Monday, December 19, 2016

சசிகலா

சிகலா.

இந்த பெயர் தான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழக அரசியலின் முக்கிய பங்கு வகித்த பெயர். அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு தோழியாக அறிமுகமாகி, அவரது கடுமையான காலகட்டங்களில் உற்ற துணையாக இருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தினரால் அவரது உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலங்களில் தனது உறவினர்களை கொண்டு தனியாக ஒரு பாதுகாப்பு படையை அமைத்து பாதுகாத்து, ஜெ. அரசு நிர்வாகத்தில் முழு மூச்சில் ஈடுபட்டிருந்த காலகட்டங்களில் அவரது தனிப்பட்ட உடமைகளுக்கும் அவரது உடல்நலத்துக்கும் பொறுப்பெடுத்து என பல பல வகைகளில் துணையாக இருந்தவர். 

இன்னொருபக்கம், ஜெ.வுடனான நெருக்கத்தை பயன்படுத்தி, தன்னையும் தனது உறவினர்களையும் தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அரசாங்க ரீதியாகவும் பலமான பவர் செண்டர்களாக உருவாக்கியதாகவும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலரையும் மிரட்டி சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதிமுக நிர்வாகத்திலும் அரசின் நிர்வாகத்திலும் பல வகைகளிலும் தலையீடு செய்து தான் விரும்பிய படியே தமிழகத்தை பின்னனியில் இருந்து ஆட்டி வைத்து கொண்டிருந்தவர் எனவும் பரவலாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர்.



இதன் காரணமாகவே, 'சசிகலாவும் அவரது சுற்றத்தாரும் உறவினர்களும் தனக்கு தெரியாமல் தன்னுடைய கட்சியிலும் அரசிலும் பல தலையீடுகள் செய்துவந்ததாக அறிந்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்தும் தனது வீட்டில் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைப்பதாகவும்' ஜெயலலிதா அறிக்கை வெளியீட்டு நீக்கியதும், சில மாதங்கள் கழித்து, 'அவை எல்லாம் சசிகலாவுக்கு தெரியாமலேயே நடந்ததாக சசிகலாவே அறிக்கை விட்டதோடு, இனிமேல் உயிருள்ளவரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், தனது உறவினர்களுடனோ சுற்றத்தாருடனோ இனி எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்பதாகவும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டதை' அடுத்து, ஜெயலலிதா சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டதும், அதே சமயம் அவரது உறவினர்கள் அனைவரும் ஒதுக்கி வைக்கப்பட்டது ஒதுக்கிவைக்கப்பட்டதாகவே இருக்கும் என அறிவித்ததும் வரலாறு.

எது எப்படியாயினும், ஜெயலலிதா என்கிற தனி நபருக்கு சசிகலா எனும் தனி நபர் கொடுத்த ஆதரவும் அனுசரணையும் அக்கறையும் மனதிடமும் தோழமையும் மெச்ச தகுந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இப்போது, ஜெயலலிதா நம்மை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தி மறைந்துவிட்ட இந்நிலையில், மொத்த கட்சியினரும் திடீரென சசிகலா விசுவாசிகளாக மாறியதோடு மட்டுமலாமல், ஜெயலலிதா இத்தனை வருடங்களாக செய்துவந்த நிர்வாகத்திறமைக்கும் கூட சசிகலா தான் வழிகாட்டி என சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா அவர்கள் தான் இருந்து கட்சியை வழி நடத்தவேண்டும் என பல நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வேண்டி விரும்பி கேட்டு கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். 

இன்னும் சிலரோ மேலும் ஒரு படி முன்னேறி தமிழகத்தின் முதல்வராகவும் சசிகலா தான் இருந்து தமிழகத்தை 'காப்பாற்ற' வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நேற்றைய தினம் இதே கோரிக்கையை வலியுறுத்தி சில அமைச்சர்களே திருமுடி காணிக்கை செலுத்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இச்சூழலில், சசிகலா கட்சியின் தலைமையோ அரசின் தலைமையோ ஏற்பது என்பது தமிழகத்துக்கு நன்மை பயக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டிய கடமை தமிழகத்திலுள்ள நம் அனைவருக்கும் உள்ளது. 

சசிகலா அவர்கள் முதல்வராக வருவதில் எந்த ஆட்சேபணையும் யாருக்கும் இருக்க முடியாது. அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்.

ஆனால் அதிமுகவின் பொது செயலாளராக அவர் வருவதில் மட்டும் பல சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக அவர் கட்சியில் 'மீண்டும்' சேர்த்துக்கொள்ளப்பட்டு இன்னும் 5 ஆண்டுகள் முடியவில்லை. கட்சி விதிகளின் படி, கழகத்தில் ஐந்து ஆண்டுகள் 'தொடர்ச்சியாக' உறுப்பினராக இருக்கும் ஒருவரை தான் நிர்வாகியாக நியமிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், கழகத்தில் ஒரு கிளைக்கழக செயலாளராகக் கூட இப்போது சசிகலா அவர்களை நியமிக்க முடியாது.

இரண்டொரு நாட்கள் முன்பு பொன்னையன் அவர்கள், சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கான தடைகள் தளர்த்தப்படும் என சொல்லி இருக்கிறார். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. விதிகளை மாற்றுவதற்கும்  ஒரு பொதுச்செயலாளர் வேண்டும். ஆனால் இப்போது பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கிறது.

ஒரு வேளை ஜெ. ஏற்கனவே விதிகளை தளர்த்தி இருப்பதாக ஒரு ஆவணத்தை தயார் செய்து வெளியிடலாம். ஆனால் அது சட்டப்படி செல்லாது. ஏனெனில் விதிமுறைகளில் மாற்றம் என்பது, பொதுக்குழு செயற்குழு மூலமாக மாற்றி அது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழிலும் பிற பத்திரிக்கைகளிலும் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி அவர்களது ஒப்புதலையும் வாங்கி இருக்கவேண்டும்.

இப்போது முன் தேதியிட்டு ஒரு ஆவணத்தை தயார் செய்தாலும், நாளேடுகளில் பழைய தேதியில் பிரசுரித்ததாக ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல் ஆணைய ஒப்புதலை முன் தேதியிட்டு பெறுவது சற்று சிக்கலான காரியம். நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களில் ஏதேனும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் சந்தேகம் கிளப்பினாலும் அந்த ஆவணம் சட்ட ரீதியாக நிற்பது கடினம்.

இவை ஒரு புறமிருக்க, கட்சியின் அடிமட்ட தொண்டனின் ஆதரவை பெறுவது தான் மிகப்பெரிய சவால்.  ஜெவுடன் பல முறை பயணித்து இருந்தாலும், தனிப்பட்ட முறையில் கழகத்தின் உறுப்பினராக கட்சி சார்ந்து கட்சிக்காக மாவட்டம் தோறும் பயணித்ததோ, நிர்வாகிகள் சந்திப்போ, கொடியேற்றமோ, போராட்டமோ, ஏன் அட்லீஸ்ட் ஒரு பொதுக்கூட்டமோ கூட அவர் கலந்துகொண்டதில்லை. இதை எல்லாம் செய்யாமல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்களை வேண்டுமானால் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தொண்டர்களை ஒருபோதும் அப்படி சமாதானப்படுத்திவிட முடியாது.

திமுகவை பொறுத்த வரை, அந்தந்த மாவட்ட / பகுதி கழக முன்னணியினர் சொல்லுவதை அனுசரித்து தான் தொண்டர்கள் அதன்படி நடந்துகொள்வார்கள். ஆனால் அதிமுக தொண்டன் அப்படி அல்ல. தலைமைக்கும் கட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவன். அவன் பிரமுகர்களுக்காகவோ, அமைச்சர்களுக்காகவோ இயங்கவே மாட்டான்.

இப்போது சசிகலாவை ஆதரிப்போர் பலரும் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள், பிற கட்சிகளிலிருந்து பதவிகளுக்காக வந்திணைந்தவர்கள், மிகச்சமீப காலங்களில் கட்சியில் இணைந்த கழகத்தின் ஆரம்பகால வரலாறு அறியாதவர்கள் போன்றோரே. பொன்னையன், பன்ருட்டியார், செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன், கருணாஸ் போன்ற பலரும் இந்த பட்டியலில் வருபவர்களே. அவர்களுக்கு எந்த தலைமையை வேண்டுமானாலும் சட்டென ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அவரது கட்சியில் இணைத்துக்கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் தான் கட்சியின் பலம். நிர்வாகிகள், அமைச்சர்கள் என ஒரு ஐம்பது பேர் ஆளுக்கு ஐம்பது ஐம்பது பேரை கொண்டு வந்து காட்டி ஆதரவை வெளிப்படுத்துவதை, ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக ஊடகங்கள் உருவகப்படுத்துவது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது தெரியவில்லை. ஏனெனில் சில முக்கியமான கால கட்டங்களில், கட்சியின் நலனையும் கட்சி கொள்கையையும் காப்பாற்றும் முடிவை தொண்டர்களே எடுத்தனர்.

