Saturday, December 31, 2011

திமுகவின் குடும்ப அரசியல்!



இணைய தளங்களிலும் அரசியல் அரங்கத்திலும் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் திமுகவின் குடும்ப அரசியல் என்பது. திமுக என்றாலே வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்கிற ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை!

வாரிசு முறை என்பது உலகம் முழுதும் அனைத்து துறைகளும் இருக்கக்கூடிய ஒன்று தான். இந்தியாவும் தமிழகமும் அதில் விதி விலக்கல்ல. தொழில்துறை, விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளிலும் வழி வழியாக வாரிசு முறை கொண்டு வரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் பல கட்சிகளிலும் நீண்டகாலமாக நிலவி வரக்கூடியது தான் குடும்ப அரசியல்  / வாரிசு அரசியல் என்பது. இதில் விதி விலக்கான கட்சிகளே இல்லை. தமிழகத்தை எடுத்ஹ்டுக்கொண்டால், திமுக பெரும் இயக்கமாக இருப்பதால் அது முன்னிலைப்படுத்தப்படுகிறது.  அதை சற்று விரிவாக பார்க்கலாம்!


குடும்ப கட்சியா கட்சி குடும்பமா?

திமுக என்பது குடும்பத்தை கட்சியாக கொண்டது என்கிற கருத்து ஊடக துறையினராலும் பிற அரசியல் இயக்கங்களாலும், அரசியல் அறியாத பல எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எனது பார்வையில் திமுக கட்சியை குடும்பமாக கொண்டது எனவே கருதுகிறேன்.

கழகம் 1949 ல் துவங்கப்பட்டு பல்வேறு கடினமான காலகட்டங்களையும் கடந்து வந்ததும், தமிழகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் திமுக ஆற்றிய சேவைகள், அதற்கான போராட்டங்கள், கைதுகள் என பலவும் எல்லோரும் அறிந்த ஒன்றே. எனவே அதை பற்றி எல்லாம் விவாதிக்காமல் குடும்ப அரசியல் என்கிற ஒன்றை மட்டும் இப்போது விவாதிப்பது தகும் என கருதுகிறேன்.




திமுகவில் இப்போது முதன்மை குடும்பத்தின் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே சமீபத்தில் தான் பொறுப்புக்களும் பதவிகளும் கொடுக்கப்பட்டன.

ஸ்டாலினை பொறுத்த வரை கட்சியில்
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைகளை அனுபவித்து படிப்படியாக கிளைக்கழகம், இளைஞ்சர் அணி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர், கட்சியின் பொருளாளர், துணை பொதுசெயலாளர் என முன்னேறியவர். ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு தாமதாமாக தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என மாற்று கட்சியினரும் கருத்து தெரிவித்தது உண்டு.

சரி! அப்படியானால் கட்சிக்காக உழைத்தவர்களை கண்டுகொள்ளவில்லையா கழகம்?

குடும்ப வாரிசுகளுக்கு பதவிகளும் பொறுப்புக்களும் கொடுப்பதற்கு முன்பாக பல காலமாகவே கழகத்துக்காக பாடுபட்டவர்களை உரிய முறையில் கவுரவித்து வந்திருக்கிறது திமுக.

மிக சில உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தங்கபாண்டியனின் பிள்ளைகள்.  பரிதி இளம் வழுதி இளம்பரிதியின் மகன். பழக்கடை ஜெயராமனின் மகன் தான் ஜெ. அன்பழகன். கீதா ஜீவன் கருப்பசாமி பாண்டியனின் மருமகள்.   பூங்கோதை அருணா, ஆலடி அருணாவின் மகள். ஐ.பி.செந்தில் திண்டுக்கல் பெரியசாமியின் பிள்ளை.  வானூர் ஏ.ஜி சம்பத் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.கோவிந்தசாமியின் மகன். இப்படி எல்லா மாவட்டங்களிலும் பலப்பல கழக மறவர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும், பதவியும் கொடுத்து அழகு பார்த்ததற்கு பின்னர் தான் முதன்மை குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மொத்த கழகமும் குடும்பம், கழக உறுப்பினர்கள் எல்லோருமே குடும்பத்தினர் என்கிற பார்வை இருந்ததால் தான் இத்தனை முக்கிய பிரமுகர்கள், கொள்கை பிடிப்போடு திமுகவில் இருந்து வருகின்றனர் என்பதை எல்லா கட்சியினருமே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


உட்கட்சி ஜனநாயகம்!

திமுகவில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், உட்கட்சி ஜனநாயகம்.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சியோடு ஒப்பிட்டு பார்த்தாலும், முறையாக தேர்தல் நடத்தி சீராக பல ஆண்டுகளாக இயங்கி வருகிற ஒரு இயக்கம் திமுக.  மேலும் தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக இருப்பதும் திமுகவில் தான்.


 இன்றைய தேதியில் பார்த்தால் கூட, பொன்முடி, துரை முருகன், ஆற்காட்டார், அன்பழகன், வீரபாண்டியார், மூக்கையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூரார் என முக்கிய மூத்த தலைவர்களும், பிராந்திய அளவில் மாவட்ட அளவில் முக்கிய பிரமுகர்களும் உரிய முக்கியத்துவத்தொடும் பிரபல்யத்தொடும் இருப்பதை எல்லோரும் அறிவர்.

இவர்கள் சுயமாக தங்கள் கருத்துக்களை வெளியிடவோ, பொதுக்கூட்டங்களில் சுந்தந்திரமாக கருத்து சொல்வதற்கோ எந்த தடையும் விதிக்கப்பட்டு இருக்க வில்லை. மாற்று கட்சியில் இருந்து வந்து இணைந்தவர்களுக்கும் அதே முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது!

ஒரு ஒப்பீட்டுக்காக தமிழகத்தின் பிற கட்சிகளை எடுத்துக்கொள்வதானால், பெரும்பாலான காட்சிகளில் இரண்டாம் கட்ட செயல் தலைவர்கள் என்பதே இல்லை.

மதிமுக, பாமக, நாம் தமிழர், இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போன்ற எந்த கட்சியாக இருந்தாலும், தலைவர், தலைவர் குடும்பம் தவிர வேறு யாரையும் பிரபலமாக ஆக்க விடுவதில்லை. எல்லோருமே அடக்கி வைக்கப்பட்டவர்கலாகவே இருந்து வருவதை நான் கண்கூடாக கண்டு வருகிறோம்.


அதிமுகவை பொறுத்தவரை இரண்டாம் கட்ட தலைவர்கள் மிக சிலர் இருந்தாலும், அவர்களால் சுயமாக செயல்பட முடிவதுமில்லை, அவர்கள் முக்கியத்துவபடுத்த படுவதும் இல்லை. அப்படி ஒரு வேலை முக்கியத்துவத்தை நோக்கி முன்னேருகையிலேல்லாம் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பல பல உதாரணங்கள் இருந்தாலும், திருநாவுக்கரசர், எஸ்.டி.எஸ், சாத்தூரார், முத்துசாமி என குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிலர்.

பொதுவான நோக்கில் பார்க்கையில், திமுக தனது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதோடு, உரிய பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது, இரண்டாம் நிலை செயல்வீரர்களாக அவர்களை மேம்படுத்துகிறது, உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறது என்பதை அரசியல் அறிந்த விமர்சகர்கள் யாவரும் அறிவர்.

ஏன் இப்போது இந்த பதிவு?

