வருமானத்துக்கு
அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம்
தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தண்டனையை
எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி ஆனதால்,
உச்சநீதிமன்றத்து கதவுகளை தட்டிய ஜெவுக்கு சிறிய ஆறுதலாக மறு மேல் முறையீட்டுக்கு
அனுமதியளித்தும் அதுவரை அவருக்கு ஜாமீனை வழங்கியும் சந்தோஷம் கொடுத்தது
உச்சநீதிமன்றம்.
எனினும், மூன்று மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது உச்ச நீதிமன்றம்.
எனினும், மூன்று மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது உச்ச நீதிமன்றம்.
உச்சநீதிமன்றம்
சொன்னபடி கர்நாடகத்தில் சிறப்பு நீதிபதி திரு குமாரசாமி அவர்கள் முன்னிலையில் மிக
வேகமாக நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணை, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி
முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம்
கொடுத்திருக்கும் ஜாமீன், வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரையே உள்ளதால், அதற்கு
முன்பாக குமாரசாமி அவர்கள் தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கின்
தீர்ப்பு என்பது ஜெ.வின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் தமிழகத்தின் எதிர்காலத்தையும்
இந்திய அரசியல் களத்தையும் தீர்மானிக்கப்போகின்ற தீர்ப்பு ஆகையால் மிக பெரிய
எதிர்பார்ப்பு எழுந்திருப்பதை மறுக்க முடியாது.
மறு மேல் முறையீட்டு
வழக்கு விசாரணை பல பல சுவாரசியமான நிகழ்வுகளை கொண்டதாக இருந்தது. முன்பு மிக
கறாராகவும் ஊழலை ஆதரிக்க முடியாது என்கிற ரீதியிலும் சென்று கொண்டிருந்த விசாரணை
மெல்ல தன் கடுமையை குறைத்து, இது பொய் வழக்காக கூட
இருக்கலாம் என்கிற சந்தேகத்தை விதைக்கும் வகையிலான கருத்துக்களை கொண்டதாக மாறியது.
உதாரணமாக டைல்ஸ் விலை ரூ. 100- 150 தான் இருக்குமென எனக்கே தெரியும். ரூ. 1800 என
சொல்லி இருப்பதை நம்ப முடியவில்லை என நீதிபதியே கருத்து சொன்னது மிகப்பெரிய
அதிர்ச்சி. ஜெ. தனது வீட்டுக்கு பயன்படுத்தியது டைல்சா மார்பிள்ஸா என்பதை கூட
ஆராயாமல், ஜஸ்ட் லைக் தட் ‘ காமன் சென்ஸ் இல்லாமல்
வழக்கு போடுவதா?’ என நீதிபதி சாடியது எல்லோருக்குமே ஆச்சரியம் தான். அதை
தொடர்ந்து சொத்துக்களை மறு மதிப்பீடு செய்யவும் அவர் உத்தரவிட்டார். மொத்த
வழக்கையும் சுருக்கமாக ரீவைண்ட் செய்தும் பார்த்தார்.
