Thursday, October 6, 2016

வதந்தி எனப்படுவது யாதெனின்

மூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கைது நடவடிக்கை என தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலர் அறிவித்து இருப்பது தான் ரெண்டு நாளா ஹாட் டாபிக்.. அதே சமூக வலைத்தளங்களில்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் (hereinafter referred as “அம்மா அவர்கள்”) உடல்நலம் குன்றி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து பலவாறாக கிளம்பிவரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் போலீஸ் இதை அறிவித்து இருக்கிறது. இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 1 வெளிநாட்டு வாழ் இந்தியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிலர் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 50க்கும் மேற்பட்டோரின் சமூக வலை தள நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது என தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

முதலில் வதந்தி என்பது என்ன?

வதந்தி என்பதற்கு இந்திய சட்டத்தில் தெளிவான வரைமுறை எதுவும் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தமிழக போலீஸ் கூட, கலவரத்தை தூண்டுதல், வன்முறையை விதைத்தல் என்றெல்லாம் வழக்கை பதிவு செய்கிறது என்று நினைக்கிறேன்.

அதிகாரப்பூரவமற்ற தகவல்கள் எல்லாமே வதந்தி தான் என்பது இப்போதைய தமிழக அரசின் நிலைப்பாடாக தெரிகிறது. அது யூகங்களாகவே இருந்தாலும் அது வதந்தி என்றே வகைப்படுத்தப்படுகிறது. யூகத்துக்கும் வதந்திக்கும் என்ன வித்தியாசம்? ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போமா?

மேகம் கருக்குது, சில்லுனு காத்து அடிக்குது, வானம் இருண்டுட்டு வருது... இதை எல்லாம் வெச்சு இன்னைக்கு மழை வரும்னு நினைக்கிறேன்னு நீங்க சொன்னா அது யூகம். அதுவே.. அந்தப்பக்கம் எங்கேயோ பேய் மழை பிச்சு உதறுது.. அதனால் தான் இங்கே இப்படின்னு சொன்னீங்கன்னா அது வதந்தி. ஏனெனில் அந்த பக்கம் எங்கேயோ பேய் மழை பிச்சு உதறுதுன்றது உங்களுக்கு அதிகாரப்பூர்வமா தெரியாது. இதையே, பேய் மழை பிச்சு உதறிட்டிருக்கும்னு நினைக்கிறேன்னா அது யூகம்.  வதந்திக்கும் யூகத்துக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு தான்.

இந்த வரைமுறை படி பார்த்தா வானிலை அறிக்கை, ஷேர் மார்க்கெட் டிப்ஸ், ரயில்வே அறிவிப்புக்கள், என பல பல அரசு தகவல்களே கூட ஒரு வகையில் வதந்திகள் தான். கட்டாயமா தெரியாத ஒரு விஷயத்தை பகிர்வது வதந்தின்னு சொன்னா எல்லா கோர்ட்டில் நடக்கும் குற்ற வழக்கு விசாரணைகளுமே வதந்தி தான், யார் குற்றவாளின்னு அதிகாரப்பூர்வமா தெரியுற வரைக்கும். காவல் துறை சந்தேகத்தின் பேரில் செய்யும் கைதுகளும் வதந்தி லிஸ்டில் தான் வரும். அவங்களுக்கும் அதிகாரப்பூர்வமா தெரியாது.

வீட்டில் அன்றாடம் நடக்கும் பல நிகழ்வுகளும், பக்கத்து வீட்டு விஷயங்கள் பற்றிய பொரணி பேசுவதும், இன்னைக்கு பாஸ் இன்னும் வரலையே ஒரு வேளை லீவோன்னு நீங்க நினைக்கிறதும் என எல்லாமும் வதந்தி தான். சர்வம் வதந்தி மயம் ஜகத்.

சரி இப்போ அப்படி திடீர்னு வதந்திகளை கட்டுப்படுத்த என்ன அவசியம்?



முதல்வருக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றாங்க. ஆனா என்ன உடம்புக்கு? என்ன சிகிச்சை எதுவும் யாருக்கும் அதிகாரப்பூர்வமா தெளிவா சொல்லலை. ஹாஸ்பிடல் வழங்கும் தினசரி அப்டேட்ஸ் கூட முதலில் ஜுரம்னு தான் சொல்லிச்சு. ஆனா அடுத்தடுத்த பரிமாணங்கள் தான் பல யூகங்களை கிளப்பி விட்டுச்சு. அதாவது ஜுரம் & நீரிழப்புக்கு சிகிச்சைன்னு சொன்னவங்க ரெண்டே நாளில் ஜுரம் குறைஞ்சிடிச்சு, வழக்கமான உணவை உட்கொண்டார், ஓய்வில் இருக்கிறார்னு சொன்னாங்க. அதோட பிரச்சனை முடிஞ்சுது. சிம்பிள். எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க போயிட்டாங்க.  அதுக்கடுத்து சில நாட்களிலேயே அதே ஹாஸ்பிடல் அதிகாரப்பூர்வமாகவே செப்சிஸ் நிபுணர் லண்டன்லருந்து வந்து பரிசோதிச்சார், ரெஸ்பிரெட்டரி சப்போர்ட்டில் இருக்காங்கன்னு எல்லாம் அதிகாரப்பூர்வமாகவே அறிவிச்சதும் இயல்பாகவே மக்கள் மனதில், பல வித கவலைகள் தோன்றும். அந்த கவலைகளை வெளிப்படுத்துவது தான் வதந்தின்னு இப்போ போலீஸ் அதிகாரிகளில் சிலர் சொல்வதாக செய்தி வருகிறது.  ஆக, இந்த வதந்திகளின் ஊற்றுக்கண் அப்போலோ அறிக்கை அன்றி யாதொன்றும் இல்லை.

யூகங்களின் அடர்த்தியை அதிகரிக்க வைத்ததிலும் ஹாஸ்பிடலுக்கு பெரும் பங்கு உள்ளது. இன்ஃபெக்ஷன் வராமல் இருப்பதற்காக தான் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை என சொல்வது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனா அது மாநிலத்தின் தலைவரான ஆளுநருக்கும் பொருந்தும் என்பது தான் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் என பலரையும் சந்திக்க அனுமதிக்கவேயில்லை.  அவ்வளவு ஏன், தமிழக அரசின் சுகாதார அமைச்சர், கட்சியிலேயே இருக்கும் பல மருத்துவ நிபுணர்கள் என யாரையாவது கூட அனுமதித்து இருக்கலாம். அவர்கள் மருத்துவர்கள் என்பதால் எப்படி அங்கே நடந்துகொள்ள வேண்டும் என தெரிந்து இருக்கும். அதுவும் இல்லை.   

