Thursday, March 30, 2017

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 4

ரு வழியாக ஜி.எஸ்.டி பாராளுமன்றத்தில் நிறைவேற்ப்பட்டு விட்டது. ஆனால் அதில் எனக்கு சில வருத்தங்கள் உள்ளன.

இந்தியா முழுமைக்குமான வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி மசோதாவை இரு அவைகளிலும் அறிமுகம் செய்து விவாதத்துக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு பதிலாக, பண மசோதாவாக (Money Bill) மக்களவையில் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். மாநிலங்களவையில் அது தோற்றாலும் பிரச்சனை இல்லை.

இதற்கான காரணங்கள் அரசியல் ரீதியானவை.



அதாவது பாஜகவுக்கு மக்களவையில் மட்டுமே பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்கள் அவையில் இல்லை. பொதுவாக இதுபோன்ற தி தீவிர முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இயற்றப்படும்போது இரு அவைகளிலும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பது தான் இது வரையும் இருந்த வழக்கம். ஆனால் அத்தகைய மன முதிர்ச்சி இல்லாததாலோ என்னவோ அரசியல் வாக்குகள் எண்ணிக்கைகளை கருத்தில் கொண்டு மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் பலனாக நாட்டு நலன் கருதியும் வர்த்தக வசதிக்காகவும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சில திருத்தங்களை, தனக்கிருந்த அபரிமிதமான பலத்தின் அடிப்படையில் பாஜக புறக்கணித்துவிட்டது. அதுமட்டும் அல்லாமல், Anti Profiteering rule போன்ற சில கொடுமையான விதிமுறைகளையும் புகுத்தி இந்த சட்டத்தை தன்னிச்சையாக நிறைவேற்றி இருக்கிறது.

போகட்டும். இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் இந்த புதிய ஜி.எஸ்.டி என்ன சொல்கிறது என பார்ப்போம்.

திருத்தப்பட்ட மாதிரி ஜி.எஸ்.டி சட்டத்தில் (Revised Model GST LawRMGL) சொல்லப்பட்டிருந்த பல விஷயங்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4 சட்ட மசோதாக்களில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

அதென்ன 4 சட்ட மசோதாக்கள்?

CGSTCentral GSTExcise & Service Tax ஆகியவற்றுக்கு பதிலாக.
IGSTIntegrated GSTCST க்கு பதிலாக.
UTGSTUnion Territory GST – மத்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் வரம்புக்குள் விதிக்கப்படும் சட்டத்துக்காக.
Compensation Law – நிதி வருவாய் பகிர்மானம் தொடர்பாக.

இது தவிர மாநிலங்கள் அவரவர் மாநிலங்களுக்கு என்று தனித்தனியாக SGSTState GST – உருவாக்கவேண்டும்.

எனவே – நான்கு வகையான வரிவிதிப்பு முறைகள் (CGST, IGST, SGST, UTGST), அதில் ஐந்து வகையான வரி விகிதங்கள் (0%, 5%, 12%, 18%, 28%) என மிக மிக சிக்கலான ஒரு அமைப்பை கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே நாடு முழுமைக்குமான ஒரே வரிவிகிதம் என யாரேனும் (பிரதமரே ஆனாலும்) ஜல்லி அடித்தால் அப்படியா என வாயை பிளந்துகொண்டு நம்பிவிட வேண்டாம். மற்றுமொரு சந்தோஷ செய்தியாக சமீபத்திய சட்ட திருத்தத்தின் மூலம், உச்ச பட்ச வரி என்பது 28% லிருந்து 40% ஆக உயர்த்த (பாராளுமன்றத்தில் அனுமதி பெறாமலேயே உயர்த்த!) வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே வரிவிகிதம் எக்கச்சக்கச்சக்கமாக ஏறும் என எதிர்பார்க்கலாம்.

GST யினால் விலைவாசி குறையும் என யாரேனும் சொன்னால் அதையும் அப்படியே நம்பிவிட வேண்டாம். இடை நிலை நிறுவனங்கள், வர்த்தக டீலர்கள் ஆகியோருக்கு (செலுத்திய வரியை செட் ஆஃப் செய்யும் வசதியின் காரணமாக) எளிமையாக இருந்தாலும் கடைநிலை உபயோகிப்பாளரின் நிலை மிக துயரமானதாக மாறும். இப்போது 5% வரி செலுத்தி வாங்கிக்கொண்டிருக்கும் பொருளுக்கு இனி 18% வரி செலுத்தி வாங்க வேண்டும். அந்த வரியை அவனால் எதிலும் கழித்துக்கொள்ள முடியாது. (இடை நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரியை, செலுத்த வேண்டிய வரியுடன் கழித்துக்கொள்ளலாம்)

மேலும் இடை நிறுவனங்கள் கூட, இரண்டு மாதம் வரையிலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு செலுத்தும் வரிக்கான Working Capital முடக்கி வைக்கவேண்டிய நிலையில் இப்போதைய 5% என்பது 18% என உயர்கையில் அந்த Working Capital தொகையின் அளவு கூடும். பின்னாளில் அந்த தொகை திரும்ப கிடைக்கும் என்றாலும் கூட தினசரி அடிப்படையில் பெரும் தொகையை முடக்கி வைக்க வேண்டும் என்பது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஏனெனில் மும்மடங்காக அல்லவா உயர்த்தப்பட்டு இருக்கிறது?

