Showing posts with label Election. Show all posts
Showing posts with label Election. Show all posts

Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Wednesday, May 4, 2016

பிரச்சாரத்தில் சொதப்பும் ஜெ; தேர்தலில் சரியும் அதிமுக

தேர்தல் களம் 2016 பல பல அதிசய திருப்புமுனைகளை கண்டு வருகிறது. 

தேர்தல் அறிவிக்கப்படும் நாளில் தமிழகத்தின் அசைக்கமுடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக தான் இருந்தது. ஆனால் இப்போது இந்த மூன்று வாரங்களில் அதிமுகவின் நிலை மிக மிக பரிதாபகரமானதாக மாறிவிட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் எனக்கு தெரிந்து இரண்டே பேர்தான். ஒன்று சரியாக திட்டமிடாத, சுதாரிப்பற்ற ஜெ. இரண்டு கள நிலவரமோ மக்கள் மனநிலையோ புரிந்துகொள்ளாமல் ஜெவுக்கு பிரச்சார உரை எழுதி தரும் அந்த புலவர் பிரகஸ்பதி.

ஜெயலலிதா தமிழக அரசியலில் முன்னிலைக்கு வந்ததே அவரது சாதுரியமான பேச்சாற்றலால் தான். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சென்று கொடியேற்றி உரை நிகழ்த்தி தான் தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கையில் சிறந்த பார்லிமெண்டேரியன் என்று விருதுகள் வாங்கி தனது பேச்சாற்றலால் இந்திரா காந்தி மட்டுமல்லாமல் பல தேசிய தலைவர்களின் அபிமானத்தையும் பெற்றார்.

அப்படிபட்ட ஜெ. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அளவுக்கு சொதப்புவார் என அவரது இயக்க ரத்தத்தின் ரத்தங்கள் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது எதை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் எந்த கட்சிக்கும் தெளிவான கண்ணோட்டம் இல்லை. ஆட்சி மீது அப்போதைய நிலையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் நடத்திய தமிழக சுற்றுப்பயணத்தில் தனக்கு மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து, தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்கிற வாக்குறுதியை கொடுத்து தான் களம் இறங்கியது. அதிமுகவை பொறுத்தவரை தனது தனிப்பட்ட செல்வாக்கு, ஆட்சியின் மேன்மையை மட்டுமே நம்பி களம் இறங்கியது. ஆனால் சென்னையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்திலேயே ஜெ. சொதப்பிய சொதப்பல் எதிர்க்கட்சிகளுக்கு மணி மணியாக பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து பிரச்சார களத்தை சூடு பிடிக்க வைத்தது.

சென்னை பிரச்சார கூட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாக ஜெ. சொன்னது, சென்னை வெள்ள நிவாரணம், தொழில் முதலீடு, சென்னை மெட்ரோ ரயில் ஆகியவை தான். இதையே பிள்ளையார் சுழி ஆக்கி ஒவ்வொன்றாக பதிலளிக்க தொடங்கியது திமுக. வெள்ள நிவாரணம் பற்றி ஜெ பேசியதற்கு வெள்ள சேதம் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி விலாவாரியாக விளக்க தொடங்கியது எதிர்கட்சி பிரச்சாரங்கள். தொழில் வளர்ச்சி பற்றி ஜெ. சொன்னதற்கு தொழில் துறையை முடக்கி வைத்ததை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் புட்டு புட்டு வைக்கிறார்கள் மற்றவர்கள். சென்னை மெட்ரோ ரயில் தனது சாதனை என ஜெ. சொன்னதற்கு ஜெ. அந்த திட்டத்தை எப்படி எல்லாம் முடக்கி வைத்தார் அதன் பின் நீதிமன்றம் தலையிட்டு தான் அந்த திட்டத்தை செயல்படுத்தியது என்பதை செய்திகளோடு விளக்கியது எதிர்கட்சி முகாம்.

சென்னை பிரச்சாரம் சொதப்பியபோதே கொஞ்சம் சுதாரித்திருக்கலாம் ஜெ. ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு கூட்டத்திலும் கூடுதல் சொதப்பல்களை அள்ளி தெளித்ததன் பயனாக அதற்கான பதிலடிகளை ஆதாரபூர்வமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் மத்தியில் எடுத்து எடுத்து வைக்க வைக்க, அதிமுக மீதான பிரம்மாண்ட பிம்பம் மெல்ல மெல்ல மக்கள் மனதிலிருந்து சரிய தொடங்கியது.

ஜெ.வுக்கு பிரச்சாரம் எழுதி கொடுப்பவராவது மக்கள் மனநிலையை புரிந்து கொண்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஜெ. பேசவிருக்கும் பகுதியின் உண்மையான பிரச்சனைகளை பற்றியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் எண்ணற்ற தகவல்களை தினசரி அறிந்து வருவதால் அதிகமாக பொய்மொழிகள் இல்லாத வகையிலாவது ஜெ. பிரச்சார உரையை தயாரித்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கனவு லோகத்தில் இருக்கும் அதிமுகவினர் தமிழகம் பொற்காலமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்து இன்னமும் மீளாததால் யதார்த்தத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத பிரச்சார உரையை எழுதி கொடுத்து, அதை ஜெ.வை படிக்க வைத்து, உள்ள கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் மக்கள் மத்தியில் இருந்து நீக்கி கொண்டார்கள்.


இப்படித்தான் கோவை பொதுக்கூட்டமும் அமைந்தது. ஏற்கனவே சேலம் பிரச்சார கூட்டத்தில் சேலம் மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த (!) ஜெ. மீண்டும் ஒரு முறை கோவை மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். (குறைந்த பட்சம் எங்கே பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்கிற சிந்தனையாவது இருந்திருந்தால் இப்படியான சமந்தா சம்மந்தம் இல்லாத ஊர்களில் சம்மந்தமற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும் காமெடியை தவிர்த்திருக்கலாம்)

அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. திமுக, பாமக, ம.ந.கூ ஆகியவை தங்களது செயல் விளக்கங்களை தேர்தல் அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார்கள். அதிமுகவோ மக்களின் குறைகள் என்ன? தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காததால் இன்று வரை தேர்தல் அறிக்கையோ செயல் திட்டங்களோ வெளியிடவில்லை. பொத்தாம் பொதுவாக, நான் உங்களுக்கு தேவையானதை செய்வேன், நீங்கள் கனவிலும் நினைக்காததையும் செய்வேன், நான் சொல்லாததையும் செய்வேன் என சொல்கிறாரே தவிர இன்னின்ன பிரச்சனைகளை இன்னின்ன வகையில் தீர்ப்பேன், இன்னின்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவேன் என சொல்லவே இல்லை. நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, இதை இதை செய்வேன் என்கிற வாக்குறுதியாவது கொடுத்திருக்கலாம். ஆனால் அதை கூட அவரால் செய்ய முடியவில்லை. எனது அதிமுக நண்பர்களை கேட்டால் ரொம்ப வருத்தப்பட்டு சொல்கிறார்கள். அம்மாவுக்கு எங்கே என்ன பிரச்சனை இருக்கிறது, என்ன வாக்கு கொடுக்கவேண்டும் என்று கூட யாரும் எடுத்து சொல்வதில்லை என. இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாரையும் வளர்த்தாமல் இருப்பதன் பலனை இப்போது அனுபவிக்கிறது அதிமுக.