ஆனால் அதே சமயத்தில் அரசு அதிகாரப்பூர்வமாகவே முதல்வர் நலமுடன் இருக்கிறார், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார், அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார், 50 பேருந்து நிலையங்களில் வைஃபி சேவைகளை தொடங்கினார்ன்னு எல்லாம் செய்திகள் வெளியிட்டது (ஃபோட்டோ இல்லாம தான்). இன்னொரு பக்கம் இதற்கு நேரெதிர் நிலைப்பாடாக முழு ஓய்வில் இருக்கிறார், ரெஸ்பிரெட்டரி சப்போர்ட்டில் இருக்கிறார், யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என ஹாஸ்பிடல் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.  இப்படி இரண்டு வெவ்வேறு அதிகாரப்பூர்வ செய்திகள் வந்தது தான் அத்தனை குழப்பத்துக்கும் காரணம்.  இதில் அரசு சொன்னது உண்மை என்றால் ஹாஸ்பிடல் சொன்னது வதந்தி. ஹாஸ்பிடல் சொன்னது உண்மை என்றால் அரசு சொன்னது வதந்தி. இந்த இரண்டு வதந்திகளின் பக்கமாக மக்கள் இரு வேறு பிரிவுகளில் பிரிந்து நிற்கிறார்கள். ஆக வதந்தியின் ஊற்றுக்கண் அரசும் ஹாஸ்பிடலும் தான். அரசோ ஹாஸ்பிடலோ ஒரே குரலில் இது தான் உண்மை என சொல்லிவிட்டால் வழக்கம் போல மக்கள் அவரவர் வேலையை பார்த்துவிட்டு போய்விடுவார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்திய அரசியல் சாசனப்படி இப்போது அரசை இயக்கி கொண்டு இருப்பது யார் என்பதை தெரிவிக்கவேண்டிய கடமை அரசின் தலைமை செயலாளருக்கு உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை அரசு அறிவிப்பாக வரவில்லை. ஆளுநரும் இதுவரை யாரையும் பொறுப்பு முதல்வராகவோ மாற்று முதல்வராகவோ நியமிக்கவில்லை. எனவே அம்மா அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஜஸ்ட் ஓய்வில் தான் இருக்கிறார் என்பதை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதற்கு நேரெதிராக தமிழக போலீஸ் இப்போது லாஜீக் இல்லாமல் விடும் மிரட்டல் அறிவிப்புக்கள் தான் முக்கியமான விவாத பொருள்.

சமூக வலைத்தளங்களில் அம்மா அவர்களின் உடல்நிலை பற்றி விவாதித்தால் கைது என்கிற அந்த அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது. அது இருபுறமும் கூரான கத்தி போன்றது. அம்மா அவர்கள் பூரண நலமுடன் இருந்தால் ஹாஸ்பிடல் முன்பு நின்று கொண்டிருக்கும் மொத்த கட்சி தொண்டர்களுமே தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அம்மா அவர்களுக்கு ஒருவேளை உடல் நிலை முழுமையாக குணமடையாமல் இருந்தால் ஆலோசனை நடத்தினார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்றெல்லாம் தவறான தகவல்களை வெளியிட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மீது நடவடிக்கை எடுக்க முடியும். இப்படி பார்த்தாலும் வதந்திகளின் ஊற்றுக்கண் அரசும் கட்சியும் தான். இந்த நிகழ்வுகளை விவாதிக்கும் ஒரு தளமாக மட்டுமே சமூக வலை தளங்கள் இருக்கின்றன என்பது சுய சிந்தனை உள்ள எல்லோருக்கும் எளிதாக புரிவது தான்.

சமூக வலைத்தளங்களில் என்னை போன்ற சாமானியர்கள் மட்டுமல்லாமல் மெத்த படித்த அறிவாளிகளும், பல துறை வல்லுனர்களும் இருப்பதால், ஹாஸ்பிடல் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் சாராம்சத்தை அவர்கள் விரிவாக மொழிபெயர்த்து எங்களை போன்றோருக்கெல்லாம் புரியும்படி சொல்கிறார்கள். உதாரணமாக செப்சிஸ் நிபுணர் வந்து பரிசோதித்தார் என ஹாஸ்பிடல் சொன்னால், செப்சிஸ் என்பது என்ன என்பதை சமூக வலை தளம் வாயிலாக நிபுணர்கள் புரிய வைக்கிறார்கள். இதற்கு புரியவைப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு முதல் தகவல்களை வெளியிடுவோரிடம் கொஞ்சம் கவனமாக அறிக்கைகளை வெளியிட சொல்லியிருக்கவேண்டும். அது தான் பொறுப்பான அரசும் போலீசும் செய்திருக்கக்கூடிய ஆகச்சிறந்த நடவடிக்கை.

அம்மா அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்கள் என சொல்வது எந்த அளவுக்கு வதந்தியோ அதே அளவு வதந்தி தான் அம்மா அவர்கள் மிக்க நலமுடன் இயல்பாக இருக்கிறார்கள் என்பதும். இரண்டுமே அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்கள் அல்ல. சமூக வலைத்தளங்களில் வரும் யூகங்களும், அதிமுக கட்சி நிர்வாகிகளே வெளியிடும் தகவல்களும், அரசு அதிகாரிகள் சொல்லும் செய்திகளும், ஹாஸ்பிடலின் தினசரி அறிக்கைகளும் அந்த குழப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. அதனால் தான் பல கட்சி தலைவர்களும் கூட முதல்வர் உடல்நிலை குறித்து நம்பகமான தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

மற்றபடி கைது நடவடிக்கை எல்லாம், மேலே சொன்ன காரணங்களால் சட்டப்படி செல்லாது. ஏனெனில் அதிமுக கட்சியினருக்கு கூட அம்மா அவர்களின் இப்போதைய நிலை என்ன என்பது தெளிவாக தெரியாது. வேறு வழியில்லாமல் தான் அவர்களும் எல்லோரையும் மிரட்டி பணியவைக்கவேண்டி இருக்கிறதே தவிர, தீவிர அம்மா விசுவாசி கூட எல்லோரிடமும் என்ன விவாதித்து கொண்டு இருக்கிறானோ அதே தான் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

சமூக வலைத்தளம் என்பது அஃப்டர் ஆல் ஒரு டிஸ்கஷன் ஏரியா தானே?