தலைமையால் நீக்கப்பட்டவர், ஒதுக்கிவைக்கப்பட்டவர், பின்னர் நிபந்தனைகளோடு இணைத்துக்கொள்ளப்பட்டவர் என்பதாலேயே அரை மனதாக சசிகலாவை ஏற்றுக்கொண்ட தொண்டன்..., இப்போது அந்த நிபந்தனைகள் அப்பட்டமாக மீறப்படுவதை ஒப்புக்கொள்ளவே மாட்டான். சசிகலா நீக்கப்பட்டதை கொண்டாடியவன், பின்னர் ஜெ. அவரை உறவினர்களுடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் இணைத்துக்கொண்டபோது மவுனமாக ஏற்றுக்கொண்டவன், மிக சமீபத்தில் கூட நெல்லையில் சின்னம்மா பேரவை என ஒன்றை தொடங்கியவர்களை ஜெ கட்சியை விட்டே நீக்கியதை அறிந்து சமாதானமும் நம்பிக்கையும் கொண்டவன் அத்தொண்டன். அந்த தொண்டனின் உள்ளுணர்வை புரிந்து கொண்டதால் தான் ஜெ. அப்படியான நிபந்தனைகளை விதித்திருந்தார் என்பது அவனுக்கு தெரியும். இப்போது அதை எல்லாம் மீறி இருப்பது அவனது கருத்துக்கு இனி மதிப்பில்லை என்பதை அவனுக்கு திட்டவட்டமாக உணர்த்தி இருக்கக்கூடும்.

எனவே அவர்களை சமாதானப்படுத்தி அவர்களது ஒப்புதலுக்குரிய தலைவராக வர சசிகலாவால் முடிகிறதா என்பதை தான் நமக்கு முக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனெனில் சில நிர்வாகிகளின் ஆதரவை விட, லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவு மட்டுமே தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை இத்தனை வருடம் ஜெ.வுடன் இருந்த சசிகலாவுக்கு புரிந்துகொள்ள கடினமான விஷயம் அல்ல.

நிற்க!

அதிமுக கட்சி பொது செயலாளர் (அ) தமிழக அதிமுக அரசின் முதல்வர் (அ) ஜெ.வின் சொத்துக்களின் வாரிசு என எந்த ஒரு பதவியில் சசிகலா அமர்ந்தாலும் அதன் மற்றொரு விளைவு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்து குவிப்பு வழக்கின் அப்பீலின் முடிவை மாற்றக்கூடும். வாதங்கள் முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருந்தாலும், இப்போதைய நிகழ்வுகள் நிச்சயமாக தீர்ப்பு எழுதுபவரின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதுவரையும், ஜெ.வின் அதிகாரத்தை பயன்படுத்தி சசி & கோ சொத்துக்கள் வாங்கியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும், கூட்டுச்சதி என்கிற குற்றச்சாட்டையும், பொருளாதார பகிர்வு / கூட்டணி என்பதையும், தொழில் பங்குதாரர் என்பதையும் திட்டவட்டமாக மறுத்து வாதாடி வந்தவர் சசிகலா.

அப்படியிருக்க, இப்போது ஜெ.வின் சொத்துக்களுக்கும் பதவிகளுக்கும் சசிகலா தான் வாரிசுதாரர் என்றால் அத்தனை குற்றச்சாட்டுக்களும் உண்மை என்பது ஊர்ஜிதமாகிவிடும்.

அவரை தலைமை ஏற்க வற்புறுத்தும் தலைவர்கள் இதையெல்லாம் யோசித்தார்களா? யோசித்து அதற்காக தான் வற்புறித்தி வருகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை.

ஆரம்பத்திலிருந்தே கட்சி மற்றும் அரசின் முடிவுகளில் ஜெ.வுக்கு சசிகலாவின் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் இருந்ததாக மக்களவை துணை சபாநாயகர் அவர்களே சொல்லி இருப்பது கூட சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா வைத்த வாதங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது.

எதுவானாலும், சொ.கு.தீர்ப்பு வரும்வரை சசிகலா ஒதுங்கி நிற்பது தான் அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது என்பதை அவரது வழக்கறிஞர்கள் எடுத்து சொல்லி இருக்கக்கூடும்.

அப்படி ஒரு சூழல் ஏற்படுமானால், புத்திசாலித்தனமாக சசிகலா அவர்கள் பின்னணி அரசியலையே வழக்கம்போல செய்து வருவதானால், நேரடி அரசியல் பொறுப்புக்கு அதிமுகவில் தகுதியானவர் யார் என்பதை தான் கவலையோடு ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்..

ஏனெனில், தமிழக அரசியலை பொருத்தவரையும் திமுகவும் அதிமுகவும் இரு கண்கள். இரட்டை குழல் துப்பாக்கி போன்றவை. அதில் ஒற்றைக்குழல் இப்போது ஊனமடைந்து கிடக்கையில் அதனை செப்பனிட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தான் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிற கோட்பாடுடையவன் நான். 

மேலும், சில காலங்களாக தீவிர அதிமுக இயக்கத்தவனாக கழிந்தவன், பிரச்சாரங்கள் செய்தவன் என்கிற முறையிலும், எம்.ஜி.ஆரை அவரது இயக்கத்தை நேசித்தவன், நேசிப்பவன் என்கிற முறையிலும், அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் நலனையும் பற்றி கவலைகொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

பொறுத்திருந்து கவனிப்போம்!

Monday, November 14, 2016

டீமானிடைசெஷன் எனும் ஒரு டிராமா

முதலில் ஒரு அருஞ்சொற்பொருள்

Demonetisation – குறிப்பிட்ட தொகையிலான ரூபாய் நோட்டு இனி செல்லாது என அறிவிக்கப்படுவது

Replacement of Currency – குறிப்பிட்ட தொகையிலான ரூபாய் நோட்டுக்களின் பழைய வெர்ஷனை திரும்ப பெற்று அதற்கு பதிலாக புதிய வெர்ஷனில் அதே தொகைக்கான ரூபாய் நோட்டுக்களை கொடுப்பது.

இந்த புரிதல் ரொம்ப முக்கியம். இந்த பதிவு பூரா படிக்கும்போது இதை மனசுல வெச்சுக்கோங்க. அப்ப தான் குழப்பம் வராது.

******

Demonetisation – கடைசியா 1978 ஆம் வருஷம் மொரார்ஜி தேசாய் அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது நிலுவையில் இருந்த 5000, 10000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டன. அதன் பின் அவை கொண்டுவரப்படவே இல்லை. (அதனால் தான் அது Demonetisation)

முதல் முதலாக வெளியிடப்பட்ட 500 ரூ நோட்டு. பின்னர் இதில் பல பல வெளியீடுகள் வந்தன 

அதன் பின் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல பல ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று இருக்கு. பழைய வெர்ஷனை மாத்தி புதிய வெர்ஷனை வெளியிடுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. கடைசியா 2014 ஆம் வருஷம் 500 ரூ நோட்டுக்களில், 2005 ஆம் வருசத்துக்கு  முன்பு வெளியிடப்பட்டவை எல்லாம் செல்லாதுன்னு அப்போதைய அரசு அறிவிச்சது தான் இந்தியாவின் மிகப்பெரிய ரூபாய் திரும்பப்பெறும் நடவடிக்கை. ஆனால் அப்படி அறிவிக்கிறதுக்கு முன்னாடி அதற்கு இணையான அளவுக்கு புதிய மாற்று 500 ரூபாய் நோட்டுக்களை போதுமான அளவுக்கு வங்கிகளுக்கு அனுப்பி வெச்சு, பேங்கை திடுதிப்புன்னு மூடாம, எல்லா நாளிலும் எந்த பிரச்சனையும் இல்லாம 500 ரூ நோட்டுக்களை மாற்றிக்கலாம்னு முறையா அறிவிப்பு கொடுத்து இருந்தது அரசு. அதாவது 500 ரூ நோட்டுக்கள் ஒழிக்கப்படலை. புதிய வெர்ஷனில் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட்டாங்க. (அதனால் தான் அது Replacement of Currency)

இப்போ அறிவிச்சிருப்பதை நாட்டு நலனுக்கான Demonetisation என பிரதமரே பரபரப்பான விளம்பரமா சொன்னாலும் கூட, குறைந்த பட்ச அறிவு உள்ள எல்லாருக்குமே இது வெறும் Replacement of Currency என்பதும், இதனால் கருப்பு பனமெல்லாம் ஒழிய வாய்ப்பே இல்லைன்னும் தெரிஞ்சிருக்கும். ஏன்னா 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்படலை. மாறாக புதிய நோட்டுக்களா வழங்கப்படுது.

மிக மிக பெரிய அளவில் பரபரப்பான டிராமாவா அறிவிக்கப்பட்ட இப்போதைய நிகழ்வு பெரிய சொதப்பலில் விழுந்து, பிரதமரே மக்கள் படும் அல்லல்களை ஒரு வழியா புரிஞ்சுகிட்டு தனது தவறுகளை மறைக்க எல்லா அரசியல்வாதிகளும் கையில் எடுக்கும் அதே சிம்பதி ஆயுதத்தை கையில் எடுக்க வெச்சிருப்பது தான் இந்தியாவுக்கான மிகப்பெரிய சோதனை.

******

இனி இப்போதைய இந்த டிராமா விஷயத்துக்கு விரிவா போகலாம்.