வெளிமாநில கொள்முதலுக்கு இதுவரையும் வரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி இல்லாததால் பெரும் தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேர் ஹவுஸ் / குடோன் அமைத்து அதற்கு தங்களின் பொருட்களை ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் முறையில் வரியின்றி அனுப்பி அங்கிருந்து உள்ளூர் விற்பனையாக அந்தந்த மாநிலங்களில் விற்று வந்தனர். இதன் மூலம் பல சிறிய டீலர்கள், சப்-டீலர்கள் தொழில் நடத்தி வந்தனர்.



இப்போது வெளிமாநில கொள்முதலுக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி இருப்பதால், நேரடியாக தொழிற்சாலையிலிருந்தே விற்பனை செய்யலாம். வாங்குவோரும் அதை தான் விரும்புவார்கள். இதன் பிற பலாபலன்களாக டீலர், சப்டீலர் முறைகள் குறையும். அது வேலையின்மையை அதிகரிக்கும். நிறைய வேலையிழப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

சாலை வழியே எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு பில் / இன்வாய்ஸ் அவசியம் இல்லை என இப்போதைய திருத்தப்பட்ட சட்டம் சொல்கிறது. அதாவது விற்பனையாளர், தனது பில்லை GSTN எனும் நெட்வர்க்கில் பதிவேற்றி அதற்கான Reference Number வாங்கினால் போதும். அதை வைத்து பொருட்களை எடுத்து செல்லலாம். வழியில் சோதனை செய்வோர் தங்களிடம் இருக்கும் கைகணினி மூலம் அந்த Number Verify செய்து வாகனத்தை அனுமதிப்பார்கள். சுலபமாக தெரிந்தாலும், இது மிகப்பெரிய அளவிலான வரி ஏய்ப்புக்கு வழி வகுக்கும். ஏனெனில், செக் போஸ்ட் எல்லாவற்றையும் நீக்க சொல்லி இருப்பதால் எல்லா வாகனங்களும் சோதனை செய்யப்பட மாட்டாது. Random அடிப்படையில் ஒரு சில வண்டிகள் மட்டுமே சோதிக்கப்படும். அதிலும் பில்லோ இன்வாய்ஸோ வேண்டும் என்பது கட்டாயமில்லை. இது வரி ஏய்ப்பு செய்வோருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் செய்தி ஆகும்.

இந்த GSTN என்பது தனிக்கதை.  இது ஒரு அரசு & தனியார் பங்களிப்புடனான தனிப்பட்ட நிறுவனம். மத்திய அரசு 24.5%; மாநில அரசுகள் எல்லாவருமாக சேர்ந்து 24.5% தனியார் நிறுவனங்கள் பலவும் சேர்ந்து 51% பங்குகளை வைத்திருக்கின்றன. இவர்கள் தான் வரி வசூல், நிதி நிர்வாகம், மாநிலங்களுக்கான நிதி பங்கீடு ஆகியவற்றை செய்யப்போகிறார்கள். இதில் தணிக்கை செய்யும் உரிமை கூட CAG க்கு கிடையாது. 

எனவே இந்த நிதி நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ள போகிறார்கள், யாரும் கேள்வி கேட்க உரிமையில்லாத நிலையில் அந்த தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நேர்மையாக பணத்தை கையாளும் (ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் என்பதை வைத்து கணக்கீட்டு கொள்ளுங்கள்) என்பதெல்லாம் கேள்வி குறியே. அதனால் தான் “தனியார் நிறுவனங்களை GSTN அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் இல்லாவிட்டால் வழக்கு போடுவேன்” என சுப்பிரமணியம் சுவாமி சொல்லி இருக்கிறார்.

இதில் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் இந்த GSTN தளத்தில் நமது வியாபார விஷயங்களை தாக்கல் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை. அதற்கென GSP இருக்கிறது. 20 GSPக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மூலமாக தான் இந்த GSTN தளத்தில் நமது வியாபார விபரங்களை பதிவேற்ற முடியும். அந்த வகையில் அந்த GSP நிறுவனங்களும், அவர்களால் நியமிக்கப்படும் ASP நிறுவனங்களும் நல்லா சம்பாதிக்க முடியும். அதாவது நான் என்ன வியாபாரம் செய்தேன் என்பதை நானே இப்போது வரி தாக்கல் செய்துவிடுவது போலல்லாமல் இனி அவர்களிடம் கொடுத்து தான் தாக்கல் செய்யவேண்டும். அதற்கு தனியாக கட்டணம் உண்டு.

