Wednesday, December 20, 2017

டிடிவிதி எனும் ராஜதந்திரி

எல்லாம் நல்லபடியாகத் தான் இருந்தது...

தேர்தல் நெருக்கத்தில் பிரீத்தி ரெட்டி கொடுத்த பேட்டி வெளி வரும்வரை..

அது டிடிவி மீது மறைமுகமாக பல களங்கங்களை விதைக்க வழிசெய்தது.

மருத்துவமனைக்கு வரும்போதே சுவாசம் இல்லை என்கிற அந்த பேட்டி, சசி & கோ மீது சந்தேகங்களை வளர்த்துக்கொள்ள போதுமானதாக இருந்தது.

அதன் பின் சிகிச்சை அதன் முன்னேற்றம் பற்றியெல்லாம் பிரதாப் ரெட்டி கருத்து சொல்ல 'மறுத்தது' மேலும் பல புதிய சந்தேகங்களை கிளப்ப வழி செய்தது.

இவை டிடிவிக்கு எதிரான ஒரு மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

ஆனாலும் இந்த பேட்டிகள் தேர்தல் விதிமுறைகள் பட்டியலில் வரவில்லை என்பது வேறு விஷயம்.

தங்கள் மீதான அத்தனை களங்கங்களையும் துடைக்க வேண்டுமானால் மக்கள் சந்தேகப்படுவது போல ஜெ. மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தார் என்பதை தகர்க்க வேண்டும்.

டிடிவிக்கு வீடியோவை வெளியிடுவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.

இந்த ஒற்றை வீடியோ டிடிவி மீதான களங்கத்தை துடைத்துப்போட்டதும் அல்லாமல், ஜெ நல்லபடியாக தான் இருந்தார் என்பதையும் நவம்பர் இறுதிகளில் தான் பாதிப்பு அதிகமானதையும் தெளிவு படுத்துகிறது.

ஜெ. வின் சிகிச்சை மர்மமாக இருக்கும் வரையில் தான் அதிமுக & பாஜகவுக்கு நல்லது என்கிற நிலையில் இப்போது வீடியோ வெளியானது தான் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நல்லது தான்.

இப்போது சந்தேகத்தின் நிழல் திசை மாறி படிகிறது.

பாதுகாப்பு படை ஏன் விலக்கப்பட்டது? யார் அதற்கான முடிவை எடுத்தது? தமிழக அரசு ஏன் மருத்துவ குழு அமைக்கவில்லை? தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த தினசரி செய்தியறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை? நிர்வாகம் ஏன் நிழல்வெளியில் நடத்தப்பட்டது? ஜெ. எதிர்த்த திட்டங்கள் ஏன் அவசர கதியில் அனுமதிக்கப்பட்டது? போன்ற பல பல கேள்விகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

மக்களுக்கும் தெளிவு பிறந்திருக்கிறது.

அரசு அவசரம் அவசரமாக வழக்கு பதிந்திருப்பதும் அதைத்தான் உறுதி செய்கிறது.

டிடிவியின் காய் நகர்த்தல் அவர் விரும்பிய பலனை கொடுக்க தொடங்கி இருக்கிறது. அவரே எதிர்பாராத பலன்களையும் அது கொடுக்கக்கூடும்

வாழ்த்துக்கள் டிடிவி

Wednesday, November 8, 2017

டீமானிடைசேஷன் – வெற்றியா தோல்வியா?

இன்றோடு டீமானிடைசெஷன் கொண்டு வந்து ஓராண்டு ஆயிடுச்சு. எல்லா எதிர்க்கட்சிகளும் இதை கறுப்பு நாளா கொண்டாட, அரசோ இதை வெற்றி விழாவா கொண்டாடுது. மக்கள் நாம தான் குழம்பி கிடக்கிறோம். உண்மையில் இது கறுப்பு நாளா நல்ல நாளா? டீமானிடைசேஷன் வெற்றியா தோல்வியா? இப்படி ஒரு விடை தெரியாத கேள்வி இன்னும் இருக்குதுல்ல?

டீமானிடைசேஷன் நோக்கம் என்னவோ நல்லது தான். கருப்புப்பணம் கண்டுபிடிக்கப்படும், லஞ்சம் ஊழல் குறையும், தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்காமல் தடுக்கப்படும், போலி ரூபாய் நோட்டுக்கள் வராது, e-Transactions மேம்படும், பொருளாதாரம் வளரும்... இதெல்லாம் தான் அரசு சொன்ன நோக்கம்.

அதன் யதார்த்தம் என்னன்னு பார்ப்போம்!

புழக்கத்தில் இருந்த ரூ.1000 & ரூ.500 நோட்டுகளில் கிட்டத்தட்ட 99% பேங்குக்கு திரும்பி வந்திருச்சு. அதனால் கருப்புப்பணம் கண்டுபிடிக்கப்படலை! கருப்புப்பணம் எல்லாம் நிலமாகவும் தங்கமாகவும் சொத்துக்களாகவும் கிடப்பதால் கரன்சியா அதை கைப்பற்ற முடியாதுன்றதை அரசு இப்ப தான் புரிஞ்சிருக்கு.  



லஞ்சத்தை பொறுத்தவரை பணமா வாங்குறது குறைஞ்சிருக்கு. மாறா, பொருளா கேட்டு வாங்க ஆரம்பிச்சாங்க. அரசும் கொஞ்ச நாளிலேயே e-transactions முறையை டீலா விட்டுட்டதால் எல்லா இடங்களிலும் மீண்டும் பண பரிமாற்றமே நடக்க தொடங்கிருச்சு.  குறிப்பிட்ட அளவுக்கு மேல் யாரும் கரன்சி வாங்கிக்க முடியாதுன்னு அரசு சொன்னாலும் கிட்டத்தட்ட எல்லா ஊழல்வாதிகளும் கோடிக்கணக்கான ரூபாய்கள் புது கரன்சில தான் வெச்சிருக்காங்க. வெறும் 4000 ரூபாய்க்காக சாதாரண ஜனங்கள் பேங்க் வாசலில் நாள் கணக்கா காத்து கிடந்தப்ப, சில பேரு மட்டும் கட்டுக்கட்டா புது கரன்சி நோட்டை வாங்கி செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால பெருமையா வெளியிட்டபோதே, அரசு யார்  பக்கம் நிக்குதுன்றது பலருக்கும் புரிஞ்சுபோச்சு. வங்கிகளுக்கும் அரசுக்கும் எந்த தகவலும் இல்லாம அவங்க கைக்கு அவ்வளவு பணம் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஆக மொத்தம், லஞ்சம் ஊழல் செய்தவங்க சந்தோஷமா இருக்க தான் இந்த டீமானிடைசெஷன் உதவிச்சே தவிர சாதாரண ஜனங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

தீவிரவாதம் குறைஞ்சதா தெரியலை. பிஸினஸ் ஆஸ் யூசுவல் நிலை தான். இன்னும் சொல்லப்போனா இப்பல்லாம் சாப்பாடு பொட்டலம் கட்டிக்கொண்டு வந்து உக்காந்து அடிச்சிட்டு போறாங்க.

