வரும் செப்டெம்பர் மாதம் கோவையில் நரேந்திரமோடி பெரும் பேரணி நடத்தவிருப்பதான செய்தியுடன் விடிந்தது இன்றைய பொழுது. தமிழகத்திற்கு மோடி வருவது ஆச்சரியமில்லை. சமீப காலமாகவே இந்தியா முழுதும் பயணித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தான் அவர் தமிழகத்துக்கு வருகிறார். ஆனால் தலை நகர் சென்னை, பாஜக செல்வாக்காக இருக்கும் குமரி, திருச்சி போன்ற பகுதிகளையெல்லாம் விட்டுவிட்டு, சென்சிட்டிவ்வான கோவையை தேர்ந்தெடுத்தது தான் பல பல மறைமுக செய்திகளை சொல்கிறது.
அது 1998 பிப்ரவரி
14. நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். இரவு செய்தியில் அமிலம் தோய்த்து வந்தது
அந்த செய்தி. கோவையில் தொடர் குண்டு வெடிப்பு. கோவை வந்த அத்வானியை குறிவைத்து தாக்குதல்.
பல பேர் மரணம். தொடர் கலவரம். தீவைப்பு என வந்துகொண்டு இருந்த செய்திகளெல்லாம் வெந்துகொண்டிருந்த
மனதில் வேல்பாய்ச்சுவதாகவே இருந்தன. செண்டு பூத்த சோலைகளுள்ள கோவையில் வெடி குண்டு
பூத்து கொன்று தீர்த்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அதுவரையிலும் தொழில்
நகராக, வர்த்தக தலைநகராக விளங்கிவந்த கோவையின் சரிவு அப்போது தான் தொடங்கியது. பல தொழிற்சாலைகள்
மூடப்பட்டன. புகழ்மிக்க வர்த்தக நிறுவனங்கள் இடம் பெயர்ந்தன. தொழிலின்றி, நிம்மதியின்றி,
எதிர்கால நம்பிக்கையின்றி பலரும் மனதளவில் ஓய்ந்துபோனதோடு, கொலை, கொள்ளை திருட்டு வன்முறை
ஆகியவை பெருக தொடங்கின. இன்றுவரையும் அது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
இத்தனை வருடம்
கழித்து, எல்லா துயரங்களையும் துடைத்து தூர எறிந்துவிட்டு மறுமலர்ச்சியை நோக்கி மெல்ல
மேலெழ தொடங்கியுள்ளது கோவை. கேரள எல்லை பகுதிகளிலும், பொள்ளாச்சி சாலையிலும் பல தொழிற்சாலைகள்
மெல்ல மெல்ல முளைக்க தொடங்கி, மீண்டும் கோவை தன் பழம்பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில்
முன்னடி எடுத்துவைக்கும் இந்த வேளையில் தான் இப்படி ஒரு செய்தி. கோவையில் மோடியின்
பேரணி.
மோடி பேரணி நிகழ்த்துவதால்
என்ன ஆகிவிடப்போகிறது என்கிற எகத்தாள கேள்விக்கு என்னிடம் பதிலில்லை தான். ஆனால் என்ன
ஆகிவிடுமோ என்கிற அச்சம் கேள்வி கேட்பவர்களின் மனதிலும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதை
அவர்களால் மறுக்க முடியாது.
பாஜக இந்த தேர்தலை
சந்திக்கும் விதமே அலாதியானது. தென் இந்தியாவில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு
கட்சி பா.ஜ.க. வட இந்தியாவிலும் மெல்ல தேய்மானத்தில் இருக்கிறது. கிழக்கிந்தியாவில்
அதன் நிழல் கூட இன்னமும் வீழவில்லை. இந்த சூழலில், மேற்கு மாநிலங்களில் சிலவற்றில்
மட்டும் கிடைக்கும் ஒரு குறைந்த சதவிகித வெற்றியை வைத்து இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோலோச்ச
முடியாது என்பது நன்றாக தெரிந்ததால் தான், திறமையான அரசியல் அறிவுடைய, நிர்வாக திறன்
மிகுந்த பலர் இருந்தும், மோடியை முன்னிறுத்துகிறது பா.ஜ.க
மற்ற தலைவர்களை
விட மோடியிடம் உள்ள சிறப்பே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாகரீகமான பேச்சாலேயே
வன்முறையை விதைத்து, செண்டிமெண்ட் ஓட்டுக்களை அள்ளும் கலை என பல சொல்ல கேட்டிருக்கிறேன்.
எங்கெங்கெல்லாம் பலவீனமான மனநிலை கொண்ட மனிதர்கள் உள்ளனரோ, எங்கே எளிதில் வன்முறை வெடிக்க
வாய்ப்பிருக்கிறதோ, எங்கே எப்படி பேசினால் உணர்ச்சி வசப்பட்டு மக்கள் திரளக்கூடுமோ
அவ்வாறான நகரங்களை குறிவைத்தே நரேந்திரமோடியின் பேரணிகள் நடப்பதை பலரும் உன்னிப்பாக
கவனித்தே வருகிறார்கள். மங்களூர், ஹைதிராபாத் பேரணிகளும் அவ்வாறு திட்டமிடப்பட்டவையே.
தமிழகம் பொதுவாக
அமைதிப்பூங்கா தான் எனினும், கோவை கொஞ்சம் விதிவிலக்கு. சமீப காலமாக தீவிரவாதிகளுக்கான
பாதுகாப்பான புகலிடமாக கோவை திகழ்ந்துவருவதை பல பல செய்திகள் செவியிலறைந்து சொல்லிக்கொண்டே
இருக்கின்றன. ஒரு பேரிழப்பிலிருந்து மெல்ல மீண்டு சகஜ நிலைக்கு திரும்ப உத்தேசித்துள்ள
மக்களை மீண்டும் நொறுங்க செய்வது எளிது என்கிற மனோநிலை பா.ஜ.கவுக்கு வந்திருக்கிறதோ
என்கிற ஐயம் வேறு ஆட்கொள்கிறது.
செப்டம்பர் மாதத்துக்கு
இன்னும் அதிக நாட்களில்லை. விழாக்காலம், பண்டிகைக்காலம் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டிய
தருணத்தில், மனதில் கலக்கத்துடன் கழியவேண்டி வருமோ என்கிற அச்சம் கோவை மக்களுக்கு ஏற்படாதவண்ணம்
பாதுகாக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. மோடி தமிழகத்தில் பேரணி நடத்துவதை தடுக்க தேவையில்லை.
ஆனால் வேறு நகரத்துக்கு மாற்ற முயற்சிக்கலாம்.
பார்ப்போம். தமிழக
அரசு என்ன செய்யப்போகிறது என்பதை.
