Showing posts with label Stalin. Show all posts
Showing posts with label Stalin. Show all posts

Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Thursday, February 11, 2016

ஸ்டாலின் குறித்த ஜெ. பேச்சு – அருஞ்சொற்பொருள்

நேத்து சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை ஜெ. நடத்தி வெச்சு பேசிருக்கார்.. (அட நேர்ல தாங்க.. இதையெல்லாமா வீடியோ கான்பரன்ஸ்ல செய்வாங்க?)

அந்த பேச்சு தான் பல டிவிஸ்டுகளை சுமந்துட்டு இருக்கு.

ஒரு PhD ஆய்வு கட்டுரை எழுதுற அளவுக்கு அந்த பேச்சு இருக்கு. பேச்சை எழுதி கொடுத்த பிரகஸ்பதி நிறைய மறைமுக குத்துக்களை வெச்சு எழுதிருக்கார். (அவருக்கு யார் மேல என்ன கோபமோ?) அந்த பேச்சில் ரெண்டு குட்டி கதைகள் இருக்கு. அதில் ஒன்று தான் அப்பா மகன் பத்தின கதை. அது தமிழக அரசியலை லைட்டா ஷேக் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு நினைக்கிறேன்.

கதை இங்கே இந்த லிங்க்கில் இருக்கு.. படிச்சிட்டு வாங்க... தொடர்ந்து பேசுவோம்.



"நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என ஜெ. கடைசியில் சொல்லி இருந்தாலும், இந்த கதை டைரக்டா திமுகவையும் கலைஞர், ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும் தான் குறிக்குதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.

இப்போ அந்த கதையில் உள்ள சில முக்கியமான விஷயங்களை கவனிக்கலாமா?

1.   இந்த கதையின் மிக முக்கிய வரியாக நான் நினைப்பது “அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்” தான்.

சொந்த மகனே ஆனாலும் தன் முயற்சியில் தானே தான் வளரணும்னு தான் அந்த அப்பா நினைச்சிருக்கார். தன்னுடைய மகன்றதுக்காக எந்த சலுகையும் காட்டலை, உதவியும் செயலை என்பதை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்காங்க ஜெ.

இதன் மூலம் திமுகவில் குடும்ப அரசியல்னு பேசிட்டு இருக்கிறவங்க மூக்கையெல்லாம் பலமா உடைச்சதொட, திமுக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதையும் எல்லோருக்கும் உறைக்கிற மாதிரி உணர்த்தி இருக்கார் ஜெ.

2.   ஸ்டாலின் போதிய அளவுக்கு பதவி உயர்வு அடையலையே என்கிற ஆதங்கம் ஜெ.வுக்கு இவ்வளவு ஆழமா இருந்திருக்கும்னு ஸ்டாலினே கூட நினைச்சு பார்த்திருக்கமாட்டார்னு  தோணுது.

3.   அதிமுகவில் அடுத்த தலைமைக்கு டி.டி.வி தினகரனை முன்னிலைப்படுத்த முயற்சி நடப்பதா செய்தி வரும்போது ஜெ.வின் இந்த பேச்சு இன்னும் முக்கியத்துவம் அடையுது. அந்த கட்சியை பார்.. சொந்த மகனுக்கே சலுகை காட்டலை.. புரிஞ்சு நடந்துக்கிடுங்கன்னு இண்டைரக்டா சுட்டி காட்டி இருப்பதா நாம நினைக்கலாம்.

