Saturday, September 30, 2017

ஆயுத பூஜை – கலாச்சார மாற்றம்

ப்போதெல்லாம் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆயுத பூஜை என்பது அதன் உண்மையான தாத்பரியத்தில் இருந்து சற்றே விலகி முழுமையாக தெய்வ வழிபாடாகவே மாறிவிட்டது.

வழக்கமாக ஆயுத பூஜை என்பது நமது பணியிடங்களில் உள்ள கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு நடத்தப்படுவது. ஆண்டு முழுதும் இயங்கும் அவற்றை, அந்த வாரத்தில் முழுமையாக செப்பனிட்டு (Maintenance) சுத்தப்படுத்தி பெயிண்ட் அடித்து பக்காவாக ஓடுகிறதா என்றெல்லாம் முழுமையாக பரிசோதித்து விடுவார்கள். இதை பயன்படுத்தி அந்த இயந்திரங்களில் உள்ள அனைத்து சிறு பெரு பழுதுகளும் செப்பனிடப்பட்டு இயந்திரம் நல்ல முறையில் நீண்ட நாள் இயங்கும் அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பூஜை நாள் அன்று, கம்பெனிகளில் உள்ள அனைத்து கருவிகளுக்கும், இயந்திரங்களுக்கும் பூஜை நடக்கும். அந்தந்த இயந்திரங்களை இயக்குவோர் தான் அந்தந்த இயந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். உதாரணமாக ஒரு சீட் மெட்டல் பேப்ரிகேஷன் கம்பெனி என வைத்துக்கொண்டால் அங்கே இருக்கும் கட்டிங் மெஷின், ரோலிங்க் மெஷின், வெல்டிங் மெஷின், டிரில்லிங்க் மெஷின், லேத், மில்லிங்க் மெஷின், பிரஸ், கட்டர் என அனைத்து மெஷிங்களும் புதுப்பிக்கப்பட்டு எல்லாவற்றுக்கும் பெயிண்ட் அடித்து அதற்கெல்லாம் பூ, பொட்டு, வாழைமரம், கரும்பு வைத்து ரெடி செய்து கொள்வார்கள்.



கம்பெனியின் மூத்த தொழிலாளி முன்னிலையில் அந்தந்த மெஷின் ஆபரேட்டர்கள் தங்கள் இயந்திரங்களுக்கு சின்ன சின்னதாக பூஜைகள் செய்வார்கள். எல்லா இயந்திரங்களுக்கும் பூஜைகள் நடந்தபின் தான் மெயின் பூஜை நடக்கும்.

இந்த மெயின் பூஜை என்பது, கம்பெனியின் மிக முக்கியமான இயந்திரம் அல்லது அலுவலக அறை ஆகிய ஏதேனும் ஒன்றில் நடக்கும். இதில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த பூஜையை செய்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

அந்தந்த இயந்தரங்களால் வேலைவாய்ப்பும் அதன் மூலமாக வாழ்வாதாரமும் பெறும் தொழிலாளிகள் முதலில் தங்கள் இயந்திரங்களுக்கு பூஜை செய்துவிட்டு தான் மெயின் பூஜைக்கு வருகிறார்கள். இது அவர்களது தொழில் மீது ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான பக்தியை கொண்டு தருகிறது.

மெயின் பூஜையில் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து நின்று பூஜை செய்வது அவர்களுக்கு மற்றுமொரு தன்னம்பிக்கையை தருகிறது.

ஒரே நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் தனித்தனி மெயின் பூஜைகள் செய்யப்படாது.

மெயின் பூஜை முடிந்த பின்னால் அனைவரும் அவரவர் இயந்திரங்களுக்கு சென்று அதை ஒரு முறை இயக்கி பார்ப்பார்கள். இதற்காகவே, பூஜைக்கு பின் செய்யவேண்டியவை என சின்ன சின்ன வேலைகளை தேர்ந்தெடுத்து அதற்கான எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பார்கள். உதாரணமாக ஒரு லேத் எனில், பூஜை முடிந்ததும் ஒரு ரோட்டரை கடைந்து பார்ப்பார்கள். இதற்காக ரோட்டரை சக்கில் (Chuck) ஏற்கனவே பொருத்தி அதற்கான டூல் எல்லாம் செட் செய்து தயாராக வைத்து அதன் பின் தான் பூஜையே செய்திருப்பார்கள்.