முன்னேல்லாம் கட்டுக்கட்டா வந்த கள்ள நோட்டுக்கள் இப்போ சூட்கேஸ் சூட்கேசா வந்திட்டிருக்க நிலையை பார்த்தால் அங்கேயும் அந்த நோக்கம் நிறைவேறலைன்றது புரியும். ரொம்ப செக்யூர்டு சிஸ்டம் உள்ள ஹை டெக் கரன்சின்னு எல்லாம் கலர் காலரா சொன்னாலும் ஆங்காங்கே போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றை பிடிச்சாங்க என்கிற செய்தியே, போலி நோட்டுக்கள் இருப்பதையும் புழக்கத்தில் கலந்திருப்பதையும் உறுதிப்படுத்திருச்சு.

e-Transactions உண்மையில் மேம்பட்டது தான். ஆனா 700 மில்லியன் டெபிட் கார்டுகள் இருக்கும் ஒரு நாட்டில் வெறும் 3 லட்சம் PoS மெஷிங்களை வெச்சுக்கிட்டு எப்படி அதை முழுமையா நிறைவேத்த முடியும்? இப்போ மீண்டும் எல்லோரும் பண பரிவர்த்தனைக்கே திரும்பிட்டாங்க. போன வருஷம் அவசரம் அவசரமா PoS, PayTM வாங்கின கடைகளில் கூட இப்போ e-Transactions ஏத்துக்கறதில்லை. பணமா கொடுங்கன்றாங்க.

e-Transactions க்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இருந்தும் அரசு அதை கோட்டை விட்டிருச்சு. டெபிட் கிரெடிட் கார்டுகளுக்கான செர்வீஸ் சார்ஜை ரத்து செய்யுறது, எல்லா கடைகளுக்கும் PoS மெஷிங்களை கொடுக்குறது, PayTM, BHIM மாதிரியான UPI க்களை எல்லா வர்த்தகத்துக்கும் பயன்படுத்த ஊக்குவிக்கிறதுன்னு இருந்திருந்தா, மக்கள் பணத்துக்கு பதிலா e-Transactions மூலமாவே எல்லாத்தையும் வாங்கிருப்பாங்க. ஆனா, e-Transactions பண்ணுங்க பண்ணுங்கன்னு சொன்ன அரசு அதுக்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை, ஒரு வருஷமாகியும் இன்னமும்   எடுக்கவே இல்லை.

இப்பவும் ஜூவல்லரி, ஹோட்டல், கிளினிக் மாதிரி பல இடங்களில் மட்டும் இல்லாம பல கடைகளில் கூட பணம் தான் வேண்டும் என சொல்றாங்க. அப்புறம் எப்படி e-Transactions வளரும்?

பொருளாதாரம் வளரும்னு சொன்னது தான் எந்த லாஜிக்குமே இல்லாம தொங்கல்ல இருக்கு. பொருளாதாரத்துக்கு தேவை பணம். அது பணமாவோ e-Transactions மூலமாவோ எப்படி வந்தாலும் விளைவு ஒண்ணு தான் என அரசு நினைச்சுது.

ஆனா, டீமானிடைசெஷன் அமலான முதல் சில வாரங்களில் யாருக்கிட்டேயும் பணம் இல்லாததால் பல பல தொழில்கள் முடங்கி போச்சு. பலருக்கு வேலையிழப்பு. அதன் காரணமா கையில் பணம் இல்லை. வாங்குன கடனை கட்டலை. வராக்கடன் அதிகரிப்பு. வங்கிகள் நிதி இருப்பு குறைவுன்னு அது ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வா மொத்த பொருளாதாரத்தையும் தகர்த்திருச்சு. பொருளாதார மந்த நிலைல இருந்து பொருளாதார சீரழிவை நோக்கி கொண்டு சென்றது தான் மிச்சம்.



அரசு டீமானிடைசெஷன் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே, சரியா திட்டமிட்டு, புது ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவில் அச்சடிச்சு வெச்சு, ATM மெஷிங்களில் புது ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதற்கான மாடிபிக்கேஷன்கள் செய்துவிட்டு அப்புறமா அறிவிச்சிருந்தா, ஒரு வேளை இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. ஆனா பணத்தை செல்லாதுன்னு அறிவிச்சிட்டு அதுக்கு பதிலான புது பணத்தை வங்கிகளுக்கே அனுப்பாம இருந்ததால் மக்கள் கணக்கில் பணமிருந்தும் கையில் பணமில்லாம பட்டினி கிடந்த கதைகளும், 4000 ரூபாய் பணத்துக்காக நாள் கணக்கா காத்திருந்து லைன்லேயே செத்து வீழ்ந்த செய்திகளுமா அரசுக்கு எதிரான ஒரு கட்டுக்கடங்காத கோப எரிமலையை உருவாக்கி வெச்சிருச்சு.

வீட்டில பிரியாணி செய்யுறேன்.. எல்லோரும் சாப்பிட்டு சந்தோஷமா இருங்கன்னு ஆசை காட்டிட்டு, தாளிக்கிற நேரத்தில பட்டை கிராம்பு வாங்கலைன்றது ஞாபகம் வந்து பாதியிலேயே ஸ்டவ்வை ஆஃப் செஞ்சிட்டு பட்டை கிராம்பு வாங்க ஓடி போய் மொத்த சமையலையும் சொதப்பின கதையாயிருச்சு டீமானிடைசெஷன் அமலாக்கம்.

அதுக்குத்தான் அந்தந்த வேலையை அந்தந்த ஞானம் உள்ளவங்க செய்யணும்னு சொல்றது. நானும் அவங்க ஐடியாவை செய்யுறேன்னு இறங்கினா இப்படித்தான்.