கோவை பொதுக்கூட்டத்திலும் அது தான் நடந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய சாதனைகள் நடத்தி இருப்பதாகவும், 4,509 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இருப்பதாகவும்(!), தொழிலாளர்கள் எல்லோரும் தனது ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெருமிதத்தோடு அவர் பேசியதை கேட்ட எனது அதிமுக நண்பர்களே ஆடித்தான் போய் விட்டார்களாம்.  அதில் பலரும் சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்து நடத்தி நசிந்து கொண்டு இருப்பவர்கள். தொழில் வளர்ச்சி முடங்கி போய் வேறு மாநிலங்களுக்கு செல்லலாமா என யோசித்து கொண்டிருப்பவரும் அதில் அடக்கம். இப்படியான நிலையை அறிந்து தான் கர்நாடக முதல்வர் கூட கோவையிலே கூட்டம் நடத்தி ஏன் தமிழகத்தில் இருந்து இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகருக்கு வாருங்கள். உங்களுக்கு தொழில் நடத்த எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என பகிரங்கமாக வந்து அழைப்பு விடுத்து போனார். சில தொழிற்சாலைகளும் கோவையிலிருந்து கர்நாடகம் சென்று விட்டது. அப்படியான சூழல் தான் கோவையிலே நிலவி வருகிறது என்பதை கூட தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெ. அறிந்திருக்கவில்லை.

கோவை என்றாலே டெக்ஸ்டைல் சிட்டி, தொழில் நகரம் என்பதெல்லாம் பழங்கதை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிக்கொண்டிருந்த மில்களும், மோல்டிங் கம்பெனிகளும், மோட்டோர் கம்பெனிகளும், நெசவு தறி இயக்குவோரும், பம்பு செட், கிரைண்டர் உற்பத்தியாளர்களும் தொழில்கள் நசிந்து, இப்போது, கிடைத்த கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு அவலமான நிலை தான் கோவையிலே இருக்கிறது. இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் வெற்று பெருமித பேச்சுக்களை எழுதிக்கொடுத்து அதை அப்படியே பேசி சொந்த கட்சிக்காரர்களும் மக்களும் கேலி செய்யும் அளவுக்கு ஜெ.ஆளானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். ஜெ. அப்படி பட்ட ஆள் எல்லாம் இல்லை. பொய்யாகவாவது நசிந்து கிடக்கும் மில்களை புனரமைத்து இயங்க செய்வேன், நெசவாளர்களுக்கு சலுகைகள் வழங்குவேன், பம்ப், மோட்டோர் தொழிற்பூங்கா அமைப்பேன் என பொய் வாக்குறுதியாவது கொடுத்து செல்வது தான் அவரது வழக்கம். இப்படி அப்பட்டமாக தனக்கு யதார்த்த நிலை எதுவுமே தெரியாது என மக்கள் உணரும் வகையில் அப்பட்டமாக பிரச்சாரம் செய்து சென்றிருக்கமாட்டார்.


கோவை மாவட்டம் அதிமுகவின் அசைக்கமுடியாத பெரும் கோட்டை என்பது எல்லாம் மே 1 ஆம் தேதி ஜெ பிரச்சாரம் செய்தது வரைக்கும் தான். இப்போது சொந்த கட்சிக்காரர்களும், மக்களும் (அவர்களிலும் தொழிலாளிகளும், கூலி வேலைகாரர்களும், சிறு/குறு தொழில் முனைவோரும் இருக்கிறார்களே?) எல்லோருமே அதிமுகவை விமர்சிக்க தொடங்கி இருப்பதை ஜெ சீரியசாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இந்த தேர்தலில் கோவை பகுதி அதிமுகவுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் அங்குள்ளவர்களின் பேச்சில் தெரிகிறது.

மக்களால் நெருங்கமுடியாத ஜெ. இப்போது வேட்பாளர்களாலும் நெருங்கமுடியாதவராக மாறி போனதை அதிமுகவினரே ரசிக்கவில்லை. தனித்தனி மேடை அமைத்து அங்கே ஜெ உட்கார்ந்திருக்கிறார் என்கிற உருவாக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து, பிரச்சார உரையை வாசித்து செல்லும் வழக்கத்தை ஜெ கை கொண்டிருப்பது அவரை மக்களிடம் இருந்தும், தொண்டர்களிடம் இருந்தும், ஏன் வேட்பாளர்களிடம் இருந்துமே வெகு தூரம் விலக்கி வைத்திருக்கிறது.

மக்களுக்காக நான், மக்களால் நான் என ஒரு பஞ்ச் டயலாக்கை எல்லா பொதுக்கூட்டத்திலும் பேசும் ஜெ ஒருபோதும் மக்களோடு நான் என சொல்லியதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களுக்காக நான் (எதையும் செய்யமாட்டேன்); மக்களால் நான் (எல்லா வளங்களையும் அனுபவிப்பேன்) என்கிற ரீதியிலேயே அவரது அந்த பஞ்ச் டயலாக் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிமுகவினரே அதிக அளவில் பணம் பதுக்கி வைத்திருப்பது வெளியாவதும், யதார்த்தம் சிறிதும் இல்லாத பிரச்சார உத்தியும், மக்கள் பிரச்சனைகளை பற்றிய எந்த உணர்வும் இல்லாத ஜெ. பேச்சும், அதிமுகவின் வெற்றி சதவிகிதத்தை குறைத்து வருவதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது.

முறையாக பிரச்சாரம் செய்து, பொய்யாகவேனும் மக்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்து அதை தீர்த்து வைப்பதாக பொய் வாக்குறுதியேனும் கொடுத்து இருந்தால் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை அப்படியே இருந்திருக்கும். தனது பிரச்சார சொதப்பல்களால் தனது எதிர்காலத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் ஒரு சேர கெடுத்துக்கொண்டு வருகிறார் மாண்புமிகு அம்மா. இது தமிழகத்துக்கு நல்லதா கெட்டதா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.


Wednesday, April 13, 2016

திமுக தேர்தல் அறிக்கை – 2016

தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி இருக்கு. பாரம்பரியமான தேர்தல் முஸ்தீபுகள்னா, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம்.. இப்படி தான் வரிசை. ஆனா இந்த தேர்தலில் பல கட்சிகள் இந்த மரபிலிருந்து மாறிடிச்சு. அதிமுக, நாம் தமிழர், மநகூ எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியாச்சு. ஆனா அவங்க தேர்தல் அறிக்கை என்ன? என்னவெல்லாம் திட்டத்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்க போறாங்கன்னு எல்லாம் அந்தந்த கட்சி காரங்களுக்கே இன்னும் தெரியாது. தேர்தல் அறிக்கை வெளிவந்தால் தான் எதையும் சொல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடியே பிரச்சாரம் தொடங்கிட்டாங்க. காமெடியா இருக்குல்ல?

