Wednesday, December 30, 2020

ரஜினியின் முடிவு - இனி என்ன?

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வந்து உள்ளது.

அரசியலுக்கு வருவார் ரஜினி, தமிழகத்தை ஆட்சி செய்வார் என்ற அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ரஜினி எனும் பிம்பத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைத்த சில அரசியல் இயக்கங்களையும் ஒரு சேர முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக, ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து விடுவேன்.. அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என சொல்லி இருந்தார். 

பாஜகவின் "அறிவுசார்" அணியின் தலைமை பொறுப்பில் இருந்த திரு.அர்ஜுன மூர்த்தியை அந்த பதவியில் இருந்து பாஜக "விடுவித்து" அவர் ரஜினியுடன் இணைந்து ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் தலைமை ஒருஙகினைப்பாளர் ஆக பொறுப்புக்கு கொண்டு வந்தார்.

ரஜினி சார்பாக கட்சி பெயர் பதிவு, ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு என்றெலலாம் வந்த செய்திகள் அவர் அரசியலுக்கு வருவதில் தீவிரமாக இருப்பதாக நம்ப வைத்தன.

ஆனால் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை முடிவு செய்து அறிவித்து விட்டார். இது இறுதி முடிவா அல்லது வழக்கமான "மாறுதலுக்கு உட்பட்ட" முடிவா என்பது தெரியவில்லை.

ரஜினியின் இந்த முடிவுக்கு பிறகு தமிழக தேர்தல் களம் எப்படி இருக்கும்?

ரஜினி கட்சி தொடங்கி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இட வேண்டும் என்பதில் பாஜக தான் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. அதற்கான கணக்கீடுகள் இல்லாமல் இல்லை.

இன்றைய சூழலில் திமுக மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி திரு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என மக்கள் மனநிலைக்கு வந்து விட்டனர்.

திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களும், நடுநிலை ஓட்டுக்களும் திமுகவுக்கு போகாமல் தடுக்க வேண்டும்.

எனவே ரஜினி கட்சி ஆரம்பிப்பது, அதிமுக & பாஜக கூட்டணிக்கு மிக அவசியமாக இருந்தது.

திமுக & அதிமுகவை விரும்பாத நபர்கள் வாக்கு அளிக்க ஒரு நம்பிக்கையான முகம் தேவை ஆக இருந்தது. எனவே பாஜகவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தே ரஜினியின் பிம்பத்தை மெருகேற்றும் அறிக்கைகள் வெளிப்படையாக வர தொடங்கின.

ரஜினி மிக நல்லவர். மக்களுக்கு ஏதாவது செய்ய ஆசை படுகிறார், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என குருமூர்த்தி போன்ற தீவிர பாஜக ஆதரவாளர்கள் சொல்லியது எல்லாம் பாஜக ரஜினியை எதற்காக முன்னிறுத்திக் கொண்டு உள்ளது என்பதை புரிய வைத்தது.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு, பாஜகவின் தலைவர்கள் வெளிப்படையாக அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தனர். 

"மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தில் இருந்து தான் பொங்கல் பரிசை அதிமுக தருகிறது" என்றும்

"கார் டயரை கும்பிடும் தலைவர்களை கொண்ட கட்சி" என்றும்

"தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் டெல்லி தலைமை தான் அறிவிக்கும். அதிமுக அறிவிப்பை ஏற்க முடியாது" என்றும்

"பாஜகவுக்கு அமைச்சர் பதவி கட்டாயம்" என்றும்

பாஜக துணிச்சலாக பேச ரஜினியின் வருகை ஒரு முக்கிய காரணம்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி ரஜினி தலைமையில் அணி அமைக்க பாஜக காய் நகர்த்துவது போன்ற ஒரு தோற்றம் தெரிய தொடங்கியது.

அதிமுக சமீபத்தில் நடத்திய தேர்தல் பரப்புரை தொடக்க கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தது, அவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்ததை காட்டுகிறது.

இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்ததில் வியப்பு இல்லை.

அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே பாஜக ஆதரவாளர்கள் ரஜினியை விமர்சிக்கத் தொடங்கியது அவர்களது பெருத்த ஏமாற்றத்தை காட்டுகிறது.

இனி என்னென்ன வழிகள் உள்ளது?

பாஜகவுக்கு அதிமுகவுடன் இணைவது தான் அதன் வளர்ச்சிக்கு நல்லது. எனவே அதிமுக குறித்து விமர்சித்து பேசிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிமுகவை சமாதானப்படுத்தும் வழிகளை தான் முதலில் முயற்சி செய்வார்கள் என நினைக்கிறேன்.

அதிமுக பாஜகவின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதிமுகவின் ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை திமுக சமீபத்தில் தான் ஆளுநரிடம் சமர்ப்பித்து இருக்கிறது. அதை வைத்து பாஜக அதிமுகவை பணிய வைக்கக் கூடும்.

ஒருவேளை அதிமுக பாஜக பிரிந்தால், பாஜக அடுத்ததாக மக்கள் நீதி மையத்தின் உதவியை நாடும். அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டி இடலாம். ஆனால் இதற்கான வாய்ப்பும் இது நடந்தால் வெற்றி வாய்ப்பும் மிக மிக குறைவு.

இந்த நிமிடம் தமிழக தேர்தல் களம் திமுக & அதிமுக இருவருக்கானது.

அவர்களை தலைமையாக கொண்டு இயங்கும் கட்சிகள் அணி சேர்ந்து இரு முனை போட்டியாக தேர்தல் களம் அமையும் என்றே எதிர் பார்க்கிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு சாதாரண கட்சி. புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் பெற்று இருக்கும் மக்கள் ஆதரவு அளவு கூட மக்களிடம் ஆதரவு இல்லாத கட்சி.

எனவே இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதிமுகவின் கீழ் தேர்தலை சந்திப்பது தான் பாஜக எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருக்கும்.

ரஜினி தனது முடிவை மீண்டும் மாற்றி கொள்ளாத வரை, தமிழக தேர்கள் களம் அதிமுக & திமுக அணிகளுக்காக களமாக தொடரும்.

பார்ப்போம்

Friday, December 11, 2020

ரஜினியின் அரசியல் வருகை

1990 க்களின் துவக்கத்தில் இருந்து இதோ வர்றேன் அந்தோ வர்றேன் என போக்கு காட்டி கொண்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு வழியா ஒரு அறிவிப்பை கொடுத்து இருக்கார்

அதாவது, ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் (ஜனவரி 2021 என்றுதான் நினைக்கிறேன்) அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

சோ, அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்கிற அளவில் இப்போது வந்து நிற்கிறது.

இது எதிர்வரும் தமிழக தேர்தல் 2021 இல் என்ன மாதிரியான விளைவுகளை, மாற்றத்தை, ஏமாற்றத்தை, பாதிப்பை தரக்கூடும் என பார்ப்போம்.
அரசியலுக்கு வர தயக்கம் காட்டி பேசி இரண்டு நாளுக்குள் அரசியலுக்கு வருவதை அறிவிக்கும் அளவுக்கு அவருக்கு என்ன பிரஷர் என்கிற குழப்பமான கேள்வியை தவிர்த்து விட்டு போவோம்

தமிழகத்தில் 234 தேர்தலிலும் தனித்து போட்டி இடப்போவதாக ரஜினி ஏற்கனவே சொல்லி இருந்தார். எனவே அவர் எந்த அணியிலும் சேர மாட்டார் என தோன்றுகிறது.

ஆட்சி மாற்றம் தான் குறிக்கோள் என சொல்லி இருப்பதையும் வைத்து பார்த்தால் அவர் அதிமுக & பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகத் தான் கட்சி தொடங்குவதாக தோன்றும்.

ஆனால், பாஜக அவரை ஆதரித்து மகிழ்ந்து துள்ளி குதிப்பதை பார்த்தால் அஜெண்டா வேறு ஏதோ ஒரு ரூட்டில் பயணிப்பது புரியும்.

இப்போதைய சூழலில் அதிமுக ஸ்ட்ராங்கா இல்லை. திமுக மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட நிச்சயம் ஆகிவிட்டது போல ஒரு தோற்றமும் தெரியத் தொடங்கி இருக்கிறது.

பாஜக + அதிமுக அணிக்கு வாக்குகளை கவரக்கூடிய முகம் எதுவும் இல்லை. திமுக மக்களிடம் பெற்று வரும் அசுர பலம் கொண்ட ஆதரவை முறியடிக்க தகுந்த வழிகள் எதுவும் பாஜக + அதிமுக கூட்டணியில் இல்லை. மேலும் அதிமுக மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.

இப்போது இருக்கும் ஒரே வழி.. அதிமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை மொத்தமாக திமுக பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான் அதிமுக + பாஜக வெல்ல ஒரே வழி

எனவே, கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யமும், ரஜினி தலைமையில் "பெயர் சூட்டப் படாத" அவரது கட்சியும் எல்லா 234 தொகுதிகளிலும் போட்டி இடுவது தான் பாஜக + அதிமுக வெல்ல ஒரே வழி

அதிமுக மீது அதிருப்தி கொண்டவர்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டு ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை மாற்றி, கமலுக்கு அல்லது ரஜினிக்கு கூட போடலாமே என்கிற சாய்சை மக்களுக்கு கொடுத்தால் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும்.

அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் திமுகவை நோக்கி செல்லாமல், கமல், ரஜினி, சீமான் என பிரிவது திமுகவை பலவீனம் ஆக்கும். 

அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் எந்த கட்சியும் சாராத நடுநிலை வாக்குகளும் ரஜினி எனும் ஆளுமை மீதான ஈர்ப்பால் அவருக்கு ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. இதை குறி வைத்தே ரஜினி நல்லவர் வல்லவர் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என பாஜக தரப்பில் இருந்தே ரஜினியின் இமேஜை பூஸ்ட் செய்யும் பணிகள் நடக்கிறது.

ரஜினியின் "பெயர் அறிவிக்காத கட்சி"யின் தலைமை ஒருங்கிணப்பாளர் பதவிக்கு பாஜகவில் இருந்து ஆளை அனுப்பி வைத்த நிகழ்வும், குருசாமி போன்றோர் ரஜினி குறித்து கட்டமைத்து வரும் உயர் பிம்பமும் அதை ஆமோதிப்பது போலுள்ளது.

எனவே கமல் & ரஜினி இருவரும் அதிமுக+பாஜக கூட்டணி வெற்றிக்காக மறைமுகமாக செயல்படுவதாக ஒரு தோற்றம் தான் இன்றைய சூழலில் இருக்கிறது.

ஒருவேளை, ரஜினி உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவரது செயல்பாடு வேறு மாதிரி இருக்கும்.

வெறும் சினிமா புகழ் வைத்து அரசியலில் வாக்குகள் பெற முடியாது. அப்படி இருந்தால், சிவாஜி எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் தேர்தலை சந்திக்கும் முன்பே, மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துவது, மக்களுக்காக குரல் கொடுப்பது, மக்களோடு மக்களாக நிற்பது என தங்கள் இமேஜை ஒரு நடிகர் என்பதில் இருந்து மாற்றி, மக்களுக்கான தலைவராக உருமாற்றி பிறகு தான் தேர்தலில் வென்றார்கள்.

எனவே, சினிமா புகழில் யாரும் வென்றிடவில்லை. அரசியல் களமாக தந்து களத்தை மாற்றி அதில் போராடி அதில் இருந்து தான் வென்று வந்தார்கள்.
எந்த ஒரு அரசியலும் களத்தில் நின்று தான் செய்ய முடியுமே தவிர வீட்டு போர்டிகோவில் இருந்தோ ஆபீஸ் அறையில் இருந்தோ டிவி நிகழ்ச்சிகளில் போடியத்தில் இருந்தோ நிகழ்த்த முடியாது.

எனவே ரஜினி உண்மையிலேயே ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைத்தால்.. அவர் செய்ய வேண்டியது எல்லாம்:

- இப்போதைய மக்கள் பிரச்சனைகளில் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்

- மக்கள் பாதிக்கப்படும் போது (இயற்கை சீற்றங்கள்) அவர்களோடு நின்று ஆறுதல் சொல்ல வேண்டும்

- மக்களின் தேவைகளுக்கு அவர்களோடு நின்று குரல் கொடுக்க வேண்டும்

- ஆளும் அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கும் போது அதை எதிர்த்து போராட வேண்டும்

இப்படி எல்லாம் செய்தால் தான் அரசியல் களத்தில் வெல்ல முடியுமே தவிர வெறும் பேச்சுக்கள் உதவாது

எனவே.. முதலில்.. ரஜினி அவர்களது நோக்கம்

மக்களுக்காக ஆட்சி அமைத்து நல்லது செய்வதா

அல்லது

அதிமுக+பாஜக அதிருப்தி வாக்குகளை பிரித்து அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா என்பதை அவர் தெளிவு படுத்தி பேசுவது நல்லது

அது வரை இது வெறும் "அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்படும் அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும்" என்கிற அறிவிப்பாக மட்டுமே நீடிக்கும்

Tuesday, September 29, 2020

TCS on Goods - புதிய வரி

TCS on Goods (பொருட்கள் விற்பனைக்கான தொகை வசூலுக்கு வருமான வரி) அக்டோபர் 1 முதல் இந்தியாவில  அமல் ஆகிறது.

