Friday, May 29, 2015

மும்பை பயண குறிப்புகள் – பாகம் 2

முதல் பாகம் இங்கே இருக்கு.
***** 
பார்ட்மெண்ட் விட்டு கிளம்பும்போதே மணி ஆறுக்கு மேல ஆயிருச்சு. மெல்ல ரோட்டோரமா நடந்து 'பேலா நிவாஸ்' ஸ்டாப்புக்கு வந்தேன். வந்ததுமே பஸ் வந்திருச்சு. ரூட் நெம்பர் 415. அகர்க்கர் சவுக் – அந்தெரி ஈஸ்ட். அதிலும் எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம் அது மாடி பஸ் என்பது. சென்னையிலும் திருவனந்தபுரத்திலும் மாடி பஸ்ஸில் போயிருந்தாலும், மும்பை மாடி பஸ்களுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. நல்லா அகலமான பின்புற வாசல், வசதியான இருக்கைகள். பஸ்ஸில் அதிக கூட்டமில்லை. உள்ளே நுழைஞ்சதும் இடம் கிடைச்சது. கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். திடீர்னு எனக்குள்ளிருந்த குழந்தைத்தனம் முழிச்சுக்கிச்சு. படியேறி மேல் மாடிக்கு போயி முன்புற கண்ணாடிக்கிட்டே ஒரு சீட்டை பிடிச்சு அதில் உட்கார்ந்து டாப் ஆங்கிளில் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். சில சமயங்களில் அறிவை கழட்டி வெச்சிட்டு குழந்தையா மாறிடுறது நல்லது தானே.


அந்தெரி வந்தப்ப மணி ஏழு தாண்டி இருந்தது. மக்கள் மக்கள் மக்கள். எங்கெங்கும் மக்கள் கூட்டம். மெல்ல நடந்து அந்தெரி ரயில் நிலையம் போனேன். அது ஏதோ ஷாப்பிங் மால் ரேஞ்சில் இருந்தது. நிறைய நடக்கவேண்டி இருந்தது ஸ்டேஷனின் மெயின் எரியாவை அடைய. 


அப்போ மணி ஏழு தான் ஆயிருந்தது. ஆனாலும் அந்தெரி பஸ் டிபோவில் நிறைய பஸ்கள் அன்றைய ஓட்டத்தை முடிச்சிட்டு செட்டில் ஆயிருந்தது. இது ஒரு ஆச்சரியம் எனக்கு. நம்மூர்ல பதினொரு மணி வரைக்கும் முழு சர்வீசும் ஓட்டி காசு பார்த்துட்டு தான் ஓய்வாங்க.



முதல் டார்கெட் கேட் வே ஆஃப் இந்தியா. அது மட்டும் தான் பார்க்க டைம் இருக்கும். அந்தெரியில் இருந்து ரொம்ப தூரம். கேட்வே ஆஃப் இந்தியா போகணும்னா அங்கே அதுக்கு பக்கத்துல ரெண்டு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. சர்ச் கேட், விடி (VT -விக்டோரியா டெர்மினஸ் என்பதன் சுருக்கம்). அந்த பெயரை இப்போ மாத்தி மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் (Chatrapati Shivaji Terminal) ஆக்கிட்டாங்க. சுருக்கமா CST. ஆனா எல்லாரும் இன்னமும் விடின்னு சொல்றதே வழக்கமா இருக்கு. நாம சென்னையை இன்னமும் மெட்ராஸ்னு சொல்ற மாதிரி. (மெட்ராஸ்னு சொல்றதில் ஒரு தனி கிக்கு இருக்குல்ல?)
அந்தெரி ஸ்டேஷன் நடை மேடை 
மும்பை ரயில் பயணத்தை புரிஞ்சுக்கணும்னா அதுக்கு லேசா மும்பை ரயில் அமைப்பை முதலில் புரிஞ்சுக்கணும். தென்னிந்தியாவில் எப்படி தென்னக ரயில்வே இருக்கோ அது மாதிரி மும்பைக்கு சேவை செய்யுறது மத்திய ரயில்வே & மேற்கு ரயில்வே. இரண்டு ரயில்வேயும் தனித்தனியா ரயில்கள் இயக்குறாங்க. இதை வெஸ்டர்ன் லைன் சென்ட்ரல் லைன்னு சொல்லுவாங்க. இது தவிர ஹார்பர் லைன் (பனுவேல்/அந்தெரி – CST) தனியா இருக்கு. கேட்வே ஆஃப் இந்தியா போறதுக்கு சர்ச் கேட் போறதும் விடி போறதும் தூரம்னு பார்த்தா ஒண்ணு தான். ஆனா சர்ச் கேட்டுக்கு அந்தெரில இருந்து அதிக ரயில்கள் இருக்கு (வெஸ்டர்ன் லைன்). அதனால் அந்த லைன்லயே போனேன்.

பிளாட்ஃபார்ம் போனதுமே ரயில் வந்திருச்சு. ஒண்ணும் பிரமாதமில்லே. நம்ம சென்னையில் ஓடும் அதே மின்சார ரயில் தான். நிறம் மட்டும் தான் மாற்றம். கூட்டமே இல்லை. ஆனா சென்னை ரயில்களை விட மும்பை மின்சார ரயில்கள் செம வேகம். அடுத்தடுத்து ரயில்கள். பக்கத்து பக்கத்து லைன்களில் ஒரே நேரத்தில் நாலு அஞ்சு ரயில்கள் பயணிக்கிறதை எல்லாம் அதிசயமா பார்த்துட்டே பயணிச்சேன். சென்னையில் அதிகபட்சம் ரெண்டு ரயில்கள் தான் பக்கம் பக்கமா ஒரே திசையில் போகும். அதுவும் அபூர்வமா எப்பாயாச்சும்.

எட்டு மணி சுமாருக்கு சர்ச் கேட் வந்தது ரயில். ஸ்டேஷன்லருந்து வெளியே வந்து டாக்சி தேடினேன். கேட்வே ஆஃப் இந்தியா எரியால ஆட்டோக்களுக்கு அனுமதியே இல்லை. ஒன்லி டாக்சி. ஸ்டேஷன் பக்கத்திலேயே வரிசையா நின்னிட்டிருந்தது டாக்சிகள். சாண்டிரோ, ஆல்டோ, வேகன் ஆர், ஆம்னி, அம்பின்னு நிறைய கார் இருந்தாலும் ஒரே ஒரு கார் என்னை ரொம்ப ஈர்த்தது. நான் முதல் முதல் கார் வாங்கணும்னு ஆசைப்பட்ட என் பால்யத்தில் எனது டிரீம் கார் அது தான். “பிரீமியர் பத்மினி”. அது ஃபியட் காரா இருந்தப்பவே அது மேல ஒரு கிரேஸ். அதிலும் நம்ம சூப்பர் ஸ்டார் அதே கார் வெச்சிருந்ததை பார்த்ததிலிருந்து அந்த கார் மேல ஒரு மரியாதை. அதன் மெல்லிசான பெரிய ஸ்டியரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


நேரா அந்த காரில் போய் ஏறிகிட்டேன். சர்ச் கேட்லருந்து கேட்வே ஆஃப் இந்தியா சுமார் மூணு கிமீ இருக்கும். ஆனா டாக்சி சார்ஜ் வெறும் 30 ரூபா தான். எனக்கு இது ஆச்சரியமா இருந்துச்சு. சென்னைல எப்படியும் 80-100 வாங்கிருப்பாங்க. பொறுமையா லாவகமா காரை ஒட்டிட்டு போனார் டிரைவர். லேசா கொஞ்சநேரம் பேச்சு கொடுத்தேன். எப்படி கட்டுபடியாகுதான்னு கேட்டா சந்தோஷமா சிரிக்கிறாரு. ரேட் குறைவு தான் ஆனா ஓட்டம் அதிகம். அதனால் பிரச்சனையில்லைன்னாரு. பத்து நிமிஷம் கூட ஆகலை. கேட்வே ஆஃப் இந்தியா வந்திருச்சு.