இப்படி இயக்கப்படும் போது எந்த தடங்களும் பிரச்சனைகளும் இன்றி நல்லபடியாக அவை நடக்கவேண்டும் என்பது அவரவர் செண்டிமெண்ட்.

இதுவே வாகனங்கள் எனில், அதன் டிரைவர்கள் அவற்றுக்கு பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் எல்லா சக்கரங்களிலும் எலுமிச்சம்பழம் வைத்து அதன் மீது வாகனத்தை ஏற்றி அப்படியே ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து நிறுத்துவார்கள்.

பூஜை முடிந்தபின் பார்த்தால் கம்பெனி கிரவுண்ட், ஆர்.டி.ஓ சோதனை செய்யும் டெஸ்ட் கிரவுண்ட் மாதிரி இருக்கும். எல்லோரும் ஒரே நேரத்தில் வண்டிகளை எடுத்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்து வைப்பார்கள்.

குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், இதில் தெய்வ படங்களுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் இல்லை. இயந்திரங்கள், அதை சார்ந்த கருவிகள், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கு தான் பூஜை நடக்கும். அப்படி தீபாராதனை காட்டப்பட்டு செல்லும் போது வழியில் சாமி படங்கள் இருந்தால், நமக்குள் இருக்கும் இயல்பான பக்தியின் அடிப்படையில் அதற்கும் காட்டப்படும். அவ்வளவு தான்.

நான் பல ஆண்டுகள் முன்பு வேலை ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய இசுலாமிய தோழர்கள் தாங்கள் பணி செய்யும் லேத், பிளாஸ்மா கட்டர். ஸ்பாட் வெல்டிங் மெஷின் போன்றவற்றுக்கெல்லாம் ஆத்மார்த்தமாக தீபாராதனை காட்டி பூஜை செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் அந்த பூஜைக்கான சுத்தப்படுத்துதல் பெயிண்டிங் ஆகியவையும் செய்திருக்கிறேன். அவ்வளவு பக்தியாக செய்வார்கள்.

இந்த பூஜையை பொறுத்தவரை செய்யும் முறை இந்து சமய அடிப்படையிலான பூ, பழம், தேங்காய், தீபாராதனை என்றெல்லாம் இருந்தாலும் கூட இதன் நோக்கம் என்பது நமக்கு வாழ்வு தரும் கருவிகளுக்கான வழிபாடு என்கிற அளவிலே தான் நான் கண்டு வந்திருக்கிறேன்.

ஆனால் இப்போதெல்லாம் வழக்கங்கள் முழுமையாக மாறிவிட்டது.



பல நிறுவனங்களில் இயந்திரங்களுக்கான தனித்தனி வழிபாடுகள் இல்லை. மூத்த தொழிலாளியை கொண்டு நடத்தப்படும் பூஜைகள் இல்லை. மாறாக எல்லா தெய்வ பாடங்களையும், சில கம்பெனிகளில் சிலைகளையும் வைத்து பண்டிதர்கள், புரோகிதர்களை கொண்டு யாக பூஜைகளே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. ஆயுதங்களுக்கான பூஜை என்பது முற்றிலுமாக ஒழிந்து, தெய்வங்களுக்கான பூஜை என்கிற நிலைக்கு இது மாறிவிட்டது.

அதிலும், தொழிலாளர்கள், அந்த நிறுவனங்களை இதுவரையும் உயர்த்தி வந்தவர்கள் எல்லாம் பின்னில் எங்கோ நிற்க, புரோகிதர்களும் பண்டிதர்களும் புகைமண்டலத்துக்குள் அமர்ந்து புரியாத பாஷையில் பூஜை செய்து கொண்டிருப்பதெல்லாம், ஆயுத பூஜை என்கிற கலாச்சார வழக்கத்தையும், அதன் நோக்கத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டன.