இன்றைக்கு இணைய தளங்களிலும் பிற ஊடகங்களிலும் திமுகவை குறித்து ஒரு தவறான சித்தரிப்பு இருந்து வருகிறது. காரணம் அரசியல் வரலாறு முழுமையாக அறியாத, அறிய முயலாத பல பல எழுத்தாளர்கள் பெருகி விட்டதும், அப்படியான எழுத்தாளர்களின் சொற்கள் வேதவாக்காக கருதப்பட்டு வருவதும், அதில் சில முக்கிய எழுத்தாளர்களின் கருத்துக்கள் பிரபல ஊடகங்களில் வெளியாவதும், உண்மையின் உண்மை நிலையை உண்மையாக உரைத்தாமல் போய்விடுகிறது.  எனவே உண்மையில் எது தான் உண்மை என சீர்தூக்கி பார்க்க விரும்பும் மிக சிலருக்கான பதிவாகவே இதை பதிந்து அமைகிறேன்.

Thursday, December 1, 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. சமீபகாலமாக அதிகம் அடிபடும் வாக்கியம் இது தான்.

கடந்த வாரம் மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து முடிவு எடுத்தது. அது முதலே நாடு முழுதும் பெரும் அளவிலான விவாதங்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் தொடங்கி இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் அளவிலே சென்று கொண்டிருக்கிறது. உண்மையில் என்ன தான் பிரச்சனை?

மத்திய அரசு முடிவு

பொருளாதார சீர்திருத்தத்தின் படிப்படியான அமலாக்கத்தின் ஒரு கட்டமாக சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு கடந்த வாரம் முடிவு எடுத்தது. 51 % வரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை எடுத்த முடிவு, மத்திய அரசின் முடிவு தான் எனவும், மாநிலங்கள் விருப்பப்பட்டால் அதனை அமல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனி வணிகத்தில் 100 % வரையும் பல்பொருள் வணிகத்தில் 51 % வரையும் அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் சில்லறை வணிகத்தின் நிலை.

பொதுவாக இந்தியாவில் பாரம்பரியமாக மளிகை மற்றும் சிறு கடைகளை குடும்ப தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். இப்போது தேவைகள் அதிகமானதாலும், கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனி குடித்தனங்கள்  பெருகி விட்டதாலும், கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. தினசரி தேவைகளுக்கான பொருட்கள் பெரும்பாலும் இவ்வாறான மளிகை கடைகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று விற்கும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை பெற்று விற்பதால் விலை கூடுதலாகவும், பொருட்கள் சில சமயங்களில் நாள்  பட்டதாகவும் இருப்பதை தவிர்க்க முடிவதில்லை. இது போன்ற நிலையை தவிர்க்கவும் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கே கிடைப்பதற்காகவும் சூப்பர் மார்க்கெட்டுகள் தோன்ற துவங்கின. எனினும் அவை பாரம்பரியமான மளிகை கடைகளின் செல்வாக்கை பெற முடியாமல் போனது.

இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்கள் சற்று தாமதாமாக மளிகை பொருட்களுக்கான தேவையின் விஸ்வரூபத்தை அறிந்து கொண்டனர். அதன் விளைவாக மிக பெரிய வர்த்தக விற்பனை நிறுவனங்களை, ரிலையன்ஸ், பிர்லா குழுமங்கள் துவக்கின. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. நாம் உதாரணத்துக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் பிரெஷ் 

அம்பானி குழுமத்தில் இருந்து துவக்கப்பட்ட ரிலையன்ஸ் பிரெஷ் நிறுவனம் பல முன்னோடியான வர்த்தக முறைகளை கையாண்டது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்வது, தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக பல்வேறு நகரங்களிலும் இருக்கும் தங்கள் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்வது பிரம்மாண்டமான கடைகளை நிறுவி டீஸ்பூன் முதல் டெலிபோன் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்க செய்வது போன்றவற்றால், தரமான பொருட்களை குறைவான விலையில் விற்கமுடிந்து மக்களிடம் ஆதரவை பெற்றது.

சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள விவசாய பொருட்கள் கொள்முதல் நிலையத்திற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் இடை தரகர்களின் செலவுகள் இன்றி விலை குறைவாக கிடைப்பதாகவும், விவசாயிகளுக்கும் கூடுதல் தொகை கிடைப்பதாகவும் சொன்னார்கள்.  பல மாநிலங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்கு குறிப்பிட்ட விவசாயிகளிடம் ஒப்பந்தமே போட்டு கொள்கிறார்கள். இதன் மூலம் , விளைச்சலுக்கு பின்னர் தங்கள் விலை பொருட்களை விற்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம் இல்லாமல் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த முடிகிறது. தரமான உற்பத்தி, உறுதியான வியாபார ஒப்பந்தம், அவ்வப்போது முன்தொகை போன்றவை விவசாயிகளின் விளைச்சல் பளுவை குறைக்கிறது. இடைத்தரகர் இல்லாததால் லாபமும் அதிகரிக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நாடு முழுவதுமுள்ள தங்கள் விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதால் ஒரு சிறப்பான Supply Chain System கொண்டு செயல்பட முடிகிறது.  இப்படி தான் பெரிய வணிக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க இன்னொரு நிறுவனம் பிக் பசார். இவர்களும் மொத்த கொள்முதலை விவசாயிகளிடமிருந்தும், உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெற்று விற்பனை செய்து வருகிறார்கள். உற்பத்தியாளர்களும், மொத்தமான கொள்முதல் என்பதால் விலையை அபரிமிதமாக குறைத்து உற்பத்தி செய்து தர முடிகிறது. மார்கெட்டிங் தலைவலியும் உற்பத்தியாளர்களுக்கு இல்லாமல் அவற்றை இது போன்ற வர்த்தக நிறுவனங்களே ஏற்று கொள்கின்றன.

அந்நிய நேரடி முதலீடு - அவசியம் என்ன

இப்போதைய சூழலில் பெரிய வணிகங்களை செய்யக்கூடியவர்களாக ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற மிக சில நிறுவனங்களே இருக்கின்றன. சுபிக்ஷா, திரிநேத்ரா, போன்ற பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கி போய்விட்டன. கிட்டத்தட்ட மறைமுகமாக ஒரு ஒருமுகத்தன்மை (Monopoly) இந்த வியாபாரத்தில் நிலவ தொடங்கி விட்டது.  எனவே எல்லாவரும் இந்த தொழிலே ஈடுபடவேண்டும் என்கிற நோக்கத்திலும், வணிக விற்பனை பரவலாக்கப்படவேண்டும் என்கிற எண்ணத்திலும் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதன் மூலம் அந்நிய பங்குதாரர்களை கொண்டு பெரிய வர்த்தக நிறுவனங்களை இந்தியர்கள் ஏற்படுத்தி கொள்ள முடியும். அதாவது நம்மிடம் தொகை குறைவாக இருப்பதால் ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தை தொடங்க முடியவில்லையே என ஏங்கும் பல இந்தியர்கள், இனி வெளிநாட்டு நிறுவனங்களை துணையாக கொண்டு பெரும் அளவிலே கடைகளை நிறுவ முடியும்.  அவ்வாறு பெறப்படும் முதலீடு என்பது 51 % க்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பது தான் மத்திய அரசின் முடிவு.  இது சில்லறை விற்பனையில் தற்போது இருக்கும் ஒருமுகத்தன்மையை உடைத்து பன்முக தன்மையை ஏற்படுத்துவதோடு, எவர் வேண்டுமானாலும் இத்தொழிலில் இறங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இதன் விளைவுகள்

அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு புதிதல்ல.  ஏற்கனவே ஆட்டோமோட்டிவ் துறையில் இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹிரோ நிறுவனம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ ஹோண்டா நிறுவனமாக அமைத்தது ஒரு உதாரணம். அவ்வாறே, டிவிஎஸ் சுசுகி, எஸ்கார்ட்ஸ் யமஹா, கவாசாகி பஜாஜ், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் மிட்சுபிஷி என பல பல நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து வியாபாரத்தை நடத்தி வருகின்றன. இதன் மூலம் போட்டி அதிகமாகி குறைந்த விலையில் தரமான பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்க துவங்கின.

