Showing posts with label Tamilnadu. Show all posts
Showing posts with label Tamilnadu. Show all posts

Tuesday, September 12, 2017

நவோதயா பள்ளியும் தமிழகமும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் அளித்த தீர்ப்புக்குப் பின் சட்டென தமிழகத்தில் ரெண்டு நாளா ஒரு பரபரப்பு நவோதயா பள்ளிகள் பற்றி!

நீதி அரசர்கள் சசிதரன் அவர்களும் சுவாமிநாதன் அவர்களும் வழங்கிய தீர்ப்பில், "மத்திய அரசு தமிழை ஒரு கட்டாய பாடமாக கற்பிக்க முடிவு எடுத்திருப்பதால் இனியும் இழுத்தடிக்காமல் தமிழகத்தில் நவோதையா பள்ளிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவு இட்டிருக்கிறார்கள்.

அதென்ன நவோதயா பள்ளிகள்?

1986 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள்’. பின் தங்கிய மாவட்டத்தில் கல்வி வசதி கிடைக்கப்பெறாத குந்தைகளுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பள்ளி வீதம் தொடங்கப்பட்டு அவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது இந்த திட்டம்.

ஆனால் இப்போது நன்கு படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் மெருகேற்றும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு கோச்சிங் சென்டர் போல பல இடங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாநில அரசு 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் (?) அதில் மத்திய அரசு இந்த நவோதையா பள்ளிகளை அமைத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்கவைத்து பாசாக்குவது தான் இந்த நவோதையா முறை.

அதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், இங்கே 6 ஆம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கையே ஆரம்பிக்கிறது. அதாவது 5 ஆம் வகுப்பு வரை மாநில கல்வியில் படித்து, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் நவோதையா பள்ளிகளில் சேர முடியும். இதற்கென தனியாக தகுதி தேர்வும் உள்ளது. அதில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே இந்த பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் தகுதி தேர்வு எழுதிய 18.78 லட்சம் பேரில் தேர்வு பெற்றவர்கள் வெறும் 41 ஆயிரம் பேர் தான். அதாவது தேர்ச்சி விகிதம் வெறும் 2%. அப்படி எனில் அந்த பாட திட்டத்தின் கடுமை புரியும்.

அதாவது மாநில கல்வி திட்டத்தில் நல்ல மதிப்பெண் வாங்குவோரை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு மத்திய அரசு பள்ளி... அவ்வளவு தான் நவோதையா!

1985-86 கல்வி ஆண்டில் 2 பள்ளிகளுடன் தொடங்கிய இந்த திட்டம் இப்போது 598 பள்ளிகளை கொண்ட பெரும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. (660 பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.. அதில் 586 தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது).


தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த பள்ளிகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அனுமதி கொடுக்காமல் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் சமீபத்தில் அனுமதி வழங்க சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கிறது மதுரை நீதிமன்றம்.

தமிழகம் ஏன் இதை எதிர்க்கிறது?

முதலில் சொல்லப்பட்ட விஷயம், இந்த பள்ளிகள் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது. அதாவது ஆங்கிலம் & ஹிந்தி மட்டும் தான் பயிற்று மொழி. மாநில மொழிக்கு இடமில்லை என்பது. ஆனால் இப்போது மத்திய அரசு, "மாநில மொழி பயிற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் 6-10 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் ஆக்குவதாகவும், 11,12 ஆம் வகுப்புக்கு தமிழை விருப்ப பாடமாக அனுமதிப்பதாகவும்" சொல்லி இருக்கிறது.

ஆனால், எப்படியும் ஹிந்தியும் ஆங்கிலமும் தான் முக்கிய பயிற்று மொழி என்பதை மறுப்பதற்கில்லை. அலுவல் மொழியான ஹிந்தியை வளர்ப்பதற்கும் அதை மானவர்களிடத்தில் பரப்புவதற்கும் என தனியாக ஒரு குழுவே இந்த நவோதயா பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

ஹிந்தி மட்டும் தான் காரணம் எனில் திமுக ஆட்சி செய்த 1989-1991; 1996-2001; 2006-2011 ஆகிய காலகட்டத்தில் அனுமதி கொடுக்காமல் இருந்ததற்காக அதை காரணம் காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் 1986 என்பது எம்.ஜி.ஆர் ஆட்சி. அதன்பின் 1991-1996; 2001-2006; 2011-2017 என ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்திலும் கூட நவோதயா பள்ளிகளுக்கு தமிழகம் அனுமதி கொடுக்கவில்லை.

இதை புரிந்துகொள்ள வேண்டும் எனில் தமிழகம் திராவிட இயக்கங்களான அதிமுக திமுக ஆகியோரின் ஆட்சி காலத்தில் எத்தகைய சமூக வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை உணரவேண்டியது அவசியம்.

மற்ற மாநிலங்களை போலல்லாமல் தமிழகம், மாநிலம் முழுமையும் ஒட்டுமொத்த ஒருமித்த வளர்ச்சியை கண்து என்பதை மாநிலம் முழுக்க பயணித்தவர்களால் உணர முடியும்.

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதில் எல்லா ஆட்சியாளர்களுமே கவனமாக இருந்தார்கள்.

மதிய சாப்பாட்டுக்கு வழியில்லையா – அரசு கொடுக்கும்
உடை வாங்க வசதி இல்லையா – அரசு கொடுக்கும்
புத்தகங்கள் வாங்க சிரமமா – அரசு கொடுக்கும்
பயணிக்க தூரமாக இருக்கிறதா – இலவசமா பஸ் பயணம் அரசு தரும்
பஸ் வசதி இல்லாத பகுதியா – இலவசமாக சைக்கிள் தரும்
பயிற்சி செய்ய கணினி இல்லையா – அரசு லேப்டாப் தரும்

இப்படி மாணவர்கள் படிப்பதற்கு என்னென்ன சிரமங்கள் உள்ளதோ அத்தனையையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. எதற்காக. மாணவர்கள் படித்தால் மட்டும் போதும். அது அவர்களது எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் தான்.