பல வரலாறுகளை சுமந்த படி நின்னிட்டிருந்தது கேட் வே ஆஃப் இந்தியா. மெல்லிய பிங்க் நிற ஒளியில் பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு. ஒரு ஓரமா விவேகானந்தர் கையை கட்டிட்டு சிலையா வர்ற போற மக்களை கவனிச்சிட்டிருந்தாரு. ஒரு சுத்து கேட்வே ஆஃப் இந்தியாவை சுத்தி வந்து நல்லா ரசிச்சு பார்த்து ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். கடல் காத்தும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த லாஞ்ச்சுகளும் சில போலீஸ் ரோந்து படகுகளுமா அந்த இடம் ஒரு தினுசான உணர்வை தந்தது. அங்கே வரும் பயணிகள் உட்கார்ந்து ரசிக்க நல்ல இருக்கைகள் திண்ணைகள் அமைச்சிருந்தாங்க. கொஞ்ச நேரம் இருந்து அணு அணுவா அந்த கட்டிட கன்ஷ்டிரக்ஷனை ரசிச்சு பார்த்துட்டு கிளம்பினேன். கேட்வேக்குள்ளே ஒரு பெட்டகம் இருந்தது. அது என்னான்னு இனி வரைக்கும் தெரியலை.


1911 இல் கட்ட தொடங்கி 1924 இல் திறக்கப்பட்டாலும், அதென்னவோ ரொம்ப பழைய கட்டிடம் மாதிரியான ஒரு உணர்வு வந்துடுது. நூறு வருஷம் கூட ஆகலைன்றதை நம்பவே முடியலை. ரோமன் கட்டிட கலையை அடிப்படையா வெச்சு கட்டிருக்காங்க. லைட்டா ஆங்காங்கே முகலாய சாயலும் இருக்கு. உட்புற கூரைகள் தான் பிரமிக்க வெச்சுது. அற்புதமான மெல்லிய வேலைப்பாடுகள். பெரும்பாலும் கருங்கற்கள்.


ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணியும் வந்ததை முன்னிட்டு இது கட்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் பிரமாதமான கட்டிடக்கலையா அது எனக்கு படலை. பிரமாண்டமான கட்டிடம், இரண்டு கூடம் அவ்வளவு தான். தமிழக கோவில்களை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ ரொம்ப சிறப்பான வேலைப்பாடுன்னு எல்லாம் என்னால் சொல்ல முடியலை. ஆனா சில நுணுக்கமான மெல்லிய அலங்கார வேலைப்பாடுகள் சுவற்றில் ஆங்காங்கே இருந்துச்சு. அது இந்து மத ஸ்கிரிப்ட் ரீதியில் இருந்ததா ஞாபகம்.  அப்படியாக ரோமன், மோகலாய, இந்துமத விஷயங்கள் கலந்த ஒரு கலவையா அது எனக்கு தெரிஞ்சுது.

தூரத்தில் நரிமன் பில்டிங்கும் எதிரில் தாஜ் ஹோட்டலும் இருந்துச்சு. ஆனா நேரம் ஜாஸ்தி ஆயிட்டதால் உடனே கிளம்பினேன். மீண்டும் டாக்சி. ஆனா இந்த முறை சர்ச் கேட்டுக்கு பதிலா விடி.



விடி ஸ்டேஷன் சும்மா சொல்லக்கூடாது. சும்மா தக தகன்னு தங்கமா மின்னுது. அவ்வளவு லைட் செட்டிங். ஸ்டேஷன் முன்புறம் நிறைய பேர் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. காலை ரயிலுக்கான பயணிகளா இருக்கலாம். வீடற்ற மும்பைவாசிகளாவும் இருக்கலாம். பரபரப்பா இருந்த ரயில் நிலையத்தை மெல்ல சுத்தி பார்த்தேன்.

மும்பை தாக்குதல் நடந்தப்பறம் தீவீர பாதுகாப்பு ஏற்பாடுகள், நிறைய கெடுபிடிகள். ஆனாலும் ஸ்டேஷனை சுத்தி பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. மிக பிரமாண்டமான ரயில் நிலையம். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவுக்காக 1887 இல் கட்டப்பட்ட ரயில் நிலையம் இது. அதனால் தான் பாம்பே விக்டோரியா டெர்மினஸ் என பேரு. 1996 இல் தான் இந்த ஸ்டேஷனுக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பேரு மாத்தூனாங்க.  உலக பாரம்பரிய கட்டிடமா இது தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் நிறைய சுகாதார பணியாளர்கள் முழு நேரமும் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க. பிரமாதமான மெயிண்டெனன்ஸ்.


இந்த ரயில் நிலையத்தில் 18 பிளாட்ஃபார்ம் இருக்கு. அதில் 7 பிளாட்ஃபார்ம் உள்ளூர் மின்சார ரயிலுக்கு. நேரே அங்கே போனேன். இப்ப நான் போக வேண்டிய இடம், குர்லா.

என் பழைய கம்பெனியின் மேனேஜர் இப்போ இங்கே இருக்கார். அவரை பார்க்க தான் இந்த திடீர் பயணம். போன் பண்ணி எப்படி வரணும்னு கேட்டேன். குர்லா இறங்கி ஆட்டோ பிடிச்சு கோகினூர் ஹாஸ்பிடல் வந்திருன்னாரு.

ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிடல் போயி அவர் வீடு அடைஞ்சு கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு டின்னரும் முடிஞ்சப்பறம் மீண்டும் அந்தெரி நோக்கி பயணம். இரவு 11:30 ஆயிருச்சு. ஏற்கனவே ரயில் பயணம் தந்த அலுப்பு வேறு. தூக்கம் தள்ளிட்டு வந்தது. சாயங்காலமே அபார்ட்மெண்ட் கெஸ்ட் ஹவுசுக்கு போன் பண்ணி நைட் வார லேட்டாகும்னு சொல்லி இருந்தேன். ஆனாலும் நமக்காக அவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களேன்னு ஒரு கில்ட்டிநெஸ். குர்லாவிலிருந்து அந்தெரிக்கு டிரெயின் இருக்கு. பஸ்ஸும் இருக்கு. ஆனாலும் அர்ஜென்சிய மனசில் வெச்சு ஆட்டோ பிடிச்சேன்.

ஆச்சரியமான விஷயம் என்னன்னா, வரமாட்டேன்னு சொல்றது, பேரம் பேசுறது எல்லாம் அங்கே இல்லை. ஜஸ்ட் கூப்பிட்டதும் வந்துட்டாங்க, 100 ரூபான்னு சொன்னாங்க. நியாயமா பட்டதும் போலாம்னேன். 25 நிமிஷத்தில் ஏதேதோ சந்து பொந்துக்குள்ளே எல்லாம் புகுந்து வெளியேறி ஷார்ட் கட்டில் கொண்டுவந்து அபார்ட்மெண்டில் விட்டுட்டாரு.

மறுநாள் காலை, மும்பையில் இருக்கும் எங்க ஹெட் ஆஃபிசுக்கு போகணும். அங்கிருந்து தான் கான்பரன்ஸ் நடக்கும் ஹோட்டலுக்கு எல்லோரும் பயணம்.

இந்த கெஸ்ட் ஹவுஸில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சில கொலீக்ஸும் தங்கி இருந்தாங்க. அவங்களோடு சின்னதா ஒரு அறிமுக படலம், அரட்டை, நள்ளிரவு டீ எல்லாம் முடிஞ்சு உறங்க போயிட்டேன்.

அந்த இரவு பிணம் போல ஒரு உறக்கம்.

பிப் 26 இனிதே விடிஞ்சது அந்தெரியில்

காலை நேரமே எழுந்ததால் நண்பர்களையும் எழுப்பி விட்டுட்டு "வாங்க ஒரு வாக்கிங் போகலாம்"னு கிளம்பிட்டேன். எங்கே போறதுன்னு தெரியலை. பட் ஒருமணி நேரம் அந்தெரி ஏரியா முழுக்க ரவுண்டடிச்சோம். பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் நிறைஞ்ச இடம். பக்கா கமர்ஷியல் ஏரியா. ரவுண்டப் முடிஞ்சு ரூமுக்கு வந்து ஃபிரெஷ் ஆகி ஹெட் ஆபீஸ் போயி ரிஜிஸ்டிரேஷன் முடிச்சு பயணத்துக்கு தயாரானபோது நாங்க மொத்தம் 30 பேருக்கு மேல் இருந்தோம். யாரையும் இதுவரை நான் சந்திச்சதேயில்லை. எல்லோரோடும் ஒரு அறிமுக படலம் அண்ட் அரட்டை அங்கேயும்.

கான்பரன்ஸ் நடப்பது லோனாவாலாவில் இருக்கும் பரியாஸ் ரிசார்ட்டில். சுமார் 80 கிமீ தூரம். ஆனாலும் 2 மணிநேரத்துக்கு மேல் பயணம். மலைப்பகுதி. நாங்க எல்லாவரும் பயணிக்க பஸ் ஏற்பாடாகி இருந்தது. மும்பை புறநகரின் அழகை எல்லாம் ரசிச்சபடி ஹெட் ஆபீஸில் இருந்து லோனாவாலா நோக்கிய பயணம் பத்து மணிக்கு தொடங்கியது.