சில்லறை விற்பனையை பொறுத்தவரை இது தான் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கும் அனுமதி என்பதால் பலத்த எத்ரிப்பு கிளம்பி இருக்கிறது. இவ்வாறான அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் காலூன்ற விட்டு, பாரம்பரியமான மளிகை வியாபாரத்தை சிதைத்து விடும் என்கிற அச்சம் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற மிக பெரிய நிறுவனங்களும்,  ஊர் சார்ந்த வட்டார டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இருந்தாலும் மளிகை கடைகளும் சந்தைகளும் இப்போதும் இயங்கி கொண்டு தான் வருகின்றன. எதுவும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.  ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து இப்போது பரவலாக்க பட்டு இருக்கும் சில்லறை விற்பனை துறை, கூட்டு தொழிலாக ஏற்படுத்தப்படுகிறது என்கிற வித்தியாசத்தை தவிர வேறு இல்லை.

நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால், நாம் அச்சப்படும் அளவுக்கு இந்த அந்நிய முதலீட்டு முடிவில் எந்த அம்சமும் இல்லை.

அரசு நிறுவனங்கள்

அரசே என் நேரடியாக விற்பனை நிலையங்களை ஏற்படுத்தக்கூடாது என்கிற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக தோன்ற கூடியதே. இந்த விஷயத்தில் நான் உதாரணத்துக்காக தமிழகத்தை எடுத்து கொள்ள விரும்புகிறேன்.

விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக வேளாண் விலைபொருள் விற்பனையகம், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. மளிகை பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (TAmilnadu State MArketing Corporation - TASMAC) தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலமாக சிந்தாமணி, அமுதம் போன்ற சிறப்பங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இது தான் தமிழகத்தை பொறுத்தவரை சப்ளை செயின் பலமாக இருந்த சில்லறை விற்பனை அங்காடி (ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் வரும் வரை).

விவசாயிகள் இடை தரகர்களிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைவதை தடுக்கவும், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே இருந்து விலையை கூட்டி வந்த இடை தரகு முறையை ஒழிப்பதற்காகவும் உழவர் சந்தைகளை தமிழக அரசு அமைத்தது. இது விவசாயிகளுக்கு மிக வசதியான ஒரு திட்டமாக செயல்பட்டது.

எனினும் மக்கள் எதிர்பார்க்கும் அளவில் மிக பிரம்மாண்டமான கடைகளை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தும் அளவுக்கு அரசுடன் நிதி ஆதாரம் இல்லை. அவ்வாறு நிதி ஆதாரம் இருந்த பெரும் நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த தொழிலில் எல்லாவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே அந்நிய முதலீடு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

இதன் நன்மைகள்:

மிக பெரிய அளவிலான வியாபார போட்டி, ஒருமுகத்தன்மை உடைத்து பன்முக தன்மை நிலை நாட்டப்படுதல், நேரடி கொள்முதல், விவசாயிகள் உற்பத்தியாளர்களின் உற்பத்திக்கு ஏற்ற விலை, நுகர்வோருக்கு குறைவான விலையில் தரமான பொருட்கள், மிக சிறந்த விநியோக கட்டுமானம், அனைத்து நகரங்களிலும் வணிக வளாகங்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதன் பாதகங்கள்:

அந்நிய நிறுவனம் பின்னர் தங்கள் பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வது, விவசாய பொருட்கள் இறக்குமதி, மளிகை போன்ற சிறு வியாபாரிகளின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை, தரகு தொழிலில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வாதார கேள்விக்குறி, நிலைநின்றபின் விலையை அவர்கள் இஷ்டத்திற்கு நிர்ணயித்து பெரும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஆகியவை இதன் பாதகங்களாக உணரப்படுகின்றன.

அரசு செய்யவேண்டியது.

மொத்த விற்பனையில் 60 % கொள்முதல் உள்நாட்டில் இருந்து செய்யவேண்டும் என வலியுறுத்துவது, நகரங்களில் இவ்வாறான வணிக வளாகங்கள் அமைப்பதில் ஒதுக்கீடு கட்டுப்பாடுகள் கொண்டுவருவது ஆகியவை அனைத்து தரப்பினரும் சமமான போட்டியில் ஈடுபட வாய்ப்பு வழங்கும்.

எனது உரை:

எப்படி பார்த்தாலும், இந்திய பொருளாதாரத்திற்கும், நுகர்வோருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் நன்மைகளை தரக்கூடிய திட்டம் எனினும், தமிழகத்தின் பாரம்பரிய மளிகை கடைகள், சந்தைகள், போன்றவற்றை அழித்து விடக்கூடிய ஆபத்தும், சிறு வணிகர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையம் வர வாய்ப்பிருக்கிறது.

அந்நிய நேரடி முதலீடு தேவைப்படும் போக்குவரத்து, சாலைகள் கட்டுமானம், விமான சேவை என பல துறைகள் ஏங்கி கொண்டிருக்க மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அவசரம் ஏன் என்பது புரியவில்லை. இன்னும் சற்று காலம் பொறுத்து இருந்திருக்கலாம் என கருதுகிறேன்.

Saturday, November 26, 2011

முல்லை பெரியாரும் தமிழகமும்

 சமீப காலமாக செய்திகளில் அதிகமாக மீண்டும் அடிபட துவங்கி இருக்கிறது முல்லை பெரியார் அணை.  இது தொடர்பாக இணைய தளங்களில் நண்பர்கள் பலர் எனது கருத்தினை கேட்டபோது அவர்களுக்கு முழுமையாக அப்போது சொல்ல முடியாமல் போன விஷயங்களை இந்த பதிவு மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றும் போன வாரமும் ஏற்பட்ட இரண்டு நில அதிர்வுகள், அங்கே ஏற்கனவே இருந்துவரும் அச்சத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த அச்சத்தை பற்றியும் பெரியார் அணை குறித்த விழிப்புணர்வு பற்றியும் நாடு தழுவிய அளவிலே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அணை பலவீனமாக இருப்பதாகவும், ஒருவேளை அந்த அணை உடையுமானால் கேரளத்தில் இருக்கும் நான்கு மாவட்டங்கள் முழுவதுமாக நீருக்குள் மூழ்கிவிடும் எனவும் அதனால் 25  லட்சம் மக்கள் உயிரிழக்கக்கூடும் எனவும், எனவே தமிழகம் கருணை காட்டவேண்டும் எனவும் கேரளம் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?



அணையின் பலம்!

115  ஆண்டுகளுக்கு முன்பு கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட 152  அடி கொள்ளளவுள்ள அணை தற்பொழுது கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

80 களில் அணை பலவீனமாக இருப்பதாக கேரளம் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அப்போதைய முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று கட்டங்களாக அணையை பலப்படுத்த உத்தரவிட்டு, அவ்வாறு முதல் கட்ட பணி நிறைவடைந்ததும் 136 அடி, இரண்டாம் கட்டத்துக்கு பின் 142 அடி, இறுதி கட்ட பணி முடிவடைந்தபின் 152 அடி தேக்கி கொள்ளலாம் என ஒப்பந்தமானது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே இரண்டு கட்ட பணிகளும் முடிவடைந்து 142  அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட பணிகள் முடிவடைந்து 152 அடி நீர் தேக்க முனைந்தபோது தான் கேரளம் தனது ஆட்சேபணை தெரிவித்தது. பலப்படுத்தும் பணி சரியாக இல்லை என்றும், நீர் கசிவு தொடர்வதாகவும், தொடர்ச்சியான நீர்க்கசிவு அணையை பலவீனமாக்கி விடும் எனவும் சொல்லி, முழு கொள்ளளவான 152 அடி நீர் தேக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.  அன்று முதல் முழு கொள்ளளவுக்கு நீர் தேக்குவதற்கான போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

உண்மையில் அணை பலமாக உள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்து இருக்கின்றன. முதல் கட்ட பணியிலேயே அஸ்த்திவாரத்தை  பலப்படுத்திவிட்டது தமிழகம். பிறகு தொடர்ச்சியான பராமரிப்பினால் இப்போதைய நிலையில் அணை மிக பலமாகவும் உறுதியாகவும் உள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் இருக்கின்றன. 115 ஆண்டு பழமையான அணை கிட்டத்தட்ட பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கேரளம் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை, கற்பனையானவை, உருவகப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

கேரளத்தின் அச்சம்!

