையை மையமாக வைத்து துவங்கி இருக்கிறது.
சமீபத்தில் அதிமுகவில் இரு அணிகளுக்காக மறைமுக பலப்பரீட்சை பனிப்போர் ஏற்பட்டதில் ஒரு அணியினர் தாங்கள் பலமாக இருக்கும் மதுரையை தலைநகரம் ஆக்கவேண்டும் என ஆரம்பித்து, அதனால் இந்த விவாதம் மீண்டும் கிளப்பியதாக சொல்கிறார்கள்.

ஆனால் தமிழகத்துக்கு உண்மையிலேயே இரண்டாம் தலைநகரம் தேவையா?

சென்னையில் அரசு துறை அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன.

தலைமை செயலகம் காமராஜர் சாலையில் இருக்கிறது. சில அரசு துறைகள் ஓமந்தூரார் தோட்டத்தில். சிப்காட் கிண்டியில். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எழும்பூரில். நெடுஞ்சாலை துறை அடையாறில். இவை போல பல

இதனால் தொழில் ரீதியாக அரசு அலுவலகங்களுக்கு வருவோர் சென்னை முழுவதும் அங்கும் இங்குமாக அலைய வேண்டிய அல்லல் உள்ளது.

எனவே இதை தீர்க்கும் விதமாக, 

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னைக்கு அருகில் துணை நகரம் ஏற்படுத்தி அங்கே அரசு அலுவலகங்கள் எல்லாம் அமைக்கலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டது.

பின்னர் அந்த துணை நகர திட்டம் அரசு அலுவலகங்களுக்கு என்று அல்லாமல் பொதுவாகக் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த துணை நகரமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி, ஒரகடம், திருமழிசை, திருப்பெரும்புதூர் என பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் திருமழிசை முடிவானது. ஆனால் இன்னமும் பணிகள் தொடங்கவில்லை.

எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைய வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்ற சமையத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அந்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து, அதன் மினியேச்சர் வெர்ஷனாக, மாவட்ட அரசு அலுவலகங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மாவட்ட தலைநகரில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை நகருக்கு சற்று வெளியே எல்லா துறைகளுக்கும் ஒரே இடத்தில் அலுவலகங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகம் முழுவதையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தார்.

திருவள்ளூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இந்த "ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" எனும் முறை கொண்டு வரப்பட்டது. புதிய கட்டிடங்கள், நவீன தகவல் தொழில்நுட்ப ஏற்பாடுகள், மாநாட்டு கூடம் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தது என்பதால் மாவட்ட நிர்வாகம் விரைவாக முடிவுகள் எடுக்க முடிந்தது.

அரசின் தேவைகளுக்காக வரும் பொது மக்களுக்கும் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருப்பது வேலையை சீக்கிரம் முடிக்க உதவியது. அலைச்சலும் இல்லை.

இதன் அடுத்த வடிவம் தான் மாநிலத்துக்கு இரண்டாம் தலைநகர் கோரிக்கை. சென்னையில் நெரிசல் அதிகம் இருப்பதாலும், அரசு அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடப்பதாலும் வேறொரு நகரில், ஒரு புதிய தலைநகர் ஏற்படுத்தலாம் என்கிற யோசனை இப்போது கிளம்பி உள்ளது.
இது இப்போது அவசியமும் கூட. சென்னைக்கு வரும் மக்களில் தினசரி தேவைகளுக்காக வந்து செல்பவர்கள் தான் அதிகம். ஒரு நாளைக்கு 20 லட்சம் பேர் வரை அலுவலக விஷயமாக வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். 

எனவே மதுரையில் அல்லது திருச்சியில் தலைநகர் கட்டமைப்பை ஏற்படுத்துவது நல்ல பலனை தரும்.

ஏற்கனவே உள்ள நகரத்தில் தலைநகரை ஏற்படுத்துவதை விட புதிதாக ஒரு இடத்தில் ஏற்படுத்துவது இன்னமும் நல்ல பலனை தரும் என்பது என்னுடைய கருத்து.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி என ஒரு புதிய நகரமே நிர்மாணிக்க முடிவெடுத்தது போல, திருச்சி அருகில், உதாரணமாக பெரம்பலூர் பகுதியில் அல்லது விராலிமலை பகுதியில் ஒரு புதிய சிறு நகரமே ஏற்படுத்தி அங்கே அனைத்து அரசு அலுவலகங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புக்கள், அவர்களது பிள்ளைகளுக்கான கல்வி கூடங்கள் என அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைக்கலாம்.

மாநிலத்தில் உள்ள பிற நகரங்களில் இருந்து இணைப்பு சாலைகளும் அமைத்தால், சென்னை நெரிசலும் குறையும், தென்கோடி மக்கள் அரசு பணிகளை 6 மணி நேரத்துக்குள் வந்து முடிக்க முடியும், அனைத்து சேவைகளும் ஒருங்கே ஒரே இடத்தில் கிடைக்கவும் வழி செய்யும். அந்த பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கும் இது உதவும்.

தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் என்பது அவசியமான யோசனை தான். ஆனால் அது எங்கே எப்படி செயல்படுத்த படுகிறது என்பதை பொறுத்தே அதன் பயன் இருக்கும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.








No comments:

Post a Comment

Printfriendly