Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Monday, May 30, 2016

நேர் நிரை – கூவிளம்

மாராணி மிஸ். 

கோவை சித்தாபுதூர் ஸ்கூலில் இவங்க தான் என்னுடைய தமிழாசான்.. ச்சே.. தமிழாசிரியை. மிக மிக அருமையா தமிழை, தமிழ் இலக்கணத்தை யாப்பை, யாப்பின் கட்டுக்களை எளிமையா புரியமாதிரி எனக்கு சொல்லி கொடுத்தவங்க.
 
Thanks: PaddathumSuddathum.blogspot.com

யாப்பிலக்கணத்தின் அடிப்படையே சொல்லின் ஒலி குறிப்புத்தானே? நெடில் – நேர்; குறில் – நேர்; நெடில் நெடில் – நேர் நேர்; குறில் நெடில் – நிரை நேர்; நெடில் குறில் – நேர் நிரை; குறில் குறில் நிரை நிரை. அவ்வளவு தான் யாப்பு. இதில் இரட்டை & மூன்று ஒலிக்குறிப்புக்கும் இன்னொரு அடுக்கு 'கோடு வேர்டு' இருக்கு. நேர் நேர் – தேமா; நிரை நேர் – புளிமா; நேர் நிரை – கூவிளம்; நிரை நிரை – கருவிளம். இதெல்லாம் இரட்டை ஒலிக்குறிப்புக்கள். இதுக்கு அடுத்தபடியா மூணாவது சொல் நேர்னு வந்தா காய்; நிறைனு வந்தா கனி. இவ்வளவு சிம்பிளா யாப்பை சொல்லிக்கொடுத்ததோட, அவங்க சொல்ற சொல் என்ன ஒலிக்குறிப்பு அதுக்கு என்ன கோடு வேர்டுனு கேள்வி கேட்டு கேட்டு தினம் கொஞ்ச நேரம் விளையாடுவாங்க. இது மிக அற்புதமான பயிற்சியா அமைஞ்சு இன்னை வரைக்கும் யாப்பை மறக்கவிடாம செஞ்சிருக்கு.

வைரமுத்துவின் இதுவரை நான் படிச்சப்ப அவர் இதே மாதிரி யாப்பை முதல் முதலா படிச்சு புரிஞ்சுகிட்டபோது திருக்குறளின் 1330 குறளையும் பகுத்து பார்த்தார்னு எழுதி இருக்கிறதை படிச்சேன். அதனால தான் அவர் கவிப்பேரரசர். நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை. தினம் அப்பா வீட்டில் வாங்கும் தினத்தந்தியின் தலைப்பு செய்திகளை பகுத்து பார்த்து அதை சின்ன தாளில் எழுதி எடுத்துட்டு போயி உமாராணி மிஸ் கிட்டே காட்டுவேன். சரியா பகுத்திருக்கேனான்னு என்னை நானே அப்ரைசல் செஞ்சுக்க.

உதாரணமா இந்த பிளாக்கின் தலைப்பை எடுத்துகோங்க. மனவுரை ம-குறில்; ன – குறில்; வு – குறில்; ரை – குறில். எல்லாமே குறில் தான். அதை சேர்த்தா.. குறில் குறில் – நிரை; நிரை நிரை – கருவிளம். சுருக்கமா மனவுரை = நிரை நிரை = கருவிளம். சொல்லி பாருங்க மூணு வார்த்தையும் ஒரே மாதிரி தான் உச்சரிக்கும்.

இது தவிர வேற்றுமை உருபு, குற்றியலுகரம், குற்றியலிகரம் அது இதுன்னு அந்த ரெண்டு வருஷத்தில் (9th & 10th) ஆல்மோஸ்ட் இலக்கணத்தில் மொத்த பேசிக்கையும் சொல்லி கொடுத்துட்டாங்க.

Thanks: Ponkarthikeyan.wordpress.com

எனது பிற்கால யாத்திரைகளில் இந்த யாப்பு ஒலிக்குறிப்பு இன்னொரு தேடலுக்கு வழி வகுத்துச்சு. அது தான்.. இதெல்லாம் என்ன காய் கனி? தேமா – தேன் மாங்கா; புளிமா – புளிமாங்கா புரிஞ்சுது.. ஆனா இந்த கூவிளம் & கருவிளம்??