இப்படி மாணவர்களுக்கு வசதிகள் செய்துகொடுத்து அவர்களை படிக்க வைக்கும் எந்த அரசாவது இந்தியாவில் இருக்கிறதா?

இந்த காரணங்களால், தமிழகத்தில் குக்கிராமங்களில் கூட, மலைப்பகுதிகளில் கூட அடிப்படை கல்வியும் உயர்கல்வியும் படித்த இளைஞர்களை சாதாரணமாக காண முடிகிறது.

ஆனால் ஜார்க்கண்டு, ஓடிஷா, சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களில் நிலைமை வேறு. அங்கே குழந்தைகள் படிக்க ஆசைப்பட்டாலும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. போதிய பள்ளிக்கூடங்கள் மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. போக்குவரது வசதி இல்லை. குடும்பங்களில் பொருளாதார வசதி இல்லை. எனவே பல குழந்தைகள் படிப்பதே இல்லை.

அவர்களை போன்றோர் இது போன்ற உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து அங்கேயே தங்கி படித்து முன்னேறுவது இயல்பு.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை இல்லை. 5 கி.மீக்குள் எப்படியும் ஒரு உயர்நிலை பள்ளி இருக்கும். 10 கி.மீக்குள் எப்படியும் ஒரு மேல்நிலை பள்ளி இருக்கும். போக வர பஸ் அல்லது சைக்கிள் இருக்க, குடும்பத்தை விட்டு விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க தேவையே இல்லை.

அதை விட நான் முன்பே சொன்னது போல, 5 ஆம் வகுப்பு வரை படித்து அதில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களால் மட்டுமே நவோதயா பள்ளிக்களில் 6 ஆம் வகுப்பில் சேர முடியும். அதாவது ஓரளவு நடுத்தர வர்க்க அல்லது மேல்நிலை வர்க்க மாணவர்கள் என வைத்துக்கொள்ளலாம். அபூர்வமாக குக்கிராம பகுதிகளில் இருந்து வரும் அசாத்திய திறமை கொண்டவர்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம். அப்படியானவர்கள் மட்டுமே படிக்க வசதி உள்ள ஒரு மத்திய அரசு பள்ளியை மாவட்டத்துக்கு ஒன்று என கொண்டு வர அனுமதிப்பதால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை.

அதை விட மாநில பள்ளி கல்வி துறையின் பள்ளிகளிலேயே நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதுடன், அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும், அரசே கல்விக்கான பெரும்பாலான செலவை ஏற்றுக்கொள்வதாலும், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதிருப்பதால் எந்த நஷ்டமும் இல்லை. நவோதயா வருவதால் எந்தவித லாபமும் இல்லை.

இதை தமிழகத்தை இதுகாறும் ஆண்டுவந்த அனைத்து ஆட்சியாளர்களும் தெளிவாக உணர்ந்திருந்ததால் தான் இன்று வரை நவோதையா பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இனி தமிழக அரசு செய்யவேண்டியது என்ன?

புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு என மாண்புமிகு தமிழக முதல்வர் சொல்லிக்கொள்வது உண்மையானால், மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து, மாநில உரிமையை நிலைநாட்ட முன் முயற்சி செய்யவேண்டியது அவசியம்.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள கல்விக்கூடங்களை மேம்படுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் ஆவன செய்யவேண்டியதும் அவசியம்.

செய்வார்களா?

Wednesday, September 7, 2016

சிறுவாணி

சூப்பர் ஸ்டார் நடிச்ச அதிசய பிறவி படத்துல வரும் தானந்தன கும்மி கொட்டி பாட்டுல ஒரு வரி வரும்.. “சிறுவாணி கெண்டைய போல சொக்குது கண் ராசி”ன்னு.. ஆனா இப்ப சமீபகாலமா சிறுவாணி கெண்டையை விட சிறுவாணி சண்டை தான் ஃபேமசு ஆயிருச்சு.  இது இன்னைக்கு நேத்து சண்டை இல்லை.. கால காலமான சண்டை..

வீட்டுல கொசுவர்த்தி சுருள் இருந்தா எடுத்து உங்க முகத்துக்கு முன்னாடி பிடிச்சுக்கோங்க.. நாம இப்ப சிறுவாணியின் ஃபிளாஷ் பேக் கதைக்கு போறோம்.

ஃபிளாஷ் பேக்

அது 1889 ஆம் ஆண்டு. கோவையை சேர்ந்த திரு S.Pசிம்முலு நாய்டு ஒரு காங்கிரஸ்காரர். பத்திரிகையாளரும் கூட. அவர் அடிக்கடி வெள்ளியங்கிரி மலைக்கு அங்கிருக்கும் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவர். யானை, சிறுத்தை, அட்டைப்பூச்சி என பல பல இம்சைகள் இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாம ரெகுலரா மலைக்கு போய் வரும் வழக்கம் உடையவர். அந்த வெள்ளியங்கிரி மலை மேல நின்னு பார்க்கும்போதெல்லாம் தூரத்தில் தெரியும் முத்திக்குளம் அருவியை பார்த்துட்டே இருப்பது அவரது வழக்கம். வருஷம் பூரா எல்லா சீசனிலேயும் ஆர்ப்பரித்து கொட்டும் அந்த அருவி அவருக்கு ஆச்சரியமா இருந்தது. அந்த தண்ணியை மட்டும் கோவைக்கு கொண்டு வர முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு அவர் பல தடவை நினைச்சிருக்காரு. அப்படி எல்லா சீசனிலேயும் தண்ணீர் வருதான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே வருஷத்தில் பல முறை அவர் வெள்ளியங்கிரி மலைக்கு போயிட்டு வந்தாராம் .
 
