Saturday, August 6, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3

ன் முந்தைய பதிவுகளில் சொன்னது போல எல்லா சிக்கல்களையும் கடந்து ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும்பொழுது எப்படி இருக்கும்?

ஜி.எஸ்.டி என்பது முதலில் ஒரு முனை வரியாக கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டு இப்போது மும்முனை வரியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இப்போது இருக்கும் பல பல வரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே வரி விகிதம் ஆனால் மூன்று வகைகளில் விதிக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு CGST (இப்போதிருக்கும் சென்டிரல் எக்ஸைஸ் போல) மாநிலங்களுக்குள்ளே நடக்கும் பரிமாற்றங்களுக்கு SGST (இப்போதிருக்கும் VAT போல) மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு IGST (இப்போதிருக்கும் CST போல) கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் எல்லோரும் சிலாகிக்கின்ற அளவுக்கு என்ன பெரிய சீர் திருத்தம் இருக்க போகிறது? ஜஸ்ட் பெயர் மாற்றம் தானே செய்திருக்கிறார்கள் என பல பல பொருளாதார அதிகாரிகளே கூட என்னிடம் கேட்டதுண்டு. ஆனால் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது மிக பெரிய அளவிலான வரி சீர் திருத்தம் தான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கான வருவாய் வரும்படிக்கான அமுத சுரபியும் கூட. (ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால்)

இப்போது இருக்கும் முறைப்படி ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வரி விகிதம் இருக்கிறது. அதாவது எக்ஸைஸ் 12.5%; வாட் (பொதுவாக) 5% & 14.5%; CST (பொதுவாக) 5% & 14.5%; CST (C Form அடிப்படையிலான வியாபாரங்களுக்கு) 2% என இருக்கிறது. இனிமேல் இவை எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம். அதாவது காங்கிரஸ் கேட்டபடி 18% அல்லது ஜெட்லி சொல்வது போல 27%. எல்லா பரிமாற்றத்துக்கும் ஒரே வரி தான்.

எதற்காக 18% வரி என ஒரு கேள்வி வருதுல்ல? இப்போதிருக்கும் எக்ஸைஸ் 12.5% & வாட் 5% சேர்த்து வரும் 17.5% வரியை ரவுண்ட் ஆக்கி தான் 18% வரி நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் 12.5% + 14.5% சேர்த்து 27% வரை வரி விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் வரி விகிதத்தை எக்கச்சக்கச்சக்கமாக ஏற்றி இருப்பது போல தோற்றம் அளித்து இந்தியாவை திவாலாக்க முனைவது போல தெரிந்தாலும், இது உண்மையில் அந்த அளவுக்கு பயப்படக்கூடிய வரி உயர்வு அல்ல. எப்படி?

இப்போதிருக்கும் எக்ஸைஸ் & வாட் வரியை இப்போது செட் ஆஃப் செய்து கொள்ளலாம். அதாவது பொருளை விற்றதற்காக செலுத்த வேண்டிய வரியில் அந்த பொருளை வாங்கும்போது செலுத்திய வரியை கழித்து விட்டு வெறும் லாபத்துக்கு உரிய வரியை மட்டும் கட்டினால் போதும். ஆனால் CST வரிக்கு அப்படியான செட் ஆஃப் வசதி இல்லை.



இனி புதிய GST விதிகளின் படி, CST க்கு இணையான CGST விற்பனைக்கான வரியையும் செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். ஆனாலும் விலை ஏற்றம் இருக்கும். வியாபாரிகள் தங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட முனைந்தால் அரசு திவாலாக வாய்ப்பு இருக்க தான் செய்கிறது. ஒரு சின்ன சாம்பிள் சொல்லட்டா?

நீங்கள் ஒரு வியாபாரி என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளை வேறொரு மாநிலத்தில் உற்பத்தி செய்பவரிடம் இருந்து வாங்கி இன்னொரு டீலருக்கு விற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்:


இப்போதைய CST முறை
புதிய IGST முறை-1
புதிய IGST முறை-2
பொருளின் விலை (வாங்கும்போது)
100.00
100.00
100.00
CST வரி விகிதம்
2%
18%
18%
வரி தொகை     (A)
2.00
18.00
18.00
நாம் கொடுக்கும் தொகை
102.00
118.00
118.00
நமது லாபம்    
10.00
10.00
10.00
பொருளை விலை (விற்கும்போது)
112.00
128.00
110.00
CST வரி விகிதம்          
2%
18%
18%
வரி தொகை   (B)    
2.24
23.04
19.08
விற்பனை விலை
114.24
151.04
129.08
அரசுக்கு செலுத்தவேண்டிய வரி
2.24
5.04
1.08