எனக்கொரு மதுரைக்கார தோழி உண்டு. அவர் தான் விளம் என்பது விளாம்பழம் / விளாங்காய் என்பதை குறிக்கும்னு சொன்னார். மதுரைக்கு போயிருந்தபோது விளாங்குடி கூட்டிட்டு போனார். நான் கூட சுத்து முத்தும் விளா மரமா தோப்பு தோப்பா இருக்கும்னு ஆசையா எதிர்பார்த்து போனேன். ஆனா அது ஒரு வழக்கமான நகர பகுதியா தான் இருந்துச்சு.

******  *******

சென்னை கன்னிமாரா நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் பல வகையினர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சொற்பொழிவாளர்கள்வைரமுத்து விழாக்களில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சொல்லாடலை கண்டு சொக்கி போயிருந்த காலங்கள் அவை.

மெல்ல மெல்ல மனம் லக்ஷ்மி, வாஸந்தி, அகிலன், சாண்டில்யன், கல்கி, அசோகமித்த்ரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், தமிழ்வாணன் மாதிரியானவர்களிடமிருந்து விலகி தமிழ் கவிஞர்களின் அதிலும் மரபு கவிஞர்களின் படைப்புக்கள் பக்கமாக ஒதுங்க தொடங்கினேன். மாயவநாதன், சுரதா, மருதகாசி, பாரதிதாசன் மாதிரியான ஹேரிடெஜ் கவிஞர்களில் இருந்து, வைரமுத்து, முத்தையா, வாணிதாசன், பாவலர் தேவகி மாதிரியான கவிஞர்களின் படைப்புகள் வரை எல்லோரது எழுத்துக்களும் வசீகரித்தன. 

மாயவநாதன் பத்தி சொல்லும்போது அந்த வானம்பாடி படத்தின் காகித ஓடம் கடலலை மீது பாடலை சொல்லாமல் இருக்கமுடியாது. (ஏற்கனவே பலரும் பல தடவை சொன்னது தான். நானும் ஒரு தடவை சொல்லிக்கறேனே).

காகித (நேர் நிரை) ஓடம் (நேர் நேர்) கடலலை (நிரை நிரை) மேலே (நேர் நேர்).  இந்த பாடலை எழுதுநது என்னவோ கலைஞர் தான். ஆனா உண்மையிலேயே இந்த டியூன் மாயவநாதனுக்கு தான் கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கோபத்தில் மகாதேவன் கொடுத்த டியூன் அது. ரொம்ப நாளா டியூனு டியூனுனு நச்சு பண்ணிட்டு இருந்த மாயவநாதன்கிட்டே கடுப்பாகி மகாதேவன் சொன்னாராம்.. என்னய்யா டியூனு பெரிய டியூனு? மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் இதான் டியூனு முடிஞ்சா எழுதிக்கொன்னு சொன்னாராம். மாயவநாதன் அந்த டியூனுக்கு பாட்டு எதையும் எழுதலை. ஆனா விஷயத்தை கேள்விப்பட கலைஞர் அந்த 'மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்' டியூனையே அடிப்படையா வெச்சு காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்னு எழுதுனாரு. அதுமட்டுமல்ல. அந்த பாடல் முழுக்கவே இந்த ஒரே டியூன் தான்.

இதுக்கு அடிப்படையும் யாப்பு தான். அந்த மாயவநாதன்ற வார்த்தையின் ஒலிக்குறிப்பு மா(நேர்) யவ(நிரை) நா(நேர்) தன்(நேர்) – நேர் நிரை நேர் நேர். இதை பேசிக்கா வெச்சு தான் கா(நேர்) கித(நிரை) ஓ(நேர்) டம்(நேர்) னு எழுதி இருப்பார் கலைஞர். நீங்க அந்த வார்த்தைகளை சொல்லிப்பாருங்க. மாயவ நாதன், நேர்நிரை நேர்நேர், காகித ஓடம்... ஒரே மாதிரி உச்சரிப்பு வருதுல்ல?

மொத்த பாடலின் அத்தனை வரியையும் மாயவநாதன் மாயவனாதாண்ணே போட்டு பாடினாலும் கரெக்டா வரும். அத்தனை எடத்திலேயும் அதுக்கு தகுந்த மாதிரி யாப்பு தப்பாம வார்த்தைகளை போட்டு ஒரு உருக்கமான பாட்டை எழுதிருப்பாரு கலைஞர்.

“கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்”

மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்”

பாடி பாருங்க. சேம் டியூன் யூ நோ.

