Tuesday, May 28, 2013

யாதொன்றும் யாமறியேன்!



“எனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்து அறிவித்துவிட்டார்கள்” இன்றைக்கும் மற்றுமொரு முறை இப்படி அப்பாவியாக சொல்லி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி பொன்மனசெல்வி காவிரி தந்த கலைச்செல்வி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள். தமிழக வரலாற்றின் மிக சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்.

விஷயம் வேறொன்றும் இல்லை. சமீபத்தில் தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி, தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (‘மற்றும்’ என்கிற சொல் பயன்படுத்தக்கூடாது. “கலையும் அறிவியலும்”-னு தான் சொல்லவேண்டும் எனும் குதர்க்கம் பேசும் தமிழுணர்வு தோழர்கள் மன்னிப்பார்களாக!) உட்தேர்வுகள் (இண்டர்னல் எக்ஸாம்ஸ்) இனிமேல் ஆங்கில மொழியில் தான் எழுதவேண்டும். மாணவர்களுக்கு ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பல முனைகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள், அப்படி ஒரு அறிவிப்பு வந்ததே தனக்கு தெரியாது எனவும், தனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகளே அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்லி, அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறார்.


இப்படி அவர் சொல்லுவது இது முதல் முறை அல்ல. மிக மிக நீளமான பட்டியலே இருக்கிறது. அவற்றுள் சில உங்கள் மறு நினைவுறுத்தலுக்காக.

டான்சி நில விற்பனை விவகாரத்தில் ஆவணங்களில் இருந்தது தனது கையெழுத்தே அல்ல என சொல்லி, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தபின் தனது கையெழுத்து தான் என ஒப்புக்கொண்டார்.

2006 சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, அப்படி போட்டியிட்ட நான்கு தொகுதி வேட்புமனு பட்டியலிலும் ‘நான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை’ என அத்தாட்சி அளித்திருந்தார். தேர்தல் விதிமுறை படி, இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பதால் அந்த வழக்கு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போழுதே வேட்பாளர் பட்டியல் வெளியானது. வாத பிரதிவாதங்கள் வலுக்கவே வேட்பாளர் பட்டியல் தனக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டுவிட்டதாக சொல்லி பட்டியலை ரத்து செய்தார்.

அண்ணா பவழவிழா வளைவு அகற்றப்பட்டபோதும், பலத்த எதிர்ப்பு வந்ததும் தனக்கு தெரியாமலேயே அந்த வளைவு இடிக்கப்பட்டதாக சொல்லி, மீண்டும் அதை அதே இடத்தில் மறு நிர்மாணம் செய்தார்.

தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவுவதை எதிர்த்து தமிழகம் முழுதும் பொதுமக்கள் பரவலாக சாலையில் இறங்கி மறியல் செய்தவுடன், தமிழகத்தில் இப்படி ஒரு மின்வெட்டு நிலவுவதை அமைச்சர்கள் என் கவனத்துக்கு கொண்டுவரவேயில்லை. எனக்கு இந்த விஷயமே தெரியாது என சொல்லி கைதட்டல் வாங்கிக்கொண்டார்.

சமீபத்தில் கூட, கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு தெரியாமலேயே சிலர் பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுத்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பின்னர் அப்படி தான் பேசவில்லை என்றொரு சிறிய அறிக்கையும் வெளியானது.

அண்ணா நூலக கட்டிடம் திருமணவரவேற்புக்கு வாடகைக்குவிட்டது, ராணிமேரி கல்லூரி தலைமை செயலகமாக மாற்றப்பட முயற்சித்தது, கண்ணகி சிலை அகற்றப்பட்டது என முதல்வருக்கு தெரியாமலேயே நடைபெற்ற நிகழ்வுகள் பல பல.

ஒரு விஷயத்துக்காக அவரை பாராட்டவேண்டும்.

இப்படி எல்லாம் சொல்லி அந்த நேரத்தில் விவகாரத்தை சரிக்கட்டிவிட்டாலும், இது வரை எந்த அதிகாரியையும், அமைச்சரையும் இந்த காரணத்துக்காக அவர் நடவடிக்கை எடுத்ததில்லை. ‘பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? எதுவும் தவறல்லவே’ என்பதை முதல்வர் நன்றாக உணர்ந்து நடுநிலையோடு நடந்துகொண்டிருக்கிறார்.

இவ்வளவு கடுமையான மின்வெட்டு நிலவுவதை தன்னிடம் மறைத்து, தன்னை ஆருயிர் அன்பு சகோதரியாக கொண்டாடும் தமிழக மக்களை வாட்டி வதைத்த மின் துறை அமைச்சர் மீதே அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் இருந்தே அவரது தாயுள்ளத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு மிக நெருங்கிய ஒரு அரசு அதிகாரி முன்பு ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். தமிழகத்தில் ஜெ. தலைமையிலான அதிமுக அரசு அமைந்தால் உடனடியாக அமலுக்கு வரும் ஒரே கொள்கை “அதிகாரிகளின் சாதனைகள் என்பது அரசின் சாதனையாக பார்க்கப்படும்; ஆனால் அரசின் தவறுகள் எல்லாம் அதிகாரிகளின் தவறுகளாகவே சித்தரிக்கப்படும்” ஆறுதல் என்னவென்றால், அப்படி சித்தரிக்கப்பட்ட தவறுகளை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் இருக்காது.