கோவாண்டி ஏரியா எக்ஸாக்டா நம்ம பூந்தமல்லி நாசரேத் பேட்டையை ஞாபகப்படுத்திச்சு. பாந்திரா சீ லிங்க் வழியா மெயின்லேண்ட் அடைஞ்சு புனே எக்ஸ்பிரஸ்வேயில் பறக்க தொடங்கிச்சு.


மெயின் லேண்டுக்கும் மும்பைக்கும் இடைப்பட்ட கடல்பகுதி வழியா மின்சார கம்பிகள் வருது. அதுக்காக கடலில் மின் டவர்கள் நிர்மாணிச்சிருக்காங்க. அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி கடலுக்குள் பில்லர் போட்டிருப்பாங்க அதுவும் 30, 40 வருசத்துக்கு முன்னேன்னு யோசிச்சிட்டே பயணிச்சேன்.

மலைகள் குகைகள் என கலவையான பாதையில் பயணிச்ச பஸ் பன்னெண்டு மணி சுமாருக்கு ரிசார்ட்டை அடைஞ்சுது.

லோனாவாலா, பரபரப்பிலிருந்து ஒதுங்கிய ஒரு சிறிய மலை கிராமம். கோடை வாசஸ்தலம்னெல்லாம் சொல்ல முடியாது, ஆனா அழகிய சிற்றூர். மும்பையில் இருக்கும் பெரிய தொழிலதிபர்கள், திரை துறை பிரபலங்கள் பலரும் இங்கே ஓய்வுக்காக வருவார்கள். சிலர் சொந்தமாக வீடும் கட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு அழகிய பகுதியில், மலை சரிவில் கட்டப்பட்டிருந்தது, பரியாஸ் ரிசார்ட்.

வந்து இறங்கியதும் அற்புதமான லஞ்ச். முடிஞ்சதும் நேரே ரூம், ஒரு மணிநேரம் ரெஸ்டு அறிவிச்சாங்க. தூக்கமெல்லாம் வரலை. பால்கனியிலிருந்து அந்த ஊரின் அழகை ரசிச்சிட்டிருந்ததிலேயே நேரம் போயிருச்சு.

இனி தான் முறைப்படி கான்பரன்ஸ் ஆரம்பம்.  அது அடுத்த பகுதியில்

Thursday, May 28, 2015

மும்பை பயண குறிப்புகள் – பாகம் 1

மும்பைல ஒரு கான்ஃபரன்ஸ். பிப் 26,27,28. நீங்க கலந்துக்கறீங்க. புறப்படு பீம்னு டோலாக்பூர் மஹாராஜா சொல்றமாதிரி என் மேனேஜர் சொன்னப்பவே அதுக்கான பயணக்திட்டஙகளை எடுக்க ஆரம்பிச்சாச்சு.

வழக்கமா போற ஸ்பைஸ் ஜெட் வேண்டாம்னு ஜெட் ஏர்வேஸ்ல பார்த்தா ரேட்டு ரொம்ப ஓவரா போயிட்டிருந்துது. கொச்சி – மும்பை கோ ஏர்ல செம்ம சீப்பா ஒரு ஆஃபர் இருந்துச்சு. ஜஸ்ட் 2089. அதுக்கே பிளான் பண்ணி டிராவல் புரபோசலை ஆபீஸ்ல கொடுத்ததும், “யப்பா, இது இயர் எண்டு, காஸ்ட் ரிடக்ஷன் டார்கெட் அச்சீவ் ஆகலை, அதனால் ஏர் டிராவல் கிடையாது, டிரெயின்ல புக் பண்ணி தர்றேன், போறியா?”ன்னு கேட்டாங்க. நான் அப்செட் ஆவேன்னு எதிர்பார்த்தாரோ என்னவோ, நான் “ரொம்ப சந்தோஷம் சார்.. ஒரே ஒரு ரிக்வெஸ்ட்.. கொங்கன் ரயில்வே ரூட்ல டிக்கெட் போடுங்க சார்”னு சொன்னதும் ஒரு மாதிரியா பார்த்தாரு.

பிப் 23 நேத்ராவதி எக்ஸ்பிரஸ், ஏசி 3 டயர், எர்ணாகுளம் – லோகமானியா திலக் டெர்மினல் (அதாங்க நம்ம குர்லா). ரூ. 1,635. டிக்கெட் ரெடின்னு கூப்பிட்டு சொன்னாங்க. அவர்ட்ட சிரிச்சிட்டே சொன்னேன், “சார் டிக்கெட் 1,635, அது தவிர 28 மணிநேர பயணம், ஒரு நாள் ஆபீஸ் வேலை முடக்கம். என் சாப்பாட்டு செலவு எல்லாம் பார்த்தா, கோ ஏர் செம சீப் சார்”ன்னேன். “என்னப்பா பண்றது கம்பெனி பாலிசி அப்படி”ன்னாரு சிரிச்சிட்டே. நல்லது தான். ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்த கொங்கன் ரயில் பயணம் அப்படியாக இனிதே துவங்கியது.

மதியம் ரெண்டு மணி டிரெயினுக்கு பன்னெண்டு மணிக்கெல்லாம் எர்ணாகுளம் ஜங்ஷன் வந்து காத்திருந்தேன். அருமையான ஸ்டேஷன் அது. கொஞ்சூண்டு லேட்டா வந்துச்சு ரயில். வழக்கமான அதே பழைய பெட்டிகள் தான். சுத்தமா சுத்தமே இல்லாத த்ரீ டயர் கோச். (இதை தேர்டு ஏசின்னு சொல்றவங்களை கொமட்டிலேயே குத்தணும். தேர்டு கிளாசை ஒழிச்சு பல மாமாங்கம் ஆச்சு). அஞ்சு நிமிஷம் தான் நிக்கணும் எர்னாகுளத்தில். ஆனா இருபது நிமிஷம் நின்னுச்சு. சரியா 14:30க்கு கிளம்பிச்சு.


வழியெல்லாம் பச்சை பசுமை, கடல், நதி, மலை, மழை... நிஜமாவே சொல்றேன், கேரளாவில் பகல் நேர ரயில் பயணங்கள் அதிலும் மழைக்கால பயணங்கள், நம்ம ஆன்மாவை முழுசா சுத்திகரிச்சிரும். அனுபவிச்சு பார்த்தா தான் அந்த சுகம் புரியும். எத்தனை பெரிய கவலை இருந்தாலும் மறந்து மனசு லேசாயிரும்.

ராத்திரி டின்னருக்கு என்ன வேணும்னு சாயங்காலமே வந்து கேட்டுட்டு போனாங்க. ரயிலில் பேண்ட்டரி இருக்கு. அது தவிர IRCTC மீல்ஸ் ஆன் வீல்ஸ் ஸ்கீமும் இருக்கு. வெஜ்.மீல்ஸ் ஆர்டர் செஞ்சுட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.

ஏசி கோச் பயணங்களை நான் அதிகம் விரும்பறதில்லை, அதிலும் நீண்ட தூர பயணங்கள். அதுக்கெல்லாம் ஸ்லீப்பர் கிளாஸ் தான் பெஸ்ட்டு. ஜன்னலோரம் உக்காந்து சற்றே வளைஞ்ச ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதிச்சு சிலுசிலுன்னு அடிக்கும் காத்தையும் சாரலையும் அனுபவிச்சபடி பயணிக்கிற அந்த சுகமும், ரயில் பெட்டியின் தடக் தடக் தாலாட்டு சத்தமும் எல்லாம் ஏசி கோச்சில் கிடைக்கறதில்லை. ஆனா கம்பெனி என்னை கவுரவமா நடத்துதாம். அதனால ஏசி கோச். வேற வழியில்லை. கோச்சை விட்டு வெளியேறி, கதவாண்டை போய் படியில் உக்காந்தபடி வேடிக்கையை தொடர்ந்தேன். கோழிக்கோடு வரைக்கும் தான். அப்புறம் இருட்டிடிச்சு. அதுல என்னத்தை வேடிக்கை பார்க்கிறது? எழுந்து உள்ளாற வந்துட்டேன்.