இந்த செய்தியை படிச்சப்பறம் திரைப்பாடல்களை கூட சந்தம் பிரிக்க ஆரம்பிச்சேன். எங்கெல்லாம் தளை தட்டுது எங்கெல்லாம் வார்த்தைகள் தப்பு தப்பா வருதுன்னு எல்லாம் ஈஸியா புரிய ஆரம்பிச்சுது. பல பல பாடல்களை கண்ணதாசனே தப்பா எழுதி இருக்காரு. ஆனா பிரபலமான கவிஞர்கள் தப்பு செஞ்சா அது தப்பு லிஸ்ட்ல வராதுன்றதால விட்டுடலாம்.

பிற்காலத்தில் பாட்டுப்போட்டி, கவிதை போட்டில எல்லாம் கலந்துக்கும்போது இந்த யாப்பு இலக்கணம் எனக்கு நிறையவே கை கொடுத்துச்சு. பாரதியார் கவிதைகளை பாடலா பாடும்போது வார்த்தைகள் தவறாமல் இருக்க இந்த எதுகை மோனையும், தாள சந்த யாப்பு மரபும் உதவின மாதிரி வேற எதுவும் உதவலை.

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்னுடைய ரொம்ப ரொம்ப பேவரைட் பாட்டு. பல தருணங்களில் அதை பாடி இருக்கேன். நீயெனதின்னுயிர் கண்ணம்மா வரிக்கு அடுத்த வரி திக்கும்போதெல்லாம் யெ எதுகை தான் கை கொடுத்து, போயின போயின துன்பங்கள்... வாயினிலே அமுதூறுதே... தீயினிலே வரும் ஜோதியே... னு அடுத்தடுத்த வரிகளை நிஜாபகப்படுத்திட்டே இருக்கும். எல்லாமே அந்த யெ, யி எதுகையை வெச்சும், நேர் நிரை நேர் நிரை தாள சந்தமும் தான் கை கொடுத்துச்சு.

யாப்பு படிக்காம கவிதை எழுதரவங்க ஒரு பக்கம் அதை புதுக்கவிதைன்னு எழுதிட்டு இருந்தாலும், அது என்னவோ ஸ்பிலிட் செஞ்சு உடைச்சு போட்ட உரைநடை மாதிரி தான் தோணுது.

இப்போதைக்கு பேஸ்புக்கில் நிறைய மரபு கவிஞர்களை பார்க்க முடியுது. சந்தோஷம். நா.சொக்கன் எல்லாம் மகான். ரொம்ப ரொம்ப கேசுவலான விஷயத்துக்கு எல்லாம் அசால்டா வெண்பா எழுதுராறு. அலட்டிக்கறதே இல்லை. தூய சங்ககால செந்தமிழ் தான் வேணும்னு இல்லை.. பேச்சு மொழி, பிற மொழி சொல்லை கூட அழகா பொருத்தி அட்டகாசமான வெண்பாவை ஜஸ்ட் லைக் தத் அடிச்சு விட்டு அசர வைக்கிறாரு. மிகப்பெரிய ஆச்சரிய போதை இருந்தும் அவரை சந்துச்சு பேசிய அந்த அபூர்வமான அற்புதமான அரை மணி நேரத்தில் எதையும் சொல்ல தோணாமல் அவரை சந்திச்ச ஆச்சரிய பிரமிப்பிலேயே கழிஞ்சு போனது.

இனி வரும் தலைமுறைக்கு தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் யாப்பின் அடிப்படையையும் தெளிவா சொல்லிக்கொடுத்து தமிழை வளர்க்க எல்லோரும் உதவலாம். ஆனா அதுக்கு நமக்கு முதலில் யாப்பு தெரிஞ்சிருக்கணும். யாப்பு தெரிஞ்சா நாமே தமிழை அவ்வளவு ஈடுபாட்டோட ரசிக்க ஆரம்பிச்சிருவோம்.

மெல்ல தமிழ் இனி சாகும்னு இனியும் பிரகடன படுத்திட்டு இருக்காம, யாப்பிலக்கணத்தை ஜஸ்ட் 10 மார்க் விஷயமா மட்டும் பார்த்து சாய்ஸில் விடாம, தமிழ் பாடத்தில் கட்டாய பகுதியா அது இருக்கணும்ன்றது என்னுடைய ஆசை.

நாமெல்லாம் ஆசை மட்டும் தான் பட முடியும்.