தேர்தல் மரபை மறக்காம அதே வரிசைக்கிரமமா இப்போதைக்கு செயல்பட்டுட்டு இருக்கிற கட்சின்னா அது திமுக தான். கூட்டணி முடிவு செஞ்சப்பறம், முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செஞ்சப்பறம், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டாச்சு. இனி ஏப்ரல் 23 முதல் பிரச்சாரம்.



இன்னைய தேதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹாட் டாபிக். அவ்வளவு சிறப்பான அறிக்கை அது. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பொதுவாகவே மாநில வளர்ச்சி திட்டங்கள், சமுதாய நலன், அனைத்து துறைகளிலுமுள்ள இடர்பாடுகள் களைதல் மாதிரியான விஷயங்களை முன்வைத்து தான் எப்போதுமே வெளிவரும். அதனால் தான் அதிமுக எந்த தேர்தலிலும் முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிடாமல் திமுகவின் தேர்தல் அறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தனது தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும்.

அதிமுக முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால், அம்மா உணவகத்தில் இந்த ஆண்டு முதல் ருமாலி ரொட்டியும் வழங்கப்படும்னு அறிவிச்சிருப்பாங்க. அந்த லெவல்ல தான் அவங்களால யோசிக்கமுடியும்.

தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வேணும்ன்றத அதிமுகவால சுயமா யோசிச்சு முடிவெடுத்து அறிவிக்க முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய ஆட்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் காலத்தோடவே போயாச்சு. அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படி ஒரு திறமை இருந்தாலும் கூட அதை வெளிப்படுத்த பயந்துகிட்டு கார் டயரையும் ஹெலிகாப்டர் பாட்டத்தையும் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. சர்வைவல்னு வந்துட்டா நம்ம தெறமைகளை பெரிசா காட்டிக்கக்கூடாதுன்னு எல்லா அதிமுக தொண்டனுக்கும் தெரிஞ்சிருக்கு.

இதுவரைக்கும் ஜெ. அறிவித்த செயல்படுத்திய திட்டங்கள் பெரும்பாலானவை, மற்ற கட்சிகள் சொல்லியது, கோரிக்கையா வெச்சது, மற்ற கட்சிகளின் செயல்திட்டங்கள் / தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுன்னு தான் இருக்கே தவிர, தானே சுயமா யோசிச்சு முடிவு செஞ்சு அறிவிச்ச திட்டம்னு அதிகமா கிடையாது.

ஆனா அதேசமயம் மற்ற கட்சிகளை ஒப்பிட்டா திமுகவின் செயல்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் மீதான நிஜமான அக்கறைகளால் செயல்படுத்தப்பட்டதுன்னு புரியும்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் கலைஞருக்கு விபத்தில் கண்ணில் அடிபட்டபோது அதன் வலியும் பார்வையற்ற நிலையின் அவஸ்தையும் தானே உணர்ந்து அதன் அடிப்படையில் அறிவிச்சது. கைரிக்ஷா ஒழிப்பு, எழும்பூர் வந்திறங்கியபோது தன்னை வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதன் கஷ்டம் உணர்ந்து அறிவிச்சது. ஏரி குளங்கள் தூர்வாரல் வெள்ளபெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. மேம்பாலங்கள் சாலை மேம்பாட்டு திட்டங்கள் வெளிநாட்டு பயணம் சென்று கண்டு வந்ததும் நம்ம ஊர்லயும் அது மாதிரி எல்லாம் வேணும்னு தீர்மானிச்சு அறிவிச்சு செயல்படுத்தினது. இலவச திருமண உதவி திட்டம், கல்யாண செலவுக்கு காசு இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் செய்தி படிச்சு அதன் கவலையில் அறிவிச்சது. இப்படி அது ஒரு நீ......ளமான லிஸ்டு. இதெல்லாம் யாரும் திட்டமிட்டு கொடுக்காமல், கோரிக்கை வைக்காமல், போராடாமல் தாமாகவே உணர்ந்து செயல்படுத்திய திட்டங்கள்.

சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான். 

அதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கிட்டத்தட்ட ஆக்ஷன் பிளான் தான். ஒன்றிரண்டு செயல்படுத்தப்படாமல் போகலாம். ஆனால் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமுள்ளவையா என ஆராய்ந்து விவாதித்து அதன் பிறகு தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் வந்தால் அது நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும் என்கிற ஒரு நம்பிக்கை தமிழக மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அதனால் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இவ்வளவு மரியாதை.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை மிக பிரமாதம் என திமுகவை விமர்சிக்கும் பத்திரிக்கைகள் கூட பாராட்டுகின்றன. மக்களை பொறுத்தவரை மிக சிறந்த தேர்தல் அறிக்கை என பெரும்பாலானவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள் என்பது அறிக்கையை வாசித்த அனைவருக்கும் சொல்லாமலே புரியும். அந்த அளவுக்கு நலத்திட்டங்களும் வளர்ச்சி பணிகளும் நிறைந்து கிடக்கிறது.

சமீபத்தில் திமுக பொருளாளர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவது நடத்திய நமக்கு நாமே பயண திட்டத்தில் சந்தித்த மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவற்றில் சாத்தியமானவற்றை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்த தேர்தல் அறிக்கையிலே இணைத்திருக்கிறார்கள். மேலும் முதல் முறையாக மாவட்ட வாரியான செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  75 பக்கங்கள் உடைய இந்த தேர்தல் அறிக்கையை எல்லோரும் படித்திருப்பீர்கள். அதனால் விரிவாக செல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ன்னா...

1.   விவசாயக்கடன் கல்விக்கடன் ஆகியவை ரத்து
2.   விசைத்தறிகளுக்கு முதல் 750 யூனிட் மின்சாரம் இலவசம்
3.   மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இலவசப்பயணம்
4.   விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
5.   சென்னையை போலவே, கோவை மதுரை திருச்சிக்கும் மெட்ரோ ரயில்.
6.   காலியான அரசு பணிகள் உடனடியாக நிரப்புதல்
7.   சென்னை-ஹோசூர்; மதுரை-தூத்துக்குடி சாலைகளில் இண்டஸ்ட்ரியல் காரிடார்
8.   நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்
9.   நீர் மேலாண்மை மேம்பாடு, 200 புதிய தடுப்பணைகள்
10. தோட்டக்கலைக்கு தனி பல்கலைக்கழகம்
11. மின்சாரக்கட்டணம் மாதாமாதம் கட்ட அனுமதி

இதை பத்தி தனித்தனியா ஏன் பிடிக்குதுன்னு விவரிக்கறதா இருந்தா ஒவ்வொரு திட்டத்தின் பின்னணி, அதன் இப்போதைய நிலை, இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் அதில் கிடைக்கக்கூடிய பலன்கள்னு அது ஒரு பெரிய கட்டுரையா மாறிடும்.