நல்லம்ம நாயுடு
அவர்கள் நியமிக்கப்பட்டது தவறு என ஜெ. தரப்பு வாதாடியபோது, அந்த நியமனம் சரியானது
எனவும் கருத்து சொல்லி இருக்கிறார் நீதிபதி. நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையின்
சந்தா தொகையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அன்பழகன் தரப்பு
வழக்கறிஞர்களை அனுமதிக்காதது போலவே, சுப்பிரமணியம்
சாமியையும் வழக்கில் வாதாட அனுமதிக்காததும் எல்லோருக்கும் பல யூகங்களை உருவாக்கி
விட்டது. வழக்கு நீர்த்து போய்விடும் என்கிற உணர்வு எல்லோருக்குமே தோன்றியதாலோ
என்னவோ தமிழக அரசியல் களம் சட்டென மாறியது. ஒருவேளை ஜெ. விடுவிக்கப்பட்டால்
முன்கூட்டியே தேர்தலை நடத்தக்கூடும் என யூகித்து அதற்கு தங்களை தயார்ப்படுத்தும்
முயற்சியில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அரசு
தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது தவறு என அன்பழகன் தரப்பு
உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடும் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தது. அவர்கள்
அப்படி கேட்க காரணம், அரசு தரப்பு வழக்கறிஞர் பல்வேறு சந்தர்ப்பங்களில்
குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது தான். இதை கர்நாடக உயர்நீதிமன்றமே கூட
கண்டித்து இருக்கிறது. எனவே, தண்டனை நிரூபிக்கப்பட்ட
ஒரு வழக்கின் மேல் முறையீட்டில் குற்றவாளிகளுக்கு சாதகமான அரசு வக்கீல் இருந்தால்
நீதி கிடைக்காது என்பது அன்பழகன் தரப்பினரின் வாதம். இதை ஏற்றுக்கொண்ட
உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டது. இந்த உச்ச நீதிமன்ற
வழக்கிலே கூட, ஜெ. தரப்பு பவானி சிங் தான் இந்த வழக்கில் வாதாடவேண்டும்
என ஒரு அபிடவிட்டை தேவையில்லாமல் தாக்கல் செய்திருக்கிறது. இதுவே அன்பழகன்
தரப்பினரின் குற்ற சாட்டை உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கிறது.
அங்கே தான் ஒரு
சுவாரஸ்யம்.
கடந்த ஏப்ரல்
ஒன்றாம் தேதி இந்த வழக்கில் வாதாடிய அன்பழகன் தரப்பு வக்கீல், இந்த
வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் கர்நாடக உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் தீர்ப்பு
வழங்க தடை கோரியபோது அப்படி எல்லாம் தரமுடியாது என மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த
முறை சற்று தன் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது.
தீர்ப்பை
ஒத்திவைத்து விட்டு மதிய உணவுக்கு சென்ற நீதிபதிகள், பின்
திரும்பி வந்து அவசரம் அவசரமாக அன்பழகன் தரப்பு வக்கீல்களை அழைத்து, ஜெ.வின்
ஜாமீன் எது வரை உள்ளது என கேட்டு இருக்கிறார்கள். ஏப். 18 வரை என்றதும்,
தங்களது தீர்ப்பை ஏப் 15 ஆம் தேதி தருவதாகவும், அதுவரை
மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டு
இருக்கிறார்கள்.
இதில் தெரியவரும் / புரியவரும் விஷயங்கள் பல பல.. எனினும் சில விஷயங்களை மட்டும் இங்கே சுருக்கமாக
பார்க்கலாம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.வின் ஜாமீனை ஏப்ரல் 18க்கு மேல்
நீடித்து உத்தரவிடாதது ஒரு முக்கியமான விஷயம். ஏப்ரல் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்கிய பிறகு ஏப்ரல் 18 வரை 3 நாட்களில் எந்த நாளில் வேண்டுமானாலும்
கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடும்.
கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு இப்போது இருக்கும் ஆப்ஷன்ஸ்
என கருதப்படுபவை:
1. ஜெ. தரப்பு கோரியது போல இது வெறும் பொய் வழக்கு என
தீர்மானித்து அவரை விடுதலை செய்யலாம்
2. வழக்கின் இறுதி நாளில் சுப்ரமணியம் சுவாமி கொடுத்த
அபிடவிட்டை கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ஜாமீனை
ரத்து செய்யலாம்
3. அரசியல் சாசன சிக்கல் இருப்பதால் தீர்ப்பு எதுவும்
வழங்காமல் உயர் பெஞ்சுக்கு வழக்கை பரிந்துரை செய்யலாம்
4. பவானிசிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு
வெளியானால், புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க செய்து வழக்கை மீண்டும்
முதலிலிருந்து விசாரிக்க உத்தரவிடலாம்
இதில் நான்காவது
ஆப்ஷன் செயல்பட்டால், ஜெ.வுக்கு அது மிக மிக சாதகமாக அமையும். அதாவது அப்படி
புதிய வழக்கறிஞர் நியமித்து மீண்டும் விசாரணை தொடரும் பட்சத்தில் ஜெ. தன் சார்பாக
ஒரு மனு செய்தால் போதும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அவர்தான்.
