Friday, April 18, 2014

தேர்தல் களம் - 2014

நாடாளுமன்ற தேர்தலுக்கான களம் தயாராக இருக்கிறது. ஏற்கனவே சில கட்ட வாக்குப்பதிவுகள் முடிவுற்று, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் பல பல வகைகளில் முக்கியத்துவம் வாயந்ததாக நான் கருதுகிறேன்.


பொதுவாக நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, மத்தியில் யார் நிலையான நல்லாட்சி தருவார்கள், பொருளாதார சிக்கல்களை சமாளித்து நிதிநிலையை மேம்படுத்துவார்கள், வளர்ச்சி, தொழில், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை உயர்த்துவார்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கம். இரு முக்கிய கட்சிகளும் ஏதேனும் ஒரு தேசிய கட்சியை சார்ந்து தேர்தலை சந்தித்து வந்ததால், நமக்கு நம்முடைய மாநில கட்சி நிலைப்பாடு, மத்திய கட்சி நிலைப்பாடு ஆகியவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இது வரை வந்ததில்லை. இந்த தேர்தலில், இரு முக்கிய தமிழக கட்சிகளும் தனித்து நிற்பது மாதிரியே தேசத்தின் முக்கியமான மூன்று கட்சிகளும் தனித்தே தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.

நான் இந்த கட்டுரையில் எனது மனவோட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன். இது பொதுவான கருத்தாக இருக்கவேண்டும் என்றோ, மற்றவர்கள் எனது கருத்துடன் உடன்படவேண்டும் என்றோ நான் கட்டாயப்படுத்தவில்லை.

நிற்க!

நடைபெற இருப்பது மத்திய ஆட்சிக்கான தேர்தல் என்பதால், முதல் நோக்கிலேயே நான் மாநிலக்கட்சிகளை விலக்கிவிட நினைக்கிறென். அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்களும் தமிழகத்துக்காக தமிழக நலனுக்காக மிகப்பெரிய பலனளிக்கக்கூடிய திட்டங்களையெல்லாம் நல்கி, நாமெல்லாம் இன்றைக்கு இந்த அளவுக்கு சீரோடும் சிறப்போடும் கவுரவத்தோடும் வாழ வழி செய்தவை என்பதற்கான நன்றி என்றென்றைக்கும் எனக்கு உண்டு. ஆனால் இந்த நிமிடம் வரை, நான் அதிமுகவை ஆதரித்தாலோ, திமுகவை ஆதரித்தாலோ, அந்த வாக்குகள் மத்தியில் யாருடைய ஆட்சி அமைவதற்கு, அல்லது யாருடைய ஆட்சியின் ஆதரவிற்கு உதவும் என்பது தெரிவிக்கப்படாமலேயே இருக்கிறது.


சமீபகாலம் வரை பாஜகவை விமர்சிக்காமல் இருந்த அதிமுக, தனது கூட்டணியிலிருந்து இஸ்லாமிய இயக்கம் விடைபெற்றுக்கொண்ட பின்னால், பாஜகவையும் எதிர்க்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வந்துவிட்டது. திமுகவின் தேர்தலுக்கு பிந்தைய நிலை இன்னமும் தெளிவாகவில்லை. மூன்றாம் அணி என்பது வெற்றுக்காகிதத்தில் விரல்கொண்டு வரைந்த அழகிய ஓவியமாய் யாருக்கும் பயனின்றி கழிந்துவிட்டது.

எனவே, மாநில வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டிருந்தாலும், நடைபெறவிருப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை கருத்தில் கொண்டு, திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களையும் நான் எனது பரிசீலனை பட்டியலில் நின்றும் அகற்றிவிட்டாயிற்று.

தேசிய கட்சிக்காக தான் ஓட்டளிக்க முடியும் என்கிற நிர்ப்பந்தத்தில் என் முன்னே மூன்று அணிகள் நிற்கின்றன.

தேசமெல்லாம் சட்டென ஒரு மாற்றத்துக்கான அலை வீசுவதாக கற்பிக்கப்பட்டு அந்த அலையின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மரியாதைக்குரிய திரு நரேந்திர மோடி அவர்கள் மீதான மதிப்பை அவரது கட்சியின் தேர்தல் அறிக்கையும், அவர் வெளியிட்ட வெற்று பரபரப்பு விளம்பரங்களும், குஜராத் பற்றி வந்துகொண்டிருக்கும் அலை அலையான நிதர்சன செய்திகளும், சிற்சில மேடைகளில் அவர் பேசிய பேச்சுக்களின் யதார்த்தமின்மையும் உடைத்துப்போட்டுவிட்டன.

ஒரு சில மாதங்கள் முன்பு வரை கூட எனக்கு பாஜக ஆட்சி என்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் என்கிற முன் அனுபவம்,. அத்வானி போன்றவர்களின் தற்போதைய பண்பட்ட நிலை, சுஷ்மா போன்றவர்களின் சமத்துவ கொள்கை, யஷ்வந்த், பிரமோத் போன்றவர்களின் அறிவார்ந்த ஆளுமை ஆகியவை, பாஜகவை எப்போதோ ஒரு தீண்டத்தகாத கட்சி என்கிற நிலையிலிருந்து மேம்படுத்தி ஆளும் திறமையான கட்சியாக எனக்குள் உருவகப்படுத்தி விட்டிருந்தது. ஆனால், பிரதமராக மோடி முன்னிறுத்தப்பட்டது, அவரது வெளிப்படையான கொள்கை, அவர் பேசியெ சில பேச்சுக்கள், மிக மிக முட்டாள்த்தனமான பாஜக தேர்தல் அறிக்கை ஆகியவை அதை மறுபரிசீலனை செய்ய வைத்து விட்டன. நான் இந்துவாக இருப்பதை விடவும் இந்தியனாக இருக்கவே அதிகம் பிரியப்படுகிறேன். ஆனால் இந்தியனாக இருப்பதை விடவும் இந்துவாக இருப்பவனுக்கே முன்னுரிமை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது பாஜகவின் தேர்தல் அறிக்கை. இளம் பிராயத்திலிருந்து உண்டு உறங்கி பழகி வளர்ந்த சக தோழர்களை என்னிலிருந்து விலக்கிவைக்கும் ஒரு கொள்கைக்கு கனவிலும் நான் ஆதரவளித்துவிட தயாராக இல்லை.