தொடர்ச்சியாக நீர் கசிவு இருந்தாலும் தமிழகம் தொடர்ச்சியான பராமரிப்பால் அணையை அவ்வப்போது செப்பனிட்டு கொண்டு தான் வந்திருக்கிறது. ஆனால் இந்த நீர்க்கசிவு அணையை பலப்படுத்தி விட்டது என்றும், எந்த நேரத்திலும் அணை உடையக்கூடும் என்றும், அப்படி உடைந்தால் பெருக்கெடுக்கும் வெள்ளம், இடுக்கி, பத்தனம் திட்டா, கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை வெள்ளத்தில் அமிழ்த்திவிடும் என்றும் கிட்டத்தட்ட 25  லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் கேரளம் அச்சப்படுகிறது.  எனவே பலவீனமாக இருப்பதாக சொல்லப்படும் முல்லை பெரியார் அணைக்கு அருகில் இன்னொரு அணையை கட்டி அதில் இருந்து தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்கவேண்டும். புதிய அணை தான் பாதுகாப்பானது என்பது கேரளத்தின் நிலைப்பாடு. நேற்றைய தினம் கூட கேரள முதல்வர் அவர்கள் "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளத்துக்கு பாதுகாப்பு" என்கிற சுலோகனை சொல்லி கேரளத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்கிறார்.

அணை 'உடைந்தால்' நிச்சயமாக கேரளம் அச்சப்படும் விஷயங்கள் எல்லாம்  நடக்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அணை தானாக உடையும் நிலையில் இப்போது இல்லை. அணை மிக பலமாகவே இருக்கிறது.

ஆனால் இன்னொரு அச்சம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அதாவது அந்த பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலநடுக்கம், நில அதிர்வுகளால் அணை உடைவதற்கான வாய்ப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இப்போதைய பழைய அணை இப்போதைக்கு உறுதியாக இருந்தாலும் தொடர்ச்சியான அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்கும் என்பதற்கு நம்மால் எந்த உறுதியும் கொடுக்க முடியவில்லை.

இவ்வாறான சூழலில் புதிய அணை கட்டப்படுவதில் எந்த விதமான தடையும் சொல்வதற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை. புதிய அணை கட்டுவது என்பது கிட்டத்தட்ட 20 - 25  ஆண்டுகள் பிடிக்கக்கூடிய பெரும் பணியாகும். அதுவரையும், அதற்கு பின்னரும் கூட இப்போதைய அணை நிலைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நிலநடுக்கத்தின் தாக்கத்தை நம்மால் எந்த சூழலிலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. எனவே நிலநடுக்கத்திலும் நீட்சியடைந்து நிற்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திலான ஒரு அணையை ஏற்படுத்துவது என்பது மட்டுமே நீண்ட நாள் தீர்வாக இருக்க முடியும். மேலும், எந்த நேரத்தில் அணை உடையுமோ, நமது உயிருக்கு என்ன உத்திரவாதம் என்கிற அச்சத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் தருகிற முடிவாகவும் இது அமையும்.

தமிழகத்தின் அச்சம்!

புதிய அணை கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கிறோம். அதற்கு சொல்லப்படும் காரணம், கேரளம் வஞ்சகமாக தமிழகத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது. புதிய அணை கட்டிவிட்டால் அதில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வரமாட்டார்கள். பழைய அணையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் புதிய அணைக்கு பொருந்தாது என சொல்லக்கூடும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், முல்லைபெரியாரை நம்பி வாழும் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவை வறண்டு விடும். இது தமிழகத்துக்கான வாழ்வாதார பிரச்சனை என நாம் சொல்லுகிறோம். 

எனவே கூர்ந்து கவனித்தால் நமது அச்சம் புதிய அணை கட்டுவது பற்றி அல்ல, புதிய அணை கட்டப்பட்ட பின் அதில் தற்பொழுது தமிழகத்துக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுவிடுமோ, தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விடுமோ என்பதே நமத்து நுண்ணிய அச்சமாக இருக்கிறது. நமது தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயம் இது என்பதால் சட்டென்று எந்த விதமான உடனடி முடிவையும் எடுக்க துணியாத நிலையிலே நாம் இருக்கிறோம்.

ஆனால், இது மிக மிக எளிதாக தீர்க்கக்கூடிய பிரச்சனை தான். தண்ணீர் தர கேரளம் மறுக்காது என்றும், கேரளத்துக்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது என்றும், எனவே மொத்த தண்ணீரையும் தமிழகமே எடுத்துக்கொள்ளலாம் என்றும் கேரளம் தன நிலைப்பாட்டை தெளிவு படுத்ஹ்டி இருக்கிறது. 

அதனால், புதிய அணையில் தமிழகத்துக்கு தற்பொழுது இருக்கும் உரிமைகள் தொடர்வதற்கான ஒப்பந்தத்தின் பேரில் புதிய அணை கட்டிக்கொள்வது என்பது, தமிழகத்துக்கான நீர் தேவையையும், கேரள மக்களின் அச்சத்தை நீக்கவும் உதவுகின்ற செயலாக செயல்படுத்த முடியும்.


நீர் கொள்ளளவு பிரச்சனை

இவ்வாறான ஒரு உடன்படிக்கை எட்டப்படும்வரை, அல்லது நிலுவையில் இருக்கும் வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் வரை, தற்போதைய முல்லை பெரியார் அணையில் 136  அடிக்கு மேல் தண்ணீரை தேக்கவேண்டாம் என கேரளமும், 152  அடி தண்ணீர் தேக்கினால் தான் கடை மடை தமிழகத்துக்கு நீர்கிடைக்கும் என தமிழகமும் வாதாடி வருகிறது.



பெரியார் அணையில் 152  அடி நீர் தேக்கினால் தான் ராமநாதபுரம் வரை நீர் பாயும் என்கிற நிலை 1958 வரை உண்மை தான். ஆனால் 1959 ல் வைகை அணை கட்டப்பட்ட பிறகு, வைகையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தான் ராமநாதபுரம் வரை செல்வதற்கான வேகத்தை தீர்மானிக்கிறதே தவிர, முல்லை பெரியாறு அல்ல.

எனவே முல்லைபெரியாரின் நீரின் அளவை குறைத்தால் ராமநாதபுரம் மாவட்டம் வறண்டு விடும் என்கிற வாதத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.  நீர் கசிந்து வந்தாலும் பெருகி வந்தாலும் வைகையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கே இருந்து தான் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

எனவே கொள்ளளவு பிரச்சனையில் நாம் பிடித்து வரும் பிடிவாதத்தை தளர்த்துவதே சிறந்தது.

தற்போதைய நிலையில் எனது கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்வது நல்லது என நினைக்கிறேன்.