நல்லவேளையாக உயர்நீதிமன்றம் இன்றைக்கு இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

அம்மா அவர்களின் உடல் நிலை குறித்த அறிக்கையையும், அரசு நிர்வாகம் குறித்த அறிக்கையையும் இன்றைக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அரசு அந்த அறிக்கைகளை இன்று தாக்கல் செய்யும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இது தான் விஷயம் என தெரியவந்துவிட்டால் வந்தந்திகள் / யூகங்கள் / ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் உடனடியாக நின்று விடும். இதை முன்பே தமிழக அரசும் அதிமுகவும் செய்திருக்கவேண்டும். ஏனோ இதுவரை செய்யவில்லை. இன்று அதை நீதிமன்றம் செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

விரைவில் அம்மா அவர்கள் நலம் பெற்று குணமடைந்து தமிழகம் இப்போதிருக்கும் சில இக்கட்டான நிலைகளை (காவிரி, ஜி.எஸ்.டி...) விரைவில் சரிசெய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து மாநிலத்தை இயல்பான நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது தான் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மன வேண்டுதல். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சி தலைவர்களும் (கலைஞர் உட்பட) கூட அவர் நலம் பெற்று விரைவில் வரவேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே அவர் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலாக தான் இருக்கிறது. அரசும் ஹாஸ்பிடலும் விடும் முரண்பாடான அறிக்கைகளால் தான் மக்கள் இருவேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அரசும் உயர்நீதிமன்றமும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறேன்.



Wednesday, September 7, 2016

சிறுவாணி

சூப்பர் ஸ்டார் நடிச்ச அதிசய பிறவி படத்துல வரும் தானந்தன கும்மி கொட்டி பாட்டுல ஒரு வரி வரும்.. “சிறுவாணி கெண்டைய போல சொக்குது கண் ராசி”ன்னு.. ஆனா இப்ப சமீபகாலமா சிறுவாணி கெண்டையை விட சிறுவாணி சண்டை தான் ஃபேமசு ஆயிருச்சு.  இது இன்னைக்கு நேத்து சண்டை இல்லை.. கால காலமான சண்டை..

வீட்டுல கொசுவர்த்தி சுருள் இருந்தா எடுத்து உங்க முகத்துக்கு முன்னாடி பிடிச்சுக்கோங்க.. நாம இப்ப சிறுவாணியின் ஃபிளாஷ் பேக் கதைக்கு போறோம்.

ஃபிளாஷ் பேக்

அது 1889 ஆம் ஆண்டு. கோவையை சேர்ந்த திரு S.Pசிம்முலு நாய்டு ஒரு காங்கிரஸ்காரர். பத்திரிகையாளரும் கூட. அவர் அடிக்கடி வெள்ளியங்கிரி மலைக்கு அங்கிருக்கும் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவர். யானை, சிறுத்தை, அட்டைப்பூச்சி என பல பல இம்சைகள் இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாம ரெகுலரா மலைக்கு போய் வரும் வழக்கம் உடையவர். அந்த வெள்ளியங்கிரி மலை மேல நின்னு பார்க்கும்போதெல்லாம் தூரத்தில் தெரியும் முத்திக்குளம் அருவியை பார்த்துட்டே இருப்பது அவரது வழக்கம். வருஷம் பூரா எல்லா சீசனிலேயும் ஆர்ப்பரித்து கொட்டும் அந்த அருவி அவருக்கு ஆச்சரியமா இருந்தது. அந்த தண்ணியை மட்டும் கோவைக்கு கொண்டு வர முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு அவர் பல தடவை நினைச்சிருக்காரு. அப்படி எல்லா சீசனிலேயும் தண்ணீர் வருதான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே வருஷத்தில் பல முறை அவர் வெள்ளியங்கிரி மலைக்கு போயிட்டு வந்தாராம் .
 
Mukthi Falls (Thanks: The Hindu)
1889 ஆம் வருஷம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முக்திக்குளம் அருவியிலிருந்து கோவைக்கு நீர் கொண்டு வருவதை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தி அவர் ஐடியாவை விளக்கினாரு. அந்த முக்திக்குளம் அருவி நீருடன், பாம்பாறு, பாட்டியாறு ஆகிய நதிகளின் நீரும் சேர்ந்து தான் சிறுவாணி நதியா அங்கே ஒடிட்டு இருந்தது. அந்த நதியில் இருந்து நீரை எப்படியாவது மலைகளை குடைஞ்சு இங்கிட்டு கொண்டு வந்து நொய்யல் நதியோட சேர்த்து விடணும்ன்றது தான் ஐடியா.

ஆனா நிதி பற்றாக்குறை காரணமா அந்த திட்டம் அப்போது தொடங்கப்படலை.  திட்டம் பெண்டிங்.

1913 ஆம் வருஷம்.

கோவையின் மாநகராட்சி கவுன்சிலராகவும் பின்னர் சேர்மேனாகவும் இருந்த திரு C.S ரத்தின சபாபதி முதலியார் (இவர் பெயரில் தான் இப்போது R S புரம் பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது – ரத்தின சபாபதி புரம்) சிறுவாணி திட்டத்தை தன் கையில் எடுத்தாரு. அந்த தண்ணீரை கோவைக்கு கொண்டு வருவதற்காக ‘The South Indian Railway Company’ எனும் நிறுவனத்துக்கிட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனா அவங்க என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு, நீலகிரி மாவட்டத்துல இப்போதிருக்கும் குந்தா பைக்காரா நீர் மின் திட்டங்களை செயல்படுத்த போயிட்டாங்க. மீண்டும் திட்டம் பெண்டிங்.

ஆனா ரத்தின சபாபதி முதலியாரின் இடை விடா முயற்சியால், 1929 ஆம் வருஷம் ஏப்ரல் 26 ஆம் தேதி சிறுவாணி நீர் கோவைக்கு குடிநீரா சப்ளை செய்யப்பட்டது. மொத்தம் 110 குடிநீர் குழாய்கள் தான் அப்போது இருந்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி நதி முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது. அதோடு கோவைக்கான நீர் ஆதாரம் பணால்.

1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் கோவையின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு சின்ன செக் டேம் கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.
 
Siruvani Check Dam
திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் வருஷம் சிறுவாணி அணை திறக்கப்பட்டது. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி, கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது ரொம்ப முக்கியமான விஷயம்.. பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் விஷயங்களுக்கு எல்லாம் இதை மனதில் வைத்து வாசிக்க வேண்டி இருக்கும்.

இப்போதைய பிரச்சனை:

சரி.. இப்போ என்ன திடீர் பிரச்சனைன்னு தானே அடுத்த கேள்வி? அதையும் பார்க்கலாம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 218 tmc நீரை திறந்துவிட்டு அதன் மூலம் தமிழகத்துக்கு 205 tmc நீரும், புதுவை மாநிலத்துக்கு 7 tmc நீரும் கேரள மாநிலத்துக்கு 6 tmc நீரும் கொடுக்கணும். அந்த தீர்ப்பை கர்நாடகம் மதிக்கலைன்னு தமிழகம் புதுவை மாநிலங்கள் பல காலமா  போராடிட்டு வருது என்பது நமக்கு தெரியும். அதன் ஒரு பகுதியா தான் கேரளா இந்த அணை கட்டுது. என்ன கொழப்பமா இருக்கா?