இன்றைக்கு இந்தியா எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார சிக்கல்கள், சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து தப்பிக்கவேண்டிய கட்டாயம், எதிர்கால சந்ததியினருக்கான வளர்ச்சி திட்டங்கள் என எதையும் பாஜகவின் தேர்தல் அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. மிக முக முக்கியமான, வெளியுறவு கொள்கை குறித்து ஒரே ஒரு வரி கூட தேர்தல் அறிக்கையில் இல்லைமாறாக இராமர் பாலம், இராமர் கோவில், இந்துக்களுக்கு மட்டுமான பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டுக்கு பாதகமான நிலைப்பாடு, கொசுக்கள் ஒழிப்பு என மிக மிக பத்தாம் பசலித்தனமான ஒரு தேர்தல் அறிக்கையை சமர்ப்பித்து, யுவ இந்தியாவின் கனவுகளை தகர்த்திருக்கிறது பாஜக.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முரண்பாடான கட்சிகளை சேர்த்து கட்டிய குடுவையாக ஒரு கூட்டணியை அமைத்திருப்பதும், தங்கள் கட்சியின் ஒருமுகப்பட்ட ஆட்சி அமையும் என்கிற அவர்களது நம்பிக்கையின்மையும், எனக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாற்றம் தேவை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது பள்ளத்துக்கு பயந்து பாதாளத்தில் குதித்த கதையாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். இப்போதைய பொருளாதார சூழலில் இந்தியாவில் ஒரு பரீட்சார்த்தமான ஆட்சிமுறை என்பது முட்டாள்த்தனமான முடிவாகவே அமையும். முரண்பாடுகளின் சங்கமம், பெரும்பாலும் நிம்மதியான ஆட்சியை கேள்விக்குறியாக்கி, முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் நாட்டை சீரழித்துவிடும் என்பதை நாம் பல முறை கண்டு உணர்ந்துள்ளோம்.

இரண்டாவதாக என் கவனத்தை கவர்ந்தது, நான் எப்போதும் பெரிதும் மதிக்கும் நேசிக்கும் கம்யூனிஸ்டு கட்சியினர்.



இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைக்கும் உரிய நல்ல தீர்வுகளை தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரே இயக்கம் இடது சாரி இயக்கம் என்பதில் எனக்கு எப்போதுமே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்கள் தங்களை காலத்துக்கு தக்கபடி மேம்படுத்திக்கொள்ளவில்லை என்பதிலும், ஆக்கப்பூர்வமாக செயல்பட தவறிவிட்டார்கள் என்பதிலும் எனக்கும் கனத்த வருத்தமுண்டு.

மிகுந்த பிராயத்தனத்தினிடையில் பதினோரு கட்சிகள் உள்ளடக்கிய மூன்றாம் அணியம் சில மாதங்களுக்கு முன் அறிவித்த கம்யூனிஸ்டுகள், என் மனதில் லேசாக நம்பிக்கை விதையை நட்டு வைத்து சென்றார்கள். நேர்மை, நாகரீகம், மதச்சார்பின்மை, பொருளாதார தெளிவு நிலை, அடிப்படை தொழிலாளர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் கஷ்டங்கள் புரிந்த, உணர்ந்த ஒரு இயக்கமான கம்யூனிஸ்டுகளின் கைகளில் ஆட்சி பொறுப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்காத நாளில்லை. அதே சமயம், முதலாளித்துவத்துக்கு எதிரான மிக முரட்டுத்தனமான கொள்கையையும் அது கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் இரு தரப்பையும் ஒரு சேர அனுசரித்து சென்றாலொழிய ஒட்டுமொத்த வளர்ச்சியை காண முடியாது. மேலும் நாடு முழுமையும் பரவலாக ஆதரவில்லாததால், மாநில கட்சிகளை நம்பி மட்டுமே களமிறங்குகிறது. இதுவும் ஒரு வகையில் நிலையற்ற, நிர்ப்பந்தங்களுக்குட்பட்ட ஆட்சியாக அமைந்து விட்டால், இன்றைய பொருளாதார நிலையில் இந்தியா மீண்டெழ முடியாத ஆழத்தில் வீழ்ந்துவிடும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இறுதியாக, விரும்பியோ விரும்பாமலோ என் முன்னே வந்து நிற்பது, காங்கிரஸ் தான். எத்தனையோ பாதக முடிவுகளை எடுத்திருந்தாலும், கசப்பான உணர்வுகளை ஊட்டியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் மிக பெரிய வளர்ச்சியையும், பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கை தர உயர்வையும் தந்திருக்கிறார்கள். சிற்சில மாநிலங்களில் நான் பயணிக்க நேர்கையிலெல்லாம் உணர்ந்திருக்கிறேன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்த இடங்களா இவை? மருத்துவமனை, சாலைகள், பள்ளிக்கூடங்கள், நீர்தேக்கங்கள், மின் திட்டங்கள், குடிநீர் வசதி, விவசாய மேம்பாடு என அவை வளர்ந்து கிராமங்களில் இருந்துவந்த இடமாற்ற சதவீதத்தை கணிசமாக குறைத்திருக்கிறது இந்த ஆட்சி.

