Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Saturday, August 6, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3

ன் முந்தைய பதிவுகளில் சொன்னது போல எல்லா சிக்கல்களையும் கடந்து ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும்பொழுது எப்படி இருக்கும்?

ஜி.எஸ்.டி என்பது முதலில் ஒரு முனை வரியாக கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டு இப்போது மும்முனை வரியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இப்போது இருக்கும் பல பல வரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே வரி விகிதம் ஆனால் மூன்று வகைகளில் விதிக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு CGST (இப்போதிருக்கும் சென்டிரல் எக்ஸைஸ் போல) மாநிலங்களுக்குள்ளே நடக்கும் பரிமாற்றங்களுக்கு SGST (இப்போதிருக்கும் VAT போல) மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு IGST (இப்போதிருக்கும் CST போல) கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் எல்லோரும் சிலாகிக்கின்ற அளவுக்கு என்ன பெரிய சீர் திருத்தம் இருக்க போகிறது? ஜஸ்ட் பெயர் மாற்றம் தானே செய்திருக்கிறார்கள் என பல பல பொருளாதார அதிகாரிகளே கூட என்னிடம் கேட்டதுண்டு. ஆனால் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது மிக பெரிய அளவிலான வரி சீர் திருத்தம் தான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கான வருவாய் வரும்படிக்கான அமுத சுரபியும் கூட. (ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால்)

இப்போது இருக்கும் முறைப்படி ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வரி விகிதம் இருக்கிறது. அதாவது எக்ஸைஸ் 12.5%; வாட் (பொதுவாக) 5% & 14.5%; CST (பொதுவாக) 5% & 14.5%; CST (C Form அடிப்படையிலான வியாபாரங்களுக்கு) 2% என இருக்கிறது. இனிமேல் இவை எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம். அதாவது காங்கிரஸ் கேட்டபடி 18% அல்லது ஜெட்லி சொல்வது போல 27%. எல்லா பரிமாற்றத்துக்கும் ஒரே வரி தான்.

எதற்காக 18% வரி என ஒரு கேள்வி வருதுல்ல? இப்போதிருக்கும் எக்ஸைஸ் 12.5% & வாட் 5% சேர்த்து வரும் 17.5% வரியை ரவுண்ட் ஆக்கி தான் 18% வரி நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் 12.5% + 14.5% சேர்த்து 27% வரை வரி விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் வரி விகிதத்தை எக்கச்சக்கச்சக்கமாக ஏற்றி இருப்பது போல தோற்றம் அளித்து இந்தியாவை திவாலாக்க முனைவது போல தெரிந்தாலும், இது உண்மையில் அந்த அளவுக்கு பயப்படக்கூடிய வரி உயர்வு அல்ல. எப்படி?

இப்போதிருக்கும் எக்ஸைஸ் & வாட் வரியை இப்போது செட் ஆஃப் செய்து கொள்ளலாம். அதாவது பொருளை விற்றதற்காக செலுத்த வேண்டிய வரியில் அந்த பொருளை வாங்கும்போது செலுத்திய வரியை கழித்து விட்டு வெறும் லாபத்துக்கு உரிய வரியை மட்டும் கட்டினால் போதும். ஆனால் CST வரிக்கு அப்படியான செட் ஆஃப் வசதி இல்லை.



இனி புதிய GST விதிகளின் படி, CST க்கு இணையான CGST விற்பனைக்கான வரியையும் செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். ஆனாலும் விலை ஏற்றம் இருக்கும். வியாபாரிகள் தங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட முனைந்தால் அரசு திவாலாக வாய்ப்பு இருக்க தான் செய்கிறது. ஒரு சின்ன சாம்பிள் சொல்லட்டா?

நீங்கள் ஒரு வியாபாரி என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளை வேறொரு மாநிலத்தில் உற்பத்தி செய்பவரிடம் இருந்து வாங்கி இன்னொரு டீலருக்கு விற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்:


இப்போதைய CST முறை
புதிய IGST முறை-1
புதிய IGST முறை-2
பொருளின் விலை (வாங்கும்போது)
100.00
100.00
100.00
CST வரி விகிதம்
2%
18%
18%
வரி தொகை     (A)
2.00
18.00
18.00
நாம் கொடுக்கும் தொகை
102.00
118.00
118.00
நமது லாபம்    
10.00
10.00
10.00
பொருளை விலை (விற்கும்போது)
112.00
128.00
110.00
CST வரி விகிதம்          
2%
18%
18%
வரி தொகை   (B)    
2.24
23.04
19.08
விற்பனை விலை
114.24
151.04
129.08
அரசுக்கு செலுத்தவேண்டிய வரி
2.24
5.04
1.08

பொருளாதார நிபுணர்கள் புதிய முறை 1 இல் சொல்லியிருப்பது போல அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். அதே சமையம் பொருளின் விலை இப்போதிருக்கும் 114.24 இலிருந்து 151.04 ஆக உயரும். இது பொருளாதாரத்தை நசித்து விடும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அரசோ வரி வருவாய் 2.24 க்கு பதிலாக 5.04 கிடைக்கும் என்கிறது (வரி B யில் ஏற்கனவே செலுத்திய வரி A வை கழித்து வரும் தொகை). அதனால் தான் இவ்வளவு மும்முரமாக இதில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் இதில் இன்னொரு வாதம் இருக்கிறது. அதாவது புதிய முறை 2 இல் சொல்லியிருப்பது போல வியாபாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அரசுக்கு நஷ்டம் வரும். அதாவது வாங்கும்போது செலுத்திய வரி A எப்படியும் செட் ஆஃப் செய்துவிட முடியும் என்பதால் அதை கணக்கில் எடுக்காமல் விற்பனை விலையை குறைத்து விற்பனை செய்தால் 151.04 க்கு பதில் 129.08 க்கு பொருளை விற்பனை செய்ய முடியும். தன்னுடைய லாபம் 10.00 எந்த விட இழப்பும் இன்றி அப்படியே கிடைத்து விடும். அரசுக்கு சட்டப்படி செலுத்தக்கூடிய தொகையை செலுத்தியாக முடியும். அப்படியான நிலைப்பாட்டை வியாபாரிகள் எடுத்தால் வரி B யில் வரி A வை கழித்து பார்த்தால் 5.04 க்கு பதில் அரசுக்கு வெறும் 1.08 தான் வருவாயாக கிடைக்கும். அது இப்போது கிடைத்துக்கொண்டு இருக்கும் 2.24 ஐ விட குறைவு. இது தான் பல மாநிலங்களின் அச்சம். இந்த இழப்பை யார் ஈடு செய்வது என்கிற விவாதம் தான் இன்னமும் முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இப்படி செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள், கடைசி நிலை உபயோகிப்பாளர்கள் (End users) ஆகியோர் இப்படி செட் ஆஃப் செய்து கொள்ள முடியாது. அவர்கள் மொத்த வரியையும் சேர்த்து கட்டவேண்டி இருக்கும். இது சில்லறை வர்த்தக பற்றாக்குறையை (Retail inflation) அதிகரித்து நாட்டை நாசமாக்கி விடும் என்பதும் சிலரது அச்சம்.