தமிழகம் கர்நாடகாவில் இருந்து கிடைக்கும் நீரில் இதுவரை கேரளாவுக்கு உரிய பங்கை கொடுக்கலை. இது தொடர்பா கேரளம் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால், கேரளாவின் 6 tmc நீரை தமிழகத்திடமிருந்து எடுத்துக்கலாம்னு நடுவர் மன்றம் மூலமா அனுமதி வாங்கிட்டாங்க. அதாவது காவிரியின் நீர் வரத்தில் பவானியின் பங்கும் உள்ளது. அதே மாதிரி பவானியின் நீர் வரத்தில் கேரளாவின் பங்கும் உள்ளது. அதனால் மேல் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியின் அருகிலுள்ள சோலையூர் & அகழி பகுதிகளில் சிறுவாணிக்கு குறுக்கே ஒரு சின்ன செக் டேமை கட்டி 6 tmc நீரை எடுத்துக்கறது தான் கேரளாவின் திட்டம். இதன் மூலம் கேரளாவின் அட்டப்பாடி அகழி சோலையூர் மன்னார்க்காடு பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். (இப்போ அந்த பகுதிகள் வறட்சியான பகுதிகளா இருக்கு. அதிலும் அட்டப்பாடி மக்களின் வாழ்க்கை நிலை. கொடுமையிலும் பெரும் கொடுமை..! அதெல்லாம் தனியா இன்னொரு பதிவு எழுத வேண்டிய அளவுக்கு விஷயம் உள்ள கட்டுரை).

இந்த சின்ன செக் டேம் மூலம் பவானிக்கு போகும் நீரில் 6 tmc தடுக்க முடியும், அதாவது பவானி மூலம் காவிரிக்கு போகும் 6 tmc. அப்படியாக காவிரியிலிருந்து கேரளாவிற்கு சட்டப்படியா கிடைக்க வேண்டிய நீர் கிடைச்சிரும். இது தான் ஐடியாவின் சுருக்கம். இது சட்டப்படியும், நியாயப்படியும், காவிரி நடுவர் மன்றத்தின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் சரி தான். இதை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை.

கேரளா அணை கட்டுவதா சொல்லப்படும் இடம் என்பது கேரள பகுதிக்குள்ளேயே தான், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திடம் அணை கட்ட அனுமதி கேட்கனும்ன்றது கட்டாயமில்லை. (இருமாநிலத்துக்கு இடையிலான நதியான பவானியில் நாம் சில அணைகள் கட்டி இருக்கிறோம், எதற்கும் கேரளாவின் அனுமதி கேட்கவில்லை என்பதை ஒரு ஓரமா நினைவில் வெச்சுக்கோங்க). 

என்றாலும் கூட, அணை கட்டும் பகுதி தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருப்பதால், தார்மீக அடிப்படையில் தானாக முன்வந்து தமிழகத்துக்கு கடிதம் எழுதி நாங்க இப்படி அணை கட்ட போறோம். இதில் உங்களுக்கு எதுனா ஆட்சேபனை இருக்கான்னு கேட்டுச்சு கேரளா.

உங்களுக்கே தெரியுமே? தமிழகத்தில் அரசு செம்ம தூக்கத்தில் இருப்பதால் அதற்கு பதில் எதுவும் கொடுக்கலை. பல நினைவூட்டல் கடிதங்கள் (அதாங்க ரிமைண்டர்) அனுப்பியும்  எந்த பதிலும் வரலை. இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போச்சு கேரளா. மத்திய அரசும் பல கடிதங்கள் அனுப்பிச்சுச்சு. அதுக்கும் பதில் இல்லை.

கடைசியா, கடந்த மே மாசம் 4 ஆம் தேதி கேரள கூடுதல் முதன்மை செயலாளர் தமிழகத்துக்கு கடிதம் எழுதி, ஜூலை மாசத்துக்குள் பதில் வேணும்னு கேட்டாரு. ம்ஹூம்.. நாம எந்த பதிலையும் கொடுக்கலையே.

ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் மத்திய நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழு கூட்டம் கூடிச்சு. சிறுவாணி விவகாரத்தில் உள்ள தற்போதைய நிலைமைய ஆராய்ந்து, தமிழகம் இத்தனை நாளா பதில் அனுப்பலைன்னா அவங்களுக்கு அங்கே அணை கட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு அர்த்தம்னு சொல்லி (யெஸ்... தட் மௌனம் சம்மதம் மொமெண்ட்) கேரளா அங்கே அணை கட்டிக்கலாம்னு அனுமதி கொடுத்துச்சு.

அப்பவும் தமிழக அரசு சைலன்ட் மோடில் தான் இருந்துச்சு.

விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் விஷயத்தை கையில் எடுத்து போராட தொடங்கினப்பத்தான் (அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் வருவதும் சட்டுனு ஞாபகத்துக்கு வந்து?) தமிழக அரசு மத்திய அரசுக்கு திடீர்னு ஒரு கடிதம் அனுப்பி இருக்கு. அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கன்னு.


நமக்கு ஆட்சேபனை இருக்குனு ஒரு கடிதத்தை ஜூன் மாசமே அனுப்பி இருந்தால் அணை கட்ட மத்திய அரசு அனுமதியே கொடுத்திருக்க மாட்டாங்களேன்னு லாஜிக்கா சிந்திக்கிற திறன் நமக்கு இல்லாததால், எல்லோரையும் போல மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அதிரடி கடிதத்தை ஆராதிச்சபடி ஒவ்வொரு நாளையும் கழிச்சுட்டு இருக்க வேண்டியது தான். நான் அப்படி தான் இருக்கிறேன். நீங்க?

Reference:




Saturday, August 6, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3

ன் முந்தைய பதிவுகளில் சொன்னது போல எல்லா சிக்கல்களையும் கடந்து ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும்பொழுது எப்படி இருக்கும்?