அதாவது,
“உச்சநீதிமன்றம் சொல்லியபடி நான் வழக்குக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுத்து
கெடுவுக்கு முன்பே முடித்து கொடுத்துவிட்டேன். ஆனால் வழக்கறிஞர் நியமன விஷயத்தில்
கர்நாடக அரசு செய்த தவறால் நான் பாதிக்கப்படக்கூடாது. எனவே எனது ஜாமீனை
நீட்டித்தும் தண்டனையை ரத்து செய்தும் உத்தரவிடுங்கள்” என கோரினால் அந்த
கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதை அனுமதித்தால், அவர்
முதல்வராக பதவி ஏற்க எந்த தடையும் இல்லை.
கையோடு சட்டமன்ற
தேர்தலை நடத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தக்கவைத்து கொண்டால்,
யாராலும் அவரை எதுவும் செய்ய முடியாது. காரணம்,
ஜெ.வுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு (விடுதலை) வந்தால், அதை
எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டியது வழக்கு தொடர்ந்த தமிழக அரசு தானே. அப்படி முறையீடு
செய்யாமல் விட்டாலே போதும். வழக்கு முற்றிலுமாக
முடிந்துவிடும். அதோடு இந்த பதினெட்டு ஆண்டு கால நீதிக்கான போராட்டம் முடிவுக்கு
வந்துவிடும். இது சாத்தியம் தான். ஜெ தான் தமிழக முதல்வர் எனில் ஜெ.வுக்கு எதிரான வழக்கில் ஜெ. தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எல்லோராலும் யூகிக்கக்கூடியதே.
ஆனால்,
ஒருவேளை உச்சநீதிமன்றம் பவானி சிங் நியமனம் செல்லும் என சொன்னாலோ, அல்லது
நியமனம் செல்லாது ஆனாலும் வழக்கு முடிந்துவிட்டதால் கர்நாடக அரசு முன் தேதியிட்டு
அவருக்கு நியமன ஆணை கொடுத்தால் போதும் என சொன்னாலோ நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு
முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிடும்.
ஏற்கனவே மார்ச் 11
ஆம் தேதியே வழக்கை முடித்துவிட்டு தீர்ப்பு தயாரிப்பில் இருக்கும் குமாரசாமி
அவர்கள் இந்நேரம் தீர்ப்பை வடிவமைத்திருப்பார். ஏனெனில் ஏப் 13 க்குள் தீர்ப்பு
சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. இப்போது ஐந்து நாள் நீட்டித்து ஏப் 18
வரை கால அளவு கிடைத்திருக்கிறது. அவர் காத்திருக்கவேண்டியது பவானி சிங் வாதாடியது
செல்லுமா செல்லாதா என்கிற ஒரு விஷயத்துக்கு தான்.
விசாரணையின் போது
நீதிபதி குமாரசாமி சொல்லிய சில கருத்துக்கள் முக்கியமானவை.
1. டைல்ஸின் விலை கற்பனையாக உயர்த்தி காட்டப்பட்டிருக்கிறது.
எனக்கு தெரிந்தே அப்போது ரூ. 100-150 வரை தான் விலை இருக்கும். ஆனால் வழக்கில் ரூ.
1800 என காட்டப்பட்டு இருக்கிறது.
2. நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு சந்தா கிடைத்ததை எல்லாம்
சந்தேகப்பட முடியாது. ஒரு பத்திரிக்கைக்கு சந்தாதாரர் இருப்பது இயல்பு. அந்த
சந்தாக்களுக்கு ரசீதும் உள்ளது.
3. திமுக இந்த வழக்கில் ஆர்வம் காட்டுவது ஏன். அவர்களது அதீத
ஆர்வம் இந்த வழக்கின் நோக்கத்தை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.
4. ஜெ. முதல்வர் ஆவதற்கு முன்பே அவருக்கு வருமானம் இருந்தது
நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் முன்பே வருமான வரி கட்டி வந்திருக்கிறார் என்பதை
வழக்கு விசாரணை அதிகாரி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என தோன்றுகிறது.