அதே சமயத்தில் இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்களே இல்லைன்னு சிலர் புளகாங்கிதப்பட்டு சொல்லி இருக்காங்க. அது தவறு. இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புக்கள் இல்லையே தவிர மானியங்கள், சலுகைகள், இலவசங்கள், கடன் ரத்துக்கள், உதவி தொகைகள்னு எக்கச்சக்க சலுகைகள் இருக்கு. என்ன எல்லா சலுகைகளும் வளர்ச்சி நோக்கிய சலுகைகள் என்பது தான் மிக பெரிய ஆறுதல்.

செலவுகள் குறித்து நிறைய பேசி இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் வருவாய்க்கான திட்டங்கள் எதுவும் சொல்லப்படலை என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக அரசின் கடன் இப்படியான சலுகைகளால் மேலும் கூடும் என்கிற அச்சம் வந்து போகிறது. ஆனால் நிதி நிர்வாகத்தில் இதுவரையும் அமைந்த தமிழக அரசுகளில் திமுக அரசு மட்டுமே சிறப்பா செயல்பட்டது என்பதால், நிச்சயமாக நிதி மேலாண்மையை அதே சிறப்போடு செயல்படுத்துவார்கள் என நம்பலாம்.

கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு ஆகிய அட்ராக்டிவ் அறிவிப்புக்களும் இருக்கு. எனக்கு இது போன்ற அறிவிப்புக்களில் உடன்பாடு கிடையாது என்றாலும் தமிழக அரசியல் களத்தில் வெறும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்து விட முடியாது. கொஞ்சம் கவர்ச்சி அறிவிப்புக்கள் தேவையாக தான் இருக்கு. என்ன செய்ய?

அதேசமயம் 2011 ஆம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 14% திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மற்றவைகளின் கதி என்ன என இதுவரை தகவலில்லை.

உதாரணமா, 10 ஆடை அலங்கார பூங்காக்கள் அமைப்பது, அனைத்து காவல்நிலையங்களையும் மின் ஆளுமையில் இணைப்பது, திருப்பூர் சாயக்கழிவுக்கு விஞ்ஞான முறையிலான சுத்திகரிப்பு நிலையம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க் என பல பல அறிவிப்புக்கள் இன்னமும் முதல் கட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கிறது.

மேலும் நூற்றுக்கணக்கான அறிவிப்புக்களை விதி 110 இன் கீழ் அறிவித்த ஜெ. அதில் 20% கூட செயல்படுத்தவில்லை என்பதையும் கவனித்தால், திமுக தேர்தல் அறிக்கைக்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எளிதில் புரியும்.


திமுக தேர்தல் அறிக்கை வந்தபிறகு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் விருத்தாசலம் பிரச்சாரத்தில் பேசிய ஜெ. நான் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவேன். அவற்றை செயல்படுத்துவேன். சொல்லாததையும் செய்வேன் என ஒரு பொதுப்படையான அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, இன்னின்ன திட்டங்கள், இன்னின்ன வழிமுறைகளில் செய்ய போகிறேன் என தீர்க்கமான ஒரு கருத்தாக்கம் அவரிடம் இன்று வரை இல்லை என்பதை கவனிக்கலாம்.

சென்னை பிரச்சாரத்தில் பேசிய ஜெ. தனது சாதனை என சொன்னது, மெட்ரோ ரயில் துவக்கியது, மின் விநியோகம் சீராக்கியது, வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றை தான் முக்கியமான சாதனை என சொல்லி இருக்கிறார்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம், மோனோ ரயில் தான் வேண்டும் என அடம் பிடிச்சு, திமுக தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் முடக்கிவைத்து, கடைசியில் ஹைகோர்ட் போய் நீதிபதிகள் கண்டிச்சு உத்தரவு போட்டப்பரம் தான் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்துச்சுன்றது சென்னையில் உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா அதை தன்னுடைய சாதனையா சொல்லி இருக்கும் ஜெ. நம்மை எந்தளவுக்கு முட்டாள் என முடிவு செய்திருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம்.

மின் விநியோகம் பற்றி கேட்கவே வேண்டாம். மின் விநியோகம் சீரானது, மின் மிகை எல்லாம் சொன்னாலும் நிஜ கதை என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

வெள்ள நிவாரண பணிகள் பற்றி நான் சொல்வதை விட இணையத்தில் உள்ள பலரும் கட்டுரை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். பலரும் நிவாரண பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். அதிமுகவும் தமிழக அரசும் எப்படி எல்லாம் நிவாரண பணிகளை முடக்கி வைத்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடம் நான் விவரிப்பது சரியல்ல. அவர்களே எல்லோரிடத்திலும் ஜெ. சொன்ன பொய்யின் பிரம்மாண்டத்தை புரியவைத்து விடுவார்கள் என நம்பலாம்.

ஆகமொத்தம், ஜெ. தன்னுடைய ஆட்சியின் சாதனைன்னு சொல்லிய எதுவுமே உண்மையில் சாதனையே அல்ல.

அப்படியாக, தமிழக தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பிரமாண்டமான உத்வேகம், கள நிலைமையை மொத்தமாக புரட்டிப்போட்டு, இது வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் காற்றை திமுகவுக்கு சாதகமாக திருப்பி விட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வெளிவரக்கூடிய அதிமுக தேர்தல் அறிக்கை இனி எதை முன்வைத்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது என்பது உறுதி. ஏனெனில் நடைபெற்ற இரண்டு பிரச்சார கூட்டங்களிலும் எந்த திட்டத்தையும் சொல்லாத ஜெ. தேர்தல் அறிக்கையில் அறிவிப்புக்களை அழகாக அச்சடித்து கொடுத்தால் அது திமுக அறிக்கையின் நகல் / பாதிப்பு என தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர சொந்த முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட பலவும் செயல்பாட்டுக்கு வரலைன்ற உண்மையும் மக்களுக்கு தெரியும்.

2006 தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் நிஜமான ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கை தான்.


Saturday, March 26, 2016

தமிழக தேர்தல் களம் – 2016

ரு வழியா இப்போதைக்கு ஓரளவு தேர்தல் களம் தயாராயிருச்சு. இன்றைய தேதியில் இது தான் காட்சி

அதிமுக – கூட்டணியில் யாருமில்லை. தனித்து நிற்கிறது (சமக & 132 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

திமுக – காங்; மமகவுடன் கூட்டணி (58 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

தேமுதிக – மநகூ (விசி, மதிமுக, சிபிஎம், சிபிஐ) உடன் கூட்டு

பாமக – தனித்து போட்டி

பாஜக – தனித்து போட்டி

நாம் தமிழர் – தனித்து போட்டி

சிபிஐ (எம்.எல்) – தனித்து போட்டி

தமாகா – கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது. முடிவு தெரியவில்லை

கூட்டி கழிச்சு பார்த்தா அதிமுக ஈஸியா ஜெயிச்சிருவாங்க போல தான் தெரியுது. ஆனா அதில் சில ‘ifs and buts’ இருக்கு.

