Sunday, May 10, 2020

கொரோனா தரும் மாற்றங்கள் - தொழில்துறை

கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கத் தொடங்கி சுமார் 100 நாட்களுக்கு மேல் ஆகிருச்சு. இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியல. தடுப்பு மருந்தும் இல்லை. சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை

இந்த சூழலில் கிட்டத்தட்ட 50 நாளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியது இந்தியா.. தொழிலில்லை, வர்த்தகம் இல்லை, போக்குவரத்து இல்லை

இனியும் இப்படியே தொடர முடியாத சூழலில், நடப்பது நடக்கட்டும் என மெல்ல மெல்ல எல்லாவற்றையும் அனுமதிக்க தொடங்கி விட்டன அரசுகள்

இனி வரும் காலம் நமக்கு எப்படி இருக்கும்?

அதிக பயணங்கள் இருக்காது, முக கவசம் காஸ்டியூமில் ஒன்றாக மாறும், சேமிக்க தொடஙகுவோம், நெருங்கிய உறவினர்கள் கூட வீட்டுக்கு வந்தால் தயஙகுவோம் இப்படி பல பல யூகங்கள் பறந்து கொண்டே இருக்கின்றன

நாம் தொழில் துறையை பார்ப்போம்.

என்ன ஆகும் தொழில்துறை?

அலுவலகங்கள்

அலுவலகங்கள் எனும் அமைப்பு மெல்ல மெல்ல குறைந்து விர்ச்சுவல் ஆபீஸ் (Virtual Office) முறை அதிகமாகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி உள்ளவர்களே. 

இந்த கரோனா காரணமாக Work From Home (WFH) மூலம் இரண்டு மாதங்கள் சிக்கலின்றி இயங்கி காட்டியதால், நிறுவனங்கள் இப்போது நிறைய சிந்திக்க தொடங்கி உள்ளன.

TCS போன்ற நிறுவனங்கள் 75% பேரை WFH முறைக்கு மாற்ற திட்டமிடுவதாக சொல்கிறார்கள்

ஐடி துறை மட்டுமல்லாமல், மார்கெட்டிங், கார்ப்பரேட் ஆபீஸ், செர்வீஸ், பேக் ஆபீஸ் போன்றவையும் இனி ஒரு அலுவலக செட் அப்பில் இருந்து வேலை செய்ய அவசியம் இல்லை என்று உணர்ந்து உள்ளன

WFH எனதற்கு அடுத்த நிலையாக WFN (Work From Native) என்ற புது கான்செப்ட் நோக்கி பயணிக்கிறது கார்ப்பரேட் துறை

இது அவர்களுக்கு நல்லதோர் லாபத்தை தரும்..

எனது நண்பர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அப்பா அம்மா அங்கே ஊரில். இவரும் மனைவியும் குழந்தையும் சென்னையில். அலுவலகத்தில் மார்கெடிங் மேனேஜர். ₹60 ஆயிரம் சம்பளம். வீட்டு வாடகை, போக்குவரத்து, பெட்ரோல் என ₹20 ஆயிரம் போக அவருக்கு என்று ₹40 ஆயிரம் தான் நெட்டாக செலவுக்கு.

கொரோனா காரணமாக ஊருக்கு போய் அங்கிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அத்தனையும் அங்கிருந்தே செய்கிறார். 

குடும்பத்துடன் சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். ₹15 ஆயிரம் சம்பளம் குறைத்தால் கூட கவலை இல்லை எனும் அளவுக்கு இந்த WFN அவருக்கு ஒரு பக்குவத்தை கொடுத்து உள்ளது.

சென்னை வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, பரபரப்பு, தெரியாத நகரில் தனிமையில் பகலை நக்ர்த்தும் மனைவி எனும் மனச் சங்கடம் என எந்த டென்சனும் இல்லாமல், ரிலாக்ஸாக இருக்கிறார்.

BSNL மூலம் ஊரில் பிராட்பேண்ட் கனெக்‌ஷனுக்கு ₹600 செலவு. அவ்வளவு தான். Zoom, Microsoft Teams என தினசரி சந்திப்புக்கள், வேலை, ரிப்போர்டிங் என எல்லாமும் நடந்து வருகிறது

கம்பெனியை பொறுத்தவரை, சென்னை நகரில் அதிக வாடகையில் ஒரு பெரிய அலுவலகம் இனி தேவை இல்லை. எல்லோரையும் அவரவர் ஊரில் இருந்தே வேலை செய்ய சொல்லலாம். பயணங்கள் கூட அங்கிருந்தே சென்று வரட்டும். ஆன்லைனில் ரீ இம்பர்ஸ் ஆகிடும். சந்திக்க வேண்டும் எனில் இரு மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஓட்டல் ஹால் எடுத்து மீட்டிங் போட்டால் போதும். Overhead Expenses மொத்தமாக குறையும்.

இதை எல்லா நிறுவனங்களும் யோசிக்க தொடங்கி இருக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் சென்னை போன்ற பெரு நகரின் ரியல் எஸ்டேட் வீழும், வாடகைக் கட்டிடங்கள் குறையும், நகர நெரிசல் குறையும்

இன்னொரு புறம் கிராம பொருளாதாரம் உயரும். உயர் வருவாய் மக்கள் கிராமங்களில் வாழ்கையில் அவர்களுக்கான பெரு வசதிகள் அங்கே ஏற்படும். நகர கிராம சம நிலை தொடங்கும்.


உற்பத்தி துறை

தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை அதிகம். இதில் பிற மாநிலத்தில் இருந்து பல தொழிலாளர்கள் வந்து தங்கி பணி செய்து வருகின்றனர். அவற்றில் பலர் இப்போது அவர்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார்கள். 

