Showing posts with label Student Strike. Show all posts
Showing posts with label Student Strike. Show all posts

Thursday, March 14, 2013

மாணவர் போராட்டம் – எனது பார்வையில் – பாகம் 1


மிழகம் முழுவதும் இப்போது பரபரத்து கிடக்கிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் போராட்டம் வீறு கொண்டு எழுச்சி பெற்றிருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராகவும் ஒட்டுமொத்த தமிழக மாணவர் சமுதாயமும் களம் கண்டுகொண்டிருக்கிறது.

ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கான பொது விசாரணை நடத்தி ராஜபக்சேவை தண்டிக்கவேண்டும் என்றும், ஈழ விடுதலையை வலியுறுத்தியும், இன்ன பிற கோரிக்கைகளுமாக லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க தொடங்கியதில் தொடங்குகிறது இந்த எழுச்சி போராட்டம்.



உண்ணாவிரத செய்தி கேள்விப்பட்டதும், ஈழ விவகாரத்தை கைகொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான வைகோ, நெடுமாறன், திருமாவளவன், சுப.வீரபாண்டியன், போன்றோரும், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு போன்றோரும் மாணவர்களை சந்திக்க வந்தனர். இதில் தங்கபாலு மீது செருப்பு எறியப்பட்டு, சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பி தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்து விட்டனர் மாணவர்கள்.

நான்கு நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்ததை அடுத்து, தமிழக அரசு சட்டப்படி மாணவர்களை கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தது. பின்னர் அந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சொல்லி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால், அது அங்கே முடியவில்லை. மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகளும் அவரவர் அளவிலே குழுக்களாக தொடர்ந்து அலை அலையாக போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம், தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய மாணவர் போராட்டங்களை எல்லாம் நினைவு படுத்தினாலும், பொதுமக்களின், அரசியல் கட்சிகளின், ஊடகங்களின் ஆதரவு முழுமையாக அவர்களுக்கு கிடைக்கவில்லை.

2009 ம் ஆண்டு இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும், ஆயிரக்கணக்கான போராளிகளூம் கொன்று குவிக்கப்பட்ட போதும், அச்சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இதுவரை அது தொடர்பான பெரும் போராட்டம் எதையும் தமிழகத்தில் யாரும் நடத்தவில்லை. இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சேனல் 4’ தொலைக்காட்சியில் அவ்வப்போது வெளியிடப்படும் கொடூரமான ஆவணப்படங்களில் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளிட்ட அப்பாவி தமிழர்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என கண்டபோதும் யாரும் எந்த பெரும் கிளர்ச்சியும் செய்யவில்லை.

ஆனால், இயக்க தலைவரின் மகனான பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட ஆவணப்படம் கண்டதும், ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து விட்டது. திமுக, அதிமுக இருவரும் (அதிசயமாக) ஒரே குரலில் பாராளுமன்றத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விவாதங்களில் இறங்கின. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் பெரும் கண்டனத்தை தெரிவித்தன. அதை தொடர்ந்து, மாணவர்கள் எட்டு பேர் திடீரென உண்ணாவிரதம் தொடங்கி பரபரப்பை கூட்டினர்.

இதை பலரும் இன உணர்வாக அல்லாமல், இயக்க உணர்வாக பார்க்க தொடங்கியதாலேயே, நியாயமாக இந்த போராட்டத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய ஆதரவு கிடைக்காமல் போய்விட்டதோ என்கிற ஐயம் எனக்குண்டு! இன உணர்வு போராட்டமாக இருந்திருந்தால் 2009 லோ அல்லது அதற்கு பின்னர் இந்த நான்கு ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் நடைபெற்று இருக்கும். தமிழுணர்வு எனில், சேனல் 4 ல் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதே கிளர்ந்திருக்கும்.