மெல்ல மெல்ல நம்மை அறியாமல் எத்தனையோ விஷயங்கள் நமது இயல்பை மாற்றி அமைத்து விட்டன. அதில் ஒன்றாக இந்த ஆயுத பூஜையும் சேர்ந்து கொண்டதிலும், அது தான் நமக்கு பெருமை என அதை ஏற்றுக்கொண்டதிலும் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை.


ஏன்னா, நம்ம டிசைன் அப்படி!

Wednesday, September 27, 2017

பொருளாதார சீரழிவின் துவக்கம்

ரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்....

கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாக தணிக்கை செய்ய சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர்களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வரி வருவாயை அதிகரிக்கும் என சொல்ல பட்ட ஜி.எஸ்.டி மூலம், அரசுக்கான வரி வருவாய் வெறும் 29000 கோடி தான் வந்திருக்கிறது என்பது (94000 – 65000). இது முந்தைய வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தான். இதிலேயே ஜி.எஸ்.டியின் நோக்கம் அடிபட்டு போய்விட்டது.

அடுத்த அடி, நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டியில் முறையாக பதிவு செய்த 68 லட்சம் வணிகர்களில் ஆகஸ்டு மாதம் ரிடர்ன் தாக்கல் செய்திருப்பவர்கள் வெறும் 33 லட்சம் பேர் தான் என சொல்லி இருப்பது கவனிக்க தக்கது. இதன் படி பார்த்தால் வரி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டிக்கு முன்பாக எக்ஸைஸ், செர்வீஸ் டாக்ஸ், வாட் ஆகிய அனைத்தும் உட்பட 1.20 கோடி வணிகர்கள் இருந்த நிலையில் இப்போது வெறும் 68 லட்சம் வணிகர்கள் தான் இருக்கிறார்கள் என அரசே சொல்கிறது. அந்த 68 லட்சத்திலும் 33 லட்சம் பேர் தான் வரி செலுத்தி இருப்பதாகவும் அரசு சொல்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என்றும், வரி ஏய்ப்புக்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் அரசு சொல்லி வந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கள் அதற்கு எதிரான காட்சிகளை தான் நமக்கு ஆதாரமாக தருகிறது. 

ஆக, ஜி.எஸ்.டி அதன் நோக்கத்தை சரியாக சென்றடையவில்லை என்பது தெளிவு.

சரி, அதென்ன அது 65000 கோடி ரீஃபண்ட்? ஏன் அரசு அதை தரணும்? இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது? இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்வி வருதுல்ல? வாங்க அதை கொஞ்சம் ஜாலியா விவாதிக்கலாம்.

எக்ஸ்போர்ட் செய்வது என்பது வெறும் கம்பெனிகள் மட்டுமே செய்வது அல்ல. தனி நபர்களும் சிறு வணிகர்களும் தான் அதிகமாக எக்ஸ்போர்ட் செய்கிறார்கள். கணக்குப்படி மொத்த எக்ஸ்போர்ட்டில் 43% தான் கம்பெனிகள் செய்கின்றன. பாக்கி எல்லாம் தனி நபர்கள் அல்லது சிறு வணிகர்கள்.



அவர்கள் அப்படி என்ன தான் எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்? கம்பெனிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை எக்ஸ்போர்ட் செய்வார்கள். ஆனால் தனிநபர்கள் மற்வர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதை எக்ஸ்போர்ட் செய்வார்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள், தேங்காய், பூக்கள், துணிகள், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டம்கள். வெளிநாடுகளில் இவற்றுக்கு நிறைய கிராக்கி இருப்பதால் தினம் தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவில் பூக்களுக்கும், அரபு நாடுகளின் நம் உணவு பொருட்களுக்கும் நிறைய கிராக்கி.

இப்படி எக்ஸ்போர்ட் செய்யும் தனி நபர்கள் / சிறு வணிகர்கள் மெர்செண்ட் எக்ஸ்போர்ட்டர் (Merchant Exporter) என்கிற கேட்டகரியில் வருவார்கள். அதாவது அவர்கள் வெறும் வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வளவே. இதற்கு முதலீடு குறைவு ஆனால் பெரிய லாபம்.