யாரை பிரதமராக முன் நிறுத்தப்போகிறார்கள் என தெளிவாக சொல்லாவிட்டாலும், அவர்களது தேர்தல் அறிக்கை தெளிவாக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு என்னென்ன தேவை என்பதை சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அவற்றில் பாதியை நிறைவேற்றினால் கூட நாம்  கணிசமான முன்னேற்றத்தை அடைந்துவிட முடியும். பிற கட்சிகளை போல நாட்டுக்கு உண்மையிலேயே என்ன தான் தேவை என்பதை உணராமல் இருக்கும் அவல நிலை காங்கிறசிடம் இல்லைகாங்கிரஸ் மீது வைக்கப்ப்டும் புனை குற்றச்சாட்டுக்களை அவர்கள் கையாண்ட விதமும், அப்படியான வன்மங்களை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் உரிய வளர்ச்சிப்பணிகளை  மக்களின் நலனுக்காக கொண்டுவததும் என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் கவர்ந்தது.

நாட்டிலுள்ள 32 மாநிலங்களில் சராசரியாக மாநிலத்துக்கு 9 சீட் வென்றாலும் கூட எளிதாக காங்கிரஸ் ஆட்சியை வென்றெடுத்துவிடும் என்பதிலும் மத்திய இந்தியா, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் அதிரடியாக ஏற்படுத்திய அபரிமிதமான வளர்ச்சியை கண்கூடாக கண்டு அனுபவித்து வரும் அந்தந்த மாநில மக்கள் கணிசமாக ஆதரித்து காங்கிரசை அரியணையில் ஏற்றிவிடும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

எனவே வெற்றிபெறக்கூடிய ஒரு கட்சிக்கு, அதிலும் தேசிய கட்சிக்கு எனது வாக்கினை காணிக்கையாக்குவதே அந்த வாக்குக்கான மரியாதையாக இருக்கும் என கருதுகிறேன்.

ஒருவேளை, திமுக தனது ஆதரவினை பாஜகவிற்கு வழங்குமேயானால், திமுகவின் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி என்கிற நிலை உருவாகுமேயானால், எனது வாக்கினை திமுகவிற்கோ, பாஜகவிற்கோ அளிப்பதில் சங்கடமில்லை. காரணம், திமுக ஒருபோதும் தேச நலனுக்கு எதிராக எந்த கட்சியையும் செயல்பட அனுமதிக்காது. அதற்கு பல பல உதாரணங்கள் உள்ளன. திமுகவின் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி வருமானால், நிச்சயமாக மக்கள் விரோத முடிவுகளை பாஜக எடுக்க திமுக அனுமதிக்காது. காங்கிரசிடமிருந்து ஒரு மாற்று வேண்டும் என்கிற எல்லோரது எதிர்பார்ப்பும் அதன் மூலம் நிறைவேறக்கூடும்.




ஆனால், இன்றைய நிலையில் திமுகவோ, அதிமுகவோ தங்க்ள் குழப்ப நிலையிலிருந்து வெளியே வராமல் இருப்பதாலும், தங்கள் எதிர்கால திட்டம் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாலும், பாஜக தனது அடிப்படையான பிற்போக்கு கொள்கைகளை முன் வைத்து வருவதாலும், மாற்று ஆளுமையான கம்யூனிஸ்டுகள் பலமிழந்து நிற்பதாலும், நாட்டின் எதிர்காலத்தை கருதி, காங்கிரசை ஆதரித்தாக வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம்.

தமிழகத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலை பொறுத்தமட்டில், எல்லா முக்கிய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவதால், ஒரு தொகுதியில் ஒரு கட்சிக்குள்ள வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியும்இந்த தேர்தலில் அனுதாப அலையோ, அரசியல் அலையோ, தேர்தலுக்கான முக்கிய பிரச்சனையோ எதுவும் இல்லாமல் களம் மிக தெளிவாக இருக்கிறது. அவரவர் கட்சிக்கு, ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பலம் என்பது தான் முக்கியம் என்பதால், ஓரளவு வெற்றி தோல்வியை கணித்துவிட முடிகிறது.

மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் அதிக பலம் இருப்பதும், காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளில் பாரம்பரிய ஓட்டுக்கள் இருப்பதும் அனைத்து கட்சியினரும் அறிந்த ஒன்றே. முந்தைய தேர்தல்களில், அந்த ஓட்டுக்களை குறிவைத்தே அவர்களை அரவணைத்து சென்றன கழகங்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்பதால், தங்களது பாரம்பரிய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் தாங்களே பெற்றிட முடியும் என்கிற நம்பிக்கை அவர்களிடம் அதீதமாக காணப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சிஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். பாஜக அணி, காங், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி என வாக்குகள் பிரிகையில் யாருக்கு அந்த தொகுதியில் அதிக பலம் இருக்கிறதோ அவர்களே வெல்வார்கள் என்பதால்மிக சிறிய வாக்கு வித்தியாசங்களில் கூட வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படலாம்.

புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் மிக அதிக அளவில் ஆர்வமாக வந்திணைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. கல்வி, தொழில், உள்கட்டமைப்பு மேம்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கண்கூடாக கண்டு அனுபவித்து வருபவர்கள் அவர்கள். பொருளாதாரம் புரிந்தவர்கள், சர்வதேச மந்த நிலையிலும் இந்தியா தனித்தன்மையோடு நின்றதற்கான காரணத்தை அறியாமல் இருக்க மாட்டார்கள்.