  1.  தற்போதைய முல்லைபெரியார் அணை பலவீனமாக இருப்பதாக கேரளம் பரப்பும் செய்தி உண்மையானது அல்ல. அது வன்மையாக கண்டிக்க தக்கது. அணை மிக பலமாகவே இருக்கிறது.
  2. அணை தானாக உடையும் நிலையில் இல்லை, என்றாலும், தொடர்ச்சியான நில அதிர்வுகளால் உடைவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது
  3. அவ்வாறு அணை உடைந்தால் 4 மாவட்டங்களும் அதன் 25 லட்சம் மக்களும் மொத்தமாக நீருக்குள் அமிழும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
  4. தற்போதைய அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையில் நாம் அதற்கு இசைவு தெரிவிப்பதே நல்லது. 
  5. தமிழகத்துக்கு அணையில்  தற்போதிருக்கும் உரிமைகளை புதிய அணைக்கும் தக்கவைத்துக்கொள்ள நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் சரியாக இருக்க முடியும்.
  6. கேரளம் தண்ணீர் தர மறுக்கவில்லை, அப்படி மறுக்கின்ற சூழலும் அங்கே இல்லை என்பதை தெளிவு படுத்தி இருப்பது கவனிக்க தக்கது.
  7. தமிழகம் தனக்கென்று எந்த ஜீவா நதியையும் கொண்டிருக்கவில்லை. பிற மாநிலங்களை நம்பியே நாம் இருந்து வருகிறோம். இந்நிலையில் நியாயமற்ற காரணங்களையும் அச்சத்தையும் காரணமாக்கி தமிழக விவசாயிகளையும் கேரள மக்களையும் ஒரு நிலையற்ற தன்மையில் வைத்துக்கொண்டிருப்பதற்கு விரைவில் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.
தமிழக அரசு இப்படி முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட முனைந்தாலும், இங்கே இருக்கும், மக்களின் அறியாமையையும் உணர்ச்சிவசப்படுதளையும் மூலதனமாக்கி செயல்படும் பிற சிறு அரசியல் இயக்கங்கள் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தான் இப்போதைய எனது அச்சம்!
 

Tuesday, June 21, 2011

மாணவர்கள் படும் பாடு

கல்விக்கூடங்களில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை நீக்கும் நோக்கிலும், அனைத்து வகையான கல்வியும் சீரான ஒரே தரத்தில் அமையவேண்டும் என்கிற நோக்கிலும் கொண்டு வரப்பட்டது தான் தமிழக சமசீர் கல்வி சட்டம்.

ஒரே வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனுக்கும், தனியார் / மெட்ரிக் பள்ளி மாணவனுக்கும் இடையே நிலவும் ஏற்ற தாழ்வு என்பது பாட திட்டத்தின் அடிப்படையிலும் கூட பெரும்பாலும் அமைவதால், ஒரே சீரான பாட திட்டம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டது.

அகில இந்திய தேர்வுகளிலும் இதர போட்டி தேர்வுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பாலான மாணவர்கள் நகர்புறத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதும், கிராமப்புற மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், சமூக வாழ்க்கையில் அவர்களுக்கு மனதளவில் ஒரு தேக்க நிலை இருப்பது தெரிய வருவதுமாக பல காரணிகள் சமசீர் கல்வியின் அவசியத்தை எடுத்து சொல்வதாக அமைந்துள்ளது.

இத்தகைய சூழலில், முறையாக கல்வியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கான  புத்தகங்களுடன் கடந்த ஆண்டு சமசீர் கல்வி திட்டம் தமிழகத்திலே அமலானது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அதிமுக அரசானது, என்ன காரணம் என்கிற அடிப்படை தகவலை கூட தெரிவிக்காமல் திடுதிப்பென்று அமைச்சரவை கூட்டி அதில் விவாதிக்கப்பட்டதாக சொல்லி, சமசீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்கில், அரசின் தடை ஆணை செல்லாது என தீர்ப்பானத்தை அடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்திருக்கிறது.

அந்த மேல் முறையீட்டின் மீது தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்றம், மீண்டும் ஒரு குழு அமைத்து சமசீர் கல்வி தொடருவதா வேண்டாமா / அப்படி தொடருவதாக இருந்தால் என்ன மாதிரியான பாட திட்டங்கள் தேவை எனபதை எல்லாம் ஆராய வேண்டும் என சொல்லி இருக்கிறது.

இது, தேவையில்லாமல் மாணவர்களின் கல்வி உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிற ஒரு நிலையை உண்டுபண்ணி இருக்கிறது.  

மேலும், உச்ச நீதிமன்ற அறிவுரை படி அமைக்க்கப்பட்ட குழுவில், அரசு உயர் அதிகாரிகளும், மெட்ரிக் பள்ளிக்கூட முதல்வர்களுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதும், அரசு பள்ளி கூட தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர் / மாணவர் பிரதிநிதிகளோ, கல்விக்கான சமூக அமைப்புக்களோ அந்த குழுவில் இடம் பெறாமல் இருப்பதும், அரசின் முடிவை 'முறைப்படி' செயல்படுத்தவே இந்த குழு அமைக்க பட்டு இருக்கிறது என்கிற ஐயத்தை உறுதிபடுத்துவது போல இருக்கிறது.

அதிமுகவும் - மாணவர்களும்:

பொதுவாகவே அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்களாகவே இருப்பது எதேச்சையானதாக நடப்பது தானா என்பது இன்னமும் புரியவில்லை.

கடந்த முறை, அதிமுக ஆட்சியில், கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்த ஓராசிரியர் பள்ளிகள் அனைத்திற்கும் மூடுவிழா அறிவிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இருக்கின்ற நிலையாலும், அவர்கள் பல்வேறு வயதுகளில் இருப்பதாலும் பள்ளிக்கூடங்கள் அமைப்பது சரியான முடிவாக இருக்காது என்பதால், ஓராசிரியர் பள்ளிகள் அமைக்கப்பட்டது. நடுநிலை கல்வி வரையும், சில மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்படுவதால், அனைவரும் கல்வி கற்கும் சூழல் இருந்தது. அதிமுக அரசின் அறிவிப்பால், பல பல கிராமங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

பின்னர், தமிழக அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழக தேர்வாணைய தேர்வுகளை ரத்து செய்து, வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்ததன் மூலம்,  ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பட்டதாரியும் அரசு வேலைக்கான முயற்சியை செய்ய முடியாமல் முடக்கி வைக்க பட்டனர்.

கிராமங்களுக்கு சென்று கொண்டு இருந்த சிற்றுந்துகளை நிறுத்தியதன் மூலம்,  கிராமங்களில் இருந்து பயணித்து மேல்நிலை / உயர்நிலை படிப்பு படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இடை நிறுத்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

இப்போதைய புதிய அரசின் முதல் நாளிலேயே, சமசீர் கல்வி பாடு பட தொடங்கி, இந்த நிமிடம் வரை, என்ன பாட திட்டம் / என்ன மாதிரியான நடைமுறை / என்ன புத்தகங்கள் / எப்போது பள்ளி திறக்கும் என்கிற எந்த விவரமும் அறியாமல் அந்தகாரத்தில் இருக்கின்றனர் மாணவர்கள்.

மேலும் ஒரு கூடுதல் இணைப்பாக, பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் நடக்காது என்றும், அனைவரும் சென்னைக்கு தான் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இது வீணான அலைச்சலையும் போருளிழப்புகளையும் மன உளைச்சளையுமே உண்டு செய்யும்.

இவ்வாறு பல பல வழிகளில் மாணவர்கள் மீது இந்த அரசு நடத்தும் மறைமுக தாக்குதலின் காரணம் என்ன / இதன் விளைவு என்ன என்பதை எல்லாம் யார் தான் தெளிவுபடுத்த முடியும்?

Sunday, May 15, 2011

தமிழக தேர்தல் முடிவு!

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிவுற்றது! யாரும்.. யாருமே எதிர்பாராத ஒரு தேர்தல் முடிவாக தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இவ்வாறான ஒரு தேர்தல் முடிவினை முன்பே கணித்தவர் ஜெ. ஒருவர் தான் என்பது ஆச்சரியகரமான உண்மை!