2012 ஆம் வருஷம் மத்திய நேரடி வரிகள் ஆணையம் (CBDT) 500, 1000 ரூ நோட்டுக்களை Demonetisation செய்ய கூடாதுன்னு தடை விதிச்சு ஒரு உத்தரவை போட்டு இருக்கு. (இதில் இருந்தே பழைய காங்கிரஸ் அரசும் இதே மாதிரி ஒரு முடிவில் இருந்திருக்காங்கன்றது புரியுது). அதனால் அப்போதைக்கு அந்த ஐடியா தள்ளி வைக்கப்பட்டது. அப்படி Demonetisation செய்யக்கூடாதுன்னு CBDT சொன்னதுக்கு காரணம் அது மக்களின் பணப்புழக்கத்தை வெகுவா பாதிக்கும் என்பது.

அதன் பின் கடந்த 2016 ஆம் வருஷம் அக்டோபர் மாசம் 20 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் ரிசர்வ் வங்கியின் போர்டு மீட்டிங் நடந்தது (அது ஏன் மும்பைலயோ டெல்லிலயோ இல்லாம கான்பூர்? அதுவும் தேர்தல் நடக்கபோற மாநிலம் வேறேன்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு இருக்காம மேல படிங்க)

அந்த மீட்டிங்க்ல தான் ரெண்டு முக்கியமான விஷயம் பேசப்பட்டது. ஒண்ணு புதிதா 2000 ரூ நோட்டுக்கள் கொண்டுவரப்படுவது. மற்றொன்று 500 1000 ரூபாய் நோட்டுக்கள் Demonetisation  செய்யப்படுவது.  இந்த விஷயத்தை பற்றி பல பத்திரிகைகளும் பெரிசா கண்டுக்கிடலை. ஆனா  பிஸினஸ் லைன் பத்திரிக்கையின் அக்ட்டோபர் 21 ஆம் தேதி இதழில் இது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பபெற வாய்ப்பு இருக்குன்ற மாதிரி ஒரு யூகமான செய்தி வந்திருந்தது.


ஆனால் கான்பூரில் இருந்து வெளிவரும் ஒரு ஹிந்தி நாளிதழான டெயினிக் ஜாக்ரன் வெளியீட்டின் அக்டோபர் 27 ஆம் தேதி பதிப்பில் முதல் பக்கத்தில் கீழே சின்னதா ஒரு பெட்டி செய்தியா இந்த செய்தியும் வெளி ஆகி இருந்தது. அதை எழுதியவர் பிரஜேஷ் துபே என்னும் நிருபர். அவருக்கு அப்போது அவர் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவம் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லைதான். (இப்ப அவர் திடீர் ஹீரோ)

இதில் இருந்து நமக்கு தெரிய வரும் முக்கியமான விஷயம் என்னன்னா, பிரதமர் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றும் அவ்வளவு ரகசியமா வைக்கப்படலை, குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களுக்கும் ரிசர்வ் வங்கியின் பல அதிகாரிகளுக்கும் முன்பே தெரியும் என்பது தான். பத்திரிக்கை செய்தியை படிச்ச பலரும் அப்பவே உஷாராகி தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி 100 ரூபாய் தாள்களாக சேகரிச்சுக்கிட்டதா இப்போ சொல்லப்படுது.

*******

கடந்த 4, 5 நாளா எந்த வங்கியிலும் ஏ.டி.எம்மிலும் கேஷ் இல்லை. மக்கள் தினசரி அல்லாடிட்டு இருக்காங்க. கிலோ மீட்டர் கணக்கில் ஒவ்வொரு பேங்க் வாசலிலும் கியூ நிக்குது. உணவோ குடிநீரோ இல்லாம ஒவ்வொருவரும் மணிக்கணக்கா வெயிலில் நின்னு பணத்தை மாற்றீட்டு போறாங்க.

ரிசர்வ் வங்கியோ தேவையான பணம் வங்கிகளுக்கு அனுப்பியாச்சுன்னு சொல்லுது. வங்கிகளோ எங்களிடம் போதுமான அளவுக்கு 100 ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பு இல்லைன்னு சொல்லுது. நிதி அமைச்சகமோ நோட்டு தட்டுப்பாடை போக்க 2000, 500 ரூபாய் புதிய நோட்டுக்கள் விரைவா அச்சடிக்கப்பட்டு வருந்துன்னு சொல்றார். பிரதமரோ நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்து உங்களை எல்லாம் சிரமப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்கோங்கன்னு தன்னுடைய டிரெட் மார்க் செண்டிமெண்டல் சிம்பதியோட சொல்லிருக்கார்.

இதில் இருந்தே எங்கேயோ தப்பு நடந்து இருக்குனு புரியுது இல்லே?

இனி அதை புள்ளிவிவர அடிப்படையில் டீட்டேயிலா பார்க்கலாம்.

என்னை பொறுத்தவரை இந்த Demonetisation என்கிற பெயரில் நடத்தப்படும் Replacement of Currency ரொம்ப முக்கியமான நடவடிக்கை. வரவேற்க வேண்டிய துணிச்சலான முடிவு. இதனால் கருப்பு பணம் கட்டுப்படாது ஆனாலும் நிச்சயமா கள்ள நோட்டு புழக்கம் முற்றிலுமா கட்டுப்படுத்தப்படும். அதனால் இந்த துணிச்சலான முடிவை எடுத்த பிரதமர் மோடி பாராட்டுக்கு உரியவர் தான். சந்தேகமே இல்லை.

ஆனா அதை செயல்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தேர்ந்தெடுத்த வழிமுறைகளும் ஏற்பாடுகளும் தான் இந்த மாபெரும் திட்டத்தை காமெடி டிராமாவா ஆக்கிருக்கு.


ரிசர்வ் வங்கி கணக்கு படி இந்தியாவில் 2016 மார்ச் 31 ஆம் தேதி நிலைமையில் 1000 ரூ நோட்டு 633 கோடி பீஸ்களும், 500 ரூ நோட்டு 1571 கோடி பீஸ்களும், 100 ரூ நோட்டு 1578 கோடி பீஸ்களும் வெளியிடப்பட்டு நாட்டில் இருக்கு.

இதில் 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாதுன்னு அறிவிக்கப்பட்டு அதுக்கு பதிலா 2000 ரூ நோட்டுக்கள் வெளியிடப்படும்னு சொன்னா, கிட்டத்தட்ட இப்போ புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களின் எண்ணிக்கையில் ஜஸ்ட் 25% நோட்டுகள் வெளியிட்டால் போதும் (4 x 500 க்கு பதிலா 1 x 2000). அது தான் அரசின் ஐடியா. ஆனா அந்த புதிதா அச்சடிக்கப்பட்ட 2000 ரூ நோட்டுக்களை ஏ.டி.எம் இயந்தரங்களின் கேசட்டுகளில் வைத்து டிஸ்பென்ஸ் செய்து டிரையல் செய்து பார்த்தார்களா இல்லையான்னு தெரியலை, இப்போ ஏ.டி.எம் மூலமா 2000 ரூ நோட்டுக்களையும் புதிய 500 ரூ நோட்டுக்களையும் மக்களுக்கு வழங்க முடியலைன்னு அரசு அறிவிச்சிருக்கு. அதாவது ஏற்கனவே இருக்கும் கேசட்டுகளில் இந்த புதிய 2000, 500 ரூ நோட்டுக்களை மேனேஜ் செய்ய முடியலை. இதுக்கு அடுத்த தீர்வு கேசட்டுக்களை எல்லாம் மாற்றணும். அது பெரிய வேலை. நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான ஏ.டி.எம் இயந்திரங்களின் கேசட்டுக்கள் மாற்றுவது அவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு தோணலை.

அடுத்த தீர்வு என்னன்னா, எல்லா ஏடிஎம் இயந்திரங்களிலும், வங்கிகளிலும் 100 ரூ 50 ரூ நோட்டுக்களை வழங்குவது. இது தான் கைவசம் இருக்கும் ஒரே தீர்வு. அதை செயல்படுத்த முடிவெடுத்த அரசு, மொத்தமாக நாடு முழுதும் உள்ள வங்கிகளில் எத்தனை 100 ரூ, எத்தனை 50 ரூ நோட்டுக்கள் கையிருப்பு இருக்குன்ற விவரத்தை சேகரிக்காம போயிருச்சு. அதனால் எல்லா வங்கிகளிலும், ஏடிஎம் வாசலிலும் நீண்ட கியூவில் மக்கள் நின்றுகொண்டே இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும்.

அரசு நினைத்திருந்தால் ஒரே நாளில் எல்லா வங்கிகளிடமிருக்கும் கையிருப்பு எவ்வளவு எனும் விவரத்தை சேகரிச்சு அதுக்கு தகுந்த மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ அதை செய்யவேயில்லை என சொல்றாங்க.

