Friday, August 7, 2020

தமிழக ஈ-பாஸ் குழப்பங்கள்

கொரோனா பரவ ஆரம்பித்த நேரத்தில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதால், மத்திய அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிக்க ஈ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது.

அந்தந்த மாநிலத்தில் தனித்தனியாக அதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டு யார் யாருக்கு பயணிக்க தகுதி உள்ளதோ அவர்களுக்கு மட்டும் இணைய வழியே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது

ஈ-பாஸ் ஏன் வழங்கப்படுகிறது?

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இது தான் பொதுவான விதி. ஆனால் பின்னர் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பொழுது, அத்தியாவசிய தேவைகள், மருத்துவ அவசரம், திருமணம், மரணம், தொழில் என பல்வேறு காரணங்களுக்காக பலரும் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க வேண்டி உள்ளது. அப்படி பயணிப்போர் மூலமாக அந்த இடத்தில் தொற்று பரவாமல் இருக்க, அல்லது அந்த இடத்தில் இருந்து, பயணிப்பவருக்கு தொற்று பரவாமல் இருக்க, அவரை கண்காணிக்க இந்த பாஸ் அவசியம் ஆகிறது.

யார் எங்கே இருந்து எங்கே என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்பதை வைத்து அவர்களை கண்டுபிடிப்பதும், எச்சரிப்பதும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. அதற்காக, பயணிப்பவரின் மொபைல் எண், அடையாள அட்டை ஈ-பாஸ் வாங்க கட்டாயமாக்கப்பட்டது.

இவை தவிர பிறர் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதி இல்லை. 

யார் யாரெல்லாம் பயணிக்கலாம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அது அந்தந்த மாநிலத்தின் நோய் தொற்று பரவல், மாநிலத்தின் சமூக பொருளாதார நிலை ஆகியவை கவனத்தில் கொண்டு அந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளும்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஈ-பாஸ் வழங்க கொடுக்கப்பட்டு இருக்கும் தகுதிகளின் படி

நெருங்கிய உறவினர்களின் மரணம் - மரண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை

மருத்துவ அவசர சிகிச்சை - இதற்கு மருத்துவரின் பரிந்துரை, மருத்துவ ஆவணம் போன்றவற்றை நாம் இணைக்க வேண்டும். அவை அவசர சிகிச்சை எனில், உள்ளூரில் அந்த சிகிச்சை இல்லை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தான் செல்லவேண்டும் எனில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மாவட்டம் பயணிக்க வேண்டும் என்பதற்காக, சாதரண மருத்துவ பரிந்துரை ஆவணத்தை வைத்து அனுமதி கேட்பது போன்றவற்றுக்கு அனுமதி தருவதில்லை.

நெருங்கிய உறவினர் திருமணம் - திருமணத்தில் கலந்து கொள்ள 50 பேருக்கு அனுமதி உள்ளதால், அதற்காக வரும் நெருங்கிய உறவினர்களுக்கு ஈ-பாஸ் கொடுக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க திருமண அழைப்பிதழ் இணைக்க வேண்டும். நண்பர்கள், தூரத்து உறவினர்கள் போன்றோருக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை.  அதே போல சமையல், மேடை அலங்காரம், ஃபோட்டோகிராபர், இசைக்கச்சேரி செய்பவர் போன்ற திருமணம் தொடர்பான தொழில்கள் செய்வோர் திருமண பத்திரிகையை இணைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கேட்டாலும் கொடுப்பதில்லை. 50 பேருக்கு மேல் ஆட்கள் கூட அனுமதி இல்லை என்பதாலும், இந்த தொழில்கள் உள்ளூர் மாவட்டத்திலேயே கிடைக்கும் சேவைகள் என்பதாலும் வெளிமாவட்ட ஆட்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

பத்திரப்பதிவு செய்ய உள்ளவர்கள் - பிறமாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், அதற்கான நேர ஒதுக்கீடடு அனுமதி கடிதம் இணைத்தால் ஈ-பாஸ் கிடைக்கும்

அரசு பணிகளுக்கு டெண்டர் எடுத்து அந்த பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தால், அந்த பணியை மேற்பார்வையிட செல்லும் நபர்களுக்கு அனுமதி உண்டு

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்தால் அவர்கள் வேலைக்கு வந்து செல்ல தொழிற்சாலை / தொழில் நிறுவனம் மூலமாக விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி உண்டு. தொழிலாளர்கள் நேரடியாக விண்ணப்பிப்பது பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு விடுகிறது.