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி தொகுப்பு என்ன?
- காங். கட்சிக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாக ராகுல் சொல்லிய சொல்லாடல்கள் கற்பனை என்பது தெளிவாகி இருக்கிறது.
- சீட்டு எண்ணிக்கை உயர்த்துவதற்காக காங். கட்சி திமுகவுடன் நடத்திய அநாகரீக பேச்சுவார்த்தை முறைகள், மக்களுக்கு அந்த கூட்டணி மீதான நம்பிக்கையை உடைத்து, வெறுப்பை வளர்த்துவிட்டிருக்கிறது.
- மீடியாக்கள் தங்கள் செல்வாக்கை நிருபித்து இருக்கின்றன. தாங்கள் விரும்பிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்த அவர்கள் எடுத்த முயற்ச்சிகள் வெற்றி.
- கேப்டன் கட்சிக்கு என்று சொந்த செல்வாக்கு எதுவும் இல்லாதபோதும், மதிமுக, பாமக போன்ற கட்சிகளை அரவணைத்து அவற்றுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கி தந்த அதிமுக தேமுதிகவுக்கும் அவ்வாறே ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்து இருக்கிறது.
- நான் மாறி விட்டேன் என்ற ஜெ.வின் கூற்றுக்கு தமிழகம் மதிப்பு அளித்து இருக்கிறது.
- மக்கள் நல திட்டங்கள் பலவற்றை சிறப்பாக செயல்படுத்தினாலும், கடைசி நேரத்தில் மீடியாக்களால் பெரிது படுத்தப்பட்ட அலைக்கற்றை ஊழல்கள் அவற்றை எல்லாம் மறக்கடிக்கவைத்து விட்டன.
- இலவசங்கள் என்பதை யார் சொன்னாலும், அதன் எண்ணிக்கையை பொறுத்து செல்வாக்கு இருக்குமே தவிர, அது நிறைவேறுமா இல்லையா என்பது பற்றி மக்கள் அக்கறை கொள்வதில்லை என்பதை ஜெ. நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்!
- நலத்திட்டங்கள், மக்கள் பணிகள் ஆகியவற்றை விடவும், கவர்ச்சி வாக்குறுதிகள் வலிமையானவை என்பது புரியவைக்கப்பட்டு இருக்கிறது.
- ஈழ பிரச்னையை கையில் எடுத்த கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன.
- சாதி ரீதியான கட்சிகளை மக்கள் ஒரே அடியாக புறக்கணிக்கவில்லை என்பதும் தெரிகிறது.
- ஜெ. மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனினும் விஜயகாந்த் மீதோ, மற்ற கூட்டணி கட்சிகள் மீதோ அவர்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பது அந்தந்த கட்சிகள் பெற்ற குறைவான வாக்குகள் தெளிவாக்குகின்றன. (தேமுதிக இருபத்து ஒன்பது லட்சம் வாக்குகள், பாமக முப்பத்துநான்கு லட்சம் வாக்குகள்)
- திமுக மீதான மக்கள் வெறுப்பு என்ன தான் பலமாக இருந்தாலும், சில அமைச்சர்களின் வெற்றி அவர்களது சொந்த செல்வாக்கை காட்டுகிறது.
- இது முழுக்க முழுக்க ஜெ.வின் பிரச்சாரத்துக்கும், தேர்தல் வியூகத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதன் மூலம், "நான் யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற செய்ய வைக்க என்னால் முடியும்" என்கிற ஜெ.வின் பழைய அறிக்கையின் சத்தியம் மீண்டும் உறுதியாகிறது.

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கள்:

- சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதும் சீர்திருத்தப்படவேண்டும். அதே சமயம், வழக்கமாக அதிமுக ஆட்சியில் நடைபெறும், "தனிநபர்" அத்துமீறல்கள், காவல்துறையின் அராஜகம், இந்த முறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கடந்த முறைகளை போல அல்லாமல், இந்த முறையேனும், வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல பணிகளுக்கு ஜெ. முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- அசுர பலம் கிடைத்திருப்பதாலும், கூட்டணி கட்சியே அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருப்பதாலும், என்ன வேண்டுமானாலும் சட்டமியர்றலாம் என்கிற வழக்கமான மனோநிலை வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறைகளில் இருக்கும் தேக்கநிலை போக்க வேண்டும்
- மக்களை அவதிக்குள்ளாக்கி நிறுத்திவைத்து கடந்து செல்லும் தண்டனை இந்த முறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- விமரிசனங்களை எதிரி மனோபாவத்துடன் பாராமல், விமரிசனங்களை ஏற்று கொண்டு அதில் நியாயம் இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விமரிசகர்கள் மீதான வழக்கமான அடக்குமுறை தவிர்ப்பது நலம்.

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு எப்போதுமே இருக்கும் ஒரே குற்றச்சாட்டு, தொலை நோக்கு பார்வையோ, அனுசரனையோ இல்லாமல் இருப்பது என்பது. இந்த முறை அதெல்லாம் இருக்காது என்கிற ஜெ.வின் வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதை ஆறு மாதங்களுக்கு பிறகு தான் முடிவு செய்ய முடியும்.


Wednesday, March 2, 2011

தமிழக தேர்தல் 2011


தமிழகத்துக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏப்ரில் மாதம் 13  ஆம் தேதி தேர்தல்; மே மாதம் 13  அம தேதி ஒட்டு எண்ணிக்கை.  வெறும் 40 நாட்களில் தேர்தல். 15  நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம். அதுவும் ஒரே ஒரு வாரம் தான் அவகாசம் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்துகொள்ளவும் வாபஸ் வாங்கவும். ( ஆனால் ஒட்டு எண்ணிக்கைக்கு மட்டும் ஒரு மாத இடைவெளி?? )

இன்றைய தேதியில் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது?

திமுக, காங்கிரஸ், விசி, கூட்டணியில் "போட்டு வாங்கிய" இன்னொரு கட்சியாக பாமகவும் இணைந்து இருக்கிறது. (போட்டு வாங்கிய என்று சொல்ல காரணம், டெல்லி பயணத்தில் கருணாநிதி சொன்ன பாமக அணியில் இருக்கிறது என்கிற பதிலும், அதை தொடர்ந்து பாமக தாங்கள் இல்லை என்று மறுத்த மறுப்பும், அப்படியானால் sari நான் தான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்ற கருணாநிதியில் ஜகஜால வேலையும், அதை தொடர்ந்து, இல்லை இல்லை இதோ இருக்கிறோம் என்று ஓடி வந்து ஒட்டிக்கொண்ட அதிசயமும் தான்.  அதோடு பாமகவின் பேரம் பேசும் சக்தி குறைந்து, இடம் கிடைச்சதே போதுமடா சாமி என 31  இடங்களுக்கு செட்டில் ஆகி கொண்டது)

காங்கிரஸ் இந்த நிமிஷம் வரையிலும் திமுக அணியிலே இருந்தாலும் கூட, எனக்கென்னவோ அவர்கள் வெளியே வந்து விஜியுடன் அணி சேர்ந்து போட்டி இடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.  அதற்காக தானோ என்னவோ சாத்தியமற்ற கோரிக்கைகளை அடுக்குவதாக தகவல்கள் கசிகிறது. திமுகவுக்கும் கூட காங்கிரஸ் வெளியேறினால் போதும் என்று தோன்றி இருக்குமோ என்னவோ, "இளவல்" வீரமணி மூலமாக காட்டமாக காங்கிரசை எதிர்த்து மறைமுக குத்தலுடன் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. (இப்போதைக்கு திமுகவின் மனசாட்சி அவர் தானே!)

திமுகவின்  கணக்கு ஒரு வகையில் சரியாக கூட இருக்கலாம்.  காங்கிரசை வைத்து கொண்டு போட்டி இடுவதை விட, காங்கிரசை எப்படியாவது மூன்றாவது அணி அமைக்க செய்துவிட்டால், திமுகவின் வெற்றி மிக மிக எளிமை ஆகிவிடும்.  இன்றைய சூழலில் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் தான் அதிகம். அது ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு போய்விடாமல், அதிமுக காங்கிரஸ் என இரண்டாக பிரிந்தால், சைக்கிள் கேப்பில் ஜல்சா பண்ணிக்கொள்ளலாம் என திமுக மனதில் ஏதேனும் ஓட்டம் இருக்கிறதோ என்னவோ?