இந்த புதிய சட்டம் சமீபத்தில் நிதி அமைச்சக அறிவிக்கை மூலம் புதிய சரத்தாக 206C (1H) எனும் பிரிவை கொண்டு வந்து அமல் செய்யப்படுகிறது


வரும் அக்டோபர் 1 முதல் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வாங்கும் தொகையில் இருந்து TCS பிடிக்க வேண்டும்

அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்

உங்க கிட்ட பொருள் வாங்கும் கஸ்டமர்.. போன வருஷம் உங்க கிட்டே இருந்து ₹50 லட்சத்துக்கு அதிகமா பொருட்கள் வாங்கி இருந்தாலோ, இந்த வருஷம் எப்ரல் மாதத்தில் இருந்து உங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினாலோ நீங்கள் அவரிடமிருந்து இந்த TCS பிடிச்சு அரசுக்கு கட்டணும்

எல்லா விதமான பொருட்களுக்கும் இது பொருந்தும்

பொருட்களின் விற்பனைக்கு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் தொகையில் 0.075% பிடிக்கணும். இது மார்ச் 2021 வரை தான். அதன் பின் 0.1% பிடிக்கணும். இது உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN/Aadhaar எண்ணை உங்களிடம் கொடுத்தால் தான்.

உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN / Aadhaar எண்ணை உங்களுக்கு தரலை என்றால் 1% TCS பிடிச்சு அரசுக்கு கட்ட வேண்டும்

நீங்கள் கொடுக்கும் பில்லிலேயே இந்த TCS 0.075% சேர்த்து அவரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். விற்பனை செய்பவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.

பொருளை வாங்குபவரும் இந்த TCS ஐ தனது IT ரிட்டர்ன்ஸ் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அவருக்கும் நஷ்டம் இல்லை.. (வருமான வரி தாக்கல் செய்தால்)

இதில் வழக்கம் போல சில குழப்பங்கள் இருக்கின்றன.

குழப்பம் 1: TCS மொத்த விற்பனை விலையில் கணக்கு செய்யணுமா? வரிக்கு முந்தய பொருளின் விலைக்கு மட்டும் கணக்கு செய்யணுமா? பொதுவாக வரிக்கு முந்தய விலைக்கு தான் வருமான வரி வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய வரிக்கான notification இல் மொத்த வருவாய் என சொல்லி இருப்பதால் இந்த குழப்பம்.

குழப்பம் 2: விற்பனை செய்யும் போதே பிடிக்கணுமா? விற்பனை தொகை வசூல் ஆகும்போது பிடிக்கனுமா? TDS என்பது பணம் கொடுக்கும்போது பிடிக்கும் வரி. அதுபோல TCS என்பது பொருள் கொடுக்கும்போது கூடுதலாக எடுத்துக்கொள்ளும் வரி. ஆனால் இந்த புதிய வறிக்கான Notofication இல், பணம் பெறும்போது கூடுதலாக வசூல் செய்ய வேண்டிய வரி என சொல்லப்பட்டு உள்ளதால் ஒரு குழப்பம். பில்லில் சேர்க்காமல் எப்படி பணம் பெறும்போது வரி வசூல் செய்வது? 

இதை அரசு இன்று வரை தெளிவு படுத்தல. (நாளை மறுநாள் அமலாகுது)

பொதுவான கருத்தாக முழு பில் தொகைக்கும் பிடிக்கலாம்.. பில்லிலெயே சேர்த்து வசூலிக்கலாம் என்றும் பலரும் முடிவு செய்து இருக்காங்க

இதில் நமக்கு என்ன பாதிப்பு?

நாம் ₹50 லட்சத்துக்கு பொருள் வாங்குவதாக இருந்தால் PAN/Aadhaar கொடுத்தால் குறைந்த TCS பிடித்தம்.

இந்த ₹50 லட்சம் கணக்கும் ஒரே முறையில் செய்யணும் என்று இல்லை. ஒரு வருஷத்தில் பலமுறை கொஞ்சம் கொஞ்சமா பொருள் வாங்கினாலும் எப்போது அதன் மொத்த தொகை ₹50 லட்சத்தை தாண்டுதோ அப்போ முதல் TCS பிடிக்கணும்.

இதில் யாரெல்லாம் வருவார்கள் என யோசித்தால், மளிகை கடை, ஹார்டுவேர், மருந்து கடை, வியாபாரிகள், சிறு குறு தொழில் செய்வோர் என பலரும
 ஒரு மொத்த வியாபாரியிடம் இருந்து ஒரு வருஷத்தில் பல முறை கொள்முதல் செய்த பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினால் இந்த வரி செலுத்த வேண்டி வரும். 

இப்போது பல மளிகை கடையினரும
 வருமான வரி செலுத்துவது இல்லை. இனி இந்த 0.075% தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால் அவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

இவை தவிர அனைத்து வகையான பொருட்களுக்கும் இது பொருந்தும் என்பதால் மின்னணு பொருட்கள், சூப்பர்மார்கெட், என எல்லோருக்கும் இந்த வரி அமலுக்கு வரும்.

விற்பனை செய்பவர் தனது எல்லா வாடிக்கையாளரின் விவரத்தையும் தொடர்ந்து கவனிச்சிட்டே வரணும்.

மொத்த விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர் போன்றோர் அவர்களிடம் பொருட்கள் வாங்கி போறவங்க கணக்கை தனியா கவனிச்சிட்டு வரணும். எப்போ ₹50 லட்சம் தான்டுதோ அப்போ TCS பிடிக்கணும்

அதே போல நமக்கு பல கடைகள் இருந்தால் (வசந்த் அண்ட் கோ மாதிரி) ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு கடையில் வாங்கினாலும்..அதன் மொத்த விற்பனை தொகை ₹50 லட்சத்தை தாண்டினால் TCS பிடிக்கணும். இதை கண்காணிப்பத
 மிக கடினமான செயல்.

அதனால் வாடிக்கையாளர் database ரெடி செய்து எல்லா கடைகளின் விற்பனையை தொடர்ச்சியாக கவனிச்சு முடிவு எடுக்கணும்

இன்னும் 2 நாள் தான் இருக்கு என்பதால் நிறைய பேர் இன்னும் தங்கள் Accounting System ரெடி செய்திருக்க மாட்டார்கள். புதிய வரி வசூலிப்பதற்கான modifications செய்யாமல் பலரும் தவிக்கிறார்கள்.

இதனை செய்து தரவேண்டிய நிறுவனங்கள் லாக் டவுன் காரணமாக பயணிக்க முடியாமல் இந்த configuration செய்ய முடியாமல்.. என எல்லாம் அப்படி அப்படியே நின்று கொண்டு இருக்கு.

அரசு உரிய விளக்கங்கள
 கொடுக்குமா?

கால அவகாசத்தை நீட்டிக்குமா என எல்லோரும
 எதிர்பார்க்கிறார்கள்

கால அவகாசம் நீட்டிக்கப் பட்டால் நல்லது

Thursday, August 20, 2020

தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகர்

மீண்டும் கிளம்பி இருக்கிறது, தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் தேவை எனும் விவாதம்.

அதிமுக அமைச்சர்கள் சிலரே மதுரையை இரண்டாம் தலைநகரம் ஆக்க வேண்டும் என கருத்து சொன்னதோடு இந்த விவாதம் மேலும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

ஏற்கனவே 80 களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி காலத்திலேயே இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. 
திருச்சியை தலைநகரம் ஆக்கவெண்டும் என சொல்லப்பட்டதற்கு அது மாநிலத்தில் நடுநாயகமாக இருப்பதும் ஒரு காரணம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அரசு பணிகளுக்காக ஒருவர் சென்னை வரவேண்டும் என்றால் ஒரு வழி பயணமே 15 மணி நேரம் எடுத்தது (1980 ஆம் ஆண்டுகளில்)

ஒரு சாதாரண வேலைக்காக மூன்று நாட்கள் தேவைப்பட்டது.

எனவே திருச்சி என்றால் தூரம் குறையும். வடக்கே சென்னை, தெற்கே குமரி, மேற்கே கோவை, கிழக்கே நாகை என எந்த பகுதியில் இருந்தும் ஏழு மணி நேரத்தில் திருச்சியை அடையலாம் என்பது அதன் பிளஸ் பாய்ண்ட்.

ஆனால், என்ன காரணத்தாலோ, இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் துவங்கி இருக்கும் இரண்டாம் தலைநகர் விவாதம் திருச்சியை அல்லாமல் மதுரையை மையமாக வைத்து துவங்கி இருக்கிறது.
சமீபத்தில் அதிமுகவில் இரு அணிகளுக்காக மறைமுக பலப்பரீட்சை பனிப்போர் ஏற்பட்டதில் ஒரு அணியினர் தாங்கள் பலமாக இருக்கும் மதுரையை தலைநகரம் ஆக்கவேண்டும் என ஆரம்பித்து, அதனால் இந்த விவாதம் மீண்டும் கிளப்பியதாக சொல்கிறார்கள்.

ஆனால் தமிழகத்துக்கு உண்மையிலேயே இரண்டாம் தலைநகரம் தேவையா?

சென்னையில் அரசு துறை அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன.

தலைமை செயலகம் காமராஜர் சாலையில் இருக்கிறது. சில அரசு துறைகள் ஓமந்தூரார் தோட்டத்தில். சிப்காட் கிண்டியில். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எழும்பூரில். நெடுஞ்சாலை துறை அடையாறில். இவை போல பல

இதனால் தொழில் ரீதியாக அரசு அலுவலகங்களுக்கு வருவோர் சென்னை முழுவதும் அங்கும் இங்குமாக அலைய வேண்டிய அல்லல் உள்ளது.

எனவே இதை தீர்க்கும் விதமாக, 

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னைக்கு அருகில் துணை நகரம் ஏற்படுத்தி அங்கே அரசு அலுவலகங்கள் எல்லாம் அமைக்கலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டது.

பின்னர் அந்த துணை நகர திட்டம் அரசு அலுவலகங்களுக்கு என்று அல்லாமல் பொதுவாகக் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த துணை நகரமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி, ஒரகடம், திருமழிசை, திருப்பெரும்புதூர் என பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் திருமழிசை முடிவானது. ஆனால் இன்னமும் பணிகள் தொடங்கவில்லை.

எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைய வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்ற சமையத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அந்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து, அதன் மினியேச்சர் வெர்ஷனாக, மாவட்ட அரசு அலுவலகங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மாவட்ட தலைநகரில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை நகருக்கு சற்று வெளியே எல்லா துறைகளுக்கும் ஒரே இடத்தில் அலுவலகங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகம் முழுவதையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தார்.

திருவள்ளூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இந்த "ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" எனும் முறை கொண்டு வரப்பட்டது. புதிய கட்டிடங்கள், நவீன தகவல் தொழில்நுட்ப ஏற்பாடுகள், மாநாட்டு கூடம் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தது என்பதால் மாவட்ட நிர்வாகம் விரைவாக முடிவுகள் எடுக்க முடிந்தது.

அரசின் தேவைகளுக்காக வரும் பொது மக்களுக்கும் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருப்பது வேலையை சீக்கிரம் முடிக்க உதவியது. அலைச்சலும் இல்லை.

இதன் அடுத்த வடிவம் தான் மாநிலத்துக்கு இரண்டாம் தலைநகர் கோரிக்கை. சென்னையில் நெரிசல் அதிகம் இருப்பதாலும், அரசு அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடப்பதாலும் வேறொரு நகரில், ஒரு புதிய தலைநகர் ஏற்படுத்தலாம் என்கிற யோசனை இப்போது கிளம்பி உள்ளது.
இது இப்போது அவசியமும் கூட. சென்னைக்கு வரும் மக்களில் தினசரி தேவைகளுக்காக வந்து செல்பவர்கள் தான் அதிகம். ஒரு நாளைக்கு 20 லட்சம் பேர் வரை அலுவலக விஷயமாக வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். 

எனவே மதுரையில் அல்லது திருச்சியில் தலைநகர் கட்டமைப்பை ஏற்படுத்துவது நல்ல பலனை தரும்.

ஏற்கனவே உள்ள நகரத்தில் தலைநகரை ஏற்படுத்துவதை விட புதிதாக ஒரு இடத்தில் ஏற்படுத்துவது இன்னமும் நல்ல பலனை தரும் என்பது என்னுடைய கருத்து.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி என ஒரு புதிய நகரமே நிர்மாணிக்க முடிவெடுத்தது போல, திருச்சி அருகில், உதாரணமாக பெரம்பலூர் பகுதியில் அல்லது விராலிமலை பகுதியில் ஒரு புதிய சிறு நகரமே ஏற்படுத்தி அங்கே அனைத்து அரசு அலுவலகங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புக்கள், அவர்களது பிள்ளைகளுக்கான கல்வி கூடங்கள் என அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைக்கலாம்.

மாநிலத்தில் உள்ள பிற நகரங்களில் இருந்து இணைப்பு சாலைகளும் அமைத்தால், சென்னை நெரிசலும் குறையும், தென்கோடி மக்கள் அரசு பணிகளை 6 மணி நேரத்துக்குள் வந்து முடிக்க முடியும், அனைத்து சேவைகளும் ஒருங்கே ஒரே இடத்தில் கிடைக்கவும் வழி செய்யும். அந்த பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கும் இது உதவும்.

தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் என்பது அவசியமான யோசனை தான். ஆனால் அது எங்கே எப்படி செயல்படுத்த படுகிறது என்பதை பொறுத்தே அதன் பயன் இருக்கும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.








Friday, August 7, 2020

தமிழக ஈ-பாஸ் குழப்பங்கள்

கொரோனா பரவ ஆரம்பித்த நேரத்தில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதால், மத்திய அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிக்க ஈ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது.

அந்தந்த மாநிலத்தில் தனித்தனியாக அதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டு யார் யாருக்கு பயணிக்க தகுதி உள்ளதோ அவர்களுக்கு மட்டும் இணைய வழியே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது

ஈ-பாஸ் ஏன் வழங்கப்படுகிறது?