பெரும் நிறுவனங்கள் இதை செய்துவிடும். ஆனால் சிறு வணிகர்கள் நிலைமை?

முழுமையான ஏலக்டிரானிக் வரி நிர்வாகமான GST வழியாக நேர்மையாக வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணமுடைய சிறு வணிகர்கள் அதற்காக கம்பியூட்டர்,ண்டெர்னெட் வசதி, GST வசதியுள்ள ERP சிஸ்டம், அதை கவனிக்க ஒரு வணிகவியல் பட்டதாரி, வரி தாக்கல் செய்ய ஒரு ASP மற்றும் அதன் முழுமையான பரிவர்த்தனைக்கு என ஒரு GSP என பல விஷயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கும். இது திடீரென்று ஏற்படும் ஒரு பெரும் நிதி சுமை. நாளாவட்டத்தில் சிறு வணிகர்கள் என்கிற ஒரு வகையினரே இல்லாமல் பெரு வணிகர்களும் கார்போரெட்டுக்களும் மட்டுமே கோலோச்சும் ஒரு காலகட்டம் வந்தால்  கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜாப் வர்க் விஷயங்களுக்காக அனுப்பப்படும் பொருட்கள் இப்போது 6 மாதங்களுக்குள் கொண்டு வரவில்லை என்றால் வரி செலுத்தவேண்டும் என்று இருப்பதை GST யில் ஒரு வருடம் என மாற்றி இருப்பது நல்ல விஷயம். ஆனால் ஒரு வருடத்துக்குள் கொண்டு வராவிட்டால் அது விற்பனை என கருதி அதற்கு வரிவிதிக்கப்படும் என்பது கொஞ்சம் சிக்கல் தான்.

SEZ எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்கப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை போல குழப்பமான விஷயம் பிரிதொன்றும் இல்லை. ZERO RATED என சொல்லப்பட்டாலும், முதலில் வரி செலுத்தி பின்னர் அதை திரும்பபெற வகை செய்து தான் சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இது SEZ நிர்வாகத்தை நிலைகுலைக்கும். அதிகபட்சமான வரியை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தமும், (இத்தனைக்கும் SEZ க்கு வரிவிலக்கு இப்போது இருக்கிறது) அப்படி செலுத்திய வரியை திரும்ப பெற விண்ணப்பித்து அது கிடைக்கும் வரையுமான காலத்துக்கு Working Capital முடக்கமும் மிகப்பெரிய பாதிப்பை உற்பத்தி துறைக்கு உருவாக்கும்

தினசரி வியாபாரத்தை GSTN இல் பதிவேற்றவேண்டும், ஸ்டாக் விபரங்களை GSTN தளத்தில் தான் கண்காணிக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் சொல்லி இருந்தாலும், GSTN நமக்கு பார்வையிட அனுமதி இல்லை என்பதும் GSP மட்டுமே அதை செய்யமுடியும் என்பதும் மிக பெரிய சிக்கல். இனி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம் GSP க்களை நம்பியே செயல்படவேண்டி இருக்கும். அவர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வேறு செலுத்த வேண்டி இருக்கும்.

GST தரும் மற்றுமொரு சிக்கல், நாம் பெறும் அட்வான்ஸ் தொகைக்கும் வரி செலுத்தவேண்டும் என்பது. அதாவது ஒரு வியாபாரம் ரூ.1,00,000 க்கான ஆர்டர் என வைத்துக்கொள்வோம். 20% அட்வான்ஸ் & பாக்கி விற்பனைக்கு பின் என நிபந்தனைகள் இருந்தால் முதலில் வாங்கும் ரூ.20,000 க்கு வரி செலுத்தவேண்டும். அதற்கு என GSTN கொடுக்கும் தனி Reference Number அடிப்படையில் தான் அதற்கான வியாபாரங்களை செய்ய வேண்டும். சொந்த முதலீடு குறைவாகவும் OPM எனப்படும் பிற முதலீடுகளை அதிகமாகவும் வைத்து செய்யப்படும் உற்பத்தி / வியாபார விஷயங்களில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பல பல விஷயங்கள் இது போல இருந்தாலும் மிக குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். மற்றவை பின்னர்.


ஒரு தொழிற்சாலை, பெரும் நிறுவனம், கார்போரேட் என்கிற வகையில் இருந்து பார்த்தால் GST மிக அருமையான விஷயம். ஆனால் சிறு வணிகர்கள், தரகு நிறுவனங்கள், குறு தொழில் உற்பத்தியாளர்கள் பார்வையில் GST என்பது பெரும் சுமை. நாம் நாட்டு நலன், வரி வருவாய், அரசு சார்ந்த நிறுவனங்களின் லாபம் என்று மட்டும் பார்க்காமல் மக்கள் நலன், சமூக பொருளாதார நிலைமை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதை யாராவது பாஜகவுக்கு புரியவைத்தால் நல்லது 

*****

Previous Posts:

1. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3
2. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2
3. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 1


Printfriendly