ஆக மொத்தம், டீமானிடைசெஷன் எந்த நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டதா சொல்லப்பட்டதோ அதில் ஒண்ணு கூட உருப்படியா நடக்கலை. இப்பவும் அரசு அதுக்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலைன்றது தான் வருத்தம்.

சந்தேகம் இல்லாம டீமானிடைசெஷன் தோல்வி தான், இது ஒரு கறுப்பு நாள் தான். குறிச்சு வெச்சுக்கோங்க!





Saturday, October 7, 2017

ஜி.எஸ்.டி – குழப்பத்திலிருந்து சிக்கலுக்கு!

நேற்றைய தினம் நடந்த 22ஆம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சிறு / குறு தொழில் செய்வோரும் ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரும் படும் இன்னல்களை என்னைப்போன்றோர் நாயாய் பேயாய் கத்திய பின், இப்போது தான் அது அரசின் செவிகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் அவர்களுக்கெல்லாம் ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சந்தோஷம் வந்தாலும், அதெல்லாம் அந்த முடிவுகளை அலசி ஆராய்கையில் வடிந்துபோனது.

உண்மையில் சிறு குறு வணிகர்களுக்கும் ஏற்றுமதி செய்வோருக்கும் நல்லது செய்வதாக சொல்லி, கிட்டத்தட்ட பெரிய இடியை தான் இறக்கி இருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில்.

அத்தகைய இடிகளில் இருந்து சில குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் இனி மாதம் தோறும் வரி செலுத்த தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தினால் போதும்:

இந்த அறிவிப்பு அவர்களுக்கான சலுகையாக பலராலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நானும் கூட முதலில் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள சிக்கல்களை பார்த்தபோது அவர்களை பற்றி பரிதாபப்படவே முடிந்தது.

தற்போது ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவோர் ரிவர்ஸ் சார்ஜ் (RCM) முறையில் வரியை அவர்கள் சார்பாக அடைக்கவேண்டும் என்கிற ஒரு நிபந்தனை இருப்பதால் பலரும் பதிவு செய்யப்படாத வணிகர்களை புறக்கணிக்க தொடங்கி அவர்களது தொழில் தேய்பிறையாகி வருவது நீங்கள் அறிந்ததே.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4 கோடி பேர் இருக்கலாம். இது குறைவாக இருக்கிறதே என அரசு சங்கடப்பட்டதோ என்னவோ, நேற்றைய தினம் புதிதாக மற்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அது தான் ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோருக்கு காலாண்டு வரி தாக்கல் முறை. இதில் என்ன பிரச்சனை?

ஜி.எஸ்.டியில் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை நாம் செலுத்தவேண்டிய வரிக்கு கழித்துக்கொள்ளலாம் (Set off). இது முன்பு போல மெனுவல் எண்டிரி ஆக அல்லாமல், ஆட்டோமாடிக் எண்டிரி ஆக ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது நமக்கு பொருட்களை விற்பவர் அந்த விவரங்களை (Outward Supplies) GSTR-1 ரிட்டர்னில் தாக்கல் செய்தால் தான் அது நமது GSTR-2 (Inward Supplies) ரிட்டர்னில் ஆடோமாடிக்காக வரும். அந்த வரியை நாம் எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.

நேற்று அரசு அறிவித்த புதிய விதியின் கீழ், நாம் பொருட்களை வாங்கிய வர்த்தகர் பதிவு பெற்றவராக இருந்தாலும், அவர் இப்போது போல மாதாமாதம் வரி தாக்கல் செய்ய தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

இதில் சிக்கல் என்னவென்றால், நாம் அப்படி பட்ட வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி இருந்தால், அவர்கள் வரி தாக்கல் செய்யும் வரை நமக்கு ITC கிடைக்காது. இது போன்ற வணிகர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, அதன் வரி வருவாய் கூடுதலாக இருந்தால், அதை நாம் உபயோகப்படுத்த 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை நமது வரியை நாம் பணம் கட்டி தான் செலுத்த வேண்டி இருக்கும்.

இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது உங்களால் ஊகிக்கக்கூடியதே! அதே தான்!  இது போன்ற வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நாம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க தொடங்குவோம். அப்படியாக 20 லட்சம் முதல் 1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போ எண்ணிக்கை கணிசமாக உயருமில்லையா? அரசு அதை தான் எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ?

4 மாதங்கள் காத்திருப்பதற்கு பதிலாக நாமே ஏன் மாதாமாதம் GSTR-2 ரிட்டர்னில் மெனுவலாக எண்டிரி செய்து ITC எடுத்துக்கொள்ள கூடாது என நீங்கள் கேட்கலாம்.  அப்படி செய்தாலும் ஓகே தான். ஆனால் 4 மாதம் கழித்து அது ஆட்டோமேடிக்காக வரும்போது அதில் இருந்து நாம் வரியை எடுத்த பில்களை எல்லாம் தேடி தேடி நீக்கவேண்டி இருக்கும். இது பெரிய நொச்சு பிடிச்ச வேலை. அதற்கு நீங்கள் தயார் எனில், உங்களிடம் இது போன்ற வர்த்தகர்கள் குறைவு எனில் இந்த முறையை பின்பற்றலாம். பொதுவாக அதிக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இது தலைவலியாக முடியும். எனவே சிறு குறு வணிகர்களின் நிலை கஷ்டம் தான்.
******
2. எக்ஸ்போர்ட் ரீஃபண்ட் உடனடியாக வழங்க நடவடிக்கை. ஈ-வாலட் மூலம் கொடுக்கப்படும்.

போன பதிவில் எக்ஸ்போர்ட் செய்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது முதலீடெல்லாம் முடங்கி கிடப்பதையும் படித்திருப்பீர்கள். இப்போது அப்படி முடங்கி கிடக்கும் முதலீட்டை அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 



ஆனால் இதிலும் சந்தோஷத்துக்கு பதிலாக சங்கடமே வந்து தொலைக்கிறது.

அதாவது ஜூலை மாத எக்ஸ்போர்ட் ரீபண்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்துக்கிடப்பவர்களுக்கு ரீபண்டு உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால் ரீபண்டு அப்ளை செய்வதற்கான வசதியே இன்று வரை ஜி‌.எஸ்.டி போர்டலில் கொண்டுவரவில்லை. இப்படி இருக்க, யாருமே அப்ளை செய்திருக்க முடியாத ஒரு விஷயத்தை அரசு தருவதாக சொல்வது இடிக்கிறது என்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், அப்படி கொடுக்கப்படும் ரீபண்ட் முன்பெல்லாம் செக்காக தருவது மாறி இப்போது ஈ-வாலட் முறையில் தான் வழங்கப்படும் என்றும் அதை ஜி.எஸ்.டி வரி செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருப்பது மற்றொரு இடி.