பொதுவாகவே தமிழகத்தை பொறுத்தவரை ஈழ தமிழர்களையும், விடுதலைப்புலைகளையும் குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருப்பது பரவலாக உணரப்படும் ஒன்று. எனவே, புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை வைத்திருக்கும் கட்சிகள், அதை வெளிப்படையாக வெளிப்படுத்தமுடியாமல் அதற்கு தமிழுணர்வு / இன உணர்வு சாயம் பூசி மெழுகுவது மதிமுக, வி.சி பொதுக்கூட்ட பேச்சுக்களை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரின் விடுதலைக்காக போராடுவோரும் கூட, அவர்கள் தமிழர்கள், அதனால் தமிழுணர்வின் அடிப்படையிலே அவர்களது விடுதலையை கோருகிறோம் என்று தான் போராடுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களது உதவியால் நடந்தேறிய இந்திய வரலாற்றின் மிகக்கொடூரமான கொலையில், எந்த சம்மந்தமுமற்ற 15 அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். அவர்களும் தமிழர்களே! ஆனால், ஏனோ தமிழுணர்வு அங்கே செல்லுபடியாகவில்லை.

தமிழக தமிழர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும், ஈழ தமிழர்களுக்காக போராடுவது மட்டுமே தமிழுணர்வு என பல அரசியல் இயக்கங்களால் நிறுவப்பட்டு விட்டது.

எனவே, தமிழுணர்வு, இன உணர்வு, ஈழ உணர்வு என்பதெல்லாம் உடனடியாக பலன் தரக்கூடிய விஷயங்கள் என்கிற எண்ணம் தமிழகத்திலே பரப்பப்பட்டு விட்டது. அந்த வகையிலே, மாணவர்களும் ஈழ விவகாரத்தை கையில் எடுத்து போராட தொடங்கி இருக்கிறார்கள்.

போராட்டத்தின் நோக்கமாக சொல்லப்பட்டுள்ளவற்றில் ஒன்று, மத்திய அரசு ஐநாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்பதும் ஒன்று. ஆனால், அது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கையையோ, ஆளுநரிடம் பேசுவதற்கான கோரிக்கையோ, மத்திய அரசு பிரதிநிதிகளை சந்திக்கும் முயற்சியோ அவர்கள் செய்ததாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற காங்கிரசின் முக்கிய தமிழக தலைவரான திரு. தங்கபாலுவே மாணவர்களை சந்திக்க முன்வந்தபோது கூட, அவரை சந்திக்காமல் செருப்பெறிந்து துரத்தி அடித்து, கிடைத்தற்கரிய அரிய வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள்.

தங்கபாலு அவர்கள் ஈழ போராட்டத்தில் எந்த அளவுக்கு ஈடுபட்டு இருந்தார் என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 80களில் ஈழ விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டவர்களில், ஈழ விவகாரத்தின் முழு பரிணாமத்தையும் முழுமையாக அறிந்தவர்களில் இப்போது உயிர்த்திருப்பவர்கள் மிக சிலரே. கலைஞர், நெடுமாறன், வைகோ, போன்றோருடன் தங்கபாலும் அதில் அடங்குவார்.

பிரபாகரனை ஜாமீனில் எடுக்க வந்த நெடுமாறன் ஐயா அவர்களையும் அடையாறில் தங்கி இருந்த பிரபாகரனுக்கு உணவு உதவி செய்த திருமாவளவன் அவர்களையும், திமுகவின் ஈழ விவகாரத்தை கவனிக்கும் முக்கிய நபராக இருந்த வைகோவையும் ஈழ ஆதரவாளர், ஈழ போராளி என்கிற அளவுக்கு சொல்வதில் எனக்கு எந்த நெருடலும் இல்லை. ஆனால் எந்த சம்மந்தமுமே இல்லாத சீமான் போன்றோரெல்லாம் ஈழ விவகாரம் அறிந்தவர் என போற்றப்படுவதை ஜீரணிக்கவே முடியவில்லை. அப்படியான பலரையும் சந்தித்து உரையாடிய மாணவர் குழு, மத்திய அரசின் கட்சிபிரதிநிதியான தங்கபாலுவை சந்திக்க மறுத்தது மிக மிக தவறான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.


மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராடும் மாணவர்கள், தங்கபாலுவை சந்திக்க மறுப்பதும், எந்தவித அதிகாரமும், கடமையுணர்வும் இல்லாத பிற சிறு அரசியல் தலைவர்களை கொண்டாடுவதும் சரியாகப்படவில்லை. மத்திய அரசை நிர்ப்பந்திப்பது தான் உண்மையான நோக்கம் எனில், வலிய வந்த தங்கபாலு மூலமாகவே தங்கள் உணர்வுகளையும், வேதனைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசுக்கு எடுத்து சென்றிருக்க முடியும். அவசியமானால், மாணவ பிரதிநிதிகள் அவருடனே கூட பிரதமரையோ, வெளியுறவு துறை அமைச்சரையோ சந்தித்து பேசியிருக்க முடியும். ஆனால், அதை எல்லாம் மொத்தமாக புறக்கணித்து விட்டு, மத்திய அரசை ஈர்ப்பதற்காக போராடுகிறோம் என சொல்வது எனக்கு உண்மையில் வியப்பை தான் தருகிறது.

சுப.வீரபாண்டியன், நெடுமாறன், வைகோ, திருமாவளவன் போன்றோரது ஆதரவை மேடையிலேயே பெற்றுக்கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பேட்டி அளித்த பின்னால், எங்கள் மேடையில் எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதியில்லை. நாங்கள் மத்திய அரசை நிர்ப்பந்திக்கவே சுயமாக போராடுகிறோம் என மழுப்புவதன் உள்ளரசியலை தமிழக மக்கள் உணராமலில்லை.

பொதுவாகவே, இணைய தளங்களில் உள்ள சில நூறு இளைஞர்களின் கருத்து தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்து என்கிற ஒரு தவறான அபிப்பிராயம் இணைய வெளிகளிலே உலாவருகிறது. ஆனால் இணைய வெளிகளை விட யதார்த்த வாழ்க்கையிலுள்ள பொதுமக்களே அதிக அரசியல் அறிவு கொண்டவர்கள் என்கிற உண்மை பலரும் அறிந்த ஒன்றே!

இதுவரையும் தமிழக மக்கள், ஈழ விவகாரத்தை கையிலெடுத்த கட்சிகளான மதிமுக, வி.சி, பாமக போன்ற கட்சிகளை புறக்கணித்தே வந்திருக்கின்றன. அதிமுக, திமுக போன்றவர்கள் தமிழக தமிழர்களுக்கான தங்கள் திட்டங்களை பற்றி மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்வதன் நோக்கமும் அதுவே. தமிழக தமிழர்களை பற்றி கவலைப்படுவோருக்கே இது வரை தமிழகம் ஆதரவுகொடுத்து வந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால், மாணவர் போராட்டத்துக்கு தமிழக பொதுமக்களின் ஆதரவு கிட்டாததில் ஆச்சரியமில்லை. ஒரு பொதுநோக்கத்துக்காகவோ, சமூக பிரச்சனைக்காகவோ மாணவர்கள் போராடுபவர்களாக இதுவரை இல்லை. இப்போதும் இல்லை.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி, மற்றும் மின்வெட்டு, சமூகத்தை சீரழிக்கும் மது, விவசாய தற்கொலை, நெசவாளர் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, பெண்களின் பாதுகாப்பின்மை, தொடரும் கொலை கொள்ளை, விலைவாசி உயர்வு, போன்ற சமூக பிரச்சனைகளுக்கோ, அல்லது தங்களையே நேரடியாக பாதிக்கும் தரமற்ற கல்வி, கல்வி கட்டண பிரச்சனை, சமச்சீர் கல்வி குளறுபடி, பேருந்து கட்டண உயர்வு போன்ற தங்களின் பிரச்சனைகளுக்கோ கூட தங்களுக்கென்று கருத்தோ, அதை முன்னெடுக்கின்ற போராட்டமோ அவர்கள் இது வரை செய்ததில்லை.