இது போன்ற வரி தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் பல நல்ல விஷயங்களும் இருக்கிறது.

இப்போது போல வரி ஏய்ப்பு செய்ய முடியாது. காரணம் இப்போது கொள்முதல் விற்பனை இரண்டையும் ஒரே நபர் தான் அரசுக்கு தெரியப்படுத்துகிறார். எனவே அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் பொருட்களை கணக்கில் இல்லாமல் விற்றுவிட முடியும். அதை நியாயப்படுத்த ஜஸ்ட் டம்மி பில்களை வாங்கி அதை வைத்து கணக்கை தாக்கல் செய்ய முடியும். (சென்னையில் கூட இப்படி டம்மி பில்கள் தரும் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பில் விலையில் 1% கமிஷன் தான் அவர்களுக்கு)  ஆனால் புதிய முறை அப்படி அல்ல. விற்பனை விபரத்தை மட்டும் தான் நாம் தெரிவிக்க முடியும். கொள்முதல் விபரத்தை நமக்கு பொருளை விற்றவர்கள் இணைய தளத்தில் பதிந்து இருப்பார்கள். அதில் நமது பில் இருந்தால் தான் அது பட்டியலாக்கும். அதே போல நாம் விற்பனை செய்த பொருளுக்கான பில்லை நாம் பட்டியல் இட விட்டுப்போனால் அதன் வரி பலனை பொருளை நம்மிடமிருந்தௌ வாங்கியவர் பெற முடியாது. ஆக எல்லா விற்பனையும் முறைப்படுத்தப்பட்டு ஒரே இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். விற்றவர் வாங்கியவர் இருவருமே ஒரே மாதிரி தான் கணக்கு காட்ட முடியும். வரி ஏய்ப்பு என்பது குறைந்து விட வாய்ப்பு உள்ளது.

பதிவு செய்யப்பட நிறுவனங்கள் நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை சிக்கல்கள் எதுவும் பாதிப்பு இல்லை. கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்பவர்கள் (மளிகை கடை, ஜூவல்லரி போன்றவை...) தான் சங்கடப்படவேண்டும். இனி அவர்கள் எல்லா கொள்முதலையும், விற்பனையையும் கணக்கில் காட்டி ஆக வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.

PAN அடிப்படையிலான 15 இலக்க பதிவு எண், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக கொடுக்கப்படுகிறது. அதன் முதல் 2 எழுத்துக்கள் மாநிலத்தையும் அடுத்த 11 எழுத்துக்கள் PAN எண்ணையும் அடுத்த இலக்கங்கள் அதன் கிளைகளையும் குறிக்கும். இதன் படி, ஒரு PAN வைத்திருக்கும் நபருக்கு என்னென்ன தொழில்கள் எத்தனை எத்தனை கிளைகள் இருக்கிறது என துல்லியமாக கணக்கிடப்பட்டு அவரது ஒட்டுமொத்த வருவாயையும் அளந்து அதற்கு தக்க வருமான வரி விதிக்க முடியும்.

ரிடர்ன் தாக்கல் செய்யும் முறை இப்போது இருக்கும் ஒரே நாள் என்பது மாறி மூன்று முறை என மாற்றப்படுகிறது. அதாவது 10 ஆம் தேதிக்குள் நாம் விற்பனை விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். 15 ஆம் தேதி நமது கொள்முதல் விவரங்களை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். அதாவது நமக்கு பொருளை விற்றவர்கள் 10 ஆம் தேதி தங்களது விற்பனையை பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அது 15 ஆம் தேதி நமது கணக்கில் ஆட்டோமேட்டிக்காக லிஸ்ட் ஆகி விடும். அதை நாம் சரிபார்த்தால் போதுமானது. மற்றபடி நாம் புதிதாக எந்த இடைச்செருகலையும் செய்ய முடியாது. 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்தி ரிடர்னை தாக்கல் செய்து விட வேண்டும்.

இந்த மொத்த நடைமுறைகள் பற்றியும் மத்திய அரசு சமீபத்தில் மாடல் லா (Model Law) என விரிவாக ஒரு செயல் திட்ட அறிக்கையை வெளியீட்டு இருந்தது. அதை முழுமையாக படித்துப்பார்த்தபோது எனக்கு தோன்றியது என்னவென்றால்.. எதற்காக மெனக்கெட்டு இந்த அரசு இப்படி ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தை கொண்டு வருகிறது? இப்போதிருக்கும் சட்டங்களிலேயே சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமானதாச்சே என்று தான் தோன்றியது. ஜஸ்ட் இப்போதிருக்கும் CST வரிக்கு செட்ஆஃப் அறிவித்தால் போதும். மற்ற வரி முறைகளில் மாற்றம் இல்லை. வரி விகிதத்தை கவுன்சில் கூடி ஒரே வரி விகிதத்தை நாடு முழுதும் நிர்ணயித்தால் போச்சு. அதே மாதிரி கொள்முதல் கணக்கை இப்போதிருக்கும் வணிக வரி இணையதளத்திலேயே செயல்படுத்தலாம். இன்னமும் கூட எதற்காக ஒரு தனி சட்டம் என்பது புரியவில்லை.

அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும்? விடுங்கள்.

வரி தாக்கல் செய்வோரை பொறுத்தவரை... இந்த புதிய GST முறையில்  இனி அனைத்து பரிமாற்றங்களுக்கும் முறையாக கணக்கு வழக்குகளை வைத்து கொள்ளவேண்டும். அதை முறையாக ஒவ்வொரு மாதமும் இணைய தளம் வழியாக பதிவும் செய்தாக வேண்டும். அது ஒன்று தான் சிக்கல். F Form, C Form, H Form, I Form என எந்த தலைவலியும் இனி இல்லை. எல்லா ஸ்டாக்கும் தெளிவாக கணக்கீட்டு வைத்திருக்க வேண்டும்.

எக்ஸைஸ், சர்வீஸ் டாக்ஸ்,  CST VAT என தனித்தனியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலரை கண்டு அதை தாக்கல் செய்து அவர்கள் கேட்கும் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நோட்டீஸ்களுக்கும் பதிலளித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. ஒரே ரிட்டர்ன், ஒரே அலுவலகம், ஒரே கேள்வி, ஒரே பதில். அம்புட்டு தேன். அந்த வகையில் அது ஒரு பெரிய ஆறுதல்.

சுருக்கமாக பார்த்தால் நேர்மையாக வியாபாரம் செய்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு எல்லாம் கணக்கு காட்டாமல் கருப்பு பண வியாபாரம் செய்வோருக்கு தான். எப்படியும் விலைகள் உயரும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் வரிகள் செட் ஆஃப் செய்துகொண்டே இருக்கும்போது மெல்ல மெல்ல விலை வீழ்ச்சி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பும். அரசு விற்பனை விலைக்கு ஒரு செக் பாயிண்ட் வைத்தாக வேண்டும். அதாவது வாங்கும் விலைக்கு குறையாமல் விற்பனை விலை இருக்கவேண்டும் என நிர்ணயித்தாக வேண்டும்.  இல்லையென்றால் அரசுக்கான வரி வருவாய் மிக மிக குறைந்து விடும்.


இனி மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள், தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் என சில மாநிலங்கள் ஏன் இந்த சட்டத்தி எதிர்க்கிறது என்பதை பற்றி எல்லாம் அடுத்த பதிவில்... 

Friday, August 5, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2

ரு வழியாக ஜி.எஸ்.டி மசோதா ராஜ்ய சபையில் பாசாகி இருக்கிறது.

ஜி.எஸ்.டி குறித்த எனது முந்தைய பதிவை இங்கே [Click Here] படித்து விட்டவர்களுக்கு தொடர்ந்து நான் சொல்ல போகும் விஷயங்கள் எளிதில் விளங்கும்.

லோக் சபாவில் பாசான ஜி.எஸ்.டி ராஜ்ய சபாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. அதிமுக எதிர்க்கும் என்பதால் அதிமுக அல்லாத இதர மாநில கட்சிகளையும் காங்கிரசையும் சரிக்கட்டும் வேலையில் இறங்கிய பாஜக அதில் மிக அபாரமான வெற்றியும் பெற்றிருக்கிறது. நிதி அமைச்சர் ஜெட்லியும் பிரதமர் மோடியும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே காங்கிரஸ் மற்றும் இதர கட்சி தலைவர்களை கேஷுவலாக சந்தித்து பேசி ஒப்புதல் பெற்று விட்டார்கள். மிக ஆரோக்கியமான பாராட்டத்தக்க விஷயம் இது. ஆனால் இதனால் எல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்துவிடுவதில்லை. உனமையான சவால்கள் இனி தான் இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்ப்போமா?



நிர்வாக ரீதியான சவால்கள் தான் மிக மிக கடினமானது.

இந்த சட்டத்தை 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்யவேண்டும் என மத்திய அரசு சொன்னாலும், அது அவ்வளவு எளிதல்ல. அதனால் மத்திய அரசு மேலும் இரண்டு ஆப்ஷன்ஸ் கைவசம் வைத்திருக்கிறது. ஒன்று 2017 அக்டோபர் 1 முதல் அமல் செய்வது. ஆனால் பல கார்போரேட் நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன. நிதி ஆண்டில் இடையில் இருந்து வரி விதிப்பு முறை மாற்றம் என்றால் அது கம்பெனிகளின் வரவு செலவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு நடை முறை சிக்கல்களும் அதிகம். அடுத்த ஆப்ஷன், 2018 ஜனவரி 1 முதல் அமல் செய்வது. ஏற்கனவே நிதி ஆண்டை இப்போதிருக்கும் ஏப்ரல் – மார்ச் என்பதில் இருந்து ஜனவரி – டிசம்பர் என மாற்றுவதற்கான சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அதை நிறைவேற்றி அதனோடு சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அமல் செய்ய முடியும் என அரசு நினைக்கிறது. எனக்கென்னவோ இது தான் கடைசியில் சாத்தியமாகும் என தோணுது.

ஏன் 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்ய முடியாது? சுருக்கமாக பார்ப்போமா?

லோக்சபாவில் பாசான ஜி.எஸ்.டி மசோதா இப்போது ராஜ்ய சபையிலும் பாஸ் ஆகி இருக்கிறது. மீண்டும் லோக் சபாவில் அப்ரூவ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் சைன் செய்ததும் அது சட்டமாகிவிடும்.

இது ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தம் என்பதால் 50% மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும். அதாவது அடுத்த 30 நாட்களுக்குள் 17 மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு பெற வேண்டும். அவையும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

பாராளுமன்றம் இனி தனித்தனியாக சில சட்டங்களை உருவாக்க வேண்டும். அதாவது மாநிலங்களுக்குள்ளேயான SGST, மாநிலங்களுக்கு இடையிலான IGST, உற்பத்தி துறைக்கான CGST ஆகியவற்றுக்கான தனி தனி சட்டங்கள் வகுத்து அவற்றையும் பாராளுமன்றங்களில் தாக்கல் செய்து பாஸ் ஆக்கி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

அதேபோல, மாநிலங்களும் தங்கள் மாநில நிறுவனங்களின் உற்பத்தி/வியாபாரம் தொடர்பான SGST சட்டங்கள் இயற்றி அதை சட்டசபைகளில் பாஸ் ஆக்கி அதற்கு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல்களை பெற்று சட்டம் ஆக்க வேண்டும்.