ஒன்பது மணி சுமாருக்கு கண்ணூர் (கண்ணனூருன்னும் சொல்லலாம்). இரவு டின்னர் வந்துச்சு. சூடா இருந்தது. முன்னேல்லாம் ரயில் உணவுகள் படு கேவலமா இருக்கும். இப்ப சில வருஷமா நல்ல முன்னேற்றம். சூடாவும் சுவையாவும் நியாயமான விலையிலும் கிடைக்குது.

மீல்ஸ் ஆன் வீல்ஸ் - டின்னர் பாக்கெட்
இந்த மீல்ஸ் ஆன் வீல்ஸ் உண்மையிலேயே நல்ல திட்டம். யார் யாருக்கு என்னென்ன உணவுன்ற லிஸ்டை முன்கூட்டியே நம்மகிட்டே வந்து வாங்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி உணவை பேக் செய்து டயத்துக்கு சூடா கொண்டுவந்து தந்திடுறாங்க. பேண்டிரி இல்லாத ரயிலில் கூட  இதே மாதிரி ஆர்டர் வாங்கி இரவு எந்த ரயில் நிலையத்தில் டின்னர் டைமுக்கு ரயில் நிக்குமோ, அந்த ரயில்நிலைய கேண்டீனுக்கு தகவல் சொல்லி, பாக்கெட்ஸ் ரெடி செஞ்சு கரெக்டா அந்த டைமுக்கு டெலிவெரி கொடுத்துடறாங்க. இதே மாதிரி ஒரு திட்டத்தை சில தனி நபர்கள் நம்ம நெல்லை எக்ஸ்பிரசில் செஞ்சிட்டு இருந்ததை சில வருசத்துக்கு முன்னே பார்த்திருக்கேன். அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் பயணிகளுக்காக. அவங்களும் நெல்லைல எறிக்குவாங்க, ஆர்டர் எடுத்துக்குவாங்க, அந்த தகவலை போன்ல பாஸ் செஞ்சு விருதுநகர் வரும்போது பக்காவா டெலிவெரி கொடுத்துருவாங்க. எல்லாம் முடிஞ்சு திருமங்கலத்துல ஏறங்கிருவாங்க. நான் கூட அந்த பிஸினஸ் பண்ணலாமான்னு யோசிச்சிருக்கேன். இப்ப இருக்கான்னு தெரியலை. ஆனா ரொம்ப நல்ல லாபகரமான ஐடியா.

இரவு 11:45 மணி சுமாருக்கு மங்களூரை கடந்தது ரயில். நான் முழிச்சிருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. மங்களூர் தாண்டி 200 கிமீ கடந்து முருதேஷ்வர்ல கடலோரமா ஒரு பிரமாண்டமான சிவன் சிலை இருக்கு. அந்த கோவில் கடலில் உட்புறமா ஒரு சின்ன தீவில் கட்டி இருக்காங்க. சிலை மிக மிக மிக பிரமாண்டம். பக்கத்துலயே இருபது மாடி கோபுரம் கட்டி அதில் லிஃப்ட்டெல்லாம் வெச்சு பக்தர்கள் அதில் மேலேறி போயி சிவனின் முகத்தை பார்க்கமுடியும். அவ்வளவு உயரம். சிவன் உட்கார்ந்திருக்கிற மாதிரி சிலை. பல கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து பார்த்தாலும் கடலில் அவர் உட்கார்ந்திருப்பது அவ்வளவு தத்ரூபமா தெரியும். அதிலும் இரவில் அந்த சிலையை பார்ப்பது சாக்ஷாத் அவரே உட்கார்ந்திருக்கும் உணர்வை தரும். அதனால் அதை பார்க்கணும்னு ஒரு ஆசை. ரயிலிலிருந்து பார்த்தால் தெரியும்னு சிலரும், இல்லை இல்லை ரயில் பாதை ரொம்ப தூரத்தில் இருக்கு, அதனால் தெரியாதுன்னு சிலரும் சொன்னாங்க. வெயிட் பண்ணி பார்த்துரலாம்னு தான் முழிச்சிருந்தேன்.

முருதேஷ்வர் சிவன் சிலை.
(பக்கத்துல இருக்க கோவிலை கவனிங்க, சிலையின் பிரமாண்டம் புரியும்)

முருதேஷ்வர் 02:50 க்கு தான் போகும். இடையில தூங்கிட்டேன்னா? அதனால் 02:30 க்கு அலாரம் வெச்சுட்டு முழிச்சிட்டிருந்தேன். அப்பப்பா கொஞ்சம் கண்ணயர்தல் பின் முழித்தல்னு ஒரு மாதிரியா போச்சு.

02:30 க்கு அலாரம் அடிச்சாபோது செம தூக்கம். திடுக்குனு எழுந்து முகம் கழுவி ஃபிரெஷ் ஆகிட்டேன். அப்போ ரயில் பத்கல் (Bhatkal) ரயில் நிலையத்தில் நின்னிட்டு இருந்துச்சு. அட அவ்வளவு லேட்டா சுலோவா வந்தும் கரெக்ட் டயமுக்கு வந்திருச்சேன்னு ஆச்சரியம். இறங்கி நல்ல சூடா ஒரு டீயை வாங்கி குடிச்சிட்டு மீண்டும் ரயிலேறவும் ரயில் புறப்படவும் சரியா இருந்துச்சு. இன்னும் கால் மணி நேரம் தான். முருதேஷ்வர் வந்திரும். இப்ப திடீர்னு ஒரு கன்பீசன். முருதேஷ்வருக்கு முன்னாடியே சிலை வந்திருமா, முருதேஷ்வர் கடந்தா? எதுக்கும் இருக்கட்டும்னு பத்கல் தாண்டினதுமே இருட்டை வெறிச்சு வெறிச்சு உத்து உத்து பாத்துட்டே வந்தேன். முருதேஷ்வர் ஸ்டேஷனும் வந்துச்சு. ரெண்டு நிமிஷம் நின்னு கிளம்பிருச்சு. ஆனா அந்த சிலை தெரியவேயில்லை. கடல் காத்து மட்டும் சிலுசிலுன்னு அடிச்சிட்டே இருந்துச்சு. சிலை தெரியலையா அல்லது நான் கவனிக்கலையான்னு புரியாமலேயே வந்து படுத்துட்டேன். என்னமோ இனம் தெரியாத ஒரு ஏமாற்றம், எதுக்குன்னே தெரியலை

சாய்... சாய்.... சத்தம் கேட்டு எழுந்தப்ப மணி 10:30. டிரெயின் நின்னிட்டு இருந்துச்சு. போன்ல எந்த இடம்னு பார்த்தா ராஜாபூர்னு காட்டிச்சு. இங்கே ஸ்டாப்பிங்கே இல்லையென்னு கோச்சை விட்டு வெளியே வந்து கீழே இறங்கி நின்னேன். கொங்கன் ரயில்வே சிங்கிள் டிராக் என்பதால் எதிரே வரும் ரயில்களுக்காக பாசிங்குக்கு நிக்கும். அப்படி ஒரு பாசிங்குக்காக அப்போ அங்கே ஒரு சின்ன ஹால்ட். ரம்மியமான இடம். சின்ன கிராமம். மரங்கள் அடர்ந்த ஊர். கொஞ்ச நேரம் ஊரை ரசிச்சிட்டு இருந்தா, வண்டி கிளம்பிருச்சு. மீண்டும் பயணம். இரவு அசந்து தூங்கியதில் கோவாவை விட்டுட்டேன். பரவாயில்லை. இன்னொரு தபா பார்த்துக்கலாம்.