திமுக காங் ஓரளவு பிராண்டடான நம்பகமான கூட்டணியா இருந்தாலும் அவங்களுக்கு எதுக்காக ஓட்டு போடணும்னு ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டா அதுக்கான தெளிவான பதில் இப்போதைக்கு இல்லை. ஆட்சி மாற்றம் என்கிற ஒற்றை விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்றாங்களே தவிர வேற ஒண்ணும் புதுசா இல்லை. ஆட்சி மாற்றம்னு வெச்சுக்கிட்டாலும் ஏன் திமுக காங் அணிக்கு போடணும்? ஏன் தேமுதிக அணிக்கு போடக்கூடாதுன்னு கேட்டா அதை அவங்களால் ஜஸ்டிபை பண்ண முடியலை. கேட்டா மநகூ கேலிக்கூத்தான கூட்டணினு காமெடி தான் பண்ணிட்டு இருக்காங்க. மத்தபடி “இதுதான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை. அதனால் அதிமுக வேண்டாம். மிச்சம் இருப்பவர்களில் இன்னின்ன கட்சிகளிடம் இதெல்லாம் குறை. அதனால் திமுக காங் கூட்டணிக்கு வாக்கு அளியுங்கன்னு” இதுவரைக்கும் யாரும் உருப்படியா சொல்லலை. தேர்தல் அறிக்கை, அதை தொடர்ந்து அவங்க செய்யும் பிரச்சாரம் எல்லாம் எதை முன்னிறுத்தி அமையுதுன்றதுல தான் திமுக காங் அணிக்கான ஆதரவு இருக்கு. இத்தனை காலத்தை ஏன் இப்படி வீணடிச்சு தேமேன்னு இருந்தாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியலை. இத்தனைக்கும் மிகப்பெரிய இயக்கங்கள். தேர்தலில் நெளிவு சுளிவு அறிஞ்சவங்க வேறே.


தேமுதிகவை தேடி போய் மநகூவை அடகு வைக்குற கடைசி நிமிஷம் வரைக்கும் தமிழகத்தின் புதிய நம்பிக்கையா இருந்த கூட்டணி அது தான். பாலபாரதி எம்.எல்.ஏ சொல்லாமல் சொன்னமாதிரி மிக மிக அருமையான ஒரு வீணையை செஞ்சிட்டு அதை வாசிக்க தெரியாம, பயன்படுத்த துப்பில்லாம குப்பைல தூக்கி போட்ட மாதிரி இருக்கு இப்போதைய நிலைமை. தேமுதிகவை பொறுத்தவரைக்கும் முதல் அமைச்சர் ஆகணும்ன்ற ஒரே குறிக்கோள்தான் டார்கெட்டு. அதை யார் தந்தாலும் அங்கிட்டு சாஞ்சிருப்பாரு. பாமக சொல்லிருந்தா கூட அங்கே போயிருப்பாரு. மத்தபடி முதல்வர் ஆகுற அளவுக்கு என்ன வகையான செல்வாக்கு வளர்த்திருக்கோம். என்ன செயல்திட்டம் வெச்சிருக்கோம்னெல்லாம் அவங்களால சொல்லவே முடியலை. மநகூ எதுக்காக அம்புட்டு அவசரமா கேப்டனை தேடி போய் காலில் விழுந்தாங்கன்றது தேமுதிகவுக்கே தெரியாத புதிர். கிட்டத்தட்ட ஒரு மாற்று அரசியல் அணியா முகிழ்த்து நடுநிலை மக்களிடம் ஓரளவு செல்வாக்கும் வளர்த்துகிட்ட மநகூ திடீர்னு இப்படி சரண்டர் ஆகியிருக்க தேவையே இல்லை.


திருமா, தா.பா, வைகோ, ரங்கராஜன், நல்லகண்ணு, மல்லை சத்யான்னு ஒரு மிகப்பெரிய பிரச்சார பெரும் குழுவே உள்ள ஒரே அணி மநகூ. நான் கூட இவங்க ஒவ்வொரு திசையிலும் பின்னி பெடலெடுத்து பிரச்சாரம் பண்ணினா தனிப்பெரும் தகுதியோட ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்குனு நினைச்சிருக்கேன். மேலும் இந்த அணி தலைவர்கள் மேல எந்த குற்றச்சாட்டும் பெரிசா இல்லை. எந்த அதிருப்தியும் இல்லை. சில சின்ன சின்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதனால் மிக பெரிய நம்பிக்கை இந்த அணி மேல எல்லோருக்கும் இருந்துச்சு.

ஆனா, திடீர்னு கேப்டன் காலில் விழுந்து அவருக்காக எல்லா கொள்கை முடிவுகளையும் மறு பரிசீலனை செஞ்சு பல முடிவுகளை மாத்தி அவருக்கு தகுந்த மாதிரி நெளிஞ்சு வளைஞ்சு குனிஞ்சு நிக்கிறது பார்க்க கஷ்டமா தான் இருக்கு. தமிழ்நாட்டோட அதிர்ஷ்டம் அம்புட்டு தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.


தேமுதிகவை பொறுத்த வரைக்கும் மநகூவை சேர்த்துக்கிட்டாலும் மிக பெரிய பிரச்சனை என்னன்னா அது தனியா 124 தொகுதிகளிலும் ஜெயிச்சாகனும். அப்ப தான்  மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். அதிமுக, திமுக பண / படை பலத்தை எதிர்த்து நின்னு போராட வேண்டி இருக்கும். மிக சிறப்பான பிரச்சார படை இருந்தாலும் கேப்டன் ஒருத்தரின் ஏடாகூடமான ஒரே ஒரு பிரச்சாரம் மொத்த இமேஜையும் கெடுத்திரும். அதனால தான் இப்பவே கேப்டன் பிரச்சாரம் செய்ய மாட்டார்னு தெளிவா சொல்லி இருக்காங்க. பிரச்சாரம் மட்டும் தான் இந்த அணியின் பலம். நம்பகத்தன்மை போனவாரமே போயிருச்சு. வைகோ தன் சுய நலத்துக்காக கூட்டணியை அடமானம் வெச்சது ஏற்கனவே தோழர்களை கடுப்பாக்கி இருக்கு. சிறுத்தைகளின் மௌன உறுமல்கள் இன்னொரு பக்கம். இந்த சூழல்ல சிந்தாம சிதறாம கூட்டணியை கட்டி காக்கவேண்டிய பெரிய பொறுப்பு வைகோவுக்கு இருக்கு. ரெண்டு நாளா பிரேமலதா வேறே வைகோவுக்கு மறைமுகமா கடுப்பை கொடுத்துட்டு வர்றதையும் கவனிக்கணும். ஒரு கட்டத்தில் அதை சகிக்க முடியாம போனா உணர்ச்சி வசப்பட்டு சட்டுனு கூட்டணியை விட்டு வெளிநடப்பு செய்ய கூட வைகோ தயங்க மாட்டாரு. அது மட்டும் நடந்தா வைகோ அதிமுக அணிக்கும் திருமா திமுக அணிக்கும் போய்விட கூட சான்ஸ் இருக்கு.


