Showing posts with label Narendra Modi. Show all posts
Showing posts with label Narendra Modi. Show all posts

Wednesday, November 9, 2016

செல்லா காசுகள்

ன்னைக்கு காலைல முழிச்சதே ஒரு ஆச்சரிய அதிர்ச்சியான சந்தோஷ தகவல் மீது தான். அரை தூக்கத்தில் மொபைலை எடுத்து டிவிட்டரை ஓப்பன் செஞ்சா நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாதுன்னு பிரதமர் அறிவீச்சிருக்கிறதாவும் அதை எப்படி எங்கே எப்போது வரை மாற்றலாம்னும் விரிவா நிறைய தகவல்கள். போதாக்குறைக்கு வாட்சப் பூரா அதே மெசேஜ். ஒரு புதிய இந்தியா உதயம் என தலைவர் ரஜினி போட்ட டிவீட் வேற அடிக்கடி டைம்லைனுக்கு வந்து போச்சு. ஓவர் நைட்ல என்ன என்னமோ நடந்திருக்கு. நான் என்னடான்னா நேத்து சாயந்தரத்துல இருந்து எந்த கவலையும் இல்லாம ஊர் சுத்திட்டு இருந்திருக்கேன்.



சரி ஆனது ஆச்சு.. இனி இதை பத்தி விரிவா அலசலாமா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் பிரபலமடைந்த ஐடியா தான் இது. 500, 1000 நோட்டெல்லாம் செல்லாதுன்னு திடீர்னு அறிவிச்சா கருப்பு பணமா கணக்கில் காட்டாம பதுக்கி வெச்சவனுக்கெல்லாம் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும். நேர் வழியில் சம்பாதிச்சு வெச்சிருக்கறவனெல்லாம் அதை பேங்கில் கொண்டு போய் கட்டிடுவான். இது தான் ஐடியா. சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் படத்தில் கூட இந்த ஐடியாவை காமெடியா சொல்லிருப்பாங்க. இப்போ அது நிதர்சனமாகி இருக்கு.

என்னை பொறுத்தவரை இது மிக மிக அரிதிலும் அரிதான அதிரடி முடிவு. இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்தும் அவர்களிடத்தில் இந்த ஐடியாவை பலரும் சொல்லி இருந்தும் யாரும் எடுக்க துணியாத முடிவு இது. இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடியை எவ்வளவு வேணும்னாலும் கொண்டாடலாம். ஆனா இந்த முடிவுக்கு பின்னாடி இன்னும் சில கருப்பான விஷயங்களும் இருக்கு.

அதாவது, 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போலி ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் புழக்கத்துக்கு விடப்பட்டு இருக்குன்னும், அதற்கு இந்தியாவை பொருளாதார ரீதியா நசுக்க நினைக்கும் பாகிஸ்தானின் சதியும் காரணம்னும் சில தகவல்கள் பல காலமாகவே சுத்திட்டு இருக்கு. நிதி அமைச்சகம் ஏனோ இது பற்றி பெரிசா எந்த அக்கறையும் காட்டிக்கிடலை. ஏகனாமிக் இண்டெலிஜென்ஸ் தகவல்களின் படி 500, 1000 நோட்டுக்கள் ரிசர்வ் பேங்க் சைடிலிருந்து புழக்கத்தில் விட்ட அளவை விட அதிகமா (கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு) மக்கள் கிட்டே புழக்கத்தில் இருக்கு. சில மாசங்களுக்கு முன் குறிப்பிட்ட சீரியல் எண் உள்ள 500 ரூ நோட்டெல்லாம் செல்லாதுன்னு வங்கிகளில் ஒரு அறிவிப்பு வெச்சிருந்தாங்க. 500 ரூ நோட்டுன்னாலே எல்லாருமே சந்தேகமா பார்க்கிற அளவுக்கு நிலமை இருந்துச்சு. ஆனால் அதை எல்லாம் கடந்து ஓவரா கள்ள நோட்டு புழக்கத்துக்கு வர்ற வரைக்கும் அரசாங்கம் மெத்தனமா இருந்திருக்கு. நிலைமை கைமீறி போனபின், இந்திய பொருளாதாரத்துக்கே வேட்டு விழும்ன்ற நிலை வந்தபின் பிரதமரே நேரடியா தலையிட்டு இந்த அதிரடி முடிவு எடுத்திருக்கார். இந்த முடிவின் மூலம் இதுவரை இருந்த கையாலாகத்தனமும் மெத்தனமும் நிர்வாகத்திறமையின்மையும் மறைக்கப்பட்டு வெற்றி வீரரா வலம் வருகிறார். என்ன தான் காரண காரியங்களை சொன்னாலும் இது ஒரு அசாத்தியமான துணிச்சலான கம்பீரமான முடிவு என்பதை மறுக்க முடியாது. மோடி அந்த வகையில் பாராட்டுக்குரியவர் தான்.

சரி. இந்த முடிவினால் என்னென்ன மாற்றங்கள் வரும்?

கருப்புப்பணம் ஊழல் லஞ்சம் எல்லாம் ஒழிஞ்சிருமான்னா நிச்சயமா இல்லை. கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் முடிவு தான் அரசின் குறிக்கோள். ஆனா அதன் பிற பலா பலன்களா (ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும்) கருப்புப்பணம் ஓரளவுக்கு வெளியே வரும்.

இன்னைக்கு காலையில் கூட செக்போஸ்டில் ஒரு டிரக் டிரைவர் கடை கடையா ஏறி 1000 ரூ நோட்டுகளுக்கு சில்லறை கேட்டுட்டு இருந்தாரு. செக்போஸ்டில் கொடுக்கவேண்டிய லஞ்சத்தை இப்போ 100 ரூ நோட்டா மாத்தி தர சொல்லி இருக்காங்களாம். ஆக மொத்தம் லஞ்சமோ ஊழலோ ஒழியாது. மோடு ஆஃப் ஆபரேஷன் வேணும்னா மாறும்.