Tuesday, June 2, 2015

இளையராஜா

மும்பை

புகழ் பெற்ற ஆர்.டி. பர்மன் அவர்களின் இசைக்கூடம். அவரது இசைக்கலைஞர்கள் தயாரா இருக்கிறார்கள். எல்லோரிடமும் தான் எழுதிய இசைக்குறிப்புகளை கொடுக்கிறார். நமுட்டு சிரிப்புடன் பெற்று கொள்கிறார்கள் எல்லோரும். அவரவர் தங்களது ஹெட்ஃபோனை மாட்டி கொள்கிறார்கள். என்ன வாசிக்க போகிறோம் என்பது அங்கே யாருக்கும் தெரியாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் எத்தனையாவது நொடியில் எந்த இசைக்கருவியில் என்ன சப்தம் எப்படி கொடுக்கவேண்டும் என்பது மட்டும் தான். ஒவ்வொருவரும் அதே போல அந்தந்த நொடியில் அந்தந்த இசை துணுக்கை மட்டும் வாசிக்கிறார்கள். ஒவ்வொருவர் செவியிலும் அவர்களது ஹெட்ஃபோன் வழி பிரவாகிக்கிறது இசை. முதல் பிரிலூடு முடிந்ததும் அனைவரும் சட்டென இசைப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று பலமாக கைதட்டி, தலைதாழ்த்தி வணங்கி பின் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க தொடங்குகிறார்கள். அதே பிரிலூடு பிரவாகம் மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறது. பிரிலூடு முடிந்த இடத்தில் நம் எஸ்.பி.பி தொடங்குகிறார் “சுந்தரி... கண்ணால் ஒரு சேதி...”

தளபதி படத்துக்கான இசை பதிவு அது. வருடம் 1990.

R.D Burman
இந்த சம்பவத்தை எஸ்.பி.பி சொன்னபோது எனக்குள் நானே யோசித்து பார்த்தேன். நான் அவரது அந்த குழுவில் ஒரு வயலின் கலைஞர் எனில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நோட் என்பது “23 ஆம் நொடியில் நா..ண ண. நா...நா..” என்றிருந்தால் அதை மட்டும் தான் நான் வாசிப்பேன். அது போலவே தபேலா, டிரம்ஸ், கிட்டார், புல்லாங்குழல், டிரம்பட், சாக்ஸ் என எல்லா இசைக்கலைஞ்சர்களும் எந்த எந்த இடத்தில் தொடங்கி எப்படி எப்படி வாசித்து எப்போது நிறுத்தவேண்டும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் எல்லோரும் அதை வாசிக்கையில் செவி வழி வரும் பிராவகம் எப்படி இருந்திருக்கும்? மீண்டும் மீண்டும் பல பல முறை இந்த பாடலின் பிரிலூடு கேட்டு கேட்டு பார்த்து வியந்திருக்கிறேன். அத்தனை இசையையும் தன் மனதுக்குள்ளேயே இசைத்து பார்த்து அதற்கான ஒலி குறிப்பை எழுதி எடுத்து வந்து கொடுத்து இசை ஜாம்பவான் ஆர்.டி பர்மனின் இசைக்குழுவையே பிரமிக்க வைத்தார் எனில் எப்பேர்ப்பட்ட இசை ஞானம் அவருக்குள் இருந்திருக்கும் என வியக்காத நாளில்லை.

இளையராஜா

இந்த பெயர் என் பால்யங்களில் என்னோடு உடன் வந்து பழகி என்னை ஆற்றுப்படுத்தி கொண்டிருந்ததை நான் உணர்வதற்கு பல காலம் பிடித்தது. எனக்கு தெரிந்ததெல்லாம் பாடல் மட்டும் தான் அப்போது. பின்னர், இசை, இசைதொகுப்பு என்றெல்லாம் தெரிந்துக்கொண்ட போது மெல்ல உணர ஆரம்பித்து, வயலின் கற்க தொடங்கியபோது பிரமித்து வியந்து ஆச்சரியமடைந்த தருணத்தில் உணர்ந்திருக்கிறேன், இளையராஜாவின் பிரமாண்ட இசை ஞானம்.