4.   நெஞ்சை திறந்து எழுதிய புத்தகமான நெஞ்சுக்கு நீதியை எல்லோரும் படிச்சு புரிஞ்சுக்கணும்னு ஜெ. சொல்வது புரிகிறது. ஆனால் அப்படி எல்லோரும் அதை படிச்சால் அதிமுகவுக்கு தான் சிக்கல். அந்த புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் முழுசா படிச்ச எந்த தமிழனும் தான் இருக்கிற கட்சியில் இருந்து விலகி திமுகவில இணைஞ்சிரலாமான்னு தான் முதலில் யோசிப்பான். அந்த அளவுக்கு தமிழகத்தின் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, அந்த தளைகளில் இருந்து மக்களை எப்படி மீட்டெடுத்தோம், என்னென்ன திட்டங்கள் என்னென்ன காரணங்கங்களுக்காக தொடங்கப்பட்டன, அப்போதைய தமிழக மக்களின் நிலை என்ன, அதை இப்போதிருக்கும் நிலைக்கு எப்படி படிப்படியாக முன்னேற்றினோம் என்பதை எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார். அந்த சமையத்தில் ஏற்பட்ட பல அரசியல் சதுரங்க நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருக்கிறார்.

புத்தகத்தில் ஜெ. சொன்ன மாதிரி கலைஞரின் தில்லுமுல்லுக்களை தேடினா ஏமாற்றம் தான் மிஞ்சும். (தன் தவறுகளை தானே எப்படி எழுதுவார்?)

எப்படியோ நெஞ்சுக்கு நீதி இன்னொரு ரெண்டு எடிசன் பதிப்பிக்கப்பட்டு இந்த வருஷம் சென்னை புத்தக கண்காட்சியிலேயே சக்க போடு போடும் என்பதும் அதை வாங்கும் பெரும்பாலானோர் அதிமுகவினர் என்பதும், அவர்கள் முகவின் தில்லுமுல்லுகளை தேடி தேடி கடைசியில் முகவின் அபிமானியாகவே மாற வாய்ப்பு இருக்கிறது என்பதும் எனது இதர அவதானிப்புக்கள்.

5.   மக்கள் நல கூட்டணி, தேமுதிக, பாமக என பலரும் அதிமுகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டாலும், ஜெ. அவர்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்கவில்லை என்பது புரிகிறது.  தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி கிடக்கும் ஒரு கட்சியான, அதிலும் அதிகார பூர்வ எதிர்கட்சி கூட அல்லாமல் ஜஸ்ட் ஒரு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண அரசியல் கட்சியான திமுகவை கண்டு தான் அவர் ஆடி போயிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது.

“எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை. ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்” என்கிற சினிமா வசனத்தை தான் ஜெ. இதர கட்சிகளுக்கு மறைமுக செய்தியா சொல்லி இருக்கிறார்னு நான் நினைக்கிறேன்.

6.   தமிழகம் முழுவதும் நடந்த “நமக்கு நாமே” பயணம் திமுகவில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கோ இல்லையோ, தமிழக மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு என்பதை ஜெ. நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கார். அதனால் தான் “ஐயோ பாவம் அந்த ஆடு இப்படி நனையுதே”ன்னு பரிதாபப்பட்டு பேசி இருக்கார். இப்போதைக்கு மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது, ஜெ. விரித்த வலையில் வீழாமல் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பது மட்டும் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாததா என்ன?

இனி இதை திமுக எப்படி கையாள போகுது என்பதில் இருக்கிறது, தமிழக அரசியலின் அடுத்த கட்டம்.

இந்த தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே என்பதை நேற்றைய பேச்சின் மூலம் தெளிவாக சொல்லி விட்டார். அதிலும், கலைஞர் அல்லாமல் ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தல் இருக்கவேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார். அவர் அவருக்கு வசதியான வியூகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன் திமுகவுக்கு உள்ளது. தக்கன தக்கபடி தக்கசமையத்தில் திமுக கைக்கொள்ளும் என்பது புரிந்தாலும், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்குது.



Saturday, February 9, 2013

மீண்டும் பழைய பாதைக்கு போகிறதா திமுக?



திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்சம் மிக எளிமையானது. திமுக பேச்சாளரும் நடிகையுமான திருமதி. குஷ்பூ அவர்களையும் அவரது வீட்டையும் தாக்கிய திமுகவினரை கண்டித்து வெளியாகி இருக்கிறது அந்த அறிக்கை.