பொருளாதார நிபுணர்கள் புதிய முறை 1 இல் சொல்லியிருப்பது போல அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். அதே சமையம் பொருளின் விலை இப்போதிருக்கும் 114.24 இலிருந்து 151.04 ஆக உயரும். இது பொருளாதாரத்தை நசித்து விடும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அரசோ வரி வருவாய் 2.24 க்கு பதிலாக 5.04 கிடைக்கும் என்கிறது (வரி B யில் ஏற்கனவே செலுத்திய வரி A வை கழித்து வரும் தொகை). அதனால் தான் இவ்வளவு மும்முரமாக இதில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் இதில் இன்னொரு வாதம் இருக்கிறது. அதாவது புதிய முறை 2 இல் சொல்லியிருப்பது போல வியாபாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அரசுக்கு நஷ்டம் வரும். அதாவது வாங்கும்போது செலுத்திய வரி A எப்படியும் செட் ஆஃப் செய்துவிட முடியும் என்பதால் அதை கணக்கில் எடுக்காமல் விற்பனை விலையை குறைத்து விற்பனை செய்தால் 151.04 க்கு பதில் 129.08 க்கு பொருளை விற்பனை செய்ய முடியும். தன்னுடைய லாபம் 10.00 எந்த விட இழப்பும் இன்றி அப்படியே கிடைத்து விடும். அரசுக்கு சட்டப்படி செலுத்தக்கூடிய தொகையை செலுத்தியாக முடியும். அப்படியான நிலைப்பாட்டை வியாபாரிகள் எடுத்தால் வரி B யில் வரி A வை கழித்து பார்த்தால் 5.04 க்கு பதில் அரசுக்கு வெறும் 1.08 தான் வருவாயாக கிடைக்கும். அது இப்போது கிடைத்துக்கொண்டு இருக்கும் 2.24 ஐ விட குறைவு. இது தான் பல மாநிலங்களின் அச்சம். இந்த இழப்பை யார் ஈடு செய்வது என்கிற விவாதம் தான் இன்னமும் முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இப்படி செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள், கடைசி நிலை உபயோகிப்பாளர்கள் (End users) ஆகியோர் இப்படி செட் ஆஃப் செய்து கொள்ள முடியாது. அவர்கள் மொத்த வரியையும் சேர்த்து கட்டவேண்டி இருக்கும். இது சில்லறை வர்த்தக பற்றாக்குறையை (Retail inflation) அதிகரித்து நாட்டை நாசமாக்கி விடும் என்பதும் சிலரது அச்சம்.

இது போன்ற வரி தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் பல நல்ல விஷயங்களும் இருக்கிறது.

இப்போது போல வரி ஏய்ப்பு செய்ய முடியாது. காரணம் இப்போது கொள்முதல் விற்பனை இரண்டையும் ஒரே நபர் தான் அரசுக்கு தெரியப்படுத்துகிறார். எனவே அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் பொருட்களை கணக்கில் இல்லாமல் விற்றுவிட முடியும். அதை நியாயப்படுத்த ஜஸ்ட் டம்மி பில்களை வாங்கி அதை வைத்து கணக்கை தாக்கல் செய்ய முடியும். (சென்னையில் கூட இப்படி டம்மி பில்கள் தரும் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பில் விலையில் 1% கமிஷன் தான் அவர்களுக்கு)  ஆனால் புதிய முறை அப்படி அல்ல. விற்பனை விபரத்தை மட்டும் தான் நாம் தெரிவிக்க முடியும். கொள்முதல் விபரத்தை நமக்கு பொருளை விற்றவர்கள் இணைய தளத்தில் பதிந்து இருப்பார்கள். அதில் நமது பில் இருந்தால் தான் அது பட்டியலாக்கும். அதே போல நாம் விற்பனை செய்த பொருளுக்கான பில்லை நாம் பட்டியல் இட விட்டுப்போனால் அதன் வரி பலனை பொருளை நம்மிடமிருந்தௌ வாங்கியவர் பெற முடியாது. ஆக எல்லா விற்பனையும் முறைப்படுத்தப்பட்டு ஒரே இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். விற்றவர் வாங்கியவர் இருவருமே ஒரே மாதிரி தான் கணக்கு காட்ட முடியும். வரி ஏய்ப்பு என்பது குறைந்து விட வாய்ப்பு உள்ளது.

பதிவு செய்யப்பட நிறுவனங்கள் நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை சிக்கல்கள் எதுவும் பாதிப்பு இல்லை. கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்பவர்கள் (மளிகை கடை, ஜூவல்லரி போன்றவை...) தான் சங்கடப்படவேண்டும். இனி அவர்கள் எல்லா கொள்முதலையும், விற்பனையையும் கணக்கில் காட்டி ஆக வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.

PAN அடிப்படையிலான 15 இலக்க பதிவு எண், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக கொடுக்கப்படுகிறது. அதன் முதல் 2 எழுத்துக்கள் மாநிலத்தையும் அடுத்த 11 எழுத்துக்கள் PAN எண்ணையும் அடுத்த இலக்கங்கள் அதன் கிளைகளையும் குறிக்கும். இதன் படி, ஒரு PAN வைத்திருக்கும் நபருக்கு என்னென்ன தொழில்கள் எத்தனை எத்தனை கிளைகள் இருக்கிறது என துல்லியமாக கணக்கிடப்பட்டு அவரது ஒட்டுமொத்த வருவாயையும் அளந்து அதற்கு தக்க வருமான வரி விதிக்க முடியும்.