இப்போதைக்கு வங்கிகள் எப்படி சமாளிக்குதுன்னா, 100 ரூ நோட்டுகள் மற்றவர்கள் மூலமா வங்கிக்கு கிடைப்பதையும்,  ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனுப்பி வைப்பதையும் வெச்சு எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து (சம வாய்ப்பு கொடுக்கணுமில்லே?) சமாளிக்கிறாங்க. அதனால் தான் ஒரு நபருக்கு வெறும் ரூ. 4000 மட்டும் தான் எனும் வரம்பு. (குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் பண்டில் பண்டிலா 2000 ரூ நோட்டுக்களை மாற்றி அதை செல்ஃபி வேறே எடுத்து சோசியல் மீடியாவுல வெளியீட்டு இருக்காங்களே எப்படி? அவங்களுக்கு எல்லாம் இந்த 4000 லிமிட் கிடையாதான்னு எல்லாம் கேட்டா நம்மளை தேச துரோகி லிஸ்ட்ல சேர்த்திருவாங்க என்பதால் அத்தகைய கேள்விகளை தவிர்ப்போமாக. ஆமென்!)

குறைஞ்ச பட்சம் ஏடிஎம், டெபிட் கிரெடிட் கார்டுகள் மூலமா நேர்மையான பரிவர்த்தனை செய்யும் மக்களுக்கு அப்படிபட்ட பரிவர்த்தனைக்கான கட்டணங்களையாவது ரத்து செஞ்சிருக்கல்லாம் அரசு. அதை விடுத்து ராகுலை குத்தம் சொல்றதா நினைச்சு, “இன்னைக்கு ஊழல் செஞ்சவங்க எல்லாம் மொத்தமாக வங்கிகளின் வாசலில் லைன்ல நிக்குறாங்க”ன்னு பனாஜில நேத்து பேசிய பிரதமர் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இன்சல்ட் பன்னீட்டாருன்னு வேற ஒரு குரூப் கொந்தளிச்சிட்டு இருக்கு. (அவர் நம்மளை இன்சல்ட் பண்றது என்னவோ இது தான் புதுசுன்ற மாதிரி)

சரி அந்த 100 ரூ நோட்டெல்லாம் என்ன ஆச்சு? அது தான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி. பெரும்பாலான 1000, 500 ரூ நோட்டுக்கள் வெளியே வந்திருச்சு. சிலர் மாத்திட்டாங்க, பலர் வங்கியில் டெபாசிட் செஞ்சிட்டாங்க. கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூ நோட்டுக்களில் சுமார் 73 சதவிகிதம் நோட்டுக்கள் இப்போது வங்கிக்கு பத்திரமா திரும்ப வந்திருச்சு. ஆனா வங்கியிலும் ஏடிஎம் மிஷினிலும் இல்லாத அந்த 100 ரூ நோட்டுக்கள் மக்களிடமும் கொஞ்சமா தான் புழக்கத்தில் இருக்கு என்பதே லாஜிக்கா இடிக்குது.

அனேகமா அரசு நினைச்சமாதிரி 500 ரூ நோட்டுக்களா அல்லாம எல்லோரும் 100 ரூ நோட்டுக்களா பதுக்கி வெச்சிருக்காங்களான்னு ஒரு சந்தேகம் இப்போ தான் அரசுக்கே வந்திருக்கு.

இந்த சிச்சுவேஷன்ல தான் மேலே சொன்ன டைனிக் ஜாக்ரான் பத்திரிக்கை செய்தியை நீங்க பார்க்கணும். அதாவது ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரா பதவி ஏற்றுகிட்ட ஊர்ஜித் பட்டேல் அவர்கள் நடத்திய கான்பூர் போர்டு மீட்டிங்கில், அரசின் Replacement of Currency திட்டத்தை 2 வாரத்துக்கு முன்பே வெளியாகி பலரும் அப்பவே உஷார் ஆகிருக்கலாம்னும் சிலருக்கு தோணுது. (இந்த ஊர்ஜித் பட்டேல் இதற்கு முன்பாக ரிலயன்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகரா இருந்தவர் என்பது எல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது). இந்த காரணங்களால் தான் 100 ரூ நோட்டுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கணும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.


மக்களிடம் இருக்கும் பண புழக்கம்னு எடுத்துக்கிட்டா கூட கடந்த 2 வருஷத்தில் கிட்டத்தட்ட 55% அதிகரிச்சிருக்குன்னு ரிசர்வ் வங்கி சொல்லுது. அதாவது வங்கிகள் கிட்டே இருந்த பணத்தை எல்லாம் மக்கள் வெளியில் எடுத்துட்டாங்க. மக்கள் கிட்டே தான் இப்போ வங்கிகளை விட அதிகமா பணம் புழங்குதுன்னு ரிசர்வ் வங்கி சொல்லுது. இதில் குறிப்பிட்ட அளவிலான பெரிய தொகை 100 ரூ நோட்டுக்களா பதுக்கப்பட்டு  இருக்கலாம்னு அரசு நினைக்குது. அதனால் தான் இத்தனை நாளாகியும்  வங்கிகளில் பணப்பற்றாக்குறை நீடிக்குது.

நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தை சட்டபூர்வமான ஐடி கார்டுகள் மூலமா வங்கியில் கால்கடுக்க நின்னு மாற்றீட்டு போகும் பொதுமக்கள் எல்லாரையும் ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்தும், பெரும் பெரும் தொழிலதிபர்களையும், கருப்பு பண முதலைகளையும் முன்கூட்டிய தகவல்களால் பாதுகாத்தும் தனது பணியை மத்திய அரசு செவ்வனே செய்துட்டு இருக்குன்றது புரியுதுல்ல?


******

ஆகவே மக்களே, முன்னேற்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்ட இந்த டிராமாவால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நாட்டு நலன் கருதி, எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சகம் சொல்வது போல 3 வாரமோ, பிரதமர் சொல்வது போல 50 நாட்களோ பொறுத்து அருள வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கை. (வேறே என்னத்தை சொல்ல?)


ரிஃபரன்ஸ்:
  1. தைனிக் ஜாக்ரான் நாளிதழின் 2016 அக்டோபர் 27 ஆம் தேதி பதிப்பு
  2. தைனிக் ஜாக்ரான் கட்டுரை ஆசிரியர் பற்றிய செய்தி
  3. 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி பெரிய அளவில் ரூபாய் நோட்டுக்களைதிரும்ப பெற்றதுக்கான செய்தி




Wednesday, November 9, 2016

செல்லா காசுகள்

ன்னைக்கு காலைல முழிச்சதே ஒரு ஆச்சரிய அதிர்ச்சியான சந்தோஷ தகவல் மீது தான். அரை தூக்கத்தில் மொபைலை எடுத்து டிவிட்டரை ஓப்பன் செஞ்சா நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாதுன்னு பிரதமர் அறிவீச்சிருக்கிறதாவும் அதை எப்படி எங்கே எப்போது வரை மாற்றலாம்னும் விரிவா நிறைய தகவல்கள். போதாக்குறைக்கு வாட்சப் பூரா அதே மெசேஜ். ஒரு புதிய இந்தியா உதயம் என தலைவர் ரஜினி போட்ட டிவீட் வேற அடிக்கடி டைம்லைனுக்கு வந்து போச்சு. ஓவர் நைட்ல என்ன என்னமோ நடந்திருக்கு. நான் என்னடான்னா நேத்து சாயந்தரத்துல இருந்து எந்த கவலையும் இல்லாம ஊர் சுத்திட்டு இருந்திருக்கேன்.



சரி ஆனது ஆச்சு.. இனி இதை பத்தி விரிவா அலசலாமா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் பிரபலமடைந்த ஐடியா தான் இது. 500, 1000 நோட்டெல்லாம் செல்லாதுன்னு திடீர்னு அறிவிச்சா கருப்பு பணமா கணக்கில் காட்டாம பதுக்கி வெச்சவனுக்கெல்லாம் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும். நேர் வழியில் சம்பாதிச்சு வெச்சிருக்கறவனெல்லாம் அதை பேங்கில் கொண்டு போய் கட்டிடுவான். இது தான் ஐடியா. சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் படத்தில் கூட இந்த ஐடியாவை காமெடியா சொல்லிருப்பாங்க. இப்போ அது நிதர்சனமாகி இருக்கு.

என்னை பொறுத்தவரை இது மிக மிக அரிதிலும் அரிதான அதிரடி முடிவு. இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்தும் அவர்களிடத்தில் இந்த ஐடியாவை பலரும் சொல்லி இருந்தும் யாரும் எடுக்க துணியாத முடிவு இது. இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடியை எவ்வளவு வேணும்னாலும் கொண்டாடலாம். ஆனா இந்த முடிவுக்கு பின்னாடி இன்னும் சில கருப்பான விஷயங்களும் இருக்கு.

