Showing posts with label Export. Show all posts
Showing posts with label Export. Show all posts

Saturday, October 7, 2017

ஜி.எஸ்.டி – குழப்பத்திலிருந்து சிக்கலுக்கு!

நேற்றைய தினம் நடந்த 22ஆம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சிறு / குறு தொழில் செய்வோரும் ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரும் படும் இன்னல்களை என்னைப்போன்றோர் நாயாய் பேயாய் கத்திய பின், இப்போது தான் அது அரசின் செவிகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் அவர்களுக்கெல்லாம் ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சந்தோஷம் வந்தாலும், அதெல்லாம் அந்த முடிவுகளை அலசி ஆராய்கையில் வடிந்துபோனது.

உண்மையில் சிறு குறு வணிகர்களுக்கும் ஏற்றுமதி செய்வோருக்கும் நல்லது செய்வதாக சொல்லி, கிட்டத்தட்ட பெரிய இடியை தான் இறக்கி இருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில்.

அத்தகைய இடிகளில் இருந்து சில குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் இனி மாதம் தோறும் வரி செலுத்த தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தினால் போதும்:

இந்த அறிவிப்பு அவர்களுக்கான சலுகையாக பலராலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நானும் கூட முதலில் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள சிக்கல்களை பார்த்தபோது அவர்களை பற்றி பரிதாபப்படவே முடிந்தது.

தற்போது ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவோர் ரிவர்ஸ் சார்ஜ் (RCM) முறையில் வரியை அவர்கள் சார்பாக அடைக்கவேண்டும் என்கிற ஒரு நிபந்தனை இருப்பதால் பலரும் பதிவு செய்யப்படாத வணிகர்களை புறக்கணிக்க தொடங்கி அவர்களது தொழில் தேய்பிறையாகி வருவது நீங்கள் அறிந்ததே.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4 கோடி பேர் இருக்கலாம். இது குறைவாக இருக்கிறதே என அரசு சங்கடப்பட்டதோ என்னவோ, நேற்றைய தினம் புதிதாக மற்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அது தான் ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோருக்கு காலாண்டு வரி தாக்கல் முறை. இதில் என்ன பிரச்சனை?

ஜி.எஸ்.டியில் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை நாம் செலுத்தவேண்டிய வரிக்கு கழித்துக்கொள்ளலாம் (Set off). இது முன்பு போல மெனுவல் எண்டிரி ஆக அல்லாமல், ஆட்டோமாடிக் எண்டிரி ஆக ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது நமக்கு பொருட்களை விற்பவர் அந்த விவரங்களை (Outward Supplies) GSTR-1 ரிட்டர்னில் தாக்கல் செய்தால் தான் அது நமது GSTR-2 (Inward Supplies) ரிட்டர்னில் ஆடோமாடிக்காக வரும். அந்த வரியை நாம் எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.

நேற்று அரசு அறிவித்த புதிய விதியின் கீழ், நாம் பொருட்களை வாங்கிய வர்த்தகர் பதிவு பெற்றவராக இருந்தாலும், அவர் இப்போது போல மாதாமாதம் வரி தாக்கல் செய்ய தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

இதில் சிக்கல் என்னவென்றால், நாம் அப்படி பட்ட வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி இருந்தால், அவர்கள் வரி தாக்கல் செய்யும் வரை நமக்கு ITC கிடைக்காது. இது போன்ற வணிகர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, அதன் வரி வருவாய் கூடுதலாக இருந்தால், அதை நாம் உபயோகப்படுத்த 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை நமது வரியை நாம் பணம் கட்டி தான் செலுத்த வேண்டி இருக்கும்.

இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது உங்களால் ஊகிக்கக்கூடியதே! அதே தான்!  இது போன்ற வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நாம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க தொடங்குவோம். அப்படியாக 20 லட்சம் முதல் 1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போ எண்ணிக்கை கணிசமாக உயருமில்லையா? அரசு அதை தான் எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ?

4 மாதங்கள் காத்திருப்பதற்கு பதிலாக நாமே ஏன் மாதாமாதம் GSTR-2 ரிட்டர்னில் மெனுவலாக எண்டிரி செய்து ITC எடுத்துக்கொள்ள கூடாது என நீங்கள் கேட்கலாம்.  அப்படி செய்தாலும் ஓகே தான். ஆனால் 4 மாதம் கழித்து அது ஆட்டோமேடிக்காக வரும்போது அதில் இருந்து நாம் வரியை எடுத்த பில்களை எல்லாம் தேடி தேடி நீக்கவேண்டி இருக்கும். இது பெரிய நொச்சு பிடிச்ச வேலை. அதற்கு நீங்கள் தயார் எனில், உங்களிடம் இது போன்ற வர்த்தகர்கள் குறைவு எனில் இந்த முறையை பின்பற்றலாம். பொதுவாக அதிக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இது தலைவலியாக முடியும். எனவே சிறு குறு வணிகர்களின் நிலை கஷ்டம் தான்.
******
2. எக்ஸ்போர்ட் ரீஃபண்ட் உடனடியாக வழங்க நடவடிக்கை. ஈ-வாலட் மூலம் கொடுக்கப்படும்.