எது எப்படியோ, தமிழகத்தின் மிக சிறந்த நிர்வாகி என புகழப்பட்ட ஜெயலலிதா அவர்களின் நிர்வாக பல்டிகள் மக்களுக்கும் மீடியாவுக்கும் பழகிப்போய்விட்டன. அதனால் தான் ஒவ்வொரு முறை அவர் தவறு செய்யும்போதும், அந்த தவறை மற்றவர்கள் மீது தூக்கி எறியும்போதும் யாரும் பெரிதாக எந்த உணர்வும் வெளிப்படுத்துவதில்லை.

அப்படியான ஒரு நிகழ்வாகவே இன்றைய நிகழ்வும் அமையும், இனியும் அமையும் என எதிர்பார்ப்போமாக. ஒரு வழிப்போக்கன் போல காட்சிமாற்றங்களை கண்டு ரசிக்கும் நமக்கு இவை ஒரு நல்ல கேளிக்கை என்பதை தவிர குறிப்பிடத்தக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

Monday, May 27, 2013

அரசு பள்ளியும் ஆங்கில கல்வியும்


 
மீபத்தில் தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து ஆங்கில வழி கல்வியும் வழங்கப்படவேண்டும்.

இந்த அறிவிப்பு வெளியானதும் திமுக தலைவர் தனது முதலாவது கண்டன அறிக்கையை வெளியிட்டு அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தமிழுணர்வாளர்களும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்!

என்னை பொறுத்தவரை அரசின் இந்த அறிவிப்பில் எதிர்ப்பதற்கு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியோடு வரவேற்கவேண்டிய ஒரு அறிவிப்பு இது.

இந்த திட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1982ல் கொண்டு வந்த திட்டம் தான். குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் மட்டும் இருக்கும் இந்த திட்டம் இனி அனைத்து அரசு பள்ளிகளுக்கும், மாநகராட்சி/நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டு இருக்கிறது.

1985 ம் ஆண்டு வரை (எனது ஐந்தாம் வகுப்பு வரை) நான் ஆங்கிலவழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் படித்து வந்தேன். அப்பாவின் வேலை பிரச்சனைகாரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் 6 ம் வகுப்பிலிருந்து தனியார் பள்ளியில் தொடர்ந்து பயில முடியாத நிலை.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் எனது 6 ம் வகுப்பு தொடர்ந்தது. அதுவும் ஆங்கில வழியில். அப்போதே அந்த வசதி இருந்ததை சுட்டிக்காட்டவே இந்த சம்பவத்தை சொல்கிறேன்.

 

குறைந்த கட்டணத்தில், அரசு பள்ளியில் தரமான ஆங்கில கல்வி பெற்றதன் பயன் தான் எனது இன்றைய வளர்ச்சி என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு!

ஆங்கிலவழி கல்வி ஏன்?

இந்தியா மிக வேகமாக வளரும் நாடு. பல்வேறு நாடுகளுடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வர்த்தக தொடர்புடையவர்கள் தான் நாம் எல்லோருமே. எனவே எந்த ஒரு விஷயத்துக்கும் நமக்கு ஆங்கில அறிவு அவசியமாகிவிட்டது.

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செல்ஃபோன் வாங்கினாலே அதன் வழிகாட்டி புத்தகத்தை படித்தறிந்துகொள்ள ஆங்கிலம் தேவை. தமிழகத்துக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கும் புழுக்கள் அல்ல நாம். பிற மாநிலங்கள் பயணிக்கையிலும், பிற நாடுகள் கடக்கையிலும் நமக்கு ஆங்கிலம் அவசியம் ஆகிறது.

ஆங்கில அறிவு என்பது கிட்டத்தட்ட அடிப்படை தகுதி என்கிற அளவிற்கு இன்று ஆகிவிட்டது. எந்த ஒரு தகவலும் ஆங்கிலம் இன்றி வருவதில்லை.

தாய்மொழியிலேயே பயின்றால் என்ன குறை?

ஒரு சாரார் தங்களது வழக்கமான குதர்க்க கேள்விகளை முன்வைத்து வாதாடுவது உண்டு. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் இல்லை. சீனா போன்ற நாடுகள் முழுமையாக தாய்மொழி கல்வி தானே அமல்படுத்தி இருக்கின்றன? அவர்கள் வளரவில்லையா? என்றொரு கேள்வி இணையதமிழுணர்வாளர்களால் சுற்றுக்கு விடப்பட்டு இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமான கேள்வி போல தான் தோன்றும்!

சீனா மிக பெரிய நாடு. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி என்பதால் பரந்து விரிந்த அந்த நாட்டின் எந்த மூலை முடுக்குக்கு சென்றாலும் ஒரு சீனன் தகவல் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாமல் முழு ஆயுள்காலமும் வாழ்ந்துவிட முடியும். வெளிநாடு செல்ல நேர்கையில் மட்டும் தான் அவனுக்கு சிக்கல்.