சமீபத்தில் கலைஞர் அவர்கள் சூசகமாக தனக்கு பின் திமுக தலைமை பதவிக்கு ஸ்டாலின் தான் வரக்கூடும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அழகிரி, ஸ்டாலின் குரூப்புகளுக்கிடையே நீண்டகாலமாக பனிப்போர் நடந்துகொண்டு தான் இருக்கு. அழகிரி அவர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவருமே ஸ்டாலினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஸ்டாலின் மீது பொதுவாகவே எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. மென்மையானவர், மனிதாபிமானம் மிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், அடிமட்ட தொண்டன் வரை மிக எளிமையாக பழகக்கூடியவர், எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவர், 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து, கட்சியின் போராட்டங்களில் கலந்து சிறை சென்றவர்ன்னு அவரது ஆதரவு பட்டியல் மிக நீளமானது. அவர் திமுகவின் தலைவராக ஆவதில் பெரும்பாலான கட்சியினருக்கும், மிகப்பெரும்பாலான பொதுமக்களுக்கும் எந்த அதிருப்தியும் இல்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. அதன் அடிப்படையிலே தான் கலைஞரும்  தனக்குப்பின் ஸ்டாலின் தான் திமுகவின் தலைவராகவும், திமுகவின் மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்லும் தளபதியாகவும் விளங்குவார் என மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை இன்னொரு கோணத்திலிருந்தும் நாம் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக மிக சிறப்பாக இருக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக மட்டும் தான். உட்கட்சி தேர்தல்களை ஒழுங்காக நடத்தி, எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக்கொண்டு இயங்கும் இயக்கம், பொதுக்குழு/செயற்குழு போன்ற கூட்டங்களில் வெளிப்படையாக கட்சியையும் கட்சியின் முடிவுகளையும் விமர்சனம் செய்ய அனுமதிக்கும் இயக்கம் என திமுகவின் பெருமை பலமானது. அப்படியிருக்கும் ஒரு கட்சியில் திமுகவின் அடுத்த தலைவர் இவர் தான் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட நியமன முறைக்கு வருவது எனக்கு ஆரம்பத்தில் மிகுந்த அதிருப்தியாக தான் இருந்தது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய தலைவரை, நியமனம் செய்வது என்பது எனக்கு ஒப்புமையான விஷயம் அல்ல. அதிலும், இன்றைய தேதியில் தமிழகத்துக்கு என இருக்கும் ஒரே ஆறுதல் இயக்கமான திமுகவில் இப்படியான உட்கட்சி குழப்பங்கள் வருவது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நன்மை தருவதாகாது.

இந்த அடிப்படையிலான இதே கருத்தை தான் சில வாரங்களுக்கு முன்பு திருமதி. குஷ்பு அவர்களும் சொல்லியிருந்தார். ஸ்டாலின் தான் தலைவர் என்பதை தேர்தல் தான் முடிவு செய்யவேண்டும் என்கிற ரீதியில் அவர் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் திருமதி. குஷ்பூ மீது தாக்குதல் நடத்துவது, அவரது வீட்டை தாக்குவது, அவரது குழந்தைகளிடம் கொலைமிரட்டல் விடுவது என இறங்கி திமிலோகப்பட்டது அனைவரும் அறிந்ததே!

இந்த சம்பவத்தை கண்டித்து தான் கலைஞர் அவர்கள் மிக மிக தாமதமாகவும், மென்மையாகவும் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையை படித்தாலே, அது பேரளவில் வெளியிடப்பட்ட அறிக்கை என்பது விளங்கிவிடும். ஒரு பேரியக்கத்தின் தலைவர், தனது இயக்கத்தின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக வெளியிட்ட அறிக்கையாக தான் அது இருக்கிறது.

திருமதி. குஷ்பூ அவர்களை பொறுத்தவரை தனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக எடுத்து சொல்லக்கூடியவர். அதே போல தான், ஸ்டாலின் விஷயத்திலும் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கருத்து தவறு எனில் விளக்கம் கேட்டிருக்கலாம், மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இப்படி பல வழிகள் இருக்க அவரையும் அவரது வீட்டையும் தாக்கி இருப்பது கட்சிக்கு கட்சியினரே ஏற்படுத்திக்கொள்ளும் கெட்டபெயர் எனபதை இந்த சம்பவத்தை கண்டிக்க முன்வராத மூத்த தலைவர்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.