போன பதிவில் எக்ஸ்போர்ட் செய்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது முதலீடெல்லாம் முடங்கி கிடப்பதையும் படித்திருப்பீர்கள். இப்போது அப்படி முடங்கி கிடக்கும் முதலீட்டை அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 



ஆனால் இதிலும் சந்தோஷத்துக்கு பதிலாக சங்கடமே வந்து தொலைக்கிறது.

அதாவது ஜூலை மாத எக்ஸ்போர்ட் ரீபண்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்துக்கிடப்பவர்களுக்கு ரீபண்டு உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால் ரீபண்டு அப்ளை செய்வதற்கான வசதியே இன்று வரை ஜி‌.எஸ்.டி போர்டலில் கொண்டுவரவில்லை. இப்படி இருக்க, யாருமே அப்ளை செய்திருக்க முடியாத ஒரு விஷயத்தை அரசு தருவதாக சொல்வது இடிக்கிறது என்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், அப்படி கொடுக்கப்படும் ரீபண்ட் முன்பெல்லாம் செக்காக தருவது மாறி இப்போது ஈ-வாலட் முறையில் தான் வழங்கப்படும் என்றும் அதை ஜி.எஸ்.டி வரி செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருப்பது மற்றொரு இடி.

ஜி.எஸ்.டி வரி செலுத்தும் நிலையே வராதவர்கள் தான் தங்களிடம் இருக்கும் ITC ஐ காசாக்கும் வகையில் ரீபண்டுக்கு அப்ளை செய்வார்கள். வரி செலுத்தும் நிலை இருந்தால் அதை வைத்து வரியை செலுத்திவிட்டு போய்ட்டே இருப்பார்கள்.

தங்களிடம் மிச்சமிருக்கும் ITC, எக்ஸ்போர்ட்டுக்கு கட்டிவிட்டு அதை ரீபண்டாக்க காசாக வாங்கிக்கொண்டால் தான் முதலீடு கைக்கு வரும். ஆனால் அரசு அதை வாலட்டில் வரவு வைக்குமாம் அதை வைத்து நாம் வரி கட்டிக்கொள்ளலாமாம் என்றால் எந்த வரியை கட்டுவது?

சுருக்கமாக சொல்வதானால் ITC லெட்ஜரில் இருந்து Cash லெட்ஜருக்கு அந்த தொகை மாறும். இதை தவிர தம்படி பிரயோஜனம் கிடையாது நமக்கு. மொத்தத்தில் முடக்கப்பட்ட ITC முடக்கப்பட்டதாகவே இருக்கும்.

இந்த முடிவு நமக்கு மறைமுகமாக சொல்லும் ஒரு கொசுறு செய்தி என்னவென்றால், அரசிடம் ரீபண்ட் வழங்க பணம் இல்லையாமே என்கிற ஊகத்தை உண்மை என நிறுவி இருக்கிறது அரசு!
******
3. ரூ. 50,000 க்கு மேல் நகை வாங்கினால், அப்படி வாங்குபவரின் பான் & ஆதார் எண்ணை கொடுக்கவேண்டியதில்லை.

ஊழல் & கருப்பு பணத்துக்கு எதிரான போராக தனது நிதி சீர்திருத்தங்களை வர்ணித்துக்கொண்டிருக்கும் அரசு தான் இந்த முடிவை அறிவித்து இருக்கிறது. ஆச்சரியமாயில்லை?

இனி யார் வேண்டுமானாலும் தன்னிடம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை தங்கமாக மாற்றி கொள்ளலாம். பணமாக வாங்கப்படும் லஞ்சம் இனி தங்கமாக வாங்கிக்கொள்ள எந்த தடையும் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் பணத்தை கொடுத்து தங்கம் வாங்கிக்கொள்ளலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். வாங்குவோர் தம்மை பற்றிய எந்த குறிப்பையும் கொடுக்கவும் தேவை இல்லை. ஏற்கனவே நகைக்கடைகள் பில் இல்லாமலும் வரி கட்டாமலும் தான் பெரும்பாலான வணிகத்தையே செய்துவருகிறார்கள் என்பதால், அவர்களுக்கும் சிக்கல் இல்லை.

