Tuesday, September 12, 2017

நவோதயா பள்ளியும் தமிழகமும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் அளித்த தீர்ப்புக்குப் பின் சட்டென தமிழகத்தில் ரெண்டு நாளா ஒரு பரபரப்பு நவோதயா பள்ளிகள் பற்றி!

நீதி அரசர்கள் சசிதரன் அவர்களும் சுவாமிநாதன் அவர்களும் வழங்கிய தீர்ப்பில், "மத்திய அரசு தமிழை ஒரு கட்டாய பாடமாக கற்பிக்க முடிவு எடுத்திருப்பதால் இனியும் இழுத்தடிக்காமல் தமிழகத்தில் நவோதையா பள்ளிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவு இட்டிருக்கிறார்கள்.

அதென்ன நவோதயா பள்ளிகள்?

1986 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள்’. பின் தங்கிய மாவட்டத்தில் கல்வி வசதி கிடைக்கப்பெறாத குந்தைகளுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பள்ளி வீதம் தொடங்கப்பட்டு அவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது இந்த திட்டம்.

ஆனால் இப்போது நன்கு படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் மெருகேற்றும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு கோச்சிங் சென்டர் போல பல இடங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாநில அரசு 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் (?) அதில் மத்திய அரசு இந்த நவோதையா பள்ளிகளை அமைத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்கவைத்து பாசாக்குவது தான் இந்த நவோதையா முறை.

அதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், இங்கே 6 ஆம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கையே ஆரம்பிக்கிறது. அதாவது 5 ஆம் வகுப்பு வரை மாநில கல்வியில் படித்து, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் நவோதையா பள்ளிகளில் சேர முடியும். இதற்கென தனியாக தகுதி தேர்வும் உள்ளது. அதில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே இந்த பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் தகுதி தேர்வு எழுதிய 18.78 லட்சம் பேரில் தேர்வு பெற்றவர்கள் வெறும் 41 ஆயிரம் பேர் தான். அதாவது தேர்ச்சி விகிதம் வெறும் 2%. அப்படி எனில் அந்த பாட திட்டத்தின் கடுமை புரியும்.

அதாவது மாநில கல்வி திட்டத்தில் நல்ல மதிப்பெண் வாங்குவோரை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு மத்திய அரசு பள்ளி... அவ்வளவு தான் நவோதையா!

1985-86 கல்வி ஆண்டில் 2 பள்ளிகளுடன் தொடங்கிய இந்த திட்டம் இப்போது 598 பள்ளிகளை கொண்ட பெரும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. (660 பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.. அதில் 586 தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது).


தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த பள்ளிகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அனுமதி கொடுக்காமல் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் சமீபத்தில் அனுமதி வழங்க சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கிறது மதுரை நீதிமன்றம்.

தமிழகம் ஏன் இதை எதிர்க்கிறது?

முதலில் சொல்லப்பட்ட விஷயம், இந்த பள்ளிகள் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது. அதாவது ஆங்கிலம் & ஹிந்தி மட்டும் தான் பயிற்று மொழி. மாநில மொழிக்கு இடமில்லை என்பது. ஆனால் இப்போது மத்திய அரசு, "மாநில மொழி பயிற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் 6-10 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் ஆக்குவதாகவும், 11,12 ஆம் வகுப்புக்கு தமிழை விருப்ப பாடமாக அனுமதிப்பதாகவும்" சொல்லி இருக்கிறது.

ஆனால், எப்படியும் ஹிந்தியும் ஆங்கிலமும் தான் முக்கிய பயிற்று மொழி என்பதை மறுப்பதற்கில்லை. அலுவல் மொழியான ஹிந்தியை வளர்ப்பதற்கும் அதை மானவர்களிடத்தில் பரப்புவதற்கும் என தனியாக ஒரு குழுவே இந்த நவோதயா பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

ஹிந்தி மட்டும் தான் காரணம் எனில் திமுக ஆட்சி செய்த 1989-1991; 1996-2001; 2006-2011 ஆகிய காலகட்டத்தில் அனுமதி கொடுக்காமல் இருந்ததற்காக அதை காரணம் காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் 1986 என்பது எம்.ஜி.ஆர் ஆட்சி. அதன்பின் 1991-1996; 2001-2006; 2011-2017 என ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்திலும் கூட நவோதயா பள்ளிகளுக்கு தமிழகம் அனுமதி கொடுக்கவில்லை.

இதை புரிந்துகொள்ள வேண்டும் எனில் தமிழகம் திராவிட இயக்கங்களான அதிமுக திமுக ஆகியோரின் ஆட்சி காலத்தில் எத்தகைய சமூக வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை உணரவேண்டியது அவசியம்.

மற்ற மாநிலங்களை போலல்லாமல் தமிழகம், மாநிலம் முழுமையும் ஒட்டுமொத்த ஒருமித்த வளர்ச்சியை கண்து என்பதை மாநிலம் முழுக்க பயணித்தவர்களால் உணர முடியும்.