இந்தியா அப்படி அல்ல. இந்தியா அடிப்படையில் ஒரு நாடு அல்ல. இது மாநிலங்களின் கூட்டமைப்பு. இங்கு வழக்கத்தில் இருக்கும் மொழிகள் 200க்கும் மேல். அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 21.

நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால், தமிழகம் புதுவை தவிர பிற மாநிலங்களுக்கு செல்கையில் நமக்கு நம் தாய்மொழியால் எந்த உபயோகமும் இல்லை. இதே நிலை தான் மற்ற நாடுகளுக்கு பயணிக்கையிலும்.

தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்து புதைந்துகொள்ளும் மனிதர்களுக்கும், தமிழகம் தவிர பிற மாநிலங்களோடோ, பிற நாடுகளோடோ எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ளாத மனிதர்களுக்கும் வேண்டுமானால் தமிழ் போதுமானதாக இருக்கும். ஆனால் பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆகியவற்றுடன் தொழில், பயண தொடர்பு கொண்டவர்களுக்கு தமிழ் போதாது.

இதை இன்னும் கொஞ்சம் சுருக்கி பார்த்தால், இந்தியாவில் பயணிக்க ஹிந்தியும், பிற நாடுகளுடன் தொடர்புக்கு ஆங்கிலமும் என்றொரு மும்மொழி கொள்கைக்கு முன்னர் இந்திய அரசு முயற்சி செய்தது நினைவுக்கு வரலாம். ஒருவேளை அந்த கொள்கை வென்றிருந்தால், இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் தத்தம் தாய்மொழியோடு, ஆங்கிலம் ஹிந்தி ஆகிய பொதுமொழியையும் கற்று இந்தியாவுக்கு என்று ஹிந்தியும் பிற நாடுகளுக்கு என்று ஆங்கிலமும் என வழக்கத்திற்கு வந்திருக்கும். இது கிட்டத்தட்ட சீனாவை உதாரணம் காட்டும் ‘தமிழுணர்வாளர்களின்’ கருத்துக்கு உடன்பாடானதாக இருந்திருக்கும்.

ஆனால், நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இரு மொழி கொள்கையே போதும் என உறுதியாக இருந்ததால், மாநிலத்துக்கு தாய்மொழி என்றும், பிற மாநிலங்கள், பிற நாடுகள் என அனைத்துக்கும் பொதுவாக ஆங்கிலம் என்றும் இன்றைக்கு முடிவாகி இருக்கிறது.

இப்போது என்ன அவசியம்?

இதுவரை தமிழகம் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த ஒற்றை மாகாணம். ஆனால் இப்போதோ உலக வரைபடத்தில் மிக முக்கியமான மாகாணம். தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி, உயர் தகுதி இயந்திர உற்பத்தி, என பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்குள்ளவர்களுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தொழில்வாய்ப்புக்கு இப்போதே ஆச்சாரம் இட்டுக்கொண்டிருக்கும் பகுதி.

நம் மக்களுக்கான வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாமும் இது போன்ற பெரும் தொழில் நிறுவனங்களை நம்பி என ஆகிவரும் சூழலில், உலகோடு ஒத்திசைந்து வாழவேண்டும் எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசர அவசிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் அனைவரும் ஆங்கில கல்வி பயின்று அதில் தக்க தேர்ச்சியும் பெறவேண்டும், அது தான் இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் என்பதை இப்போதைய அரசு உணர்ந்து இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

எதிர்கால கல்வி வளர்ச்சி?

ஆங்கிலம் என்பது அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் மட்டுமே பயில முடியும் என்கிற நிலையில் இருந்ததால், நம் மக்களில் 63% பேர் இன்னமும் அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகிறார்கள். இன்றைக்கு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் திறமை இருக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததால் தான் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறோம் என்கிற ஆணவத்திலேயே பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.

அரசே அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில கல்வி அளிப்பதன் மூலம் இனி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவும், தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பில் தன்னம்பிக்கையுடன் போட்டியிடவும் ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்படும்.

ஆங்கில கல்வி அறிவு இல்லாததால் மேல்படிப்பு படிக்க தயங்கி 12ம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டிய நிலை மாறி அனைவருமே பட்டதாரியாகவும் இது அடிப்படை வாய்ப்பாக அமையும்.

இதன் மூலம் கல்வி வளர்ச்சியும் மேம்படும். தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கமும் மட்டுப்படும். ஊரக மாணவர்களும் நகர மாணவர்களுக்கு நிகரான கல்வியறிவு பெறுவார்கள்.

இப்படியான ஒரு திட்டத்தை கண்டிக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, நம் மாணவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வளர்ச்சியடைய முடியாமல் செய்ய விரும்பும் சிறுமதியாளர்கள் என்றும் முத்திரை குத்தப்படவேண்டியவர்களாகின்றார்கள்.

*** **** **** ****

பிற்சேர்க்கை : 17 ஆண்டுகளுக்கு பின் என் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்த நினைவலைகள். புகைப்பட தொகுப்பு http://www.facebook.com/media/set/?set=a.1210434535992.2034092.1082597225&type=3

Printfriendly