வேறொரு ஊரில் இருப்போர் சொந்த ஊருக்கு செல்ல - அடையாள அட்டைையில் குறிப்பிடப்பட்டு உள்ள விலாசத்துக்கு போவதற்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அதாவது, அடையாள அட்டைப்படி தூத்துக்குடி விலாசம். சென்னையில் வேலை. சொந்த ஊருக்கு சென்று 'தங்க' Stranded Passengers Return முறையில் விண்ணப்பித்தால் கிடைக்கும். சென்னை விலாசம் கொண்ட அட்டையை வைத்து தூத்துக்குடி செல்ல இந்த காரணத்தை வைத்து விண்ணப்பித்தால் கிடைக்காது. மேலும் மேலே சொன்னபடி சென்னையில் இருந்து தூத்துக்குடி விலாசத்துக்கு முறையாக பாஸ் வாங்கி சென்ற ஒருவர், சில நாட்களில் மீண்டும் அங்கிருந்து சென்னைக்கோ வேறொரு ஊருக்கோ செல்ல விண்ணப்பித்தாலும் கிடைக்காது. ஏனெனில் Stranded Passenger Return மூலம் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வர மட்டுமே அனுமதி. 

விமானப்பயணம் செய்வோருக்கு உறுதியான விமான பயணச்சீட்டு இணைத்தால் பாஸ் வழங்கப்படும்.

இவை தான் தமிழகத்தை பொறுத்த வரை அனுமதிக்கப்பட்ட பயணங்கள்.  இந்த பாஸ் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி உடைய விண்ணப்பங்கள் அங்கீகரிக்க ஒவ்வொரு மாவட்ட அட்சியர் அலுவலகத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி கொடுப்பார். 

முன்பு எந்த மாவட்டத்தில் இருந்து புறப்படுகிறீர்களோ அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் அனுமதி கொடுத்து வந்தது. ஆனால் அதில் சில முறைகேடுகள், பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் போய் அதிகாரியை அணுகி தகுதியற்ற விண்ணப்பங்களுக்குக் கூட அனுமதி வாங்கிய நிகழ்வுகள் நடந்ததாக சொல்லப்பட்டதை தொடர்ந்து, பாஸ் வழங்கும் அதிகாரம் சேரும் ஊரின் ஆட்சியர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.

இதன் மூலம் பாஸ்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக மதுரை மாவட்டத்தில் ஒரு திருமணம் என வைத்து கொள்வோம். வேலூர், கோவை, நெல்லை, சேலம் மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தால் முன்பு அந்தந்த மாவட்டங்களில் அனுமதி கொடுத்ததால் எல்லோருக்கும் கிடைத்தது. இப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் அனுமதி கொடுக்கும் என்பதால் எல்லா விண்ணப்பமும் ஒரே அதிகாரி பரிசீலித்து 50 பேர் எண்ணிக்கை, நெருங்கிய உறவினர் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனுமதி கொடுப்பார். குறிப்பிட்ட திருமண நிகழ்வுக்கு எத்தனை பேர் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள் என்பது ஒரே இடத்தில் டிராக் செய்யப்படும். 

திருமணம் என்பது உதாரணத்துக்கு சொன்னது, எல்லா காரணங்களுக்கும் சேருமிடத்து ஆட்சியர் அலுவலகம் முடிவு எடுப்பதால் அவர்களால் தெளிவாக எதை அனுமதிக்கலாம் எதை நிராகரிக்கலாம் என முடிவு எடுக்க முடிகிறது

இவை தவிர விண்ணப்பத்தில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் இருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி 10 வயதுக்கு குறைவான குழந்த்கைகள் வீட்டை விட்டு (மருத்துவ காரணங்கள் தவிர) வெளியே வர அனுமதி இல்லை.

வாகன அடிப்படையிலும் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகம் நிராகரிக்கிறது. சிறிய கார் எனில் 3 பேர், பெரிய கார் எனில் 5 பேர் தான் அனுமதி. அதை விட கூடுதலாக ஆட்கள் இருந்தால், அல்லது பயணகளில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், காவல் துறை, அரசு அதிகாரிகள் போன்றோருக்கு பாஸ் தேவை இல்லை. அவர்களுக்கு சிறப்பு விதி விலக்குகள் உள்ளன. நோய் தொற்று நடவடிக்கை, பொது மக்களுடனான சந்திப்பு, மீட்பு நடவடிக்கைகள் ஆகிய காரணங்களுக்காக அவர்கள் தினசரி மாநிலம் முழுவதும் பயணிக்க அவசியம் இருப்பதால் இந்த விலக்கு.

இதற்கிடையில் சில தனியார் வாகன ஓட்டுனர்கள், தரகர்கள் ஆகியோர் பாஸ் வாங்கி கொடுப்பதாக பணம் வசூலிப்பதும் நடைபெற்றது. அப்படி விளம்பரம் செய்த சிலர் கைதும் செய்யப்பட்டு உள்ளார்கள். 

நாமாக விண்ணப்பிக்கும் பொழுது நம்மை அறியாமல் நிகழும் தவறுகள், மேலும் பலருக்கு விண்ணப்பிக்க தெரியாதது ஆகிய காரணங்களால் ஏஜெண்டுகள் விண்ணப்பித்து கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விண்ணப்பித்தால் மட்டும் தான் கிடைக்கும் என்பது உண்மை அல்ல.

சராசரியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தினசரி 2000 பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் 3000 பாஸ்கள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பாஸ்கள் எல்லாம் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்படுபவை. விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் உள்ள ஏஜெண்டுகள் வாகன ஓட்டுனர்கள் எல்லோரும் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பததை
 அங்கீகரிக்க வைக்கிறார்கள் என்பதோ, ஒரு மாவட்டத்தில் உள்ள ஏஜெண்டுகள், வாகன ஓட்டுனர்கள் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தலையிட்டு பாஸ் வாங்குகின்றனர் என்பதோ நடைமுறையில் சாத்தியமற்றது என்பது சற்றே யோசித்து பார்த்தால் தெரியும். அங்கொன்றம்
 இங்கொன்றுமாக சில நடந்து இருக்கலாம். அவ்வளவே. மற்றபடி ஒரு மாவட்டத்தில் 500 வாகன ஓட்டிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் எல்லா மாவட்டத்திலும் பாஸ் வாங்க ஆட்கள் வைத்து சாதிக்க முடியும் என்பது எதார்த்தம் அல்ல.

சமீபத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னைக்கு வருவதற்கும், சென்னையில் இருந்து போவதற்கும் அத்தியாவசிய காரணங்கள் இல்லாத விண்ணப்பங்களை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை. 

பிற மாவட்ட பயணங்களை பொறுத்தவரை, உதாரணமாக கோவை - நெல்லை, திருவண்ணாமலை - தூத்துக்குடி பொன்றவை, மேலே சொன்ன அனுமதிக்க பட்ட காரணங்களுக்காக கேட்கும் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை.

இப்போது ஈ-பாஸ் முறை தேவையா?

கடந்த 29.06.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது மக்கள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது எனவும் ஈ-பாஸ் முறை தேவை இல்லை எனவும் மாநிலங்களுக்கு உத்தரவு இட்டிருந்தது.

ஆனாலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதை அமல் செய்யவில்லை.
மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் 29.07.2020 அன்று அதே உத்தரவை வலியுறுத்தியது. இதன் பின் சில மாநிலங்கள் ஈ-பாஸ் முறையை நீக்கி விட்டன என்றாலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஈ-பாஸ் முறை தொடர்கிறது.

தினசரி 5000 க்கும் மேல் புதிய நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், மாவட்ட அளவில் மக்களை கட்டுப்படுத்தி வைப்பது இப்போது அவசியம் என்பதாலும், அத்தியாவசிய தேவைக்கான சிலர் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பதாலும் இந்த பாஸ் முறை தமிழகத்தில் தொடர்கிறது.

இது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான், எனினும் சில தளர்வுகளை அளிக்கலாம் என பலரும் வேண்டுகோள் வைத்து உள்ளார்கள்

உதாரணமாக தொழில் துறையினர் தங்கள் தொழில் காரணமாக பொருட்கள் வாங்க, இயந்திரங்கள் பரிசோதிக்க, செர்வீஸ் செய்ய, கிளையண்ட் கம்பெனிகளை ஆய்வு செய்ய என பல விஷயங்களுக்கு பயணிக்க வெண்டி உள்ளது. இவை எல்லாம் ஒன்றிரண்டு நாள் பயணங்கள் தான்.

எனவே கேரளாவில் உள்ளதை போல Short Visit / Regular Visit பாஸ்களை தமிழகமும் அனுமதிக்கலாம். 

அதாவது சிவகங்கையிலிருந்து தொழில் நிமித்தமாக திருச்சி வந்து செல்வோர், ஈரோட்டில் இருந்து கோவைக்கு கொள்முதல் செய்ய வந்து செல்வோர் போன்றவர்களுக்கு அந்த நாளே திரும்ப வர பாஸ் தரலாம். 

கேரளாவிற்கு 8 நாட்கள் வரை சென்று தங்கி திரும்பி வர ஷார்ட் விசிட் பாஸ் உள்ளது. அது போல தமிழகத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டம் குறைந்தது 4 நாட்கள் தங்கி வர பாஸ் வழங்கலம்
.
தினசரி ஒரே ரூட்டில் சென்று வருவோருக்கு ரெகுலர் பாஸ் வழங்கலாம் என்று எல்லாம் கோரிக்கைகள் உள்ளன.

ஆனால் மக்கள் (பாஸ் வாங்கியும், பாஸ் இல்லாமலும்) பயணித்து கொண்டே இருப்பதால் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அரசு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்குமா என்று தெரியவில்லை.

அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்கள் தமிழகத்தின் நோய்த்தொற்று நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதித்தாலும், பொருளாதார சமூக தொழில் நிலைமைகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை கொடுப்பதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

1 comment:

  1. Totally disagree you are not knowing the ground reality
    For valid medical reason also they rejecting I personally know my circle many got pass through agents
    And applying for epass is very simple any one can do,so there is no way to rejection because of mistakes

    ReplyDelete

Printfriendly