Mukthi Falls (Thanks: The Hindu)
1889 ஆம் வருஷம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முக்திக்குளம் அருவியிலிருந்து கோவைக்கு நீர் கொண்டு வருவதை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தி அவர் ஐடியாவை விளக்கினாரு. அந்த முக்திக்குளம் அருவி நீருடன், பாம்பாறு, பாட்டியாறு ஆகிய நதிகளின் நீரும் சேர்ந்து தான் சிறுவாணி நதியா அங்கே ஒடிட்டு இருந்தது. அந்த நதியில் இருந்து நீரை எப்படியாவது மலைகளை குடைஞ்சு இங்கிட்டு கொண்டு வந்து நொய்யல் நதியோட சேர்த்து விடணும்ன்றது தான் ஐடியா.

ஆனா நிதி பற்றாக்குறை காரணமா அந்த திட்டம் அப்போது தொடங்கப்படலை.  திட்டம் பெண்டிங்.

1913 ஆம் வருஷம்.

கோவையின் மாநகராட்சி கவுன்சிலராகவும் பின்னர் சேர்மேனாகவும் இருந்த திரு C.S ரத்தின சபாபதி முதலியார் (இவர் பெயரில் தான் இப்போது R S புரம் பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது – ரத்தின சபாபதி புரம்) சிறுவாணி திட்டத்தை தன் கையில் எடுத்தாரு. அந்த தண்ணீரை கோவைக்கு கொண்டு வருவதற்காக ‘The South Indian Railway Company’ எனும் நிறுவனத்துக்கிட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனா அவங்க என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு, நீலகிரி மாவட்டத்துல இப்போதிருக்கும் குந்தா பைக்காரா நீர் மின் திட்டங்களை செயல்படுத்த போயிட்டாங்க. மீண்டும் திட்டம் பெண்டிங்.

ஆனா ரத்தின சபாபதி முதலியாரின் இடை விடா முயற்சியால், 1929 ஆம் வருஷம் ஏப்ரல் 26 ஆம் தேதி சிறுவாணி நீர் கோவைக்கு குடிநீரா சப்ளை செய்யப்பட்டது. மொத்தம் 110 குடிநீர் குழாய்கள் தான் அப்போது இருந்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி நதி முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது. அதோடு கோவைக்கான நீர் ஆதாரம் பணால்.

1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் கோவையின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு சின்ன செக் டேம் கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.
 
Siruvani Check Dam
திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் வருஷம் சிறுவாணி அணை திறக்கப்பட்டது. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி, கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது ரொம்ப முக்கியமான விஷயம்.. பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் விஷயங்களுக்கு எல்லாம் இதை மனதில் வைத்து வாசிக்க வேண்டி இருக்கும்.

இப்போதைய பிரச்சனை:

சரி.. இப்போ என்ன திடீர் பிரச்சனைன்னு தானே அடுத்த கேள்வி? அதையும் பார்க்கலாம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 218 tmc நீரை திறந்துவிட்டு அதன் மூலம் தமிழகத்துக்கு 205 tmc நீரும், புதுவை மாநிலத்துக்கு 7 tmc நீரும் கேரள மாநிலத்துக்கு 6 tmc நீரும் கொடுக்கணும். அந்த தீர்ப்பை கர்நாடகம் மதிக்கலைன்னு தமிழகம் புதுவை மாநிலங்கள் பல காலமா  போராடிட்டு வருது என்பது நமக்கு தெரியும். அதன் ஒரு பகுதியா தான் கேரளா இந்த அணை கட்டுது. என்ன கொழப்பமா இருக்கா?

தமிழகம் கர்நாடகாவில் இருந்து கிடைக்கும் நீரில் இதுவரை கேரளாவுக்கு உரிய பங்கை கொடுக்கலை. இது தொடர்பா கேரளம் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால், கேரளாவின் 6 tmc நீரை தமிழகத்திடமிருந்து எடுத்துக்கலாம்னு நடுவர் மன்றம் மூலமா அனுமதி வாங்கிட்டாங்க. அதாவது காவிரியின் நீர் வரத்தில் பவானியின் பங்கும் உள்ளது. அதே மாதிரி பவானியின் நீர் வரத்தில் கேரளாவின் பங்கும் உள்ளது. அதனால் மேல் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியின் அருகிலுள்ள சோலையூர் & அகழி பகுதிகளில் சிறுவாணிக்கு குறுக்கே ஒரு சின்ன செக் டேமை கட்டி 6 tmc நீரை எடுத்துக்கறது தான் கேரளாவின் திட்டம். இதன் மூலம் கேரளாவின் அட்டப்பாடி அகழி சோலையூர் மன்னார்க்காடு பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். (இப்போ அந்த பகுதிகள் வறட்சியான பகுதிகளா இருக்கு. அதிலும் அட்டப்பாடி மக்களின் வாழ்க்கை நிலை. கொடுமையிலும் பெரும் கொடுமை..! அதெல்லாம் தனியா இன்னொரு பதிவு எழுத வேண்டிய அளவுக்கு விஷயம் உள்ள கட்டுரை).

இந்த சின்ன செக் டேம் மூலம் பவானிக்கு போகும் நீரில் 6 tmc தடுக்க முடியும், அதாவது பவானி மூலம் காவிரிக்கு போகும் 6 tmc. அப்படியாக காவிரியிலிருந்து கேரளாவிற்கு சட்டப்படியா கிடைக்க வேண்டிய நீர் கிடைச்சிரும். இது தான் ஐடியாவின் சுருக்கம். இது சட்டப்படியும், நியாயப்படியும், காவிரி நடுவர் மன்றத்தின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் சரி தான். இதை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை.

கேரளா அணை கட்டுவதா சொல்லப்படும் இடம் என்பது கேரள பகுதிக்குள்ளேயே தான், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திடம் அணை கட்ட அனுமதி கேட்கனும்ன்றது கட்டாயமில்லை. (இருமாநிலத்துக்கு இடையிலான நதியான பவானியில் நாம் சில அணைகள் கட்டி இருக்கிறோம், எதற்கும் கேரளாவின் அனுமதி கேட்கவில்லை என்பதை ஒரு ஓரமா நினைவில் வெச்சுக்கோங்க). 