எனவே, கருப்புப்பணத்தை நிலமாக பொருளாக முதலீடு செய்து வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக தங்கமும் செய்து தந்திருக்கிறது அரசு.  இதனாலும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை. தங்கத்தின் விலை மேலும் ஏறும், ஊழல் கருப்புப்பணம் இனி பயமின்றி நடமாடும், அதிகாரிகள் இனி தைரியமாக லஞ்சம் கேட்பார்கள் (என்ன, அதை பணமாக அல்லாமல் தங்கமாக கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான்)
******
சரி, நேற்றைய கூட்டத்தில் நல்ல முடிவுகளே எடுக்கப்படலையா என்கிற கேள்வியும் இருக்கிறது. எடுத்து இருக்கிறார்கள். சில விஷயங்கள் அருமையான நடவடிக்கை. சிறிய அளவில் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடியவை. அவை சுருக்கமாக:

1.   பிரிண்டிங் பணிகளுக்கான வரி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. (விரைவில் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இது அரசியல் கட்சிகளுக்கு உதவியாக இருக்கும். நிறைய போஸ்டர் பேனர் அடிக்கவேண்டி இருக்கும் நிலையில் 7% வரி குறைப்பு என்பது மிகப்பெரிய வரம்)

2.   ரிவர்ஸ் சார்ஜ் முறையில் ஒரு பகுதிக்கு, அதாவது செக்ஷன் 9(4) க்கு மட்டும், விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பெரும் தலைவலியின் ஒரு பகுதி தீர்ந்தது.

3.   அரசு பணிகளுக்கான வர்க்ஸ் காண்டிராக்ட் (Works Contract) முறைக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது அரசுக்கு செய்யப்படும் பணிகளுக்கு மட்டும் தான். மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது. ஆனாலும் இது நல்ல விஷயம் தான். இதன் மூலம் அரசின் கட்டுமான திட்டங்களுக்கான செலவு குறையும்

4.   சிறு வணிகர்கள், அதாவது ரூ. 1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோர், தாங்கள் வாங்கும் அட்வான்ஸ் தொகைக்கு இனிமேல் வரி கட்ட தேவை இல்லை. இது அவர்களது வர்க்கிங் கேப்பிட்டலை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

5.   ஈ-வே பில் எனப்படும் ரோடு பெர்மிட் முறை 2018 ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

6.   Advance Authorisation லைசன்ஸ் இருந்தால் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு IGST வரி கட்ட தேவை இல்லை.

7.   மெர்சண்ட் எக்ஸ்போர்ட்டுக்கு பொருட்கள் வாங்கும்போது இப்போது HSN படி உள்ள வரி கட்டவேண்டும் என்று இருப்பதற்கு பதிலாக வெறும் 0.1% வரி கட்டினால் போதும் என்பது உண்மையிலேயே ஒரு போனான்சா தான்.

இப்படி சில.

ஆனால் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது தான் பெரிய வருத்தம்.

பார்ப்போம், அவை அடுத்த கூட்டத்திலாவது விவாதிக்கப்படுகிறதா என.

மொத்தத்தில் இதுவரை ஜி.எஸ்.டி என்பது குழப்பம் என்கிற நிலைமையில் இருந்தது.. இப்போது குழப்பம் ஓரளவுக்கு தீர்ந்துவிட்டது. ஆனால் நடைமுறை படுத்துவதிலும், தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பெரும் சிக்கல் இருக்கும் வகையில் சில ரூல்ஸ் இருப்பது தான் ஆபத்து.

இதையும் அரசு கவனத்தில் எடுத்து, விதிமுறைகளை எளிமைப்படுத்தும் என நம்புகிறேன்.


நம்பிக்கை... அதுதானே எல்லாம்?

******
Reference:

1.  Press realease on 22nd GST Council Meeting dated 06.10.2017
2.  Press note export packages.
3.  GST rates approved by GST council on 06/10/2017

Wednesday, September 27, 2017

பொருளாதார சீரழிவின் துவக்கம்

ரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்....

கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாக தணிக்கை செய்ய சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர்களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வரி வருவாயை அதிகரிக்கும் என சொல்ல பட்ட ஜி.எஸ்.டி மூலம், அரசுக்கான வரி வருவாய் வெறும் 29000 கோடி தான் வந்திருக்கிறது என்பது (94000 – 65000). இது முந்தைய வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தான். இதிலேயே ஜி.எஸ்.டியின் நோக்கம் அடிபட்டு போய்விட்டது.