உதாரணமாக நான் இந்த தொழில் செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் இங்கே பக்கத்தில் உள்ள திருவள்ளூரிலோ  ஊத்துக்கோட்டையிலோ எனக்கு தெரிந்த தோட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 25 நாள் கடனுக்கு வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த பொருட்களை அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும் வண்டி வாடகை, டாகுமெண்ட் செலவு, ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் செலவு என சுமார் 30,000 ரூபாய் முடக்கினால் போதும். எனது கஸ்ட்மருக்கு நான் நிர்ணயிக்கும் விலை 1,50,000 எனில், அந்த பொருட்கள் கிடைத்த 15 நாளுக்குள் கஸ்டமர்  எனக்கு பணம் அனுப்புகிறார் என வைத்துக்கொண்டால் அந்த பணத்தை வைத்து காய்கறிகள் வாங்கியோருக்கு 1,00,000 கொடுத்துவிட்டால் போக்குவரத்து செலவு 30,000 போக எனக்கு நிகர லாபம் 20,000.

இது ஒரு தொடர் நிகழ்வு என்பதால் மாதத்துக்கு 4 அல்லது 5 முறை இத்தகைய வர்த்தகம் நடைபெறும்.. சுமார் 1,00,000 வரை கையில் லாபம் நிற்கும். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.



காய்கறிகள் மட்டும் அல்லாமல், பல வகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றது. அவற்றில் சிலவற்றுக்கு வரி இருந்தாலும் Merchant Export என்பதால் வரி விலக்கு இருந்தது. எனவே எந்த இழப்பும் இல்லாமல் இந்த ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருந்தது.

இப்போது புதிய ஜி.எஸ்.டி விதிகள் படி, Merchant Export முறை இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்தவேண்டும். அதை ஏற்றுமதி செய்துவிட்டு, அப்படி ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்களை அரசிடம் காண்பித்து, நாம் செலுத்திய வரியை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எப்படியும் அரசுக்கு நயாபைசா வருமானம் இல்லை. நாம் வாங்கும் போது செலுத்திய வரியை பின்னர் அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். (முன்பு வரி செலுத்தவும் தேவையில்லை, திரும்ப பெறும் நடைமுறையும் இல்லை).

இது ஈஸி தானே என பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசு இந்த நிமிஷம் வரை ரீஃபண்ட் ஆப்சனை செயல்படுத்தவே இல்லை. இதன் விளைவு?

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாங்கிய பொருட்களுக்கான வரியை ஏற்கனவே கட்டியாச்சு. ஆனா அதை ரீஃபண்ட் வாங்கும் வசதி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் அந்த தொகை எல்லாம் அங்கே முடங்கி கிடக்கு. எனக்கு கிடைக்கும் லாபம் ல்லாம் இப்போ அரசிடம். அது எப்போ வரும்னு எந்த அறிகுறியும் இல்லை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் வரும். அதில் சந்தேகம் இல்லை.

வெறும் 30,000 முதலீடு வெச்சு ரோட்டெஷன் செஞ்சு சம்பாதிச்சது மாறி இப்போ வரியே மாசம் 4 x 28,000 கட்டி கட்டி மொத்தமா 2,24,000 அரசுகிட்டே முடங்கிக் கிடந்தா எப்படி தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?


இப்படி எல்லோரும் பைசா வந்தபின்னால் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு எக்ஸ்போர்ட் பிசினசை நிறுத்தினால் அன்னியசெலாவணி பிரச்சனை புதுசா முளைக்கும். அதாவது நமது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிச்சா அதனால் ஏற்படும் Current Account Deficit (CAD). அது ஒரு தனி பெரும் கதை. இது டாலர் மதிப்பை உயர்த்தி ரூபாய் மதிப்பை குறைத்து மொத்தமா ஒரு நம்மை நசுக்கிடும். மேலும் சில காலம் இங்கிருந்து எக்ஸ்போர்ட் இல்லைன்னா நம்ம கஸ்டமர் நமக்காக காத்திருக்காம மற்ற நாடுகளில் இருந்து வாங்க ஆரம்பிச்சிருவான்.

இது ஒரு புறம்.

அரசு முன்பே சொன்னது மாதிரி ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாயாக 94000 கோடி வந்திருக்குன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ளே அதுல இப்படி திரும்ப கிடைக்கவேண்டிய ரீஃபண்ட் தொகை 65000 கோடின்ற கணக்கு வந்ததும் ரெண்டு அதிர்ச்சி.