ஜி.எஸ்.டி வரி செலுத்தும் நிலையே வராதவர்கள் தான் தங்களிடம் இருக்கும் ITC ஐ காசாக்கும் வகையில் ரீபண்டுக்கு அப்ளை செய்வார்கள். வரி செலுத்தும் நிலை இருந்தால் அதை வைத்து வரியை செலுத்திவிட்டு போய்ட்டே இருப்பார்கள்.

தங்களிடம் மிச்சமிருக்கும் ITC, எக்ஸ்போர்ட்டுக்கு கட்டிவிட்டு அதை ரீபண்டாக்க காசாக வாங்கிக்கொண்டால் தான் முதலீடு கைக்கு வரும். ஆனால் அரசு அதை வாலட்டில் வரவு வைக்குமாம் அதை வைத்து நாம் வரி கட்டிக்கொள்ளலாமாம் என்றால் எந்த வரியை கட்டுவது?

சுருக்கமாக சொல்வதானால் ITC லெட்ஜரில் இருந்து Cash லெட்ஜருக்கு அந்த தொகை மாறும். இதை தவிர தம்படி பிரயோஜனம் கிடையாது நமக்கு. மொத்தத்தில் முடக்கப்பட்ட ITC முடக்கப்பட்டதாகவே இருக்கும்.

இந்த முடிவு நமக்கு மறைமுகமாக சொல்லும் ஒரு கொசுறு செய்தி என்னவென்றால், அரசிடம் ரீபண்ட் வழங்க பணம் இல்லையாமே என்கிற ஊகத்தை உண்மை என நிறுவி இருக்கிறது அரசு!
******
3. ரூ. 50,000 க்கு மேல் நகை வாங்கினால், அப்படி வாங்குபவரின் பான் & ஆதார் எண்ணை கொடுக்கவேண்டியதில்லை.

ஊழல் & கருப்பு பணத்துக்கு எதிரான போராக தனது நிதி சீர்திருத்தங்களை வர்ணித்துக்கொண்டிருக்கும் அரசு தான் இந்த முடிவை அறிவித்து இருக்கிறது. ஆச்சரியமாயில்லை?

இனி யார் வேண்டுமானாலும் தன்னிடம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை தங்கமாக மாற்றி கொள்ளலாம். பணமாக வாங்கப்படும் லஞ்சம் இனி தங்கமாக வாங்கிக்கொள்ள எந்த தடையும் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் பணத்தை கொடுத்து தங்கம் வாங்கிக்கொள்ளலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். வாங்குவோர் தம்மை பற்றிய எந்த குறிப்பையும் கொடுக்கவும் தேவை இல்லை. ஏற்கனவே நகைக்கடைகள் பில் இல்லாமலும் வரி கட்டாமலும் தான் பெரும்பாலான வணிகத்தையே செய்துவருகிறார்கள் என்பதால், அவர்களுக்கும் சிக்கல் இல்லை.

எனவே, கருப்புப்பணத்தை நிலமாக பொருளாக முதலீடு செய்து வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக தங்கமும் செய்து தந்திருக்கிறது அரசு.  இதனாலும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை. தங்கத்தின் விலை மேலும் ஏறும், ஊழல் கருப்புப்பணம் இனி பயமின்றி நடமாடும், அதிகாரிகள் இனி தைரியமாக லஞ்சம் கேட்பார்கள் (என்ன, அதை பணமாக அல்லாமல் தங்கமாக கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான்)
******
சரி, நேற்றைய கூட்டத்தில் நல்ல முடிவுகளே எடுக்கப்படலையா என்கிற கேள்வியும் இருக்கிறது. எடுத்து இருக்கிறார்கள். சில விஷயங்கள் அருமையான நடவடிக்கை. சிறிய அளவில் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடியவை. அவை சுருக்கமாக:

1.   பிரிண்டிங் பணிகளுக்கான வரி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. (விரைவில் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இது அரசியல் கட்சிகளுக்கு உதவியாக இருக்கும். நிறைய போஸ்டர் பேனர் அடிக்கவேண்டி இருக்கும் நிலையில் 7% வரி குறைப்பு என்பது மிகப்பெரிய வரம்)

2.   ரிவர்ஸ் சார்ஜ் முறையில் ஒரு பகுதிக்கு, அதாவது செக்ஷன் 9(4) க்கு மட்டும், விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பெரும் தலைவலியின் ஒரு பகுதி தீர்ந்தது.

3.   அரசு பணிகளுக்கான வர்க்ஸ் காண்டிராக்ட் (Works Contract) முறைக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது அரசுக்கு செய்யப்படும் பணிகளுக்கு மட்டும் தான். மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது. ஆனாலும் இது நல்ல விஷயம் தான். இதன் மூலம் அரசின் கட்டுமான திட்டங்களுக்கான செலவு குறையும்

4.   சிறு வணிகர்கள், அதாவது ரூ. 1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோர், தாங்கள் வாங்கும் அட்வான்ஸ் தொகைக்கு இனிமேல் வரி கட்ட தேவை இல்லை. இது அவர்களது வர்க்கிங் கேப்பிட்டலை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

5.   ஈ-வே பில் எனப்படும் ரோடு பெர்மிட் முறை 2018 ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

6.   Advance Authorisation லைசன்ஸ் இருந்தால் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு IGST வரி கட்ட தேவை இல்லை.

7.   மெர்சண்ட் எக்ஸ்போர்ட்டுக்கு பொருட்கள் வாங்கும்போது இப்போது HSN படி உள்ள வரி கட்டவேண்டும் என்று இருப்பதற்கு பதிலாக வெறும் 0.1% வரி கட்டினால் போதும் என்பது உண்மையிலேயே ஒரு போனான்சா தான்.

இப்படி சில.

ஆனால் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது தான் பெரிய வருத்தம்.

பார்ப்போம், அவை அடுத்த கூட்டத்திலாவது விவாதிக்கப்படுகிறதா என.