அதாவது, 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போலி ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் புழக்கத்துக்கு விடப்பட்டு இருக்குன்னும், அதற்கு இந்தியாவை பொருளாதார ரீதியா நசுக்க நினைக்கும் பாகிஸ்தானின் சதியும் காரணம்னும் சில தகவல்கள் பல காலமாகவே சுத்திட்டு இருக்கு. நிதி அமைச்சகம் ஏனோ இது பற்றி பெரிசா எந்த அக்கறையும் காட்டிக்கிடலை. ஏகனாமிக் இண்டெலிஜென்ஸ் தகவல்களின் படி 500, 1000 நோட்டுக்கள் ரிசர்வ் பேங்க் சைடிலிருந்து புழக்கத்தில் விட்ட அளவை விட அதிகமா (கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு) மக்கள் கிட்டே புழக்கத்தில் இருக்கு. சில மாசங்களுக்கு முன் குறிப்பிட்ட சீரியல் எண் உள்ள 500 ரூ நோட்டெல்லாம் செல்லாதுன்னு வங்கிகளில் ஒரு அறிவிப்பு வெச்சிருந்தாங்க. 500 ரூ நோட்டுன்னாலே எல்லாருமே சந்தேகமா பார்க்கிற அளவுக்கு நிலமை இருந்துச்சு. ஆனால் அதை எல்லாம் கடந்து ஓவரா கள்ள நோட்டு புழக்கத்துக்கு வர்ற வரைக்கும் அரசாங்கம் மெத்தனமா இருந்திருக்கு. நிலைமை கைமீறி போனபின், இந்திய பொருளாதாரத்துக்கே வேட்டு விழும்ன்ற நிலை வந்தபின் பிரதமரே நேரடியா தலையிட்டு இந்த அதிரடி முடிவு எடுத்திருக்கார். இந்த முடிவின் மூலம் இதுவரை இருந்த கையாலாகத்தனமும் மெத்தனமும் நிர்வாகத்திறமையின்மையும் மறைக்கப்பட்டு வெற்றி வீரரா வலம் வருகிறார். என்ன தான் காரண காரியங்களை சொன்னாலும் இது ஒரு அசாத்தியமான துணிச்சலான கம்பீரமான முடிவு என்பதை மறுக்க முடியாது. மோடி அந்த வகையில் பாராட்டுக்குரியவர் தான்.

சரி. இந்த முடிவினால் என்னென்ன மாற்றங்கள் வரும்?

கருப்புப்பணம் ஊழல் லஞ்சம் எல்லாம் ஒழிஞ்சிருமான்னா நிச்சயமா இல்லை. கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் முடிவு தான் அரசின் குறிக்கோள். ஆனா அதன் பிற பலா பலன்களா (ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும்) கருப்புப்பணம் ஓரளவுக்கு வெளியே வரும்.

இன்னைக்கு காலையில் கூட செக்போஸ்டில் ஒரு டிரக் டிரைவர் கடை கடையா ஏறி 1000 ரூ நோட்டுகளுக்கு சில்லறை கேட்டுட்டு இருந்தாரு. செக்போஸ்டில் கொடுக்கவேண்டிய லஞ்சத்தை இப்போ 100 ரூ நோட்டா மாத்தி தர சொல்லி இருக்காங்களாம். ஆக மொத்தம் லஞ்சமோ ஊழலோ ஒழியாது. மோடு ஆஃப் ஆபரேஷன் வேணும்னா மாறும்.


நிச்சயமா பெரிய தொழிலதிபர்கள் மிக பெரிய அரசியல்வாதிகள் இதில் சிக்க மாட்டார்கள். ஏன்னா யாரும் அவ்வளவு தொகையை கேஷா பதுக்கி வைக்க மாட்டாங்க. மிடில் கிளாஸ், சம்பளதாரர்கள், தினசரி செலவு செய்வோர், மளிகை கடை, நகைக்கடை, அடமான கடை நடத்துவோர், கந்துவட்டி / சீட்டு / வட்டிக்கு விடுவோர், குறு சிறு தொழில் முனைவோர், ரியல் எஸ்டேட், வீடு மனை விற்பனை செய்வோர் / வாங்குவோர், திருமணம் / பத்திரபதிவு மாதிரியான காரியங்களுக்காக பணம் சேர்த்து வைத்திருப்போர், சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தினசரி கூலிக்கு ஆட்கள் பிடித்து தரும் ஏஜெண்டுகள் போன்றோர், லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்திருக்கும் (கீழ் நிலை / இடை நிலை) அரசு ஊழியர்கள், காவலர்கள், வட்டார போக்குவரத்து / வணிகவரி ஊழியர்கள், லோக்கல் அரசியல்வாதிகள், அரசு கான்டிராக்டர்கள்..  இந்த மாதிரி நபர்களிடம் தான் எப்போதுமே அதிக அளவில் 500 1000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும்.

இப்போது நேற்றிரவில் இருந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த ரெண்டொரு நாட்களுக்கு மேலே சொன்னவர்கள் பாடு தான் திண்டாட்டம். அதற்காக அவர்கள் எல்லோருமே தவறான முறையில் பணம் சேர்த்ததாக அர்த்தம் அல்ல. தினசரி பெரிய அளவில் செலவு செய்யக்கூடியவர்கள் அவர்கள். அதில் பலர் நேர் வழியிலும் சம்பாதித்து இருக்கலாம். ஆனா திடீர் என இரண்டு நாட்களுக்கு பணம் செல்லாது, வங்கியும் இல்லை, மாற்றவும் முடியாது என்றால் எல்லா வேலைகளும் நின்று போய் விடும். திருமணம் போன்றவை நின்றால் வாழ்க்கையே போன மாதிரி தானே? அந்த மாதிரியான அதீத பாதிப்புக்களை பற்றி எல்லாம் அரசு சிந்தித்ததாக தெரியவில்லை.

கையில் இருக்கும் 500 1000 நேர் வழியில் சம்பாதித்தது என்றாலும் கூட அதை மாற்ற இரண்டு நாள் காத்திருக்கணும். அதுவரை டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். ஆனால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தணும். மேலும் பேங்க் அக்கவுண்டில் பேலன்சும் இருக்கணும். நாம் ஏதோ ஒரு செலவுக்காக மொத்தமாக துடைத்து எடுத்து வீட்டில் வெச்சிருப்போம். அவ்வளவு தான். பணம் இருந்தும் உபயோகப்படுத்த முடியாத நிலை தான்.

அரசு 500 1000 செல்லாது என முடிவெடுப்பதற்கு முன்பாக அதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி சிந்திச்சிருக்கணும். கார்டு மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லைன்னு அறிவிச்சிருக்கணும். எல்லா தனி நபருக்கும் வங்கி கணக்கு இருக்கான்னு யோசிச்சிருக்கணும். எதையும் செயலை.

நேர்வழியில் சம்பாதிச்சவங்க எல்லாம் ரெண்டு நாள் கழிச்சு அவங்கவங்க கிட்டே இருக்கிற 500 1000 நோட்டுக்களை பேங்கில் அவங்க அக்கவுண்டில் கட்டிட்டு அப்புறமா ஏ.டி.எம் மூலமா எடுத்துக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லை. அதிக அளவில் பணம் கையிருப்பில் இருந்தா அது எதனாலன்னு ஒரு விளக்கம் எழுதி கொடுக்கணும்னு அரசு சொல்லி இருக்கு. இதெல்லாம் ஓகே தான். பெரிய பிரச்சனை இல்லை.

நேர் வழி அல்லாமல் கள்ளத்தனமாக சம்பாதித்த பணம் பதுக்கி வெச்சிருக்கறவங்க தான் சிக்குவாங்க. பதுக்கி வெச்சிருக்கிற பணத்தை பேங்கில் கட்டவும் முடியாம (கணக்கும் காரணமும் பணம் வந்த வழியும் கேப்பாங்களே?) செலவு செய்யவும் முடியாம (யாரும் வாங்க மாட்டாங்க) பதுக்கி வைக்கவும் முடியாம (அதான் செல்லாதே?) மொத்தத்தில் ஒரு பண்டில் பேப்பரை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். 

ஜூவல்லரி, மளிகைக்கடை, நகை அடமான கடை போன்றோர் தான் அதிக அளவில் கணக்கில் காட்டாத பணத்தை எப்போதுமே கைவசம் வைத்திருப்பார்கள்.

ரியல் எஸ்டேட், கன்ஷ்டிரக்ஷன் போன்ற துறையினரும் பணத்தை அதிக அளவில் இருப்பு வெச்சிருப்பாங்க ஆனா அதை கணக்கில் காட்டிட முடியும். அதற்கான சோர்ஸ் தெளிவா இருக்கும்.

பார்ப்போம் இதுவரை எத்தனை பேரு அதிர்ச்சியில் என்னென்ன ஆகியிருக்காங்கன்னு.

மத்தபடி கட்டுக்கட்டா பணத்தை சாக்கு மூட்டையில் கட்டி தோட்டத்தில் பதுக்கி வெக்கிற அளவுக்கு கருப்புப்பணம் வெச்சிருக்கிற ஆட்களுக்கு தான் கவலை அதிகமா இருக்கும். நம்மை போல அன்னாடம் காய்ச்சிகளுக்கு அடுத்த ரெண்டு நாள் எப்படி ஒட்டுறதுன்ற கவலை மட்டும் தான் இருக்கும்.

இந்த திட்டத்துக்கான அஸ்திவார பணிகள் 2011 ஆம் வருஷமே தொடங்கிச்சு. ஜீரோ பேலன்ஸ் பேங்க் அக்கவுண்ட் அறிமுகம் செய்து (நோ பிரில் அக்கவுண்ட்) எல்லோரையும் வங்கி கணக்கு எடுக்க வெச்சு, எல்லோருக்கும் டெபிட் கார்டு கொடுத்து நாடு முழுதும் ஏ டி எம் எண்ணிக்கையை அதிகரிச்சு, அரசு துறைகளில் எலக்டிரானிக் பேமெண்ட் சிஸ்டத்தை உருவாக்கி எல்லாருமே 100% உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி முடிக்க இத்தனை காலம் ஆகி இருக்கு.