ரிடர்ன் தாக்கல் செய்யும் முறை இப்போது இருக்கும் ஒரே நாள் என்பது மாறி மூன்று முறை என மாற்றப்படுகிறது. அதாவது 10 ஆம் தேதிக்குள் நாம் விற்பனை விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். 15 ஆம் தேதி நமது கொள்முதல் விவரங்களை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். அதாவது நமக்கு பொருளை விற்றவர்கள் 10 ஆம் தேதி தங்களது விற்பனையை பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அது 15 ஆம் தேதி நமது கணக்கில் ஆட்டோமேட்டிக்காக லிஸ்ட் ஆகி விடும். அதை நாம் சரிபார்த்தால் போதுமானது. மற்றபடி நாம் புதிதாக எந்த இடைச்செருகலையும் செய்ய முடியாது. 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்தி ரிடர்னை தாக்கல் செய்து விட வேண்டும்.

இந்த மொத்த நடைமுறைகள் பற்றியும் மத்திய அரசு சமீபத்தில் மாடல் லா (Model Law) என விரிவாக ஒரு செயல் திட்ட அறிக்கையை வெளியீட்டு இருந்தது. அதை முழுமையாக படித்துப்பார்த்தபோது எனக்கு தோன்றியது என்னவென்றால்.. எதற்காக மெனக்கெட்டு இந்த அரசு இப்படி ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தை கொண்டு வருகிறது? இப்போதிருக்கும் சட்டங்களிலேயே சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமானதாச்சே என்று தான் தோன்றியது. ஜஸ்ட் இப்போதிருக்கும் CST வரிக்கு செட்ஆஃப் அறிவித்தால் போதும். மற்ற வரி முறைகளில் மாற்றம் இல்லை. வரி விகிதத்தை கவுன்சில் கூடி ஒரே வரி விகிதத்தை நாடு முழுதும் நிர்ணயித்தால் போச்சு. அதே மாதிரி கொள்முதல் கணக்கை இப்போதிருக்கும் வணிக வரி இணையதளத்திலேயே செயல்படுத்தலாம். இன்னமும் கூட எதற்காக ஒரு தனி சட்டம் என்பது புரியவில்லை.

அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும்? விடுங்கள்.

வரி தாக்கல் செய்வோரை பொறுத்தவரை... இந்த புதிய GST முறையில்  இனி அனைத்து பரிமாற்றங்களுக்கும் முறையாக கணக்கு வழக்குகளை வைத்து கொள்ளவேண்டும். அதை முறையாக ஒவ்வொரு மாதமும் இணைய தளம் வழியாக பதிவும் செய்தாக வேண்டும். அது ஒன்று தான் சிக்கல். F Form, C Form, H Form, I Form என எந்த தலைவலியும் இனி இல்லை. எல்லா ஸ்டாக்கும் தெளிவாக கணக்கீட்டு வைத்திருக்க வேண்டும்.

எக்ஸைஸ், சர்வீஸ் டாக்ஸ்,  CST VAT என தனித்தனியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலரை கண்டு அதை தாக்கல் செய்து அவர்கள் கேட்கும் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நோட்டீஸ்களுக்கும் பதிலளித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. ஒரே ரிட்டர்ன், ஒரே அலுவலகம், ஒரே கேள்வி, ஒரே பதில். அம்புட்டு தேன். அந்த வகையில் அது ஒரு பெரிய ஆறுதல்.

சுருக்கமாக பார்த்தால் நேர்மையாக வியாபாரம் செய்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு எல்லாம் கணக்கு காட்டாமல் கருப்பு பண வியாபாரம் செய்வோருக்கு தான். எப்படியும் விலைகள் உயரும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் வரிகள் செட் ஆஃப் செய்துகொண்டே இருக்கும்போது மெல்ல மெல்ல விலை வீழ்ச்சி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பும். அரசு விற்பனை விலைக்கு ஒரு செக் பாயிண்ட் வைத்தாக வேண்டும். அதாவது வாங்கும் விலைக்கு குறையாமல் விற்பனை விலை இருக்கவேண்டும் என நிர்ணயித்தாக வேண்டும்.  இல்லையென்றால் அரசுக்கான வரி வருவாய் மிக மிக குறைந்து விடும்.


இனி மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள், தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் என சில மாநிலங்கள் ஏன் இந்த சட்டத்தி எதிர்க்கிறது என்பதை பற்றி எல்லாம் அடுத்த பதிவில்... 

Friday, August 5, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2

ரு வழியாக ஜி.எஸ்.டி மசோதா ராஜ்ய சபையில் பாசாகி இருக்கிறது.

ஜி.எஸ்.டி குறித்த எனது முந்தைய பதிவை இங்கே [Click Here] படித்து விட்டவர்களுக்கு தொடர்ந்து நான் சொல்ல போகும் விஷயங்கள் எளிதில் விளங்கும்.