மொத்தத்தில் இதுவரை ஜி.எஸ்.டி என்பது குழப்பம் என்கிற நிலைமையில் இருந்தது.. இப்போது குழப்பம் ஓரளவுக்கு தீர்ந்துவிட்டது. ஆனால் நடைமுறை படுத்துவதிலும், தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பெரும் சிக்கல் இருக்கும் வகையில் சில ரூல்ஸ் இருப்பது தான் ஆபத்து.

இதையும் அரசு கவனத்தில் எடுத்து, விதிமுறைகளை எளிமைப்படுத்தும் என நம்புகிறேன்.


நம்பிக்கை... அதுதானே எல்லாம்?

******
Reference:

1.  Press realease on 22nd GST Council Meeting dated 06.10.2017
2.  Press note export packages.
3.  GST rates approved by GST council on 06/10/2017

Saturday, September 30, 2017

ஆயுத பூஜை – கலாச்சார மாற்றம்

ப்போதெல்லாம் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆயுத பூஜை என்பது அதன் உண்மையான தாத்பரியத்தில் இருந்து சற்றே விலகி முழுமையாக தெய்வ வழிபாடாகவே மாறிவிட்டது.

வழக்கமாக ஆயுத பூஜை என்பது நமது பணியிடங்களில் உள்ள கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு நடத்தப்படுவது. ஆண்டு முழுதும் இயங்கும் அவற்றை, அந்த வாரத்தில் முழுமையாக செப்பனிட்டு (Maintenance) சுத்தப்படுத்தி பெயிண்ட் அடித்து பக்காவாக ஓடுகிறதா என்றெல்லாம் முழுமையாக பரிசோதித்து விடுவார்கள். இதை பயன்படுத்தி அந்த இயந்திரங்களில் உள்ள அனைத்து சிறு பெரு பழுதுகளும் செப்பனிடப்பட்டு இயந்திரம் நல்ல முறையில் நீண்ட நாள் இயங்கும் அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பூஜை நாள் அன்று, கம்பெனிகளில் உள்ள அனைத்து கருவிகளுக்கும், இயந்திரங்களுக்கும் பூஜை நடக்கும். அந்தந்த இயந்திரங்களை இயக்குவோர் தான் அந்தந்த இயந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். உதாரணமாக ஒரு சீட் மெட்டல் பேப்ரிகேஷன் கம்பெனி என வைத்துக்கொண்டால் அங்கே இருக்கும் கட்டிங் மெஷின், ரோலிங்க் மெஷின், வெல்டிங் மெஷின், டிரில்லிங்க் மெஷின், லேத், மில்லிங்க் மெஷின், பிரஸ், கட்டர் என அனைத்து மெஷிங்களும் புதுப்பிக்கப்பட்டு எல்லாவற்றுக்கும் பெயிண்ட் அடித்து அதற்கெல்லாம் பூ, பொட்டு, வாழைமரம், கரும்பு வைத்து ரெடி செய்து கொள்வார்கள்.



கம்பெனியின் மூத்த தொழிலாளி முன்னிலையில் அந்தந்த மெஷின் ஆபரேட்டர்கள் தங்கள் இயந்திரங்களுக்கு சின்ன சின்னதாக பூஜைகள் செய்வார்கள். எல்லா இயந்திரங்களுக்கும் பூஜைகள் நடந்தபின் தான் மெயின் பூஜை நடக்கும்.

இந்த மெயின் பூஜை என்பது, கம்பெனியின் மிக முக்கியமான இயந்திரம் அல்லது அலுவலக அறை ஆகிய ஏதேனும் ஒன்றில் நடக்கும். இதில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த பூஜையை செய்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

அந்தந்த இயந்தரங்களால் வேலைவாய்ப்பும் அதன் மூலமாக வாழ்வாதாரமும் பெறும் தொழிலாளிகள் முதலில் தங்கள் இயந்திரங்களுக்கு பூஜை செய்துவிட்டு தான் மெயின் பூஜைக்கு வருகிறார்கள். இது அவர்களது தொழில் மீது ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான பக்தியை கொண்டு தருகிறது.

மெயின் பூஜையில் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து நின்று பூஜை செய்வது அவர்களுக்கு மற்றுமொரு தன்னம்பிக்கையை தருகிறது.

ஒரே நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் தனித்தனி மெயின் பூஜைகள் செய்யப்படாது.

மெயின் பூஜை முடிந்த பின்னால் அனைவரும் அவரவர் இயந்திரங்களுக்கு சென்று அதை ஒரு முறை இயக்கி பார்ப்பார்கள். இதற்காகவே, பூஜைக்கு பின் செய்யவேண்டியவை என சின்ன சின்ன வேலைகளை தேர்ந்தெடுத்து அதற்கான எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பார்கள். உதாரணமாக ஒரு லேத் எனில், பூஜை முடிந்ததும் ஒரு ரோட்டரை கடைந்து பார்ப்பார்கள். இதற்காக ரோட்டரை சக்கில் (Chuck) ஏற்கனவே பொருத்தி அதற்கான டூல் எல்லாம் செட் செய்து தயாராக வைத்து அதன் பின் தான் பூஜையே செய்திருப்பார்கள்.

இப்படி இயக்கப்படும் போது எந்த தடங்களும் பிரச்சனைகளும் இன்றி நல்லபடியாக அவை நடக்கவேண்டும் என்பது அவரவர் செண்டிமெண்ட்.

இதுவே வாகனங்கள் எனில், அதன் டிரைவர்கள் அவற்றுக்கு பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் எல்லா சக்கரங்களிலும் எலுமிச்சம்பழம் வைத்து அதன் மீது வாகனத்தை ஏற்றி அப்படியே ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து நிறுத்துவார்கள்.

பூஜை முடிந்தபின் பார்த்தால் கம்பெனி கிரவுண்ட், ஆர்.டி.ஓ சோதனை செய்யும் டெஸ்ட் கிரவுண்ட் மாதிரி இருக்கும். எல்லோரும் ஒரே நேரத்தில் வண்டிகளை எடுத்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்து வைப்பார்கள்.

குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், இதில் தெய்வ படங்களுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் இல்லை. இயந்திரங்கள், அதை சார்ந்த கருவிகள், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கு தான் பூஜை நடக்கும். அப்படி தீபாராதனை காட்டப்பட்டு செல்லும் போது வழியில் சாமி படங்கள் இருந்தால், நமக்குள் இருக்கும் இயல்பான பக்தியின் அடிப்படையில் அதற்கும் காட்டப்படும். அவ்வளவு தான்.