ஒண்ணு, 65000 கோடி திரும்ப கொடுக்கற அளவுக்கு இப்போ பணம் இல்லையாம்.
ரெண்டு. 94000 கோடியில் 65000 கோடி ரீபண்டுன்னா மொத்தமா வந்த வரியே வெறும் 30000 கோடி தான். இது முந்தைய வரி வசூலை விட ரொம்ப குறைவு. ஆக மொத்தம் ஜி.எஸ்.டி எல்லா எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்கிருச்சு.

இப்போ அரசு நிதி பற்றாக்குறையை நோக்கி போயிட்டிருக்கு. அது பொருளாதார மந்த நிலையா மாறி பொருளாதார சீர்கெடா மாறுவதற்கு அதிக காலம் ஆகாது. ஏன்னா ஏற்கனவே எல்லா தொழில்களும் மெல்ல மெல்ல முடங்கிட்டு இருக்கு. எக்ஸ்போர்ட் துறையும் தேங்கிருச்சுன்னா வேலை வாய்ப்பு குறையும், அந்நிய செலாவணி பிரச்சனை, ரீபண்டுக்கான தொகை இல்லாமை, வரி வருவாய் குறைவு, வரி ஏய்ப்பு மூலம் எதிர்பாராத நஷ்டம். எல்லாமா சேர்ந்து அரசின் கஜானாவுக்கு தான் பிரச்சனை.

அதனால் தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பல முக்கிய அவசர கூட்டங்கள் நடந்திட்டு இருக்கு.

காத்திருப்போம்.. அரசு ஒரு நல்ல முடிவு எடுத்து இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு காணும் என்று!




Tuesday, September 26, 2017

ஜெ.மரணம் - எங்கே நேர்ந்த தவறு?


திண்டுக்கல் சீனிவாசன்

இந்த பெயர் தான் சில நாட்களாக மிக பிரபலம்


முதல்வராக இருந்த ஜெ. உடல்நிலை குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின் நடந்த அத்தனை நாடகங்களும் நாம் அறிந்ததே. இப்போது சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகவே சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

அதாவது, ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில் அவரை நாங்கள் யாரும் பார்க்கவே இல்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாமே மக்களை பதட்டப்படாமல் வைத்திருப்பதற்காக சொல்லப்பட்ட பொய். என பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார்.

இதன் மூலம் இப்போது மீண்டும் பல பல கேள்விகள் முளைத்து எழுகின்றன.

வெறும் காய்ச்சல் & நீர்ச்சத்து குறைபாடு என சேர்க்கப்பட்ட ஜெ.வுக்கு உண்மையில் என்ன தான் பிரச்சனை?

அப்பல்லோவில் கடைசி வரை கூடவே இருந்து கவனித்து கொண்டது யார். (தினகரன் இப்போது திடீரென்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சசிகலாவை கூட அனுமதிக்கவில்லை என சொல்வதை பார்த்தால் தனியாக கவனிப்பார் யாருமின்றி தான் சிகிச்சை பெற்றாரா?)

உடல் நலம் பெற்று ஓய்வில் இருப்பதாகவும், காவிரி வழக்கு விஷயமாக அப்பல்லோவிலேயே அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், வழக்கறிஞர்களுக்கே வழிகாட்டியதாகவும் செய்தி வெளியிடவேண்டிய நோக்கம் என்ன?

வெறும் மூன்று நாள் தான் சுயநினைவோடு இருந்தார் என தீபக் இப்போது சொல்வது உண்மையானால், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வை ஜெ.தான் செய்தார் எனவும், தேர்தல் ஆணயத்துக்கான பிரமாண பத்திரத்தில் ஜெ. தான் கைரேகை பதித்தார் எனவும் அதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சாட்சி எனவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டது எதற்காக?

ஆளுநர், அமைச்சர்கள் ஏன் அவரது மெய்க்காப்பாளர்கள் கூட பார்க்க அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நிலைமை?

இன்னும் இது போன்ற பல விவகாரமான கேள்விகள் எல்லாம் வராமல் இல்லை.