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இது தான் பொதுவான விதி. ஆனால் பின்னர் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பொழுது, அத்தியாவசிய தேவைகள், மருத்துவ அவசரம், திருமணம், மரணம், தொழில் என பல்வேறு காரணங்களுக்காக பலரும் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க வேண்டி உள்ளது. அப்படி பயணிப்போர் மூலமாக அந்த இடத்தில் தொற்று பரவாமல் இருக்க, அல்லது அந்த இடத்தில் இருந்து, பயணிப்பவருக்கு தொற்று பரவாமல் இருக்க, அவரை கண்காணிக்க இந்த பாஸ் அவசியம் ஆகிறது.

யார் எங்கே இருந்து எங்கே என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்பதை வைத்து அவர்களை கண்டுபிடிப்பதும், எச்சரிப்பதும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. அதற்காக, பயணிப்பவரின் மொபைல் எண், அடையாள அட்டை ஈ-பாஸ் வாங்க கட்டாயமாக்கப்பட்டது.

இவை தவிர பிறர் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதி இல்லை. 

யார் யாரெல்லாம் பயணிக்கலாம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அது அந்தந்த மாநிலத்தின் நோய் தொற்று பரவல், மாநிலத்தின் சமூக பொருளாதார நிலை ஆகியவை கவனத்தில் கொண்டு அந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளும்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஈ-பாஸ் வழங்க கொடுக்கப்பட்டு இருக்கும் தகுதிகளின் படி

நெருங்கிய உறவினர்களின் மரணம் - மரண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை

மருத்துவ அவசர சிகிச்சை - இதற்கு மருத்துவரின் பரிந்துரை, மருத்துவ ஆவணம் போன்றவற்றை நாம் இணைக்க வேண்டும். அவை அவசர சிகிச்சை எனில், உள்ளூரில் அந்த சிகிச்சை இல்லை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தான் செல்லவேண்டும் எனில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மாவட்டம் பயணிக்க வேண்டும் என்பதற்காக, சாதரண மருத்துவ பரிந்துரை ஆவணத்தை வைத்து அனுமதி கேட்பது போன்றவற்றுக்கு அனுமதி தருவதில்லை.

நெருங்கிய உறவினர் திருமணம் - திருமணத்தில் கலந்து கொள்ள 50 பேருக்கு அனுமதி உள்ளதால், அதற்காக வரும் நெருங்கிய உறவினர்களுக்கு ஈ-பாஸ் கொடுக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க திருமண அழைப்பிதழ் இணைக்க வேண்டும். நண்பர்கள், தூரத்து உறவினர்கள் போன்றோருக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை.  அதே போல சமையல், மேடை அலங்காரம், ஃபோட்டோகிராபர், இசைக்கச்சேரி செய்பவர் போன்ற திருமணம் தொடர்பான தொழில்கள் செய்வோர் திருமண பத்திரிகையை இணைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கேட்டாலும் கொடுப்பதில்லை. 50 பேருக்கு மேல் ஆட்கள் கூட அனுமதி இல்லை என்பதாலும், இந்த தொழில்கள் உள்ளூர் மாவட்டத்திலேயே கிடைக்கும் சேவைகள் என்பதாலும் வெளிமாவட்ட ஆட்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

பத்திரப்பதிவு செய்ய உள்ளவர்கள் - பிறமாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், அதற்கான நேர ஒதுக்கீடடு அனுமதி கடிதம் இணைத்தால் ஈ-பாஸ் கிடைக்கும்

அரசு பணிகளுக்கு டெண்டர் எடுத்து அந்த பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தால், அந்த பணியை மேற்பார்வையிட செல்லும் நபர்களுக்கு அனுமதி உண்டு

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்தால் அவர்கள் வேலைக்கு வந்து செல்ல தொழிற்சாலை / தொழில் நிறுவனம் மூலமாக விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி உண்டு. தொழிலாளர்கள் நேரடியாக விண்ணப்பிப்பது பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு விடுகிறது.

வேறொரு ஊரில் இருப்போர் சொந்த ஊருக்கு செல்ல - அடையாள அட்டைையில் குறிப்பிடப்பட்டு உள்ள விலாசத்துக்கு போவதற்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அதாவது, அடையாள அட்டைப்படி தூத்துக்குடி விலாசம். சென்னையில் வேலை. சொந்த ஊருக்கு சென்று 'தங்க' Stranded Passengers Return முறையில் விண்ணப்பித்தால் கிடைக்கும். சென்னை விலாசம் கொண்ட அட்டையை வைத்து தூத்துக்குடி செல்ல இந்த காரணத்தை வைத்து விண்ணப்பித்தால் கிடைக்காது. மேலும் மேலே சொன்னபடி சென்னையில் இருந்து தூத்துக்குடி விலாசத்துக்கு முறையாக பாஸ் வாங்கி சென்ற ஒருவர், சில நாட்களில் மீண்டும் அங்கிருந்து சென்னைக்கோ வேறொரு ஊருக்கோ செல்ல விண்ணப்பித்தாலும் கிடைக்காது. ஏனெனில் Stranded Passenger Return மூலம் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வர மட்டுமே அனுமதி. 

விமானப்பயணம் செய்வோருக்கு உறுதியான விமான பயணச்சீட்டு இணைத்தால் பாஸ் வழங்கப்படும்.

இவை தான் தமிழகத்தை பொறுத்த வரை அனுமதிக்கப்பட்ட பயணங்கள்.  இந்த பாஸ் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி உடைய விண்ணப்பங்கள் அங்கீகரிக்க ஒவ்வொரு மாவட்ட அட்சியர் அலுவலகத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி கொடுப்பார். 

முன்பு எந்த மாவட்டத்தில் இருந்து புறப்படுகிறீர்களோ அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் அனுமதி கொடுத்து வந்தது. ஆனால் அதில் சில முறைகேடுகள், பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் போய் அதிகாரியை அணுகி தகுதியற்ற விண்ணப்பங்களுக்குக் கூட அனுமதி வாங்கிய நிகழ்வுகள் நடந்ததாக சொல்லப்பட்டதை தொடர்ந்து, பாஸ் வழங்கும் அதிகாரம் சேரும் ஊரின் ஆட்சியர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.

இதன் மூலம் பாஸ்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக மதுரை மாவட்டத்தில் ஒரு திருமணம் என வைத்து கொள்வோம். வேலூர், கோவை, நெல்லை, சேலம் மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தால் முன்பு அந்தந்த மாவட்டங்களில் அனுமதி கொடுத்ததால் எல்லோருக்கும் கிடைத்தது. இப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் அனுமதி கொடுக்கும் என்பதால் எல்லா விண்ணப்பமும் ஒரே அதிகாரி பரிசீலித்து 50 பேர் எண்ணிக்கை, நெருங்கிய உறவினர் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனுமதி கொடுப்பார். குறிப்பிட்ட திருமண நிகழ்வுக்கு எத்தனை பேர் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள் என்பது ஒரே இடத்தில் டிராக் செய்யப்படும். 

திருமணம் என்பது உதாரணத்துக்கு சொன்னது, எல்லா காரணங்களுக்கும் சேருமிடத்து ஆட்சியர் அலுவலகம் முடிவு எடுப்பதால் அவர்களால் தெளிவாக எதை அனுமதிக்கலாம் எதை நிராகரிக்கலாம் என முடிவு எடுக்க முடிகிறது

இவை தவிர விண்ணப்பத்தில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் இருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி 10 வயதுக்கு குறைவான குழந்த்கைகள் வீட்டை விட்டு (மருத்துவ காரணங்கள் தவிர) வெளியே வர அனுமதி இல்லை.

வாகன அடிப்படையிலும் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகம் நிராகரிக்கிறது. சிறிய கார் எனில் 3 பேர், பெரிய கார் எனில் 5 பேர் தான் அனுமதி. அதை விட கூடுதலாக ஆட்கள் இருந்தால், அல்லது பயணகளில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், காவல் துறை, அரசு அதிகாரிகள் போன்றோருக்கு பாஸ் தேவை இல்லை. அவர்களுக்கு சிறப்பு விதி விலக்குகள் உள்ளன. நோய் தொற்று நடவடிக்கை, பொது மக்களுடனான சந்திப்பு, மீட்பு நடவடிக்கைகள் ஆகிய காரணங்களுக்காக அவர்கள் தினசரி மாநிலம் முழுவதும் பயணிக்க அவசியம் இருப்பதால் இந்த விலக்கு.

இதற்கிடையில் சில தனியார் வாகன ஓட்டுனர்கள், தரகர்கள் ஆகியோர் பாஸ் வாங்கி கொடுப்பதாக பணம் வசூலிப்பதும் நடைபெற்றது. அப்படி விளம்பரம் செய்த சிலர் கைதும் செய்யப்பட்டு உள்ளார்கள். 

நாமாக விண்ணப்பிக்கும் பொழுது நம்மை அறியாமல் நிகழும் தவறுகள், மேலும் பலருக்கு விண்ணப்பிக்க தெரியாதது ஆகிய காரணங்களால் ஏஜெண்டுகள் விண்ணப்பித்து கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விண்ணப்பித்தால் மட்டும் தான் கிடைக்கும் என்பது உண்மை அல்ல.

சராசரியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தினசரி 2000 பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் 3000 பாஸ்கள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பாஸ்கள் எல்லாம் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்படுபவை. விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் உள்ள ஏஜெண்டுகள் வாகன ஓட்டுனர்கள் எல்லோரும் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பததை
 அங்கீகரிக்க வைக்கிறார்கள் என்பதோ, ஒரு மாவட்டத்தில் உள்ள ஏஜெண்டுகள், வாகன ஓட்டுனர்கள் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தலையிட்டு பாஸ் வாங்குகின்றனர் என்பதோ நடைமுறையில் சாத்தியமற்றது என்பது சற்றே யோசித்து பார்த்தால் தெரியும். அங்கொன்றம்
 இங்கொன்றுமாக சில நடந்து இருக்கலாம். அவ்வளவே. மற்றபடி ஒரு மாவட்டத்தில் 500 வாகன ஓட்டிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் எல்லா மாவட்டத்திலும் பாஸ் வாங்க ஆட்கள் வைத்து சாதிக்க முடியும் என்பது எதார்த்தம் அல்ல.

சமீபத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னைக்கு வருவதற்கும், சென்னையில் இருந்து போவதற்கும் அத்தியாவசிய காரணங்கள் இல்லாத விண்ணப்பங்களை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை. 

பிற மாவட்ட பயணங்களை பொறுத்தவரை, உதாரணமாக கோவை - நெல்லை, திருவண்ணாமலை - தூத்துக்குடி பொன்றவை, மேலே சொன்ன அனுமதிக்க பட்ட காரணங்களுக்காக கேட்கும் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை.

இப்போது ஈ-பாஸ் முறை தேவையா?

கடந்த 29.06.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது மக்கள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது எனவும் ஈ-பாஸ் முறை தேவை இல்லை எனவும் மாநிலங்களுக்கு உத்தரவு இட்டிருந்தது.

ஆனாலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதை அமல் செய்யவில்லை.
மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் 29.07.2020 அன்று அதே உத்தரவை வலியுறுத்தியது. இதன் பின் சில மாநிலங்கள் ஈ-பாஸ் முறையை நீக்கி விட்டன என்றாலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஈ-பாஸ் முறை தொடர்கிறது.

தினசரி 5000 க்கும் மேல் புதிய நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், மாவட்ட அளவில் மக்களை கட்டுப்படுத்தி வைப்பது இப்போது அவசியம் என்பதாலும், அத்தியாவசிய தேவைக்கான சிலர் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பதாலும் இந்த பாஸ் முறை தமிழகத்தில் தொடர்கிறது.

இது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான், எனினும் சில தளர்வுகளை அளிக்கலாம் என பலரும் வேண்டுகோள் வைத்து உள்ளார்கள்

உதாரணமாக தொழில் துறையினர் தங்கள் தொழில் காரணமாக பொருட்கள் வாங்க, இயந்திரங்கள் பரிசோதிக்க, செர்வீஸ் செய்ய, கிளையண்ட் கம்பெனிகளை ஆய்வு செய்ய என பல விஷயங்களுக்கு பயணிக்க வெண்டி உள்ளது. இவை எல்லாம் ஒன்றிரண்டு நாள் பயணங்கள் தான்.

எனவே கேரளாவில் உள்ளதை போல Short Visit / Regular Visit பாஸ்களை தமிழகமும் அனுமதிக்கலாம். 

அதாவது சிவகங்கையிலிருந்து தொழில் நிமித்தமாக திருச்சி வந்து செல்வோர், ஈரோட்டில் இருந்து கோவைக்கு கொள்முதல் செய்ய வந்து செல்வோர் போன்றவர்களுக்கு அந்த நாளே திரும்ப வர பாஸ் தரலாம். 

கேரளாவிற்கு 8 நாட்கள் வரை சென்று தங்கி திரும்பி வர ஷார்ட் விசிட் பாஸ் உள்ளது. அது போல தமிழகத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டம் குறைந்தது 4 நாட்கள் தங்கி வர பாஸ் வழங்கலம்
.
தினசரி ஒரே ரூட்டில் சென்று வருவோருக்கு ரெகுலர் பாஸ் வழங்கலாம் என்று எல்லாம் கோரிக்கைகள் உள்ளன.

ஆனால் மக்கள் (பாஸ் வாங்கியும், பாஸ் இல்லாமலும்) பயணித்து கொண்டே இருப்பதால் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அரசு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்குமா என்று தெரியவில்லை.

அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்கள் தமிழகத்தின் நோய்த்தொற்று நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதித்தாலும், பொருளாதார சமூக தொழில் நிலைமைகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை கொடுப்பதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

Monday, August 3, 2020

புதிய தேசிய கல்வி கொள்கை

த்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்த நிமிடத்தில் இருந்து தொடங்கியது வாதப்பிரதி வாத யுத்தம்.

இந்த கொள்கையை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என தமிழக எதிர் கட்சிகளும், ஆதரிக்க வேண்டும் என பாஜக ஆதரவு இயக்கங்களும் குரல் கொடுத்து கொண்டு இருக்க, தமிழக அரசோ வழக்கம் போல மௌனம் காத்து வந்தது.

இன்றைக்கு தமிழக அரசு கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் எனவும் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் எனவும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எல்லா எதிர்கட்சிகளும் பாராட்டை தெரிவித்தன.

இதோடு நில்லாமல், புதிய தேசிய கல்வி கொள்கையை விரிவாக ஆராய ஒரு குழு அமைக்கப்படும் எனவும், அவர்களது பரிந்துரையின் பேரில், தமிழக அரசு மற்ற விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதில் யோசிக்க எதுவுமில்லை. உடனடியாக புதிய தேசிய கல்வி கொள்கையை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். குழு அமைத்து ஆராய்வது எல்லாம் காலம் கடத்தும் வேலை என்கிற விமர்சனமும் எழ தொடங்கி உள்ளது.

உண்மையில் அந்த கொள்கை முற்றிலுமாக எதிர்க்கப்பட வேண்டியதா? ஆதரிக்க வேண்டிய ஒன்றா?

அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் புறம் தள்ளி வைத்து மாணவர்கள் நலன் என்கிற பார்வையில் இதை நான் பார்க்க விரும்புகிறேன்.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு தேவையான உதவிகள், எளிய சிறப்பான பாட திட்டம், செயல் வழி கற்றல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, கிராமங்கள் வரை பள்ளிகளின் வீச்சு, தாலுக்கா தோறும் கல்லூரிகள் என பலமான வலை பின்னலையும், சமூக நல திட்டங்களையும் கொண்டு கல்வியில் நம் மாணவர்களை முன்னேற செய்கிறோம்.

தமிழகத்தில் GER 49% ஆக இருக்க கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசு எடுத்து வந்த பல்வேறு திட்டங்கள் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இன்னொரு புறம் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போதுமான கல்வி கட்டமைப்பை ஏற்படுத்தாத காரணத்தால், அங்குள்ள மாணவர்கள் சரியான கல்வியை கற்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது இப்போதும் எட்டா கனி தான்.

இந்த நிலையை மாற்றி எல்லா மாநிலத்திலும் எல்லா மாணவர்களுக்கும் சரியான கல்வி, எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவக்கூடிய கல்வி கொடுப்பதற்கான கொள்கையை வகுக்க குழு அமைக்கப்பட்டு, எல்லா மாநிலத்திலும் இப்போது உள்ள கல்வி முறையையும் உலகின் மற்ற நாடுகளில் உள்ள கல்வி முறையையும் ஆராய்ந்து, இந்திய சூழலுக்கு, நம் நாட்டின் பொருளாதார சமூக கட்டமைப்புக்கு உகந்த முறையில் கல்வியை கொடுப்பதற்கான கொள்கை வகுக்கப்பட்டது.

அப்படி வகுக்கப்பட்ட கொள்கையின் வரைவு மாதிரியை கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டது அரசு. அதில் உள்ள நிறை குறைகளை தேசம் முழுவதும் உள்ள வல்லுனர்கள் ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை திருத்தங்களை எல்லாம் அரசுக்கு அனுப்பினார்கள். பல அரசியல் தலைவர்கள் கூட தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இவைகளை எல்லாம் மீண்டும் ஆராய்ந்து, திருத்தப்பட்ட கொள்கை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போதும் பெரும் விவாதம் நடந்து மீண்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி கொள்கை கடந்த மாதம் வெளியானது.

மத்திய அரசு அந்த கொள்கையை ஏற்றுக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது.

62 பக்க கொள்கை விளக்க அறிக்கை அரசு இணைய தளத்திலும் வெளியிடப் பட்டது.

இதிலே ஏற்கனவே சொன்னது போல கல்வியை பரவலாக்க, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேண, எதிர்காலத்தில் தொழில் தொடர்பான அறிவை பெற என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தின் வெற்றிகரமான திட்டங்களான மதிய உணவு & காலை உணவு திட்டத்தை, ஓராசியர் பள்ளி முறையை, செயல் வழி கற்றல் திட்டம் போன்றவற்றை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவு செய்வது இதில் பரிந்துரைக்க பட்டு உள்ளது.

இது தவிர கல்வி சுமையை குறைக்கும் நோக்கில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழி / பிராந்திய மொழி வழி கல்வி கற்பிக்க வேண்டும் எனவும் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்து உள்ளது.

குழந்தைகள் மழலையில் வேறொரு மொழியை கற்க தொடங்குவதில் உள்ள சிரமம், கிராமப்புற ஏழை பெற்றோரால் ஆங்கிலம் கற்பித்து கொடுக்க முடியாமல் இருக்கக் கூடிய சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டால், தாய்மொழி வழிக் கல்வியை அவர்களால் கற்று கொடுக்க முடியும் என்பதையும் மனதில் வைத்து பார்த்தால் இது நல்ல விஷயமாக எனக்கு படுகிறது.

அதற்காக ஆங்கிலம் இல்லாமல் போகாது. ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக ஆரம்பத்தில் இருந்தே இருக்கும். ஆனால் அடிப்படை விஷயங்கள் தாய் மொழி / பிராந்திய மொழியில் இருக்கும். இதனால் குழந்தைகள் பாடத்தை படிப்பது / புரிந்து கொள்வது எளிமையாக இருக்கக்கூடும்.

மேலும் தாய்மொழி வழி கல்வியில் அறிவியல் கணிதம் ஆகியவை படிக்கும்போது குழ்ஹந்தைகளுக்கு குழப்பம் வராமல் இருப்பதற்காக Bi-Lingual பாடம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது, நம்ம சுஜாதா அவர்க்ள் சொன்னதை போல கலைஞர் அவர்கள் சொன்னதை போல, எல்லாவற்றையும் தமிழாக்கம் செய்யாமல் சிலவற்றை ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்கிறது புதிய கொள்கை. 

Sulphuric Acid என்பதை கந்தகிஜ அமிலம் என படிக்காமல் Sulphuric Acid என்றே படிக்க வைப்பது மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்கும்.

நான் அதிகம் மகிழ்ந்தது, சைகை மொழி (ISL) இப்போது வெவ்வேறு வகைகளில் உள்ளதை மாற்றி நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி சைகை மொழி கல்வி கொண்டு வரப்படுகிறது. இது மிகப்பெரிய சீர் திருத்தம்.

ஆறாம் வகுப்புக்கு மேல் ஆங்கில வழி கல்வி, கணினி கல்வி, தொழிற்கல்வி ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மும்மொழி கொள்கை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதாவது பிராந்திய மொழி, ஆங்கிலம், அதனுடன் இந்தி / சமஸ்கிருதம். அதாவது இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் இந்தி மூன்றாம் மொழியாகவும், இந்தி தாய்மொழி ஆக உள்ள மாநிலங்களில் இந்தி & ஆங்கிலத்துக்கு அடுத்த படியாக சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாகவும் இருக்கும்.

இந்த மும்மொழி கொள்கையை தான் தமிழக அரசு இன்றைக்கு ஏற்க முடியாது என சொல்லி இருக்கிறது.

தமிழகத்தில் எப்போதும் போல தமிழ் & ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதிய கல்வி கொள்கை, இந்த மும்மொழி திட்டம் தவிர தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளில் இரண்டை எல்லா மாநிலத்திலும் துணை மொழியாக பரிந்துரை செய்து உள்ளது. அதாவது எல்லா மாணவர்களும் ஏதேனும் ஒரு இந்திய செம்மொழி அறிந்து இருக்க வேண்டும். இது தமிழை, தமிழ் பொன்ற பிற செம்மொழிகளை மேலும் பல மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் வழியாக நான் பார்க்கிறேன். 

முறையான பள்ளிக்கூட கட்டமைப்பு இல்லாத கிராமங்களில் புறநகர் பகுதிகளில் ஆசிரியரிடம் சென்று பாடம் கற்கும் "குருகுல" கல்வி முறை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும் குருகுல முறை போலல்லாமல், தமிழகம் முன்பு அமல் செய்த "ஓராசிரியர்" பள்ளி முறை போல இது இயங்கும் என நான் கருதுகிறேன். (குரு=ஆசிரியர், குலம்=வீடு)

ஒரு சிறு கிராமத்தில் குறைந்த அளவில் மாணவர்கள் இருந்து அனைவரும் வெவ்வேறு வகுப்பில் கல்வி கற்பவர் ஆக இருந்தால், அங்கே பள்ளிக்கூடம் எனும் கட்டமைப்பு இல்லாவிட்டால், இது போல ஓராசிரியர் பள்ளி முறையில் எல்லோருக்கும் பாடம் சொல்லி தந்து கல்வியை புகட்டலாம் என்பது கூட இதன் நோக்கமாக இருக்க கூடும்.

பள்ளிக்கூடத்தில் நவீன தொழில் நுட்ப உதவியுடன், செயல் முறை மூலமான கல்வி கற்பிக்க பரிந்துரைத்து உள்ளது இந்த கொள்கை. ஆறாம் வகுப்பில் இருந்தே கணினி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார காரணங்களுக்காக கல்வியை இடையிலே விட்டு விட கூடாது என்பதற்காக சிறப்பு ஊக்க தொகை திட்டம், நிதி உதவி திட்டம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

மிக மிக முக்கியமாக ஏழை மாணவர்கள் எல்லோரும கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டு உள்ளது.

இவை எல்லாம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் எதிர்காலத்தில் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக்கக் கூடும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கல்வி தகுதி இருக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டு உள்ளது. இப்போது ஆரம்ப பாட சாலைகளில் போதுமான கல்வி தகுதி அல்லது பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் வைத்து பாடம் நடத்தும் முறையை இதன் மூலம் தவிர்க்கலாம்.

உடற்கல்வி, விளையாட்டு என நிறைய விஷயங்களை இந்த கல்வி கொள்கை முன்வைக்கிறது.

இவை எல்லாமே வெறும் கொள்கைகள் தான். 
இந்த கொள்கைகளில் எதை ஏற்பது, எதை புறக்கணிப்பது என்பதை மாநிலங்கள் தீர்மானிக்கும். பாடங்கள் முடிவு செய்வது, புத்தகங்கள் தயாரிப்பது என அனைத்தும் மாநிலங்கள தான் செய்யும். ஆனால் அவை இந்த புதிய கல்வி கொள்கையின் படி இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

அதாவது என்ன பாடம் என்பதை மாநிலம் முடிவு செய்யும். ஆனால் அது செயல்வழி கல்வி, நவீன தொழில்நுட்ப வழியிலான கற்பித்தல், போன்ற கொள்கைகளின் அடிப்படையில் சொல்லி தரப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் தமிழக அரசு இன்றைக்கு, முதல் விஷயமாக, மும்மொழி கொள்கையை ஏற்பதில்லை. இரு மொழி கொள்கை தொடரும் என சொல்லி உள்ளது. மற்ற விஷயங்களில் எதை ஏற்பது எதை மறுப்பது என்பது வல்லுநர் குழு ஆராய்ந்து முடிவு செய்யும்.

இந்த கல்வி கொள்கையில் பல பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் பல தவறான பரிந்துரைகளும் உள்ளன.

மறைமுகமாக திணிக்கப்படும் இந்தி/சமஸ்கிருத மொழிகள், குலக்கல்வி போர்வையில் உள் நுழையும் மனு தர்மம், மூன்றாம் வகுப்பு குழந்தைக்கு பொது தேர்வு, உயர் கல்விக்கு நுழைவு தேர்வு என நாம் எதிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய  இருக்கின்றன.

தமிழக அரசு அமைக்கும் வல்லுநர் குழு இவை எல்லாம் பற்றி விரிவாக ஆராய்ந்து முடிவை சொல்லும் என நினைக்கிறேன்.

எப்படி ஆயினும் இந்த கொள்கை அமல் ஆக 2025 ஆம் ஆண்டு ஆகலாம். 2030 ஆம் ஆண்டு கல்வி எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கு நோக்கி இது அமலாகும்

கொள்கை அறிவிப்பின் கடைசியில் இதை அமல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக சொல்லப்பட்டு உள்ளன. அதன் படி இது அமலாக்க குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்

அதற்கு முன்பாக நாம் இதை விரிவாக ஆராய்ந்து தமிழகத்தில் எது தேவை எது தேவை இல்லை என முடிவு செய்து கொள்ள முடியும்

தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள், குறிப்பாக வட மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையால் நிச்சயம் நல்ல பலன் அடையும் என நம்புகிறேன். எல்லா ஊரிலும், மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க இது வழி செய்யும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என.

Saturday, June 27, 2020

சசிகலா பராக்

தமிழக அரசியலில் சமீபத்திய பேச்சு சசிகலா வர்றாராமே? என்பது தான்.

2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் சிறை சென்ற சசிகலா வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலை ஆகக்கூடும் என்கிற ஊகங்கள் மெல்ல பவனி வருகின்றன.