அதிமுக அணியின் நிலைமை இன்னமும் புரியாமல் இருக்கிறது.  லெட்டர் பேடு கட்சிகளுடன் எல்லாம் தொகுதி பங்கீடு (!) வெற்றிகரமாக முடிந்து விட்ட நிலையில் கூட்டணியின் முக்கிய கட்சிகளான சி.பி.எம்; சி.பி.ஐ போன்றவற்றின் நிலை பாடு என்னவென்று தெளிவாக இல்லை.  மதிமுகவை பொறுத்துவரை பிரச்சனையே இல்லை. என்ன கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். (இங்கே இன்னொன்றை சொல்லணும் போல இருக்கிறது. எனக்கு மதிமுகவை பிடித்ததற்கு காரணமே அதன் நேர்மை தான்.  1996  தேர்தலில் தனித்து களம் கண்ட கட்சி அது. 211  தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. பாக்கி 23  இடங்களில் என் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு, நிறுத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த நேர்மை 'ஹமாமையே' மிஞ்சிய ஒன்று!)

விஜி அதிமுக அணிக்கு வருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அவர் காங்கிரசுடன் அணி அமைக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவார் என தோன்றுகிறது.  அப்போ தான் அதிக இடங்களில் போட்டி இட முடியும்.  அதிமுகவில் அதிகம் தேற வழி இல்லை. 

திமுக அணியை  பொறுத்தவரை அரசின் செயல் திட்டங்கள் பெரிதும் கை கொடுக்கும் என்கிற பெரும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்ளுகிறது.  என்ன இருந்தாலும் எத்தனின் எத்தனையோ திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த அரசு என்பதை பொதுவாக எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். மேலும் இன்றைய தலை முறை, பிரச்சாரங்களை விட அதிகமாக செயல்பாடுகளையே எடை போடுபவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிமுக கூட, குப்பை அல்லாததை கண்டித்து _____ நகராட்சியை எதிர்த்து போராட்டம், குண்டும் குழியுமான சாலையை கண்டித்து ஆர்பாட்டம் என்று ஒரு சிறு சங்கத்தை போல செயல்பட்டதே அல்லாமல், பெரும் தவறு என்று அரசிடம் எதையும் சுட்டி காட்டி பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யாமல் இருந்ததே, திமுக ஆட்சிக்கு ஒரு மறைமுக நற்சான்றாக அமைந்து விட்டது. 

இந்த நிலையில் திடீர் என்று என்ன குற்றச்சாட்டை கையில் எடுத்து அதிமுக பிரச்சாரம் செய்யும் என்பதை அறிய எல்லோரையும் போல எனக்கும் ஆவலாக தான் இருக்கிறது.  (அதை விட ஆர்வம், அதிமுகவுக்காக யார் பிரச்சாரம் செய்ய போகிறார்கள் என்பது.  ஜே.நலிவுற்று இருப்பதால், முழுக்க முழுக்க வைகோவை நம்பியே இருக்கிறது தேர்தல் பிரச்சாரம். விஜி வந்தால் அவர் கொஞ்சம் பார்த்துப்பார்!)

தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய திருப்புமுனையான பிரச்சனை என்று இப்போதைக்கு ஒன்றுமே இல்லை என்பதும் கவனிக்க தக்கது.

கிட்டத்தட்ட, தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கூட மந்தமான சூழல் தான் நிலவுகிறது தமிழகத்தில். எந்த பரபரப்போ, சுறுசுறுப்போ, அட சுவர் விளம்பரங்களோ கூட அவ்வளவாக இல்லை. எதுக்குடா தேர்தல் வருது.. இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்கிற மனநிலையில் எல்லோருமே இருப்பது மாதிரியான ஒரு பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


முதலில் அணிகள் இறுதியாகட்டும். அதை வைத்து தான் களம் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.   பத்தே  நாளில் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தலை எழுத்து எப்படி அமையும் என்பது குறித்து ஒருவாறான யூகம் கிடைத்து விடும். 

அதுவரை காத்திருப்போம்!

Sunday, February 27, 2011

ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.

யில்வே பட்ஜெட் தாக்கல் ஆகி இருக்கிறது.. இந்த ஆண்டும்.

வழக்கம் போலவே தமிழகம் ஏமாற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறது அதே வழக்கமான அமைதியுடன்.

ஐந்து மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையிலும், முக்கியமான மாநிலமான தமிழகம் போதிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாமல் இருப்பதன் பின்னணி அரசியல் சார்ந்தவையாக இருக்கக்கூடும். எனினும் ஒரு தமிழனாக நம் மாநில தேவைகள், எதிர்பார்ப்புக்கள் அதன் ஏமாற்றங்களை அசைபோட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

முதலில் இந்த பட்ஜெட் நமக்கு குறிப்பாக கொடுத்தவை என்ன என்று பார்க்கலாம்.

சென்னை - மதுரை; சென்னை - மதுரை - திருவனந்தபுரம்  ஆகிய வழி தடங்களில் துரந்தோ ரயில் விடப்படுகிறது.  இது பெரும் தொழிலதிபர்களுக்கே வசதியாக இருக்கும்.. எனினும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விடப்படும் ரயில் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது புரியவில்லை. காரணம் விமான கட்டணமும் அதே அளவுக்குள் வருகிறது.. பயண நேரமோ 2 மணி நேரம் தான்.

கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் கோவை நாகர்கோவில் ரயிலில் சில இணைப்பு பேட்டிகள் மட்டும் என்று சுருங்கி போனதில் சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு நாகூர் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் லிங்க் ரயில் தான்.  திருவாரூரில் இருந்து சில பெட்டிகள் தனியாக நாகூர் வரை சென்று கொண்டிருந்தது.  அகல பாதை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இப்போது மீண்டும் விடப்பட்டு இருக்கிறது.  புதிய மொந்தையில் பழைய கல்.

தருமபுரி - பெங்களூர் இடையே விடப்பட்டு இருக்கும் ரயில் எக்ச்பிரசாக இயங்காமல் பயணிகள் ரயிலாக இயங்குவதாக இருந்தால் நலம்

விழுப்புரம் இப்போது தேர்மினலாக உருவெடுத்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து காரக்பூருக்கு ரயில் சேவை வேலூர் வழியாக துவக்கபடுகிறது..நல்ல விஷயம்.


சென்னை திருச்செந்தூர் ரயில் தினசரி இயக்கப்படும் (முன்பு வாரம் ஒரு முறை); கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் என்பவை வரவேற்க்கப்படவேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள்.

காஞ்சீபுரம் - திருப்பதி; பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் வழித்தடத்துக்கான ஒப்புதல் ஆச்சரியம் கொடுக்கிறது.. எனினும் சேலம் நாமக்கல் பழனி வழித்தடம் என்ன ஆயிற்று என்பது விளக்கப்படவில்லை.  நாமக்கல் வரை பணிகள் முடிவடைந்தும் ரயில் சேவை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது

சென்னையில் இருந்து மதுரைக்கு காலை நேர விரைவு ரயில் ஒன்றும், சென்னை நெல்லை வழியில் இன்னும் ஒரு ரயில் வேண்டும் என்றும் உள்ள தேவைகள் கவனிக்கப்படவில்லை.  கோவை நெல்லை, கோவை திருவனந்தபுரம், கோவை பெங்களூரு மார்க்கத்தில் தனி ரயில் வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை

கோவை சென்னை துறந்தோ ரயில் நேரம் கிட்டத்தட்ட கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை ஒட்டியே இருப்பதும், கட்டணமும் கூடுதலாக இருப்பதும், கவனத்தில் கொண்டு, துறந்தோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் வீணாயிற்று.

எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுவதாக இருக்கும் இண்டர்சிட்டி ரயிலும், திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்த ரயிலும் கோவை வரை நீட்டிக்கப்படவேண்டும்.