எனவே, இந்த தேர்தலில் பலரது கணிப்பையும் பொய்யாகி விசித்திரமான தேர்தல் முடிவு வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

தேர்தல் நெருக்கத்தில் திமுக பிரயோகிக்கவிருக்கும் பிரம்மாஸ்திரமும், தமிழக தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் வெளியிடக்கூடிய முக்கிய அறிவிப்புக்களும் கூட தேர்தல் கணிப்பையும், ஏன், எனது தனிப்பட்ட கணிப்பையும் கூட தகர்த்து எறிந்து விடக்கூடும் தான்.

என் இந்தியா என்னவாகிவிடப்போகிறது என்கிற அச்சம் கலந்த ஆர்வத்துடன் எல்லோரையும் போல காத்திருக்க தொடங்குகிறேன்.. மே 16க்காக.

Sunday, December 22, 2013

தமிழக வாட்வரி சட்ட திருத்தம் - முடங்கும் தொழில்துறை



மிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி நாளிட்டு ஒரு சட்டதிருத்தத்தை அமல் செய்தது. அந்த ஒரே ஒரு சட்ட திருத்தம் ஒட்டுமொத்த தமிழக தொழில்துறையையும் கொந்தளிப்பில் கொதிக்கவைத்துவிட்டது.     

தமிழக அரசின் வணிகவரித்துறை வெளியிட்ட அந்த சட்டத்திருத்தத்தையும்  TNVAT Act 28 of 2013, 5th Amendment   அதன் விளைவுகளையும் தமிழக தொழில்துறை ஏன் இந்த அளவுக்கு வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்க்கலாம்.



வாட் வரலாறு: 2006ம் ஆண்டு தமிழகத்தில் வாட் வரி முறை அமலுக்கு வந்தது. 2007 ஜனவரி 1ம் தேதியிட்டு இந்த வரிமுறை அமலானது. அதுவரை இருந்த தமிழக அரசு பொது விற்பனை வரி முறை (TNGST – Tamil Nadu General Sales Tax) நீக்கப்பட்டு நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி முறைக்காக வாட் வரி (TNVAT – Tamil Nadu Value Added Tax) முறை கொண்டுவரப்பட்டது. வாட் வரி முறையை முதலில் எல்லோரும் எதிர்த்தாலும் அது மிகவும் சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருந்ததால் பின்னர் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். 

வாட் வரி முறையில் நாம் கொள்முதலுக்கு (Purchase) செலுத்திய வரியை விற்பனை வரியில் (Sales Tax) கழித்துக்கொள்ளலாம். அதாவது ஒரு பொருளை வாங்கும்போது அந்த பொருளுக்குன்னு ஒரு வரியை செலுத்தியிருப்போம். மீண்டும் அதே பொருளை இன்னொருவருக்கு விற்கும்போது அதற்குன்னு தனியா இன்னொரு வரியை செலுத்தவேண்டி இருக்கும். இது தான் பழைய TNGST முறை. 

இது இரட்டை வரி விதிப்பாக கருதப்பட்டதால் வாட் வரி முறையில் செலுத்தவேண்டிய வரியில் இருந்து பர்சேசின் போது செலுத்திய வரியை கழித்துவிட்டு மீதமுள்ளதை அரசுக்கு கொடுத்தால் போதும். அதாவது நாம் வைக்கும் லாபத்துக்கு அல்லது நாம் செய்த சேவைக்கு மட்டும் வரி. The Value which has been added alone considered for Value Added Tax. 

சிம்பிளா ஒரு உதாரணம் பார்ப்போமா?  நீங்க ஒரு பெயிண்ட் கடை வெச்சிருக்கீங்கன்னு எடுத்துக்கலாம். ஒரு லிட்டர் பெயிண்ட் டப்பாவை நீங்க கம்பெனியில் இருந்து ரூ.100/-னு வாங்குறீங்க. அதுக்கு 12% வரி அவன் போட்டிருப்பான். அப்ப நீங்க கம்பெனிக்குகொடுக்கிறது ரூ.112. அந்த பெயிண்ட் டப்பாவை நீங்க உங்க கடையில் ரூ.150/-ன்னு விக்கிறீங்கன்னு வைங்க. இதுக்கு நீங்க 12% வரி போட்டீங்கன்னா ரூ.168/- தான் விற்பனை விலை.  இப்ப பழைய TNGST முறைப்படி பார்த்தா, நீங்க ரூ.12/- வரியா கம்பெனிக்கு கட்டிருக்கீங்க. அது தவிர ரூ.18/- நீங்க வரி போட்டிருக்கீங்க. ஆக மொத்தம் அந்த 1 லிட்டர் பெயிண்ட் டப்பா மூலம் அரசுக்கு கிடைக்கிற வரி ரூ.30/-. பெயிண்டின் விற்பனை விலை ரூ.168/- உங்களுக்கான லாபம் (150-112) ரூ.38/-.   

ஆனா புதிய வாட் வரி விதிப்பு முறைப்படி பார்த்தா எப்படி வரும் தெரியுமா? நீங்க கம்பெனிக்கு கொடுத்த ரூ.12/- நீங்க கழிச்சுக்கலாம். அதனால் அரசுக்கு நீங்க கட்டவேண்டியது (விற்பனை வரி ரூ.18 (-) செலுத்திய வரி ரூ.12) ஆகமொத்தம் ரூ.6 தான். இந்த முறைப்படி பார்த்தால். அரசுக்கான வரி வருவாய் 12+6 = ரூ.18 தான். நீங்க ரூ.168/- க்கே பெயிண்டை வித்தா, உங்களுக்கு லாபம் ரூ.44 (செலுத்திய வரியான ரூ.12 + நீங்க வெச்சிருக்கிற லாபமான ரூ. 32). ஒருவேளை நீங்க உங்க லாபம் அதே ரூ.32 போதும்னு நினைச்சா பெயிண்டின் விற்பனை விலை ரூ. 168 லிருந்து ரூ.156ன்னு குறைஞ்சிரும்.  கான்செப்ட் ரொம்ப சிம்பிள். ஒரு பெயிண்டுக்கு கம்பெனிக்காரன் 12 ரூபாயும் நீங்க 18 ரூபாயும் அரசுக்கு கட்டியிருந்தது மாறி. நீங்க கட்டுற 18 ரூபாய்க்குள் கம்பெனிக்காரன் கட்டின 12 ரூபாயும் இருப்பதால் 6 ரூபாய் மட்டும் வரியா கட்டினா போதும். அரசுக்கு வரி வருவய் குறையும். ஆனா உங்களுக்கு லாபம். 