தமாகா ஓரளவு சில தொகுதிகளில் வாக்கு வங்கி வெச்சிருக்குன்னாலும் தனியா நின்னு ஒரு தொகுதியை வெற்றி கொள்ளும் அளவுக்கு எந்த தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குகள் அதுக்கு இல்லை. அதனால் கூட்டணி தான் பெஸ்டுன்னு புரிஞ்சு வெச்சிருக்காரு வாசன். அந்த மட்டும் சந்தோஷம். ஆனா கட்சியின் செல்வாக்கு லெவல் என்னன்னு தெரியாம 60 வேணும் 80 வேணும்னு கேக்குறது எல்லாம் சரியா படலை. அதிமுக ஓரளவுக்கு தாராளமா 25 தொகுதி வரை தர்றேன்னு சொல்றதே பெரிய விஷயம். ஆனா அதை வேண்டாம்னு முறுக்கிட்டு திமுக பக்கம் வந்தாலோ தேமுதிகவுடன் சேர்ந்தாலோ வாசனுக்கு நஷ்டம் தான்.

பாமக வடக்கு வடகிழக்கு மாவட்டங்களில் ஓட்டை பிரிக்கும். பாஜக 3 தொகுதிகளில் செல்வாக்கு உள்ள தேசிய கட்சி. அங்கே அவங்களும் ஓட்டை பிரிப்பாங்க. ஏற்கனவே அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மூணா பிரிஞ்சு நிக்குது. அதனால் அதிமுகவுக்கு தான் லாபம்.

மார்ச் 29 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டுல தொடர்ந்து நடக்கப்போகும் விசாரணை அதன் தீர்ப்பு தேதி அந்த தீர்ப்பின் தாக்கம் ஒரு பக்கம், உட்கட்சி குழப்பங்களை எந்த அளவுக்கு அம்மாவால திறமையா கட்டுப்படுத்தி அடக்க முடியுதுன்றது இன்னொருபக்கம். இந்த ரெண்டில் ஏதாவது ஒண்ணு பாதகமா போனாலும் ஓட்டு ஸ்விங் ஆகி தேமுதிக பக்கம் சாயும். நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் என்பதால், பிரிந்து நிற்கும் ஓட்டுக்களும் சிதறிக்கிடக்கும் செல்வாக்குகளும் டீபால்ட்டா அதிமுகவை வெற்றி அடைய செய்யும். ஆனா நம்பகத்தன்மை போயிருச்சுன்னா நடுநிலை வாக்காளர்கள் அதிமுகவுக்கு மாற்றா தேமுதிகவை தான் முன்னிலைப்படுத்துவாங்காண்ணு நினைக்கிறேன்.

விஜயகாந்துக்கு அதிர்ஷ்டம் இருக்குனு தான் நினைக்கிறேன்.

அடுத்த பத்து நாளில் நடக்கப்போகிற நிகழ்வுகள் தான் தமிழக வரலாறை தீர்மானிக்க போகுது. பத்து நாள் கழிச்சு மீண்டும் பேசுவோம்.

Friday, April 18, 2014

தேர்தல் களம் - 2014

நாடாளுமன்ற தேர்தலுக்கான களம் தயாராக இருக்கிறது. ஏற்கனவே சில கட்ட வாக்குப்பதிவுகள் முடிவுற்று, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் பல பல வகைகளில் முக்கியத்துவம் வாயந்ததாக நான் கருதுகிறேன்.


பொதுவாக நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, மத்தியில் யார் நிலையான நல்லாட்சி தருவார்கள், பொருளாதார சிக்கல்களை சமாளித்து நிதிநிலையை மேம்படுத்துவார்கள், வளர்ச்சி, தொழில், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை உயர்த்துவார்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கம். இரு முக்கிய கட்சிகளும் ஏதேனும் ஒரு தேசிய கட்சியை சார்ந்து தேர்தலை சந்தித்து வந்ததால், நமக்கு நம்முடைய மாநில கட்சி நிலைப்பாடு, மத்திய கட்சி நிலைப்பாடு ஆகியவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இது வரை வந்ததில்லை. இந்த தேர்தலில், இரு முக்கிய தமிழக கட்சிகளும் தனித்து நிற்பது மாதிரியே தேசத்தின் முக்கியமான மூன்று கட்சிகளும் தனித்தே தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.

நான் இந்த கட்டுரையில் எனது மனவோட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன். இது பொதுவான கருத்தாக இருக்கவேண்டும் என்றோ, மற்றவர்கள் எனது கருத்துடன் உடன்படவேண்டும் என்றோ நான் கட்டாயப்படுத்தவில்லை.

நிற்க!

நடைபெற இருப்பது மத்திய ஆட்சிக்கான தேர்தல் என்பதால், முதல் நோக்கிலேயே நான் மாநிலக்கட்சிகளை விலக்கிவிட நினைக்கிறென். அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்களும் தமிழகத்துக்காக தமிழக நலனுக்காக மிகப்பெரிய பலனளிக்கக்கூடிய திட்டங்களையெல்லாம் நல்கி, நாமெல்லாம் இன்றைக்கு இந்த அளவுக்கு சீரோடும் சிறப்போடும் கவுரவத்தோடும் வாழ வழி செய்தவை என்பதற்கான நன்றி என்றென்றைக்கும் எனக்கு உண்டு. ஆனால் இந்த நிமிடம் வரை, நான் அதிமுகவை ஆதரித்தாலோ, திமுகவை ஆதரித்தாலோ, அந்த வாக்குகள் மத்தியில் யாருடைய ஆட்சி அமைவதற்கு, அல்லது யாருடைய ஆட்சியின் ஆதரவிற்கு உதவும் என்பது தெரிவிக்கப்படாமலேயே இருக்கிறது.


சமீபகாலம் வரை பாஜகவை விமர்சிக்காமல் இருந்த அதிமுக, தனது கூட்டணியிலிருந்து இஸ்லாமிய இயக்கம் விடைபெற்றுக்கொண்ட பின்னால், பாஜகவையும் எதிர்க்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வந்துவிட்டது. திமுகவின் தேர்தலுக்கு பிந்தைய நிலை இன்னமும் தெளிவாகவில்லை. மூன்றாம் அணி என்பது வெற்றுக்காகிதத்தில் விரல்கொண்டு வரைந்த அழகிய ஓவியமாய் யாருக்கும் பயனின்றி கழிந்துவிட்டது.

எனவே, மாநில வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டிருந்தாலும், நடைபெறவிருப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை கருத்தில் கொண்டு, திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களையும் நான் எனது பரிசீலனை பட்டியலில் நின்றும் அகற்றிவிட்டாயிற்று.

தேசிய கட்சிக்காக தான் ஓட்டளிக்க முடியும் என்கிற நிர்ப்பந்தத்தில் என் முன்னே மூன்று அணிகள் நிற்கின்றன.

