Showing posts with label Loans. Show all posts
Showing posts with label Loans. Show all posts

Saturday, August 22, 2015

வராக்கடன் – இந்தியாவின் பெருநோய்

ன்னைக்கு காலையில் பேப்பரில் என்னை பகீர்னு அதிர்ச்சியாக்கிய செய்திகளில் முக்கியமானது “இந்திய பொதுத்துறை வங்க்கிகளின் வராக்கடன் தொகை 2.67 லட்சம் கோடி” என்பது.

2014-15 ஆண்டுக்கான அறிக்கை படி பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 2.67 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன். இது முந்தைய ஆண்டான 2013-14 இல் 2.16 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது பாஜக அரசின் ஓராண்டு ஆட்சியில் வராக்காடன் மட்டும் 51 ஆயிரம் கோடி.



பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் நிதி நிலையை உயர்த்தவும் ஏழை மக்களுக்கான நல திட்டங்கள் வழங்குவதற்கு வசதி செய்யவும் பொதுமக்கள் தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு உருக்கமான வேண்டுகோளை அனைத்து மீடியாக்களிலும் வெளியிட்டார். அவரது அற்புதமான பேச்சு மற்றும் அதன் நியாயமான காரணங்கள் ஆகியவற்றால் இதுவரை சுமார் 6.50 லட்சம் பேருக்கு மேல் தங்கள் மானியத்தை விட்டு கொடுத்து இருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சுக்கு பொதுமக்கள் காட்டிய அளப்பரிய மரியாதை ஆச்சரியப்பட வைத்தது. நாடு இருக்கும் இக்கட்டான நிலையை சொல்லி அதற்கு உதவுமாறு அவர் கொடுத்த கோரிக்கை மெகா ஹிட் அடித்தது.

இன்றைய செய்திக்கு வருவோம்

இந்த வாரா கடன் என்பது தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாவரும் வங்க்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட நிலுவை தொகை. மார்ச் 31, 2015 நிலவரப்படி அந்த தொகை ரூ.2.67 லட்சம் கோடி. இந்த அளவுக்கு நிலுவை வராக்கடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி கண்டிப்பு காட்டி இருக்கிறார். ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜனும் வங்கிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் சொல்லும் வராக்கடன் முழுமையான தகவல் அல்ல, அது மறைக்கப்படுகிறது என்றும் சொல்லி இருக்கிறார். (அதன் படி பார்த்தால் தொகை இன்னும் கூடலாம்).



இந்த வராக்கடன் என்பது நியாயமாக பார்த்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை தான். இதில் கால அவகாசம் கொடுக்க எந்த காரணமும் இல்லை. சட்டப்படி அதை வசூலித்து அரசிடம் சேர்த்திருக்கவேண்டிய கடமை வங்கிகளுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி எதையும் வங்கிகள் செய்ததாக தெரியவில்லை. இந்த 2.67 லட்சம் கோடியில் சுமார் 1.82 லட்சம் கோடி பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகை. அவர்களால் அதை செலுத்தமுடியாத நிலை எல்லாம் இப்போது இல்லை. நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கும் பல பெரிய நிறுவனங்கள் கூட வேண்டுமென்றே அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை கடன் பாக்கியை செலுத்தாமல் வைத்திருக்கிறது. அவர்கள் சொத்துக்களை முடக்கி, விற்று கடனை சரிக்கட்டக்கூடிய அதிகாரம் இருந்தும் வங்கிகள் மெத்தனமாக இருக்கின்றன. 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 41,236 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது  வங்கிகள். அது போக தான் இந்த 2.67 லட்சம் கோடி.

தன்னுடைய மேலான நேரத்தை ஒதுக்கி பொதுமக்களிடமிருந்து சுமார் 250 ரூபாய் மானியத்தை நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்சும் பாரத பிரதமர், இதுவரை கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் அவர்கள் செலுத்தவேண்டிய நிலுவை தொகையை செலுத்துமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம் தான்.

அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரின் கவலைகளை பிரதமர் உணர்ந்திருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அவரது அபரிமிதமான செல்வாக்கை பயன்படுத்தி கார்ப்பொரெட்டுகளுக்கு கோரிக்கை விடுத்து நிலுவையை வசூல் செய்தால் இந்தியா பொருளாதாரம் சட்டென தழைக்கும், ரூபாயின் மதிப்பும் உயரும். பொதுமக்களிடம் 250 ரூபாய்க்கு கெஞ்சிக்கொண்டிருப்பதை விட, நாடு நாடாக சென்று முதலீட்டுக்கு கையேந்திக்கொண்டிருப்பதை விட, நிலுவை கடன் தொகை, நிலுவை வரி பாக்கிகளை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், இந்தியாவின் பொருளாதாரத்தை சீரமைக்க.

செய்வாரா பிரதமர்?

References:





Printfriendly