ஜி.எஸ்.டி என்பது முதலில் ஒரு முனை வரியாக கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டு இப்போது மும்முனை வரியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இப்போது இருக்கும் பல பல வரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே வரி விகிதம் ஆனால் மூன்று வகைகளில் விதிக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு CGST (இப்போதிருக்கும் சென்டிரல் எக்ஸைஸ் போல) மாநிலங்களுக்குள்ளே நடக்கும் பரிமாற்றங்களுக்கு SGST (இப்போதிருக்கும் VAT போல) மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு IGST (இப்போதிருக்கும் CST போல) கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் எல்லோரும் சிலாகிக்கின்ற அளவுக்கு என்ன பெரிய சீர் திருத்தம் இருக்க போகிறது? ஜஸ்ட் பெயர் மாற்றம் தானே செய்திருக்கிறார்கள் என பல பல பொருளாதார அதிகாரிகளே கூட என்னிடம் கேட்டதுண்டு. ஆனால் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது மிக பெரிய அளவிலான வரி சீர் திருத்தம் தான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கான வருவாய் வரும்படிக்கான அமுத சுரபியும் கூட. (ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால்)

இப்போது இருக்கும் முறைப்படி ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வரி விகிதம் இருக்கிறது. அதாவது எக்ஸைஸ் 12.5%; வாட் (பொதுவாக) 5% & 14.5%; CST (பொதுவாக) 5% & 14.5%; CST (C Form அடிப்படையிலான வியாபாரங்களுக்கு) 2% என இருக்கிறது. இனிமேல் இவை எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம். அதாவது காங்கிரஸ் கேட்டபடி 18% அல்லது ஜெட்லி சொல்வது போல 27%. எல்லா பரிமாற்றத்துக்கும் ஒரே வரி தான்.

எதற்காக 18% வரி என ஒரு கேள்வி வருதுல்ல? இப்போதிருக்கும் எக்ஸைஸ் 12.5% & வாட் 5% சேர்த்து வரும் 17.5% வரியை ரவுண்ட் ஆக்கி தான் 18% வரி நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் 12.5% + 14.5% சேர்த்து 27% வரை வரி விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் வரி விகிதத்தை எக்கச்சக்கச்சக்கமாக ஏற்றி இருப்பது போல தோற்றம் அளித்து இந்தியாவை திவாலாக்க முனைவது போல தெரிந்தாலும், இது உண்மையில் அந்த அளவுக்கு பயப்படக்கூடிய வரி உயர்வு அல்ல. எப்படி?

இப்போதிருக்கும் எக்ஸைஸ் & வாட் வரியை இப்போது செட் ஆஃப் செய்து கொள்ளலாம். அதாவது பொருளை விற்றதற்காக செலுத்த வேண்டிய வரியில் அந்த பொருளை வாங்கும்போது செலுத்திய வரியை கழித்து விட்டு வெறும் லாபத்துக்கு உரிய வரியை மட்டும் கட்டினால் போதும். ஆனால் CST வரிக்கு அப்படியான செட் ஆஃப் வசதி இல்லை.



இனி புதிய GST விதிகளின் படி, CST க்கு இணையான CGST விற்பனைக்கான வரியையும் செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். ஆனாலும் விலை ஏற்றம் இருக்கும். வியாபாரிகள் தங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட முனைந்தால் அரசு திவாலாக வாய்ப்பு இருக்க தான் செய்கிறது. ஒரு சின்ன சாம்பிள் சொல்லட்டா?

நீங்கள் ஒரு வியாபாரி என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளை வேறொரு மாநிலத்தில் உற்பத்தி செய்பவரிடம் இருந்து வாங்கி இன்னொரு டீலருக்கு விற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்:


இப்போதைய CST முறை
புதிய IGST முறை-1
புதிய IGST முறை-2
பொருளின் விலை (வாங்கும்போது)
100.00
100.00
100.00
CST வரி விகிதம்
2%
18%
18%
வரி தொகை     (A)
2.00
18.00
18.00
நாம் கொடுக்கும் தொகை
102.00
118.00
118.00
நமது லாபம்    
10.00
10.00
10.00
பொருளை விலை (விற்கும்போது)
112.00
128.00
110.00
CST வரி விகிதம்          
2%
18%
18%
வரி தொகை   (B)    
2.24
23.04
19.08
விற்பனை விலை
114.24
151.04
129.08
அரசுக்கு செலுத்தவேண்டிய வரி
2.24
5.04
1.08

பொருளாதார நிபுணர்கள் புதிய முறை 1 இல் சொல்லியிருப்பது போல அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். அதே சமையம் பொருளின் விலை இப்போதிருக்கும் 114.24 இலிருந்து 151.04 ஆக உயரும். இது பொருளாதாரத்தை நசித்து விடும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அரசோ வரி வருவாய் 2.24 க்கு பதிலாக 5.04 கிடைக்கும் என்கிறது (வரி B யில் ஏற்கனவே செலுத்திய வரி A வை கழித்து வரும் தொகை). அதனால் தான் இவ்வளவு மும்முரமாக இதில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் இதில் இன்னொரு வாதம் இருக்கிறது. அதாவது புதிய முறை 2 இல் சொல்லியிருப்பது போல வியாபாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அரசுக்கு நஷ்டம் வரும். அதாவது வாங்கும்போது செலுத்திய வரி A எப்படியும் செட் ஆஃப் செய்துவிட முடியும் என்பதால் அதை கணக்கில் எடுக்காமல் விற்பனை விலையை குறைத்து விற்பனை செய்தால் 151.04 க்கு பதில் 129.08 க்கு பொருளை விற்பனை செய்ய முடியும். தன்னுடைய லாபம் 10.00 எந்த விட இழப்பும் இன்றி அப்படியே கிடைத்து விடும். அரசுக்கு சட்டப்படி செலுத்தக்கூடிய தொகையை செலுத்தியாக முடியும். அப்படியான நிலைப்பாட்டை வியாபாரிகள் எடுத்தால் வரி B யில் வரி A வை கழித்து பார்த்தால் 5.04 க்கு பதில் அரசுக்கு வெறும் 1.08 தான் வருவாயாக கிடைக்கும். அது இப்போது கிடைத்துக்கொண்டு இருக்கும் 2.24 ஐ விட குறைவு. இது தான் பல மாநிலங்களின் அச்சம். இந்த இழப்பை யார் ஈடு செய்வது என்கிற விவாதம் தான் இன்னமும் முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இப்படி செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள், கடைசி நிலை உபயோகிப்பாளர்கள் (End users) ஆகியோர் இப்படி செட் ஆஃப் செய்து கொள்ள முடியாது. அவர்கள் மொத்த வரியையும் சேர்த்து கட்டவேண்டி இருக்கும். இது சில்லறை வர்த்தக பற்றாக்குறையை (Retail inflation) அதிகரித்து நாட்டை நாசமாக்கி விடும் என்பதும் சிலரது அச்சம்.

இது போன்ற வரி தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் பல நல்ல விஷயங்களும் இருக்கிறது.