இதன் பின் விளைவுகள் என்ன என்ன ஆகும்ன்றது, எத்தனை பேர் அளவுக்கு அதிகமா கருப்பு பணம் பதுக்கி வெச்சு இப்போ திவால் ஆகி இருக்காங்கன்ற தகவல்கள் வர தொடங்கினப்புறம் தான் தெளிவா அலச முடியும். லஞ்சமா வாங்கி வீட்டில் பதுக்கி வெச்சிருக்கிற அரசு ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். மத்த பெரும் கருப்புபணங்கள் எல்லாம் ஆஸ்தியாவோ சொத்தாவோ வீடாவோ எப்பவோ வாங்கிருப்பாங்க. யாரும் கேஷா பதுக்கி வெச்சிருக்க மாட்டாங்க. ஆக பாதிப்பு என்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தில் தவறு செய்தவர்களுக்கு மட்டும் தான்.

கருப்பு பணம் இனி மேல் வராமல் இருக்கவும் லஞ்சம் ஊழல் சுத்தமா ஒழியவும் ஒரே வழி தான் இருக்கு.

எல்லா பரிமார்ரங்களும் வங்கி மூலமா இருக்கணும். 10000 ரூபாய்க்கு மேல் யார் கிட்டேயும் கேஷா இருக்கக்கூடாது.


இந்த ரெண்டு கட்டுபாடு இருந்தாலே 90% கருப்புபணம் வெளியே வந்திரும். பார்ப்போம் அரசு என்ன செய்யபோகுதுன்னு. 

*********

தொடர்புடைய பதிவுகள்:
  1. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 1
  2. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 2 

Thursday, October 6, 2016

வதந்தி எனப்படுவது யாதெனின்

மூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கைது நடவடிக்கை என தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலர் அறிவித்து இருப்பது தான் ரெண்டு நாளா ஹாட் டாபிக்.. அதே சமூக வலைத்தளங்களில்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் (hereinafter referred as “அம்மா அவர்கள்”) உடல்நலம் குன்றி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து பலவாறாக கிளம்பிவரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் போலீஸ் இதை அறிவித்து இருக்கிறது. இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 1 வெளிநாட்டு வாழ் இந்தியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிலர் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 50க்கும் மேற்பட்டோரின் சமூக வலை தள நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது என தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

முதலில் வதந்தி என்பது என்ன?

வதந்தி என்பதற்கு இந்திய சட்டத்தில் தெளிவான வரைமுறை எதுவும் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தமிழக போலீஸ் கூட, கலவரத்தை தூண்டுதல், வன்முறையை விதைத்தல் என்றெல்லாம் வழக்கை பதிவு செய்கிறது என்று நினைக்கிறேன்.

அதிகாரப்பூரவமற்ற தகவல்கள் எல்லாமே வதந்தி தான் என்பது இப்போதைய தமிழக அரசின் நிலைப்பாடாக தெரிகிறது. அது யூகங்களாகவே இருந்தாலும் அது வதந்தி என்றே வகைப்படுத்தப்படுகிறது. யூகத்துக்கும் வதந்திக்கும் என்ன வித்தியாசம்? ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போமா?

மேகம் கருக்குது, சில்லுனு காத்து அடிக்குது, வானம் இருண்டுட்டு வருது... இதை எல்லாம் வெச்சு இன்னைக்கு மழை வரும்னு நினைக்கிறேன்னு நீங்க சொன்னா அது யூகம். அதுவே.. அந்தப்பக்கம் எங்கேயோ பேய் மழை பிச்சு உதறுது.. அதனால் தான் இங்கே இப்படின்னு சொன்னீங்கன்னா அது வதந்தி. ஏனெனில் அந்த பக்கம் எங்கேயோ பேய் மழை பிச்சு உதறுதுன்றது உங்களுக்கு அதிகாரப்பூர்வமா தெரியாது. இதையே, பேய் மழை பிச்சு உதறிட்டிருக்கும்னு நினைக்கிறேன்னா அது யூகம்.  வதந்திக்கும் யூகத்துக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு தான்.

இந்த வரைமுறை படி பார்த்தா வானிலை அறிக்கை, ஷேர் மார்க்கெட் டிப்ஸ், ரயில்வே அறிவிப்புக்கள், என பல பல அரசு தகவல்களே கூட ஒரு வகையில் வதந்திகள் தான். கட்டாயமா தெரியாத ஒரு விஷயத்தை பகிர்வது வதந்தின்னு சொன்னா எல்லா கோர்ட்டில் நடக்கும் குற்ற வழக்கு விசாரணைகளுமே வதந்தி தான், யார் குற்றவாளின்னு அதிகாரப்பூர்வமா தெரியுற வரைக்கும். காவல் துறை சந்தேகத்தின் பேரில் செய்யும் கைதுகளும் வதந்தி லிஸ்டில் தான் வரும். அவங்களுக்கும் அதிகாரப்பூர்வமா தெரியாது.

வீட்டில் அன்றாடம் நடக்கும் பல நிகழ்வுகளும், பக்கத்து வீட்டு விஷயங்கள் பற்றிய பொரணி பேசுவதும், இன்னைக்கு பாஸ் இன்னும் வரலையே ஒரு வேளை லீவோன்னு நீங்க நினைக்கிறதும் என எல்லாமும் வதந்தி தான். சர்வம் வதந்தி மயம் ஜகத்.

சரி இப்போ அப்படி திடீர்னு வதந்திகளை கட்டுப்படுத்த என்ன அவசியம்?



முதல்வருக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றாங்க. ஆனா என்ன உடம்புக்கு? என்ன சிகிச்சை எதுவும் யாருக்கும் அதிகாரப்பூர்வமா தெளிவா சொல்லலை. ஹாஸ்பிடல் வழங்கும் தினசரி அப்டேட்ஸ் கூட முதலில் ஜுரம்னு தான் சொல்லிச்சு. ஆனா அடுத்தடுத்த பரிமாணங்கள் தான் பல யூகங்களை கிளப்பி விட்டுச்சு. அதாவது ஜுரம் & நீரிழப்புக்கு சிகிச்சைன்னு சொன்னவங்க ரெண்டே நாளில் ஜுரம் குறைஞ்சிடிச்சு, வழக்கமான உணவை உட்கொண்டார், ஓய்வில் இருக்கிறார்னு சொன்னாங்க. அதோட பிரச்சனை முடிஞ்சுது. சிம்பிள். எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க போயிட்டாங்க.  அதுக்கடுத்து சில நாட்களிலேயே அதே ஹாஸ்பிடல் அதிகாரப்பூர்வமாகவே செப்சிஸ் நிபுணர் லண்டன்லருந்து வந்து பரிசோதிச்சார், ரெஸ்பிரெட்டரி சப்போர்ட்டில் இருக்காங்கன்னு எல்லாம் அதிகாரப்பூர்வமாகவே அறிவிச்சதும் இயல்பாகவே மக்கள் மனதில், பல வித கவலைகள் தோன்றும். அந்த கவலைகளை வெளிப்படுத்துவது தான் வதந்தின்னு இப்போ போலீஸ் அதிகாரிகளில் சிலர் சொல்வதாக செய்தி வருகிறது.  ஆக, இந்த வதந்திகளின் ஊற்றுக்கண் அப்போலோ அறிக்கை அன்றி யாதொன்றும் இல்லை.

யூகங்களின் அடர்த்தியை அதிகரிக்க வைத்ததிலும் ஹாஸ்பிடலுக்கு பெரும் பங்கு உள்ளது. இன்ஃபெக்ஷன் வராமல் இருப்பதற்காக தான் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை என சொல்வது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனா அது மாநிலத்தின் தலைவரான ஆளுநருக்கும் பொருந்தும் என்பது தான் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் என பலரையும் சந்திக்க அனுமதிக்கவேயில்லை.  அவ்வளவு ஏன், தமிழக அரசின் சுகாதார அமைச்சர், கட்சியிலேயே இருக்கும் பல மருத்துவ நிபுணர்கள் என யாரையாவது கூட அனுமதித்து இருக்கலாம். அவர்கள் மருத்துவர்கள் என்பதால் எப்படி அங்கே நடந்துகொள்ள வேண்டும் என தெரிந்து இருக்கும். அதுவும் இல்லை.   