நான்காண்டு சிறை தண்டனையில் இப்போது மூன்றரை ஆண்டு முடிந்து இருக்கிறது. ஏற்கனவே அவர் சிறையில் இருந்த காலங்களையும், இப்போது சிறையில் சட்டப்பூர்வமாக அவருக்கு உள்ள விடுமுறைகளையும் கணக்கில் எடுத்து பார்த்து தான் இந்த ஆகஸ்ட் 14 என்கிற நாளை குறித்து இருப்பார்கள் என தோன்றுகிறது.
சிலர் 'இது அவரது நன்னடத்தைக்காக கிடைத்த சலுகை. அதனால் முன்கூட்டியே விடுதலை ஆகிறார்' என்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன கணக்கை பார்த்தால் முன்கூட்டி விடுவிக்கும் 'சலுகை' எல்லாம் இல்லாமலே நியாயமாகவே அவர் விடுதலை ஆகவேண்டிய காலகட்டமாக தான் ஆகஸ்ட் மாதம் அமைகிறது.

எது எப்படியோ.. அவர் விடுதலை ஆகி இப்போது தமிழகம் வந்தால் என்ன நடக்கும் என்கிற கேள்வியும் அதற்கான பற்பல யூகமான பதில்களும் எதிர்பார்ப்புக்களும் சுற்ற தொடங்கி விட்டன.

தமிழகம் வந்தால் என்ன ஆகும்? எனும் கேள்விக்கு 14 நாள் குவாரண்டைன் தான் ஆகும் என்கிற மொக்கை ஜோக்குகளை புறம் தள்ளி விட்டு.. அரசியல் அரங்கில் என்னவெல்லாம் நடக்கும் என்கிற யூகங்கள் பற்றி பார்ப்போம்.

அவர் மீண்டும் அரசியலுக்குள் இறங்குவாரா அல்லது இது வரை ஆனதெல்லாம் போதும் என அமைதியாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பாரா என்பது தான் முதல் கேள்வி. 

இதற்கான விடை அரசியலில் மீண்டும் ஈடுபடுவார் என்கிற யூகமாக இருந்தால் தான் மேற்கொண்டு பேச வேண்டும். ஒதுங்கி இருப்பார் எனில் விவாதிக்க எதுவுமே இல்லை. எனவே அவர் அரசியலில் தொடர்வார் என்கிற யூகத்திலேயே பயணிப்போம்.

அரசியலில் அவருக்கு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் தலைமை ஏற்று அதிமுக & திமுக இருவருக்கும் எதிராக களமாடுவது

ஆனால் அதை அவர் விரும்பமாட்டார் என்பதே பொதுவான கருத்து. அதிமுக தலைமையை கைப்பற்றுவது தான் அவரது இலக்காக இருக்கக்கூடும். அது தான் முக்கியமான பதவியாகவும் இருக்கும்

இப்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. எடப்பாடி அவர்களும் பன்னீர்செல்வம் அவர்களும் ஒருங்கிணைப்பாளர்கள் தான். பொதுச்செயலாளர் அல்ல.

அதிமுகவின் சட்டப்படி பொதுச்செயலாளர் தான் சர்வ வல்லமை பொருந்தியவர். அவரது அனுமதி ஒப்புதல் இன்றி எதையும் செய்ய முடியாது

ஜெயலலிதா மறைவுக்கு பின் பொதுக்குழு கூடி ஒருமனதாக சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுத்தது. பொதுச்செயலாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் கொடுத்தது. முறையாக தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்கப்படும் வரை இந்த ஏற்பாடு.

ஆனால் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வந்தது. சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று வழக்கும் தொடரப்பட்டது. பொதுச்செயலாளர் பதவி குறித்த முடிவு தெரியும் வரை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது
இன்னொரு புறம், தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

அனைத்து வழக்குகளும் இன்னமும் முடிவு தெரியாமல் நிலுவையில் தான் உள்ளன.

என்னுடைய பார்வையில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி நிற்காது. காரணம் ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்க வேண்டும் எனில் அதற்கு பொதுச்செயலாளர் ஒப்புதல் வேண்டும். எனவே ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது.

அமைப்பு செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் என யாருக்கும் பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் இல்லை. லாஜிக்காக பார்த்தால் நீதிமன்ற முடிவுகள் வரும் வரை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் தற்போதைய தற்காலிக பொதுச்செயலாளர்.

எனவே நீதிமன்றம் அதிமுக சட்ட விதிகளின் முடிவு செய்வதானால், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சொல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. 

இதை எல்லாம் சசிகலா நன்றாக உணர்ந்திருப்பார். மேலும் அமமுகவை விட அதிமுக தான் பலம் பொருந்தியது. எனவே அதிமுக தலைமையை குறிவைத்தே அவரது காய் நகர்த்தல்கள் இருக்கும்.

இன்னொரு பக்கம்.. அதிமுகவில் இப்போது இரு அணிகள் உள்ளதாக சொல்கிறார்கள். EPS அணி & OPS அணி. (மூன்றாவதாக சசிகலா அணியும் கூட இருப்பதாக யூகங்கள் சுற்றுகின்றன)

இதில் OPS பாஜகவை ஆதரிக்கும் அணி என்பது பொதுவான கருத்து. 

சசிகலா பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பது வெளிப்படையான விஷயம். 

எனவே சசிகலா தலைமைக்கு வந்தால் OPS நிலை என்ன என்பது கேள்விக்குறியே. அவர் தனியே போவாரா அல்லது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு அதிமுகவிலேயே தொடர்வாரா எப்பது முக்கியமான கேள்வி

அதிமுக தலைமையை சசிகலாவிடம் எடப்பாடி எளிதாக ஒப்படைத்து விடுவார் என்பதும் சந்தேகமே.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென்று ஒரு பிம்பத்தை கட்டமைத்து தன்னை பலப்படுத்தி கொண்டு வந்துள்ளார் எடப்பாடி. அவருக்கென்று உள்ள நம்பிக்கையான அமைச்சர்கள் கொண்டு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மக்களின் மனதையும் எளிமையான செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையையும் எளிதாக அணுகும் பக்குவத்தால் கட்சியினர் அபிமானத்தையும் பெற்று உள்ளார். சுதந்திரமான செயல்பாடுகளை ஊக்குவித்து அதிகாரிகள் அளவிலும் நம்பிக்கைக்கு உரியவராக மாறி இருக்கிறார்.

இவை எல்லாம் இல்லாவிட்டால், எந்தவித நட்சத்திர அந்தஸ்த்தோ பிரபலமோ செல்வாக்கோ இல்லாத எடப்பாடியால் கட்சியையும் ஆட்சியையும் இத்தனை காலம் பிரச்சனை இல்லாமல் கட்டி காத்து இருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
கட்சியில் அவரை விட சீனியர்கள் முக்கியஸ்தர்கள் அனுபவஸ்தர்கள் பலர் இருக்க அவர்கள் யாரும் இவருக்கு எதிராக கிளர்ந்து எழாமல் இருப்பது கூட இவர் மீதான நம்பிக்கையால் என்றே நம்பப்படுகிறது. ஆறு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்கமாட்டார் என சொல்லப்பட்ட எடப்பாடி இத்தனை காலமும் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பது சாதாரணமானது அல்ல.

தமிழக அரசு அதிகாரிகள் எத்தனை வலிமையானவர்கள் என்பதை நான் விளக்க வேண்டியது இல்லை. அரசு நிர்வாகம் இதுவரை அதிருப்தி அடையாமல் எந்த ஒரு பெரிய போராட்டமும் நடத்தாமல் எடப்பாடி அவர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும் அதிகாரிகளின் கட்டுப்பாடும் அவரது நிர்வாகத்தை பற்றி நமக்கு சொல்கிறது.

மக்கள் மத்தியில் அதிருப்தி எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மக்களின் நேரடி தொடர்பாக இருக்கும் அத்தியாவசிய தேவைகளில் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். சாலை, போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், ரேஷன் என பலவும் அன்றாட மக்கள் பயன்பாட்டில் குறை இல்லாமல் இருக்கும்படி நடைபெற வைக்கப்படுகிறது.

இதை எல்லாம் அவர் திட்டமிட்டு தனது நிலையை தக்கவைப்பதற்காக செய்தாரா என்பது தெரியாது. ஆனால் இன்றைய நிலையில் அவர் தனது நிலையை ஓரளவு தக்கவைத்து மக்களிடமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவே நாம் காண்கிறோம்.

இந்த நிலையில் சசிகலா வந்ததும் அவரிடம் சட்டென்று சரண் அடைந்து விடுவார் என்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது தான்.

சசிகலா vs எடப்பாடி என பலப்பரீட்சை நடக்குமானால் அது திமுகவுக்கான ஜாக்பாட். அடுத்த ஆண்டு தேர்தல் இருக்கும் நிலையில் திமுகவுக்கு இது மிக மிக சாதகமாக ஆகும்.

ஆனால் சசிகலாவுக்கான ஆதரவு அதிமுகவுக்குள் எவ்வளவு என்பது தெரியாது.

பாஜகவுடன் அதிமுக அணி சேர்ந்தது அதிமுக கட்சியில் பெரும்பாலோருக்கு பிடிக்கவில்லை என்பது கடந்த தேர்தலில் அவர்கள் களப்பணியில் காட்டிய அலட்சியம் வெளிச்சமாக்கி விட்டது. அவர்கள் எல்லோரும் சசிகலாவை ஆதரிக்க வாய்ப்பு இருந்தது தெரிந்தோ என்னவோ சமீப காலமாக மத்திய அரசுக்கு எதிரான வழக்குகள், மத்திய அரசு திட்டத்துக்கான எதிர்ப்புக்கள் என எடப்பாடியும் பாஜக எதிர்ப்பு நிலையையே எடுத்து வர தொடங்கி இருக்கிறார்.

சசிகலா தண்டனை முடிந்து விடுதலை ஆனாலும் அவரால் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே ஆட்சி தலைமையை அவர் குறி வைக்க மாட்டார்.

எடப்பாடி சசிகலாவுடன் இணைந்து செயல்பட முன்வந்தால் அவரே முதல்வராக தொடரவும் வாய்ப்பு உள்ளது. அனேகமாக இந்த ஏற்பாட்டுக்கு எடப்பாடி ஒப்புக்கொள்வார் என்றே பலரும் நினைக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவரும் சசிகலாவுக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் தனது சொத்துக்களை collateral guarantee ஆக கொடுத்த திரு புகழேந்திக்கு இப்போது அதிமுகவில் முக்கிய பதவி கொடுத்து இருப்பதை சொல்கிறார்கள். சசிகலாவுக்கு சாதகமாக கட்சியை மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடக்கூடும்.

ஒருவேளை எடப்பாடி முரண்டு பிடித்தால் சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் யாரேனும்.. ஏன் டிடிவி தினகரனே கூட ஆட்சி தலைமை ஏற்று.. சசிகலா வழிகாட்டுதல் படி செயல்படக்கூடும்.

ஆனால் இவை எல்லாம் வெறும் ஊகங்களே. சசிகலா நீக்கப்பட்டது சரி தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் எடப்பாடி அசைக்கமுடியாத பலத்தை பெற்று நிலைத்து நிற்பார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.

இவை தவிர ஜெயலலிதா சொத்துக்கள், சசிகலா மீதான இதர வழக்குகள் என இன்னும் பலவற்றிலும் சசிகலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அடுத்த சில மாதங்களில், தமிழக அரசியல் களம் என்னென்ன பரபரப்புக்களை என்னென்ன மாற்றங்களை காணப்போகிறதோ தெரியவில்லை

நாம் வேடிக்கை பார்க்க தொடங்குவோம்.

Monday, June 8, 2020

இந்தியா சீனா வர்த்தகம்

மீப காலமாக இணைய வெளிகளில் அதிகமாக பேசப்படும் விஷயம் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்பது.. இது விவரம் தெரியாத கத்துக்குட்டி கட்சி தொண்டர்கள் முதல், பெரும் தலைகள், பல நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள்.. அவ்வளவு ஏன் ஒரு சில அமைச்சர்கள் கூட வெளிப்படையாக சொல்ல தொடங்கி உள்ளனர். வாட்ஸ் அப் ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் கூட இது பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.. அதுவும்.. இது ஒரே நாளில் நிறுத்த முடியாது.. மக்களாக பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சீன பொருட்களை தவிர்க்க வேண்டும்.. அதன் முதல் கட்டமாக உங்கள் போனில் உள்ள சீன ஆப்களை எல்லாம் நீக்குங்கள் என்றெல்லாம் புதுப்புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

சரி.. சீன பொருட்களை நாம் தவிர்ப்பது அவ்வளவு எளிதா?

இதற்கு பதில் தெரிய நாம் முக்கியமான இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில்.. இறக்குமதி ஏற்றுமதி எதனால் ஏற்படுகிறது? அதை சுருக்கமாக பார்ப்போம்

ஒரு நாட்டின் உற்பத்தி தேவைகளுக்காக, தொழிற்சாலை இடுபொருட்கள் தேவைக்காக, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல பொருட்களை நாம் பல நாடுகளில் இருந்து வாங்குகிறோம். இந்தியாவில் கிடைக்காத பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இப்படி இறக்குமதி செய்து கொள்கிறோம்.
அதேபோல நமது நாட்டு பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் வைத்து நாம் நமது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்கிறோம்

இவ்வாறாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு கூடுதலாக இருந்தால் அது பொருளாதார பலத்தை காட்டும். அன்னிய செலாவணியை ஈட்டி தரும்.

மாறாக இறக்குமதி அதிகமாகவும் ஏற்றுமதி குறைவாகவும் இருந்தால் அது பொருளாதார பற்றாக்குறையை காட்டும். இது CAD - Current Account Deficit எனப்படும்.