அடுத்த அடி, நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டியில் முறையாக பதிவு செய்த 68 லட்சம் வணிகர்களில் ஆகஸ்டு மாதம் ரிடர்ன் தாக்கல் செய்திருப்பவர்கள் வெறும் 33 லட்சம் பேர் தான் என சொல்லி இருப்பது கவனிக்க தக்கது. இதன் படி பார்த்தால் வரி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டிக்கு முன்பாக எக்ஸைஸ், செர்வீஸ் டாக்ஸ், வாட் ஆகிய அனைத்தும் உட்பட 1.20 கோடி வணிகர்கள் இருந்த நிலையில் இப்போது வெறும் 68 லட்சம் வணிகர்கள் தான் இருக்கிறார்கள் என அரசே சொல்கிறது. அந்த 68 லட்சத்திலும் 33 லட்சம் பேர் தான் வரி செலுத்தி இருப்பதாகவும் அரசு சொல்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என்றும், வரி ஏய்ப்புக்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் அரசு சொல்லி வந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கள் அதற்கு எதிரான காட்சிகளை தான் நமக்கு ஆதாரமாக தருகிறது. 

ஆக, ஜி.எஸ்.டி அதன் நோக்கத்தை சரியாக சென்றடையவில்லை என்பது தெளிவு.

சரி, அதென்ன அது 65000 கோடி ரீஃபண்ட்? ஏன் அரசு அதை தரணும்? இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது? இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்வி வருதுல்ல? வாங்க அதை கொஞ்சம் ஜாலியா விவாதிக்கலாம்.

எக்ஸ்போர்ட் செய்வது என்பது வெறும் கம்பெனிகள் மட்டுமே செய்வது அல்ல. தனி நபர்களும் சிறு வணிகர்களும் தான் அதிகமாக எக்ஸ்போர்ட் செய்கிறார்கள். கணக்குப்படி மொத்த எக்ஸ்போர்ட்டில் 43% தான் கம்பெனிகள் செய்கின்றன. பாக்கி எல்லாம் தனி நபர்கள் அல்லது சிறு வணிகர்கள்.



அவர்கள் அப்படி என்ன தான் எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்? கம்பெனிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை எக்ஸ்போர்ட் செய்வார்கள். ஆனால் தனிநபர்கள் மற்வர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதை எக்ஸ்போர்ட் செய்வார்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள், தேங்காய், பூக்கள், துணிகள், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டம்கள். வெளிநாடுகளில் இவற்றுக்கு நிறைய கிராக்கி இருப்பதால் தினம் தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவில் பூக்களுக்கும், அரபு நாடுகளின் நம் உணவு பொருட்களுக்கும் நிறைய கிராக்கி.

இப்படி எக்ஸ்போர்ட் செய்யும் தனி நபர்கள் / சிறு வணிகர்கள் மெர்செண்ட் எக்ஸ்போர்ட்டர் (Merchant Exporter) என்கிற கேட்டகரியில் வருவார்கள். அதாவது அவர்கள் வெறும் வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வளவே. இதற்கு முதலீடு குறைவு ஆனால் பெரிய லாபம்.

உதாரணமாக நான் இந்த தொழில் செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் இங்கே பக்கத்தில் உள்ள திருவள்ளூரிலோ  ஊத்துக்கோட்டையிலோ எனக்கு தெரிந்த தோட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 25 நாள் கடனுக்கு வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த பொருட்களை அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும் வண்டி வாடகை, டாகுமெண்ட் செலவு, ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் செலவு என சுமார் 30,000 ரூபாய் முடக்கினால் போதும். எனது கஸ்ட்மருக்கு நான் நிர்ணயிக்கும் விலை 1,50,000 எனில், அந்த பொருட்கள் கிடைத்த 15 நாளுக்குள் கஸ்டமர்  எனக்கு பணம் அனுப்புகிறார் என வைத்துக்கொண்டால் அந்த பணத்தை வைத்து காய்கறிகள் வாங்கியோருக்கு 1,00,000 கொடுத்துவிட்டால் போக்குவரத்து செலவு 30,000 போக எனக்கு நிகர லாபம் 20,000.

இது ஒரு தொடர் நிகழ்வு என்பதால் மாதத்துக்கு 4 அல்லது 5 முறை இத்தகைய வர்த்தகம் நடைபெறும்.. சுமார் 1,00,000 வரை கையில் லாபம் நிற்கும். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.



காய்கறிகள் மட்டும் அல்லாமல், பல வகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றது. அவற்றில் சிலவற்றுக்கு வரி இருந்தாலும் Merchant Export என்பதால் வரி விலக்கு இருந்தது. எனவே எந்த இழப்பும் இல்லாமல் இந்த ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருந்தது.