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எப்போது தொடங்கும் என தெரியல. அப்படியே வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டி இருக்கும். 

இச்சூழலில், உற்பத்தி துறை எதிர்பார்த்த அளவுக்கு எட்ட செப்டம்பர் மாதம் கூட ஆகலாம்

ஆனால் உற்பத்தி துறைக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்து தான் ஆக வேண்டும். அதே நேரம் சப்போர்ட் சர்வீஸ் எனப்படும் துணை நிர்வாக அமைப்பில் உள்ளவர்கள் தொழிற்சாலைக்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியும். 

ஏற்கனவே சொன்னது போல அலுவலகம் எனும் அமைப்பு இல்லாது Virtual Office முறை வழக்கத்துக்கு வரும் போது, உற்பத்தி துறையிலும் இந்த முறை சாத்தியமாகும்.

நேரடி பணியாளர்கள் தவிர பிறர் வீடுகளிலேயே இருக்கையில் தொழில்துறை தனது Over Head Expenses குறைத்து லாபத்தை அதிகரிக்கும்

வியாபாரம்

இப்போது கொரொனா காரணமாக குறைந்த நேரம் மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் இது கவலையாக தெரிந்தாலும், மக்கள் சட்டென அதற்கு தங்களை ஆற்றுப்படுத்தி கொண்டு விட்டார்கள்

மதியம் 1 மணி வரை தான் கடைகள் இருக்கும் எனில் அந்த சமயத்துக்கு சென்று வாங்க பிளான் செய்து பழகி கொண்டார்கள்

காலை 5 மணிக்கு கடை தொடங்கி இரவு 11 மணி வரை கடையிலேயே இருந்து குடும்பத்தினருடனான பொழுதுகளை இழந்த வியாபாரிகள் இப்போது 1 மணி வரை வியாபாரமும் அதன் பின் குடும்பத்தினருடனான பொழுதுகளும் என வாழ பழகி கொண்டார்கள்.

இவை இப்படியே தொடர்ந்தாலும் நல்லதே எனும் அளவுக்கு சிக்கல் இன்றி போகிறது வாழ்க்கை. வியாபாரம் குறையாது. காரணம் தேவை உள்ளவர்கள் வாங்கி கொண்டே தான் இருக்க போகிறார்கள். நேர கட்டுப்பாடு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தால் போதும். 

சரக்கு போக்குவரத்து

இது தான் சிக்கலான துறை. நோயின் தாக்கம் முற்றிலும் நீங்கும் வரையில் சரக்கு போக்குவரத்து மூலம் வரும் பொருட்கள், ஆட்கள், டிரைவர், லோடுமேன் போன்றவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களை செக் செய்து Screening செய்து சரக்குகளை disinfection செய்வது என எல்லாமும் சந்தேகம் கொண்டவையே
ஏதேனும் ஒரு ஊரில் யாரோ ஒருவருக்கு infection இருந்தாலும் அவர் மூலமாக மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும் நோய் தொற்று ஆகையால், சரக்கு வாகனம் வரும் ஊர்கள், டிரைவர்கள் வழியில் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள் என எல்லாவற்றையும் எப்படி கண்காணிப்பது என்பது ஒரு பெரிய சவால் தான்.

மேலும் நோய் தொற்று அறிகுறி தெரியவே ஒரு வாரம் ஆகும் எனும் நிலையில் ஒவ்வொரு நாளும் எத்தனை வண்டி வந்தது அதில் எந்த வண்டியில் யார் மூலமாக தொற்று வந்தது என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம்.

சரக்கு போக்குவரத்தை நிறுத்தினால் மொத்த பொருளாதாரமும் வீழ்ந்து விடும். தொழிற்சாலை இயக்கமும் நடக்காது.

மிக மிக delicate position என்பது இந்த ஒரு துறை தான்

பார்ப்போம்.. அரசு என்னென்ன நடவடிக்கைகள் அறிவிக்கிறது என.. அதை வைத்து அடுத்து என்ன ஆகும் என விவாதிப்போம்

Monday, May 4, 2020

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வு சரியா?

மார்ச் 25 தொடங்கிய லாக்டவுன், இப்போது 40 ஆம் நாளை தொட்டு நீண்டு கொண்டு இருக்கிறது. மே 17 வரை இப்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் மே 4 முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் சரி என்றும் தவறு என்றும் வெவ்வேறு விவாதங்கள் இணையத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.

தளர்வு சரியா? சுருக்கமாக அலசலாம்

மத்திய அரசின் உள் துறை, என்னென்ன தளர்வுகளை மாநிலங்கள் கொடுக்கலாம் என விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டை தளர்த்த அதிகாரம் இல்லை. வேண்டுமானால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து கொள்ளலாம்
இதன் அடிப்படையில் தமிழக அரசு விவாதித்து, வல்லுனர்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்துக்கான தளர்வுகளை அறிவித்து உள்ளனர்.