என்றாலும் கூட, அணை கட்டும் பகுதி தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருப்பதால், தார்மீக அடிப்படையில் தானாக முன்வந்து தமிழகத்துக்கு கடிதம் எழுதி நாங்க இப்படி அணை கட்ட போறோம். இதில் உங்களுக்கு எதுனா ஆட்சேபனை இருக்கான்னு கேட்டுச்சு கேரளா.

உங்களுக்கே தெரியுமே? தமிழகத்தில் அரசு செம்ம தூக்கத்தில் இருப்பதால் அதற்கு பதில் எதுவும் கொடுக்கலை. பல நினைவூட்டல் கடிதங்கள் (அதாங்க ரிமைண்டர்) அனுப்பியும்  எந்த பதிலும் வரலை. இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போச்சு கேரளா. மத்திய அரசும் பல கடிதங்கள் அனுப்பிச்சுச்சு. அதுக்கும் பதில் இல்லை.

கடைசியா, கடந்த மே மாசம் 4 ஆம் தேதி கேரள கூடுதல் முதன்மை செயலாளர் தமிழகத்துக்கு கடிதம் எழுதி, ஜூலை மாசத்துக்குள் பதில் வேணும்னு கேட்டாரு. ம்ஹூம்.. நாம எந்த பதிலையும் கொடுக்கலையே.

ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் மத்திய நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழு கூட்டம் கூடிச்சு. சிறுவாணி விவகாரத்தில் உள்ள தற்போதைய நிலைமைய ஆராய்ந்து, தமிழகம் இத்தனை நாளா பதில் அனுப்பலைன்னா அவங்களுக்கு அங்கே அணை கட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு அர்த்தம்னு சொல்லி (யெஸ்... தட் மௌனம் சம்மதம் மொமெண்ட்) கேரளா அங்கே அணை கட்டிக்கலாம்னு அனுமதி கொடுத்துச்சு.

அப்பவும் தமிழக அரசு சைலன்ட் மோடில் தான் இருந்துச்சு.

விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் விஷயத்தை கையில் எடுத்து போராட தொடங்கினப்பத்தான் (அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் வருவதும் சட்டுனு ஞாபகத்துக்கு வந்து?) தமிழக அரசு மத்திய அரசுக்கு திடீர்னு ஒரு கடிதம் அனுப்பி இருக்கு. அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கன்னு.


நமக்கு ஆட்சேபனை இருக்குனு ஒரு கடிதத்தை ஜூன் மாசமே அனுப்பி இருந்தால் அணை கட்ட மத்திய அரசு அனுமதியே கொடுத்திருக்க மாட்டாங்களேன்னு லாஜிக்கா சிந்திக்கிற திறன் நமக்கு இல்லாததால், எல்லோரையும் போல மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அதிரடி கடிதத்தை ஆராதிச்சபடி ஒவ்வொரு நாளையும் கழிச்சுட்டு இருக்க வேண்டியது தான். நான் அப்படி தான் இருக்கிறேன். நீங்க?

Reference:




Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Wednesday, May 4, 2016

பிரச்சாரத்தில் சொதப்பும் ஜெ; தேர்தலில் சரியும் அதிமுக

தேர்தல் களம் 2016 பல பல அதிசய திருப்புமுனைகளை கண்டு வருகிறது. 

தேர்தல் அறிவிக்கப்படும் நாளில் தமிழகத்தின் அசைக்கமுடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக தான் இருந்தது. ஆனால் இப்போது இந்த மூன்று வாரங்களில் அதிமுகவின் நிலை மிக மிக பரிதாபகரமானதாக மாறிவிட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் எனக்கு தெரிந்து இரண்டே பேர்தான். ஒன்று சரியாக திட்டமிடாத, சுதாரிப்பற்ற ஜெ. இரண்டு கள நிலவரமோ மக்கள் மனநிலையோ புரிந்துகொள்ளாமல் ஜெவுக்கு பிரச்சார உரை எழுதி தரும் அந்த புலவர் பிரகஸ்பதி.

ஜெயலலிதா தமிழக அரசியலில் முன்னிலைக்கு வந்ததே அவரது சாதுரியமான பேச்சாற்றலால் தான். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சென்று கொடியேற்றி உரை நிகழ்த்தி தான் தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கையில் சிறந்த பார்லிமெண்டேரியன் என்று விருதுகள் வாங்கி தனது பேச்சாற்றலால் இந்திரா காந்தி மட்டுமல்லாமல் பல தேசிய தலைவர்களின் அபிமானத்தையும் பெற்றார்.

அப்படிபட்ட ஜெ. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அளவுக்கு சொதப்புவார் என அவரது இயக்க ரத்தத்தின் ரத்தங்கள் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது எதை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் எந்த கட்சிக்கும் தெளிவான கண்ணோட்டம் இல்லை. ஆட்சி மீது அப்போதைய நிலையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் நடத்திய தமிழக சுற்றுப்பயணத்தில் தனக்கு மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து, தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்கிற வாக்குறுதியை கொடுத்து தான் களம் இறங்கியது. அதிமுகவை பொறுத்தவரை தனது தனிப்பட்ட செல்வாக்கு, ஆட்சியின் மேன்மையை மட்டுமே நம்பி களம் இறங்கியது. ஆனால் சென்னையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்திலேயே ஜெ. சொதப்பிய சொதப்பல் எதிர்க்கட்சிகளுக்கு மணி மணியாக பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து பிரச்சார களத்தை சூடு பிடிக்க வைத்தது.