நான் பல ஆண்டுகள் முன்பு வேலை ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய இசுலாமிய தோழர்கள் தாங்கள் பணி செய்யும் லேத், பிளாஸ்மா கட்டர். ஸ்பாட் வெல்டிங் மெஷின் போன்றவற்றுக்கெல்லாம் ஆத்மார்த்தமாக தீபாராதனை காட்டி பூஜை செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் அந்த பூஜைக்கான சுத்தப்படுத்துதல் பெயிண்டிங் ஆகியவையும் செய்திருக்கிறேன். அவ்வளவு பக்தியாக செய்வார்கள்.

இந்த பூஜையை பொறுத்தவரை செய்யும் முறை இந்து சமய அடிப்படையிலான பூ, பழம், தேங்காய், தீபாராதனை என்றெல்லாம் இருந்தாலும் கூட இதன் நோக்கம் என்பது நமக்கு வாழ்வு தரும் கருவிகளுக்கான வழிபாடு என்கிற அளவிலே தான் நான் கண்டு வந்திருக்கிறேன்.

ஆனால் இப்போதெல்லாம் வழக்கங்கள் முழுமையாக மாறிவிட்டது.



பல நிறுவனங்களில் இயந்திரங்களுக்கான தனித்தனி வழிபாடுகள் இல்லை. மூத்த தொழிலாளியை கொண்டு நடத்தப்படும் பூஜைகள் இல்லை. மாறாக எல்லா தெய்வ பாடங்களையும், சில கம்பெனிகளில் சிலைகளையும் வைத்து பண்டிதர்கள், புரோகிதர்களை கொண்டு யாக பூஜைகளே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. ஆயுதங்களுக்கான பூஜை என்பது முற்றிலுமாக ஒழிந்து, தெய்வங்களுக்கான பூஜை என்கிற நிலைக்கு இது மாறிவிட்டது.

அதிலும், தொழிலாளர்கள், அந்த நிறுவனங்களை இதுவரையும் உயர்த்தி வந்தவர்கள் எல்லாம் பின்னில் எங்கோ நிற்க, புரோகிதர்களும் பண்டிதர்களும் புகைமண்டலத்துக்குள் அமர்ந்து புரியாத பாஷையில் பூஜை செய்து கொண்டிருப்பதெல்லாம், ஆயுத பூஜை என்கிற கலாச்சார வழக்கத்தையும், அதன் நோக்கத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டன.

மெல்ல மெல்ல நம்மை அறியாமல் எத்தனையோ விஷயங்கள் நமது இயல்பை மாற்றி அமைத்து விட்டன. அதில் ஒன்றாக இந்த ஆயுத பூஜையும் சேர்ந்து கொண்டதிலும், அது தான் நமக்கு பெருமை என அதை ஏற்றுக்கொண்டதிலும் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை.


ஏன்னா, நம்ம டிசைன் அப்படி!

Wednesday, September 27, 2017

பொருளாதார சீரழிவின் துவக்கம்

ரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்....

கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாக தணிக்கை செய்ய சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர்களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வரி வருவாயை அதிகரிக்கும் என சொல்ல பட்ட ஜி.எஸ்.டி மூலம், அரசுக்கான வரி வருவாய் வெறும் 29000 கோடி தான் வந்திருக்கிறது என்பது (94000 – 65000). இது முந்தைய வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தான். இதிலேயே ஜி.எஸ்.டியின் நோக்கம் அடிபட்டு போய்விட்டது.

அடுத்த அடி, நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டியில் முறையாக பதிவு செய்த 68 லட்சம் வணிகர்களில் ஆகஸ்டு மாதம் ரிடர்ன் தாக்கல் செய்திருப்பவர்கள் வெறும் 33 லட்சம் பேர் தான் என சொல்லி இருப்பது கவனிக்க தக்கது. இதன் படி பார்த்தால் வரி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டிக்கு முன்பாக எக்ஸைஸ், செர்வீஸ் டாக்ஸ், வாட் ஆகிய அனைத்தும் உட்பட 1.20 கோடி வணிகர்கள் இருந்த நிலையில் இப்போது வெறும் 68 லட்சம் வணிகர்கள் தான் இருக்கிறார்கள் என அரசே சொல்கிறது. அந்த 68 லட்சத்திலும் 33 லட்சம் பேர் தான் வரி செலுத்தி இருப்பதாகவும் அரசு சொல்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என்றும், வரி ஏய்ப்புக்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் அரசு சொல்லி வந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கள் அதற்கு எதிரான காட்சிகளை தான் நமக்கு ஆதாரமாக தருகிறது. 

ஆக, ஜி.எஸ்.டி அதன் நோக்கத்தை சரியாக சென்றடையவில்லை என்பது தெளிவு.

சரி, அதென்ன அது 65000 கோடி ரீஃபண்ட்? ஏன் அரசு அதை தரணும்? இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது? இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்வி வருதுல்ல? வாங்க அதை கொஞ்சம் ஜாலியா விவாதிக்கலாம்.

எக்ஸ்போர்ட் செய்வது என்பது வெறும் கம்பெனிகள் மட்டுமே செய்வது அல்ல. தனி நபர்களும் சிறு வணிகர்களும் தான் அதிகமாக எக்ஸ்போர்ட் செய்கிறார்கள். கணக்குப்படி மொத்த எக்ஸ்போர்ட்டில் 43% தான் கம்பெனிகள் செய்கின்றன. பாக்கி எல்லாம் தனி நபர்கள் அல்லது சிறு வணிகர்கள்.



அவர்கள் அப்படி என்ன தான் எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்? கம்பெனிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை எக்ஸ்போர்ட் செய்வார்கள். ஆனால் தனிநபர்கள் மற்வர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதை எக்ஸ்போர்ட் செய்வார்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள், தேங்காய், பூக்கள், துணிகள், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டம்கள். வெளிநாடுகளில் இவற்றுக்கு நிறைய கிராக்கி இருப்பதால் தினம் தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவில் பூக்களுக்கும், அரபு நாடுகளின் நம் உணவு பொருட்களுக்கும் நிறைய கிராக்கி.

இப்படி எக்ஸ்போர்ட் செய்யும் தனி நபர்கள் / சிறு வணிகர்கள் மெர்செண்ட் எக்ஸ்போர்ட்டர் (Merchant Exporter) என்கிற கேட்டகரியில் வருவார்கள். அதாவது அவர்கள் வெறும் வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வளவே. இதற்கு முதலீடு குறைவு ஆனால் பெரிய லாபம்.