சுருக்கமாக சொல்வதானால் மத்திய அரசின் தளர்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தமிழகம் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது

உதாரணமாக சொல்வதானால்

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக மத்திய அரசு பிரித்து தளர்வுகள் அறிவித்தது. தமிழக அரசோ, சென்னை & சென்னை தவிர்த்த இதர பகுதிகள் என இரண்டாக பிரித்து, இதர பகுதிகளில் கூடுமானவரை சிவப்பு மண்டலத்துக்கு உரிய கட்டுப்பாடுகளையே விதித்து உள்ளது

பச்சை மண்டலத்தில் பஸ் போக்குவரத்தை மத்திய அரசு அனுமதித்தது.. தமிழக அரசு அனுமதிக்கவில்லை

தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்க மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசு 50% பணியாளர் மட்டும் தான் என கட்டுப்பாடு விதித்து உள்ளது. சென்னை பகுதியில் 25% தான் அனுமதி

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகள் மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசோ அதிலும் சிலவற்றை தடை செய்து உள்ளது

லாக்டவுன் இன்னும் முடிவடையவில்லை. மே 17 வரை நீடிக்கிறது. அதற்கிடையில் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கான தளர்வுகள் மட்டுமே கொஞ்சமாக கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதுக்கு ஏன் கொடுக்கல? அதுக்கு ஏன் கொடுக்கணும்? போன்ற கேள்விகள் அபத்தமானவை

இந்த தளர்வுகள் அவசியமா? நோய் தொற்று குறையாத நிலையில் லாக்டவுனை தொடரலாமே என பலரும் கேட்கிறார்கள்

இந்திய பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது. மக்களுக்கு அன்றாட தேவைகள் உள்ளன. உணவு பொருள் மட்டுமே அல்லாமல் வேறு சில பொருட்களின் தேவைகளும் மக்களுக்கு உள்ளன. சேவைகளும் தேவை. எனவே அத்தியாவசிய பொருள் அல்லாதவையும் இப்போது திறக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
சில தொழிற்சாலையில் தொடர்ந்து நீண்ட நாள் இயங்காமல் வைத்து இருப்பது பெரிய அளவில் பின்னர் பிரச்சனை தரக்கூடும். எனவே அதை இயக்க அனுமதி வேண்டும் என தொழில்துறை கோரிக்கை வைத்தனர்.

எனவே அவர்களுக்காக அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் குறைந்த தொழிலாளர்கள் வைத்து அத்தியாவசிய இயக்கங்கள் மட்டும் செய்து தொழிற்சாலைகள் இயங்கத் தேவையான உத்தரவு மட்டுமே. முழு உற்பத்திக்கு எல்லாம் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு தேவையான பணியாளர்களை அழைத்து வருவது எல்லாம் தொழிற்சாலைகள் பொறுப்பு

அதாவது, அரசை பொறுத்தவரை முழுமையான லாக்டவுன் தான். ஆனால் தொழிற்சாலை நலனுக்காக சில இயக்கங்கள் தேவை எனில் உங்கள் பொறுப்பில் தொழிலாளர்கள் அழைத்து வந்து குறைந்த அளவில் இயக்கி கொள்ளுங்கள் என்கிற அளவில் தான் தளர்வு

இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் லாஜிக்கலான தளர்வாகவே தமிழகம் கொடுத்து உள்ளது.

நோய்த்தொற்று நீடிக்கையில் தளர்வு சரியா?

மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சொன்னது என்னவெனில், இந்த நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் 14 நாட்களுக்குள் தெரியத் துவங்கிவிடும். 14 நாள் வரை அறிகுறிகள் இல்லை எனில் பயப்பட ஏதும் இல்லை என்பதே

இதை அடிப்படையாக வைத்தே லாக்டவுன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் மருத்துவர்கள், குறிபிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டும் சோதனை செய்தால் போதும் என்று இன்னொரு முடிவும் எடுத்து இருந்தனர். அதனால் அறிகுறி இல்லாதவர்களுக்கு சோதனை செய்வதை தவிர்த்து வந்தார்கள்.

ஆனால் இப்போது, 25 நாட்களுக்கு பின்னரும் அறிகுறிகள் இன்றி பாசிடிவ் ஆகிக் கொண்டு இருக்கிறது இந்தியாவில். இது தொடர்பான திருத்தப்பட்ட வரையறை எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனைக்கான வழிகாட்டி நெறிமுறையும் மாற்றப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் மட்டும் டெஸ்ட் செய்தால் போதும் என தினந்தோறும் இணையத்தில் வாதாடிக் கொண்டு இருந்த மருத்துவ நண்பர்களும் இப்போது அமைதி காக்கிறார்கள்.

இந்நிலையில், இன்னும் எத்தனை நாள் லாக் டவுன் தேவை என்பது தீர்மானிக்க முடியாததாக ஆகி விட்டது. யாரிடமும் அதறகான பதில் இல்லை. 

எதிர்பார்த்த நாட்கள் கடந்து இனி பயமில்லை என ஆசுவாசப்படுத்திக் கொள்ள எத்தனிக்கையில் அதிகமாக நோய் தொற்று கண்டறியப்பட்டு தீவிர லாக்டவுனுக்கான தேவையை கொண்டு வந்து இருக்கிறது

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியோ, இந்தியா கால காலமாக கடைபிடிக்கும் தடுப்பூசி கொள்கையோ, தட்ப வெப்பமோ.. ஏதோ ஒன்று நோய் தொற்றை நீண்ட நாளுக்கு தடுத்தே வந்து உள்ளது. நீண்ட காலம் கடந்த நோய் தொற்று அறிகுறிகள் கூட குறைவான நபர்களுக்கே வந்து உள்ளது.