சென்னை பிரச்சார கூட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாக ஜெ. சொன்னது, சென்னை வெள்ள நிவாரணம், தொழில் முதலீடு, சென்னை மெட்ரோ ரயில் ஆகியவை தான். இதையே பிள்ளையார் சுழி ஆக்கி ஒவ்வொன்றாக பதிலளிக்க தொடங்கியது திமுக. வெள்ள நிவாரணம் பற்றி ஜெ பேசியதற்கு வெள்ள சேதம் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி விலாவாரியாக விளக்க தொடங்கியது எதிர்கட்சி பிரச்சாரங்கள். தொழில் வளர்ச்சி பற்றி ஜெ. சொன்னதற்கு தொழில் துறையை முடக்கி வைத்ததை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் புட்டு புட்டு வைக்கிறார்கள் மற்றவர்கள். சென்னை மெட்ரோ ரயில் தனது சாதனை என ஜெ. சொன்னதற்கு ஜெ. அந்த திட்டத்தை எப்படி எல்லாம் முடக்கி வைத்தார் அதன் பின் நீதிமன்றம் தலையிட்டு தான் அந்த திட்டத்தை செயல்படுத்தியது என்பதை செய்திகளோடு விளக்கியது எதிர்கட்சி முகாம்.

சென்னை பிரச்சாரம் சொதப்பியபோதே கொஞ்சம் சுதாரித்திருக்கலாம் ஜெ. ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு கூட்டத்திலும் கூடுதல் சொதப்பல்களை அள்ளி தெளித்ததன் பயனாக அதற்கான பதிலடிகளை ஆதாரபூர்வமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் மத்தியில் எடுத்து எடுத்து வைக்க வைக்க, அதிமுக மீதான பிரம்மாண்ட பிம்பம் மெல்ல மெல்ல மக்கள் மனதிலிருந்து சரிய தொடங்கியது.

ஜெ.வுக்கு பிரச்சாரம் எழுதி கொடுப்பவராவது மக்கள் மனநிலையை புரிந்து கொண்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஜெ. பேசவிருக்கும் பகுதியின் உண்மையான பிரச்சனைகளை பற்றியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் எண்ணற்ற தகவல்களை தினசரி அறிந்து வருவதால் அதிகமாக பொய்மொழிகள் இல்லாத வகையிலாவது ஜெ. பிரச்சார உரையை தயாரித்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கனவு லோகத்தில் இருக்கும் அதிமுகவினர் தமிழகம் பொற்காலமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்து இன்னமும் மீளாததால் யதார்த்தத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத பிரச்சார உரையை எழுதி கொடுத்து, அதை ஜெ.வை படிக்க வைத்து, உள்ள கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் மக்கள் மத்தியில் இருந்து நீக்கி கொண்டார்கள்.


இப்படித்தான் கோவை பொதுக்கூட்டமும் அமைந்தது. ஏற்கனவே சேலம் பிரச்சார கூட்டத்தில் சேலம் மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த (!) ஜெ. மீண்டும் ஒரு முறை கோவை மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். (குறைந்த பட்சம் எங்கே பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்கிற சிந்தனையாவது இருந்திருந்தால் இப்படியான சமந்தா சம்மந்தம் இல்லாத ஊர்களில் சம்மந்தமற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும் காமெடியை தவிர்த்திருக்கலாம்)

அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. திமுக, பாமக, ம.ந.கூ ஆகியவை தங்களது செயல் விளக்கங்களை தேர்தல் அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார்கள். அதிமுகவோ மக்களின் குறைகள் என்ன? தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காததால் இன்று வரை தேர்தல் அறிக்கையோ செயல் திட்டங்களோ வெளியிடவில்லை. பொத்தாம் பொதுவாக, நான் உங்களுக்கு தேவையானதை செய்வேன், நீங்கள் கனவிலும் நினைக்காததையும் செய்வேன், நான் சொல்லாததையும் செய்வேன் என சொல்கிறாரே தவிர இன்னின்ன பிரச்சனைகளை இன்னின்ன வகையில் தீர்ப்பேன், இன்னின்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவேன் என சொல்லவே இல்லை. நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, இதை இதை செய்வேன் என்கிற வாக்குறுதியாவது கொடுத்திருக்கலாம். ஆனால் அதை கூட அவரால் செய்ய முடியவில்லை. எனது அதிமுக நண்பர்களை கேட்டால் ரொம்ப வருத்தப்பட்டு சொல்கிறார்கள். அம்மாவுக்கு எங்கே என்ன பிரச்சனை இருக்கிறது, என்ன வாக்கு கொடுக்கவேண்டும் என்று கூட யாரும் எடுத்து சொல்வதில்லை என. இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாரையும் வளர்த்தாமல் இருப்பதன் பலனை இப்போது அனுபவிக்கிறது அதிமுக.

கோவை பொதுக்கூட்டத்திலும் அது தான் நடந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய சாதனைகள் நடத்தி இருப்பதாகவும், 4,509 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இருப்பதாகவும்(!), தொழிலாளர்கள் எல்லோரும் தனது ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெருமிதத்தோடு அவர் பேசியதை கேட்ட எனது அதிமுக நண்பர்களே ஆடித்தான் போய் விட்டார்களாம்.  அதில் பலரும் சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்து நடத்தி நசிந்து கொண்டு இருப்பவர்கள். தொழில் வளர்ச்சி முடங்கி போய் வேறு மாநிலங்களுக்கு செல்லலாமா என யோசித்து கொண்டிருப்பவரும் அதில் அடக்கம். இப்படியான நிலையை அறிந்து தான் கர்நாடக முதல்வர் கூட கோவையிலே கூட்டம் நடத்தி ஏன் தமிழகத்தில் இருந்து இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகருக்கு வாருங்கள். உங்களுக்கு தொழில் நடத்த எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என பகிரங்கமாக வந்து அழைப்பு விடுத்து போனார். சில தொழிற்சாலைகளும் கோவையிலிருந்து கர்நாடகம் சென்று விட்டது. அப்படியான சூழல் தான் கோவையிலே நிலவி வருகிறது என்பதை கூட தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெ. அறிந்திருக்கவில்லை.