இந்தியா எப்போதுமே இந்த CAD வகையில் தான் இருக்கிறது. காரணம் நாம் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறோம்
குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள், தீபாவளி பட்டாசு முதல் விண்வெளி தகவல் தொழில்னுட்பத்திற்கான கருவிகள் வரை அதிக பொருட்களை நாம் இறக்குமதியை நம்பியே இருக்கிறோம்.

இந்த இறக்குமதி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது யார்? மாநில அரச மத்திய அரசா?

மத்திய அரசு தான். மத்திய நிதித்துறை & வர்த்தக துறை தான் இதற்கான கட்டுப்பாட்டு அமைச்சகம்.

நிதித்துறையின் கீழ் CBIC Central Board of Indirect Tax and Customs உள்ளது. இதில் உள்ள Customs (சுங்கத்துறை) தான் நாட்டின் எல்லா ஏற்றுமதி இறக்குமதியையும் கட்டுப்படுத்துகிறது.

எல்லா விமான நிலையங்கள், துறைமுகங்கள் வழியாக நடக்கும் அனைத்து சரக்கு பரிமாற்றமும் சுங்கத்துறை தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படும்.

அப்படியானால் எந்த பொருளை வேண்டுமானாலும் இறக்குமதி ஏற்றுமதி செய்துகொள்ளலாமா? என்றால் இல்லை. அப்படி செய்ய முடியாது.

எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம் என்பதை DGFT - Director General of Foreign Trade எனும் மத்திய அரசு அமைப்பின் அதிகாரி முடிவு செய்வார்.

சமீபத்தில் கூட.. HCQ மாத்திரைகள், மாஸ்க் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதித்து DGFT வெளியிட்ட Notification நினைவு இருக்கும்.

சரி, அப்படி என்றால் DGFT தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா? என்றால் அதுவும் இல்லை. இந்தியாவுக்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கை தனியாக உள்ளது. FTP - Foreign Trade Policy. ஒவ்வொரு ஐந்து ஆண்டு காலத்துக்குமான இந்த கொள்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான் DGFT செயல்படும். இப்போது கடந்த 2015 முதல் அமலில் உள்ள FTP 2015-2020 தான் நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக அது 2021 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதல், அடுத்த FTP 2021 ஆம் ஆண்டு தான் வெளியாகும்

சரி.. மத்திய அரசு நினைத்தால் FTP ஐ தனது விருப்பப்படி தீர்மானித்து கொள்ள முடியுமா என்றால்.. அதுவும் இல்லை.
இந்தியா உலக வர்த்தக அமைப்பில் WTO - World Trade Organization உறுப்பினராக உள்ள நாடு. அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தான் நாம் நமது கொள்கைகளை வகுக்க முடியும். 

இது தவிர பல்வேறு நாடுகளுடன் நாம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் BTA - Bilateral Trade Agreement போட்டு உள்ளோம். அதில் பலவும் FTA - Free Trade Agreement வகை.

அதாவது இரு நாடுகள் இடையே FTA ஒப்பந்தம் இருந்தால் அந்த நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்துக்கு இரு நாடுகளிலும் வரி விதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இலங்கை. இலங்கையில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் டீ, இந்தியாவில் அஸ்ஸாம், ஊட்டி, மூணாறில் இருந்து வாங்கும் டீயை விட விலை மலிவு. காரணம் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்தால் வரி இல்லை. அஸ்ஸாமில் இருந்து வாங்கினால் வரி உண்டு.

இந்தியாவில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிப்பு அடைவார்களே என்றெல்லாம் எண்ணி இந்த இறக்குமதியை நிறுத்திவிட முடியாது. காரணம் நாம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அதிகம். அது நமது தொழில்துறை வளர்ச்சிக்கு அவசியம் என்பதால்.. இறக்குமதியை அனுமதிக்கிறோம்.

இது போன்ற BTA தவிர அமைப்புக்களுடனும் நாம் ஒப்பந்தம் போட்டு உள்ளோம். அதில் ASEAN - Association of South East Asian Nations ஒப்பந்தமும் ஒன்று

இப்படியான ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான் நாம் வெளிநாட்டு வர்த்தகத்தை தீர்மானிக்க முடியும்.

இனி சீனா விஷயத்துக்கு வருவோம்

இந்தியா செய்யும் மொத்த இறக்குமதியில் பாதிக்கு பாதி சீனாவில் இருந்து தான். இரண்டாம் இடம் அமெரிக்கா. அடுத்ததாக வளைகுடா நாடுகள் மற்ற நாடுகள் எல்லாம் வரும்

ஏற்கனவே சொன்னது போல விளையாட்டு பொம்மை முதல் பெரும் தொழில் நிறுவனங்களுக்கான மெஷினெரி வரை சீனாவை நம்பி தான் நாம் உள்ளோம்.

சுதந்திரம் கிடைத்து இந்த 70 ஆண்டுகளில் நாம் நமது அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடியிருப்பு, தொழில்துறை, விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தியதில் போதுமான அளவுக்கு உற்பத்தித்துறைக்கான கவனத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் இத்தனை மனித வளம் இருந்தும் Innovative Manufacturing எதையும் நாம் இதுவரை செய்யவில்லை. எனவே பல டெக்னிகல் எலக்டிரானிக்கல் பொருட்களை நாம் இறக்குமதி தான் செய்கிறோம். அதில் பெரும்பான்மையானவை சீனாவில் இருந்து.

தொழிற்சாலைக்கு தேவையான இரும்பு, இந்தியாவில் வாங்குவதை விட சீனாவில் வாங்குவது விலை குறைவாகவும் தரமானதாகவும் இருக்கும். சீன பொருட்கள் தரமற்றவை என்பதே மற்றுமொரு மாயப்பிரச்சாரம் தான். இந்தியா சீனாவில் இருந்து ₹430 பில்லியனுக்கு இறக்குமதி செய்கிறது.. தரமில்லாமலா என்ன? இரண்டாம் இடத்தில் இருக்கும் அமேரிக்காவிடம் இருந்து நாம் ₹200 பில்லியனுக்கு தான் இறக்குமதி செய்கிறோம். இந்த கணக்கு சொல்லும் நாம் எந்த அளவுக்கு சீன பொருட்களை சார்ந்து இருக்கிறோம் என்பதை.

இப்படி இருக்க சீன பொருட்களை தவிர்ப்பது சாத்தியமா?

ஏற்கனவே சொன்னபடி DGFT ஒரு Notification போட்டு நாளை முதல் சீன பொருட்களை இறக்க அனுமதி இல்லை என சொன்னால் போதும். சாத்தியம் தான். ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல.

சீன பொருட்களுக்கு நம்மிடையே மாற்று இல்லை. நம்மிடம் அந்த அளவு உற்பத்தி திறன் இல்லை. சீனாவுக்கு பதிலாக வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் விலை அதிகம். அது நமது தொழில் துறையை பாதிக்கும்.

நாம் நமது தொழில்துறையை வளப்படுத்தாமல், புதிது புதிதான கண்டுபிடிப்புக்கள் செய்யாமல், உற்பத்தி திறனை அதிகரிக்காமல் சீனாவையோ வேறு நாட்டையோ உதாசீனப்படுத்தி விட முடியாது

இந்த விஷயங்களை எல்லாம் புரிந்து கொள்ளாமல் போனில் உள்ள டிக்டாக் ஆப் மாதிரி ஆப்களை நீக்கினால் இந்தியா சுய சார்பு அடைந்து விடும் என்பது போன்ற சமூக வலை தள செய்திகளை புறக்கணிப்பதே அறிவார்ந்த செயல்..

மெத்த படித்தவர்கள், பெரும் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளாவர்கள், அமைச்சர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரையில் இது போன்ற சீன புறக்கணிப்பு செய்தியை பகிர்ந்து வருவது ஆச்சர்யம் தருகிறது

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் வள்ளுவன் வாக்கின் படி, பொய் புரட்டு கற்பனை செய்திகளை புறக்கணித்து நமது உற்பத்தி திறனை அதிகரிக்க வழி பார்ப்பது நல்லது


Wednesday, May 27, 2020

வேதா இல்லம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இல்லமான வேதா இல்லம் யாருக்கு எனும் வழக்கில் இன்று தீர்ப்பு வந்து இருக்கிறது.

இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் எனக்கும் எல்லோரைப்போலவே ஆர்வம் தானாக தொற்றிக்கொண்டதில் வியப்பு இல்லை.
ஜெயலலிதாவின் அண்ணன் மக்களான தீபா & தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்கு தான் தரவேண்டும் எனவும், ஜெயலலிதா செலுத்தவேண்டிய அபராத தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சொல்லி இருந்தனர்

ஜெயலலிதாவுடன் கூடவே இருந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்களும் அந்த சொத்துக்கள் மீது முன்பு உரிமை கோரி இருந்தனர். ஆனால் இப்போது இந்த வழக்கில் அவர்கள் தங்களை இணைத்து கொண்டதாக தெரியவில்லை

அதிமுக கட்சி சார்பில் கொடுத்துள்ள மனுவில், ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க அரசு சார்பில் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கேட்டு இருந்தனர்

வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா சொத்துக்கள் ஏற்கனவே கோர்ட்டால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன

வருமான வரித்துறை & கர்நடக சிறப்பு நீதிமன்றம் ஆகியவை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலித்து தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளது

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து அதன் மூலம் வேதா இல்லத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அதை ஜெயலலிதா அவர்களின் நினைவில்லமாக மாற்றவும் உத்தரவு இட்டது

இன்று ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு. கிருபாகரன் & திரு.அப்துல் குத்தோஸ் ஆகியோர் முன்பு தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது

இன்று அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி

வேதா இல்லம் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா & தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்

தீபா & தீபக் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதை பரமாரிக்க வேண்டும் 

என சொல்லி இருப்பதாக தெரிகிறது

இதற்கு நேர் எதிராக.. அந்த வீட்டை தமிழக அரசின் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றவும், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றவும் பரிசீலிக்கும்படி ஆலோசனையும் கொடுத்து உள்ளது

அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது நீதிமன்றம்

ஒன்றுக்கொன்று முரணான இரு வேறு விஷயங்களை தீர்ப்பாக சொல்லி மீண்டும் குழப்பத்தில் கொண்டு போய் விட்டுள்ளது நீதிமன்றம்

அதாவது தீபா & தீபக் வசம் ஒப்படைத்தால் அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமாக மாற்ற முடியாது

அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமாக மாற்றப்பட்டால் தீபா & தீபக்குக்கு அது உரிமை உள்ள வீடாக இருக்காது

எனவே இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படும்.. அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்து விளக்கம் கேட்கப்படும் என்று யூகிக்கிறேன்

இதில் ஆறுதலான விஷயம்.. சசிகலா & அவர்களது உறவினர்களுக்கு எந்த வகையிலும அந்த வீட்டில் உரிமை இல்லை என தெளிவுபடுத்தப்பட்டது தான்

தீபா & தீபக்கை பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. சந்தேகமில்லை.
இதை வைத்தே ஜெயலலிதாவின் மற்ற சொத்துக்களை தங்கள் வசப்படுத்தவும் முடியும்.

இதை வைத்து சாதுர்யமாக பிரச்சாரம் செய்தால் ஜெயலலிதாவின் வாரிசு தான் தான் என்று அரசியலில் வலம் வரவும் முடியும்.

ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவு கொடுத்து பின்னர் ரிவர்ஸ் அடித்த ஓ.பி.எஸ். மீண்டும் தீபாவை ஆதரிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை

அடுத்த ஆண்டு தேர்தல் உள்ளதால் தீபா இப்போதிருந்து கவனமாக காய்கள் நகர்த்தி ஓரளவு தனது செல்வாக்கை உருவாக்கிக் கொள்ள முடியும்

ஒரு வேளை நீதிமன்ற ஆலோசனையை தமிழக அரசு ஏற்று, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றினால்.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இனி வேதா நிலையத்தில் இருந்து செயல்படலாம்.

அடுத்த தேர்தலில் திமுக வென்று ஸ்டாலின் முதல்வர் ஆனால் அவரும் வேதா நிலையத்தில் இருந்து இயங்கலாம்.

தமிழகத்தில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் என்று ஒன்று இல்லை. 

எம்.ஜி.ஆர், ஜானகி, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் அவர்களது சொந்த வீட்டில் இருந்தே இயங்கி வந்தனர்

ஓ.பன்னீர் செல்வம் & எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட கிரீன்வேஸ் ரோடு அரசு இல்லத்தில் இருந்தே இயங்கி வந்தனர்

இது வரை தமிழக முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் எனும் ஒரு தேவை தமிழகத்தில் ஏற்பட்டது இல்லை.

இந்த வழக்கிலும் யாரும் அப்படி ஒரு கோரிக்கை வைக்கவில்லை

அப்படி இருக்க நீதிபதிகள் என்ன காரணத்துக்காக தேவை இல்லாமல் இப்படி ஒரு ஆலோசனையை முன்வைத்து விஷயத்தை மேலும் சிக்கலாக்கினார்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை

எது எப்படி இருந்தாலும் ஜெயலலிதா அவர்களுக்கு நினைவில்லம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது

அவரது நினைவிடம் அருகிலேயே அதற்கான கட்டுமானங்களும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பார்ப்போம் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என.. அவசர சட்டம் என்ன ஆகிறது என.. சசிகலா அவர்களின் நிலைப்பாடு என்ன என.. 

வேதா நிலையம் இன்னும் என்னென்னவெல்லாம் சந்திக்கப்போகிறது என தெரியவில்லை.