இது குறித்த விரிவான ஆய்வோ, மறு வரையறையோ மருத்துவர்கள் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை

இந்நிலையில், 40 நாட்களை கடந்த லாக்டவுன், பொருளாதார தொய்வு, மக்களிடம் போதுமான பணம்/பொருளின்மை, பிற சேவைகளின் தேவைகள், அரசின் வரி வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வு தருவதா

அல்லது, நோய் தொற்று நீண்ட நாள் அறிகுறிகள் இன்றி இருப்பது, அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மற்றவர்களுக்கு பரவுவது, சரியான வழிகாட்டுதல் மருத்துவர்கள் தரப்பில் இருந்து இல்லாதது, சுகாதார வல்லுனர்களாலும் நோய் தொற்று குறித்து தெளிவாக விளக்க முடியாதது ஆகிய காரணங்களால் லாக்டவுனை கடுமை ஆக்குவதா 

எனும் இரு கேள்விகளுக்கு இடையில் தான் அரசு உள்ளது

எனவே லாக்டவுனை தொடர்ந்து கொண்டே சிற்சில தளர்வு அறிவிப்பது மட்டுமே இப்போது இருக்கும் ஒரே வழி. அதையே அரசு செய்து இருப்பதாக கருதுகிறேன்.


Sunday, April 26, 2020

எளிய மக்களும் லாக் டவுனும்

ந்த ஊரடங்கு இது வரை செய்ததை விட மிக மிக மோசமான செயல்களை இனிமேல் தான் எளிய மக்களுக்கு செய்ய போகிறதோ என்கிற அச்சம் மெல்ல மெல்ல எழ தொடங்குகிறது எனக்கு.

அரசு நிறுவனங்கள், பெரு தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகள் போன்றவை தப்பித்தன
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்சி கடைகள், சாலையோர உணவகங்கள், ஃபோட்டோ ஸ்டுடியோ, மெக்கானிக்குகள், பிளம்பர், எலக்டிரிசியன், துணிக்கடைகள், டெய்லர்கள், பாத்திரக் கடைகள், மொபைல் கடைகள், புத்தகக்கடைகள், சிறு குறு தொழிற்சாலைகள் என பல பல தொழில்களை பற்றி யோசிப்போம்

இவர்கள் பொதுவாக அந்தந்த மாத சம்பளத்தை வைத்தும் போதாக்குறைக்கு கடன் வாங்கியும் தான் மாதா மாதம் வாழ்வை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்

லாக்டவுன் மே 4 ஆம் தேதி முடிவடைந்தாலும் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எப்படியும் ஆகஸ்ட் ஆகி விடும்.

கடந்த ஒன்றரை மாதமாக வருமானம் இல்லை. கையில் இதுவரை சேமித்து வைத்து இருந்த எல்லாம் (அப்படி ஏதேனும் இருந்தால்) காலி ஆகி இருக்கும். அங்கும் இங்குமாக கடன் கூட வாங்கி இருப்பார்கள் பலர். செலவுகள் செய்து கொண்டே தானே இருக்கணும்? அன்றாட தேவைகள் நிற்காதே?

பூஜியத்துக்கு வந்துவிட்ட இவர்கள் இனி வேலைக்கு போக தொடங்கி சம்பாதித்து மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்

அதை செய்ய மன வலிமை இருக்கலாம்.. எத்தனையோ இழப்புக்களை கடந்து மீண்டு வந்தவர்கள் தானே அவர்கள்? ஆனால் இப்போதைய பிரச்சனை கொஞ்சம் அதீதம்

லாக் டவுன் முடிந்த உடனே பள்ளிகள் திறக்கும். அந்த செலவுகள் அதிகம்.

வேலை ஆரம்பத்தில் எல்லாவரும் சம்பளத்தை குறைக்க முயல்வார்கள். காரணம் ரெண்டு மாசமா வியாபாரம் இல்லை. தொழிலாளர்கள் இந்த சம்பள குறைப்புக்கு உடன்படவும் வாய்ப்பு உள்ளது. வருமானமே இல்லை என்பதை விட கொஞ்சம் குறைத்து கொண்ட வருமானம் ஓகே என நினைக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

இன்னொர புறம், விலை வாசி ஏறும். காரணம் அதே ரெண்டு மாசமா வியாபாரம் இல்லாதது தான். எந்த இழப்பும் இல்லாத நெடுஞ்சாலை சுங்கமே ஒரு மாச லாக்டவுனை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தும் பொழுது, இந்த சிறு குறு நிறுவனங்கள் விலை உயர்வு செய்வதை குற்றம் சொல்ல முடியாது

சுருக்கமாக, வேலை இருக்கணும், சம்பளம் குறைவாக கிடைக்கும், வழக்கமான செலவுகள் அதிகரிக்கும், பள்ளிகள் திறக்கும், ரெண்டு மாதம் கொடுக்காத வாடகை, கரண்ட் பில் எல்லாம் சேர்த்து கட்ட வேண்டி வரும்.. இது தவிர அன்றாட செலவுகள்

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு மிக பெரிய அழுத்தத்தை எளிய மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனும் கவலை சூழ்கிறது

அரசு ₹1000 கொடுத்து ரேஷனில் சில பொருட்கள் கொடுத்ததுடன் முடித்து கொண்டது. இது போதுமா என்ன?

எதிர் கொள்ள இருக்கும் செலவுகள், அதன் இயலாமை சிலருக்கு குழந்தைகளின் படிப்பையே பாதிக்குமே? அது எத்தனை பெரிய இழப்பு? பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் போவது எல்லாம் கொடுமை.

