என் வாழ்வின் பல்வேறு தருணங்களில் மனதை துவளாமல் தாங்கிக் கொண்டு மீட்டெடுக்க இளையராஜா அவர்களின் இசையால் முடிந்தது.
"இளையராஜா இசை மட்டும் இல்லை என்றால்.. என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்பது என் அனுபவத்தில் மிகையான வாக்கியம் அல்ல. இன்றைக்கும் நான் இருக்கிறேன் என்பதற்கு அந்த இசை கொடுத்த ஆறுதல் மிகப்பெரிய காரணம்.
இளையராஜாவை பார்க்கவேண்டும்.. தூரத்தில் இருந்தாவது தரிசிக்க வேண்டும்.. என்கிற தீரா ஆசை பல்லாயிரம் பேருக்கு இப்போதும் உண்டு. அதில் ஒரு சிறு துளியாய் நானும்.
என்றேனும் அவரை சந்திக்க வேண்டும்.. என்னை பல தருணங்களில் மீட்டெடுத்து கொண்டு வந்து இன்றளவும் உயிர்த்திருக்க வைத்து இருக்கும் இசையை தந்தமைக்காக பாதங்கள் பணிந்து நன்றி சொல்லவேண்டும் என்கிற ஏக்கம் வெகு காலமாக என்னுள் இருந்தது.
சில நாட்கள் முன்பு அதற்கான வாய்ப்பு ஒரு நண்பர் மூலமாக வாய்த்தது.
ஞாயிறு காலை 8 மணிக்கு சென்னையில் இருக்க முடியுமா? என்கிற அவரது கேள்விக்கு "கண்டிப்பாக முடியும்" என்பதை தவிர வேறு என்ன பதில் இருந்துவிட முடியும்?
பரபரவென்று மனம் படபடக்கத் தொடங்கியது.
நிச்சயமாக அவரை சந்திப்போமா, எத்தனை நேரம் இருப்போம், அவரது வேலைப்பளு இடையே எத்தனை நிமிஷம் நமக்கு ஒதுக்குவார், என்ன பேசுவது, என்னென்ன சொல்வது, எப்படி நடந்து கொள்வது என்பது போன்ற பல விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டும் ஒத்திகைகள் பார்த்துக்கொண்டும் இருந்தன.
முக்கியமான ஒரு கேள்வியை மனைவி கேட்டார். "என்ன பரிசு கொடுப்பது? வெறுங்கை வீசிக் கொண்டு சென்றால் நல்லா இருக்காதே?". நியாயம் தான்.
என்ன வாங்குவது என பெரிய பட்டிமன்றமே நடந்தது. இறுதியில் கேரள மாடல் குத்து விளக்கு (நில விளக்கு) ஒன்று வாங்கி கொடுக்க முடிவு செய்து அதை வாங்கி பேக்கிங் செய்து கொண்டோம்.
அந்த நாளும் வந்தது.
ஞாயிறு காலை சென்னை வந்து அறை எடுத்து ரெடியாகி ஆட்டோ பிடித்து 8:30 கெல்லாம் ஸ்டுடியோ வாசலில் சென்று இறங்கினோம்.
ஆளை விட உயரமான அந்த கதவின் முன் நிற்கையிலேயே மனதில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
எத்தனை எத்தனை இசைப் பாடல்களை உருவாக்கிய இடம் அது? எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் நுழைந்து பார்க்க துடிக்கும் கதவு அது?
உள்ளே நுழையும்போதே செகியூரிட்டி " இடது ஓரமாவே போங்க" என்றார். நடைபாதையின் வலது புறம் அலுவலகம் இருக்க.. நடைபாதையின் இடது புறமாக தயங்கி தயங்கி நடந்தபடி உள்ளே சென்றேன்.
எதேச்சையாக வலது புறம் அலுவலக அறையின் கண்ணாடி கதவு வழி
பார்க்கயில், உள்ளே தூய வெள்ளுடையில் அமர்ந்திருந்தார் இசை இறைவன்.
பார்த்த கணத்தில் எனது கை தன்னிசசையாக என் நெஞ்சை தொட்டு வழிபாடு
செய்ததை பின்னர் தான் கவனித்தேன்.. தன்னியல்பாகவே அந்த மரியாதையும் பக்தியும் நமக்குள்ளே நமக்கு தெரியாமலேயே உட்கார்ந்து இருக்கும் போல.
அப்படியே நடந்து நடைபாதை முடிவில் இருந்த சிறிய ஓய்விடத்தில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தோம். அவராக அழைப்பார், காத்திருங்கள் என உதவியாளர் சொன்னார்.
சற்று நேரத்தில் "சார்" அழைப்பதாக சொல்லி எங்களை உள்ளே போக சொன்னார்.
ஒரு மாபெரும் திருக்கோவிலுக்குள் முதல் முறையாக நுழையும் பக்தனின் படபடப்போடும் பிரமிப்போடும் உள்ளே நுழைந்தேன்.