தேசமெல்லாம் சட்டென ஒரு மாற்றத்துக்கான அலை வீசுவதாக கற்பிக்கப்பட்டு அந்த அலையின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மரியாதைக்குரிய திரு நரேந்திர மோடி அவர்கள் மீதான மதிப்பை அவரது கட்சியின் தேர்தல் அறிக்கையும், அவர் வெளியிட்ட வெற்று பரபரப்பு விளம்பரங்களும், குஜராத் பற்றி வந்துகொண்டிருக்கும் அலை அலையான நிதர்சன செய்திகளும், சிற்சில மேடைகளில் அவர் பேசிய பேச்சுக்களின் யதார்த்தமின்மையும் உடைத்துப்போட்டுவிட்டன.

ஒரு சில மாதங்கள் முன்பு வரை கூட எனக்கு பாஜக ஆட்சி என்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் என்கிற முன் அனுபவம்,. அத்வானி போன்றவர்களின் தற்போதைய பண்பட்ட நிலை, சுஷ்மா போன்றவர்களின் சமத்துவ கொள்கை, யஷ்வந்த், பிரமோத் போன்றவர்களின் அறிவார்ந்த ஆளுமை ஆகியவை, பாஜகவை எப்போதோ ஒரு தீண்டத்தகாத கட்சி என்கிற நிலையிலிருந்து மேம்படுத்தி ஆளும் திறமையான கட்சியாக எனக்குள் உருவகப்படுத்தி விட்டிருந்தது. ஆனால், பிரதமராக மோடி முன்னிறுத்தப்பட்டது, அவரது வெளிப்படையான கொள்கை, அவர் பேசியெ சில பேச்சுக்கள், மிக மிக முட்டாள்த்தனமான பாஜக தேர்தல் அறிக்கை ஆகியவை அதை மறுபரிசீலனை செய்ய வைத்து விட்டன. நான் இந்துவாக இருப்பதை விடவும் இந்தியனாக இருக்கவே அதிகம் பிரியப்படுகிறேன். ஆனால் இந்தியனாக இருப்பதை விடவும் இந்துவாக இருப்பவனுக்கே முன்னுரிமை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது பாஜகவின் தேர்தல் அறிக்கை. இளம் பிராயத்திலிருந்து உண்டு உறங்கி பழகி வளர்ந்த சக தோழர்களை என்னிலிருந்து விலக்கிவைக்கும் ஒரு கொள்கைக்கு கனவிலும் நான் ஆதரவளித்துவிட தயாராக இல்லை.

இன்றைக்கு இந்தியா எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார சிக்கல்கள், சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து தப்பிக்கவேண்டிய கட்டாயம், எதிர்கால சந்ததியினருக்கான வளர்ச்சி திட்டங்கள் என எதையும் பாஜகவின் தேர்தல் அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. மிக முக முக்கியமான, வெளியுறவு கொள்கை குறித்து ஒரே ஒரு வரி கூட தேர்தல் அறிக்கையில் இல்லைமாறாக இராமர் பாலம், இராமர் கோவில், இந்துக்களுக்கு மட்டுமான பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டுக்கு பாதகமான நிலைப்பாடு, கொசுக்கள் ஒழிப்பு என மிக மிக பத்தாம் பசலித்தனமான ஒரு தேர்தல் அறிக்கையை சமர்ப்பித்து, யுவ இந்தியாவின் கனவுகளை தகர்த்திருக்கிறது பாஜக.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முரண்பாடான கட்சிகளை சேர்த்து கட்டிய குடுவையாக ஒரு கூட்டணியை அமைத்திருப்பதும், தங்கள் கட்சியின் ஒருமுகப்பட்ட ஆட்சி அமையும் என்கிற அவர்களது நம்பிக்கையின்மையும், எனக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாற்றம் தேவை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது பள்ளத்துக்கு பயந்து பாதாளத்தில் குதித்த கதையாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். இப்போதைய பொருளாதார சூழலில் இந்தியாவில் ஒரு பரீட்சார்த்தமான ஆட்சிமுறை என்பது முட்டாள்த்தனமான முடிவாகவே அமையும். முரண்பாடுகளின் சங்கமம், பெரும்பாலும் நிம்மதியான ஆட்சியை கேள்விக்குறியாக்கி, முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் நாட்டை சீரழித்துவிடும் என்பதை நாம் பல முறை கண்டு உணர்ந்துள்ளோம்.

இரண்டாவதாக என் கவனத்தை கவர்ந்தது, நான் எப்போதும் பெரிதும் மதிக்கும் நேசிக்கும் கம்யூனிஸ்டு கட்சியினர்.



இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைக்கும் உரிய நல்ல தீர்வுகளை தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரே இயக்கம் இடது சாரி இயக்கம் என்பதில் எனக்கு எப்போதுமே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்கள் தங்களை காலத்துக்கு தக்கபடி மேம்படுத்திக்கொள்ளவில்லை என்பதிலும், ஆக்கப்பூர்வமாக செயல்பட தவறிவிட்டார்கள் என்பதிலும் எனக்கும் கனத்த வருத்தமுண்டு.

மிகுந்த பிராயத்தனத்தினிடையில் பதினோரு கட்சிகள் உள்ளடக்கிய மூன்றாம் அணியம் சில மாதங்களுக்கு முன் அறிவித்த கம்யூனிஸ்டுகள், என் மனதில் லேசாக நம்பிக்கை விதையை நட்டு வைத்து சென்றார்கள். நேர்மை, நாகரீகம், மதச்சார்பின்மை, பொருளாதார தெளிவு நிலை, அடிப்படை தொழிலாளர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் கஷ்டங்கள் புரிந்த, உணர்ந்த ஒரு இயக்கமான கம்யூனிஸ்டுகளின் கைகளில் ஆட்சி பொறுப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்காத நாளில்லை. அதே சமயம், முதலாளித்துவத்துக்கு எதிரான மிக முரட்டுத்தனமான கொள்கையையும் அது கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் இரு தரப்பையும் ஒரு சேர அனுசரித்து சென்றாலொழிய ஒட்டுமொத்த வளர்ச்சியை காண முடியாது. மேலும் நாடு முழுமையும் பரவலாக ஆதரவில்லாததால், மாநில கட்சிகளை நம்பி மட்டுமே களமிறங்குகிறது. இதுவும் ஒரு வகையில் நிலையற்ற, நிர்ப்பந்தங்களுக்குட்பட்ட ஆட்சியாக அமைந்து விட்டால், இன்றைய பொருளாதார நிலையில் இந்தியா மீண்டெழ முடியாத ஆழத்தில் வீழ்ந்துவிடும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இறுதியாக, விரும்பியோ விரும்பாமலோ என் முன்னே வந்து நிற்பது, காங்கிரஸ் தான். எத்தனையோ பாதக முடிவுகளை எடுத்திருந்தாலும், கசப்பான உணர்வுகளை ஊட்டியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் மிக பெரிய வளர்ச்சியையும், பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கை தர உயர்வையும் தந்திருக்கிறார்கள். சிற்சில மாநிலங்களில் நான் பயணிக்க நேர்கையிலெல்லாம் உணர்ந்திருக்கிறேன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்த இடங்களா இவை? மருத்துவமனை, சாலைகள், பள்ளிக்கூடங்கள், நீர்தேக்கங்கள், மின் திட்டங்கள், குடிநீர் வசதி, விவசாய மேம்பாடு என அவை வளர்ந்து கிராமங்களில் இருந்துவந்த இடமாற்ற சதவீதத்தை கணிசமாக குறைத்திருக்கிறது இந்த ஆட்சி.