அடுத்தபடியாக ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கவேண்டும். இதில் மத்திய நிதி அமைச்சகம், மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.  இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூடி விவாதித்து தான் ஒவ்வொரு பொருளுக்குமான வரி நிர்ணயம் செய்யவேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் ஏற்கனவே எனது முதல் பதிவில் சொன்னது போல ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் தங்கள் மாநில சிறப்பு பொருட்களுக்கு வரி கட்டமைப்பில் சலுகை கேட்கக்கூடும். அந்த பிரச்சனைகளை எல்லாம் விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வரி நிர்ணயம், விதி முறைகள் (Acts & Rules), வழிகாட்டு நெறிமுறைகள் (Procedures) ஆகியவை இறுதி செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். 

நிர்வாக ரீதியான அமைப்புக்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான வரி பிரச்சனைகள், நிதி பகிர்மான வழி முறைகள், பிரச்சனைகளை விவாதிப்பதற்கான தீர்ப்பாயங்கள் போன்ற பல அமைப்புகள் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு அதற்கு தகுந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இவை எல்லாம் பிசிகல் அமைப்புகள்.

விர்ச்சுவல் அமைப்புக்கள் என எடுத்துக்கொண்டால் GSTN என சொல்லப்படக்கூடிய ஜி.எஸ்.டி நெட்வர்க் இணைய தள அடிப்படையில் அமைக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக SGST நெட்வர்க் அமைக்கப்பட்டு அது GSTN வலைப்பின்னலில் இணைக்கவேண்டும். இப்போதிருக்கும் VAT, Excise, Service Tax கட்டமைப்புக்களுக்கு மாற்றாக இந்த புதிய GSTN நெட்வர்க் வருவதால் VAT, Excise, Service Tax ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளரமாக இந்த புதிய நெட்வர்க் அமைக்க வேண்டும்.

அதன் பின், அதில் பணி புரிய உள்ள அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், ஒவ்வொரு வணிக வரி அலுவலக ஊழியர்களுக்கும், செக்போஸ்ட் ஆய்வாளர்களுக்கும் இந்த முறையை அறிமுகம் செய்து அவர்களுக்கு GSTN பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல நாடு முழுதும் உள்ள 39 கோடி நிறுவனங்களின் மறைமுக வரி ஊழியர்களுக்கும் (Indirect Tax officials) இந்த புதிய இணைய தளம் மற்றும் அதில் வரி விதிப்பு முறைகள் பதிவேற்றுவது குறித்த பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.  அனைத்து நிறுவனங்களுக்கும் 15 இலக்க புதிய அடையாள எண் ஒதுக்கப்படவேண்டும். இவை PAN அடிப்படையில் இருக்கும். GST முழுக்க முழுக்க இணைய வழி வரி கட்டமைப்பு என்பதால் அனைத்து நிறுவனங்களும் (சிறு, குறு நிறுவனங்கள் உட்பட) தங்கள் அலுவலகத்தில் இணைய வசதியுடன் கூடிய கணினி அமைத்து அதில் வரி செலுத்துவதற்கான முறையை பயின்று கொள்ள வேண்டும்.

இதில் மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், சென்ட்ரல் எக்ஸைஸ் & சர்வீஸ் டாக்ஸ் ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த GST கொண்டுவரப்படுவதால் அவற்றில் பணி புரிந்து வரும் 17 லட்சம் ஊழியர்களுக்கு அவர்களது தற்போதைய பணி நிலை குறையாத அளவில் GST வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதில் என்னென்ன எதிர்ப்புக்களை ஊழியர் சங்கங்கள் கொண்டு வரும் என தெரியவில்லை. ஏற்கனவே இதே போன்ற ஒரு சிக்கலை இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா இணைப்பின் பொது நாம் சந்தித்தது நினைவிருக்கலாம். (அது குறித்த எனது பதிவை இங்கே [Click Here] படிக்கலாம்)

இவை எல்லாம் செய்து முடித்தால் தான் முழுமையாக GST அமல்ப்படுத்த முடியும் என்பதால் 2017 ஏப்ரல் 1 என்பது சந்தேகம் தான்.

நிர்வாக ரீதியான சிக்கல்கள் தவிர அரசியல் ரீதியான சிக்கல்களும் உள்ளன:

ஏற்கனவே தமிழகம் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த சட்டம் வந்தால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் நமது அச்சம். அது நியாயமானதும் கூட. ஒரு வகையில் பார்த்தால் தமிழகம் இப்போது காட்டும் இந்த உறுதியான எதிர்ப்பு தொடருமானால் தமிழகத்தில் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்படாமலேயே போக வாய்ப்புள்ளது. அப்படியான பட்சத்தில் GST அமைப்பு செயல்படவே முடியாது.

தமிழகத்தை தொடர்ந்து, இப்போது கேரளா மேற்கு வங்காளம் ஆகியவையும் இந்த ஜி‌எஸ்‌டி சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.  இவற்றை எல்லாம் மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது என தெரியவில்லை.

இந்தியா போன்ற ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டே இருப்பது வாடிக்கை. அப்படி புதிய அரசு வந்து அதன் நிதி அமைச்சர் GST கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அவர்களது கட்சி கொள்கை படியான மாறுபாடான நிலைப்பாடை எடுக்க நேர்ந்தால் அதுவும் GST கவுன்சிலுக்கு சிக்கல் தான்.

இது தவிர, இப்போது ஒரு சில அட்ஜஸ்ட்மெண்டுகளை மட்டுமே மத்திய அரசு செய்திருக்கிறதே அல்லாமல் முக்கியமான திருத்தங்களை முழுமையாக இன்னமும் செய்யவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டால் தான் காங்கிரசும் இதர கட்சிகளும் GST அமலாக ஒத்துழைக்கும் என்பது அடுத்த சிக்கல்.