குகையிலிருந்து வெளியேறும் ரயில் 

கொங்கன் ரயில்வேயில் நிறைய குகைகள், உயர்ந்த பாலங்கள். மலைகளை உடைச்சு ரயில்பாதை போட்டிருப்பதால், மலைசரிவிலிருந்து பாறைகள் உருண்டு வரும் அபாயம் இருக்கு. அதனால் ரயில்பாதையின் ரெண்டு பக்க மலைப்பாறையிலும் கம்பி வேலி அடிச்சு பாதுக்காத்து இருக்காங்க. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்கும்போது தான் எத்தனை பயங்கரமான ஆபத்து அதுன்னு புரியுது. அதேமாதிரி மிக மிக உயரமான பாலங்கள். ஒற்றை பில்லர்ல நிக்குது. அதிலும் வளைந்து செல்லும் பாலங்களில் வேகம் குறைக்காமல் பறக்கும் ரயிலின் படிக்கட்டில் நின்றபடி அந்த பயணத்தை அனுபவிப்பது செம்ம திரில். குகைகள் மிக நேர்த்தியா இருக்கு. வெளிச்சம் காற்று இரண்டையும் செயற்கையா உள்ளே ஏற்பாடு செஞ்சிருக்காங்க. மின்சார விளக்குகளும் இருக்கு. ஆங்காங்கே ரயில்பாதை ஓரம் ஆட்கள் நிற்பதற்கு இடம், குடிநீர் வசதி எல்லாம் செஞ்சிருக்காங்க. ஒருவேளை குகைக்குள் ரயில் மக்கராகி நின்னுடுச்சின்னா, உதவி வரும் வரைக்கும் மக்களுக்கு தற்காலிக ஏற்பாடு வேணுமில்லே, அதுக்காக. ச்சே.. என்னா பிளானிங்.. செம

குகைக்குள் இரயில் 
நான் ரொம்ப எதிர்பார்த்த அந்த அபூர்வ காட்சி ரத்னகிரி கிட்டே பார்த்தேன். இந்தியாவில் இருக்கும் ஒரே RO-RO சர்வீஸ் (Roll On-Roll Off Service). இந்த சர்வீஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பார்த்ததில்லை. இது தான் முதல்தடவை பார்க்கிறேன். ரயில்மீது லாரிகளை ஏத்திட்டு போறது. இதன்மூலம் லாரி டிரைவர்களுக்கு செம்ம லாபம். மகாராஷ்டிரா மாநிலம் கோலாடிலிருந்து (Kolad) கர்நாடக மாநிலம் மங்களூர் வரை இந்த சர்வீஸ் இருக்கு. இந்த தூரத்தை ரோடு மூலமா ஒரு லாரி கடக்கறதா இருந்தா, ரொம்ப லேட் ஆகும். மலைப்பாங்கான காட்டு பகுதின்றதால் ரிஸ்கும் ஜாஸ்தி. மேலும் வாரத்துக்கு ரெண்டு டிரிப் தான் அடிக்கமுடியும். செலவும் ஜாஸ்தி. ஆனா இந்த RO-RO சர்வீஸ் உபயோகிச்சா, வாரத்துக்கு மூணு டிரிப் அடிக்கலாம், டிரைவர்களுக்கு நிறைய ரெஸ்ட் கிடைக்கும் (பத்து மணிநேரம் நிம்மதியா தூங்கிக்கலாம்), அதை விட இந்த சர்வீசுக்கு ஒரு 16 டன் டாரஸ் லாரிக்கு வெறும் 7,000 ரூபா தான் கட்டணம். அப்படி எல்லா வகையிலும் லாரிக்காரங்களுக்கு நன்மை.

அஞ்சு ரயில்கள் இந்த சர்வீசில் இயங்குது. அப்படியும் பத்தாம ஆறாவது ரயில் இயக்கறது பத்தி யோசிச்சிட்டு இருக்கு கொங்கன் ரயில்வே நிர்வாகம். கூட்ஸ் ரயிலின் மீது லோடட் லாரிகளை அப்படியே ஏத்தி அதை கோலாடு – மங்களூர், மங்களூர் – கோலாடு டிரிப் அடிக்குது இந்த சர்வீஸ். தினமும் மங்களூர்ல 50 லாரி, கோலாடுல 100 லாரி வெயிட்டிங்க்ல இருக்கிற அளவுக்கு இந்த சர்வீசுக்கு டிமாண்டு.

RO-RO சர்வீஸ் ரயில்  
என் ரயில் ரத்னகிரி வரும்போது மணி 11:30. அப்போ எங்க ரயிலுக்கு வழி விட இந்த RO-RO சர்வீஸ் ரயில் ஷண்டிங் லைன்ல நின்னுட்டிருந்துச்சு. எப்படியும் ஒரு 70 லாரி இருக்கும். ஃபுல் லோடடு. டிரைவர்கள் லாரிக்குள் உக்காந்து பேசிட்டும், விளையாடிட்டும் இருந்தாங்க. ரயில் லாரியை சுமந்து போயிட்டிருக்கு. ஆச்சரியமா பார்த்தேன். இது மாதிரி ஏன் எல்லா ரூட்டிலும் விடக்கூடாதுன்னு தோணிச்சு. நல்ல வருமானம் அரசுக்கு. லாரிக்காரங்களுக்கும் லாபம். சுற்று சூழல் பாதிப்பும் குறையும்.

காலை உணவுக்கு பூரி, மதிய லஞ்சுக்கு மீண்டும் வெஜ் மீல்சுனு என் வயித்துப்பாட்டை மீல்ஸ் ஆன் வீல்ஸ் டீம் பாத்துக்கிச்சு. எதுக்கும் காசு வாங்கலை. கடைசியா இறங்கும்போது மொத்தமா பில் தர்றோம் அப்ப கொடுத்தா போதும்னு அன்பா சொன்னாங்க. ஆச்சரியமா இருந்துச்சு. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் காசை கையில் கொடுத்தா தான் ஆர்டரே எடுப்பாங்க.
பனுவேல் ரயில் நிலையம் 
சாயங்காலம் நாலரை சுமாருக்கு பனுவேல் (Panvel) வந்துச்சு. மும்பை நகரத்துக்கான முதல் அத்தாட்சி. நிறைய நிறைய வானுயர்ந்த கட்டிடங்கள் உருவாகிட்டு இருக்கு. மெல்ல மெல்ல நகரம் கண்ணில் பட தொடங்கிச்சு. அடுக்கடுக்கா வீடுகள், மலை மலையா குப்பைகள், சுகாதாரமில்லாத சுற்றுப்புறம், அடிக்கடி எங்களை கடந்து செல்லும் மின்சார ரயில், அந்த ரயில் முழுக்க சாரி சாரியா மக்கள்னு ஒரு பரபரப்பான மிக பெரிய வணிக நகரத்துக்கான குறியீடுகள் தெரிய ஆரம்பிச்சிச்சு.

காட்கோபார் மெட்ரோ ரயில் நிலையம் 
குர்லாவுக்கு 6:30 க்கு தான் இந்த ரயில் போகும். ஆனா எனக்கு ஜாகை அந்தெரில இருக்கு. நான் எதுக்கு குர்லா வரைக்கும் போகணும்னு எனக்குள்ளேயே ஒரு கேள்வி. நல்லவேளையா காட்கோபார் ரயில் நிலையத்துகிட்டே என் ரயில் ரொம்ப சுலோவா இன்ச் பை இன்ச்சா நகர்ந்திட்டிருந்த ஒரு நல்ல தருணத்தில் ரன்னிங்ல இறங்கிட்டேன். காட்கோபார் ஸ்டேஷன்ல இருந்து அந்தெரிக்கு மெட்ரோ இருக்கே..

மும்பை மெட்ரோ
காட்கோபார் ஸ்டேஷனுக்குள்ளேயே பக்கத்திலிருக்கும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஒரு வழி போகுது. அதில் நடந்து மெட்ரோ ஸ்டேஷன் போய் டிக்கெட் வாங்கி ஏர்போர்ட் போலிருக்கும் ஸ்டேஷனின் முதல் தளம் போனேன். அங்கே தான் பிளாட்ஃபார்ம். அழகான ரயில். நம்ம பெங்களூருவின் “நம்ம மெட்ரோ” ரயிலின் அதே குடும்பத்தை சேர்ந்த டிசைன். முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நாமகரணம், எங்கெங்கும். பிளாட்ஃபார்மில் செகியூரிட்டிகள் அவ்வளவு ஹாண்ட்ஸம்மா இருந்தாங்க.

மெட்ரோ ரயில் உட்புறம் 
ரயில் மெல்ல ஊர்ந்து அந்தெரி வந்தது. நான் இறங்கி விசாரிச்சப்பறம் தான் தெரிஞ்சது நான் எக்ஸ்பிரஸ்ஹைவே ஸ்டேஷன்ல எறங்கிருக்கணும்னு. அப்புறம் என்ன. ஒரு ஆட்டோ பிடிச்சு அபார்ட்மெண்ட் போய் சேர்ந்தேன். இன்னும் நிறைய டைம் இருக்கே. நைட்டு சும்மா தானே இருக்க போறோம். ஒரு நைட் ரவுண்டப் அடிக்கலாமான்னு தோணிச்சு. ஜஸ்ட் அப்படியே கேட்வே ஆஃப் இந்தியாவரைக்கும்?? பிளான் முடிவாச்சு.

வெயிட் அதை அடுத்த பதிவில் சொல்றேன். இப்ப கொஞ்சம் ரெஸ்ட்.