லோக் சபாவில் பாசான ஜி.எஸ்.டி ராஜ்ய சபாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. அதிமுக எதிர்க்கும் என்பதால் அதிமுக அல்லாத இதர மாநில கட்சிகளையும் காங்கிரசையும் சரிக்கட்டும் வேலையில் இறங்கிய பாஜக அதில் மிக அபாரமான வெற்றியும் பெற்றிருக்கிறது. நிதி அமைச்சர் ஜெட்லியும் பிரதமர் மோடியும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே காங்கிரஸ் மற்றும் இதர கட்சி தலைவர்களை கேஷுவலாக சந்தித்து பேசி ஒப்புதல் பெற்று விட்டார்கள். மிக ஆரோக்கியமான பாராட்டத்தக்க விஷயம் இது. ஆனால் இதனால் எல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்துவிடுவதில்லை. உனமையான சவால்கள் இனி தான் இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்ப்போமா?



நிர்வாக ரீதியான சவால்கள் தான் மிக மிக கடினமானது.

இந்த சட்டத்தை 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்யவேண்டும் என மத்திய அரசு சொன்னாலும், அது அவ்வளவு எளிதல்ல. அதனால் மத்திய அரசு மேலும் இரண்டு ஆப்ஷன்ஸ் கைவசம் வைத்திருக்கிறது. ஒன்று 2017 அக்டோபர் 1 முதல் அமல் செய்வது. ஆனால் பல கார்போரேட் நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன. நிதி ஆண்டில் இடையில் இருந்து வரி விதிப்பு முறை மாற்றம் என்றால் அது கம்பெனிகளின் வரவு செலவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு நடை முறை சிக்கல்களும் அதிகம். அடுத்த ஆப்ஷன், 2018 ஜனவரி 1 முதல் அமல் செய்வது. ஏற்கனவே நிதி ஆண்டை இப்போதிருக்கும் ஏப்ரல் – மார்ச் என்பதில் இருந்து ஜனவரி – டிசம்பர் என மாற்றுவதற்கான சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அதை நிறைவேற்றி அதனோடு சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அமல் செய்ய முடியும் என அரசு நினைக்கிறது. எனக்கென்னவோ இது தான் கடைசியில் சாத்தியமாகும் என தோணுது.

ஏன் 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்ய முடியாது? சுருக்கமாக பார்ப்போமா?

லோக்சபாவில் பாசான ஜி.எஸ்.டி மசோதா இப்போது ராஜ்ய சபையிலும் பாஸ் ஆகி இருக்கிறது. மீண்டும் லோக் சபாவில் அப்ரூவ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் சைன் செய்ததும் அது சட்டமாகிவிடும்.

இது ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தம் என்பதால் 50% மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும். அதாவது அடுத்த 30 நாட்களுக்குள் 17 மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு பெற வேண்டும். அவையும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

பாராளுமன்றம் இனி தனித்தனியாக சில சட்டங்களை உருவாக்க வேண்டும். அதாவது மாநிலங்களுக்குள்ளேயான SGST, மாநிலங்களுக்கு இடையிலான IGST, உற்பத்தி துறைக்கான CGST ஆகியவற்றுக்கான தனி தனி சட்டங்கள் வகுத்து அவற்றையும் பாராளுமன்றங்களில் தாக்கல் செய்து பாஸ் ஆக்கி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

அதேபோல, மாநிலங்களும் தங்கள் மாநில நிறுவனங்களின் உற்பத்தி/வியாபாரம் தொடர்பான SGST சட்டங்கள் இயற்றி அதை சட்டசபைகளில் பாஸ் ஆக்கி அதற்கு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல்களை பெற்று சட்டம் ஆக்க வேண்டும்.

அடுத்தபடியாக ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கவேண்டும். இதில் மத்திய நிதி அமைச்சகம், மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.  இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூடி விவாதித்து தான் ஒவ்வொரு பொருளுக்குமான வரி நிர்ணயம் செய்யவேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் ஏற்கனவே எனது முதல் பதிவில் சொன்னது போல ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் தங்கள் மாநில சிறப்பு பொருட்களுக்கு வரி கட்டமைப்பில் சலுகை கேட்கக்கூடும். அந்த பிரச்சனைகளை எல்லாம் விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வரி நிர்ணயம், விதி முறைகள் (Acts & Rules), வழிகாட்டு நெறிமுறைகள் (Procedures) ஆகியவை இறுதி செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். 

நிர்வாக ரீதியான அமைப்புக்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான வரி பிரச்சனைகள், நிதி பகிர்மான வழி முறைகள், பிரச்சனைகளை விவாதிப்பதற்கான தீர்ப்பாயங்கள் போன்ற பல அமைப்புகள் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு அதற்கு தகுந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இவை எல்லாம் பிசிகல் அமைப்புகள்.

விர்ச்சுவல் அமைப்புக்கள் என எடுத்துக்கொண்டால் GSTN என சொல்லப்படக்கூடிய ஜி.எஸ்.டி நெட்வர்க் இணைய தள அடிப்படையில் அமைக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக SGST நெட்வர்க் அமைக்கப்பட்டு அது GSTN வலைப்பின்னலில் இணைக்கவேண்டும். இப்போதிருக்கும் VAT, Excise, Service Tax கட்டமைப்புக்களுக்கு மாற்றாக இந்த புதிய GSTN நெட்வர்க் வருவதால் VAT, Excise, Service Tax ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளரமாக இந்த புதிய நெட்வர்க் அமைக்க வேண்டும்.