அப்போதே பலரும் இது பற்றிய சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். திமுக தலைவர் கலைஞர் இன்னும் ஒரு படி மேலே போய், அரசு அதிகாரிகள் நியாயமாக வெளியிட்டிருக்கவேண்டிய அறிக்கைகள், புகைபடங்கள் கூட வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன் என்றே கூட கேள்வி எழுப்பி இருந்தார்.

***

ஜெ. குறித்த சின்ன சின்ன செய்திகள் வந்தப்பவே அதைப் பற்றி விசாரிக்கறதை விட்டுட்டு அப்படி தகவல் தருவோர் மீது நடவடிக்கைன்னு போலீஸ் அறிவிச்சதை விட முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

போலீஸ், அரசின் கீழ் வந்தாலும் அவர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கு. சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு.

தனது துறை அமைச்சரே தவறு செய்தாலும் அதை உளவுத்துறை மூலம் கண்காணித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து சட்டத்தை காக்கும் பொறுப்பு போலீசினுடையது.


ஆனால் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, ஏன் எதனால் என்றெல்லாம் விசாரித்து எங்கேனும் தவறு நடக்கிறதா என கண்காணித்திருக்கவேண்டிய போலீஸ், வாளாவிருந்தது மட்டுமல்ல, அவர் பற்றிய தகவல்களை கூட மறைத்துவிட்டது.

அரசுகள் மாறலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நிரந்தரம். அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலும் கூட அரசு அதிகாரிகள் செயல்படமுடியும். அதனால் தான் அவர்கள் மாநில ஆட்சிப்பணியின் கீழ் அல்லாமல் மத்திய ஆட்சிப்பணியின் கீழ் வருகிறார்கள்.

அவர்களாவது ஜெ. குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். தலைமைச்செயலாளர் தான் அதற்கான பொறுப்பாளர்.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளும் போலீஸ் துறையும் தத்தம் கடமைகளில் இருந்து தவறியதாலேயே நம் முக்கியமான தலைவரை நாம் இழந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போதேனும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடமைகளை உடனடியாக எடுத்து நடந்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதுடன், யாரேனும் இதற்கு காரணமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

அதுதான் அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் இந்திய சட்டம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்துக்கும் அழகு!

***

இப்போது தமிழக அரசு நீதியரசர் ஆறுமுகசாமி அவர்களை விசாரணை நீதிபதியாக அறிவித்து இருக்கிறது.

ஜெ.வுக்கு என்ன நடந்தது, ஏன் எல்லோரும் அனுமதி மறுக்கப்பட்டனர், அத்தனை நாளும் நடந்த விஷயங்கள் யார் கட்டுப்பாட்டில் நடந்தது, அரசு அதிகாரிகளும் போலீசும் ஏன் இப்படி மொத்தமாக கடமை தவறி அடங்கி இருந்தார்கள் என்பன போன்ற கேள்விகளுடன், எயிம்ஸ், லண்டன் டாக்டர், அப்பல்லோ கொடுத்த சிகிச்சை விவரங்களையும் நீதிபதி வெளிக்கொணர்ந்து ஆராய வேண்டும்.

ஜெ. தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர். பெரும்பாலான மக்களால் நேசிக்கப்பட்டவர். அவரது இழப்பில் உள்ள மர்மங்களையும், அதற்கான சதிகள் ஏதும் இருந்தால் அதையும் வெளிக்கொண்டு வருவதோடு, கடமை தவறிய அரசு அதிகாரிகள், உண்மை தெரிந்தும் மறைத்த மற்ற பெரும் தலைவர்கள் என எல்லோர் மீதும் தண்டனைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆசை.

நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இது தான் நடந்தது.. இவர்கள் தான் காரண கர்த்தாக்கள்.. இவர்கள் எல்லோரும் அதற்கு உடந்தை.. இவர்களுக்கு எல்லாம் இது தான் தண்டனை என்கிற பரிந்துரையேனும் குறைந்தபட்சம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறுமில்லை.

நீதிபதி ஆறுமுகசாமி அவர்கள் அதை தக்க விதத்தில் சட்டத்திற்குட்பட்டு  பரிந்துரைப்பார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!


Printfriendly