பெரும்பாலான இசையமைப்பாளர்கள் ஹார்மோனிய பெட்டியிலோ வயலினிலோ அல்லது வாய்மொழியாகவோ வாசித்து காட்டி, இப்படி இருக்கவேண்டும் இசை என சொல்லுவதை, இளையராஜா மட்டுமே அனைத்து இசை கருவிகளுக்கும் இசை நோட்டாக கொடுக்க தொடங்கியவர். அத்தனை இசைக்கருவிகளையும் அதன் நுணுக்கங்களையும் கற்று தேர்ந்தவர் என்பதற்கு இதை விட என்ன அத்தாட்சி இருந்துவிடபோகிறது

திரை துறையில் அவர் செய்த சாதனைகள், அவரது பிரபலமான பாடல்கள், அதன் வசீகரம் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை பற்றி பிரஸ்தாபிக்கும் திறனோ தகுதியோ எனக்கு இல்லை. ஆனால் அவரது பாடல்கள் கேட்க நேர்கையிலெல்லாம் எனக்குள் ஏற்பட்ட ஆச்சரியங்களும் கேள்விகளும் அலாதியானவை

“பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”வில் பிற்சேர்க்கையாக அவர் சேர்த்த கைத்தாட்டலாகட்டும், “பருவமே புதிய பாடல் பாடு”வில் வைத்த ஓட்ட சத்தமாகட்டும், “பூமாலையே தோள் சேரவா”வில் முதல் நொடியிலிருந்து தொடங்கும் அதிவேக உச்சஸ்தானி வயலின் பெருமழையாகட்டும், “செனோ ரீட்டா” பாடலின் துவக்க இசையாகட்டும்.. இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஏதேனும் ஒரு சிறப்பை நாம் பிரமித்துக்கொண்டிருப்பதற்கு வைத்து விட்டு இருக்கிறார். அதை ஆராய்ந்து தேடி அனுபவித்து லயித்து பிரமித்து நெகிழ்வதற்கான காலம் போதாது தான்.

கர்நாடிக் முதல் கானா வரை, ஃபோக் முதல் ஃபியூஷன் வரை, ராப் முதல் ராக் வரை, மெலடி முதல் மெடாஃபார்ம் இசை வரை அவர் இசைக்காத ராகமில்லை. அதேபோல 35எம்‌எம் கருப்பு வெள்ளை படம் தொடங்கி இப்போதைய கியூப் டிஜிட்டல் வரை, மோனோ முதல் டால்பி அட்மோஸ் ரிக்கார்டிங் வரை, ரிக்கார்ட் தட்டு முதல் புளூ ரே பிளேயர் வரை அனைத்து டெக்னாலஜி படங்களிலும் இசை அமைத்திருக்கிறார் என்பது மற்றுமொரு சிறப்பு. இன்னுமொரு பெருமையாக ஒரு மனிதனின் எல்லா காலகட்டத்திற்கும், எல்லா உணர்வுக்கும், எல்லா சூழலுக்குமான பாடல்களை அவர் தந்திருக்கிறார் என்பது.

அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பல முறை எதேச்சையாக எதிர்படுவது காண்பது என்று இருந்திருக்கிறேன்.

அவரது இசை மீதான தவம் வியக்கவைத்திருக்கிறது. ஒரு நேரடி இசை நிகழ்ச்சி. ஆர்கேஷ்டிராவில் ஒரு வயலின் மட்டும் பிசிறு தட்டுகிறது. உடனே பாடலை நிறுத்த சொல்லி குறிப்பிட்ட நபரை கைகாட்டி விளக்கம் கேட்கிறார். நாங்களெல்லாம் பார்வையாளராக உட்கார்ந்திருக்கிறோம். அத்தனை இசைக்கருவிகளில் வயலின் மட்டும், அத்தனை வயலின் கலைஞர்களில் அந்த இசை கலைஞர் மட்டும் பிழை செய்தார் என்பதை நொடிக்கும் குறைவான தருணத்தில் கண்டறிவது என்றால், எத்தனை உன்னிப்பான கவனமும், இசையில் சுருதியுடன் எத்தனை ஞானமும் இருந்திருக்கவேண்டும் என்று பிரமிக்காத நாளில்லை.

அதனால் தானோ என்னவோ கமலுக்கு கலைஞானி என பெயரிட்ட அதே முத்தமிழ் வித்தகர் இவருக்கு இசைஞானி என்று நிலைத்த பெரும் பட்டம் அளித்தார்.