இப்போது போல வரி ஏய்ப்பு செய்ய முடியாது. காரணம் இப்போது கொள்முதல் விற்பனை இரண்டையும் ஒரே நபர் தான் அரசுக்கு தெரியப்படுத்துகிறார். எனவே அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் பொருட்களை கணக்கில் இல்லாமல் விற்றுவிட முடியும். அதை நியாயப்படுத்த ஜஸ்ட் டம்மி பில்களை வாங்கி அதை வைத்து கணக்கை தாக்கல் செய்ய முடியும். (சென்னையில் கூட இப்படி டம்மி பில்கள் தரும் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பில் விலையில் 1% கமிஷன் தான் அவர்களுக்கு)  ஆனால் புதிய முறை அப்படி அல்ல. விற்பனை விபரத்தை மட்டும் தான் நாம் தெரிவிக்க முடியும். கொள்முதல் விபரத்தை நமக்கு பொருளை விற்றவர்கள் இணைய தளத்தில் பதிந்து இருப்பார்கள். அதில் நமது பில் இருந்தால் தான் அது பட்டியலாக்கும். அதே போல நாம் விற்பனை செய்த பொருளுக்கான பில்லை நாம் பட்டியல் இட விட்டுப்போனால் அதன் வரி பலனை பொருளை நம்மிடமிருந்தௌ வாங்கியவர் பெற முடியாது. ஆக எல்லா விற்பனையும் முறைப்படுத்தப்பட்டு ஒரே இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். விற்றவர் வாங்கியவர் இருவருமே ஒரே மாதிரி தான் கணக்கு காட்ட முடியும். வரி ஏய்ப்பு என்பது குறைந்து விட வாய்ப்பு உள்ளது.

பதிவு செய்யப்பட நிறுவனங்கள் நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை சிக்கல்கள் எதுவும் பாதிப்பு இல்லை. கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்பவர்கள் (மளிகை கடை, ஜூவல்லரி போன்றவை...) தான் சங்கடப்படவேண்டும். இனி அவர்கள் எல்லா கொள்முதலையும், விற்பனையையும் கணக்கில் காட்டி ஆக வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.

PAN அடிப்படையிலான 15 இலக்க பதிவு எண், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக கொடுக்கப்படுகிறது. அதன் முதல் 2 எழுத்துக்கள் மாநிலத்தையும் அடுத்த 11 எழுத்துக்கள் PAN எண்ணையும் அடுத்த இலக்கங்கள் அதன் கிளைகளையும் குறிக்கும். இதன் படி, ஒரு PAN வைத்திருக்கும் நபருக்கு என்னென்ன தொழில்கள் எத்தனை எத்தனை கிளைகள் இருக்கிறது என துல்லியமாக கணக்கிடப்பட்டு அவரது ஒட்டுமொத்த வருவாயையும் அளந்து அதற்கு தக்க வருமான வரி விதிக்க முடியும்.

ரிடர்ன் தாக்கல் செய்யும் முறை இப்போது இருக்கும் ஒரே நாள் என்பது மாறி மூன்று முறை என மாற்றப்படுகிறது. அதாவது 10 ஆம் தேதிக்குள் நாம் விற்பனை விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். 15 ஆம் தேதி நமது கொள்முதல் விவரங்களை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். அதாவது நமக்கு பொருளை விற்றவர்கள் 10 ஆம் தேதி தங்களது விற்பனையை பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அது 15 ஆம் தேதி நமது கணக்கில் ஆட்டோமேட்டிக்காக லிஸ்ட் ஆகி விடும். அதை நாம் சரிபார்த்தால் போதுமானது. மற்றபடி நாம் புதிதாக எந்த இடைச்செருகலையும் செய்ய முடியாது. 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்தி ரிடர்னை தாக்கல் செய்து விட வேண்டும்.

இந்த மொத்த நடைமுறைகள் பற்றியும் மத்திய அரசு சமீபத்தில் மாடல் லா (Model Law) என விரிவாக ஒரு செயல் திட்ட அறிக்கையை வெளியீட்டு இருந்தது. அதை முழுமையாக படித்துப்பார்த்தபோது எனக்கு தோன்றியது என்னவென்றால்.. எதற்காக மெனக்கெட்டு இந்த அரசு இப்படி ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தை கொண்டு வருகிறது? இப்போதிருக்கும் சட்டங்களிலேயே சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமானதாச்சே என்று தான் தோன்றியது. ஜஸ்ட் இப்போதிருக்கும் CST வரிக்கு செட்ஆஃப் அறிவித்தால் போதும். மற்ற வரி முறைகளில் மாற்றம் இல்லை. வரி விகிதத்தை கவுன்சில் கூடி ஒரே வரி விகிதத்தை நாடு முழுதும் நிர்ணயித்தால் போச்சு. அதே மாதிரி கொள்முதல் கணக்கை இப்போதிருக்கும் வணிக வரி இணையதளத்திலேயே செயல்படுத்தலாம். இன்னமும் கூட எதற்காக ஒரு தனி சட்டம் என்பது புரியவில்லை.

அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும்? விடுங்கள்.

வரி தாக்கல் செய்வோரை பொறுத்தவரை... இந்த புதிய GST முறையில்  இனி அனைத்து பரிமாற்றங்களுக்கும் முறையாக கணக்கு வழக்குகளை வைத்து கொள்ளவேண்டும். அதை முறையாக ஒவ்வொரு மாதமும் இணைய தளம் வழியாக பதிவும் செய்தாக வேண்டும். அது ஒன்று தான் சிக்கல். F Form, C Form, H Form, I Form என எந்த தலைவலியும் இனி இல்லை. எல்லா ஸ்டாக்கும் தெளிவாக கணக்கீட்டு வைத்திருக்க வேண்டும்.

எக்ஸைஸ், சர்வீஸ் டாக்ஸ்,  CST VAT என தனித்தனியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலரை கண்டு அதை தாக்கல் செய்து அவர்கள் கேட்கும் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நோட்டீஸ்களுக்கும் பதிலளித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. ஒரே ரிட்டர்ன், ஒரே அலுவலகம், ஒரே கேள்வி, ஒரே பதில். அம்புட்டு தேன். அந்த வகையில் அது ஒரு பெரிய ஆறுதல்.

சுருக்கமாக பார்த்தால் நேர்மையாக வியாபாரம் செய்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு எல்லாம் கணக்கு காட்டாமல் கருப்பு பண வியாபாரம் செய்வோருக்கு தான். எப்படியும் விலைகள் உயரும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் வரிகள் செட் ஆஃப் செய்துகொண்டே இருக்கும்போது மெல்ல மெல்ல விலை வீழ்ச்சி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பும். அரசு விற்பனை விலைக்கு ஒரு செக் பாயிண்ட் வைத்தாக வேண்டும். அதாவது வாங்கும் விலைக்கு குறையாமல் விற்பனை விலை இருக்கவேண்டும் என நிர்ணயித்தாக வேண்டும்.  இல்லையென்றால் அரசுக்கான வரி வருவாய் மிக மிக குறைந்து விடும்.