யாரை பிரதமராக முன் நிறுத்தப்போகிறார்கள் என தெளிவாக சொல்லாவிட்டாலும், அவர்களது தேர்தல் அறிக்கை தெளிவாக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு என்னென்ன தேவை என்பதை சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அவற்றில் பாதியை நிறைவேற்றினால் கூட நாம்  கணிசமான முன்னேற்றத்தை அடைந்துவிட முடியும். பிற கட்சிகளை போல நாட்டுக்கு உண்மையிலேயே என்ன தான் தேவை என்பதை உணராமல் இருக்கும் அவல நிலை காங்கிறசிடம் இல்லைகாங்கிரஸ் மீது வைக்கப்ப்டும் புனை குற்றச்சாட்டுக்களை அவர்கள் கையாண்ட விதமும், அப்படியான வன்மங்களை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் உரிய வளர்ச்சிப்பணிகளை  மக்களின் நலனுக்காக கொண்டுவததும் என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் கவர்ந்தது.

நாட்டிலுள்ள 32 மாநிலங்களில் சராசரியாக மாநிலத்துக்கு 9 சீட் வென்றாலும் கூட எளிதாக காங்கிரஸ் ஆட்சியை வென்றெடுத்துவிடும் என்பதிலும் மத்திய இந்தியா, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் அதிரடியாக ஏற்படுத்திய அபரிமிதமான வளர்ச்சியை கண்கூடாக கண்டு அனுபவித்து வரும் அந்தந்த மாநில மக்கள் கணிசமாக ஆதரித்து காங்கிரசை அரியணையில் ஏற்றிவிடும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

எனவே வெற்றிபெறக்கூடிய ஒரு கட்சிக்கு, அதிலும் தேசிய கட்சிக்கு எனது வாக்கினை காணிக்கையாக்குவதே அந்த வாக்குக்கான மரியாதையாக இருக்கும் என கருதுகிறேன்.

ஒருவேளை, திமுக தனது ஆதரவினை பாஜகவிற்கு வழங்குமேயானால், திமுகவின் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி என்கிற நிலை உருவாகுமேயானால், எனது வாக்கினை திமுகவிற்கோ, பாஜகவிற்கோ அளிப்பதில் சங்கடமில்லை. காரணம், திமுக ஒருபோதும் தேச நலனுக்கு எதிராக எந்த கட்சியையும் செயல்பட அனுமதிக்காது. அதற்கு பல பல உதாரணங்கள் உள்ளன. திமுகவின் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி வருமானால், நிச்சயமாக மக்கள் விரோத முடிவுகளை பாஜக எடுக்க திமுக அனுமதிக்காது. காங்கிரசிடமிருந்து ஒரு மாற்று வேண்டும் என்கிற எல்லோரது எதிர்பார்ப்பும் அதன் மூலம் நிறைவேறக்கூடும்.




ஆனால், இன்றைய நிலையில் திமுகவோ, அதிமுகவோ தங்க்ள் குழப்ப நிலையிலிருந்து வெளியே வராமல் இருப்பதாலும், தங்கள் எதிர்கால திட்டம் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாலும், பாஜக தனது அடிப்படையான பிற்போக்கு கொள்கைகளை முன் வைத்து வருவதாலும், மாற்று ஆளுமையான கம்யூனிஸ்டுகள் பலமிழந்து நிற்பதாலும், நாட்டின் எதிர்காலத்தை கருதி, காங்கிரசை ஆதரித்தாக வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம்.

தமிழகத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலை பொறுத்தமட்டில், எல்லா முக்கிய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவதால், ஒரு தொகுதியில் ஒரு கட்சிக்குள்ள வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியும்இந்த தேர்தலில் அனுதாப அலையோ, அரசியல் அலையோ, தேர்தலுக்கான முக்கிய பிரச்சனையோ எதுவும் இல்லாமல் களம் மிக தெளிவாக இருக்கிறது. அவரவர் கட்சிக்கு, ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பலம் என்பது தான் முக்கியம் என்பதால், ஓரளவு வெற்றி தோல்வியை கணித்துவிட முடிகிறது.

மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் அதிக பலம் இருப்பதும், காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளில் பாரம்பரிய ஓட்டுக்கள் இருப்பதும் அனைத்து கட்சியினரும் அறிந்த ஒன்றே. முந்தைய தேர்தல்களில், அந்த ஓட்டுக்களை குறிவைத்தே அவர்களை அரவணைத்து சென்றன கழகங்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்பதால், தங்களது பாரம்பரிய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் தாங்களே பெற்றிட முடியும் என்கிற நம்பிக்கை அவர்களிடம் அதீதமாக காணப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சிஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். பாஜக அணி, காங், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி என வாக்குகள் பிரிகையில் யாருக்கு அந்த தொகுதியில் அதிக பலம் இருக்கிறதோ அவர்களே வெல்வார்கள் என்பதால்மிக சிறிய வாக்கு வித்தியாசங்களில் கூட வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படலாம்.

புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் மிக அதிக அளவில் ஆர்வமாக வந்திணைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. கல்வி, தொழில், உள்கட்டமைப்பு மேம்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கண்கூடாக கண்டு அனுபவித்து வருபவர்கள் அவர்கள். பொருளாதாரம் புரிந்தவர்கள், சர்வதேச மந்த நிலையிலும் இந்தியா தனித்தன்மையோடு நின்றதற்கான காரணத்தை அறியாமல் இருக்க மாட்டார்கள்.

எனவே, இந்த தேர்தலில் பலரது கணிப்பையும் பொய்யாகி விசித்திரமான தேர்தல் முடிவு வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

தேர்தல் நெருக்கத்தில் திமுக பிரயோகிக்கவிருக்கும் பிரம்மாஸ்திரமும், தமிழக தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் வெளியிடக்கூடிய முக்கிய அறிவிப்புக்களும் கூட தேர்தல் கணிப்பையும், ஏன், எனது தனிப்பட்ட கணிப்பையும் கூட தகர்த்து எறிந்து விடக்கூடும் தான்.

என் இந்தியா என்னவாகிவிடப்போகிறது என்கிற அச்சம் கலந்த ஆர்வத்துடன் எல்லோரையும் போல காத்திருக்க தொடங்குகிறேன்.. மே 16க்காக.

Printfriendly