மன உளைச்சல், கவலை, கடன், பொருளாதார சமபளமின்மை, விலைவாசி உயர்வு என அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மிகப்பெரியது. அவற்றை அவர்கள் வெற்றிகரமாக வென்று வர வேண்டும்

அரசு ஏதேனும் பொருளாதார உதவி அறிவித்தால் கூட பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1℅ இவர்களுக்காக ஒதுக்கினால் கூட போதும். இவர்கள் பிழைத்து கொள்வார்கள். அரசுக்கும் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

பார்க்கலாம் அரசு உதவுமா என

அதை விட முக்கியம், மே 4 ஆம் தேதியோடு முடியுமா என்பது.. அதற்கு மேலும் நீண்டால் இவர்களின் நிலை மிக மிக மோசமாகிவிட கூடும்

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

Monday, April 20, 2020

கொரோனா Rapid Test Kit விலை பிரச்சனை

தமிழக அரசு கொரோனா தொற்று கண்டறிவதற்கான Rapid Test Kit வாங்கிய விவகாரத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு உள்ளது

சட்டீஸ்கார் அரசு தென் கொரியாவில் இருந்து Rapid Test Kit ஒன்றுக்கு ₹337 எனும் விலையில் வாங்கப்போவதாக அறிவித்ததில் கிளம்பியது பிரச்சனை

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசு வாங்கும் விலை என்ன என்பதை வெளியிடவேண்டும் என கேட்டார்

அதை அடுத்து தமிழக அரசும் சீனாவில் இருந்துநாம் Kit ஒன்றுக்கு ₹600 (வரிகள் தனி) என வாங்குவதாகவும் இந்த விலை ICMR ஆல் நிர்ணயிக்கப்பட்டது எனவும் சொல்லி அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டது.

இத்துடன் முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனை.. வேறு வகையில் மற்றவர்களால் திருப்பப்பட்டது

அதாவது சட்டீஸ்கார் ₹337 க்கு வாங்கும் kit ஐ எதற்காக தமிழகம் ₹600 க்கு வாங்க வேண்டும்? டெல்லி சொல்வதை தான் தமிழகம் கேட்க வேண்டுமா? தமிழக அரசும் டெண்டர் முறையில் வாங்கினால் குறைவாக கிடைக்குமே என்று எல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகள் அனைத்தும் முதல் நோக்கில் நியாயமானவை எனினும் சற்றே இதன் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி தினசரி 100 என்கிற எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்ப்ட்டு வந்தது. பரிசோதனை நிலையங்கள் குறைவு. பரிசோதனை முடிவுகள் தாமதமாக வந்து கொண்டு இருந்தன.

நமக்கு கிட்கள் மிக அவசரமாக தேவைப்பட்டது. ICMR ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் பட்டியலை இறுதி செய்து இருந்ததாலும், மத்திய அரசின் முடிவுப்படி ICMR தான் கொரோனா நோய்த் தடுப்பு பணியின் Nodal Agency என்பதாலும், அவர்கள் ஏற்கனவே சீன நிறுவனமான Wondfo வின் kit வாங்க ஆர்டர் செய்து இருப்பதாலும், தமிழகமும் அதே கருவியை அதே விலைக்கு ஆர்டர் செய்து இருக்கக் கூடும். இதில் தவறு ஒன்றும் இல்லை.

சட்டீஸ்கார் நிலைமை வேறு. 

நேற்று வரை அங்கே 36 பேருக்கு தான் பாதிப்பு (தமிழகத்தில் சுமார் 1500). அவர்கள் நிதானமாக டெண்டர் கோரி தென் கொரிய நிறுவனத்தை இறுதி செய்து உள்ளனர். இனி ஆர்டர் கொடுத்து எப்போது வரும் என்பது தெரியாது. நமக்கு கிட் வந்து சேர்ந்து சோதனைகள் செய்ய தொடங்கியாகி விட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. இரண்டும் வெவ்வேறு நாட்டு பொருள் (சட்டீஸ்கார் வாங்குவது தென் கொரியா பொருள், தமிழகம் வாங்குவது சீன பொருள்). 
மேலும் இரண்டு பொருட்களின் specification உம் வெவ்வேறு. எனவே இரண்டுக்கும் ஒரே விலை எதிர்பார்ப்பது தவறு.

எனவே, சட்டீஸ்கார் ₹337 கொடுத்து வாங்கிய பொருளை தமிழகம் ₹600 கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்வது சரி அல்ல. தமிழகம் வாங்கி இருப்பது சட்டீஸ்கார் வாங்கிய பொருள் அல்ல. இந்த புரிதல் அவசியம்.

அடுத்ததாக ICMR முடிவு செய்த விலைக்கு தான் தமிழகமும் வாங்கி உள்ளது. 

அவசர நிலையில் டெண்டர் வழிமுறைகளில் விலக்கு உள்ளது. அதிக விலை கொடுத்தாவது உடனடியாக kit வாங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் ICMR நிர்ணயித்த விலைக்கே தமிழக அரசும் வாங்கி உள்ளது.  ஒரு ரூபாய் கூட அதிகம் இல்லை.

இன்னொரு குற்றச்சாட்டு என்னவெனில் ஆர்டர் ஏன் சென்னையில் ஒரு சிறு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது என்பது.

மருத்துவ பொருட்கள் இறக்குமதி லைசன்ஸ், அதன் பகிர்மானம், வினியோகம் என்பது குறித்த புரிதல் உள்ளவர்கள் நிச்சயமாக இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். 
ICMR டெல்லியில் Aark Pharmaceutical எனும் நிறுவனம் மூலமாகவும் தமிழக அரசு சென்னையில் Shan Biotech எனும் நிறுவனம் மூலமாகவும் ஆர்டர் கொடுத்து உள்ளது. இரண்டு நிறுவனங்களும் சீனாவின் Wondfo நிறுவனத்தின் அதே Test Kit ஐ தான் வாங்கி கொடுக்கிறது. விலையும் அதே ₹600 (வரிகள் தனி) தான். இதில் என்ன தவறு உள்ளது என்றும் புரியவில்லை.

