Friday, May 21, 2021

பேரறிவாளன் விடுப்பு

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களின தாயார் அற்புதம்மாள் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

"நோய் தொற்று பாதிப்பு அபாயம் உள்ள காரணத்தால் எனது மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு அளிக்க வேண்டும்" என்பதே அந்த கோரிக்கை.

இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில், வழக்கமான விதிகளை எல்லாம் "தளர்த்தி" திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழஙக உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.

******

கைதிகளில் இரண்டு வகை உண்டு. தண்டனை கைதிகள். விசாரணை கைதிகள்.

குற்றம் நிரூபணம் ஆகாத நிலையிலும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் பலர்.

நோய் தொற்று அபாயம் தான் விடுப்புக்கான காரணம் என்றால், அதன் அடிப்படையில் விடுப்பு வழஙகுவதற்கான முன்னுரிமை விசாரணை கைதிகளுக்கு கொடுத்து இருக்கலாம்.

தண்டனை கைதிகளுக்கு, அதிலும் தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கூட விடுப்பு கொடுக்க விதிகளை தளர்த்த முடியும் என்கிற செய்தி ஆச்சர்யமாக உள்ளது.

இதே போன்ற கோரிக்கையுடன் பிற தண்டனை கைதிகள் அல்லது விசாரணை கைதிகளின் உறவினர்கள் தமிழக அரசை அணுகினால், இதே போன்று விடுப்பு கொடுக்கப்படுமா என தெரியவில்லை. 

நோய் தொற்று அபாயம் பிற கைதிகளுக்கும் உள்ளதால் அவர்களையும் விடுப்பில் அனுப்ப அரசு முன் வருமா என்ன?

எனவே இப்போதைய இந்த விடுப்பில், தனிப்பட்ட ஒருவருக்காக விதிகளை தளர்த்துவதில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு "சிறப்பு தன்மை" தானாகவே வந்து உட்கார்ந்து விடுகிறது.

அரசு அதிகாரம் என்பது தனக்கு வேண்டப்பட்டவர்கள் பலன் அடைவதற்காக விதிகளை தளர்த்துவதற்காக பயன்படுத்தப் படுவதல்லை. விதி தளர்வு என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக இருப்பது சரியல்ல.

அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தால் தான் பெருமை என கருதுகிறேன்

எல்லோரும் தண்டனை அனுபவிக்கும் சிறை கூடத்தில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று அபாயத்தை காரணம் காட்டி விடுப்பு அளிப்பது விசித்திரமாக இருக்கிறது.

பேரறிவாளன் அவர்கள் விடுப்பில் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதே விதி மற்ற கைதிகளுக்கு பொருந்தாது என சொல்லப்படுவது சட்டத்தை இஷ்டத்துக்கு வளைப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை தவிர்க்க முடிவதில்லை.

எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடு எடுப்பதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. 

தமிழக சிறை துறை வரலாற்றில் மற்றும் ஒரு தவறான முன் உதாரணத்தை இப்போது எழுதி வைத்திருக்கிறது இந்த அரசு என்றே கருதுகிறேன்.






No comments:

Post a Comment

Printfriendly