உதாரணமாக நான் இந்த தொழில் செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் இங்கே பக்கத்தில் உள்ள திருவள்ளூரிலோ  ஊத்துக்கோட்டையிலோ எனக்கு தெரிந்த தோட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 25 நாள் கடனுக்கு வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த பொருட்களை அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும் வண்டி வாடகை, டாகுமெண்ட் செலவு, ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் செலவு என சுமார் 30,000 ரூபாய் முடக்கினால் போதும். எனது கஸ்ட்மருக்கு நான் நிர்ணயிக்கும் விலை 1,50,000 எனில், அந்த பொருட்கள் கிடைத்த 15 நாளுக்குள் கஸ்டமர்  எனக்கு பணம் அனுப்புகிறார் என வைத்துக்கொண்டால் அந்த பணத்தை வைத்து காய்கறிகள் வாங்கியோருக்கு 1,00,000 கொடுத்துவிட்டால் போக்குவரத்து செலவு 30,000 போக எனக்கு நிகர லாபம் 20,000.

இது ஒரு தொடர் நிகழ்வு என்பதால் மாதத்துக்கு 4 அல்லது 5 முறை இத்தகைய வர்த்தகம் நடைபெறும்.. சுமார் 1,00,000 வரை கையில் லாபம் நிற்கும். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.



காய்கறிகள் மட்டும் அல்லாமல், பல வகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றது. அவற்றில் சிலவற்றுக்கு வரி இருந்தாலும் Merchant Export என்பதால் வரி விலக்கு இருந்தது. எனவே எந்த இழப்பும் இல்லாமல் இந்த ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருந்தது.

இப்போது புதிய ஜி.எஸ்.டி விதிகள் படி, Merchant Export முறை இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்தவேண்டும். அதை ஏற்றுமதி செய்துவிட்டு, அப்படி ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்களை அரசிடம் காண்பித்து, நாம் செலுத்திய வரியை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எப்படியும் அரசுக்கு நயாபைசா வருமானம் இல்லை. நாம் வாங்கும் போது செலுத்திய வரியை பின்னர் அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். (முன்பு வரி செலுத்தவும் தேவையில்லை, திரும்ப பெறும் நடைமுறையும் இல்லை).

இது ஈஸி தானே என பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசு இந்த நிமிஷம் வரை ரீஃபண்ட் ஆப்சனை செயல்படுத்தவே இல்லை. இதன் விளைவு?

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாங்கிய பொருட்களுக்கான வரியை ஏற்கனவே கட்டியாச்சு. ஆனா அதை ரீஃபண்ட் வாங்கும் வசதி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் அந்த தொகை எல்லாம் அங்கே முடங்கி கிடக்கு. எனக்கு கிடைக்கும் லாபம் ல்லாம் இப்போ அரசிடம். அது எப்போ வரும்னு எந்த அறிகுறியும் இல்லை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் வரும். அதில் சந்தேகம் இல்லை.

வெறும் 30,000 முதலீடு வெச்சு ரோட்டெஷன் செஞ்சு சம்பாதிச்சது மாறி இப்போ வரியே மாசம் 4 x 28,000 கட்டி கட்டி மொத்தமா 2,24,000 அரசுகிட்டே முடங்கிக் கிடந்தா எப்படி தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?


இப்படி எல்லோரும் பைசா வந்தபின்னால் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு எக்ஸ்போர்ட் பிசினசை நிறுத்தினால் அன்னியசெலாவணி பிரச்சனை புதுசா முளைக்கும். அதாவது நமது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிச்சா அதனால் ஏற்படும் Current Account Deficit (CAD). அது ஒரு தனி பெரும் கதை. இது டாலர் மதிப்பை உயர்த்தி ரூபாய் மதிப்பை குறைத்து மொத்தமா ஒரு நம்மை நசுக்கிடும். மேலும் சில காலம் இங்கிருந்து எக்ஸ்போர்ட் இல்லைன்னா நம்ம கஸ்டமர் நமக்காக காத்திருக்காம மற்ற நாடுகளில் இருந்து வாங்க ஆரம்பிச்சிருவான்.

இது ஒரு புறம்.

அரசு முன்பே சொன்னது மாதிரி ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாயாக 94000 கோடி வந்திருக்குன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ளே அதுல இப்படி திரும்ப கிடைக்கவேண்டிய ரீஃபண்ட் தொகை 65000 கோடின்ற கணக்கு வந்ததும் ரெண்டு அதிர்ச்சி.

ஒண்ணு, 65000 கோடி திரும்ப கொடுக்கற அளவுக்கு இப்போ பணம் இல்லையாம்.
ரெண்டு. 94000 கோடியில் 65000 கோடி ரீபண்டுன்னா மொத்தமா வந்த வரியே வெறும் 30000 கோடி தான். இது முந்தைய வரி வசூலை விட ரொம்ப குறைவு. ஆக மொத்தம் ஜி.எஸ்.டி எல்லா எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்கிருச்சு.

இப்போ அரசு நிதி பற்றாக்குறையை நோக்கி போயிட்டிருக்கு. அது பொருளாதார மந்த நிலையா மாறி பொருளாதார சீர்கெடா மாறுவதற்கு அதிக காலம் ஆகாது. ஏன்னா ஏற்கனவே எல்லா தொழில்களும் மெல்ல மெல்ல முடங்கிட்டு இருக்கு. எக்ஸ்போர்ட் துறையும் தேங்கிருச்சுன்னா வேலை வாய்ப்பு குறையும், அந்நிய செலாவணி பிரச்சனை, ரீபண்டுக்கான தொகை இல்லாமை, வரி வருவாய் குறைவு, வரி ஏய்ப்பு மூலம் எதிர்பாராத நஷ்டம். எல்லாமா சேர்ந்து அரசின் கஜானாவுக்கு தான் பிரச்சனை.

அதனால் தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பல முக்கிய அவசர கூட்டங்கள் நடந்திட்டு இருக்கு.

காத்திருப்போம்.. அரசு ஒரு நல்ல முடிவு எடுத்து இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு காணும் என்று!




Tuesday, September 26, 2017

ஜெ.மரணம் - எங்கே நேர்ந்த தவறு?