இப்படி வரியை அட்ஜஸ்ட் செய்யுறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. அதாவது நம்ம மாநிலத்துக்குள்ளேயே வாங்கின பொருளுக்கு தான் வரியை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கின பொருளுக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் கிடையாது. அதே மாதிரி நம்ம மாநிலத்துக்குள்ளேயே விக்கிறதா இருந்தா அட்ஜஸ்ட் செய்துக்கலாம். வெளி மாநிலத்துக்கு விக்கிறதா இருந்தா ரெண்டு வகையான கண்டிசன் இருக்கு. வெளி மாநிலத்தில் உங்க பொருளை வாங்குறவர் பதிவு பெற்ற கடையா இருந்து அவர் உங்களுக்கு C Form கொடுக்கிறதா இருந்தா, நீங்க இங்க வரியை அட்ஜஸ்ட் செய்துக்கலாம். ஒருவேளை, வெளிமாநிலத்திலுள்ள உங்க கஸ்டமர் அந்த மாநிலத்தில் ரிஜிஸ்டர் செய்யாம இருந்திருந்தா அவருக்கு நீங்க விற்கும் பொருளுக்கான வரி அட்ஜஸ்ட்மெண்டை நீங்க செய்ய முடியாது. இது தான் கண்டிசன்  



புதிய சட்ட திருத்தம் என்ன?: தமிழக அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்ட சட்ட திருத்தம் நவம்பர் 11 முதல் அமலாகும்னு சொல்லி இருக்காங்க. அந்த சட்டதிருத்தத்தின் படி, வெளிமாநில கஸ்டமர் பதிவு பெற்ற டீலரா இருந்தாலும் அவருக்கு விற்கிற பொருளுக்கான வரி அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து 3% வரியை தமிழக அரசுக்கு திருப்பி செலுத்தணும்னு இருக்கு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே இப்படி ஒரு முட்டாள்த்தனமான சட்டம் இல்லை. நம்ம தமிழகத்தில் மட்டும் தான் இருக்கு. 

இந்த சட்டதிருத்தத்தினால என்ன பிரச்சனைன்னா, நாம இதுவரையும் எடுத்திட்டிருந்த வரி அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து 3% குறையும். அரசு இந்த திருத்தத்துக்கு சொல்ற லாஜிக் சரியாக இருக்குதுன்னு நினைக்கிறேன். 

உதாரணம் பார்ப்போமா? அதே பெயிண்ட் விஷயத்தை எடுத்துக்கலாம். நீங்க கம்பெனியில் 12% வரி கட்டி வாங்கி இருக்கீங்க. அதை வெளிமாநில கஸ்டமருக்கு அனுப்புறீங்கன்னு வெச்சுக்கோங்க. அந்த கஸ்டமர் பதிவு செய்யாத டீலரா இருந்தா நீங்க 12% வரி அவர்கிட்டேயிருந்து வசூலிச்சு அரசுக்கு கட்டணும். மேலும் பதிவு செய்யாத டீலருக்கு வித்ததால் கம்பெனிக்காரங்களுக்கு கட்டின 12% வரியை அட்ஜஸ்ட் செய்ய முடியாது. ஒருவேளை, உங்க கஸ்டமர் பதிவு பெற்ற டீலரா இருந்து அவர் உங்களுக்கு C Form கொடுக்கிறதா இருந்தா, நீங்க 2% வரி மட்டும் வசூலிச்சு கட்டினா போதும். அதுவும் இல்லாம கம்பெனிக்கு கொடுத்த 12% வரியையும் நீங்க அட்ஜஸ்ட் செய்துக்கலாம். இந்த இடத்தில் தான் அரசு குதர்க்கமா யோசிக்குது. 12%ல வாங்கின ஒரு பொருளை 2% வரிக்கு வித்திட்டு, அந்த 12% வரியையும் அட்ஜஸ்ட் செய்தால், அரசு உங்களுக்கு 10%ஐ திருப்பி தரவேண்டி இருக்கு. இது அரசுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துது. அதனால் அரசு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கு. இதன் படி அரசு திருப்பி தரவேண்டிய 10% என்பது 7% என குறையும். சுருக்கமா சொன்னா வெளிமாநில விற்பனைக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் என்பதில் 3% ரிவர்ஸ் செய்யவேண்டும். 

சரி, தொழில் துறைக்கு இதில் என்ன பிரச்சனை? லாபம் குறையும். வரி கட்டும்போது நிறைய கணக்கீடுகள் செய்யவேண்டி வரும். வேலை பளு கூடும். அவ்வளவு தானே? அரசுக்கு அதிக வருவாய் வருகிற பட்சத்தில் நாமளும் அதுக்கு உதவித்தானே ஆகணும்? சரிதான். ஆனால் இதன்படி விற்பனை விலை கூடும். பிற மாநில டெண்டர்களில் நமது டெண்டர்விலை அதிகமாக காட்டும். அதனால் பிசினஸ் பாதிக்கும்னு வியாபாரிகள் சொல்றாங்க. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா எனக்கு தெரியலை.  பிரச்சனை வியாபாரிகளுக்கு இல்லை. தொழில் துறையினருக்கு தான். 