நிச்சயமா பெரிய தொழிலதிபர்கள் மிக பெரிய அரசியல்வாதிகள் இதில் சிக்க மாட்டார்கள். ஏன்னா யாரும் அவ்வளவு தொகையை கேஷா பதுக்கி வைக்க மாட்டாங்க. மிடில் கிளாஸ், சம்பளதாரர்கள், தினசரி செலவு செய்வோர், மளிகை கடை, நகைக்கடை, அடமான கடை நடத்துவோர், கந்துவட்டி / சீட்டு / வட்டிக்கு விடுவோர், குறு சிறு தொழில் முனைவோர், ரியல் எஸ்டேட், வீடு மனை விற்பனை செய்வோர் / வாங்குவோர், திருமணம் / பத்திரபதிவு மாதிரியான காரியங்களுக்காக பணம் சேர்த்து வைத்திருப்போர், சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தினசரி கூலிக்கு ஆட்கள் பிடித்து தரும் ஏஜெண்டுகள் போன்றோர், லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்திருக்கும் (கீழ் நிலை / இடை நிலை) அரசு ஊழியர்கள், காவலர்கள், வட்டார போக்குவரத்து / வணிகவரி ஊழியர்கள், லோக்கல் அரசியல்வாதிகள், அரசு கான்டிராக்டர்கள்..  இந்த மாதிரி நபர்களிடம் தான் எப்போதுமே அதிக அளவில் 500 1000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும்.

இப்போது நேற்றிரவில் இருந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த ரெண்டொரு நாட்களுக்கு மேலே சொன்னவர்கள் பாடு தான் திண்டாட்டம். அதற்காக அவர்கள் எல்லோருமே தவறான முறையில் பணம் சேர்த்ததாக அர்த்தம் அல்ல. தினசரி பெரிய அளவில் செலவு செய்யக்கூடியவர்கள் அவர்கள். அதில் பலர் நேர் வழியிலும் சம்பாதித்து இருக்கலாம். ஆனா திடீர் என இரண்டு நாட்களுக்கு பணம் செல்லாது, வங்கியும் இல்லை, மாற்றவும் முடியாது என்றால் எல்லா வேலைகளும் நின்று போய் விடும். திருமணம் போன்றவை நின்றால் வாழ்க்கையே போன மாதிரி தானே? அந்த மாதிரியான அதீத பாதிப்புக்களை பற்றி எல்லாம் அரசு சிந்தித்ததாக தெரியவில்லை.

கையில் இருக்கும் 500 1000 நேர் வழியில் சம்பாதித்தது என்றாலும் கூட அதை மாற்ற இரண்டு நாள் காத்திருக்கணும். அதுவரை டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். ஆனால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தணும். மேலும் பேங்க் அக்கவுண்டில் பேலன்சும் இருக்கணும். நாம் ஏதோ ஒரு செலவுக்காக மொத்தமாக துடைத்து எடுத்து வீட்டில் வெச்சிருப்போம். அவ்வளவு தான். பணம் இருந்தும் உபயோகப்படுத்த முடியாத நிலை தான்.

அரசு 500 1000 செல்லாது என முடிவெடுப்பதற்கு முன்பாக அதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி சிந்திச்சிருக்கணும். கார்டு மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லைன்னு அறிவிச்சிருக்கணும். எல்லா தனி நபருக்கும் வங்கி கணக்கு இருக்கான்னு யோசிச்சிருக்கணும். எதையும் செயலை.

நேர்வழியில் சம்பாதிச்சவங்க எல்லாம் ரெண்டு நாள் கழிச்சு அவங்கவங்க கிட்டே இருக்கிற 500 1000 நோட்டுக்களை பேங்கில் அவங்க அக்கவுண்டில் கட்டிட்டு அப்புறமா ஏ.டி.எம் மூலமா எடுத்துக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லை. அதிக அளவில் பணம் கையிருப்பில் இருந்தா அது எதனாலன்னு ஒரு விளக்கம் எழுதி கொடுக்கணும்னு அரசு சொல்லி இருக்கு. இதெல்லாம் ஓகே தான். பெரிய பிரச்சனை இல்லை.

நேர் வழி அல்லாமல் கள்ளத்தனமாக சம்பாதித்த பணம் பதுக்கி வெச்சிருக்கறவங்க தான் சிக்குவாங்க. பதுக்கி வெச்சிருக்கிற பணத்தை பேங்கில் கட்டவும் முடியாம (கணக்கும் காரணமும் பணம் வந்த வழியும் கேப்பாங்களே?) செலவு செய்யவும் முடியாம (யாரும் வாங்க மாட்டாங்க) பதுக்கி வைக்கவும் முடியாம (அதான் செல்லாதே?) மொத்தத்தில் ஒரு பண்டில் பேப்பரை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். 

ஜூவல்லரி, மளிகைக்கடை, நகை அடமான கடை போன்றோர் தான் அதிக அளவில் கணக்கில் காட்டாத பணத்தை எப்போதுமே கைவசம் வைத்திருப்பார்கள்.

ரியல் எஸ்டேட், கன்ஷ்டிரக்ஷன் போன்ற துறையினரும் பணத்தை அதிக அளவில் இருப்பு வெச்சிருப்பாங்க ஆனா அதை கணக்கில் காட்டிட முடியும். அதற்கான சோர்ஸ் தெளிவா இருக்கும்.

பார்ப்போம் இதுவரை எத்தனை பேரு அதிர்ச்சியில் என்னென்ன ஆகியிருக்காங்கன்னு.

மத்தபடி கட்டுக்கட்டா பணத்தை சாக்கு மூட்டையில் கட்டி தோட்டத்தில் பதுக்கி வெக்கிற அளவுக்கு கருப்புப்பணம் வெச்சிருக்கிற ஆட்களுக்கு தான் கவலை அதிகமா இருக்கும். நம்மை போல அன்னாடம் காய்ச்சிகளுக்கு அடுத்த ரெண்டு நாள் எப்படி ஒட்டுறதுன்ற கவலை மட்டும் தான் இருக்கும்.