அதன் பின், அதில் பணி புரிய உள்ள அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், ஒவ்வொரு வணிக வரி அலுவலக ஊழியர்களுக்கும், செக்போஸ்ட் ஆய்வாளர்களுக்கும் இந்த முறையை அறிமுகம் செய்து அவர்களுக்கு GSTN பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல நாடு முழுதும் உள்ள 39 கோடி நிறுவனங்களின் மறைமுக வரி ஊழியர்களுக்கும் (Indirect Tax officials) இந்த புதிய இணைய தளம் மற்றும் அதில் வரி விதிப்பு முறைகள் பதிவேற்றுவது குறித்த பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.  அனைத்து நிறுவனங்களுக்கும் 15 இலக்க புதிய அடையாள எண் ஒதுக்கப்படவேண்டும். இவை PAN அடிப்படையில் இருக்கும். GST முழுக்க முழுக்க இணைய வழி வரி கட்டமைப்பு என்பதால் அனைத்து நிறுவனங்களும் (சிறு, குறு நிறுவனங்கள் உட்பட) தங்கள் அலுவலகத்தில் இணைய வசதியுடன் கூடிய கணினி அமைத்து அதில் வரி செலுத்துவதற்கான முறையை பயின்று கொள்ள வேண்டும்.

இதில் மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், சென்ட்ரல் எக்ஸைஸ் & சர்வீஸ் டாக்ஸ் ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த GST கொண்டுவரப்படுவதால் அவற்றில் பணி புரிந்து வரும் 17 லட்சம் ஊழியர்களுக்கு அவர்களது தற்போதைய பணி நிலை குறையாத அளவில் GST வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதில் என்னென்ன எதிர்ப்புக்களை ஊழியர் சங்கங்கள் கொண்டு வரும் என தெரியவில்லை. ஏற்கனவே இதே போன்ற ஒரு சிக்கலை இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா இணைப்பின் பொது நாம் சந்தித்தது நினைவிருக்கலாம். (அது குறித்த எனது பதிவை இங்கே [Click Here] படிக்கலாம்)

இவை எல்லாம் செய்து முடித்தால் தான் முழுமையாக GST அமல்ப்படுத்த முடியும் என்பதால் 2017 ஏப்ரல் 1 என்பது சந்தேகம் தான்.

நிர்வாக ரீதியான சிக்கல்கள் தவிர அரசியல் ரீதியான சிக்கல்களும் உள்ளன:

ஏற்கனவே தமிழகம் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த சட்டம் வந்தால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் நமது அச்சம். அது நியாயமானதும் கூட. ஒரு வகையில் பார்த்தால் தமிழகம் இப்போது காட்டும் இந்த உறுதியான எதிர்ப்பு தொடருமானால் தமிழகத்தில் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்படாமலேயே போக வாய்ப்புள்ளது. அப்படியான பட்சத்தில் GST அமைப்பு செயல்படவே முடியாது.

தமிழகத்தை தொடர்ந்து, இப்போது கேரளா மேற்கு வங்காளம் ஆகியவையும் இந்த ஜி‌எஸ்‌டி சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.  இவற்றை எல்லாம் மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது என தெரியவில்லை.

இந்தியா போன்ற ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டே இருப்பது வாடிக்கை. அப்படி புதிய அரசு வந்து அதன் நிதி அமைச்சர் GST கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அவர்களது கட்சி கொள்கை படியான மாறுபாடான நிலைப்பாடை எடுக்க நேர்ந்தால் அதுவும் GST கவுன்சிலுக்கு சிக்கல் தான்.

இது தவிர, இப்போது ஒரு சில அட்ஜஸ்ட்மெண்டுகளை மட்டுமே மத்திய அரசு செய்திருக்கிறதே அல்லாமல் முக்கியமான திருத்தங்களை முழுமையாக இன்னமும் செய்யவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டால் தான் காங்கிரசும் இதர கட்சிகளும் GST அமலாக ஒத்துழைக்கும் என்பது அடுத்த சிக்கல்.

காங்கிரஸ் வைத்த முக்கியமான ஐந்து கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றதால் தான் இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க சம்மதித்து இருக்கிறது. அதாவது மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு 1% கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் கேட்டது. அப்படி கூடுதல் வரி விதித்தால் அது சீரான வரி விதிப்பை தகர்த்துவிடும் என்பது அவர்களது அச்சம். அதை முதலில் பிடிவாதமாக மறுத்த அரசு, பின்னர் உண்மை அறிந்து இறங்கி வந்து ரத்து செய்திருக்கிறது.

மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை கொடுப்பதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கவேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை. இது மாநிலங்களின் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கை. பாஜக முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும் இழப்பீடு தரும் என முதலில் சொல்லி இருந்தது. ஆனால் இப்போது காங்கிரஸின் கோரிக்கையில் உள்ள நியாயம் அறிந்து இழப்பீடு குறித்து முடிவெடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி குறித்த வழக்குகள் சச்சரவுகளை விவாதித்து முடிவெடுக்க தனியாக ஒரு தீர்வாயத்தை காங்கிரஸ் கேட்டது. முதல் முதலில் ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்தபோது அதில் இந்த சரத்து இருந்தது. ஆனால் பின்னர் வந்த பாஜக அந்த விதியை ரத்து செய்து இருந்தது. இப்போது காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி விதிப்பு 18% க்குள் இருக்கவேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. அது தான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்பது அவர்கள் நிலை. ஆனால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வரி விதிப்பு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என ஜெட்லி சொல்லி விட்டார். “வரி தொடர்பான சட்டத்தில் வரி சதவீதம் சொல்லப்படவில்லை என்றால் அது வரி சட்டமே அல்ல” என சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். வரி சதவீதம் என்ன என்பதையே சொல்லாமல் மொட்டையாக சட்டத்தை நிறைவேற்றி இருப்பது தவறு என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. இப்போதுள்ள சூழலில் 18% வரி விதிப்பது போதாது, கூடுதல் வரிவிதிப்பு இருக்கக்கூடும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கும் நிதி அமைச்சர், ஆனால் அது 27% க்கு குறைவாக இருக்கும் என கோடிட்டு காட்டி இருக்கிறார். எனவே எனது கணிப்பு படி 22 – 24% வரை வரி இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அப்படி ஆனால் ஒட்டுமொத்த சிறு தொழிலும் நசிந்து விடக்கூடும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை வரும். ஆனால் அப்படி உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டால் அதை காங்கிரஸ் அனுமதிக்காது என தெளிவாக சிதம்பரம் சொல்லி இருக்கிறார். அது நமக்கெல்லாம் ஒரு சின்ன ஆறுதல்.

ஆக நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இத்தனை சிக்கலைகளையும் கடந்து ஜிஎஸ்டி எப்போது செயலாக்கத்துக்கு வரும் என தெரியவில்லை. அப்படி செயல்பாட்டுக்கு வரும்பொழுது அது எந்த மாதிரி இருக்கும்? என்னென்ன நடைமுறைகள் மாறும்? வரி தாக்கல் செய்வோருக்கு உள்ள சாதகங்கள் பாதகங்கள் என்னென்ன? என்பதை எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக பேசலாம் நண்பர்களே!



Monday, May 30, 2016

நேர் நிரை – கூவிளம்

மாராணி மிஸ். 

கோவை சித்தாபுதூர் ஸ்கூலில் இவங்க தான் என்னுடைய தமிழாசான்.. ச்சே.. தமிழாசிரியை. மிக மிக அருமையா தமிழை, தமிழ் இலக்கணத்தை யாப்பை, யாப்பின் கட்டுக்களை எளிமையா புரியமாதிரி எனக்கு சொல்லி கொடுத்தவங்க.
 
Thanks: PaddathumSuddathum.blogspot.com

யாப்பிலக்கணத்தின் அடிப்படையே சொல்லின் ஒலி குறிப்புத்தானே? நெடில் – நேர்; குறில் – நேர்; நெடில் நெடில் – நேர் நேர்; குறில் நெடில் – நிரை நேர்; நெடில் குறில் – நேர் நிரை; குறில் குறில் நிரை நிரை. அவ்வளவு தான் யாப்பு. இதில் இரட்டை & மூன்று ஒலிக்குறிப்புக்கும் இன்னொரு அடுக்கு 'கோடு வேர்டு' இருக்கு. நேர் நேர் – தேமா; நிரை நேர் – புளிமா; நேர் நிரை – கூவிளம்; நிரை நிரை – கருவிளம். இதெல்லாம் இரட்டை ஒலிக்குறிப்புக்கள். இதுக்கு அடுத்தபடியா மூணாவது சொல் நேர்னு வந்தா காய்; நிறைனு வந்தா கனி. இவ்வளவு சிம்பிளா யாப்பை சொல்லிக்கொடுத்ததோட, அவங்க சொல்ற சொல் என்ன ஒலிக்குறிப்பு அதுக்கு என்ன கோடு வேர்டுனு கேள்வி கேட்டு கேட்டு தினம் கொஞ்ச நேரம் விளையாடுவாங்க. இது மிக அற்புதமான பயிற்சியா அமைஞ்சு இன்னை வரைக்கும் யாப்பை மறக்கவிடாம செஞ்சிருக்கு.

வைரமுத்துவின் இதுவரை நான் படிச்சப்ப அவர் இதே மாதிரி யாப்பை முதல் முதலா படிச்சு புரிஞ்சுகிட்டபோது திருக்குறளின் 1330 குறளையும் பகுத்து பார்த்தார்னு எழுதி இருக்கிறதை படிச்சேன். அதனால தான் அவர் கவிப்பேரரசர். நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை. தினம் அப்பா வீட்டில் வாங்கும் தினத்தந்தியின் தலைப்பு செய்திகளை பகுத்து பார்த்து அதை சின்ன தாளில் எழுதி எடுத்துட்டு போயி உமாராணி மிஸ் கிட்டே காட்டுவேன். சரியா பகுத்திருக்கேனான்னு என்னை நானே அப்ரைசல் செஞ்சுக்க.