கோவை என்றாலே டெக்ஸ்டைல் சிட்டி, தொழில் நகரம் என்பதெல்லாம் பழங்கதை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிக்கொண்டிருந்த மில்களும், மோல்டிங் கம்பெனிகளும், மோட்டோர் கம்பெனிகளும், நெசவு தறி இயக்குவோரும், பம்பு செட், கிரைண்டர் உற்பத்தியாளர்களும் தொழில்கள் நசிந்து, இப்போது, கிடைத்த கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு அவலமான நிலை தான் கோவையிலே இருக்கிறது. இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் வெற்று பெருமித பேச்சுக்களை எழுதிக்கொடுத்து அதை அப்படியே பேசி சொந்த கட்சிக்காரர்களும் மக்களும் கேலி செய்யும் அளவுக்கு ஜெ.ஆளானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். ஜெ. அப்படி பட்ட ஆள் எல்லாம் இல்லை. பொய்யாகவாவது நசிந்து கிடக்கும் மில்களை புனரமைத்து இயங்க செய்வேன், நெசவாளர்களுக்கு சலுகைகள் வழங்குவேன், பம்ப், மோட்டோர் தொழிற்பூங்கா அமைப்பேன் என பொய் வாக்குறுதியாவது கொடுத்து செல்வது தான் அவரது வழக்கம். இப்படி அப்பட்டமாக தனக்கு யதார்த்த நிலை எதுவுமே தெரியாது என மக்கள் உணரும் வகையில் அப்பட்டமாக பிரச்சாரம் செய்து சென்றிருக்கமாட்டார்.


கோவை மாவட்டம் அதிமுகவின் அசைக்கமுடியாத பெரும் கோட்டை என்பது எல்லாம் மே 1 ஆம் தேதி ஜெ பிரச்சாரம் செய்தது வரைக்கும் தான். இப்போது சொந்த கட்சிக்காரர்களும், மக்களும் (அவர்களிலும் தொழிலாளிகளும், கூலி வேலைகாரர்களும், சிறு/குறு தொழில் முனைவோரும் இருக்கிறார்களே?) எல்லோருமே அதிமுகவை விமர்சிக்க தொடங்கி இருப்பதை ஜெ சீரியசாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இந்த தேர்தலில் கோவை பகுதி அதிமுகவுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் அங்குள்ளவர்களின் பேச்சில் தெரிகிறது.

மக்களால் நெருங்கமுடியாத ஜெ. இப்போது வேட்பாளர்களாலும் நெருங்கமுடியாதவராக மாறி போனதை அதிமுகவினரே ரசிக்கவில்லை. தனித்தனி மேடை அமைத்து அங்கே ஜெ உட்கார்ந்திருக்கிறார் என்கிற உருவாக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து, பிரச்சார உரையை வாசித்து செல்லும் வழக்கத்தை ஜெ கை கொண்டிருப்பது அவரை மக்களிடம் இருந்தும், தொண்டர்களிடம் இருந்தும், ஏன் வேட்பாளர்களிடம் இருந்துமே வெகு தூரம் விலக்கி வைத்திருக்கிறது.

மக்களுக்காக நான், மக்களால் நான் என ஒரு பஞ்ச் டயலாக்கை எல்லா பொதுக்கூட்டத்திலும் பேசும் ஜெ ஒருபோதும் மக்களோடு நான் என சொல்லியதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களுக்காக நான் (எதையும் செய்யமாட்டேன்); மக்களால் நான் (எல்லா வளங்களையும் அனுபவிப்பேன்) என்கிற ரீதியிலேயே அவரது அந்த பஞ்ச் டயலாக் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிமுகவினரே அதிக அளவில் பணம் பதுக்கி வைத்திருப்பது வெளியாவதும், யதார்த்தம் சிறிதும் இல்லாத பிரச்சார உத்தியும், மக்கள் பிரச்சனைகளை பற்றிய எந்த உணர்வும் இல்லாத ஜெ. பேச்சும், அதிமுகவின் வெற்றி சதவிகிதத்தை குறைத்து வருவதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது.

முறையாக பிரச்சாரம் செய்து, பொய்யாகவேனும் மக்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்து அதை தீர்த்து வைப்பதாக பொய் வாக்குறுதியேனும் கொடுத்து இருந்தால் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை அப்படியே இருந்திருக்கும். தனது பிரச்சார சொதப்பல்களால் தனது எதிர்காலத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் ஒரு சேர கெடுத்துக்கொண்டு வருகிறார் மாண்புமிகு அம்மா. இது தமிழகத்துக்கு நல்லதா கெட்டதா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.


Wednesday, April 13, 2016

திமுக தேர்தல் அறிக்கை – 2016

தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி இருக்கு. பாரம்பரியமான தேர்தல் முஸ்தீபுகள்னா, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம்.. இப்படி தான் வரிசை. ஆனா இந்த தேர்தலில் பல கட்சிகள் இந்த மரபிலிருந்து மாறிடிச்சு. அதிமுக, நாம் தமிழர், மநகூ எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியாச்சு. ஆனா அவங்க தேர்தல் அறிக்கை என்ன? என்னவெல்லாம் திட்டத்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்க போறாங்கன்னு எல்லாம் அந்தந்த கட்சி காரங்களுக்கே இன்னும் தெரியாது. தேர்தல் அறிக்கை வெளிவந்தால் தான் எதையும் சொல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடியே பிரச்சாரம் தொடங்கிட்டாங்க. காமெடியா இருக்குல்ல?

தேர்தல் மரபை மறக்காம அதே வரிசைக்கிரமமா இப்போதைக்கு செயல்பட்டுட்டு இருக்கிற கட்சின்னா அது திமுக தான். கூட்டணி முடிவு செஞ்சப்பறம், முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செஞ்சப்பறம், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டாச்சு. இனி ஏப்ரல் 23 முதல் பிரச்சாரம்.



இன்னைய தேதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹாட் டாபிக். அவ்வளவு சிறப்பான அறிக்கை அது. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பொதுவாகவே மாநில வளர்ச்சி திட்டங்கள், சமுதாய நலன், அனைத்து துறைகளிலுமுள்ள இடர்பாடுகள் களைதல் மாதிரியான விஷயங்களை முன்வைத்து தான் எப்போதுமே வெளிவரும். அதனால் தான் அதிமுக எந்த தேர்தலிலும் முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிடாமல் திமுகவின் தேர்தல் அறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தனது தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும்.