அதென்ன ரெண்டு பேருக்குமான வித்தியாசம்? வியபாரிகள் வாங்கிய பொருளை அப்படியே இன்னொருவருக்கு விற்பனை செய்பவர்கள். அதனால் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி கட்டியிருக்கோம்னு தெளிவா கணக்கு இருக்கும். ஆனா தொழில் துறை அப்படி இல்லை. பல பொருட்களை வாங்கி அதை அப்படியே வெச்சோ அல்லது உருமாற்றியோ புதிதாக ஒரு பொருளை செய்யுறவங்க. இவங்களுக்கு இந்த சட்டத்தில் பெரிய பிரச்சனை வரும். அது எப்படி? இது வரைக்கும் இவங்க உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும்போது அதிலுள்ள எல்லா பொருட்களுக்கான வரியையும் மொத்தமா அட்ஜஸ்ட் செய்துக்குவாங்க. ஆனா புது முறைப்படி, இவங்க உற்பத்தி செய்த பொருள் வெளிமாநிலத்துக்கு C Form மூலம் விற்பதாயிருந்தால், அந்த பொருளுக்குள் இருக்கும் உப பொருட்கள் Input materials / spares ஆகியவற்றுக்கு எவ்வளவு வரி கட்டியிருக்கோம்னு தனித்தனியா கணக்கெடுத்து அதில் 3% வரியை கணக்கிட்டு அரசுக்கு திருப்பி கொடுக்கவேண்டி வரும். இது ரொம்ப லொள்ளு பிடிச்ச விவகாரம். ஒரு பெரிய மெஷின் செய்யுற கம்பெனியின் நிலைமையை நினைச்சுப்பாருங்க. அந்த மெஷின் செய்வதற்காக வாங்கிய மொத்த பொருட்களின் லிஸ்டையும் எடுத்து அதுக்கான வரியை தனித்தனியா கணக்கிட்டு ரிவர்ஸ் செய்யணும். 


இதில் இன்னொரு சிக்கல் உருமாற்றிய பொருட்கள். உதாரணமா இரும்பு தனியாவும், ஈயம் தனியாவும் வாங்கி ஃபவுண்டரியில் ரெண்டையும் அலாயா மிக்ஸ் செஞ்சு ஒரு கருவியை உருவாக்கிற கம்பெனிகள், இந்த ரிவர்ஸ் வரிக்கான கணக்கீட்டை எப்படி செய்யுறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க.   

இதில் எல்லோரும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு. தமிழக அரசு வெளியிட்ட சட்டத்திருத்தம் முட்டாள்த்தனமானது மட்டும் இல்லை, தெளிவாவும் இல்லை. உற்பத்தி துறையினர் இந்த ரிவர்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணுமா வேண்டாமான்னு தெளிவா சொல்லவேயில்லை. சில வணிகவரி துறை ஆபீஸ்ல உற்பத்தி துறை ரிவர்ஸ் செய்யணும்னும், மற்றும் சில ஆபீஸ்ல செய்யவெண்டாம்னும் குழப்பிட்டு இருக்காங்க.  

இப்போதைய நடவடிக்கை என்ன?:  இப்போதைக்கு தொழில் துறையினர் இந்த ரிவர்சல் செய்யுறதா இல்லை. CII – Confederation of Indian Industry சார்பா இந்த சட்டதிருத்தத்துக்கு விளக்கம் கேட்டு மனு செஞ்சிருக்கிறதாவும், இன்னும் சிலர் ஹைகோர்ட்டை அணுகப்்போவதாாவுுுும் நிறைய தகவல்கள் வந்துட்டு இருக்கு. தமிழக அரசு இந்த நிமிஷம் வரைக்கும் எந்த விளக்கத்தையும் கொடுக்கலை. அதைவிட சிக்கல், நவம்பர் 11ம் தேதி முதல் அமலாகுதுன்னு அறிவிச்ச அரசு அது நவ 11 வரை வாங்கிய பொருளுக்கா, நவ 11 முதல் விற்பனையாகும் பொருளுக்கான்னு தெளிவுபடுத்தலை. இப்ப வரி எந்த அடிப்படையில் கணக்கிடணும்னும் யாருக்கும் தெரியலை. ஒரே மாதத்தில் நவ 11 வரை ஒரு முறையிலும், அதுக்கு பின்னர் மற்றொரு முறையிலும் வரியை கணக்கிடவேண்டிய நிலையில் இருக்கிற வணிகர்களுக்கு மற்றுமொரு பிரச்சனை ஆன்லைன் மூலம் இந்த வரி செலுத்துவதற்கு இந்த கால வித்தியாச கணக்கீடுக்கான இரு வேறு ஃபார்ம்கள் ஆன்லைனில் இல்லை. அதே பழைய ஃபார்ம் தான். எப்படி வரியை கணக்கிடுவது, எப்படி வரியை கட்டுவதுன்னு செம்ம குழப்பத்தில் இருக்காங்க. நல்லவேளையா தமிழகத்தில் எதிர்கட்சின்னு எதுவும் இல்லாததால் அரசின் இந்த முட்டாள்த்தனத்தை யாரும் இதுவரை கேள்வி கேட்கலை. தொழில்துறையே தான் விளக்கம் கேட்டு அலைஞ்சிட்டு இருக்கு. அரசு அவங்களை கண்டுக்கறதா இல்லை. 