நல்லவேளையாக தமிழக அரசு விலை விவரத்தை வெளியிட வேண்டும் என கேட்ட திமுக தலைவர், விலை விவரம் மற்றும் ஆவணங்கள் வெளியான பின் அதை வைத்து அரசியல் செய்ய முயலவில்லை. 

இரண்டும் வெவ்வேறு நாட்டு நிறுவனங்கள்.. வெவ்வேறு கருவிகள்.. அதனால் வெவ்வேறு விலை இருப்பது இயல்பு என்கிற புரிதல் திமுக தலைமைக்கு நிச்சயமாக இருக்கும். அதனால் தானோ என்னவோ இன்று வரை இந்த விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் எதையும் கேட்காமல் பொறுப்போடு நடந்து கொண்டு வருகிறது தான்.

ஆனால் திமுகவின் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் ₹337 பொருளை ₹600 கொடுத்து வாங்கி முறைகேடு செய்து இருப்பதாக சமூக வலை தளத்தில் குற்றம் சாட்டுவது.. பொதுவாக திமுகவின் நற்பெயரை களங்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும் என்கிற விஷயத்தை திமுக உணர்வது நல்லது.

வெவ்வேறு பொருளுக்கு ஒரே விலை எதிர்பார்க்கலாமா என்கிற லாஜிக்கான கேள்விகள் கேலியாக எழுமானால், திமுக போன்ற இயக்கத்தின் இமேஜுக்கு அது நல்லது அல்ல என்பதை திமுக தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது நலம்.

இந்த நிமிடம் வரை திமுக தலைவரோ அல்லது முக்கியஸ்தர்களோ இந்த மாதிரி கேள்விகளை முன் வைக்காமல் இருப்பதே அவர்களது புரிதலுணர்வையும் பக்குவத்தையும் நிர்வாக அறிவையும் உணர்த்துகிறது.

தமிழக மக்களின் நலன், அவர்களது ஆரோக்கியம் ஆகியவை முதன்மையாக கருதி எல்லோரும் களத்தில் சுழன்று கொண்டு இருக்கும் நிலையில் இல்லாத ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டு இருப்பது சரியல்ல என்பதை திமுக தலைவர்கள் உணர்வார்கள் என நம்பலாம். 

மாறாக, தமிழகத்துக்கு வரவேண்டிய kit களை சீனா அமேரிக்காவுக்கு திருப்பி விட்டதன் தாமதத்தையும், மத்திய அரசு இடை புகுந்து தமிழக ஆர்டரில் இருந்து பிரித்து பிற மாநிலங்களுக்கு வழங்குவதையும் தமிழக அரசுடன் இணைந்து கேள்வி கேட்பது தான் தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய கடமையாக இருக்கும் என்பதையும் யாரேனும் எடுத்து சொல்வது நலம்.


Wednesday, April 8, 2020

தொழிற்சாலை அனுமதி குழப்பம்

மிழக அரசு 24.03.2020 இல் வெளியிட்ட lockdown அறிவிப்பில் துறை வாரியாக சில விதிவிலக்குகள் கொடுத்து இருந்தது

அதில் தொழிற்சாலை தொடர்பானது இது


இந்த விதி விலக்கு பட்டியலில் வரிசை எண் iii, தொடர்ச்சியான செயல்பாடு உடைய நிறுவனங்கள் என பொதுவாக சொல்லப்பட்டு அவைகளுக்கு அப்போதே Lockdown இல் இருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டு இருந்தது

ஆனால் இவை என்னென்ன தொழில்கள் என்கிற தெளிவான வரையறை இல்லை.

எனவே பல தொழிற்சாலைகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது உற்பத்தி தொடர்ச்சியான இயக்கம் தேவையான நிறுவனம் என சொல்லி தொழிற்சாலை இயக்க அனுமதி கோரினர்

மாவட்ட ஆட்சியர்கள் எந்தெந்த தொழிற்சாலைகளை அனுமதிக்கலாம் என்பதை வரையறை செய்யவே நேற்று இந்த விளக்க Circular வெளியிட்டது 

இது புதிய அனுமதி அல்ல.. ஏற்கனவே கொடுத்து இருக்கும் அனுமதி எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும் என்பதற்கான விளக்கம் மட்டுமே

தமிழக மீடியா இதை புதிய அனுமதி என கருதி செய்தி வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

முதன்மை செயலாளர் தலையிட்டு அந்த விளக்க அறிவிப்பை ரத்து செய்து உள்ளார்

Circular குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கலாம் என்று கட்டுப்பாடு கொடுத்த நிலையில், இதை ரத்து செய்தது மூலம், தொடர்ச்சியான செயல்பாடு உள்ள அனைத்து தொழிற்சாலையும் இயங்க வழி ஏற்பட்டு உள்ளது.

Media பரபரப்பு ஏற்படுத்தியது நேர்ந்த குழப்பம் இது


அரசு இப்போதேனும் தெளிவாக விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டு, எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுக்கலாம், இது வரை இந்த Circular அடிப்படையில் அல்லது மற்ற வகையில் கொடுக்கப்பட்ட அனுமதியை பரிசீலித்து அதன் மீது முடிவு எடுக்கலாம்.

இது தொழில் துறையின் குழப்பத்தை தீர்க்கும்.

Tuesday, February 18, 2020

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

மதிய உணவு என்பது தமிழகத்தை பொறுத்த மட்டில் சமூக நீதிக்கான விதை.

முன்பெல்லாம் பள்ளிக்கு செல்லாத பிள்ளைகள் அதிகம். அவர்கள் வேலைக்கு சென்றார்கள். படிப்பதை விட வேலைக்கு சென்றால் ஒரு நேர உணவுக்காவது சம்பாதிப்பார்கள் என்கிற மனோநிலை தான் பெரும்பாலான ஏழைகளுக்கு இருந்தது.