அதிமுக முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால், அம்மா உணவகத்தில் இந்த ஆண்டு முதல் ருமாலி ரொட்டியும் வழங்கப்படும்னு அறிவிச்சிருப்பாங்க. அந்த லெவல்ல தான் அவங்களால யோசிக்கமுடியும்.

தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வேணும்ன்றத அதிமுகவால சுயமா யோசிச்சு முடிவெடுத்து அறிவிக்க முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய ஆட்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் காலத்தோடவே போயாச்சு. அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படி ஒரு திறமை இருந்தாலும் கூட அதை வெளிப்படுத்த பயந்துகிட்டு கார் டயரையும் ஹெலிகாப்டர் பாட்டத்தையும் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. சர்வைவல்னு வந்துட்டா நம்ம தெறமைகளை பெரிசா காட்டிக்கக்கூடாதுன்னு எல்லா அதிமுக தொண்டனுக்கும் தெரிஞ்சிருக்கு.

இதுவரைக்கும் ஜெ. அறிவித்த செயல்படுத்திய திட்டங்கள் பெரும்பாலானவை, மற்ற கட்சிகள் சொல்லியது, கோரிக்கையா வெச்சது, மற்ற கட்சிகளின் செயல்திட்டங்கள் / தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுன்னு தான் இருக்கே தவிர, தானே சுயமா யோசிச்சு முடிவு செஞ்சு அறிவிச்ச திட்டம்னு அதிகமா கிடையாது.

ஆனா அதேசமயம் மற்ற கட்சிகளை ஒப்பிட்டா திமுகவின் செயல்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் மீதான நிஜமான அக்கறைகளால் செயல்படுத்தப்பட்டதுன்னு புரியும்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் கலைஞருக்கு விபத்தில் கண்ணில் அடிபட்டபோது அதன் வலியும் பார்வையற்ற நிலையின் அவஸ்தையும் தானே உணர்ந்து அதன் அடிப்படையில் அறிவிச்சது. கைரிக்ஷா ஒழிப்பு, எழும்பூர் வந்திறங்கியபோது தன்னை வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதன் கஷ்டம் உணர்ந்து அறிவிச்சது. ஏரி குளங்கள் தூர்வாரல் வெள்ளபெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. மேம்பாலங்கள் சாலை மேம்பாட்டு திட்டங்கள் வெளிநாட்டு பயணம் சென்று கண்டு வந்ததும் நம்ம ஊர்லயும் அது மாதிரி எல்லாம் வேணும்னு தீர்மானிச்சு அறிவிச்சு செயல்படுத்தினது. இலவச திருமண உதவி திட்டம், கல்யாண செலவுக்கு காசு இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் செய்தி படிச்சு அதன் கவலையில் அறிவிச்சது. இப்படி அது ஒரு நீ......ளமான லிஸ்டு. இதெல்லாம் யாரும் திட்டமிட்டு கொடுக்காமல், கோரிக்கை வைக்காமல், போராடாமல் தாமாகவே உணர்ந்து செயல்படுத்திய திட்டங்கள்.

சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான். 

அதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கிட்டத்தட்ட ஆக்ஷன் பிளான் தான். ஒன்றிரண்டு செயல்படுத்தப்படாமல் போகலாம். ஆனால் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமுள்ளவையா என ஆராய்ந்து விவாதித்து அதன் பிறகு தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் வந்தால் அது நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும் என்கிற ஒரு நம்பிக்கை தமிழக மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அதனால் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இவ்வளவு மரியாதை.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை மிக பிரமாதம் என திமுகவை விமர்சிக்கும் பத்திரிக்கைகள் கூட பாராட்டுகின்றன. மக்களை பொறுத்தவரை மிக சிறந்த தேர்தல் அறிக்கை என பெரும்பாலானவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள் என்பது அறிக்கையை வாசித்த அனைவருக்கும் சொல்லாமலே புரியும். அந்த அளவுக்கு நலத்திட்டங்களும் வளர்ச்சி பணிகளும் நிறைந்து கிடக்கிறது.

சமீபத்தில் திமுக பொருளாளர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவது நடத்திய நமக்கு நாமே பயண திட்டத்தில் சந்தித்த மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவற்றில் சாத்தியமானவற்றை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்த தேர்தல் அறிக்கையிலே இணைத்திருக்கிறார்கள். மேலும் முதல் முறையாக மாவட்ட வாரியான செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  75 பக்கங்கள் உடைய இந்த தேர்தல் அறிக்கையை எல்லோரும் படித்திருப்பீர்கள். அதனால் விரிவாக செல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ன்னா...

1.   விவசாயக்கடன் கல்விக்கடன் ஆகியவை ரத்து
2.   விசைத்தறிகளுக்கு முதல் 750 யூனிட் மின்சாரம் இலவசம்
3.   மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இலவசப்பயணம்
4.   விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
5.   சென்னையை போலவே, கோவை மதுரை திருச்சிக்கும் மெட்ரோ ரயில்.
6.   காலியான அரசு பணிகள் உடனடியாக நிரப்புதல்
7.   சென்னை-ஹோசூர்; மதுரை-தூத்துக்குடி சாலைகளில் இண்டஸ்ட்ரியல் காரிடார்
8.   நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்
9.   நீர் மேலாண்மை மேம்பாடு, 200 புதிய தடுப்பணைகள்
10. தோட்டக்கலைக்கு தனி பல்கலைக்கழகம்
11. மின்சாரக்கட்டணம் மாதாமாதம் கட்ட அனுமதி

இதை பத்தி தனித்தனியா ஏன் பிடிக்குதுன்னு விவரிக்கறதா இருந்தா ஒவ்வொரு திட்டத்தின் பின்னணி, அதன் இப்போதைய நிலை, இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் அதில் கிடைக்கக்கூடிய பலன்கள்னு அது ஒரு பெரிய கட்டுரையா மாறிடும்.