எனவே, மாணவர்கள், தமிழ் உணர்விலோ, சமூக உணர்விலோ, மக்கள் பிரச்சனைக்காகவோ இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டதாலோ என்னவோ, தமிழக மக்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.

சந்தர்ப்பவாத அரசியலை புறக்கணித்து பழகிய ஊடகங்களும் மாணவர்களை அதிகம் கண்டுகொள்ளாததன் உள்ளீடும் அதுவாக இருக்கக்கூடும்.

மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்காகவோ, ஐநாவின் தீர்மானத்துக்காகவோ போராடுவதாக இருந்திருந்தால், இந்நேரம் மத்திய அரசை சந்திக்கவோ, தங்கள் கோரிக்கையை குறைந்த பட்சம் ஐநாவுக்கே அனுப்புவதற்கோ எதேனும் முயற்சியை செய்திருப்பார்கள். அதுவும் இதுவரை இல்லை! மேலும் தங்கபாலு மீதான தாக்குதல் அவர்களது நோக்கம் அதுவல்ல என்பதை மிக தெளிவாகவே எடுத்து சொல்லிவிட்டது!

மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்து, முன் கூட்டியே தெளிவாக திட்டமிடப்பட்டு, அனைத்து மாணவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழக போராட்டமாக தொடங்காமல், எட்டு பேர் மட்டும் திடீரென்று எந்த முன்னறிவிப்புமின்றி தொடங்குவதும், அதை வாழ்த்த அரசியல் தலைவர்கள் அன்று ஒரு நாள், ஒரே ஒரு நாள் சம்பிரதாயமாக வந்து வாழ்த்திவிட்டு சென்று பின் அமைதியானதும், அதே போன்ற போராட்டத்தை மாவட்டம் தோறும் சின்ன சின்னதாக சிலர் தொடங்குவதும், அப்படி தொடங்கியபின் மற்றவர்களின் ஆதரவையும், நிதி உதவியையும் கேட்டு கோரிக்கை விடுத்தவண்ணம் இருப்பதும், எல்லாமாக சேர்ந்து பார்த்தால் ஒரு வெற்று பரபரப்புக்கான போராட்டமாக மக்கள் முன்னிலையில் ஒரு பிம்பம் விழுவதை தவிர்க்க முடியவில்லை.

இணைய வெளிகளில், தங்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தும் பதிவுகளை விட மிக மிக அதிகமாக, நிதி உதவி வேண்டிய விண்ணப்பங்களும், ஆதரவு கேட்டு ஊடகங்களுக்கு விடுக்கும் கோரிக்கைகளுமே கொட்டி கொண்டு இருப்பது, சலிப்பையே தருகிறது.

மிக மிக அவசியமான ஒரு கோரிக்கையை, மிக மிக சாதாரணமாக கையாண்டு, அதற்கான மரியாதையை சிதைத்து விட்டார்களே என்கிற வருத்தமும் ஊடாடுவதை தவிர்க்க முடியவில்லை!

இன்றைய நிலையில் எதற்காக இந்த போராட்டம் உண்மையில் தொடங்கப்பட்டது என்கிற தெளிவில்லாமல் இருப்பது ஒரு புறம் எனில், மாநில அரசு, பிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன, ஒருங்கிணைப்பில்லாத இந்த போராட்டத்தின் நிலை என்னவாகும், இனி இதை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து செல்ல என்ன செய்யவேண்டும், மாணவர்களின் இப்போதைய நிலைப்பாட்டால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் என்ன என்பதை எல்லாம் யோசிக்கையில் கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது. அதை பற்றியெல்லாம் அடுத்த பதிவில் இன்னும் விரிவாக நாளை எழுதுகிறேன்.

இப்போதைக்கு கனத்த மனதுடன் விடைபெறுவதை தவிர வேறென்ன செய்ய?

Printfriendly