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதில் எல்லா ஆட்சியாளர்களுமே கவனமாக இருந்தார்கள்.

மதிய சாப்பாட்டுக்கு வழியில்லையா – அரசு கொடுக்கும்
உடை வாங்க வசதி இல்லையா – அரசு கொடுக்கும்
புத்தகங்கள் வாங்க சிரமமா – அரசு கொடுக்கும்
பயணிக்க தூரமாக இருக்கிறதா – இலவசமா பஸ் பயணம் அரசு தரும்
பஸ் வசதி இல்லாத பகுதியா – இலவசமாக சைக்கிள் தரும்
பயிற்சி செய்ய கணினி இல்லையா – அரசு லேப்டாப் தரும்

இப்படி மாணவர்கள் படிப்பதற்கு என்னென்ன சிரமங்கள் உள்ளதோ அத்தனையையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. எதற்காக. மாணவர்கள் படித்தால் மட்டும் போதும். அது அவர்களது எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் தான்.

இப்படி மாணவர்களுக்கு வசதிகள் செய்துகொடுத்து அவர்களை படிக்க வைக்கும் எந்த அரசாவது இந்தியாவில் இருக்கிறதா?

இந்த காரணங்களால், தமிழகத்தில் குக்கிராமங்களில் கூட, மலைப்பகுதிகளில் கூட அடிப்படை கல்வியும் உயர்கல்வியும் படித்த இளைஞர்களை சாதாரணமாக காண முடிகிறது.

ஆனால் ஜார்க்கண்டு, ஓடிஷா, சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களில் நிலைமை வேறு. அங்கே குழந்தைகள் படிக்க ஆசைப்பட்டாலும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. போதிய பள்ளிக்கூடங்கள் மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. போக்குவரது வசதி இல்லை. குடும்பங்களில் பொருளாதார வசதி இல்லை. எனவே பல குழந்தைகள் படிப்பதே இல்லை.

அவர்களை போன்றோர் இது போன்ற உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து அங்கேயே தங்கி படித்து முன்னேறுவது இயல்பு.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை இல்லை. 5 கி.மீக்குள் எப்படியும் ஒரு உயர்நிலை பள்ளி இருக்கும். 10 கி.மீக்குள் எப்படியும் ஒரு மேல்நிலை பள்ளி இருக்கும். போக வர பஸ் அல்லது சைக்கிள் இருக்க, குடும்பத்தை விட்டு விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க தேவையே இல்லை.

அதை விட நான் முன்பே சொன்னது போல, 5 ஆம் வகுப்பு வரை படித்து அதில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களால் மட்டுமே நவோதயா பள்ளிக்களில் 6 ஆம் வகுப்பில் சேர முடியும். அதாவது ஓரளவு நடுத்தர வர்க்க அல்லது மேல்நிலை வர்க்க மாணவர்கள் என வைத்துக்கொள்ளலாம். அபூர்வமாக குக்கிராம பகுதிகளில் இருந்து வரும் அசாத்திய திறமை கொண்டவர்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம். அப்படியானவர்கள் மட்டுமே படிக்க வசதி உள்ள ஒரு மத்திய அரசு பள்ளியை மாவட்டத்துக்கு ஒன்று என கொண்டு வர அனுமதிப்பதால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை.

அதை விட மாநில பள்ளி கல்வி துறையின் பள்ளிகளிலேயே நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதுடன், அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும், அரசே கல்விக்கான பெரும்பாலான செலவை ஏற்றுக்கொள்வதாலும், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதிருப்பதால் எந்த நஷ்டமும் இல்லை. நவோதயா வருவதால் எந்தவித லாபமும் இல்லை.

இதை தமிழகத்தை இதுகாறும் ஆண்டுவந்த அனைத்து ஆட்சியாளர்களும் தெளிவாக உணர்ந்திருந்ததால் தான் இன்று வரை நவோதையா பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இனி தமிழக அரசு செய்யவேண்டியது என்ன?

புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு என மாண்புமிகு தமிழக முதல்வர் சொல்லிக்கொள்வது உண்மையானால், மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து, மாநில உரிமையை நிலைநாட்ட முன் முயற்சி செய்யவேண்டியது அவசியம்.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள கல்விக்கூடங்களை மேம்படுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் ஆவன செய்யவேண்டியதும் அவசியம்.

செய்வார்களா?

3 comments:

  1. நவோதயா பள்ளிகள் குறித்து நல்லதொரு பகிர்வு நண்பரே...

    ReplyDelete
  2. https://vaanaram.in/2017/09/12/navodaya-schools-honest-attempt-to-social-justice/

    Read this too

    ReplyDelete
  3. சிறப்பான கட்டுரை

    ReplyDelete

Printfriendly