Wednesday, May 27, 2015

ராஜாவும் ராயல்டி பிரச்சனையும்

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுறேன். 1976 இல் பிறந்ததால் நானும் ஒரு ராஜா ரசிகனே. ஒவ்வொரு மனுஷனும் தன் பால்யத்தில் விரும்பியவை தான் கடைசிவரை ஆதர்சம் என நினைப்பான். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. எல்லோர் இசையையும் ரசிக்கும் பக்குவம் இருந்தாலும், இளையராஜா எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான் எனக்கும். அவரது இசை என்பது வேறு, அவரது தனிப்பட்ட விஷயங்கள் என்பது வேறு. அதில் நான் தெளிவா இருக்கேன்.

இனி

இப்ப சில காலமா மீண்டும் அவருடைய ராயல்டி பிரச்சனை வெடிச்சிருக்கு. ஏற்கனவே 2010 ஆம் வருஷம் வெடிச்சு சில காரணங்களால் அடங்கி இருந்துச்சு. இப்ப மீண்டும். இந்த தடவை டார்கெட், ரேடியோ மிர்ச்சி. அதில் வரும் பிரபலமான “நீங்க நான் ராஜா சார் நிகழ்ச்சியை நிறுத்தணும்னு அறிக்கை வெளியிட்டிருக்கார்.

அதை தொடர்ந்து இணைய நண்பர்கள் ஆளுக்கொரு விளக்கம், பொழுதொரு சப்பைக்கட்டு என என் டைம்லைனை நிரப்பிட்டு இருந்தாங்க. அதில் எதேச்சையா நானும் குதிச்சு இப்ப வெளி வர முடியாம தத்தளிச்சிட்டு இருக்கேன். விவாதங்களை புரிஞ்சு ஏத்துக்கற பக்குவம் பொதுவாவே எல்லோருக்கும் கம்மியாயிட்டதால, 140 லெட்டர்ஸ்ல விளக்கம் கொடுக்கறதை விட என்னுடைய கருத்தை என் வலைப்பூவிலேயே சொல்லிடலாமேன்னு நிறைய நண்பர்கள் கொடுத்த உருப்படியான அட்வைஸ் தான் இந்த பதிவுக்கான வித்து


இசையமைப்பாளர் தான் மொத்த இசைக்கும் சொந்தக்காரர். அவர்ட்ட இருக்கும் எண்ணற்ற திறமையான இசைக்கலைஞர்களை வழிநடத்தி அவர் மனசுல செதுக்கின இசையை ஒலியில் கொண்டு வந்து பதிவு செய்வது அத்தனை சுலபமானது அல்ல. அது மக்களையும் சென்று சேரனும். ஹிட்டும் ஆகணும். இதை எல்லா இசையமைப்பாளர்களும் செய்யுறாங்க.

ஒரு டைரக்டர் மனசுல இருப்பதை நடிகரிடம் சொல்லி அவரை அதற்கு தகுந்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ண வெச்சாலும் நடிகருக்கு தான் அப்ளாஸ். ஆனா அதே இசையமைப்பாளர் மனசுல இருப்பதை இசைக்கலைஞரிடம் சொல்லி அவரை அதற்கு தகுந்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ண வெச்சா அதன் பலன் இசையமைப்பாளருக்கு தான். என்ன? லாஜிக் இடிக்குதா? அதை பைபாஸ்ல விட்டுட்டு நாம விஷயத்துக்கு வருவோம்.


ஆரம்ப கால திரைப்பாடல்களை தயாரிப்பாளர் உரிமை எடுத்துக்கிட்டு இருந்தார். அதாவது இசைக்கலைஞர் வாசிச்சதுக்கு சம்பளம் கொடுத்ததும் அது இசையமைப்பாளரின் உரிமை ஆயிடுற மாதிரி, இசையமைப்பாளரின் இசைக்கு சம்பளம் கொடுத்ததும் அது தயாரிப்பாளரின் உரிமை ஆயிருந்தது. அதுக்கப்புறம் நிறைய சட்டங்கள் வந்து அந்த முறையை மாத்திருச்சு. அறிவுசார் சொத்து உரிமை சட்டம் (Intellectual Property Act) இந்தியாவில் ஏற்படுத்திய மிக பெரிய மாற்றத்துக்கு பின், நிறைய சச்சரவுகள், அந்த சட்டம் குறித்த சரியான புரிதல் இல்லாததால்.


முன்னேல்லாம் ராஜா போட்ட ஒப்பந்தங்களில் நிறைய சொதப்பல் இருந்ததால் அவரது அபூர்வமான அருமையான பழைய பாடல்களின் உரிமை அவரிடமே கூட இல்லாமல் சில நிறுவனங்களிடம் போயிருச்சு. பிறகு தனது மனைவி மூலமா சில உரிமைகள் கொடுத்தார் (இப்ப அப்படி மனைவி மூலமா கொடுத்தது செல்லாதுன்னு சொல்லி இருக்கார்!). அது தவிர இவரே சில நிறுவனங்களுக்கு உரிமை கொடுத்திருக்கார். இவை அல்லாமல் சில பாடல்களின் உரிமை பட தயாரிப்பாளர்களிடம் இருக்கு. இப்படியாக அவருடைய பாடல்களின் உரிமைகள் பலரிடம் சிதறிக்கிடக்குது.


90 களின் துவக்கம் வரை ஆல் இந்தியா ரேடியோவும் தூர்தர்சனும் தான் கதி என்பதால், எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க முறையா எல்லார்கிட்டேயும் உரிமம் வாங்கி ஒளி/ஒலிபரப்பிட்டு இருந்தாங்க. புதிய பொருளாதார கொள்கையின் பலனா, நிறைய பண்பலை வானொலிகளும், டிவி நிறுவனங்களும் வந்ததும், அவங்க யார் யார் கிட்டே எந்த எந்த பாடல் உரிமை இருக்கோ அவங்க கிட்டே எல்லாம் தனி தனியா ஒப்பந்தம் போட்டு பாடல்களை வாங்கி ஒலிபரப்பு ஒளிபரப்பு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதை கண்காணிக்கறதும் கட்டுப்படுத்தறதும் ரொம்ப கஷ்டமான விஷயம். ஏன்னா அவ்வளவு சேனல்கள், அவ்வளவு ரேடியோக்கள் 24 மணிநேர நிகழ்ச்சிகள்.


ரேடியோக்களை பொறுத்தவரை அவை செய்வது சேவை. இதை பலரும் ஒத்துக்கிட மாட்டாங்க. பத்திரிக்கையின் வாசகனா நாம அந்த பத்திரிக்கைக்கு காசு கொடுத்து வாங்கி ஒரு கட்டுரையை படிக்கிறோம். அது வணிக நோக்கிலான கட்டுரை. அதாவது யாருக்காக சொல்லப்படுதோ அவரிடமிருந்து நேரடியா காசு வாங்கப்படுது. ஆனா என்னுடைய இந்த பிளாக் (வலைப்பூ) வணிக நோக்கத்திலானது அல்ல. ஏன்னா இதை படிக்கும் நீங்க எனக்கு நேரடியா எந்த காசும் கொடுக்கறதில்லை. இந்த கட்டுரை எனது படைப்பு. ஆனா அதை நீங்க படிச்சாலும் அதுக்காக எனக்கு நீங்க எந்த வருவாயும் தருவதில்லை. ஒருவேளை பிளாக் மூலமான விளம்பர வருவாய் இருந்தாலும் (எனது பிளாகுக்கு அப்படி எதுவும் இல்லை) அது நீங்க கொடுக்கிற காசு அல்ல. எனவே கம்ப்லீட்டா ஒரு பிளாக் என்பது சேவை தான். வணிகம் அல்ல. அதே லாஜிக் தான் ரேடியோவுக்கும். 