Wednesday, May 13, 2020

கொரோனா தரும் மாற்றங்கள் - போக்குவரத்து

கொரோனா தொழில் துறையை எப்படி எல்லாம் மாற்றக்கூடும்னு முன்பு பார்த்தோம்

அதுக்கு அடுத்தபடியா அதிக மாற்றத்துக்கு உள்ளாகப்போவது என எல்லோராலும ஊகிக்கப்படுவது, போக்குவரத்து..

இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் Social Distancing எனும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. லாக்டவுன் முடிந்த பிறகும் இந்த முறை தொடர வேண்டும் என MHA அறிவுரை சொல்லி உள்ளது

ஆனால் அது இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவ்வளவு எளிதாக சாத்தியமாகக்கூடிய விஷயம் அல்ல

பைக்கில் ஒருவர் தான் பயணிக்க வேண்டும். பில்லியனில் ஆள் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடு.

எளிய மனிதர்கள் அதிகமாக கொண்ட நம் நாட்டில் ஒரு குடும்பத்தில் பைக் என்பது ஒன்று தான் பெரும்பாலும் இருக்கும். அதில் மனைவி குழந்தைகள் என குடும்பமாக பயணிப்பதே வழக்கம்.

புதிய விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டால் வெளியே செல்வதே இல்லாது ஆகிவிடும்

பஸ்சில் இருக்கைகளில் ஒருவர் தான் அமரவேண்டும் என்ற ஒரு விதி போட்டு உள்ளார்கள். இது நிச்சயமாக சாத்தியமே இல்லை.
இப்போது டவுன் பஸ்சில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 57 பேர் அமரவும் 25 பேர் நிற்கவும். சாதாரணமாகவே சென்னை போன்ற நகரங்களில், நின்றும் படிகளில் தொற்றியும் ஒரு பஸ்சில் 60 பேர் வரையும் (உட்கார்ந்து இருக்கும் 57 பேர் தவிர) பயணிப்பதே வழக்கம். அதாவது ஒரு பஸ்சில் ஒரு நேரத்தில் சுமார் 120 பேர்.

இனி ஒரு பஸ்சில் மொத்தமே 28 பேர் தான் பயணிக்க முடியும் எனில், பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ஆக வேண்டும். அல்லது பலரும் பயணிக்க முடியாமல் போய்விடும். உடனடியாக அத்தனை பஸ்களை வாங்கும் அளவுக்கு அரசுகளிடம் வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை

ரயிலிலும் அதே போல தான் என்கிறார்கள். ரிசர்வ் செய்யப்பட்ட கோச்களில் சமூக இடைவெளி சரி. அதிலும் குறைவான எண்ணிக்கை பயணிகள் தான் எனில் இயல்பாகவே கட்டணம் உயர்ந்து விடும். அன்ரிசர்வ்டை யோசித்து பாருங்கள்.

108 இருக்கை உள்ள கோச்சில் சுமார் 250 பேர் வரை பயணிக்கும் நிலையில் அதை 54 ஆக குறைப்பது அத்தனை எளிதல்ல.
சென்னை மும்பை போன்ற பெருநகர EMU ரயில்களின் நிலை இன்னமும் மோசம். தொங்கியபடி தான் பீக் ஹவர் ஜர்னி இருக்கும். இதில் எப்படி சமூக இடைவெளி கடைபிடிப்பது?

கார்களில் அதிக பட்சம் மூன்று பேர். இது சாத்தியம். பைக்கில் ஒருவர். இது கூட ஓரளவுக்கு சாத்தியம்

ஆனால் பஸ் ரயில் போக்குவரத்தில் எல்லாம் சமூக இடைவெளி சாத்தியம் இல்லை. 

ஒரு வேளை சமூக இடைவெளி கட்டாயம் எனில் இப்போது இருக்கும பஸ் ரயில் எண்ணிக்கையை உடனடியாக மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டி வரும். அது இந்தியாவின் இப்போதய பொருளாதார நிலையில் சாத்தியம் இல்லை

எனவே வேலைக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு போய் வருவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நிலை வரும். வீடு தான் ஆபீஸ். வீடு தான் ஸ்கூல்.

சரி இந்த காரணங்கள் தவிர சுற்றுலா செலவது எல்லாம்?

மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களை சந்தேகத்தோடே பார்த்துக்கொண்டு உள்ளன. மாநிலங்களை விடுங்க.. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதே சந்தேகம் தான்.

இந்நிலையில் சுற்றுலா எப்போது சாத்தியப்படும் என தெரியல. 

உதாரணமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்னையில் இருந்து போக முடியுமா என கேட்டால் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் போக முடியாது. 

அத்தியாவசிய காரணங்கள் என்றாலும் அங்கே போனதும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

இது போன்ற சூழலில் போக்குவரத்து இயல்பு நிலை அடைய இன்னும் நிறைய நாட்கள் ஆகும் என்றே நினைக்கிறேன்

என்னை கேட்டால்.. வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு உள்ளவர்களை அப்படியே தொடர விடுவது போக்குவரத்தை குறைக்கும். வேலை, பள்ளி, கல்லூரி, மருத்துவம், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் பயணிக்காமல் இருப்பது, பயணிக்க கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவை தான் போக்குவரத்தை குறைக்கும்.

அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்

Sunday, May 10, 2020

கொரோனா தரும் மாற்றங்கள் - தொழில்துறை

கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கத் தொடங்கி சுமார் 100 நாட்களுக்கு மேல் ஆகிருச்சு. இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியல. தடுப்பு மருந்தும் இல்லை. சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை

இந்த சூழலில் கிட்டத்தட்ட 50 நாளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியது இந்தியா.. தொழிலில்லை, வர்த்தகம் இல்லை, போக்குவரத்து இல்லை

இனியும் இப்படியே தொடர முடியாத சூழலில், நடப்பது நடக்கட்டும் என மெல்ல மெல்ல எல்லாவற்றையும் அனுமதிக்க தொடங்கி விட்டன அரசுகள்

இனி வரும் காலம் நமக்கு எப்படி இருக்கும்?

அதிக பயணங்கள் இருக்காது, முக கவசம் காஸ்டியூமில் ஒன்றாக மாறும், சேமிக்க தொடஙகுவோம், நெருங்கிய உறவினர்கள் கூட வீட்டுக்கு வந்தால் தயஙகுவோம் இப்படி பல பல யூகங்கள் பறந்து கொண்டே இருக்கின்றன

நாம் தொழில் துறையை பார்ப்போம்.

என்ன ஆகும் தொழில்துறை?

அலுவலகங்கள்

அலுவலகங்கள் எனும் அமைப்பு மெல்ல மெல்ல குறைந்து விர்ச்சுவல் ஆபீஸ் (Virtual Office) முறை அதிகமாகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி உள்ளவர்களே. 

இந்த கரோனா காரணமாக Work From Home (WFH) மூலம் இரண்டு மாதங்கள் சிக்கலின்றி இயங்கி காட்டியதால், நிறுவனங்கள் இப்போது நிறைய சிந்திக்க தொடங்கி உள்ளன.

TCS போன்ற நிறுவனங்கள் 75% பேரை WFH முறைக்கு மாற்ற திட்டமிடுவதாக சொல்கிறார்கள்

ஐடி துறை மட்டுமல்லாமல், மார்கெட்டிங், கார்ப்பரேட் ஆபீஸ், செர்வீஸ், பேக் ஆபீஸ் போன்றவையும் இனி ஒரு அலுவலக செட் அப்பில் இருந்து வேலை செய்ய அவசியம் இல்லை என்று உணர்ந்து உள்ளன

WFH எனதற்கு அடுத்த நிலையாக WFN (Work From Native) என்ற புது கான்செப்ட் நோக்கி பயணிக்கிறது கார்ப்பரேட் துறை

இது அவர்களுக்கு நல்லதோர் லாபத்தை தரும்..

எனது நண்பர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அப்பா அம்மா அங்கே ஊரில். இவரும் மனைவியும் குழந்தையும் சென்னையில். அலுவலகத்தில் மார்கெடிங் மேனேஜர். ₹60 ஆயிரம் சம்பளம். வீட்டு வாடகை, போக்குவரத்து, பெட்ரோல் என ₹20 ஆயிரம் போக அவருக்கு என்று ₹40 ஆயிரம் தான் நெட்டாக செலவுக்கு.

கொரோனா காரணமாக ஊருக்கு போய் அங்கிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அத்தனையும் அங்கிருந்தே செய்கிறார். 

குடும்பத்துடன் சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். ₹15 ஆயிரம் சம்பளம் குறைத்தால் கூட கவலை இல்லை எனும் அளவுக்கு இந்த WFN அவருக்கு ஒரு பக்குவத்தை கொடுத்து உள்ளது.

சென்னை வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, பரபரப்பு, தெரியாத நகரில் தனிமையில் பகலை நக்ர்த்தும் மனைவி எனும் மனச் சங்கடம் என எந்த டென்சனும் இல்லாமல், ரிலாக்ஸாக இருக்கிறார்.

BSNL மூலம் ஊரில் பிராட்பேண்ட் கனெக்‌ஷனுக்கு ₹600 செலவு. அவ்வளவு தான். Zoom, Microsoft Teams என தினசரி சந்திப்புக்கள், வேலை, ரிப்போர்டிங் என எல்லாமும் நடந்து வருகிறது

கம்பெனியை பொறுத்தவரை, சென்னை நகரில் அதிக வாடகையில் ஒரு பெரிய அலுவலகம் இனி தேவை இல்லை. எல்லோரையும் அவரவர் ஊரில் இருந்தே வேலை செய்ய சொல்லலாம். பயணங்கள் கூட அங்கிருந்தே சென்று வரட்டும். ஆன்லைனில் ரீ இம்பர்ஸ் ஆகிடும். சந்திக்க வேண்டும் எனில் இரு மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஓட்டல் ஹால் எடுத்து மீட்டிங் போட்டால் போதும். Overhead Expenses மொத்தமாக குறையும்.

இதை எல்லா நிறுவனங்களும் யோசிக்க தொடங்கி இருக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் சென்னை போன்ற பெரு நகரின் ரியல் எஸ்டேட் வீழும், வாடகைக் கட்டிடங்கள் குறையும், நகர நெரிசல் குறையும்

இன்னொரு புறம் கிராம பொருளாதாரம் உயரும். உயர் வருவாய் மக்கள் கிராமங்களில் வாழ்கையில் அவர்களுக்கான பெரு வசதிகள் அங்கே ஏற்படும். நகர கிராம சம நிலை தொடங்கும்.


உற்பத்தி துறை

தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை அதிகம். இதில் பிற மாநிலத்தில் இருந்து பல தொழிலாளர்கள் வந்து தங்கி பணி செய்து வருகின்றனர். அவற்றில் பலர் இப்போது அவர்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார்கள். 

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எப்போது தொடங்கும் என தெரியல. அப்படியே வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டி இருக்கும். 

இச்சூழலில், உற்பத்தி துறை எதிர்பார்த்த அளவுக்கு எட்ட செப்டம்பர் மாதம் கூட ஆகலாம்

ஆனால் உற்பத்தி துறைக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்து தான் ஆக வேண்டும். அதே நேரம் சப்போர்ட் சர்வீஸ் எனப்படும் துணை நிர்வாக அமைப்பில் உள்ளவர்கள் தொழிற்சாலைக்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியும். 

ஏற்கனவே சொன்னது போல அலுவலகம் எனும் அமைப்பு இல்லாது Virtual Office முறை வழக்கத்துக்கு வரும் போது, உற்பத்தி துறையிலும் இந்த முறை சாத்தியமாகும்.

நேரடி பணியாளர்கள் தவிர பிறர் வீடுகளிலேயே இருக்கையில் தொழில்துறை தனது Over Head Expenses குறைத்து லாபத்தை அதிகரிக்கும்

வியாபாரம்

இப்போது கொரொனா காரணமாக குறைந்த நேரம் மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் இது கவலையாக தெரிந்தாலும், மக்கள் சட்டென அதற்கு தங்களை ஆற்றுப்படுத்தி கொண்டு விட்டார்கள்

மதியம் 1 மணி வரை தான் கடைகள் இருக்கும் எனில் அந்த சமயத்துக்கு சென்று வாங்க பிளான் செய்து பழகி கொண்டார்கள்

காலை 5 மணிக்கு கடை தொடங்கி இரவு 11 மணி வரை கடையிலேயே இருந்து குடும்பத்தினருடனான பொழுதுகளை இழந்த வியாபாரிகள் இப்போது 1 மணி வரை வியாபாரமும் அதன் பின் குடும்பத்தினருடனான பொழுதுகளும் என வாழ பழகி கொண்டார்கள்.

இவை இப்படியே தொடர்ந்தாலும் நல்லதே எனும் அளவுக்கு சிக்கல் இன்றி போகிறது வாழ்க்கை. வியாபாரம் குறையாது. காரணம் தேவை உள்ளவர்கள் வாங்கி கொண்டே தான் இருக்க போகிறார்கள். நேர கட்டுப்பாடு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தால் போதும். 

சரக்கு போக்குவரத்து

இது தான் சிக்கலான துறை. நோயின் தாக்கம் முற்றிலும் நீங்கும் வரையில் சரக்கு போக்குவரத்து மூலம் வரும் பொருட்கள், ஆட்கள், டிரைவர், லோடுமேன் போன்றவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களை செக் செய்து Screening செய்து சரக்குகளை disinfection செய்வது என எல்லாமும் சந்தேகம் கொண்டவையே
ஏதேனும் ஒரு ஊரில் யாரோ ஒருவருக்கு infection இருந்தாலும் அவர் மூலமாக மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும் நோய் தொற்று ஆகையால், சரக்கு வாகனம் வரும் ஊர்கள், டிரைவர்கள் வழியில் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள் என எல்லாவற்றையும் எப்படி கண்காணிப்பது என்பது ஒரு பெரிய சவால் தான்.