5. புடவைகள், ஆபரணங்கள்,
செருப்புகள் போன்றவை முதல்வர் பதவிக்காலத்தில் தான் வாங்கப்பட்டன என்பதை நிரூபிக்கவில்லை.
6. சுதாகரன் திருமண செலவை கட்சியினர் தான் ஏற்று கொண்டதாக
சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அந்த செலவை ஜெ.வின் செலவாக காட்ட முடியாது.
7. சசி, இளவரசி,
சுதாகரன் ஆகியோர் ஜெ.வீட்டில் வாசித்ததாலேயே அவர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள்
என சொல்லமுடியாது. அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.
என பல பல சாதகமான
கருத்துக்களை சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதிலிருந்து தான் அவர் ஜெ.வுக்கு
சாதகமாக தீர்ப்பு சொல்லக்கூடும் என்கிற யூகம் உருவாகி இருக்கக்கூடும்.
ஆனால் அவர்
ஜெ.வுக்கு எதிரான கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க
வேண்டும். அதில் முக்கியமானவை
1. நீதிபதி குன்ஹா 150 முடிச்சுகளை தனது தீர்ப்பில்
இட்டிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக ஆதாரபூர்வமாக அவிழ்க்காமல் என்னால் எதுவும்
செய்ய முடியாது.
2. நீங்கள் (ஜெ. தரப்பு) எல்லா செலவுகளுக்கும் கணக்கும்
ஆவணங்களும் இருக்கிறது என வாய்மொழியாக சொல்கிறீர்களே தவிர இதுவரையும் ஒரு ஆவணத்தையும் தாக்கல்
செய்யவில்லை. ஆவணங்கள் இல்லாவிட்டால் அவற்றை கணக்கில் வராத செலவாகவே கருதமுடியும்.
3. கடந்த 18 ஆண்டுகாலமாக இந்த வழக்கில் வருமானத்துக்கான எந்த
ஆதாரத்தையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை.
4. இந்த மேல் முறையீடு வழக்கு என்பது நீதிபதி குன்ஹா கொடுத்த
தீர்ப்பு சரியா தவறா என்பதை தீர்மானிப்பதற்கு தானே தவிர வழக்கை மறு விசாரணை
செய்வதல்ல.
5. நல்லம்மநாயுடு நியமனம் செய்யப்பட்டது தவறல்ல.
காவல்துறையின் எந்த அதிகாரியும் அதை விசாரிக்கலாம்.
சிற்சில நேரங்களில்
ஜெ.வுக்கு எதிரான கருத்துக்களை சொன்னாலும்,
பொதுவாக வழக்கு விசாரணை நடந்த நாட்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இது ஒரு
ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்கிற தோற்றத்தையே தந்ததாலோ என்னவோ ஜெ. விரைவில்
விடுதலை ஆகிவிடுவார் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் வழக்கு
விசாரணையின் கடைசி நாளில் திரு. சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் தாக்கல் செய்த 14
பக்க பிரமாணம் அதை மாற்றி விட்டது. இந்த வழக்கின் துவக்கம், தன்மை, எப்படி
எல்லாம் ஜெ. முறைகேடு செய்திருக்கிறார் என்பதை எல்லாம் தெளிவாக விவரித்து
இருக்கும் அந்த அபிடவிட்டை நீதிமன்றமும் ஏற்று கொண்டிருக்கிறது. அந்த அபிடவிட்டை
புறக்கணித்துவிட்டு தீர்ப்பை எழுத முடியாது என்பது தான் நிலை.
எனவே இந்த வழக்கை
பொறுத்தவரை கணிப்புக்களுக்கும் யூகங்களுக்கும் சிக்காமல் மிகுந்த சஸ்பென்சாக
இருக்கிறது முடிவு. 90% விடுதலைக்கும் 5% கைதுக்கும் 5% டிவிசன் பெஞ்ச் போவதற்குமே
வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்.
பார்ப்போம் என்ன
தான் நடக்கிறது என்று. இன்னும் ஒரு வாரம் தானே?