ரேடியோ நமக்கு ஒலிபரப்பும் பாடல்களை நாம கேட்கிறோம். ஆனா அதுக்காக நாம எந்த காசும் ரேடியோ நிறுவனத்துக்கு  கொடுப்பதில்லை. நாம கேட்க விரும்பும் பாடல்களை அவர்கள் இலவசமா ஒலிபரப்புராங்க. அதே சமயம் விளம்பரதாரர்கள் தரும் விளம்பரங்களை கட்டணம் வசூலிச்சு அதை ஒலிபரப்புராங்க. இந்த விளம்பர வருமானம் மட்டும் தான் அவர்களது ஒரே வருவாய். பாடல்களை பொருத்தவரைக்கும் ஒலிபரப்பு உரிமைக்காக கட்டணம் செலுத்தி உரிமம் வாங்கி நமக்கு இலவசமா ஒலிபரப்புராங்க. சிம்பிளா சொல்லனும்னா, விளம்பர ஒலிபரப்புக்கு விளம்பரதாரர்கள் பணம் கொடுக்கிறாங்க. பாடல் ஒலிபரப்புக்கு பாடல் இசையமைப்பாளரோ, தயாரிப்பாளரோ, நேயர்களோ பணம் கொடுப்பதில்லை. மாறா ரேடியோ நிறுவனம் தான் உரிமத்துக்காக பணம் கொடுக்குது. அதனால் இது சேவை கேட்டகரியில் தான் வருமே தவிர வணிக ரீதியான ஒலிபரப்புன்னு சட்டப்படி வரையறை செய்ய முடியாது. ஒருவேளை, இந்த பாடலை கேட்க விரும்புவோர் இத்தனை கட்டணம் செலுத்தினால் அவங்களுக்கு மட்டும் ஒலிபரப்பப்படும்னு சொன்னா (மொபைல் போன் நிறுவனங்கள் இது மாதிரி வியாபாரங்கள் செய்கிறது) அப்ப தான் அது “வணிக ரீதியிலான ஒலிபரப்பு” பட்டியலில் வரும். இப்போதைக்கு எந்த எஃப் எம் நிறுவனமும் அப்படி “வணிக ரீதியிலான ஒலிபரப்பை” எந்த இசையமைப்பாளரின் பாடலுக்கும் செய்வதில்லைன்றது இப்ப ஓரளவுக்கு உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்.


இங்கே இன்னொரு விஷயம் சொன்னா இந்த வணிக ரீதியான பயன்பாடு எளிதில் புரியும். இளையராஜாவே தன்னுடைய பாடல்களில் சில பாரதியார் பாடல்கள், கீர்த்தனைகள், மந்திரங்கள், திருப்பாவை வரிகள் எல்லாம் உபயோகிச்சிருக்கார். அதுக்கெல்லாம் அவர் முறையா அனுமதியோ உரிமையோ வாங்கி இருக்காரான்னு யாருக்கும் தெரியாது. ஆனா அவற்றை பயன்படுத்தி படைக்கப்பட்ட பாடல்கள் அவரது உரிமை என்றாயிருச்சு. இது ஒருவகையில் முறையான உரிமை இல்லாமல் வணிக ரீதியான படைப்புக்காக” பயன்படுத்தப்பட்டதுனு தான் சட்டம் சொல்லும்.

இப்ப அவர் கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில், தனக்கு கிடைக்கும் ராயல்டியை இசை கலைஞர்கள், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு கொடுக்கப்போறதா சொல்லி இருக்கார். ராயல்டி சட்டப்படி அதுக்கு அவசியமில்லை. இசைக்கலைஞர்கள் பாடலாசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்ததுமே அந்த இசையின் உரிமை இசையமைப்பாளருக்கு சொந்தமாயிருது. இசையமைப்பாளருக்கு சம்பளம் கொடுத்ததும் அது தயாரிப்பாளரின் சொந்தமாயிருது. மேலும் முன்னேல்லாம் பாடலாசிரியரை தீர்மானிக்கிறது இசையமைப்பாளர். ஆனா இப்ப இயக்குனரோ தயாரிப்பாளரோ ஏன் ஹீரோக்களோ தான் பாடலாசிரியரை தீர்மானிக்கிறாங்க. உதாரணமா கவுதம் மேனன் படங்களில் கவிஞர் தாமரை தான் வேணும்னு அவர் சொல்வதுண்டு. யார் இசையமைச்சாலும் இந்த முன்னுரிமை அப்படியே இருக்கும். அதுபோல ரஜினி தனது படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதணும்னு சொல்வதுண்டு. சில படங்களில் வைரமுத்துவை ஏற்றுக்கொள்ளும் இசையமைப்பாளர் போதும். இசை யார் வேணும்னாலும் செய்யலாம், ஆனா அதுக்கு தகுந்த வார்த்தைகளை அவர் தான் தரமுடியும்னு சொன்ன நிகழ்வெல்லாம் இருக்கு. அப்படி அவரும் தேவா, ரஹ்மான்னு மாறி மாறி வந்தாலும் பாடலாசிரியரை மாத்தாம பாத்துக்குவாரு.  ஆக, பாடலாசிரியர்களுக்கு ராயல்டி என்பது எந்த ரூட்டில் இசையமைப்பாளர் மூலமா வருதுன்னு எனக்கு தெளிவா புரியவேயில்லை இன்னும்.

அடுத்ததா இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.

Mirchi Senthil

மார்ச் 2011 இல் ரேடியோ மிர்ச்சி நிறுவனம் “நீங்க நான் ராஜா சார்” நிகழ்ச்சியை நடத்த ஆரம்பிச்சுது. மிர்ச்சி செந்தில் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து நடத்திட்டு வர்றவர். அருமையான பாடல்கள், அந்த பாடல்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள், பின்னணி செய்திகள், பாடல் பிறந்த கதை, அது தொடர்பான நிகழ்வுகள்னு நிறைய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துக்குவார். இரவு 9 – 11 ரெண்டு மணிநேரம் ராஜ இசை நிரம்பி வழியும். இந்த நிகழ்ச்சியை துவக்கி வெச்சவர் சாக்ஷாத் இளையராஜாவே தான். பின் 2013 ஆம் வருஷம் உலக இசை நாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி சார்பா நடத்தப்பட்ட ஒரு ரசிகர் சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டிருக்கார். அங்க தன்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சியை கேக் வெட்டி ரசிகர்களோட கொண்டாடி இருக்கார். எல்லோருக்கும் தன் கையெழுத்திட்ட ஆடியோ சிடியை இலவசமா கொடுத்திருக்கார். இதிலிருந்து, “நீங்க நான் ராஜா சார்”ன்ற ஒரு நிகழ்ச்சியை ரேடியோ மிர்ச்சி நிறுவனம் கடந்த 4 வருஷமா நடத்திட்டு வருதுன்றது அவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்.

ஆனா இப்போ
, அந்த நிகழ்ச்சி பத்தி தனக்கு எதுவும் தெரியாதுன்னும், அந்தக் நிகழ்ச்சிக்கு தன்னுடைய அனுமதி இல்லைன்னும், டைட்டிலில் “ராஜா” எனும் பெயரை பயன்படுத்தியதுக்கு ராயல்டி தரலைன்னும் சொல்லியிருப்பதுடன் நிகழ்ச்சியை நிறுத்த சொல்லி ரேடியோ மிர்ச்சிக்கு விரிவா ஒரு நோட்டீஸ் சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி இருந்தார். அதற்கு பிறகும் அவர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திட்டு இருந்ததால் இப்ப மீண்டும் வெளிப்படையா ஒரு அறிக்கை விட்டு நிகழ்ச்சியை நிறுத்தணும்னு வலியுறுத்தியிருக்கார்.  ஏற்கனவே 2010 ஆம் வருஷம் நீதியரசர் தமிழ்வாணனும் நீதியரசர் சுப்பையாவும் வெவ்வேறு தீர்ப்பில் சொல்லியபடி, இளையராஜாவிடம் உரிமை உள்ள பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் எந்த ரேடியோ நிறுவனமும் ஒலிபரப்ப முடியாது. அதை தவிர தயாரிப்பாளர்கள் மற்றும் சில நிறுவனங்களிடம் உரிமை இருக்கும் பாடல்களை மட்டும் அவர்களிடமிருந்து உரிமம் வாங்கி இதுவரையும் ஒலிபரப்பிட்டு இருக்காங்க. ரேடியோ மிர்ச்சியும் மற்றும் சில ரேடியோக்களும் அப்படியான உரிமைகளை வாங்கி தான் பாடல்களை ஒலிபரப்பிட்டு வர்ரதா சொல்றாங்க.

இளையராஜாவின் அறிக்கை 
இப்ப வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், சில ஆடியோ நிறுவனங்கள் அவரது அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் ஆடியோ வீடியோ சிடிக்கள் விற்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாவும், போலீசார் அப்படியான விற்பனையை தடுக்கணும்னும் கோரிக்கை விடுத்திருக்கார். தொடர்ந்து அந்த அறிக்கையில் அவர் “தன்னுடைய பெயரையோ, படத்தையோ தன்னுடைய எழுத்து பூர்வ அனுமதி இல்லாமல் வணிகரீதியா பயன்படுத்த கூடாது” ன்னு சொல்றார். 