காங்கிரஸ் வைத்த முக்கியமான ஐந்து கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றதால் தான் இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க சம்மதித்து இருக்கிறது. அதாவது மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு 1% கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் கேட்டது. அப்படி கூடுதல் வரி விதித்தால் அது சீரான வரி விதிப்பை தகர்த்துவிடும் என்பது அவர்களது அச்சம். அதை முதலில் பிடிவாதமாக மறுத்த அரசு, பின்னர் உண்மை அறிந்து இறங்கி வந்து ரத்து செய்திருக்கிறது.

மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை கொடுப்பதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கவேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை. இது மாநிலங்களின் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கை. பாஜக முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும் இழப்பீடு தரும் என முதலில் சொல்லி இருந்தது. ஆனால் இப்போது காங்கிரஸின் கோரிக்கையில் உள்ள நியாயம் அறிந்து இழப்பீடு குறித்து முடிவெடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி குறித்த வழக்குகள் சச்சரவுகளை விவாதித்து முடிவெடுக்க தனியாக ஒரு தீர்வாயத்தை காங்கிரஸ் கேட்டது. முதல் முதலில் ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்தபோது அதில் இந்த சரத்து இருந்தது. ஆனால் பின்னர் வந்த பாஜக அந்த விதியை ரத்து செய்து இருந்தது. இப்போது காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி விதிப்பு 18% க்குள் இருக்கவேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. அது தான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்பது அவர்கள் நிலை. ஆனால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வரி விதிப்பு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என ஜெட்லி சொல்லி விட்டார். “வரி தொடர்பான சட்டத்தில் வரி சதவீதம் சொல்லப்படவில்லை என்றால் அது வரி சட்டமே அல்ல” என சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். வரி சதவீதம் என்ன என்பதையே சொல்லாமல் மொட்டையாக சட்டத்தை நிறைவேற்றி இருப்பது தவறு என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. இப்போதுள்ள சூழலில் 18% வரி விதிப்பது போதாது, கூடுதல் வரிவிதிப்பு இருக்கக்கூடும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கும் நிதி அமைச்சர், ஆனால் அது 27% க்கு குறைவாக இருக்கும் என கோடிட்டு காட்டி இருக்கிறார். எனவே எனது கணிப்பு படி 22 – 24% வரை வரி இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அப்படி ஆனால் ஒட்டுமொத்த சிறு தொழிலும் நசிந்து விடக்கூடும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை வரும். ஆனால் அப்படி உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டால் அதை காங்கிரஸ் அனுமதிக்காது என தெளிவாக சிதம்பரம் சொல்லி இருக்கிறார். அது நமக்கெல்லாம் ஒரு சின்ன ஆறுதல்.

ஆக நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இத்தனை சிக்கலைகளையும் கடந்து ஜிஎஸ்டி எப்போது செயலாக்கத்துக்கு வரும் என தெரியவில்லை. அப்படி செயல்பாட்டுக்கு வரும்பொழுது அது எந்த மாதிரி இருக்கும்? என்னென்ன நடைமுறைகள் மாறும்? வரி தாக்கல் செய்வோருக்கு உள்ள சாதகங்கள் பாதகங்கள் என்னென்ன? என்பதை எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக பேசலாம் நண்பர்களே!



Thursday, November 26, 2015

அண்டர்ஸ்டாண்டிங் அமீர்கான்

ந்த வாரம் எல்லோருடைய கையிலும் சிக்கின ஆடு அமீர் கான் தான். “இப்போ இந்தியாவுல நடக்குற விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது இந்தியாவை விட்டு போயிடலாமான்னு என் மனைவி கூட என்கிட்டே கேட்டாங்க”ன்னு அவர் பேசுனது தான் பரபரப்புக்கு காரணம். அமீர் கான் நாட்டை விட்டு போகணும்னு பலரும் கொடி புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சிலர் இங்கே தானே சம்பாதிச்சாரு? அப்பல்லாம் இந்த நாடு நல்ல நாடுன்னு தெரிஞ்சுச்சா அவருக்குன்னு குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.

அமீர் கான் என்ன பேசினார், என்பதை தெளிவா தெரிஞ்சவங்க எல்லாரும் அவரை ஆதரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் அதை ஆமோதிச்சிருக்கார். அப்படி என்ன தான் பேசினாரு அமீர்? ஏன் இந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்?


பத்திரிக்கை துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா நடந்துச்சு. அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கலந்துந்துகிட்டு இருந்தார். அங்கே அவர் முன்னிலையில் தான் அமீர் பேசினார். அமீரின் துணிவும், தேச பக்தியும் எல்லோரும் அறிந்ததே. ஒரு சாதாரண இந்தியனா அவர் தனது உணர்வுகளை அங்கே வெளிப்படுத்தினார்.

“ஒரு சாதாரண மனிதனா, இந்தியா குடிமகனா, இப்போது இந்தியாவில் நடைபெறும் சில சம்பவங்களின் செய்திகளை படிக்கும்போது ரொம்ப கவலையா இருக்கு. ஒன்று இரண்டல்ல நாடு முழுவதும் நிறைய சம்பவங்கள் அது மாதிரி நடப்பது அதிர்ச்சி அளிக்க கூடியதா இருக்கு.

வீட்டில் மனைவிக்கிட்டே பேசிட்டிருக்கும்போது அவரும் கூட இந்த சம்பவங்களின் கவலையை வெளிப்படுத்தினாரு. குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி நாம இந்தியாவை விட்டு போயிடலாமான்னு கூட அவர் என் கிட்டே கேட்டிருக்காரு.

சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே வருவது ஏன் நமக்கு கவலையை தருதுன்றது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்துக்கும் நல்லாவே தெரியும். தினசரி செய்தித்தாள்களை திறக்கவே பயமா இருக்கிற ஒரு சூழல் உருவாகிட்டு இருக்கு.