எதையும் கற்றுக்கொள்வதில் அவருக்கிருந்த ஆர்வம், புதிய புதிய இசை நுணுக்கங்களை பரீட்சித்து பார்ப்பதில் இருந்த ஆசை ஆகியவை தான் அவரை அரை நூற்றாண்டு காலமாக உயிர்ப்போடு வைத்திருக்கவேண்டும். எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தார்கள், எத்தனையோ இசை உச்சங்களை தந்தார்கள், பின் சென்றார்கள், எனினும் இப்போதும் நிலையாய் இருப்பதும் புதிதாய் இருப்பதும் இளையராஜா ஒருவர் மட்டும் தான் எனபதே போதுமானதாக இருக்கிறது அவரது திறனுக்கு

சிற்சில பாடல்களில் அவர் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் கொண்டு சேர்த்திருக்கும் சில நகாசு வேலைகள், விசித்திரமான இசைகள் தான் நம்மை அத்தனை ஆர்வமாக அவரது அடுத்த பாடலை தேட வைக்கிறது. சில தபலா இசை துணுக்குகள், எம்.எஸ்.வி கம்போசிஷனை விட அருமையாக இருக்கும்.

வயலின் ஃபுளூட் இவைகளை வைத்து கொண்டு ஒவ்வொரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் உச்சங்கள் அலாதியானவை. பியானோவும் சில பாடல்களில் தன்னை நிரூபித்து இருக்கிறது.

அவரது ஞானத்துக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரத்தை நாம் முறையாக வழங்கவில்லையோ என்றொரு குறை எனக்குள் இருக்கிறது. கலைமாமணி, பத்ம விபூஷன் தவிர நான்கு தேசிய விருதுகள் (மலையாளம் -1, தமிழ் -1, தெலுங்கு 2) நான்கு ஃபிலிம்பேர் விருதுகள் (தெலுங்கு -1, தமிழ் -1, மலையாளம் -2), கேரள அரசு விருதுகள் 3, தமிழக அரசு விருதுகள் 6 மட்டும் தான் அவருக்கான அங்கீகாரம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. கேரளாவும் ஆந்திராவும் கொண்டாடிய அளவுக்கு கூட தமிழகம் அவரை கொண்டாடவில்லை என்பது கூட ஓர் ஆச்சரியம் தான் எனக்கு.

1976 முதல் இன்றுவரை தொடரும் அவரது இசை பெரும் பயணத்தில் 1977, 1980, 1981, 1988, 1989, 2009 ஆகிய வருடங்களில் தான் அவருக்கு தமிழக அரசு விருது கிடைத்திருக்கிறது. அதிலும் 1989 க்கு பின் மிக நீண்ட இடைவெளி. இத்தனைக்கும் 1990 களில் அவர் உச்சகட்ட இசை பிரவாகங்களை கொடுத்தவர்.

அவரது பாடல்கள் ஒரு பிரமிப்பு என்றால் அவரது பின்னணி இசை தொகுப்பு மற்றும் இசை கலவை என்பது மற்றுமொரு பிரமிப்பு. முள்ளும் மலரும் போன்ற பல படங்களில் சில காட்சிகளின் வீரியத்தை அவரது இசையே நமக்கு உணர்த்தும் சக்தி கொண்டது. வசனங்களுக்கு எல்லாம் அங்கே வேலையே இல்லை.


கமல் ஒரு முறை சொன்னார், அவரது இசையில் மட்டும் அல்ல, தேவையான இடத்தில் அவர் வைக்கும் மௌனம் கூட பேரிசை தான் என்று. பல படங்களில் அதை கண்டுணர்ந்ததுண்டு. எங்கே இசைக்கவேண்டும் எங்கே அமைதி வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்தவர் அவர். அதேபோல இசையில் எந்த இன்ஸ்ட்ருமெண்ட் எந்த அளவு ஒலி இருக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறுதி இடக்கூடியவர். அது தான் நாம் செவிகளை உறுத்தாத பாடல்களாக நீடித்து நிற்க வழி செய்கிறது. வேறு சில இசையமைப்பாளர்களின்அதி அற்புதமான பாடல்கள் கூட இந்த இசை ஒலி அளவு வித்தியாசத்தாலேயே அடிபட்டு போனதுண்டு.

மிக சிறந்த ரசிகராக இருந்தாலோழிய மிக சிறந்த இசையமைப்பாளர் ஆக முடியாது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

எல்லா இரவுகளையும் நிறைத்து வைக்கும் அவரது இசையை போலவே அவரும் தமிழகத்தில் சாஸ்வதம்.

அவர் இசையில் எஸ்.பி.பாடிய இந்த வரிகள் தான் எத்தனை அர்த்தம் நிறைந்தது...

“எங்கிருந்தோ... இங்கு வந்தேன்...
இசையினிலே.. எனை மறந்தேன்...
இறைவன் சபையில் கலைஞன் நான்...”




Monday, May 27, 2013

அரசு பள்ளியும் ஆங்கில கல்வியும்


 
மீபத்தில் தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து ஆங்கில வழி கல்வியும் வழங்கப்படவேண்டும்.