இப்போது புதிய ஜி.எஸ்.டி விதிகள் படி, Merchant Export முறை இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்தவேண்டும். அதை ஏற்றுமதி செய்துவிட்டு, அப்படி ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்களை அரசிடம் காண்பித்து, நாம் செலுத்திய வரியை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எப்படியும் அரசுக்கு நயாபைசா வருமானம் இல்லை. நாம் வாங்கும் போது செலுத்திய வரியை பின்னர் அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். (முன்பு வரி செலுத்தவும் தேவையில்லை, திரும்ப பெறும் நடைமுறையும் இல்லை).

இது ஈஸி தானே என பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசு இந்த நிமிஷம் வரை ரீஃபண்ட் ஆப்சனை செயல்படுத்தவே இல்லை. இதன் விளைவு?

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாங்கிய பொருட்களுக்கான வரியை ஏற்கனவே கட்டியாச்சு. ஆனா அதை ரீஃபண்ட் வாங்கும் வசதி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் அந்த தொகை எல்லாம் அங்கே முடங்கி கிடக்கு. எனக்கு கிடைக்கும் லாபம் ல்லாம் இப்போ அரசிடம். அது எப்போ வரும்னு எந்த அறிகுறியும் இல்லை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் வரும். அதில் சந்தேகம் இல்லை.

வெறும் 30,000 முதலீடு வெச்சு ரோட்டெஷன் செஞ்சு சம்பாதிச்சது மாறி இப்போ வரியே மாசம் 4 x 28,000 கட்டி கட்டி மொத்தமா 2,24,000 அரசுகிட்டே முடங்கிக் கிடந்தா எப்படி தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?


இப்படி எல்லோரும் பைசா வந்தபின்னால் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு எக்ஸ்போர்ட் பிசினசை நிறுத்தினால் அன்னியசெலாவணி பிரச்சனை புதுசா முளைக்கும். அதாவது நமது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிச்சா அதனால் ஏற்படும் Current Account Deficit (CAD). அது ஒரு தனி பெரும் கதை. இது டாலர் மதிப்பை உயர்த்தி ரூபாய் மதிப்பை குறைத்து மொத்தமா ஒரு நம்மை நசுக்கிடும். மேலும் சில காலம் இங்கிருந்து எக்ஸ்போர்ட் இல்லைன்னா நம்ம கஸ்டமர் நமக்காக காத்திருக்காம மற்ற நாடுகளில் இருந்து வாங்க ஆரம்பிச்சிருவான்.

இது ஒரு புறம்.

அரசு முன்பே சொன்னது மாதிரி ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாயாக 94000 கோடி வந்திருக்குன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ளே அதுல இப்படி திரும்ப கிடைக்கவேண்டிய ரீஃபண்ட் தொகை 65000 கோடின்ற கணக்கு வந்ததும் ரெண்டு அதிர்ச்சி.

ஒண்ணு, 65000 கோடி திரும்ப கொடுக்கற அளவுக்கு இப்போ பணம் இல்லையாம்.
ரெண்டு. 94000 கோடியில் 65000 கோடி ரீபண்டுன்னா மொத்தமா வந்த வரியே வெறும் 30000 கோடி தான். இது முந்தைய வரி வசூலை விட ரொம்ப குறைவு. ஆக மொத்தம் ஜி.எஸ்.டி எல்லா எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்கிருச்சு.

இப்போ அரசு நிதி பற்றாக்குறையை நோக்கி போயிட்டிருக்கு. அது பொருளாதார மந்த நிலையா மாறி பொருளாதார சீர்கெடா மாறுவதற்கு அதிக காலம் ஆகாது. ஏன்னா ஏற்கனவே எல்லா தொழில்களும் மெல்ல மெல்ல முடங்கிட்டு இருக்கு. எக்ஸ்போர்ட் துறையும் தேங்கிருச்சுன்னா வேலை வாய்ப்பு குறையும், அந்நிய செலாவணி பிரச்சனை, ரீபண்டுக்கான தொகை இல்லாமை, வரி வருவாய் குறைவு, வரி ஏய்ப்பு மூலம் எதிர்பாராத நஷ்டம். எல்லாமா சேர்ந்து அரசின் கஜானாவுக்கு தான் பிரச்சனை.

அதனால் தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பல முக்கிய அவசர கூட்டங்கள் நடந்திட்டு இருக்கு.

காத்திருப்போம்.. அரசு ஒரு நல்ல முடிவு எடுத்து இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு காணும் என்று!




Printfriendly