உதாரணமா இந்த பிளாக்கின் தலைப்பை எடுத்துகோங்க. மனவுரை ம-குறில்; ன – குறில்; வு – குறில்; ரை – குறில். எல்லாமே குறில் தான். அதை சேர்த்தா.. குறில் குறில் – நிரை; நிரை நிரை – கருவிளம். சுருக்கமா மனவுரை = நிரை நிரை = கருவிளம். சொல்லி பாருங்க மூணு வார்த்தையும் ஒரே மாதிரி தான் உச்சரிக்கும்.

இது தவிர வேற்றுமை உருபு, குற்றியலுகரம், குற்றியலிகரம் அது இதுன்னு அந்த ரெண்டு வருஷத்தில் (9th & 10th) ஆல்மோஸ்ட் இலக்கணத்தில் மொத்த பேசிக்கையும் சொல்லி கொடுத்துட்டாங்க.

Thanks: Ponkarthikeyan.wordpress.com

எனது பிற்கால யாத்திரைகளில் இந்த யாப்பு ஒலிக்குறிப்பு இன்னொரு தேடலுக்கு வழி வகுத்துச்சு. அது தான்.. இதெல்லாம் என்ன காய் கனி? தேமா – தேன் மாங்கா; புளிமா – புளிமாங்கா புரிஞ்சுது.. ஆனா இந்த கூவிளம் & கருவிளம்??

எனக்கொரு மதுரைக்கார தோழி உண்டு. அவர் தான் விளம் என்பது விளாம்பழம் / விளாங்காய் என்பதை குறிக்கும்னு சொன்னார். மதுரைக்கு போயிருந்தபோது விளாங்குடி கூட்டிட்டு போனார். நான் கூட சுத்து முத்தும் விளா மரமா தோப்பு தோப்பா இருக்கும்னு ஆசையா எதிர்பார்த்து போனேன். ஆனா அது ஒரு வழக்கமான நகர பகுதியா தான் இருந்துச்சு.

******  *******

சென்னை கன்னிமாரா நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் பல வகையினர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சொற்பொழிவாளர்கள்வைரமுத்து விழாக்களில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சொல்லாடலை கண்டு சொக்கி போயிருந்த காலங்கள் அவை.

மெல்ல மெல்ல மனம் லக்ஷ்மி, வாஸந்தி, அகிலன், சாண்டில்யன், கல்கி, அசோகமித்த்ரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், தமிழ்வாணன் மாதிரியானவர்களிடமிருந்து விலகி தமிழ் கவிஞர்களின் அதிலும் மரபு கவிஞர்களின் படைப்புக்கள் பக்கமாக ஒதுங்க தொடங்கினேன். மாயவநாதன், சுரதா, மருதகாசி, பாரதிதாசன் மாதிரியான ஹேரிடெஜ் கவிஞர்களில் இருந்து, வைரமுத்து, முத்தையா, வாணிதாசன், பாவலர் தேவகி மாதிரியான கவிஞர்களின் படைப்புகள் வரை எல்லோரது எழுத்துக்களும் வசீகரித்தன. 

மாயவநாதன் பத்தி சொல்லும்போது அந்த வானம்பாடி படத்தின் காகித ஓடம் கடலலை மீது பாடலை சொல்லாமல் இருக்கமுடியாது. (ஏற்கனவே பலரும் பல தடவை சொன்னது தான். நானும் ஒரு தடவை சொல்லிக்கறேனே).

காகித (நேர் நிரை) ஓடம் (நேர் நேர்) கடலலை (நிரை நிரை) மேலே (நேர் நேர்).  இந்த பாடலை எழுதுநது என்னவோ கலைஞர் தான். ஆனா உண்மையிலேயே இந்த டியூன் மாயவநாதனுக்கு தான் கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கோபத்தில் மகாதேவன் கொடுத்த டியூன் அது. ரொம்ப நாளா டியூனு டியூனுனு நச்சு பண்ணிட்டு இருந்த மாயவநாதன்கிட்டே கடுப்பாகி மகாதேவன் சொன்னாராம்.. என்னய்யா டியூனு பெரிய டியூனு? மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் இதான் டியூனு முடிஞ்சா எழுதிக்கொன்னு சொன்னாராம். மாயவநாதன் அந்த டியூனுக்கு பாட்டு எதையும் எழுதலை. ஆனா விஷயத்தை கேள்விப்பட கலைஞர் அந்த 'மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்' டியூனையே அடிப்படையா வெச்சு காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்னு எழுதுனாரு. அதுமட்டுமல்ல. அந்த பாடல் முழுக்கவே இந்த ஒரே டியூன் தான்.

இதுக்கு அடிப்படையும் யாப்பு தான். அந்த மாயவநாதன்ற வார்த்தையின் ஒலிக்குறிப்பு மா(நேர்) யவ(நிரை) நா(நேர்) தன்(நேர்) – நேர் நிரை நேர் நேர். இதை பேசிக்கா வெச்சு தான் கா(நேர்) கித(நிரை) ஓ(நேர்) டம்(நேர்) னு எழுதி இருப்பார் கலைஞர். நீங்க அந்த வார்த்தைகளை சொல்லிப்பாருங்க. மாயவ நாதன், நேர்நிரை நேர்நேர், காகித ஓடம்... ஒரே மாதிரி உச்சரிப்பு வருதுல்ல?