பட்டாசு தொழிற்சாலை, வயல் வேலை, கதிர் அறுத்தல், செங்கல் சூளை, கடைகள், தொழிற் சாலைகளில் என குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இடமே இல்லை

நீதி கட்சி (திராவிட இயக்கங்களின் முன்னோடி) ஆட்சியில் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்பது முக்கியமான பணியாக எடுத்து கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழஙகும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இது சமூக படிநிலைகளை மெல்ல உடைக்க தொடங்கியது.  பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மெல்ல பள்ளிக்கு வர தொடங்கினார்கள். உணவுக்காக வந்து கல்வியும் கற்றார்கள். அது சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்க தொடங்கியது

சுதந்திரத்துக்கு பின்னர் காமராஜர் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டினார். பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிய உணவு திட்டமும் விரிவானது.

இவை எல்லாம் மிக சொற்ப அளவிலேயே இருந்து வந்தன.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் மிக பெரியது.

கல்வி தான் ஒருவனை எல்லா சமூக தளைகளில் இருந்தும் விடுதலை கொடுத்து முன்னேற வைக்கும் என்பதை உணர்ந்த திராவிட அரசுகள் கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்ல எல்லா வகையான திட்டஙகளையும் செயல் படுத்தியது.

கட்டணம் செலுத்த வசதி இல்லையா? கல்வி இலவசம்

புத்தகம் வாங்க பணம் இல்லையா? புத்தகஙகள் இலவசம்

உடை வாங்க வழி இல்லையா? சீருடை இலவசம்

நடந்து செல்ல காலணி இலவசம்

பள்ளிக்கூடம் தூரமாக இருக்கிறதா? தொடக்க பள்ளி, நடு நிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என பிரித்து எல்லா ஊர்களிலும் ஏதேனும் ஒரு பள்ளி இருக்கும் வகையில் கட்டப்பட்டது.

அப்படியும் தூரமாக இருக்கிறதா? அரசு பேருந்தில் போய் கொள். கட்டணம் இல்லை.

மேல்நிலை பள்ளிகளில படிப்போருக்கு சைக்கிள் இலவசம்.. மடிக்கணினி இலவசம்.

இப்படி எல்லா சலுகைகளும் கொடுக்கப்பட காரணம், எப்படியாவது நம் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலைக்கு முன்னேறி வாழ்க்கையை வெல்ல வேண்டும் என திராவிட அரசுகள் நினைத்ததால் தான்.

அதன் ஒரு பகுதியாக தான் மதிய உணவும். பள்ளிக்கு போனால் ஒரு நேரமாவது வயிறார உணவு உண்பான் என்பதாலேயே பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தொடங்கினார்கள். அது அவனுக்கு கல்வியையும் கொடுத்தது. அப்படி படித்து பெரிய நிலைக்கு சென்றவர்கள் பல லட்சம் பேர்

சொந்த கிராமத்தில் இடுப்பில் துணி கட்டி காலில் செருப்பின்றி கூனி குறுகி நடந்து கொண்டு இருந்தவர்களின் பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்கு சென்று தங்கள் சமூகத்தை நிமிர்த்தி தலை உயர்த்தி வாழ வைத்தார்கள்.

அதற்கு காரணம் கல்வி. அதை ஊக்குவித்தது இலவச திட்டம். அதன் மதிய உணவு திட்டம். ஆகியவை.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த வேளையில் UNICEF அறிக்கை ஒன்று, ஊட்டச்சத்து குறைப்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் ஊரக குழந்தைகள் போதுமான உட்டச்சத்து இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதை விவரித்து எழுதி இருந்தது.

அதை படித்த எம்.ஜி.ஆர், பள்ளியில் செயல் பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவு திட்டம் ஆக மாற்றினார்.

ஊட்டச்சத்து மிக்க பருப்பு காய்கறிகள் என உணவு முறையை மாற்றி மாணவர்களின் பசியையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் கவனித்து கொண்டார்

இப்படி சமூக நோக்கில் செயல்படுத்த படும் மதிய உணவுத் திட்டத்தை தான் இப்போது இன்னமும் விரிவு படுத்தி காலை உணவையும் கொடுக்க திட்டம் இட்டு உள்ளது தமிழக அரசு.

இது ஒரு வரவேற்க வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலை உணவு உண்ணாத மாணவர்கள் பாடத்தில் கவனம் கொள்வது இல்லை என பல சமூக ஆய்வாளர்கள் சொல்லிய விஷயத்தை வைத்து இதை பார்க்க வேண்டும்.

ஆனால் இதை அரசே செய்யாமல் தனியாரிடம் கொடுப்பது தான் இப்போது விமர்சனம் ஆகி உள்ளது.

இஸ்கான் அமைப்பின் அக்ஷய பாத்திரம் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த அமைப்புக்கு சுமார் ₹200 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தையும் கொடுத்து, மின்சாரம் குடிநீர் ஆகியவையும் இலவசமாக கொடுத்து இந்த திட்டத்தை செயல் படுத்த போகிறது தமிழக அரசு.

அப்படியான திட்டத்தில் அவர்கள் இட்லி, உப்புமா ஆகியவை கொடுப்பார்களாம். அதுவும் வெங்காயம் பூண்டு ஆகியவை சேர்க்காமல்.

அரசின் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது அரசின் நெறிமுறைகள் படி தான் எல்லோரும் செயல் படுத்துவது வழக்கம். ஆனால் இந்த திட்டத்தை பொருத்த வரை, தனியாரின் விருப்பப்படி செயல்பட அரசு அனுமதி கொடுத்து உள்ளது.