மேலும் நோய் தொற்று அறிகுறி தெரியவே ஒரு வாரம் ஆகும் எனும் நிலையில் ஒவ்வொரு நாளும் எத்தனை வண்டி வந்தது அதில் எந்த வண்டியில் யார் மூலமாக தொற்று வந்தது என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம்.

சரக்கு போக்குவரத்தை நிறுத்தினால் மொத்த பொருளாதாரமும் வீழ்ந்து விடும். தொழிற்சாலை இயக்கமும் நடக்காது.

மிக மிக delicate position என்பது இந்த ஒரு துறை தான்

பார்ப்போம்.. அரசு என்னென்ன நடவடிக்கைகள் அறிவிக்கிறது என.. அதை வைத்து அடுத்து என்ன ஆகும் என விவாதிப்போம்

Monday, May 4, 2020

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வு சரியா?

மார்ச் 25 தொடங்கிய லாக்டவுன், இப்போது 40 ஆம் நாளை தொட்டு நீண்டு கொண்டு இருக்கிறது. மே 17 வரை இப்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் மே 4 முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் சரி என்றும் தவறு என்றும் வெவ்வேறு விவாதங்கள் இணையத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.

தளர்வு சரியா? சுருக்கமாக அலசலாம்

மத்திய அரசின் உள் துறை, என்னென்ன தளர்வுகளை மாநிலங்கள் கொடுக்கலாம் என விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டை தளர்த்த அதிகாரம் இல்லை. வேண்டுமானால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து கொள்ளலாம்
இதன் அடிப்படையில் தமிழக அரசு விவாதித்து, வல்லுனர்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்துக்கான தளர்வுகளை அறிவித்து உள்ளனர்.

சுருக்கமாக சொல்வதானால் மத்திய அரசின் தளர்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தமிழகம் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது

உதாரணமாக சொல்வதானால்

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக மத்திய அரசு பிரித்து தளர்வுகள் அறிவித்தது. தமிழக அரசோ, சென்னை & சென்னை தவிர்த்த இதர பகுதிகள் என இரண்டாக பிரித்து, இதர பகுதிகளில் கூடுமானவரை சிவப்பு மண்டலத்துக்கு உரிய கட்டுப்பாடுகளையே விதித்து உள்ளது

பச்சை மண்டலத்தில் பஸ் போக்குவரத்தை மத்திய அரசு அனுமதித்தது.. தமிழக அரசு அனுமதிக்கவில்லை

தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்க மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசு 50% பணியாளர் மட்டும் தான் என கட்டுப்பாடு விதித்து உள்ளது. சென்னை பகுதியில் 25% தான் அனுமதி

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகள் மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசோ அதிலும் சிலவற்றை தடை செய்து உள்ளது

லாக்டவுன் இன்னும் முடிவடையவில்லை. மே 17 வரை நீடிக்கிறது. அதற்கிடையில் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கான தளர்வுகள் மட்டுமே கொஞ்சமாக கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதுக்கு ஏன் கொடுக்கல? அதுக்கு ஏன் கொடுக்கணும்? போன்ற கேள்விகள் அபத்தமானவை

இந்த தளர்வுகள் அவசியமா? நோய் தொற்று குறையாத நிலையில் லாக்டவுனை தொடரலாமே என பலரும் கேட்கிறார்கள்

இந்திய பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது. மக்களுக்கு அன்றாட தேவைகள் உள்ளன. உணவு பொருள் மட்டுமே அல்லாமல் வேறு சில பொருட்களின் தேவைகளும் மக்களுக்கு உள்ளன. சேவைகளும் தேவை. எனவே அத்தியாவசிய பொருள் அல்லாதவையும் இப்போது திறக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
சில தொழிற்சாலையில் தொடர்ந்து நீண்ட நாள் இயங்காமல் வைத்து இருப்பது பெரிய அளவில் பின்னர் பிரச்சனை தரக்கூடும். எனவே அதை இயக்க அனுமதி வேண்டும் என தொழில்துறை கோரிக்கை வைத்தனர்.

எனவே அவர்களுக்காக அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் குறைந்த தொழிலாளர்கள் வைத்து அத்தியாவசிய இயக்கங்கள் மட்டும் செய்து தொழிற்சாலைகள் இயங்கத் தேவையான உத்தரவு மட்டுமே. முழு உற்பத்திக்கு எல்லாம் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு தேவையான பணியாளர்களை அழைத்து வருவது எல்லாம் தொழிற்சாலைகள் பொறுப்பு

அதாவது, அரசை பொறுத்தவரை முழுமையான லாக்டவுன் தான். ஆனால் தொழிற்சாலை நலனுக்காக சில இயக்கங்கள் தேவை எனில் உங்கள் பொறுப்பில் தொழிலாளர்கள் அழைத்து வந்து குறைந்த அளவில் இயக்கி கொள்ளுங்கள் என்கிற அளவில் தான் தளர்வு

இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் லாஜிக்கலான தளர்வாகவே தமிழகம் கொடுத்து உள்ளது.

நோய்த்தொற்று நீடிக்கையில் தளர்வு சரியா?

மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சொன்னது என்னவெனில், இந்த நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் 14 நாட்களுக்குள் தெரியத் துவங்கிவிடும். 14 நாள் வரை அறிகுறிகள் இல்லை எனில் பயப்பட ஏதும் இல்லை என்பதே

இதை அடிப்படையாக வைத்தே லாக்டவுன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் மருத்துவர்கள், குறிபிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டும் சோதனை செய்தால் போதும் என்று இன்னொரு முடிவும் எடுத்து இருந்தனர். அதனால் அறிகுறி இல்லாதவர்களுக்கு சோதனை செய்வதை தவிர்த்து வந்தார்கள்.

ஆனால் இப்போது, 25 நாட்களுக்கு பின்னரும் அறிகுறிகள் இன்றி பாசிடிவ் ஆகிக் கொண்டு இருக்கிறது இந்தியாவில். இது தொடர்பான திருத்தப்பட்ட வரையறை எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனைக்கான வழிகாட்டி நெறிமுறையும் மாற்றப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் மட்டும் டெஸ்ட் செய்தால் போதும் என தினந்தோறும் இணையத்தில் வாதாடிக் கொண்டு இருந்த மருத்துவ நண்பர்களும் இப்போது அமைதி காக்கிறார்கள்.

இந்நிலையில், இன்னும் எத்தனை நாள் லாக் டவுன் தேவை என்பது தீர்மானிக்க முடியாததாக ஆகி விட்டது. யாரிடமும் அதறகான பதில் இல்லை. 

எதிர்பார்த்த நாட்கள் கடந்து இனி பயமில்லை என ஆசுவாசப்படுத்திக் கொள்ள எத்தனிக்கையில் அதிகமாக நோய் தொற்று கண்டறியப்பட்டு தீவிர லாக்டவுனுக்கான தேவையை கொண்டு வந்து இருக்கிறது

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியோ, இந்தியா கால காலமாக கடைபிடிக்கும் தடுப்பூசி கொள்கையோ, தட்ப வெப்பமோ.. ஏதோ ஒன்று நோய் தொற்றை நீண்ட நாளுக்கு தடுத்தே வந்து உள்ளது. நீண்ட காலம் கடந்த நோய் தொற்று அறிகுறிகள் கூட குறைவான நபர்களுக்கே வந்து உள்ளது.

இது குறித்த விரிவான ஆய்வோ, மறு வரையறையோ மருத்துவர்கள் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை

இந்நிலையில், 40 நாட்களை கடந்த லாக்டவுன், பொருளாதார தொய்வு, மக்களிடம் போதுமான பணம்/பொருளின்மை, பிற சேவைகளின் தேவைகள், அரசின் வரி வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வு தருவதா

அல்லது, நோய் தொற்று நீண்ட நாள் அறிகுறிகள் இன்றி இருப்பது, அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மற்றவர்களுக்கு பரவுவது, சரியான வழிகாட்டுதல் மருத்துவர்கள் தரப்பில் இருந்து இல்லாதது, சுகாதார வல்லுனர்களாலும் நோய் தொற்று குறித்து தெளிவாக விளக்க முடியாதது ஆகிய காரணங்களால் லாக்டவுனை கடுமை ஆக்குவதா 

எனும் இரு கேள்விகளுக்கு இடையில் தான் அரசு உள்ளது

எனவே லாக்டவுனை தொடர்ந்து கொண்டே சிற்சில தளர்வு அறிவிப்பது மட்டுமே இப்போது இருக்கும் ஒரே வழி. அதையே அரசு செய்து இருப்பதாக கருதுகிறேன்.


Sunday, April 26, 2020

எளிய மக்களும் லாக் டவுனும்

ந்த ஊரடங்கு இது வரை செய்ததை விட மிக மிக மோசமான செயல்களை இனிமேல் தான் எளிய மக்களுக்கு செய்ய போகிறதோ என்கிற அச்சம் மெல்ல மெல்ல எழ தொடங்குகிறது எனக்கு.

அரசு நிறுவனங்கள், பெரு தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகள் போன்றவை தப்பித்தன
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்சி கடைகள், சாலையோர உணவகங்கள், ஃபோட்டோ ஸ்டுடியோ, மெக்கானிக்குகள், பிளம்பர், எலக்டிரிசியன், துணிக்கடைகள், டெய்லர்கள், பாத்திரக் கடைகள், மொபைல் கடைகள், புத்தகக்கடைகள், சிறு குறு தொழிற்சாலைகள் என பல பல தொழில்களை பற்றி யோசிப்போம்

இவர்கள் பொதுவாக அந்தந்த மாத சம்பளத்தை வைத்தும் போதாக்குறைக்கு கடன் வாங்கியும் தான் மாதா மாதம் வாழ்வை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்

லாக்டவுன் மே 4 ஆம் தேதி முடிவடைந்தாலும் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எப்படியும் ஆகஸ்ட் ஆகி விடும்.

கடந்த ஒன்றரை மாதமாக வருமானம் இல்லை. கையில் இதுவரை சேமித்து வைத்து இருந்த எல்லாம் (அப்படி ஏதேனும் இருந்தால்) காலி ஆகி இருக்கும். அங்கும் இங்குமாக கடன் கூட வாங்கி இருப்பார்கள் பலர். செலவுகள் செய்து கொண்டே தானே இருக்கணும்? அன்றாட தேவைகள் நிற்காதே?

பூஜியத்துக்கு வந்துவிட்ட இவர்கள் இனி வேலைக்கு போக தொடங்கி சம்பாதித்து மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்

அதை செய்ய மன வலிமை இருக்கலாம்.. எத்தனையோ இழப்புக்களை கடந்து மீண்டு வந்தவர்கள் தானே அவர்கள்? ஆனால் இப்போதைய பிரச்சனை கொஞ்சம் அதீதம்

லாக் டவுன் முடிந்த உடனே பள்ளிகள் திறக்கும். அந்த செலவுகள் அதிகம்.

வேலை ஆரம்பத்தில் எல்லாவரும் சம்பளத்தை குறைக்க முயல்வார்கள். காரணம் ரெண்டு மாசமா வியாபாரம் இல்லை. தொழிலாளர்கள் இந்த சம்பள குறைப்புக்கு உடன்படவும் வாய்ப்பு உள்ளது. வருமானமே இல்லை என்பதை விட கொஞ்சம் குறைத்து கொண்ட வருமானம் ஓகே என நினைக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

இன்னொர புறம், விலை வாசி ஏறும். காரணம் அதே ரெண்டு மாசமா வியாபாரம் இல்லாதது தான். எந்த இழப்பும் இல்லாத நெடுஞ்சாலை சுங்கமே ஒரு மாச லாக்டவுனை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தும் பொழுது, இந்த சிறு குறு நிறுவனங்கள் விலை உயர்வு செய்வதை குற்றம் சொல்ல முடியாது

சுருக்கமாக, வேலை இருக்கணும், சம்பளம் குறைவாக கிடைக்கும், வழக்கமான செலவுகள் அதிகரிக்கும், பள்ளிகள் திறக்கும், ரெண்டு மாதம் கொடுக்காத வாடகை, கரண்ட் பில் எல்லாம் சேர்த்து கட்ட வேண்டி வரும்.. இது தவிர அன்றாட செலவுகள்

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு மிக பெரிய அழுத்தத்தை எளிய மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனும் கவலை சூழ்கிறது

அரசு ₹1000 கொடுத்து ரேஷனில் சில பொருட்கள் கொடுத்ததுடன் முடித்து கொண்டது. இது போதுமா என்ன?

எதிர் கொள்ள இருக்கும் செலவுகள், அதன் இயலாமை சிலருக்கு குழந்தைகளின் படிப்பையே பாதிக்குமே? அது எத்தனை பெரிய இழப்பு? பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் போவது எல்லாம் கொடுமை.

மன உளைச்சல், கவலை, கடன், பொருளாதார சமபளமின்மை, விலைவாசி உயர்வு என அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மிகப்பெரியது. அவற்றை அவர்கள் வெற்றிகரமாக வென்று வர வேண்டும்

அரசு ஏதேனும் பொருளாதார உதவி அறிவித்தால் கூட பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1℅ இவர்களுக்காக ஒதுக்கினால் கூட போதும். இவர்கள் பிழைத்து கொள்வார்கள். அரசுக்கும் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

பார்க்கலாம் அரசு உதவுமா என

அதை விட முக்கியம், மே 4 ஆம் தேதியோடு முடியுமா என்பது.. அதற்கு மேலும் நீண்டால் இவர்களின் நிலை மிக மிக மோசமாகிவிட கூடும்

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

Printfriendly