இந்த திட்டத்துக்கான அஸ்திவார பணிகள் 2011 ஆம் வருஷமே தொடங்கிச்சு. ஜீரோ பேலன்ஸ் பேங்க் அக்கவுண்ட் அறிமுகம் செய்து (நோ பிரில் அக்கவுண்ட்) எல்லோரையும் வங்கி கணக்கு எடுக்க வெச்சு, எல்லோருக்கும் டெபிட் கார்டு கொடுத்து நாடு முழுதும் ஏ டி எம் எண்ணிக்கையை அதிகரிச்சு, அரசு துறைகளில் எலக்டிரானிக் பேமெண்ட் சிஸ்டத்தை உருவாக்கி எல்லாருமே 100% உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி முடிக்க இத்தனை காலம் ஆகி இருக்கு.

இதன் பின் விளைவுகள் என்ன என்ன ஆகும்ன்றது, எத்தனை பேர் அளவுக்கு அதிகமா கருப்பு பணம் பதுக்கி வெச்சு இப்போ திவால் ஆகி இருக்காங்கன்ற தகவல்கள் வர தொடங்கினப்புறம் தான் தெளிவா அலச முடியும். லஞ்சமா வாங்கி வீட்டில் பதுக்கி வெச்சிருக்கிற அரசு ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். மத்த பெரும் கருப்புபணங்கள் எல்லாம் ஆஸ்தியாவோ சொத்தாவோ வீடாவோ எப்பவோ வாங்கிருப்பாங்க. யாரும் கேஷா பதுக்கி வெச்சிருக்க மாட்டாங்க. ஆக பாதிப்பு என்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தில் தவறு செய்தவர்களுக்கு மட்டும் தான்.

கருப்பு பணம் இனி மேல் வராமல் இருக்கவும் லஞ்சம் ஊழல் சுத்தமா ஒழியவும் ஒரே வழி தான் இருக்கு.

எல்லா பரிமார்ரங்களும் வங்கி மூலமா இருக்கணும். 10000 ரூபாய்க்கு மேல் யார் கிட்டேயும் கேஷா இருக்கக்கூடாது.


இந்த ரெண்டு கட்டுபாடு இருந்தாலே 90% கருப்புபணம் வெளியே வந்திரும். பார்ப்போம் அரசு என்ன செய்யபோகுதுன்னு. 

*********

தொடர்புடைய பதிவுகள்:
  1. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 1
  2. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 2 

Saturday, August 22, 2015

வராக்கடன் – இந்தியாவின் பெருநோய்

ன்னைக்கு காலையில் பேப்பரில் என்னை பகீர்னு அதிர்ச்சியாக்கிய செய்திகளில் முக்கியமானது “இந்திய பொதுத்துறை வங்க்கிகளின் வராக்கடன் தொகை 2.67 லட்சம் கோடி” என்பது.

2014-15 ஆண்டுக்கான அறிக்கை படி பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 2.67 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன். இது முந்தைய ஆண்டான 2013-14 இல் 2.16 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது பாஜக அரசின் ஓராண்டு ஆட்சியில் வராக்காடன் மட்டும் 51 ஆயிரம் கோடி.



பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் நிதி நிலையை உயர்த்தவும் ஏழை மக்களுக்கான நல திட்டங்கள் வழங்குவதற்கு வசதி செய்யவும் பொதுமக்கள் தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு உருக்கமான வேண்டுகோளை அனைத்து மீடியாக்களிலும் வெளியிட்டார். அவரது அற்புதமான பேச்சு மற்றும் அதன் நியாயமான காரணங்கள் ஆகியவற்றால் இதுவரை சுமார் 6.50 லட்சம் பேருக்கு மேல் தங்கள் மானியத்தை விட்டு கொடுத்து இருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சுக்கு பொதுமக்கள் காட்டிய அளப்பரிய மரியாதை ஆச்சரியப்பட வைத்தது. நாடு இருக்கும் இக்கட்டான நிலையை சொல்லி அதற்கு உதவுமாறு அவர் கொடுத்த கோரிக்கை மெகா ஹிட் அடித்தது.

இன்றைய செய்திக்கு வருவோம்

இந்த வாரா கடன் என்பது தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாவரும் வங்க்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட நிலுவை தொகை. மார்ச் 31, 2015 நிலவரப்படி அந்த தொகை ரூ.2.67 லட்சம் கோடி. இந்த அளவுக்கு நிலுவை வராக்கடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி கண்டிப்பு காட்டி இருக்கிறார். ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜனும் வங்கிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் சொல்லும் வராக்கடன் முழுமையான தகவல் அல்ல, அது மறைக்கப்படுகிறது என்றும் சொல்லி இருக்கிறார். (அதன் படி பார்த்தால் தொகை இன்னும் கூடலாம்).



இந்த வராக்கடன் என்பது நியாயமாக பார்த்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை தான். இதில் கால அவகாசம் கொடுக்க எந்த காரணமும் இல்லை. சட்டப்படி அதை வசூலித்து அரசிடம் சேர்த்திருக்கவேண்டிய கடமை வங்கிகளுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி எதையும் வங்கிகள் செய்ததாக தெரியவில்லை. இந்த 2.67 லட்சம் கோடியில் சுமார் 1.82 லட்சம் கோடி பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகை. அவர்களால் அதை செலுத்தமுடியாத நிலை எல்லாம் இப்போது இல்லை. நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கும் பல பெரிய நிறுவனங்கள் கூட வேண்டுமென்றே அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை கடன் பாக்கியை செலுத்தாமல் வைத்திருக்கிறது. அவர்கள் சொத்துக்களை முடக்கி, விற்று கடனை சரிக்கட்டக்கூடிய அதிகாரம் இருந்தும் வங்கிகள் மெத்தனமாக இருக்கின்றன. 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 41,236 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது  வங்கிகள். அது போக தான் இந்த 2.67 லட்சம் கோடி.

தன்னுடைய மேலான நேரத்தை ஒதுக்கி பொதுமக்களிடமிருந்து சுமார் 250 ரூபாய் மானியத்தை நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்சும் பாரத பிரதமர், இதுவரை கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் அவர்கள் செலுத்தவேண்டிய நிலுவை தொகையை செலுத்துமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம் தான்.

அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரின் கவலைகளை பிரதமர் உணர்ந்திருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அவரது அபரிமிதமான செல்வாக்கை பயன்படுத்தி கார்ப்பொரெட்டுகளுக்கு கோரிக்கை விடுத்து நிலுவையை வசூல் செய்தால் இந்தியா பொருளாதாரம் சட்டென தழைக்கும், ரூபாயின் மதிப்பும் உயரும். பொதுமக்களிடம் 250 ரூபாய்க்கு கெஞ்சிக்கொண்டிருப்பதை விட, நாடு நாடாக சென்று முதலீட்டுக்கு கையேந்திக்கொண்டிருப்பதை விட, நிலுவை கடன் தொகை, நிலுவை வரி பாக்கிகளை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், இந்தியாவின் பொருளாதாரத்தை சீரமைக்க.

செய்வாரா பிரதமர்?

References:





Tuesday, May 19, 2015

பிரதமரின் பயணங்கள்

ம்முடைய பாரத பிரதமர் சமீப காலமா அதிகமா வெளிநாட்டு பயணங்களில் நேரத்தை செலவழிப்பது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மீடியா, சோசியல் மீடியா என பல இடங்களிலும் விவாத பொருளாக மாறிட்டு இருக்கு.

ஒரு பிரதமர் வெளிநாட்டு பயணம் போறது தப்பு இல்லை. அது மிக அத்தியாவசியமானதும் கூட. இந்தியா மாதிரியான அணி சேரா நாடுகள் அதிலும் வளரும் பொருளாதாரத்தை அடிப்படையா கொண்ட நாடுகள் பல பல நாடுகளுடன் சுமுக உறவு வெச்சிருந்தே ஆகணும். அதுக்கு உயர்மட்ட ரீதியிலான பயணங்கள், ஒப்பந்தங்கள் எல்லாம் தேவை. அதை யாரும் மறுக்கவே முடியாது.

ஆனா, அளவுக்கு அதிகமான வெளிநாட்டு பயணங்கள் கொஞ்சம் அதீத விவாதங்களை இந்தியாவில் கிளப்பி இருக்கு.

பிரதமர் அளவில் வெளிநாட்டு பயணம் என்பது இரு அரசுக்கிடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்துக்காக, கொள்கை முடிவுகள் அறிவிக்கும் பேச்சுவார்த்தைக்காக தான் இருக்கும். அப்படியாக பிரதமர் பயணிப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் முதல் துறை அமைச்சர்கள் வரை முன்னர் போய் எல்லாத்தையும் விவாதிச்சிட்டு, கடைசியா தான் பிரதமர் அளவில் சந்திப்பு நடக்கறது வழக்கம்.

அப்படி பிரதமரே போவதுன்னா அது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமா தான் இருக்கும், பெரும்பாலும்.

இப்ப இதில் என்ன மாற்றம் வந்திருக்குன்னா...

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை விட, இரு நாட்டு தொழிற்சாலைகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தான் பெரும்பாலும் நடக்குது. அதுக்கு வர்த்தக அமைச்சரோ, தொழில்துறை அமைச்சரோ, வெளியுறவு அமைச்சரோ போதும். ஆனா இந்தியாவின் ஒரு தொழிலதிபர் வேறொரு நாட்டில் ஒப்பந்தம் போட போகும்போது கூடவே பிரதமரையும் மார்க்கெட்டிங் ஹெட் மாதிரி கூட்டிட்டு போறாங்க. உதாரணமா ஆஸ்திரேலியா பயணத்தின் மிக முக்கிய நோக்கம் அதானியின் சுரங்கங்களை புனரமைப்பது. இதுமாதிரியான தனியார் தொழில் வளர்ச்சி தொடர்பான ஒப்பந்தங்களுக்கு பிரதமர் செல்ல அவசியமே இல்லை.
ஆனாலும், சில பயணங்கள் ராஜீய ரீதியா முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு உறவுகள், வெளிநாட்டு கொள்கைகள் சம்மந்தப்பட்டது. உதாரணம், இலங்கை, கனடா, மங்கோலியா பயணங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் மோடி பதவி ஏத்து ஒரு வருஷம் தான் முழுசா ஆகி இருக்கு. இதில் இருந்தே இந்த ராஜீய ரீதியான ஒப்பந்தங்கள் எல்லாம் முந்தைய காங்கிரஸ் அரசில் பேசப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி இருக்குன்றதை நாம ஈஸியா உணரலாம். அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகுற வைபவங்கள் தான் இப்ப நடந்துட்டு இருக்கு.

இதில் எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, திறமையான ஒரு வெளியுறவு அமைச்சர் நமக்கு இருக்கார். திருமதி. சுஷ்மா சுவராஜ். ஆனா அவரை அரசின் டிராவல் ஹெல்ப் டெஸ்க் மாதிரி உபயோகப்படுத்திட்டு இருக்காங்க. அதாவது பிரதமர் பயணத்துக்கு முன்பு அவர் போயி தங்குமிடம், பயணத்திட்டம் எல்லாம் முடிவு பண்ணிட்டு வர்றதோட சரி. பிரதமருடன் கூட அவரை அழைத்து போறதில்லை.

நிறைய விமர்சனங்கள் வர்றது, பிரதமரின் பேச்சுக்கள் தொடர்பா தான். வெளிநாடுகளில் போய் நம்ம நாட்டை பத்தியும், நம் நாட்டு அரசியல் பத்தியும், எதிர்க்கட்சிகள் பத்தியும் விமர்சனம் செஞ்சிட்டு வர்றதை பாஜகவிலேயே பலர் விமரிசிச்சு எழுதிருக்காங்க. இந்தியா 2014 வரை கற்காலத்தில் இருந்த மாதிரியும், இப்ப இந்த ஒரு வருஷமா தான் மனுஷங்க வாழ தகுதி உடைய நிலமா மாறி இருக்கிற மாதிரியும் பிரதமர் காட்டும் பிம்பம், ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படவேண்டிய ஒரு விஷயம். ஆனா இணைய வெளிகளில் பல பட்டதாரிகளும் அதை ஆஹ்லாதம் செய்து ஆர்ப்பரித்து வரவேற்று எழுதுறது அருவருப்பா இருக்கு.