மக்கள் அரசை தேர்ந்தெடுப்பது தங்களை பாதுகாப்பாக வாழவைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான். அது மாநில அரசோ மத்திய அரசோ, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நம்மை அந்த அரசு காப்பாற்றும்ன்ற அந்த நம்பிக்கையை மக்கள் அரசின் மீது வெச்சிருக்காங்க. அதை அரசு உணர்ந்து நடந்து, தக்க நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கினால் தான் அந்த பாதுகாப்பு உணர்வு மக்களுக்கு கிடைக்கும்”

இதான் அவர் பேசியதின் சாராம்சம். இதில் எந்த தவறும் இருப்பதா எனக்கு தெரியலை. 

இத்தனை வருஷமும் இப்படி ஒரு சம்பவம் நடக்கலையா? 2008 ஜிகாதி தாக்குதல், 2002 குஜராத் வன்முறை, 1992 பாப்ரீ மசூதி சம்பவம்னு பலதும் நடந்த போது அமீர் என்ன செஞ்சிட்டு இருந்தாருன்னெல்லாம் ரொம்ப புத்திசாலி தனமா கேள்விகள் கேட்டுட்டு இருக்காங்க சிலர். 

இதில் எனது பார்வையை நான் இப்படி வைக்க விரும்புறேன்:

ஒரு ஜனநாயக அரசு என்று ஒன்று இருந்தால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எல்லோரையும் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கு.

எல்லா காலகட்டத்திலும் எல்லா அரசிலும் இப்படியான சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போதெல்லாம் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, கண்டிப்பது, எச்சரித்து அறிக்கை விடுவது ஆகியன இருக்கும்.

தமிழகத்திலேயே கூட அதிமுகவினர் ஒரு வன்முறையில் ஈடுபட்டாலோ, தகாத முறையில் பேசினாலோ உடனே ஜெயலலிதா அதை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்னு ஒரு அறிக்கை விடுவார். சில சம்பவங்களில் அப்படி சொந்த கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்து கைதும் செய்திருக்கிறார். சொந்த கட்சி காரங்க என்பதற்காக அவர்களை கண்டுகொள்ளாமல் விட்ட சம்பவங்கள் மிக மிக குறைவு. இப்படியான நடவடிக்கைகள் பெயரளவுக்கு இருந்தாலும் கூட போதும். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு நமக்கு துணையாக இருக்கிறது. தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைக்கும். நம்மை பாதுகாக்க அரசு இருக்குனு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கும். அப்பாலிக்கா கட்சி காரங்களை விடுதலை செஞ்சுருவாங்கன்றது வேற விஷயம். ஆனாலும் மக்களுக்கு அரசின் மீது ஒரு நம்பிக்கை வரும்.

ஆனா சமீபத்திய நிகழ்வுகளில் நாடு முழுதும் பல பல சம்பவங்கள் நடந்த போதும், மத்திய அரசோ பிரதமரோ அதை கண்டிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை, எந்த நடவடிக்கைக்கும் உத்தரவிடவில்லை. அதை விட கொடுமை அத்தகைய விஷயங்களை மறைமுகமாக ஆதரிக்கவும் செய்தது தான். இது தான் இங்கே வித்தியாசம். இதுவரை இருந்த அரசுகள் எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்தது. கண்டித்தது. இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவற்றை ஊக்குவிக்க தொடங்கி இருக்கிறது. இதை கவனிக்கும் மக்கள் அரசின் மறைமுக உதவியோடு தான் இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என நினைக்க கூடும். அது தான் இப்போது இந்தியாவில் நிலவும் பாதுகாப்பின்மைக்கான முக்கிய காரணம்.

இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது நெருக்கடி நிலை காலகட்டம் மாதிரி கட்டுப்படுத்தப்பட்டு நாட்டில் நிலவும் பல செய்திகளை வெளியிட முடியாமல் ஒடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நாடு முழுதும் நடைபெற்ற பல பல தாக்குதல்களில் பெரிய அளவில் நடைபெற்ற ஒன்றிரண்டு தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. ஆனால் அவற்றில் பல சம்பவங்களை மனிதாபிமான உணர்வுள்ள சில  வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொகுத்து வெளியிட்டிருக்கின்றன. அதை படித்தால் இந்தியாவில் இப்போது நிஜத்தில் எவ்வளவு பயங்கரமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது புரியும்.

இந்த அரசில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்துகொண்டிருப்பதை கவனித்து இருப்பீர்கள். இதுவரை சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம்கள் கிறித்துவர்கள் ஆகியோர் மீது நடந்து வந்த தாக்குதல்களுக்கு இணையாக இப்போது இந்த அரசில் ஹிந்து மதத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தினர் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. நம்முடைய பெருமதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை போல, ஆதிக்க வர்க்க இந்துக்கள் பிற இந்துக்களை ஒடுக்கி தங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய ஒரு சூழலை மெல்ல மெல்ல இந்த நாட்டில் உருவாக்கி வருவதை நாம் இப்போது காண முடிகிறது. எந்த பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகள் இருவரை அவர்கள் தலித்துக்கள் என்கிற காரணத்துக்காகவே எரித்து கொன்றது அதில் ஒரு சாம்பிள் தான்.

இந்தியா உயர் வகுப்பு இந்துக்களின் நாடாக மாற்றபட்டு வருவதும், அதற்கான நடவடிக்கைகளில் சில அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதும், அந்த அமைப்புக்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், மக்களிடம் இதுவரை இருந்து வரும் சமத்துவத்தை குலைக்கும் செயலாகவே காண வேண்டி இருக்கிறது. அதை ஒரு அரசே ஆதரிப்பது தான் மிகப்பெரிய கொடுமை. இந்த விசித்திர நிலைமை தான் மக்களுக்கு அமீர்கான் சொல்லும் அந்த பாதுகாப்பின்மையை கொண்டு வந்திருக்கிறது.