இப்ப சொல்லுங்க, தொழில்துறை முடங்குமா முடங்காதா? வெறுத்து போவாங்களா இல்லையா? இப்படி வரி ரிவர்ஸ் ஆனா விற்பனை விலை கூட நமக்கு கிடைச்சிட்டிருக்கிற பிசினஸ் லாஸ் ஆகுமா ஆகாதா? இது நம்ம பொருளாதாரத்தை பாதிக்குமா பாதிக்காதா? வெளிமாநிலத்துக்கான விற்பனையை மட்டுமே நம்பியிருக்கிற வணிகர்கள் முடங்குவாங்களா மாட்டாங்களா? யார் இந்த கேள்வியையெல்லாம் அரசாங்கத்துக்கிட்டே கேட்பாங்க? அட்லீஸ்ட் அதிகாரிகளாவது எடுத்து சொல்லியிருக்கவேண்டாமா? இப்படி நிறைய கேள்விகள். பதில் தான் தட்டுப்படலை.

Saturday, September 14, 2013

தாமரையை மலர்த்துவாரா மோடி?


நேற்று நடந்த பாஜக காரிய கமிட்டி கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரு வேறு கருத்துக்கள் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக வரக்கூடாது என ஒரு சாராரும், அவர் தான் வரவேண்டும் என ஒரு சாராரும் கடுமையாக விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

நேற்று மாலை மோடி அவர்கள், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியையும் தனது பொறுப்பையும் பற்றி மிக சிறந்த ஒரு உரை ஆற்றினார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளால் மிக அருமையானதொரு உரை அது. நான் கேட்ட வரையில் மோடியின் மிக சிறந்த பேச்சு அது தான்.

மோடி மிக சிறந்த நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. குஜராத் மாநிலத்தின் இப்போதைய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சீரிய நிர்வாகம் இதனை எல்லாம் நான் சூரத், வதோதரா, கச், அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு சென்றபோதெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள எனது நண்பர்கள் பலரும் மோடியின் அருமைகளை விளக்கமாக எடுத்து சொன்னார்கள். இன்றைக்கு தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருப்பதற்கு மோடியின் செயல்களும் திட்டங்களும் தான் அடிப்படை காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்து முதல்வராக அவர் நீடிப்பதன் காரணமும் அது தான். பரவலாக மாநிலம் முழுமையும் மோடி குறித்தான மிக நல்ல அபிப்பிராயமே நிலவுவதை நான் கண்டிருக்கிறேன்.

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு என பார்த்தால் வகுப்பு வாதம், கோத்ரா கலவரம், கலவரத்தை ஊக்குவித்தது, இனப்படுகொலைக்கு துணை நின்றது போன்றவையாக மட்டும் தான் இருக்கமுடியும். அதுவும் இன்னமும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு ஊகம் தான். எப்படி பார்த்தாலும் குஜராத்தை பொறுத்தவரை மோடி தான் ஹீரோ. அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் பிரதமர் பதவி வேட்பாளர் என வரும்பொழுது நான் குஜராத் முதலவராக மட்டுமே மோடியை பார்க்க விரும்பவில்லை. பிரதமர் பதவி என்பது நாடு முழுமைக்குமான பொதுவான பதவி. மேலும், அவர் முன் நிறுத்தப்படுவது பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளராக.

இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் யாரும் ஒரு மதம் சார்ந்த கொள்கையினை முன்னெடுத்து அரசியல் செய்வதை விரும்பமாட்டார்கள்.

இன்றைய தேதியில் பாஜகவின் வலுவான செல்வாக்கு என்பது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்பதோடு, ஓரளவு செல்வாக்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்டு, பீஹார், ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆகிய மாநிலங்களிலும் இருக்கிறது. இதை சற்று பரவலாக பார்த்தால், வட இந்தியாவின் ஒரு பகுதி, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பாஜகவுக்கு ஆதரவுள்ளது என்பது புரியும். தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு.

வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், தெற்கு இந்தியா, உச்ச வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜகவுக்கு என எந்த செல்வாக்கும் இல்லை. கட்சியை இந்த பகுதிகளில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும் இதுவரை பாஜக எடுக்கவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஏ.பி.வி.பி, சங் பரிவார் போன்றவை அதிக பலத்துடன் உள்ள மேற்கு & மத்திய இந்தியாவை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல் செய்துவந்த கட்சி தான் பாஜக. எனவே மிக பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பா.ஜ.க செல்வாக்காக இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

வட இந்தியாவை எடுத்துக்கொண்டால், உத்தரபிரதேசம் & உத்தரகாண்டு தான் இந்தியாவின் மிக அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பகுதி. பஹுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாடி பார்ட்டி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தான் இந்த பகுதியில் செல்வாக்காக உள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரும் லாலுவும் கோலோச்சுகிறார்கள். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளமும், பஞ்சாபில் அகாலிதளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் & கம்யூனிஸ்டு கட்சிகளும், அசாமில் அசாம் கன பரிஷத்தும், மிக அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்த அத்தனை மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் தான் இப்போதும் இருக்கிறது.

தென் இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக & திமுக, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு அடிப்படையில் அது இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.

எனவே சுருக்கமாக பார்த்தால் நாடு முழுதும் பரவலாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில கட்சிகளின் கையே ஓங்கி இருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட ‘எல்லா’ மாநிலங்களிலும் கணிசமான ஓட்டுவங்கி நிரந்தரமாக இருக்கிறது.


ஆட்சி பெரும்பான்மையான 272 எம்.பிக்களை வென்றெடுப்பது தான் பிரதமர் பதவிக்கான அடிப்படை தகுதி என எடுத்துக்கொண்டால், என்னை பொறுத்தவரை காங்கிரஸ் அதை எளிதாக எட்டிப்பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் கொண்டுவந்த அருமையான திட்டங்களை விரிவாகவும் முறையாகவும் எடுத்து சொன்னாலே போது. பயனை அனுபவித்தவர்கள் திட்டத்தின் நன்மை உணர்ந்து எளிதாக காங்கிரஸை ஆதரித்துவிடுவார்கள்.

காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் அள்ளிக்கொள்வது போக, மீதமிருக்கும் தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும். எனினும், பாஜக மிகுந்த செல்வாக்காக இருக்கும் மேற்கு, மத்திய இந்தியாவில் கணிசமான தொகுதிகளை வென்றெடுப்பதன் மூலம், எதிர்கட்சி வரிசையை தக்கவைத்துக்கொள்வதில் ஒன்றும் சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.


எனது இத்தனை கணக்கும், மூன்றாவது அணி என ஒன்று அமையாத நிலையில் தான். ஒருவேளை, மூன்றாவது அணி அமையுமானால், மாநில கட்சிகளின் தனி செல்வாக்கு ஓங்குமானால், எதிர்கட்சி வரிசை மூன்றாம் அணிக்கு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் மீதான அதிருப்தியை சரியாக ஊதி பெரிதாக்க முடிந்து, மூன்றாவது அணியில் ஒற்றுமையும் இருந்து, பிரதமர் பதவிக்காக ஏகமனதாக ஒரு நபர் முன்னிறுத்தப்படுவாரேயானால், மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூட கிட்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது அணி என நான் நினைக்கும் அணியில் நிறைய பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சமாதானம் செய்து ஒருவர் வென்று நிற்பது கஷ்டம் தான்.

கட்சி சார்ந்து இது தான் பாஜகவின் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் கள நிலை.

மோடி, மிக சிறந்த நிர்வாகி என்றாலும் கூட அவரது கட்சியிலேயே கூட அவர் 'ஏகமனதாக' வேட்பாளராக்கப்படவில்லை என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோருக்கு பிரதமர் பதவி ஆசை இருந்ததும், அதற்காக அணிகள் அமைத்துக்கொண்டதும் பிரசித்தமான விஷயம்.


இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.

மோடி நிர்வாகி என்பது ஒரு புறம். அடிப்படையில் அவரது மன ஓட்டம் என்பது வீரிய ஹிந்துத்துவாவை சார்ந்தது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரது வெளியுறவு கொள்கை அவ்வளவு பாராட்ட தக்கதல்ல. இன்றைக்கு கூட அமெரிக்கா, மோடிக்கான தனது விசா கொள்கையை உறுதி செய்திருக்கிறது. கோபம், பிடிவாதம், தீவிர ஹிந்துத்துவா, பின் விளைவுகள் குறித்த கவலையின்றி முடிவுகள் எடுத்து சிக்கலாக்கி கொள்வது என சமீப காலமாக மோடியின் செயல்பாடுகள் கவலையளிக்கக்கூடியவை தான். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் குஜராத் உயர்நீதிமன்றம், உள்கட்டமைப்பு, சாலைகளின் நிலை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுக்காக மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதையும் கவனிக்கவேண்டும். சூரத், அஹமதாபாத், வதோதரா போன்ற நகரங்களை மட்டுமே காட்டி மாநிலம் வளர்ந்துவிட்டது என விளம்பரம் செய்கிறார் என்கிற பிற கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ என்கிற ஐயம் பரவலாக தோன்ற தொடங்கி இருக்கிறது. அவருக்கென அமைக்கப்பட்ட தனியார் விளம்பர நிறுவனம், அவரது செல்வாக்கை உயர்த்துவதாக சொல்லி செய்யும் செய்கைகளில் உண்மையில் அவரது செல்வாக்கு சரிந்துகொண்டு தான் வருகிறது. இந்தியாவிலேயே தனது சுய செல்வாக்கை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்தை நியமித்து அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும் ஒரே தலைவர் என்கிற பெருமையும் மோடிக்கே உள்ளது!



பொதுவாக பாஜக கட்சி தலைவர்களில் வாஜ்பாயி மிதவாதி, எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவராக இருந்தார். அத்வானி முன்பு பிடிவாத போக்கு கொண்டவராக விளங்கினாலும், தற்போது அவரும் மிதவாதியாகவே மாறிவிட்டார். நாட்டு நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவரது தனிப்பட்ட வலைப்பூங்காவில் அதிகம் காணமுடிகிறது. மோடி அப்படிப்பட்டவரல்ல. எனவே பிரதமர் பதவி என்கிற உயர் அந்தஸ்து கிடைக்குமானால், அவரது செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. நம்மை போன்ற பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒரு சாராருக்கே அந்த அச்சம் இருக்கிறதை உணரமுடிகிறது.

இதெல்லாம், 2014ம் ஆண்டு இறுதியில் முறைப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் இருக்கக்கூடிய சூழல் தான். ஒருவேளை காங்கிரஸ் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, மூன்றாம் அணி இன்னும் அமையவில்லை, பாஜவிலும் அதிருப்தி நிறைந்திருக்கிறது, இந்த சமயத்தில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்திவிட்டால் மொத்தமாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட சாத்தியமிருப்பதை உணர்ந்து செயல்பட்டால், எல்லா கணக்குகளும் முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும்? சொந்த கட்சியான பாஜகவின் தலைவர்களை மோடியால் சமாதானப்படுத்த முடிகிறதா? இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் பரவலாக பாஜக பெற முடியுமா? மூன்றாவது அணி அமையுமா? அப்படி அமைந்தால் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடையில் தான் இருக்கிறது மோடியின் பிரதமர் கனவு.

இப்போதைக்கு பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததையே மிகப்பெரிய வெற்றியாக கருதி அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். அதில் எந்த சங்கடமும் யாருக்கும் இல்லை!

Printfriendly