அதாவது தனியாரின் கொள்கைகள் அடிப்படையில் தான் அவர்களது சமையல் இருக்கும். அதை தான் மாணவர்கள் சாப்பிட்டு ஆகவேண்டும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட எந்த அரசும் இப்படியான விதிகளை ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

நாளை வேறொரு தனியார் அவர்களது கொள்கை படி தான் சமைப்பார்கள் என்றால் அதையும் அரசு ஒப்பு கொள்ளுமா?

இப்படியான நிலையில் மாணவர்கள் மனதுக்கு பிடிக்காத உணவை உண்ண முடியாமல், அந்த மன நெருக்கடி சுமந்த படி கல்வியிலும கவனம் இல்லாமல் படிப்பை சரியாக படிக்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

இத்தனை ஆண்டு காலமாக தமிழக அரசு எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் ஒரே திட்டம் மூலம் செயலிழக்க செய்ய இந்த காலை உணவு திட்டம் போதும்

இதை இப்படியே விடாமல் தமிழக அரசு மறு பரிசீலனை செய்து அரசே திட்டத்தை செயல்படுத்துவது நல்லது.

ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு கூடங்களும் சத்துணவு அமைப்பாளர் களும் உள்ளனர். எல்லா வச திகளும் உள்ளதால் அரசே இந்த திட்டத்தை நேரடியாக நடததுவதே நல்லது.

மாணவர்களின் எதிர்காலம் கருதி இதை அரசு செய்ய வேண்டும்

Sunday, September 1, 2019

பாலகுமாரனும் பெரியாரும்

எழுத்தாளர  பாலகுமாரன் முன்பு தனது முகநூல் பதிவில் சொல்லி இருந்த ஒரு விஷயம் இப்போது மீண்டும் சமூக வலை தளங்களில் உலாவருகிறது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பக்தி அதிகரித்து இருப்பதாகவும், எல்லா கோவில்களிலும் கூட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதற்கு பெரியார் கட்சி தான் காரணம் என்றும் எழுதி இருந்தார்.



இதனை இப்போது வெளியிட்ட நண்பர்கள், அவர் சொல்ல வந்தது பெரியார் கட்சி இருந்தும் பக்தர்கள அதிகரித்து இருப்பது பெரியாரின் தோல்வி என்கிற வாதததை முன் வைக்கிறார்கள்.


பாலகுமாரன் சொல்லி இருக்கும்
இந்த விஷயம் உண்மை தான்.

முன்பு குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பெரியார் நடத்திய போராட்டங்கள், திராவிட இயக்கங்கள் ஆட்சி ஆகியவை அனைவரையும் கோவிலுக்கு செல்ல வழிவகை செய்தது.

அதனால், கூட்டமும் வருமானமும் அதிகரித்தது.

மேலும் இந்த பதிவில் பாலகுமாரன் வேளாங்கண்ணி, நாகூர் எல்லாம் போய் வந்ததாக சொல்லி உள்ளார்.

இந்த மத நல்லிணக்கம் பெரியார் கொண்டு வந்தது. திராவிட கட்சிகள் தந்தது.

அதற்கு முன்பு பாலகுமாரன் போன்றோர் இப்படி சர்ச் தர்கா எல்லாம் போய்விட்டு வருவது எளிதல்ல.. பல எதிர்ப்புகள் இருந்தன.


பேருந்துகள் தேசிய உடமை ஆக்கப்பட்டு கடைக்கோடி கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுத்தது திமுக அரசு.

அதுவரை கிராமங்களில் அதிகம் பயணிகாத மக்களும் மெல்ல வெளி வந்து தொழில் கல்வி என வளர தொடங்கினார்கள்

அதுவரை பார்க்க நினைத்த ஆலயங்களுக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள்..


பல புகழ்பெற்ற ஆலயங்கள் ஒரு கால பூஜைக்கு கூட வழியின்றி இருந்த நிலையில், ஒரு கால பூஜை அனைத்து ஆலயங்களிலும் நடைபெற திமுக அரசு நிதி உதவி அளித்தது.

குடமுழுக்கு நடைபெறாது இருந்த ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது குடமுழுக்கு செய்யப்பட்டது

அனைவரும் வழிபாடு செய்ய வழி செய்யப்பட்டது

இவைகள் எல்லாம், மக்களுக்கு வெவ்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபட ஊக்கம் தந்தது.

திருவில்லிபுத்தூர் கோபுரத்தை அரசு முத்திரையாக அறிவித்த அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்த கோபுரத்தை பார்ப்பதற்கென்றே அந்த கோவிலுக்கு சென்றவர்கள் பலர்.

இதுபோன்ற மறைமுக ஊக்குவித்தல் திராவிடம் கொடுத்த வளர்ச்சி

ஆலயங்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்து கால பூஜைகள் தவறாமல் நடைபெற வழி செய்தது

ஒடாதிருந்த தேர் திருவிழாக்களை மீண்டும் முன்னெடுத்து ஓட்டி காட்டியது என மக்கள் வழிபாட்டுக்கு உரிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது திராவிடம்

இவை தான் இன்றைய கூட்டத்துக்கு வருவாய்க்கு காரணம்.

எனவே, பாலகுமாரன் அவரத பதிவில் சொல்ல வந்தது, இப்போதைய மக்கள் இத்தனை அதிகமாக ஆலையம் சென்று வழிபட வேண்டிய உரிமைகளையும் அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தது பெரியார் கட்சி (திராவிட இயக்கம்) என்பதை தான் என விளங்கி கொள்ள முடிகிறது.



Printfriendly