திண்டுக்கல் சீனிவாசன்

இந்த பெயர் தான் சில நாட்களாக மிக பிரபலம்


முதல்வராக இருந்த ஜெ. உடல்நிலை குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின் நடந்த அத்தனை நாடகங்களும் நாம் அறிந்ததே. இப்போது சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகவே சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

அதாவது, ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில் அவரை நாங்கள் யாரும் பார்க்கவே இல்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாமே மக்களை பதட்டப்படாமல் வைத்திருப்பதற்காக சொல்லப்பட்ட பொய். என பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார்.

இதன் மூலம் இப்போது மீண்டும் பல பல கேள்விகள் முளைத்து எழுகின்றன.

வெறும் காய்ச்சல் & நீர்ச்சத்து குறைபாடு என சேர்க்கப்பட்ட ஜெ.வுக்கு உண்மையில் என்ன தான் பிரச்சனை?

அப்பல்லோவில் கடைசி வரை கூடவே இருந்து கவனித்து கொண்டது யார். (தினகரன் இப்போது திடீரென்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சசிகலாவை கூட அனுமதிக்கவில்லை என சொல்வதை பார்த்தால் தனியாக கவனிப்பார் யாருமின்றி தான் சிகிச்சை பெற்றாரா?)

உடல் நலம் பெற்று ஓய்வில் இருப்பதாகவும், காவிரி வழக்கு விஷயமாக அப்பல்லோவிலேயே அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், வழக்கறிஞர்களுக்கே வழிகாட்டியதாகவும் செய்தி வெளியிடவேண்டிய நோக்கம் என்ன?

வெறும் மூன்று நாள் தான் சுயநினைவோடு இருந்தார் என தீபக் இப்போது சொல்வது உண்மையானால், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வை ஜெ.தான் செய்தார் எனவும், தேர்தல் ஆணயத்துக்கான பிரமாண பத்திரத்தில் ஜெ. தான் கைரேகை பதித்தார் எனவும் அதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சாட்சி எனவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டது எதற்காக?

ஆளுநர், அமைச்சர்கள் ஏன் அவரது மெய்க்காப்பாளர்கள் கூட பார்க்க அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நிலைமை?

இன்னும் இது போன்ற பல விவகாரமான கேள்விகள் எல்லாம் வராமல் இல்லை.

அப்போதே பலரும் இது பற்றிய சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். திமுக தலைவர் கலைஞர் இன்னும் ஒரு படி மேலே போய், அரசு அதிகாரிகள் நியாயமாக வெளியிட்டிருக்கவேண்டிய அறிக்கைகள், புகைபடங்கள் கூட வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன் என்றே கூட கேள்வி எழுப்பி இருந்தார்.

***

ஜெ. குறித்த சின்ன சின்ன செய்திகள் வந்தப்பவே அதைப் பற்றி விசாரிக்கறதை விட்டுட்டு அப்படி தகவல் தருவோர் மீது நடவடிக்கைன்னு போலீஸ் அறிவிச்சதை விட முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

போலீஸ், அரசின் கீழ் வந்தாலும் அவர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கு. சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு.

தனது துறை அமைச்சரே தவறு செய்தாலும் அதை உளவுத்துறை மூலம் கண்காணித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து சட்டத்தை காக்கும் பொறுப்பு போலீசினுடையது.


ஆனால் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, ஏன் எதனால் என்றெல்லாம் விசாரித்து எங்கேனும் தவறு நடக்கிறதா என கண்காணித்திருக்கவேண்டிய போலீஸ், வாளாவிருந்தது மட்டுமல்ல, அவர் பற்றிய தகவல்களை கூட மறைத்துவிட்டது.

அரசுகள் மாறலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நிரந்தரம். அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலும் கூட அரசு அதிகாரிகள் செயல்படமுடியும். அதனால் தான் அவர்கள் மாநில ஆட்சிப்பணியின் கீழ் அல்லாமல் மத்திய ஆட்சிப்பணியின் கீழ் வருகிறார்கள்.

அவர்களாவது ஜெ. குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். தலைமைச்செயலாளர் தான் அதற்கான பொறுப்பாளர்.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளும் போலீஸ் துறையும் தத்தம் கடமைகளில் இருந்து தவறியதாலேயே நம் முக்கியமான தலைவரை நாம் இழந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போதேனும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடமைகளை உடனடியாக எடுத்து நடந்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதுடன், யாரேனும் இதற்கு காரணமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

அதுதான் அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் இந்திய சட்டம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்துக்கும் அழகு!

***

இப்போது தமிழக அரசு நீதியரசர் ஆறுமுகசாமி அவர்களை விசாரணை நீதிபதியாக அறிவித்து இருக்கிறது.

ஜெ.வுக்கு என்ன நடந்தது, ஏன் எல்லோரும் அனுமதி மறுக்கப்பட்டனர், அத்தனை நாளும் நடந்த விஷயங்கள் யார் கட்டுப்பாட்டில் நடந்தது, அரசு அதிகாரிகளும் போலீசும் ஏன் இப்படி மொத்தமாக கடமை தவறி அடங்கி இருந்தார்கள் என்பன போன்ற கேள்விகளுடன், எயிம்ஸ், லண்டன் டாக்டர், அப்பல்லோ கொடுத்த சிகிச்சை விவரங்களையும் நீதிபதி வெளிக்கொணர்ந்து ஆராய வேண்டும்.

ஜெ. தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர். பெரும்பாலான மக்களால் நேசிக்கப்பட்டவர். அவரது இழப்பில் உள்ள மர்மங்களையும், அதற்கான சதிகள் ஏதும் இருந்தால் அதையும் வெளிக்கொண்டு வருவதோடு, கடமை தவறிய அரசு அதிகாரிகள், உண்மை தெரிந்தும் மறைத்த மற்ற பெரும் தலைவர்கள் என எல்லோர் மீதும் தண்டனைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆசை.

நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இது தான் நடந்தது.. இவர்கள் தான் காரண கர்த்தாக்கள்.. இவர்கள் எல்லோரும் அதற்கு உடந்தை.. இவர்களுக்கு எல்லாம் இது தான் தண்டனை என்கிற பரிந்துரையேனும் குறைந்தபட்சம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறுமில்லை.

நீதிபதி ஆறுமுகசாமி அவர்கள் அதை தக்க விதத்தில் சட்டத்திற்குட்பட்டு  பரிந்துரைப்பார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!


Printfriendly