இந்த அறிவிப்பு வெளியானதும் திமுக தலைவர் தனது முதலாவது கண்டன அறிக்கையை வெளியிட்டு அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தமிழுணர்வாளர்களும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்!

என்னை பொறுத்தவரை அரசின் இந்த அறிவிப்பில் எதிர்ப்பதற்கு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியோடு வரவேற்கவேண்டிய ஒரு அறிவிப்பு இது.

இந்த திட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1982ல் கொண்டு வந்த திட்டம் தான். குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் மட்டும் இருக்கும் இந்த திட்டம் இனி அனைத்து அரசு பள்ளிகளுக்கும், மாநகராட்சி/நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டு இருக்கிறது.

1985 ம் ஆண்டு வரை (எனது ஐந்தாம் வகுப்பு வரை) நான் ஆங்கிலவழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் படித்து வந்தேன். அப்பாவின் வேலை பிரச்சனைகாரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் 6 ம் வகுப்பிலிருந்து தனியார் பள்ளியில் தொடர்ந்து பயில முடியாத நிலை.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் எனது 6 ம் வகுப்பு தொடர்ந்தது. அதுவும் ஆங்கில வழியில். அப்போதே அந்த வசதி இருந்ததை சுட்டிக்காட்டவே இந்த சம்பவத்தை சொல்கிறேன்.

 

குறைந்த கட்டணத்தில், அரசு பள்ளியில் தரமான ஆங்கில கல்வி பெற்றதன் பயன் தான் எனது இன்றைய வளர்ச்சி என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு!

ஆங்கிலவழி கல்வி ஏன்?

இந்தியா மிக வேகமாக வளரும் நாடு. பல்வேறு நாடுகளுடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வர்த்தக தொடர்புடையவர்கள் தான் நாம் எல்லோருமே. எனவே எந்த ஒரு விஷயத்துக்கும் நமக்கு ஆங்கில அறிவு அவசியமாகிவிட்டது.

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செல்ஃபோன் வாங்கினாலே அதன் வழிகாட்டி புத்தகத்தை படித்தறிந்துகொள்ள ஆங்கிலம் தேவை. தமிழகத்துக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கும் புழுக்கள் அல்ல நாம். பிற மாநிலங்கள் பயணிக்கையிலும், பிற நாடுகள் கடக்கையிலும் நமக்கு ஆங்கிலம் அவசியம் ஆகிறது.

ஆங்கில அறிவு என்பது கிட்டத்தட்ட அடிப்படை தகுதி என்கிற அளவிற்கு இன்று ஆகிவிட்டது. எந்த ஒரு தகவலும் ஆங்கிலம் இன்றி வருவதில்லை.

தாய்மொழியிலேயே பயின்றால் என்ன குறை?

ஒரு சாரார் தங்களது வழக்கமான குதர்க்க கேள்விகளை முன்வைத்து வாதாடுவது உண்டு. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் இல்லை. சீனா போன்ற நாடுகள் முழுமையாக தாய்மொழி கல்வி தானே அமல்படுத்தி இருக்கின்றன? அவர்கள் வளரவில்லையா? என்றொரு கேள்வி இணையதமிழுணர்வாளர்களால் சுற்றுக்கு விடப்பட்டு இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமான கேள்வி போல தான் தோன்றும்!

சீனா மிக பெரிய நாடு. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி என்பதால் பரந்து விரிந்த அந்த நாட்டின் எந்த மூலை முடுக்குக்கு சென்றாலும் ஒரு சீனன் தகவல் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாமல் முழு ஆயுள்காலமும் வாழ்ந்துவிட முடியும். வெளிநாடு செல்ல நேர்கையில் மட்டும் தான் அவனுக்கு சிக்கல்.

இந்தியா அப்படி அல்ல. இந்தியா அடிப்படையில் ஒரு நாடு அல்ல. இது மாநிலங்களின் கூட்டமைப்பு. இங்கு வழக்கத்தில் இருக்கும் மொழிகள் 200க்கும் மேல். அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 21.

நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால், தமிழகம் புதுவை தவிர பிற மாநிலங்களுக்கு செல்கையில் நமக்கு நம் தாய்மொழியால் எந்த உபயோகமும் இல்லை. இதே நிலை தான் மற்ற நாடுகளுக்கு பயணிக்கையிலும்.

தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்து புதைந்துகொள்ளும் மனிதர்களுக்கும், தமிழகம் தவிர பிற மாநிலங்களோடோ, பிற நாடுகளோடோ எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ளாத மனிதர்களுக்கும் வேண்டுமானால் தமிழ் போதுமானதாக இருக்கும். ஆனால் பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆகியவற்றுடன் தொழில், பயண தொடர்பு கொண்டவர்களுக்கு தமிழ் போதாது.

இதை இன்னும் கொஞ்சம் சுருக்கி பார்த்தால், இந்தியாவில் பயணிக்க ஹிந்தியும், பிற நாடுகளுடன் தொடர்புக்கு ஆங்கிலமும் என்றொரு மும்மொழி கொள்கைக்கு முன்னர் இந்திய அரசு முயற்சி செய்தது நினைவுக்கு வரலாம். ஒருவேளை அந்த கொள்கை வென்றிருந்தால், இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் தத்தம் தாய்மொழியோடு, ஆங்கிலம் ஹிந்தி ஆகிய பொதுமொழியையும் கற்று இந்தியாவுக்கு என்று ஹிந்தியும் பிற நாடுகளுக்கு என்று ஆங்கிலமும் என வழக்கத்திற்கு வந்திருக்கும். இது கிட்டத்தட்ட சீனாவை உதாரணம் காட்டும் ‘தமிழுணர்வாளர்களின்’ கருத்துக்கு உடன்பாடானதாக இருந்திருக்கும்.

ஆனால், நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இரு மொழி கொள்கையே போதும் என உறுதியாக இருந்ததால், மாநிலத்துக்கு தாய்மொழி என்றும், பிற மாநிலங்கள், பிற நாடுகள் என அனைத்துக்கும் பொதுவாக ஆங்கிலம் என்றும் இன்றைக்கு முடிவாகி இருக்கிறது.

இப்போது என்ன அவசியம்?

இதுவரை தமிழகம் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த ஒற்றை மாகாணம். ஆனால் இப்போதோ உலக வரைபடத்தில் மிக முக்கியமான மாகாணம். தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி, உயர் தகுதி இயந்திர உற்பத்தி, என பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்குள்ளவர்களுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தொழில்வாய்ப்புக்கு இப்போதே ஆச்சாரம் இட்டுக்கொண்டிருக்கும் பகுதி.

நம் மக்களுக்கான வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாமும் இது போன்ற பெரும் தொழில் நிறுவனங்களை நம்பி என ஆகிவரும் சூழலில், உலகோடு ஒத்திசைந்து வாழவேண்டும் எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசர அவசிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் அனைவரும் ஆங்கில கல்வி பயின்று அதில் தக்க தேர்ச்சியும் பெறவேண்டும், அது தான் இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் என்பதை இப்போதைய அரசு உணர்ந்து இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

எதிர்கால கல்வி வளர்ச்சி?

ஆங்கிலம் என்பது அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் மட்டுமே பயில முடியும் என்கிற நிலையில் இருந்ததால், நம் மக்களில் 63% பேர் இன்னமும் அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகிறார்கள். இன்றைக்கு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் திறமை இருக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததால் தான் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறோம் என்கிற ஆணவத்திலேயே பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.

அரசே அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில கல்வி அளிப்பதன் மூலம் இனி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவும், தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பில் தன்னம்பிக்கையுடன் போட்டியிடவும் ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்படும்.

ஆங்கில கல்வி அறிவு இல்லாததால் மேல்படிப்பு படிக்க தயங்கி 12ம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டிய நிலை மாறி அனைவருமே பட்டதாரியாகவும் இது அடிப்படை வாய்ப்பாக அமையும்.

இதன் மூலம் கல்வி வளர்ச்சியும் மேம்படும். தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கமும் மட்டுப்படும். ஊரக மாணவர்களும் நகர மாணவர்களுக்கு நிகரான கல்வியறிவு பெறுவார்கள்.

இப்படியான ஒரு திட்டத்தை கண்டிக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, நம் மாணவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வளர்ச்சியடைய முடியாமல் செய்ய விரும்பும் சிறுமதியாளர்கள் என்றும் முத்திரை குத்தப்படவேண்டியவர்களாகின்றார்கள்.

*** **** **** ****

பிற்சேர்க்கை : 17 ஆண்டுகளுக்கு பின் என் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்த நினைவலைகள். புகைப்பட தொகுப்பு http://www.facebook.com/media/set/?set=a.1210434535992.2034092.1082597225&type=3

Printfriendly