உள்கட்டமைப்பு, பாலங்கள், போன்ற பணிகளுக்கு தமிழகத்துக்கு இந்த முறை அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

மிக மிக நீண்ட காலமாக பனி நடந்து வரும் கோவை - திண்டுக்கல்; மதுரை - போடி; திருவாரூர் - காரைக்குடி அகல பாதை திட்டங்கள் இந்த ஆண்டும் கனவாக போய் விட்டது.

சென்னை - மதுரை; சென்னை - நெல்லை; சென்னை - பெங்களூரு; சென்னை - கோவை மார்க்கங்களில் இன்னமும் ரயில் தேவை இருந்துகொண்டே இருப்பதை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில்கள் விடப்படவேண்டும் என்கிற நம்பிக்கை நப்பாசை ஆகிக்கொண்டு இருக்கிறது.

சென்னையை போலவே.. கோவையை மையமாக கொண்டு, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர்/ஈரோடு, பொள்ளாச்சி வழித்தடங்களிலும்; திருச்சியை மையமாக கொண்டு, தஞ்சாவூர், மதுரை, கரூர், விழுப்புரம் வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்கிற ஆசையும் நப்பாசை பட்டியலில் சேர்ந்து கொள்கிறது.

போதுமான ரயில்கள் விடப்படாமல், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல், வேற்று கவர்ச்சியாக சில ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் இனிதே தாக்கல் ஆகி விட்டது தமிழகத்தை பொறுத்தவரை.

அடுத்த ஆண்டுக்காக ஆசையை தள்ளி வைப்போம்...

Thursday, February 3, 2011

2G - கைது சரியா?

இந்திய ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்கிற பட்டம் மட்டும் தான் பாக்கி!

அட்டகாசமாக அரங்கேறிவிட்டது தொலைதொடர்பு ஊழல், விசாரணை, அறிக்கை, கைது படலங்கள்.

சுருக்கமாக பார்த்தால் ஒரு யூகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது தான் உறுத்துகிற நிஜம்.

மத்திய தணிக்கை அதிகாரி ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதில் 2G அலைக்கற்றைகளை ஏல முறையில் விற்பனை செய்திருந்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என அறிவிக்கிறார்.  அந்த கூடுதல் வருமானம் என்பது சுமார் 1,76,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறார்.  அதாவது, அலைக்கற்றைகளுக்கு அந்த அளவுக்கு தேவை இருந்து, இத்தனை போட்டியாளர்கள் இருந்து, அவர்கள் ஏலத்தில் பங்கேற்று இந்த அளவுக்கு விலையை ஏற்றி இருந்தால், ஒருவேளை அரசுக்கு இந்த கூடுதல் வருமானம் கிடைத்து இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடுகிறார்.  மேலும், இந்த கணக்கீடு ஒரு யுகமான மதிப்பீடு தான் என்றும் அவரே சொல்லி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூக்குரல் இட்டு இன்று ராசாவும் கைது செய்யப்பட்டாயிற்று.

சரி... தணிக்கை துறை இதை மட்டும் தான் சொல்லி இருக்கிறதா?

விவசாயம், கல்வி, பெட்ரோல், சுகாதாரம் போன்ற பலவற்றுக்கும் அரசு தருகிற மானியங்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும் என்று கூட தான் சொல்லி இருக்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அல்ல பல்வேறு மாநில அரசுகளுக்கான தணிக்கை அறிக்கையிலும் இது போன்ற மானியங்களை / கடன் தள்ளுபடிகளை / சலுகைகளை குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.  இதன் அடிப்படையில் மானியங்களை குறைத்து வருவாயை ஈட்டி அரசு கஜானாக்களை நிரப்பி இருக்கலாமே?  அப்படி செய்யாமல் இருந்த அனைவருமே அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தியவர்கள் என்று பட்டயம் கட்டிவிடலாமா?

பொதுவாக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்பது மரபு.  தணிக்கை துறையை பொறுத்த மட்டில், வெறும் வருவாய் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே பார்த்து தணிக்கை செய்து கூடுதல் வருவாய்க்கான வழிகளை சொல்லி வைக்கிற ஒரு ஆலோசனை குழு தானே தவிர, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல.  மானியங்கள் கொடுப்பது என்பது அந்த அந்த துறையை பொறுத்து தேவையை பொறுத்து அரசாங்கங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

இலவச கல்வி கொடுக்கவேண்டும், அதன் மூலம் தான் கல்வி அறிவு வளரும் என்று ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தலாம்.  ஆனால் தணிக்கை துறையை பொறுத்தவரை , கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் விட்ட வகையில் இத்தனை கோடி வருவாய் இழப்பு என்று தான் அறிக்கை தரும்.

2G விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது விசாரணையில் இருக்கிறது. எனினும் தணிக்கை துறை சொல்கிற அளவுக்கான ஊழல் நடைபெற சாத்தியமே இல்லை என்று பாஜக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரே சொல்லி இருக்கிறார்.  அவரது கணிப்பு படி, ஒருவேளை வருவாய் இழப்பு என்பதை  காரணமாக கொண்டாலும் கூட அதிகபட்சம் 30,000 கோடி வரை தான் இருக்கக்கூடும் என்கிறார்.

ஒதுக்கீட்டில் முறைகேடு, லஞ்சம் பெற்று கொண்டு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை தான் நடந்திருக்கக்கூடும் எனபதும், அத்தகைய முறை கேடு என்பது கூட தண்டனைகுரிய குற்றம் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.  அதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை, தக்க ஆதாரங்களுடன் கைது செய்வதை எல்லோருமே ஏற்று கொள்ள தான் செய்வார்கள்.

ஆனால், ஏல முறை ஒதுக்கீட்டை மேற்கொள்ளாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று காரணம் சொல்லி, அதன் பேரில் கைது என்பது நெருடலாகவே உள்ளது.

ஒரு எளிய உதாரணம் சொல்வது இங்கே பொருந்தும்:

2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் BPL, Aircel ஆகிய இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் செல்போன் சேவைக்கான ஒதுக்கீடு பெற்றது.  பின்னர் சில ஆண்டுகள் கழித்து BSNL, Airtel, Reliance (CDMA), Tata Indicom(CDMA) ஆகியவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது.  இவை போக மிச்சம் இருக்கும் அலைவரிசைகள் தான் இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் MTS, Reliance GSM, Tata Docomo, Uninor, Videocon, Idea போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் தங்கள் சேவையை தொடங்கின.

ஒரே தொலை தொடர்பு வட்டத்தில், ஒரே தொழில் நுட்பத்தில் மூன்று முறை ஒதுக்கீடுகள் நடைபெற்றதால், ஒரே மாதிரியான ஒதுக்கீடு விதிமுறைகளும், கட்டணங்களும் தான் இருக்க முடியும் என்பது பொது விதி.  அப்போது தான் போட்டியாளர்களுக்கிடையே சமநிலை (Level Playing Field) இருக்கும். அப்படி இல்லாமல், ஒரே மாதிரியான சேவைக்கான லைசன்சுக்கு வெவ்வேறு வகையான கட்டணங்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு முறைகள் என்று  இருந்தால் அது சரியான வழி முறையாக இருக்க நியாயம் இல்லை.

அனைவருக்கும் ஒரே வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான், தொலை தொடர்பு சேவைக்கான கட்டணமும் சீராக இருக்கும்.  அதில்லாமல், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டால், கட்டண விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, அதிக கட்டணம் உள்ள நிறுவனங்கள் நாளாவட்டத்தில் செயலிழந்து போக கூடிய அபாயம் இருக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் அதே சமயம், ராசா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது போன்ற விசாரணைகள் அவசியமானவையே.

விசாரணையில் என்ன வெளிவருகிறது என்பதில் இருக்கிறது எதிர்கட்சிகளின் எதிர்காலம்!


Printfriendly