பல கலைஞர்கள் அறிஞர்கள் அரசின் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க தங்களின் விருதுகளை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள். அப்படியான எதிர்ப்பு மனநிலைக்கு காரணம் என்ன என கண்டறிந்து அவர்களை அழைத்து சமாதானம் செய்து அவர்களது உணர்வுகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அவர்களது கவுரவத்தை காக்க வேண்டிய அரசு அதை எதையும் செய்யாமல், அவர்களது செயலுக்கு உள்ளர்த்தமும் அரசியல் சாயமும் பூசி கேலி செய்து கொண்டிருக்கிறது. இது பொறுப்பாகவும் தெரியவில்லை முதிர்ச்சியான நிர்வாகமாகவும் தெரியவில்லை.

இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசு எனில் இந்நேரம் யோகி ஆதித்யநாத் எம்பி, ஹிந்து மகாசபை, சிவசேனா எம்பி வீச்சாரே, பாஜக எம்பி சாத்வி பிராச்சி, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் போன்ற பலரையும் இந்நேரம் எச்சரித்து இருக்கவேண்டும். இந்திய மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யாரையும் அனுமதிக்கமுடியாது என உறுதியாக அறிவித்து இருக்கவேண்டும். இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசா, உயர் வர்க்க இந்துக்களுக்கான அரசா என்பதே இப்போது குழப்பமாக இருக்கிறது. இந்த நிலை தான் நாட்டில் பலருக்கும் இந்தியா பாதுகாப்பான நாடு தானா என்கிற எண்ணம் தோன்ற காரணம்.

சகிப்புத்தன்மை என்பது ஒரு மெல்லிய கோடு. இந்தியாவை நேசிப்பவர்கள் அதன் இந்தப்பக்கம். மதத்தை நேசிப்பவர்கள் அந்த பக்கம். அமீர்கான் இந்தப்பக்கம். நான் இந்தப்பக்கம். 

நீங்கள்??




Saturday, September 14, 2013

தாமரையை மலர்த்துவாரா மோடி?


நேற்று நடந்த பாஜக காரிய கமிட்டி கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரு வேறு கருத்துக்கள் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக வரக்கூடாது என ஒரு சாராரும், அவர் தான் வரவேண்டும் என ஒரு சாராரும் கடுமையாக விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

நேற்று மாலை மோடி அவர்கள், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியையும் தனது பொறுப்பையும் பற்றி மிக சிறந்த ஒரு உரை ஆற்றினார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளால் மிக அருமையானதொரு உரை அது. நான் கேட்ட வரையில் மோடியின் மிக சிறந்த பேச்சு அது தான்.

மோடி மிக சிறந்த நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. குஜராத் மாநிலத்தின் இப்போதைய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சீரிய நிர்வாகம் இதனை எல்லாம் நான் சூரத், வதோதரா, கச், அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு சென்றபோதெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள எனது நண்பர்கள் பலரும் மோடியின் அருமைகளை விளக்கமாக எடுத்து சொன்னார்கள். இன்றைக்கு தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருப்பதற்கு மோடியின் செயல்களும் திட்டங்களும் தான் அடிப்படை காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்து முதல்வராக அவர் நீடிப்பதன் காரணமும் அது தான். பரவலாக மாநிலம் முழுமையும் மோடி குறித்தான மிக நல்ல அபிப்பிராயமே நிலவுவதை நான் கண்டிருக்கிறேன்.

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு என பார்த்தால் வகுப்பு வாதம், கோத்ரா கலவரம், கலவரத்தை ஊக்குவித்தது, இனப்படுகொலைக்கு துணை நின்றது போன்றவையாக மட்டும் தான் இருக்கமுடியும். அதுவும் இன்னமும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு ஊகம் தான். எப்படி பார்த்தாலும் குஜராத்தை பொறுத்தவரை மோடி தான் ஹீரோ. அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் பிரதமர் பதவி வேட்பாளர் என வரும்பொழுது நான் குஜராத் முதலவராக மட்டுமே மோடியை பார்க்க விரும்பவில்லை. பிரதமர் பதவி என்பது நாடு முழுமைக்குமான பொதுவான பதவி. மேலும், அவர் முன் நிறுத்தப்படுவது பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளராக.

இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் யாரும் ஒரு மதம் சார்ந்த கொள்கையினை முன்னெடுத்து அரசியல் செய்வதை விரும்பமாட்டார்கள்.

இன்றைய தேதியில் பாஜகவின் வலுவான செல்வாக்கு என்பது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்பதோடு, ஓரளவு செல்வாக்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்டு, பீஹார், ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆகிய மாநிலங்களிலும் இருக்கிறது. இதை சற்று பரவலாக பார்த்தால், வட இந்தியாவின் ஒரு பகுதி, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பாஜகவுக்கு ஆதரவுள்ளது என்பது புரியும். தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு.

வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், தெற்கு இந்தியா, உச்ச வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜகவுக்கு என எந்த செல்வாக்கும் இல்லை. கட்சியை இந்த பகுதிகளில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும் இதுவரை பாஜக எடுக்கவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஏ.பி.வி.பி, சங் பரிவார் போன்றவை அதிக பலத்துடன் உள்ள மேற்கு & மத்திய இந்தியாவை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல் செய்துவந்த கட்சி தான் பாஜக. எனவே மிக பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பா.ஜ.க செல்வாக்காக இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

வட இந்தியாவை எடுத்துக்கொண்டால், உத்தரபிரதேசம் & உத்தரகாண்டு தான் இந்தியாவின் மிக அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பகுதி. பஹுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாடி பார்ட்டி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தான் இந்த பகுதியில் செல்வாக்காக உள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரும் லாலுவும் கோலோச்சுகிறார்கள். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளமும், பஞ்சாபில் அகாலிதளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் & கம்யூனிஸ்டு கட்சிகளும், அசாமில் அசாம் கன பரிஷத்தும், மிக அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்த அத்தனை மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் தான் இப்போதும் இருக்கிறது.

தென் இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக & திமுக, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு அடிப்படையில் அது இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.

எனவே சுருக்கமாக பார்த்தால் நாடு முழுதும் பரவலாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில கட்சிகளின் கையே ஓங்கி இருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட ‘எல்லா’ மாநிலங்களிலும் கணிசமான ஓட்டுவங்கி நிரந்தரமாக இருக்கிறது.