மொத்த பாடலின் அத்தனை வரியையும் மாயவநாதன் மாயவனாதாண்ணே போட்டு பாடினாலும் கரெக்டா வரும். அத்தனை எடத்திலேயும் அதுக்கு தகுந்த மாதிரி யாப்பு தப்பாம வார்த்தைகளை போட்டு ஒரு உருக்கமான பாட்டை எழுதிருப்பாரு கலைஞர்.

“கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்”

மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்”

பாடி பாருங்க. சேம் டியூன் யூ நோ.

இந்த செய்தியை படிச்சப்பறம் திரைப்பாடல்களை கூட சந்தம் பிரிக்க ஆரம்பிச்சேன். எங்கெல்லாம் தளை தட்டுது எங்கெல்லாம் வார்த்தைகள் தப்பு தப்பா வருதுன்னு எல்லாம் ஈஸியா புரிய ஆரம்பிச்சுது. பல பல பாடல்களை கண்ணதாசனே தப்பா எழுதி இருக்காரு. ஆனா பிரபலமான கவிஞர்கள் தப்பு செஞ்சா அது தப்பு லிஸ்ட்ல வராதுன்றதால விட்டுடலாம்.

பிற்காலத்தில் பாட்டுப்போட்டி, கவிதை போட்டில எல்லாம் கலந்துக்கும்போது இந்த யாப்பு இலக்கணம் எனக்கு நிறையவே கை கொடுத்துச்சு. பாரதியார் கவிதைகளை பாடலா பாடும்போது வார்த்தைகள் தவறாமல் இருக்க இந்த எதுகை மோனையும், தாள சந்த யாப்பு மரபும் உதவின மாதிரி வேற எதுவும் உதவலை.

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்னுடைய ரொம்ப ரொம்ப பேவரைட் பாட்டு. பல தருணங்களில் அதை பாடி இருக்கேன். நீயெனதின்னுயிர் கண்ணம்மா வரிக்கு அடுத்த வரி திக்கும்போதெல்லாம் யெ எதுகை தான் கை கொடுத்து, போயின போயின துன்பங்கள்... வாயினிலே அமுதூறுதே... தீயினிலே வரும் ஜோதியே... னு அடுத்தடுத்த வரிகளை நிஜாபகப்படுத்திட்டே இருக்கும். எல்லாமே அந்த யெ, யி எதுகையை வெச்சும், நேர் நிரை நேர் நிரை தாள சந்தமும் தான் கை கொடுத்துச்சு.

யாப்பு படிக்காம கவிதை எழுதரவங்க ஒரு பக்கம் அதை புதுக்கவிதைன்னு எழுதிட்டு இருந்தாலும், அது என்னவோ ஸ்பிலிட் செஞ்சு உடைச்சு போட்ட உரைநடை மாதிரி தான் தோணுது.

இப்போதைக்கு பேஸ்புக்கில் நிறைய மரபு கவிஞர்களை பார்க்க முடியுது. சந்தோஷம். நா.சொக்கன் எல்லாம் மகான். ரொம்ப ரொம்ப கேசுவலான விஷயத்துக்கு எல்லாம் அசால்டா வெண்பா எழுதுராறு. அலட்டிக்கறதே இல்லை. தூய சங்ககால செந்தமிழ் தான் வேணும்னு இல்லை.. பேச்சு மொழி, பிற மொழி சொல்லை கூட அழகா பொருத்தி அட்டகாசமான வெண்பாவை ஜஸ்ட் லைக் தத் அடிச்சு விட்டு அசர வைக்கிறாரு. மிகப்பெரிய ஆச்சரிய போதை இருந்தும் அவரை சந்துச்சு பேசிய அந்த அபூர்வமான அற்புதமான அரை மணி நேரத்தில் எதையும் சொல்ல தோணாமல் அவரை சந்திச்ச ஆச்சரிய பிரமிப்பிலேயே கழிஞ்சு போனது.

இனி வரும் தலைமுறைக்கு தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் யாப்பின் அடிப்படையையும் தெளிவா சொல்லிக்கொடுத்து தமிழை வளர்க்க எல்லோரும் உதவலாம். ஆனா அதுக்கு நமக்கு முதலில் யாப்பு தெரிஞ்சிருக்கணும். யாப்பு தெரிஞ்சா நாமே தமிழை அவ்வளவு ஈடுபாட்டோட ரசிக்க ஆரம்பிச்சிருவோம்.

மெல்ல தமிழ் இனி சாகும்னு இனியும் பிரகடன படுத்திட்டு இருக்காம, யாப்பிலக்கணத்தை ஜஸ்ட் 10 மார்க் விஷயமா மட்டும் பார்த்து சாய்ஸில் விடாம, தமிழ் பாடத்தில் கட்டாய பகுதியா அது இருக்கணும்ன்றது என்னுடைய ஆசை.

நாமெல்லாம் ஆசை மட்டும் தான் பட முடியும்.


Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Printfriendly