இனி மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள், தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் என சில மாநிலங்கள் ஏன் இந்த சட்டத்தி எதிர்க்கிறது என்பதை பற்றி எல்லாம் அடுத்த பதிவில்... 

Friday, August 5, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2

ரு வழியாக ஜி.எஸ்.டி மசோதா ராஜ்ய சபையில் பாசாகி இருக்கிறது.

ஜி.எஸ்.டி குறித்த எனது முந்தைய பதிவை இங்கே [Click Here] படித்து விட்டவர்களுக்கு தொடர்ந்து நான் சொல்ல போகும் விஷயங்கள் எளிதில் விளங்கும்.

லோக் சபாவில் பாசான ஜி.எஸ்.டி ராஜ்ய சபாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. அதிமுக எதிர்க்கும் என்பதால் அதிமுக அல்லாத இதர மாநில கட்சிகளையும் காங்கிரசையும் சரிக்கட்டும் வேலையில் இறங்கிய பாஜக அதில் மிக அபாரமான வெற்றியும் பெற்றிருக்கிறது. நிதி அமைச்சர் ஜெட்லியும் பிரதமர் மோடியும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே காங்கிரஸ் மற்றும் இதர கட்சி தலைவர்களை கேஷுவலாக சந்தித்து பேசி ஒப்புதல் பெற்று விட்டார்கள். மிக ஆரோக்கியமான பாராட்டத்தக்க விஷயம் இது. ஆனால் இதனால் எல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்துவிடுவதில்லை. உனமையான சவால்கள் இனி தான் இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்ப்போமா?



நிர்வாக ரீதியான சவால்கள் தான் மிக மிக கடினமானது.

இந்த சட்டத்தை 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்யவேண்டும் என மத்திய அரசு சொன்னாலும், அது அவ்வளவு எளிதல்ல. அதனால் மத்திய அரசு மேலும் இரண்டு ஆப்ஷன்ஸ் கைவசம் வைத்திருக்கிறது. ஒன்று 2017 அக்டோபர் 1 முதல் அமல் செய்வது. ஆனால் பல கார்போரேட் நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன. நிதி ஆண்டில் இடையில் இருந்து வரி விதிப்பு முறை மாற்றம் என்றால் அது கம்பெனிகளின் வரவு செலவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு நடை முறை சிக்கல்களும் அதிகம். அடுத்த ஆப்ஷன், 2018 ஜனவரி 1 முதல் அமல் செய்வது. ஏற்கனவே நிதி ஆண்டை இப்போதிருக்கும் ஏப்ரல் – மார்ச் என்பதில் இருந்து ஜனவரி – டிசம்பர் என மாற்றுவதற்கான சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அதை நிறைவேற்றி அதனோடு சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அமல் செய்ய முடியும் என அரசு நினைக்கிறது. எனக்கென்னவோ இது தான் கடைசியில் சாத்தியமாகும் என தோணுது.

ஏன் 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்ய முடியாது? சுருக்கமாக பார்ப்போமா?

லோக்சபாவில் பாசான ஜி.எஸ்.டி மசோதா இப்போது ராஜ்ய சபையிலும் பாஸ் ஆகி இருக்கிறது. மீண்டும் லோக் சபாவில் அப்ரூவ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் சைன் செய்ததும் அது சட்டமாகிவிடும்.

இது ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தம் என்பதால் 50% மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும். அதாவது அடுத்த 30 நாட்களுக்குள் 17 மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு பெற வேண்டும். அவையும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

பாராளுமன்றம் இனி தனித்தனியாக சில சட்டங்களை உருவாக்க வேண்டும். அதாவது மாநிலங்களுக்குள்ளேயான SGST, மாநிலங்களுக்கு இடையிலான IGST, உற்பத்தி துறைக்கான CGST ஆகியவற்றுக்கான தனி தனி சட்டங்கள் வகுத்து அவற்றையும் பாராளுமன்றங்களில் தாக்கல் செய்து பாஸ் ஆக்கி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

அதேபோல, மாநிலங்களும் தங்கள் மாநில நிறுவனங்களின் உற்பத்தி/வியாபாரம் தொடர்பான SGST சட்டங்கள் இயற்றி அதை சட்டசபைகளில் பாஸ் ஆக்கி அதற்கு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல்களை பெற்று சட்டம் ஆக்க வேண்டும்.

அடுத்தபடியாக ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கவேண்டும். இதில் மத்திய நிதி அமைச்சகம், மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.  இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூடி விவாதித்து தான் ஒவ்வொரு பொருளுக்குமான வரி நிர்ணயம் செய்யவேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் ஏற்கனவே எனது முதல் பதிவில் சொன்னது போல ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் தங்கள் மாநில சிறப்பு பொருட்களுக்கு வரி கட்டமைப்பில் சலுகை கேட்கக்கூடும். அந்த பிரச்சனைகளை எல்லாம் விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வரி நிர்ணயம், விதி முறைகள் (Acts & Rules), வழிகாட்டு நெறிமுறைகள் (Procedures) ஆகியவை இறுதி செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். 

நிர்வாக ரீதியான அமைப்புக்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான வரி பிரச்சனைகள், நிதி பகிர்மான வழி முறைகள், பிரச்சனைகளை விவாதிப்பதற்கான தீர்ப்பாயங்கள் போன்ற பல அமைப்புகள் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு அதற்கு தகுந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இவை எல்லாம் பிசிகல் அமைப்புகள்.

விர்ச்சுவல் அமைப்புக்கள் என எடுத்துக்கொண்டால் GSTN என சொல்லப்படக்கூடிய ஜி.எஸ்.டி நெட்வர்க் இணைய தள அடிப்படையில் அமைக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக SGST நெட்வர்க் அமைக்கப்பட்டு அது GSTN வலைப்பின்னலில் இணைக்கவேண்டும். இப்போதிருக்கும் VAT, Excise, Service Tax கட்டமைப்புக்களுக்கு மாற்றாக இந்த புதிய GSTN நெட்வர்க் வருவதால் VAT, Excise, Service Tax ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளரமாக இந்த புதிய நெட்வர்க் அமைக்க வேண்டும்.