நான் ரொம்ப மகிழ்ந்த பயணங்கள்னு சொல்லணும்னா, ஃபிரான்சில் விமானங்கள் ஒப்பந்தம் (அது முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்காக, ஏற்கனவே இருந்த HAL ஒப்பந்தத்தை மீறி போட்டதா இருந்தாலும், இந்திய பாதுகாப்பு தொடர்பானதுன்றதால்), மங்கோலியாவுக்கு நிதி உதவி (பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கார் போன்ற பல பின்தங்கிய மாநிலங்களை எல்லாம் புறக்கணிச்சாலும், நாம பட்டினி கிடந்தபடி மத்தவங்களுக்கு பிச்சை போடுவோமே அந்த கவுரவத்துக்காக), கனடாவுடனான விசா திட்டங்கள் மறு வரையறை, இலங்கையில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்ட பகுதிகளில் நம் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நல திட்டங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் மேம்படுத்துவது ஆகிய சில விஷயங்கள் பாராட்ட வேண்டிய ஒண்ணு.

ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆகணும். என்னதான் பொருளாதார புலி, இந்தியாவை கடும் நெருக்கடிக்காலத்திலும் செம்மையாய் வழிநடத்தி சென்றவர்னு, பல பெருமைகள் மன்மோஹனுக்கு இருந்தாலும், அவரை விட, எதையும் செய்யாமலேயே பல அருமையான பேச்சுக்களால் உலக தலைவர்களை எல்லாம் ஈர்த்து இந்திய பிரதமர் எனும் பதவிக்கு ஒரு கெத்தும் கவனமும் ஈர்ப்பும் தந்திருக்காரு மோடி.

வெளிநாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்காவது இந்தியாவுக்கும் அவர் கொடுத்து, மாநில வாரியா சுற்றுப்பயணம் செஞ்சு அதே டெலிபிராம்ப்டர் உதவியோடு அவரது எதிர்கால கனவுகள் பத்தியெல்லாம் பேசினா, இந்திய மக்களும் அவருக்கு ரசிகர்களாகிடுவாங்க. (ஒரு வேளை, அதை அவர் தேர்தல் நேரத்துல செய்வாரா இருக்கும்). அவர் சொன்னதை எல்லாம் செய்யுறாரோ இல்லையோ அவர் சொல்லும் விஷயங்கள் அருமையா இருக்கு. உதாரணம், நேத்து சியோலில் அவர் பேசிய “ஆசிய கனவு” பேச்சு. இது கிட்டத்தட்ட நம்ம புரட்சி தலைவி முன்பு பேசிய “விஷன் 2023” க்கு இணையான அற்புதமான பேச்சு. ஆனா அது நடக்குமா அல்லது ஜெ மாதிரி தூக்கி கிடப்புல போட்டுருவாங்களான்றது தெரியாது.

இந்த வெளிநாடு பயணங்களில் நான் கவனம் செலுத்தும் விஷயம் இன்னொன்னு இருக்கு. நான் அடிப்படையில் ஒரு யாத்ரீகன். அதனால் என் புத்தி அதில தான மேயும்?

அமெரிக்க அதிபருக்குன்னு பிரத்யேகமா “ஏர் ஃபோர்ஸ் ஒன்” எனும் விமானம் இருக்கு. அது அதிபரின் பறக்கும் அலுவலகம். அது மாதிரி இந்திய பிரதமருக்கும் பிரத்யேக விமானம் வேணும்னு “ஏர் இந்தியா ஒன்” கொண்டுவந்தாங்க. ஆனா, அது பிரத்யேக விமானமே அல்ல. ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் மூணு போயிங் 747-400 விமானத்துல ஒண்ணை பிரதமருக்கான பாதுகாப்பு அம்சங்களோடு மாத்துவாங்க. அவ்வளவு தான். அப்படி பிரதமர் பயணிக்கும் கால கட்டத்தில், அந்த விமானம் வழக்கமா பயணிக்கும் வழித்தடத்தில் சேவை ரத்து ஆகும். ஏற்கனவே கடுப்பில் இருக்கும் ஏர் இந்தியா பயணிகள், பிரதமர் பயண திட்டம் அறிவிச்சா கொலை வெறி ஆயிருவாங்க.

ஏர் இந்தியாட்ட இருக்கும் போயிங் 747-400 விமானங்கள், லண்டன், பாரிஸ், நியூ யார்க் நகரங்களுக்கு இயக்கப்படுது. மேலும் மூணு விமானங்களை லீசுக்கு வாங்கிருக்காங்க. அது ஃபிராங்க்பார்ட், டொரோண்டோ, நகரங்களுக்கு இயக்கப்படுது. இதில் பிரதமர் பயண திட்டம் முடிவானதும் ரெண்டு விமானங்களை பிரதமருக்கு ஒதுக்கிருவாங்க. (ஒண்ணு அதிகாரப்பூர்வ விமானம், மற்றொன்று மாற்று விமானம்). பிரதமர் பயணிக்கறதுக்கு சில நாட்கள் முன்னால இருந்தே விமானத்தை மாடிஃபை செஞ்சு, பயணம் முடிஞ்சபின் மீண்டும் பழைய படி மாற்றி பயணிகள் சேவைக்கு ரெகுலர் ரூட்டில் அனுப்புவாங்க.

இப்ப யோசிச்சு பாருங்க, பயணிகள் சிரமப்படக்கூடாதுன்னு முந்தைய பிரதமர்கள் பயணங்களை குறைச்சுக்கிட்டதுக்கும், எதை பத்தியும் கவலைப்படாம வாரக்கணக்கா தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்யும் இப்போதைய பிரதமருக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

அப்படி ஒண்ணும் பிரமாதமான விமானம் அல்ல “ஏர் இந்தியா ஒன்”. ஒரு அலுவலக அறை அமைக்கறதை தவிர வேறு எதுவும் அதில் இல்லை. தானியங்கி ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் கூட கிடையாது. ஜஸ்ட் அது ஒரு சார்ட்டர்டு விமானம், அவ்வளவு தான்.

ஆனா சமீப காலமா உலகத்துல இருக்கிற சூழலை வெச்சு பார்க்கும்போது, இந்திய பிரதமருக்குன்னு சர்வ பாதுகாப்பு கருவிகளும் உள்ள ஒரு பிரத்யேக விமானம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதுவும் நம்ம பிரதமர் மாச கணக்கில் வெளிநாட்டு பயணம் செய்யறவரு. அவருக்காக பயணிகள் விமானத்தை திருப்பி விட்டு மக்களை அல்லாட வெக்கிறது எல்லாம் சரியா படலை.அதனால் தனியா ஒரு விமானம் தேவை தான்.