ஆட்சி பெரும்பான்மையான 272 எம்.பிக்களை வென்றெடுப்பது தான் பிரதமர் பதவிக்கான அடிப்படை தகுதி என எடுத்துக்கொண்டால், என்னை பொறுத்தவரை காங்கிரஸ் அதை எளிதாக எட்டிப்பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் கொண்டுவந்த அருமையான திட்டங்களை விரிவாகவும் முறையாகவும் எடுத்து சொன்னாலே போது. பயனை அனுபவித்தவர்கள் திட்டத்தின் நன்மை உணர்ந்து எளிதாக காங்கிரஸை ஆதரித்துவிடுவார்கள்.

காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் அள்ளிக்கொள்வது போக, மீதமிருக்கும் தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும். எனினும், பாஜக மிகுந்த செல்வாக்காக இருக்கும் மேற்கு, மத்திய இந்தியாவில் கணிசமான தொகுதிகளை வென்றெடுப்பதன் மூலம், எதிர்கட்சி வரிசையை தக்கவைத்துக்கொள்வதில் ஒன்றும் சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.


எனது இத்தனை கணக்கும், மூன்றாவது அணி என ஒன்று அமையாத நிலையில் தான். ஒருவேளை, மூன்றாவது அணி அமையுமானால், மாநில கட்சிகளின் தனி செல்வாக்கு ஓங்குமானால், எதிர்கட்சி வரிசை மூன்றாம் அணிக்கு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் மீதான அதிருப்தியை சரியாக ஊதி பெரிதாக்க முடிந்து, மூன்றாவது அணியில் ஒற்றுமையும் இருந்து, பிரதமர் பதவிக்காக ஏகமனதாக ஒரு நபர் முன்னிறுத்தப்படுவாரேயானால், மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூட கிட்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது அணி என நான் நினைக்கும் அணியில் நிறைய பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சமாதானம் செய்து ஒருவர் வென்று நிற்பது கஷ்டம் தான்.

கட்சி சார்ந்து இது தான் பாஜகவின் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் கள நிலை.

மோடி, மிக சிறந்த நிர்வாகி என்றாலும் கூட அவரது கட்சியிலேயே கூட அவர் 'ஏகமனதாக' வேட்பாளராக்கப்படவில்லை என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோருக்கு பிரதமர் பதவி ஆசை இருந்ததும், அதற்காக அணிகள் அமைத்துக்கொண்டதும் பிரசித்தமான விஷயம்.


இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.

மோடி நிர்வாகி என்பது ஒரு புறம். அடிப்படையில் அவரது மன ஓட்டம் என்பது வீரிய ஹிந்துத்துவாவை சார்ந்தது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரது வெளியுறவு கொள்கை அவ்வளவு பாராட்ட தக்கதல்ல. இன்றைக்கு கூட அமெரிக்கா, மோடிக்கான தனது விசா கொள்கையை உறுதி செய்திருக்கிறது. கோபம், பிடிவாதம், தீவிர ஹிந்துத்துவா, பின் விளைவுகள் குறித்த கவலையின்றி முடிவுகள் எடுத்து சிக்கலாக்கி கொள்வது என சமீப காலமாக மோடியின் செயல்பாடுகள் கவலையளிக்கக்கூடியவை தான். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் குஜராத் உயர்நீதிமன்றம், உள்கட்டமைப்பு, சாலைகளின் நிலை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுக்காக மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதையும் கவனிக்கவேண்டும். சூரத், அஹமதாபாத், வதோதரா போன்ற நகரங்களை மட்டுமே காட்டி மாநிலம் வளர்ந்துவிட்டது என விளம்பரம் செய்கிறார் என்கிற பிற கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ என்கிற ஐயம் பரவலாக தோன்ற தொடங்கி இருக்கிறது. அவருக்கென அமைக்கப்பட்ட தனியார் விளம்பர நிறுவனம், அவரது செல்வாக்கை உயர்த்துவதாக சொல்லி செய்யும் செய்கைகளில் உண்மையில் அவரது செல்வாக்கு சரிந்துகொண்டு தான் வருகிறது. இந்தியாவிலேயே தனது சுய செல்வாக்கை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்தை நியமித்து அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும் ஒரே தலைவர் என்கிற பெருமையும் மோடிக்கே உள்ளது!



பொதுவாக பாஜக கட்சி தலைவர்களில் வாஜ்பாயி மிதவாதி, எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவராக இருந்தார். அத்வானி முன்பு பிடிவாத போக்கு கொண்டவராக விளங்கினாலும், தற்போது அவரும் மிதவாதியாகவே மாறிவிட்டார். நாட்டு நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவரது தனிப்பட்ட வலைப்பூங்காவில் அதிகம் காணமுடிகிறது. மோடி அப்படிப்பட்டவரல்ல. எனவே பிரதமர் பதவி என்கிற உயர் அந்தஸ்து கிடைக்குமானால், அவரது செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. நம்மை போன்ற பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒரு சாராருக்கே அந்த அச்சம் இருக்கிறதை உணரமுடிகிறது.

இதெல்லாம், 2014ம் ஆண்டு இறுதியில் முறைப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் இருக்கக்கூடிய சூழல் தான். ஒருவேளை காங்கிரஸ் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, மூன்றாம் அணி இன்னும் அமையவில்லை, பாஜவிலும் அதிருப்தி நிறைந்திருக்கிறது, இந்த சமயத்தில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்திவிட்டால் மொத்தமாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட சாத்தியமிருப்பதை உணர்ந்து செயல்பட்டால், எல்லா கணக்குகளும் முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும்? சொந்த கட்சியான பாஜகவின் தலைவர்களை மோடியால் சமாதானப்படுத்த முடிகிறதா? இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் பரவலாக பாஜக பெற முடியுமா? மூன்றாவது அணி அமையுமா? அப்படி அமைந்தால் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடையில் தான் இருக்கிறது மோடியின் பிரதமர் கனவு.

இப்போதைக்கு பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததையே மிகப்பெரிய வெற்றியாக கருதி அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். அதில் எந்த சங்கடமும் யாருக்கும் இல்லை!

Printfriendly