இங்கே தான் சிக்கல்.
ரேடியோ மிர்ச்சி நடத்திட்டு வரும் நிகழ்ச்சியான "நீங்க நான் ராஜா சார்" என்பதில் ராஜா என்பதை தான் அவர் குறிப்பிடுறார்னு ஓரளவு புரியுது. அப்படியெனில் ராஜா என்பது அவரை குறிக்கிறதான்னு ஒரு கேள்வி வருது. இசைஞானி, ராகதேவன், மேஸ்டிரோ, டேனியல், ராஜா, ராசையா, இளையராஜான்னு பல பெயர்கள் அவரை குறிப்பிடும் என்றாலும், எந்த பெயரை உபயோகிக்கக்கூடாதுன்னு அவர் இந்த அறிக்கையிலோ, இதற்கு முந்தைய நோட்டீசிலோ, நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் மனுக்களிலோ எங்கேயும் தெளிவா குறிப்பிட்டு சொல்லவே இல்லை. ராஜா என்கிற பெயர் அவரை மட்டும் தான் குறிப்பிடுதுன்னு சட்டப்பூர்வமா நிரூபிக்கவும் முடியாது. அதெல்லாம் ஒருபக்கம். அதே ராஜா எனும் பெயரை உபயோகிச்சு ரேடியோ சிட்டியில் “ராஜா ராஜாதான்” என்கிற ஒரு நிகழ்ச்சியும், மற்றொரு வானொலியில் "ராஜாங்கம்" என்கிற ஒரு நிகழ்ச்சியும், வேறொரு வானொலியில் "என்றென்றும் ராஜா" என்கிற ஒரு நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகிட்டு வருதே அவைகளை நிறுத்த சொல்லி அவர் எந்த அறிக்கையும் விடலைங்கறது இன்னொரு பக்கம். ஆக பிரச்சனை “ராஜா” என்கிற பெயர் அல்ல.

அவரது பாடல்கள் இன்னை வரை எல்லா ரேடியோவிலும் ஒலிபரப்பாகிட்டு தான் வருது. “எல்லா ரேடியோவும் அவரது பாட்டை நிறுத்திட்டாங்க”னு ஏதோ ஒரு ஆபீஸ் கியூபிக்கிளிலிருந்து அறிக்கை அனுப்பி உறுதி செய்யும் பல நண்பர்கள் தங்கள் டேபிளிலிருக்கும் மொபைல் போனை எடுத்து அதில் உள்ள எஃப்‌எம்ஐ ஒரு நிமிஷம் ஆன் செய்து கேட்டிருந்தாலே அப்படியொரு சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கமாட்டார்கள், அவரது வழி தோன்றல்களும் அந்த அறிக்கை சரியா தவறா என உறுதி செய்து பார்க்காமல் அமாமாம் எல்லா ரேடியோவும் அவர் பாட்டை நிறுத்திருச்சாம்னு பரப்பிட்டு இருக்க மாட்டார்கள். நிதர்சனம் என்ன என்றால், தொடர்ந்து அவரது பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்பாகிட்டு தான் இருக்கு. ஆக பாடல்களும் பிரச்சனை இல்லை.

வேறு என்ன தான் உண்மையிலேயே ரேடியோ மிர்ச்சியுடன் அவருக்கு பிரச்சனை? அதை சொல்ல வேண்டியது இளைய ராஜா மட்டும் தான்.அகி மியூசிக், எக்கோ ரிக்கார்டிங், யூனிசிஸ் இன்ஃபோ, கிரி டிரேடிங் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை 2012 இலேயே முடிஞ்சு போச்சுன்னு இப்போ இளையராஜா சொல்லி இருக்கார். அதனால் அவங்க கிட்டே வாங்கி ஒலிபரப்பும் ரேடியோ நிறுவனங்கள் அதை நிறுத்தணும்னு சொல்லி இருக்கார். (இந்த ஆகி மியூசிக்குக்கு உரிமம் கொடுத்து பின் ரிவர்ஸ் அடிச்சது ஒரு பெரிய கதை. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவா அலசுவோம்) இனி மேற்பட்டு தனது எல்லா பாடல்களின் உரிமையும் தன்னிடம் தான் இருக்குன்னும், அதை தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி அதன் தலைவர் கலைப்புலி எஸ். தாணு அவர்களிடம் பணம் கட்டி உரிமம் வாங்கி ஒலிபரப்பிக்கலாம்னும் சொல்லி இருக்கார். 


இதெல்லாம் ஒரு புறம் இருக்க, எதையுமே சென்சேஷநாக மட்டுமே பார்க்கும் என் நண்பர்களில் சிலரால் "ரஜினி தனது பெயரை பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்லலையா? அது மட்டும் சரியா?" என்றொரு புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றும் முன்வைக்கப்படுகிறது.

ரஜினி ரெண்டே ரெண்டு தருணங்களில் தான் அதை சொல்லி இருக்கார். மெயின் ஹூன் ரஜினிகாந்த் எனும் ஒரு ஹிந்தி படத்தில் அவரை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததாக தெரிந்ததால் அந்த படத்துக்கு அந்த பெயர் வைக்க கூடாதுன்னு சொன்னார். அதே மாதிரி தனது பெயரை சில அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியபோது அப்படி பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். அதாவது அவரது அரசியல் நிலைப்பாட்டை அவர்களாக தீர்மானித்து அவரது பெயருக்கு “களங்கம்” ஏற்படுத்தியதால்.  மற்றபடி, அவரது “படைப்பு” சம்மந்தமாக எந்த தடையும் அவர் விதிச்சதில்லை.

ரேடியோவில் பாடல் ஒலிபரப்பு செய்யப்படுவது ஒரு வகையில் அந்த பாடலுக்கான விளம்பரம் தான். அதனால் தான் இப்போதெல்லாம் எல்லா இசையமைப்பாளர்களும் தங்கள் புது பட பாடல் ஆல்பத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் சிங்கிள் டீசரா வெளியிடுறாங்க. ஒரே ஒரு பாடல் “வெளியிடுவது” என்பதே அதை எல்லோரும் டவுன்லோடு செய்து கேட்டு பிரபலப்படுத்தவேண்டும்
, ரேடியோவில் அது ஒலிபரப்பாகி பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான். அதற்கெல்லாம் யாரும் உரிமை தந்தால் தான் ஒளிபரப்பவேண்டும் என சொன்னதில்லை. சமீபத்தில் வெளியான “வை ராஜா வை” படத்தில் இதே இளையராஜா பாடிய “மூவ் யுவர் பாடி” பாடல் கூட அப்படி வெளியிடப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட பாடல் தான். வெளியான சில நிமிடங்களிலேயே ரேடியோவில் ஒலிபரப்பு செய்யப்பட்டு சட்டென பிரபலமானது. நிச்சயமாக உரிமை எழுதி வாங்கி ஒலிபரப்பியது அல்ல. அப்படி எல்லாம் இல்லாமல் உடனடியாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் “சிங்கிள் டிராக்” பாடல்கள் மிக ஆர்ப்பாட்டமான விளம்பரத்தோடு “வெளியிடப்படுகிறது”. அதை எல்லா ரேடியோ நிறுவனங்களுக்கும் அனுப்பி வைப்பதின் நோக்கமும் அதன் விளம்பரம் தான். ஆக ரேடியோ என்பது ஒரு மீடியம். அவ்வளவு தான்.



இதை பற்றியெல்லாம் சரியான புரிதல் இல்லாமல், நம் ஆதர்ச படைப்பாளி என்பதற்காக அவர் செய்வதை எல்லாம் நியாயமென கற்பிதம் செய்யும் என் நண்பர்கள் நிச்சயமாக ரேடியோ மிர்ச்சிக்கும் ராஜாவுக்கும் உண்மையிலேயே “இப்போது” என்ன பிரச்சனை என்பதை அறிந்திருக்கமாட்டார்கள்.நாம் வழக்கம் போல அவருக்கு ரசிகராக இருப்போம், பாடல்களை ரசிப்போம், அனுபவிப்போம், சிலாகிப்போம், இசையின் நுணுக்கங்கள் பற்றி விவாதிப்போம். அவரது தனிப்பட்ட வியாபார அரசியல் பற்றி எல்லாம் விவாதித்து ஏன் நம்மை நாமே கடுப்பாக்கிக்கொள்ளணும்??


Printfriendly