ஆனால் அதே சமயத்தில் அரசு அதிகாரப்பூர்வமாகவே முதல்வர் நலமுடன் இருக்கிறார், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார், அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார், 50 பேருந்து நிலையங்களில் வைஃபி சேவைகளை தொடங்கினார்ன்னு எல்லாம் செய்திகள் வெளியிட்டது (ஃபோட்டோ இல்லாம தான்). இன்னொரு பக்கம் இதற்கு நேரெதிர் நிலைப்பாடாக முழு ஓய்வில் இருக்கிறார், ரெஸ்பிரெட்டரி சப்போர்ட்டில் இருக்கிறார், யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என ஹாஸ்பிடல் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.  இப்படி இரண்டு வெவ்வேறு அதிகாரப்பூர்வ செய்திகள் வந்தது தான் அத்தனை குழப்பத்துக்கும் காரணம்.  இதில் அரசு சொன்னது உண்மை என்றால் ஹாஸ்பிடல் சொன்னது வதந்தி. ஹாஸ்பிடல் சொன்னது உண்மை என்றால் அரசு சொன்னது வதந்தி. இந்த இரண்டு வதந்திகளின் பக்கமாக மக்கள் இரு வேறு பிரிவுகளில் பிரிந்து நிற்கிறார்கள். ஆக வதந்தியின் ஊற்றுக்கண் அரசும் ஹாஸ்பிடலும் தான். அரசோ ஹாஸ்பிடலோ ஒரே குரலில் இது தான் உண்மை என சொல்லிவிட்டால் வழக்கம் போல மக்கள் அவரவர் வேலையை பார்த்துவிட்டு போய்விடுவார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்திய அரசியல் சாசனப்படி இப்போது அரசை இயக்கி கொண்டு இருப்பது யார் என்பதை தெரிவிக்கவேண்டிய கடமை அரசின் தலைமை செயலாளருக்கு உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை அரசு அறிவிப்பாக வரவில்லை. ஆளுநரும் இதுவரை யாரையும் பொறுப்பு முதல்வராகவோ மாற்று முதல்வராகவோ நியமிக்கவில்லை. எனவே அம்மா அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஜஸ்ட் ஓய்வில் தான் இருக்கிறார் என்பதை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதற்கு நேரெதிராக தமிழக போலீஸ் இப்போது லாஜீக் இல்லாமல் விடும் மிரட்டல் அறிவிப்புக்கள் தான் முக்கியமான விவாத பொருள்.

சமூக வலைத்தளங்களில் அம்மா அவர்களின் உடல்நிலை பற்றி விவாதித்தால் கைது என்கிற அந்த அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது. அது இருபுறமும் கூரான கத்தி போன்றது. அம்மா அவர்கள் பூரண நலமுடன் இருந்தால் ஹாஸ்பிடல் முன்பு நின்று கொண்டிருக்கும் மொத்த கட்சி தொண்டர்களுமே தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அம்மா அவர்களுக்கு ஒருவேளை உடல் நிலை முழுமையாக குணமடையாமல் இருந்தால் ஆலோசனை நடத்தினார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்றெல்லாம் தவறான தகவல்களை வெளியிட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மீது நடவடிக்கை எடுக்க முடியும். இப்படி பார்த்தாலும் வதந்திகளின் ஊற்றுக்கண் அரசும் கட்சியும் தான். இந்த நிகழ்வுகளை விவாதிக்கும் ஒரு தளமாக மட்டுமே சமூக வலை தளங்கள் இருக்கின்றன என்பது சுய சிந்தனை உள்ள எல்லோருக்கும் எளிதாக புரிவது தான்.

சமூக வலைத்தளங்களில் என்னை போன்ற சாமானியர்கள் மட்டுமல்லாமல் மெத்த படித்த அறிவாளிகளும், பல துறை வல்லுனர்களும் இருப்பதால், ஹாஸ்பிடல் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் சாராம்சத்தை அவர்கள் விரிவாக மொழிபெயர்த்து எங்களை போன்றோருக்கெல்லாம் புரியும்படி சொல்கிறார்கள். உதாரணமாக செப்சிஸ் நிபுணர் வந்து பரிசோதித்தார் என ஹாஸ்பிடல் சொன்னால், செப்சிஸ் என்பது என்ன என்பதை சமூக வலை தளம் வாயிலாக நிபுணர்கள் புரிய வைக்கிறார்கள். இதற்கு புரியவைப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு முதல் தகவல்களை வெளியிடுவோரிடம் கொஞ்சம் கவனமாக அறிக்கைகளை வெளியிட சொல்லியிருக்கவேண்டும். அது தான் பொறுப்பான அரசும் போலீசும் செய்திருக்கக்கூடிய ஆகச்சிறந்த நடவடிக்கை.

அம்மா அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்கள் என சொல்வது எந்த அளவுக்கு வதந்தியோ அதே அளவு வதந்தி தான் அம்மா அவர்கள் மிக்க நலமுடன் இயல்பாக இருக்கிறார்கள் என்பதும். இரண்டுமே அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்கள் அல்ல. சமூக வலைத்தளங்களில் வரும் யூகங்களும், அதிமுக கட்சி நிர்வாகிகளே வெளியிடும் தகவல்களும், அரசு அதிகாரிகள் சொல்லும் செய்திகளும், ஹாஸ்பிடலின் தினசரி அறிக்கைகளும் அந்த குழப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. அதனால் தான் பல கட்சி தலைவர்களும் கூட முதல்வர் உடல்நிலை குறித்து நம்பகமான தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

மற்றபடி கைது நடவடிக்கை எல்லாம், மேலே சொன்ன காரணங்களால் சட்டப்படி செல்லாது. ஏனெனில் அதிமுக கட்சியினருக்கு கூட அம்மா அவர்களின் இப்போதைய நிலை என்ன என்பது தெளிவாக தெரியாது. வேறு வழியில்லாமல் தான் அவர்களும் எல்லோரையும் மிரட்டி பணியவைக்கவேண்டி இருக்கிறதே தவிர, தீவிர அம்மா விசுவாசி கூட எல்லோரிடமும் என்ன விவாதித்து கொண்டு இருக்கிறானோ அதே தான் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

சமூக வலைத்தளம் என்பது அஃப்டர் ஆல் ஒரு டிஸ்கஷன் ஏரியா தானே?

நல்லவேளையாக உயர்நீதிமன்றம் இன்றைக்கு இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

அம்மா அவர்களின் உடல் நிலை குறித்த அறிக்கையையும், அரசு நிர்வாகம் குறித்த அறிக்கையையும் இன்றைக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அரசு அந்த அறிக்கைகளை இன்று தாக்கல் செய்யும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இது தான் விஷயம் என தெரியவந்துவிட்டால் வந்தந்திகள் / யூகங்கள் / ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் உடனடியாக நின்று விடும். இதை முன்பே தமிழக அரசும் அதிமுகவும் செய்திருக்கவேண்டும். ஏனோ இதுவரை செய்யவில்லை. இன்று அதை நீதிமன்றம் செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

விரைவில் அம்மா அவர்கள் நலம் பெற்று குணமடைந்து தமிழகம் இப்போதிருக்கும் சில இக்கட்டான நிலைகளை (காவிரி, ஜி.எஸ்.டி...) விரைவில் சரிசெய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து மாநிலத்தை இயல்பான நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது தான் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மன வேண்டுதல். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சி தலைவர்களும் (கலைஞர் உட்பட) கூட அவர் நலம் பெற்று விரைவில் வரவேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே அவர் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலாக தான் இருக்கிறது. அரசும் ஹாஸ்பிடலும் விடும் முரண்பாடான அறிக்கைகளால் தான் மக்கள் இருவேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அரசும் உயர்நீதிமன்றமும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறேன்.



Wednesday, September 7, 2016

சிறுவாணி

சூப்பர் ஸ்டார் நடிச்ச அதிசய பிறவி படத்துல வரும் தானந்தன கும்மி கொட்டி பாட்டுல ஒரு வரி வரும்.. “சிறுவாணி கெண்டைய போல சொக்குது கண் ராசி”ன்னு.. ஆனா இப்ப சமீபகாலமா சிறுவாணி கெண்டையை விட சிறுவாணி சண்டை தான் ஃபேமசு ஆயிருச்சு.  இது இன்னைக்கு நேத்து சண்டை இல்லை.. கால காலமான சண்டை..

வீட்டுல கொசுவர்த்தி சுருள் இருந்தா எடுத்து உங்க முகத்துக்கு முன்னாடி பிடிச்சுக்கோங்க.. நாம இப்ப சிறுவாணியின் ஃபிளாஷ் பேக் கதைக்கு போறோம்.

ஃபிளாஷ் பேக்

அது 1889 ஆம் ஆண்டு. கோவையை சேர்ந்த திரு S.Pசிம்முலு நாய்டு ஒரு காங்கிரஸ்காரர். பத்திரிகையாளரும் கூட. அவர் அடிக்கடி வெள்ளியங்கிரி மலைக்கு அங்கிருக்கும் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவர். யானை, சிறுத்தை, அட்டைப்பூச்சி என பல பல இம்சைகள் இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாம ரெகுலரா மலைக்கு போய் வரும் வழக்கம் உடையவர். அந்த வெள்ளியங்கிரி மலை மேல நின்னு பார்க்கும்போதெல்லாம் தூரத்தில் தெரியும் முத்திக்குளம் அருவியை பார்த்துட்டே இருப்பது அவரது வழக்கம். வருஷம் பூரா எல்லா சீசனிலேயும் ஆர்ப்பரித்து கொட்டும் அந்த அருவி அவருக்கு ஆச்சரியமா இருந்தது. அந்த தண்ணியை மட்டும் கோவைக்கு கொண்டு வர முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு அவர் பல தடவை நினைச்சிருக்காரு. அப்படி எல்லா சீசனிலேயும் தண்ணீர் வருதான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே வருஷத்தில் பல முறை அவர் வெள்ளியங்கிரி மலைக்கு போயிட்டு வந்தாராம் .
 