அதன் பின், அதில் பணி புரிய உள்ள அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், ஒவ்வொரு வணிக வரி அலுவலக ஊழியர்களுக்கும், செக்போஸ்ட் ஆய்வாளர்களுக்கும் இந்த முறையை அறிமுகம் செய்து அவர்களுக்கு GSTN பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல நாடு முழுதும் உள்ள 39 கோடி நிறுவனங்களின் மறைமுக வரி ஊழியர்களுக்கும் (Indirect Tax officials) இந்த புதிய இணைய தளம் மற்றும் அதில் வரி விதிப்பு முறைகள் பதிவேற்றுவது குறித்த பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.  அனைத்து நிறுவனங்களுக்கும் 15 இலக்க புதிய அடையாள எண் ஒதுக்கப்படவேண்டும். இவை PAN அடிப்படையில் இருக்கும். GST முழுக்க முழுக்க இணைய வழி வரி கட்டமைப்பு என்பதால் அனைத்து நிறுவனங்களும் (சிறு, குறு நிறுவனங்கள் உட்பட) தங்கள் அலுவலகத்தில் இணைய வசதியுடன் கூடிய கணினி அமைத்து அதில் வரி செலுத்துவதற்கான முறையை பயின்று கொள்ள வேண்டும்.

இதில் மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், சென்ட்ரல் எக்ஸைஸ் & சர்வீஸ் டாக்ஸ் ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த GST கொண்டுவரப்படுவதால் அவற்றில் பணி புரிந்து வரும் 17 லட்சம் ஊழியர்களுக்கு அவர்களது தற்போதைய பணி நிலை குறையாத அளவில் GST வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதில் என்னென்ன எதிர்ப்புக்களை ஊழியர் சங்கங்கள் கொண்டு வரும் என தெரியவில்லை. ஏற்கனவே இதே போன்ற ஒரு சிக்கலை இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா இணைப்பின் பொது நாம் சந்தித்தது நினைவிருக்கலாம். (அது குறித்த எனது பதிவை இங்கே [Click Here] படிக்கலாம்)

இவை எல்லாம் செய்து முடித்தால் தான் முழுமையாக GST அமல்ப்படுத்த முடியும் என்பதால் 2017 ஏப்ரல் 1 என்பது சந்தேகம் தான்.

நிர்வாக ரீதியான சிக்கல்கள் தவிர அரசியல் ரீதியான சிக்கல்களும் உள்ளன:

ஏற்கனவே தமிழகம் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த சட்டம் வந்தால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் நமது அச்சம். அது நியாயமானதும் கூட. ஒரு வகையில் பார்த்தால் தமிழகம் இப்போது காட்டும் இந்த உறுதியான எதிர்ப்பு தொடருமானால் தமிழகத்தில் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்படாமலேயே போக வாய்ப்புள்ளது. அப்படியான பட்சத்தில் GST அமைப்பு செயல்படவே முடியாது.

தமிழகத்தை தொடர்ந்து, இப்போது கேரளா மேற்கு வங்காளம் ஆகியவையும் இந்த ஜி‌எஸ்‌டி சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.  இவற்றை எல்லாம் மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது என தெரியவில்லை.

இந்தியா போன்ற ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டே இருப்பது வாடிக்கை. அப்படி புதிய அரசு வந்து அதன் நிதி அமைச்சர் GST கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அவர்களது கட்சி கொள்கை படியான மாறுபாடான நிலைப்பாடை எடுக்க நேர்ந்தால் அதுவும் GST கவுன்சிலுக்கு சிக்கல் தான்.

இது தவிர, இப்போது ஒரு சில அட்ஜஸ்ட்மெண்டுகளை மட்டுமே மத்திய அரசு செய்திருக்கிறதே அல்லாமல் முக்கியமான திருத்தங்களை முழுமையாக இன்னமும் செய்யவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டால் தான் காங்கிரசும் இதர கட்சிகளும் GST அமலாக ஒத்துழைக்கும் என்பது அடுத்த சிக்கல்.

காங்கிரஸ் வைத்த முக்கியமான ஐந்து கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றதால் தான் இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க சம்மதித்து இருக்கிறது. அதாவது மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு 1% கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் கேட்டது. அப்படி கூடுதல் வரி விதித்தால் அது சீரான வரி விதிப்பை தகர்த்துவிடும் என்பது அவர்களது அச்சம். அதை முதலில் பிடிவாதமாக மறுத்த அரசு, பின்னர் உண்மை அறிந்து இறங்கி வந்து ரத்து செய்திருக்கிறது.

மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை கொடுப்பதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கவேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை. இது மாநிலங்களின் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கை. பாஜக முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும் இழப்பீடு தரும் என முதலில் சொல்லி இருந்தது. ஆனால் இப்போது காங்கிரஸின் கோரிக்கையில் உள்ள நியாயம் அறிந்து இழப்பீடு குறித்து முடிவெடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி குறித்த வழக்குகள் சச்சரவுகளை விவாதித்து முடிவெடுக்க தனியாக ஒரு தீர்வாயத்தை காங்கிரஸ் கேட்டது. முதல் முதலில் ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்தபோது அதில் இந்த சரத்து இருந்தது. ஆனால் பின்னர் வந்த பாஜக அந்த விதியை ரத்து செய்து இருந்தது. இப்போது காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி விதிப்பு 18% க்குள் இருக்கவேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. அது தான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்பது அவர்கள் நிலை. ஆனால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வரி விதிப்பு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என ஜெட்லி சொல்லி விட்டார். “வரி தொடர்பான சட்டத்தில் வரி சதவீதம் சொல்லப்படவில்லை என்றால் அது வரி சட்டமே அல்ல” என சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். வரி சதவீதம் என்ன என்பதையே சொல்லாமல் மொட்டையாக சட்டத்தை நிறைவேற்றி இருப்பது தவறு என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. இப்போதுள்ள சூழலில் 18% வரி விதிப்பது போதாது, கூடுதல் வரிவிதிப்பு இருக்கக்கூடும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கும் நிதி அமைச்சர், ஆனால் அது 27% க்கு குறைவாக இருக்கும் என கோடிட்டு காட்டி இருக்கிறார். எனவே எனது கணிப்பு படி 22 – 24% வரை வரி இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அப்படி ஆனால் ஒட்டுமொத்த சிறு தொழிலும் நசிந்து விடக்கூடும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை வரும். ஆனால் அப்படி உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டால் அதை காங்கிரஸ் அனுமதிக்காது என தெளிவாக சிதம்பரம் சொல்லி இருக்கிறார். அது நமக்கெல்லாம் ஒரு சின்ன ஆறுதல்.

ஆக நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இத்தனை சிக்கலைகளையும் கடந்து ஜிஎஸ்டி எப்போது செயலாக்கத்துக்கு வரும் என தெரியவில்லை. அப்படி செயல்பாட்டுக்கு வரும்பொழுது அது எந்த மாதிரி இருக்கும்? என்னென்ன நடைமுறைகள் மாறும்? வரி தாக்கல் செய்வோருக்கு உள்ள சாதகங்கள் பாதகங்கள் என்னென்ன? என்பதை எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக பேசலாம் நண்பர்களே!



Printfriendly