அதே சமயத்தில் இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்களே இல்லைன்னு சிலர் புளகாங்கிதப்பட்டு சொல்லி இருக்காங்க. அது தவறு. இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புக்கள் இல்லையே தவிர மானியங்கள், சலுகைகள், இலவசங்கள், கடன் ரத்துக்கள், உதவி தொகைகள்னு எக்கச்சக்க சலுகைகள் இருக்கு. என்ன எல்லா சலுகைகளும் வளர்ச்சி நோக்கிய சலுகைகள் என்பது தான் மிக பெரிய ஆறுதல்.

செலவுகள் குறித்து நிறைய பேசி இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் வருவாய்க்கான திட்டங்கள் எதுவும் சொல்லப்படலை என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக அரசின் கடன் இப்படியான சலுகைகளால் மேலும் கூடும் என்கிற அச்சம் வந்து போகிறது. ஆனால் நிதி நிர்வாகத்தில் இதுவரையும் அமைந்த தமிழக அரசுகளில் திமுக அரசு மட்டுமே சிறப்பா செயல்பட்டது என்பதால், நிச்சயமாக நிதி மேலாண்மையை அதே சிறப்போடு செயல்படுத்துவார்கள் என நம்பலாம்.

கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு ஆகிய அட்ராக்டிவ் அறிவிப்புக்களும் இருக்கு. எனக்கு இது போன்ற அறிவிப்புக்களில் உடன்பாடு கிடையாது என்றாலும் தமிழக அரசியல் களத்தில் வெறும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்து விட முடியாது. கொஞ்சம் கவர்ச்சி அறிவிப்புக்கள் தேவையாக தான் இருக்கு. என்ன செய்ய?

அதேசமயம் 2011 ஆம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 14% திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மற்றவைகளின் கதி என்ன என இதுவரை தகவலில்லை.

உதாரணமா, 10 ஆடை அலங்கார பூங்காக்கள் அமைப்பது, அனைத்து காவல்நிலையங்களையும் மின் ஆளுமையில் இணைப்பது, திருப்பூர் சாயக்கழிவுக்கு விஞ்ஞான முறையிலான சுத்திகரிப்பு நிலையம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க் என பல பல அறிவிப்புக்கள் இன்னமும் முதல் கட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கிறது.

மேலும் நூற்றுக்கணக்கான அறிவிப்புக்களை விதி 110 இன் கீழ் அறிவித்த ஜெ. அதில் 20% கூட செயல்படுத்தவில்லை என்பதையும் கவனித்தால், திமுக தேர்தல் அறிக்கைக்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எளிதில் புரியும்.


திமுக தேர்தல் அறிக்கை வந்தபிறகு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் விருத்தாசலம் பிரச்சாரத்தில் பேசிய ஜெ. நான் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவேன். அவற்றை செயல்படுத்துவேன். சொல்லாததையும் செய்வேன் என ஒரு பொதுப்படையான அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, இன்னின்ன திட்டங்கள், இன்னின்ன வழிமுறைகளில் செய்ய போகிறேன் என தீர்க்கமான ஒரு கருத்தாக்கம் அவரிடம் இன்று வரை இல்லை என்பதை கவனிக்கலாம்.

சென்னை பிரச்சாரத்தில் பேசிய ஜெ. தனது சாதனை என சொன்னது, மெட்ரோ ரயில் துவக்கியது, மின் விநியோகம் சீராக்கியது, வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றை தான் முக்கியமான சாதனை என சொல்லி இருக்கிறார்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம், மோனோ ரயில் தான் வேண்டும் என அடம் பிடிச்சு, திமுக தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் முடக்கிவைத்து, கடைசியில் ஹைகோர்ட் போய் நீதிபதிகள் கண்டிச்சு உத்தரவு போட்டப்பரம் தான் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்துச்சுன்றது சென்னையில் உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா அதை தன்னுடைய சாதனையா சொல்லி இருக்கும் ஜெ. நம்மை எந்தளவுக்கு முட்டாள் என முடிவு செய்திருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம்.

மின் விநியோகம் பற்றி கேட்கவே வேண்டாம். மின் விநியோகம் சீரானது, மின் மிகை எல்லாம் சொன்னாலும் நிஜ கதை என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

வெள்ள நிவாரண பணிகள் பற்றி நான் சொல்வதை விட இணையத்தில் உள்ள பலரும் கட்டுரை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். பலரும் நிவாரண பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். அதிமுகவும் தமிழக அரசும் எப்படி எல்லாம் நிவாரண பணிகளை முடக்கி வைத்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடம் நான் விவரிப்பது சரியல்ல. அவர்களே எல்லோரிடத்திலும் ஜெ. சொன்ன பொய்யின் பிரம்மாண்டத்தை புரியவைத்து விடுவார்கள் என நம்பலாம்.

ஆகமொத்தம், ஜெ. தன்னுடைய ஆட்சியின் சாதனைன்னு சொல்லிய எதுவுமே உண்மையில் சாதனையே அல்ல.

அப்படியாக, தமிழக தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பிரமாண்டமான உத்வேகம், கள நிலைமையை மொத்தமாக புரட்டிப்போட்டு, இது வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் காற்றை திமுகவுக்கு சாதகமாக திருப்பி விட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வெளிவரக்கூடிய அதிமுக தேர்தல் அறிக்கை இனி எதை முன்வைத்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது என்பது உறுதி. ஏனெனில் நடைபெற்ற இரண்டு பிரச்சார கூட்டங்களிலும் எந்த திட்டத்தையும் சொல்லாத ஜெ. தேர்தல் அறிக்கையில் அறிவிப்புக்களை அழகாக அச்சடித்து கொடுத்தால் அது திமுக அறிக்கையின் நகல் / பாதிப்பு என தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர சொந்த முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட பலவும் செயல்பாட்டுக்கு வரலைன்ற உண்மையும் மக்களுக்கு தெரியும்.

2006 தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் நிஜமான ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கை தான்.


Printfriendly