Mukthi Falls (Thanks: The Hindu)
1889 ஆம் வருஷம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முக்திக்குளம் அருவியிலிருந்து கோவைக்கு நீர் கொண்டு வருவதை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தி அவர் ஐடியாவை விளக்கினாரு. அந்த முக்திக்குளம் அருவி நீருடன், பாம்பாறு, பாட்டியாறு ஆகிய நதிகளின் நீரும் சேர்ந்து தான் சிறுவாணி நதியா அங்கே ஒடிட்டு இருந்தது. அந்த நதியில் இருந்து நீரை எப்படியாவது மலைகளை குடைஞ்சு இங்கிட்டு கொண்டு வந்து நொய்யல் நதியோட சேர்த்து விடணும்ன்றது தான் ஐடியா.

ஆனா நிதி பற்றாக்குறை காரணமா அந்த திட்டம் அப்போது தொடங்கப்படலை.  திட்டம் பெண்டிங்.

1913 ஆம் வருஷம்.

கோவையின் மாநகராட்சி கவுன்சிலராகவும் பின்னர் சேர்மேனாகவும் இருந்த திரு C.S ரத்தின சபாபதி முதலியார் (இவர் பெயரில் தான் இப்போது R S புரம் பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது – ரத்தின சபாபதி புரம்) சிறுவாணி திட்டத்தை தன் கையில் எடுத்தாரு. அந்த தண்ணீரை கோவைக்கு கொண்டு வருவதற்காக ‘The South Indian Railway Company’ எனும் நிறுவனத்துக்கிட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனா அவங்க என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு, நீலகிரி மாவட்டத்துல இப்போதிருக்கும் குந்தா பைக்காரா நீர் மின் திட்டங்களை செயல்படுத்த போயிட்டாங்க. மீண்டும் திட்டம் பெண்டிங்.

ஆனா ரத்தின சபாபதி முதலியாரின் இடை விடா முயற்சியால், 1929 ஆம் வருஷம் ஏப்ரல் 26 ஆம் தேதி சிறுவாணி நீர் கோவைக்கு குடிநீரா சப்ளை செய்யப்பட்டது. மொத்தம் 110 குடிநீர் குழாய்கள் தான் அப்போது இருந்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி நதி முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது. அதோடு கோவைக்கான நீர் ஆதாரம் பணால்.

1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் கோவையின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு சின்ன செக் டேம் கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.
 
Siruvani Check Dam
திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் வருஷம் சிறுவாணி அணை திறக்கப்பட்டது. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி, கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது ரொம்ப முக்கியமான விஷயம்.. பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் விஷயங்களுக்கு எல்லாம் இதை மனதில் வைத்து வாசிக்க வேண்டி இருக்கும்.

இப்போதைய பிரச்சனை:

சரி.. இப்போ என்ன திடீர் பிரச்சனைன்னு தானே அடுத்த கேள்வி? அதையும் பார்க்கலாம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 218 tmc நீரை திறந்துவிட்டு அதன் மூலம் தமிழகத்துக்கு 205 tmc நீரும், புதுவை மாநிலத்துக்கு 7 tmc நீரும் கேரள மாநிலத்துக்கு 6 tmc நீரும் கொடுக்கணும். அந்த தீர்ப்பை கர்நாடகம் மதிக்கலைன்னு தமிழகம் புதுவை மாநிலங்கள் பல காலமா  போராடிட்டு வருது என்பது நமக்கு தெரியும். அதன் ஒரு பகுதியா தான் கேரளா இந்த அணை கட்டுது. என்ன கொழப்பமா இருக்கா?

தமிழகம் கர்நாடகாவில் இருந்து கிடைக்கும் நீரில் இதுவரை கேரளாவுக்கு உரிய பங்கை கொடுக்கலை. இது தொடர்பா கேரளம் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால், கேரளாவின் 6 tmc நீரை தமிழகத்திடமிருந்து எடுத்துக்கலாம்னு நடுவர் மன்றம் மூலமா அனுமதி வாங்கிட்டாங்க. அதாவது காவிரியின் நீர் வரத்தில் பவானியின் பங்கும் உள்ளது. அதே மாதிரி பவானியின் நீர் வரத்தில் கேரளாவின் பங்கும் உள்ளது. அதனால் மேல் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியின் அருகிலுள்ள சோலையூர் & அகழி பகுதிகளில் சிறுவாணிக்கு குறுக்கே ஒரு சின்ன செக் டேமை கட்டி 6 tmc நீரை எடுத்துக்கறது தான் கேரளாவின் திட்டம். இதன் மூலம் கேரளாவின் அட்டப்பாடி அகழி சோலையூர் மன்னார்க்காடு பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். (இப்போ அந்த பகுதிகள் வறட்சியான பகுதிகளா இருக்கு. அதிலும் அட்டப்பாடி மக்களின் வாழ்க்கை நிலை. கொடுமையிலும் பெரும் கொடுமை..! அதெல்லாம் தனியா இன்னொரு பதிவு எழுத வேண்டிய அளவுக்கு விஷயம் உள்ள கட்டுரை).

இந்த சின்ன செக் டேம் மூலம் பவானிக்கு போகும் நீரில் 6 tmc தடுக்க முடியும், அதாவது பவானி மூலம் காவிரிக்கு போகும் 6 tmc. அப்படியாக காவிரியிலிருந்து கேரளாவிற்கு சட்டப்படியா கிடைக்க வேண்டிய நீர் கிடைச்சிரும். இது தான் ஐடியாவின் சுருக்கம். இது சட்டப்படியும், நியாயப்படியும், காவிரி நடுவர் மன்றத்தின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் சரி தான். இதை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை.

கேரளா அணை கட்டுவதா சொல்லப்படும் இடம் என்பது கேரள பகுதிக்குள்ளேயே தான், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திடம் அணை கட்ட அனுமதி கேட்கனும்ன்றது கட்டாயமில்லை. (இருமாநிலத்துக்கு இடையிலான நதியான பவானியில் நாம் சில அணைகள் கட்டி இருக்கிறோம், எதற்கும் கேரளாவின் அனுமதி கேட்கவில்லை என்பதை ஒரு ஓரமா நினைவில் வெச்சுக்கோங்க). 

என்றாலும் கூட, அணை கட்டும் பகுதி தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருப்பதால், தார்மீக அடிப்படையில் தானாக முன்வந்து தமிழகத்துக்கு கடிதம் எழுதி நாங்க இப்படி அணை கட்ட போறோம். இதில் உங்களுக்கு எதுனா ஆட்சேபனை இருக்கான்னு கேட்டுச்சு கேரளா.

உங்களுக்கே தெரியுமே? தமிழகத்தில் அரசு செம்ம தூக்கத்தில் இருப்பதால் அதற்கு பதில் எதுவும் கொடுக்கலை. பல நினைவூட்டல் கடிதங்கள் (அதாங்க ரிமைண்டர்) அனுப்பியும்  எந்த பதிலும் வரலை. இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போச்சு கேரளா. மத்திய அரசும் பல கடிதங்கள் அனுப்பிச்சுச்சு. அதுக்கும் பதில் இல்லை.

கடைசியா, கடந்த மே மாசம் 4 ஆம் தேதி கேரள கூடுதல் முதன்மை செயலாளர் தமிழகத்துக்கு கடிதம் எழுதி, ஜூலை மாசத்துக்குள் பதில் வேணும்னு கேட்டாரு. ம்ஹூம்.. நாம எந்த பதிலையும் கொடுக்கலையே.

ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் மத்திய நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழு கூட்டம் கூடிச்சு. சிறுவாணி விவகாரத்தில் உள்ள தற்போதைய நிலைமைய ஆராய்ந்து, தமிழகம் இத்தனை நாளா பதில் அனுப்பலைன்னா அவங்களுக்கு அங்கே அணை கட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு அர்த்தம்னு சொல்லி (யெஸ்... தட் மௌனம் சம்மதம் மொமெண்ட்) கேரளா அங்கே அணை கட்டிக்கலாம்னு அனுமதி கொடுத்துச்சு.

அப்பவும் தமிழக அரசு சைலன்ட் மோடில் தான் இருந்துச்சு.

விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் விஷயத்தை கையில் எடுத்து போராட தொடங்கினப்பத்தான் (அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் வருவதும் சட்டுனு ஞாபகத்துக்கு வந்து?) தமிழக அரசு மத்திய அரசுக்கு திடீர்னு ஒரு கடிதம் அனுப்பி இருக்கு. அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கன்னு.


நமக்கு ஆட்சேபனை இருக்குனு ஒரு கடிதத்தை ஜூன் மாசமே அனுப்பி இருந்தால் அணை கட்ட மத்திய அரசு அனுமதியே கொடுத்திருக்க மாட்டாங்களேன்னு லாஜிக்கா சிந்திக்கிற திறன் நமக்கு இல்லாததால், எல்லோரையும் போல மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அதிரடி கடிதத்தை ஆராதிச்சபடி ஒவ்வொரு நாளையும் கழிச்சுட்டு இருக்க வேண்டியது தான். நான் அப்படி தான் இருக்கிறேன். நீங்க?

Reference:




Printfriendly