ஆனால் எனது ஆச்சரியமே வேறு!

மிக மிக நடுநிலையானவர், கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பவர் என்றெல்லாம் போற்றப்படும் திரு ஸ்டாலின் அவர்க்ள், இந்த தாக்குதலுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காதிருப்பது தான் ஆச்சரியம்! அடுத்த தலைவராக முடிசூடவிருக்கும் வேளையில் தன் மீதான எந்த விமர்சனமும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, தனக்கு மக்களிடமிருக்கும் மதிப்பையே குலைக்கக்கூடிய ஒரு நிகழ்வுக்கு எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

தமிழக அரசியலில் வன்முறை, விமர்சனத்துக்கான தாக்குதல் போன்றவை புதிதல்ல. 1960களிலேயே தொடங்கிய விஷயம் தான் அது. காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் மோதல், காங்கிரஸ் & திமுக மோதல், திமுக & அதிமுக மோதல், பாமக & வி.சி மோதல் போன்றவை மிக பிரபலம்.

தன்னை விமர்சித்தவர்களை தாக்குதலுக்காளாக்கும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கிவைத்த திமுக பின்னாளில் கொஞ்சம் பக்குவமடைந்து கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க தொடங்கியது. திமுகவை விமர்சித்து தாக்குதலுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக மிக நீளம். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் முதல் பத்திரிக்கையாளர் சோ வரை என சமூகத்தின் எல்லா நிலையிலிருந்தவர்களும் விமர்சித்ததற்காக தாக்கப்பட்டவர்களில் அடக்கம்.

திமுக பக்குவமடைந்த போது, அதிமுக விமர்சகர்களை தாக்கும் கலாச்சாரத்தை கையிலெடுத்துக்கொண்டது. பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அதிமுகவும் பாரபட்சமின்றி விமர்சகர்களை தாக்குதலுக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆனால், அதிமுகவில் உட்கட்சி விமர்சனமும் இல்லை, அதனால் அதனடிப்படையிலான தாக்குதலும் இல்லை என்பது ஒரு ஆறுதல். திமுகவின் நிலை அப்படியல்ல. கருத்து சுதந்திரத்துக்காக போராடும் முகத்தை கொண்டுள்ள அதே திமுகவில் தான் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முகங்களும் உள்ளது. அதன் மிக சமீபத்திய உதாரணம் தான் திருமதி. குஷ்பூ மீதான தாக்குதலும், அதை கண்டிக்க மனமின்றி கண்டித்திருக்கும் இன்றைய அறிக்கையும்.

திமுக மீது இப்போது மக்களுக்குள்ள மரியாதையை காப்பாற்றிக்கொள்ள திமுக முன்வரவேண்டும். கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது, கழகத்தில் அடிநாதமான கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை பக்குவப்படுத்துவது, போன்ற செயல்களின் மூலம் தான் அது முடியும். அப்படியல்லாமல், இது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமல் விமர்சித்தவர்களை தாக்குவதும், சம்மந்தப்பட்ட தலைவர்கள் அதை பார்த்து மௌனமாக இருப்பதும், சில நாட்கள் கழித்து பெயரளவில் ஒரு அறிக்கை வெளியிடுவதும், திமுக தனது வன்முறை தன்மையை எப்போதுமே மாற்றிக்கொள்ளாதோ என்கிற அச்சத்தை தான் தமிழக மக்கள் மனதில் விதைக்கும். இது திமுகவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல என்பதை தற்போதைய தலைவர் கலைஞரும், வருங்கால தலைவராக எதிர்பார்க்கப்படும் ஸ்டாலினும் உணர்ந்தால் பரவாயில்லை!

உணர்வார்களா?

Printfriendly