ஏர்-இந்தியா கஜுராஹோ (VT-ESO)

இப்ப மோடி சீனா, மங்கோலியா, கொரியா பயணத்துக்கு உபயோகிச்சிட்டிருக்கிற விமானம் VT-ESO. விமானத்தின் பேரு “கஜுராஹோ”. டிசம்பர் 1993 இல் வாங்கப்பட்டது. 22 வருஷ பழைய விமானம். (அந்த விமானத்தை தான் மேலே பார்க்கிறீங்க). இந்த விமானத்தில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. இப்படியான ஒரு விமானத்தில் உலகின் முக்கியமான ஒரு தலைவர் பயணிக்கிறது அவ்வளவு அட்வைசபிள்  அல்ல. அதனால், பிரதமருக்கான போயிங் 747-400 ஐ மாத்திட்டு அதை விட பெட்டரான போயிங் 777 வாங்கலாம்னு ஒரு யோசனை இப்ப உயர்மட்டத்துல இருக்கு. நல்ல விஷயம் தான். ஆனா, அதை பயணிகள் விமானமா வாங்கி அப்பப்ப ஷெடியூல் விமானமா அனுப்பாம, பிரத்யேக பிரதமர் விமானமா சகல நவீன பாதுகாப்பு அம்ஸங்களுடனும் ஆயுதங்களுடனும் வாங்கினா தான் இந்தியாவுக்கு பெருமை.

எவ்வளவோ செலவு செய்யுறோம், இதை செய்யக்கூடாதா?



Saturday, September 14, 2013

தாமரையை மலர்த்துவாரா மோடி?


நேற்று நடந்த பாஜக காரிய கமிட்டி கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரு வேறு கருத்துக்கள் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக வரக்கூடாது என ஒரு சாராரும், அவர் தான் வரவேண்டும் என ஒரு சாராரும் கடுமையாக விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

நேற்று மாலை மோடி அவர்கள், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியையும் தனது பொறுப்பையும் பற்றி மிக சிறந்த ஒரு உரை ஆற்றினார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளால் மிக அருமையானதொரு உரை அது. நான் கேட்ட வரையில் மோடியின் மிக சிறந்த பேச்சு அது தான்.

மோடி மிக சிறந்த நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. குஜராத் மாநிலத்தின் இப்போதைய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சீரிய நிர்வாகம் இதனை எல்லாம் நான் சூரத், வதோதரா, கச், அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு சென்றபோதெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள எனது நண்பர்கள் பலரும் மோடியின் அருமைகளை விளக்கமாக எடுத்து சொன்னார்கள். இன்றைக்கு தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருப்பதற்கு மோடியின் செயல்களும் திட்டங்களும் தான் அடிப்படை காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்து முதல்வராக அவர் நீடிப்பதன் காரணமும் அது தான். பரவலாக மாநிலம் முழுமையும் மோடி குறித்தான மிக நல்ல அபிப்பிராயமே நிலவுவதை நான் கண்டிருக்கிறேன்.

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு என பார்த்தால் வகுப்பு வாதம், கோத்ரா கலவரம், கலவரத்தை ஊக்குவித்தது, இனப்படுகொலைக்கு துணை நின்றது போன்றவையாக மட்டும் தான் இருக்கமுடியும். அதுவும் இன்னமும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு ஊகம் தான். எப்படி பார்த்தாலும் குஜராத்தை பொறுத்தவரை மோடி தான் ஹீரோ. அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் பிரதமர் பதவி வேட்பாளர் என வரும்பொழுது நான் குஜராத் முதலவராக மட்டுமே மோடியை பார்க்க விரும்பவில்லை. பிரதமர் பதவி என்பது நாடு முழுமைக்குமான பொதுவான பதவி. மேலும், அவர் முன் நிறுத்தப்படுவது பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளராக.

இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் யாரும் ஒரு மதம் சார்ந்த கொள்கையினை முன்னெடுத்து அரசியல் செய்வதை விரும்பமாட்டார்கள்.

இன்றைய தேதியில் பாஜகவின் வலுவான செல்வாக்கு என்பது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்பதோடு, ஓரளவு செல்வாக்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்டு, பீஹார், ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆகிய மாநிலங்களிலும் இருக்கிறது. இதை சற்று பரவலாக பார்த்தால், வட இந்தியாவின் ஒரு பகுதி, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பாஜகவுக்கு ஆதரவுள்ளது என்பது புரியும். தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு.

வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், தெற்கு இந்தியா, உச்ச வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜகவுக்கு என எந்த செல்வாக்கும் இல்லை. கட்சியை இந்த பகுதிகளில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும் இதுவரை பாஜக எடுக்கவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஏ.பி.வி.பி, சங் பரிவார் போன்றவை அதிக பலத்துடன் உள்ள மேற்கு & மத்திய இந்தியாவை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல் செய்துவந்த கட்சி தான் பாஜக. எனவே மிக பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பா.ஜ.க செல்வாக்காக இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

வட இந்தியாவை எடுத்துக்கொண்டால், உத்தரபிரதேசம் & உத்தரகாண்டு தான் இந்தியாவின் மிக அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பகுதி. பஹுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாடி பார்ட்டி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தான் இந்த பகுதியில் செல்வாக்காக உள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரும் லாலுவும் கோலோச்சுகிறார்கள். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளமும், பஞ்சாபில் அகாலிதளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் & கம்யூனிஸ்டு கட்சிகளும், அசாமில் அசாம் கன பரிஷத்தும், மிக அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்த அத்தனை மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் தான் இப்போதும் இருக்கிறது.

தென் இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக & திமுக, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு அடிப்படையில் அது இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.

எனவே சுருக்கமாக பார்த்தால் நாடு முழுதும் பரவலாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில கட்சிகளின் கையே ஓங்கி இருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட ‘எல்லா’ மாநிலங்களிலும் கணிசமான ஓட்டுவங்கி நிரந்தரமாக இருக்கிறது.


ஆட்சி பெரும்பான்மையான 272 எம்.பிக்களை வென்றெடுப்பது தான் பிரதமர் பதவிக்கான அடிப்படை தகுதி என எடுத்துக்கொண்டால், என்னை பொறுத்தவரை காங்கிரஸ் அதை எளிதாக எட்டிப்பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் கொண்டுவந்த அருமையான திட்டங்களை விரிவாகவும் முறையாகவும் எடுத்து சொன்னாலே போது. பயனை அனுபவித்தவர்கள் திட்டத்தின் நன்மை உணர்ந்து எளிதாக காங்கிரஸை ஆதரித்துவிடுவார்கள்.

காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் அள்ளிக்கொள்வது போக, மீதமிருக்கும் தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும். எனினும், பாஜக மிகுந்த செல்வாக்காக இருக்கும் மேற்கு, மத்திய இந்தியாவில் கணிசமான தொகுதிகளை வென்றெடுப்பதன் மூலம், எதிர்கட்சி வரிசையை தக்கவைத்துக்கொள்வதில் ஒன்றும் சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.


எனது இத்தனை கணக்கும், மூன்றாவது அணி என ஒன்று அமையாத நிலையில் தான். ஒருவேளை, மூன்றாவது அணி அமையுமானால், மாநில கட்சிகளின் தனி செல்வாக்கு ஓங்குமானால், எதிர்கட்சி வரிசை மூன்றாம் அணிக்கு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் மீதான அதிருப்தியை சரியாக ஊதி பெரிதாக்க முடிந்து, மூன்றாவது அணியில் ஒற்றுமையும் இருந்து, பிரதமர் பதவிக்காக ஏகமனதாக ஒரு நபர் முன்னிறுத்தப்படுவாரேயானால், மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூட கிட்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது அணி என நான் நினைக்கும் அணியில் நிறைய பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சமாதானம் செய்து ஒருவர் வென்று நிற்பது கஷ்டம் தான்.

கட்சி சார்ந்து இது தான் பாஜகவின் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் கள நிலை.

மோடி, மிக சிறந்த நிர்வாகி என்றாலும் கூட அவரது கட்சியிலேயே கூட அவர் 'ஏகமனதாக' வேட்பாளராக்கப்படவில்லை என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோருக்கு பிரதமர் பதவி ஆசை இருந்ததும், அதற்காக அணிகள் அமைத்துக்கொண்டதும் பிரசித்தமான விஷயம்.


இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.

மோடி நிர்வாகி என்பது ஒரு புறம். அடிப்படையில் அவரது மன ஓட்டம் என்பது வீரிய ஹிந்துத்துவாவை சார்ந்தது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரது வெளியுறவு கொள்கை அவ்வளவு பாராட்ட தக்கதல்ல. இன்றைக்கு கூட அமெரிக்கா, மோடிக்கான தனது விசா கொள்கையை உறுதி செய்திருக்கிறது. கோபம், பிடிவாதம், தீவிர ஹிந்துத்துவா, பின் விளைவுகள் குறித்த கவலையின்றி முடிவுகள் எடுத்து சிக்கலாக்கி கொள்வது என சமீப காலமாக மோடியின் செயல்பாடுகள் கவலையளிக்கக்கூடியவை தான். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் குஜராத் உயர்நீதிமன்றம், உள்கட்டமைப்பு, சாலைகளின் நிலை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுக்காக மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதையும் கவனிக்கவேண்டும். சூரத், அஹமதாபாத், வதோதரா போன்ற நகரங்களை மட்டுமே காட்டி மாநிலம் வளர்ந்துவிட்டது என விளம்பரம் செய்கிறார் என்கிற பிற கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ என்கிற ஐயம் பரவலாக தோன்ற தொடங்கி இருக்கிறது. அவருக்கென அமைக்கப்பட்ட தனியார் விளம்பர நிறுவனம், அவரது செல்வாக்கை உயர்த்துவதாக சொல்லி செய்யும் செய்கைகளில் உண்மையில் அவரது செல்வாக்கு சரிந்துகொண்டு தான் வருகிறது. இந்தியாவிலேயே தனது சுய செல்வாக்கை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்தை நியமித்து அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும் ஒரே தலைவர் என்கிற பெருமையும் மோடிக்கே உள்ளது!



பொதுவாக பாஜக கட்சி தலைவர்களில் வாஜ்பாயி மிதவாதி, எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவராக இருந்தார். அத்வானி முன்பு பிடிவாத போக்கு கொண்டவராக விளங்கினாலும், தற்போது அவரும் மிதவாதியாகவே மாறிவிட்டார். நாட்டு நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவரது தனிப்பட்ட வலைப்பூங்காவில் அதிகம் காணமுடிகிறது. மோடி அப்படிப்பட்டவரல்ல. எனவே பிரதமர் பதவி என்கிற உயர் அந்தஸ்து கிடைக்குமானால், அவரது செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. நம்மை போன்ற பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒரு சாராருக்கே அந்த அச்சம் இருக்கிறதை உணரமுடிகிறது.

இதெல்லாம், 2014ம் ஆண்டு இறுதியில் முறைப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் இருக்கக்கூடிய சூழல் தான். ஒருவேளை காங்கிரஸ் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, மூன்றாம் அணி இன்னும் அமையவில்லை, பாஜவிலும் அதிருப்தி நிறைந்திருக்கிறது, இந்த சமயத்தில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்திவிட்டால் மொத்தமாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட சாத்தியமிருப்பதை உணர்ந்து செயல்பட்டால், எல்லா கணக்குகளும் முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும்? சொந்த கட்சியான பாஜகவின் தலைவர்களை மோடியால் சமாதானப்படுத்த முடிகிறதா? இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் பரவலாக பாஜக பெற முடியுமா? மூன்றாவது அணி அமையுமா? அப்படி அமைந்தால் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடையில் தான் இருக்கிறது மோடியின் பிரதமர் கனவு.

இப்போதைக்கு பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததையே மிகப்பெரிய வெற்றியாக கருதி அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். அதில் எந்த சங்கடமும் யாருக்கும் இல்லை!

Saturday, August 17, 2013

கோவையில் மோடி


ரும் செப்டெம்பர் மாதம் கோவையில் நரேந்திரமோடி பெரும் பேரணி நடத்தவிருப்பதான செய்தியுடன் விடிந்தது இன்றைய பொழுது. தமிழகத்திற்கு மோடி வருவது ஆச்சரியமில்லை. சமீப காலமாகவே இந்தியா முழுதும் பயணித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தான் அவர் தமிழகத்துக்கு வருகிறார். ஆனால் தலை நகர் சென்னை, பாஜக செல்வாக்காக இருக்கும் குமரி, திருச்சி போன்ற பகுதிகளையெல்லாம் விட்டுவிட்டு, சென்சிட்டிவ்வான கோவையை தேர்ந்தெடுத்தது தான் பல பல மறைமுக செய்திகளை சொல்கிறது.

அது 1998 பிப்ரவரி 14. நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். இரவு செய்தியில் அமிலம் தோய்த்து வந்தது அந்த செய்தி. கோவையில் தொடர் குண்டு வெடிப்பு. கோவை வந்த அத்வானியை குறிவைத்து தாக்குதல். பல பேர் மரணம். தொடர் கலவரம். தீவைப்பு என வந்துகொண்டு இருந்த செய்திகளெல்லாம் வெந்துகொண்டிருந்த மனதில் வேல்பாய்ச்சுவதாகவே இருந்தன. செண்டு பூத்த சோலைகளுள்ள கோவையில் வெடி குண்டு பூத்து கொன்று தீர்த்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அதுவரையிலும் தொழில் நகராக, வர்த்தக தலைநகராக விளங்கிவந்த கோவையின் சரிவு அப்போது தான் தொடங்கியது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. புகழ்மிக்க வர்த்தக நிறுவனங்கள் இடம் பெயர்ந்தன. தொழிலின்றி, நிம்மதியின்றி, எதிர்கால நம்பிக்கையின்றி பலரும் மனதளவில் ஓய்ந்துபோனதோடு, கொலை, கொள்ளை திருட்டு வன்முறை ஆகியவை பெருக தொடங்கின. இன்றுவரையும் அது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இத்தனை வருடம் கழித்து, எல்லா துயரங்களையும் துடைத்து தூர எறிந்துவிட்டு மறுமலர்ச்சியை நோக்கி மெல்ல மேலெழ தொடங்கியுள்ளது கோவை. கேரள எல்லை பகுதிகளிலும், பொள்ளாச்சி சாலையிலும் பல தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல முளைக்க தொடங்கி, மீண்டும் கோவை தன் பழம்பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் முன்னடி எடுத்துவைக்கும் இந்த வேளையில் தான் இப்படி ஒரு செய்தி. கோவையில் மோடியின் பேரணி.

மோடி பேரணி நிகழ்த்துவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிற எகத்தாள கேள்விக்கு என்னிடம் பதிலில்லை தான். ஆனால் என்ன ஆகிவிடுமோ என்கிற அச்சம் கேள்வி கேட்பவர்களின் மனதிலும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதை அவர்களால் மறுக்க முடியாது.


பாஜக இந்த தேர்தலை சந்திக்கும் விதமே அலாதியானது. தென் இந்தியாவில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி பா.ஜ.க. வட இந்தியாவிலும் மெல்ல தேய்மானத்தில் இருக்கிறது. கிழக்கிந்தியாவில் அதன் நிழல் கூட இன்னமும் வீழவில்லை. இந்த சூழலில், மேற்கு மாநிலங்களில் சிலவற்றில் மட்டும் கிடைக்கும் ஒரு குறைந்த சதவிகித வெற்றியை வைத்து இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோலோச்ச முடியாது என்பது நன்றாக தெரிந்ததால் தான், திறமையான அரசியல் அறிவுடைய, நிர்வாக திறன் மிகுந்த பலர் இருந்தும், மோடியை முன்னிறுத்துகிறது பா.ஜ.க

மற்ற தலைவர்களை விட மோடியிடம் உள்ள சிறப்பே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாகரீகமான பேச்சாலேயே வன்முறையை விதைத்து, செண்டிமெண்ட் ஓட்டுக்களை அள்ளும் கலை என பல சொல்ல கேட்டிருக்கிறேன். எங்கெங்கெல்லாம் பலவீனமான மனநிலை கொண்ட மனிதர்கள் உள்ளனரோ, எங்கே எளிதில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருக்கிறதோ, எங்கே எப்படி பேசினால் உணர்ச்சி வசப்பட்டு மக்கள் திரளக்கூடுமோ அவ்வாறான நகரங்களை குறிவைத்தே நரேந்திரமோடியின் பேரணிகள் நடப்பதை பலரும் உன்னிப்பாக கவனித்தே வருகிறார்கள். மங்களூர், ஹைதிராபாத் பேரணிகளும் அவ்வாறு திட்டமிடப்பட்டவையே.

தமிழகம் பொதுவாக அமைதிப்பூங்கா தான் எனினும், கோவை கொஞ்சம் விதிவிலக்கு. சமீப காலமாக தீவிரவாதிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாக கோவை திகழ்ந்துவருவதை பல பல செய்திகள் செவியிலறைந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒரு பேரிழப்பிலிருந்து மெல்ல மீண்டு சகஜ நிலைக்கு திரும்ப உத்தேசித்துள்ள மக்களை மீண்டும் நொறுங்க செய்வது எளிது என்கிற மனோநிலை பா.ஜ.கவுக்கு வந்திருக்கிறதோ என்கிற ஐயம் வேறு ஆட்கொள்கிறது.

செப்டம்பர் மாதத்துக்கு இன்னும் அதிக நாட்களில்லை. விழாக்காலம், பண்டிகைக்காலம் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டிய தருணத்தில், மனதில் கலக்கத்துடன் கழியவேண்டி வருமோ என்கிற அச்சம் கோவை மக்களுக்கு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. மோடி தமிழகத்தில் பேரணி நடத்துவதை தடுக்க தேவையில்லை. ஆனால் வேறு நகரத்துக்கு மாற்ற முயற்சிக்கலாம்.

பார்ப்போம். தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை.

Printfriendly