வெண்ணிற உடையில் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் இசை ஞானி. அவரை அத்தனை அருகில் பார்த்ததும் எனக்குள் சொல்ல முடியாத ஒரு பரவசம் படரத் தொடங்கியது.
அவர் அருகில் அழைத்தார்.. சென்றோம்.. என்ன என்பது போல பார்த்தார்.. "நாங்க கோவைல இருந்து வர்றோம்" என்றேன்..
கொண்டு வந்து இருந்த குத்து விளக்கு கிஃப்ட்ட நீட்டினேன்..என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.. "கேரள நில விளக்கு" என்றேன். எழுந்து நின்று வாங்கி மெல்ல அருகில் இருந்த டீபாய் மேல் வைத்தார்.
எனக்கும் என் மனைவிக்கும் கண்கள் மெல்ல கலங்கி.. பேச நா தழுதழுத்து.. கொஞ்சம் பதட்டம் கூடி.. என ஒரு மாதிரி கலவையான மனநிலையில் இருந்தோம்..
சில நொடிகள் நாங்கள் ஆசுவாசப்படுத்தி கொள்ளும் வரை எங்களை பார்த்து கொண்டே இருந்தார்.
சற்று நிதானத்துக்கு வந்தோம்.
சொல்லுங்க என்றார்.. "என் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள்.. நான் துவண்டு போன போதெல்லாம் என்னை மீட்டு கொடுத்தது உங்கள் இசை தான்.. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லணும் என வந்தோம்" என்றேன்.. சிரித்தார்..
அப்படி எல்லாம் இல்லை என்பது போல மெல்லியதாக தலையாட்டினார்..
உங்க ஆசீர்வாதம் வேண்டும் என கேட்டு நானும் என் மனைவியும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அன்போடு ஆசீர்வதித்தார்.
பின் போட்டோ எடுத்து கொள்ளலாமா என கேட்டோம்.. சந்தோஷமாக சம்மதித்தார்.
நான் தனியாகவும்.. நானும் மனைவியும் சேர்ந்தும்.. மனைவி தனியாகவும் போட்டோக்கள் எடுத்து கொண்டோம்.
ரொம்ப சந்தோஷம் சார் என்றோம்.. மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தார்..
என்னென்னவோ பேச வேண்டும் என மனப்பாடம் செய்து வந்து இருந்தேன். ஆனால் அங்கே அவர் முன்பு எதுவும் பேச வரவே இல்லை.
சுமார் 10 நிமிடத்துக்கும் குறைவான நேரம் தான் அந்த மொத்த சந்திப்பும் நிகழ்ந்தது. பேசுவதற்காக எங்களுக்கு அதிக நேரமும் கிடைக்கவில்லை. கிடைத்த நேரத்திலும் பிரமிப்பில் நின்றபடி சில நிமிடமும், நெகிழ்ச்சியில் நனைந்தபடி வார்த்தை வராமல் சில நிமிடமும் செலவானது.
அவரது அலுவலகத்தில் அவருக்கு ஒரு அடி தூரத்தில் நிற்கிறோம்.. அவர் நம்மிடம் கேள்வி கேட்கிறார்..நாம் அவருக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறோம்.. அவர் காலில் விழுந்து அவரின் ஆசியை வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.. என்பதெல்லாம் ஒரு கனவு போல..வேறு எங்கோ வேறு யாருக்கோ நிகழ்வது போல தோன்றி கொண்டே இருந்தது.
வெளியே வந்து மீண்டும் அந்த ஓய்விடத்துக்கு வந்தமர்ந்தோம்.
நடந்ததை நினைத்து நினைத்து பார்த்து கொண்டு இருந்தோம்.. மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றலாம். ஆனால் எங்களுக்கு இது எத்தனை பெரிய அனுபவம் என்பதை விவரிக்க தெரியவில்லை.
தூர நின்றாவது அவரை பார்த்து விட மாட்டோமா? அவர் நடத்தும் நிகழ்ச்சியில் அவர் வீற்று இருக்கும் மேடை எதிரே மிக தூரத்தில் அமர்ந்தாவது அவரது குரலை நேரடியாக கேட்டு விட மாட்டோமா? அவர் சுவாசிக்கும் அதே காற்றை அதே நேரத்தில் நாமும் சுவாசித்து விட மாட்டோமா? என்றெல்லாம் கால காலமாக ஏங்கி கொண்டு இருந்த எங்களுக்கு.. அவருக்கு அருகாமையில் நின்று அவருடனேயே உரையாடுகிறோம் என்கிற அந்த நினைப்பு எத்தனை பெரிய வரம் என்பது எங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று.
வாழ்நாள் முழுமைக்குமான அனுபவம். இதை விட வேறு எதுவும் மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எங்களுக்கு தந்து விடப்போவதில்லை என நினைக்கும் அளவுக்கான அலாதியான அனுபவம் அது.
மனம் ஒரு திருப்தி அடைய தெரியாத ஜந்து என்பது உண்மை தான்.
அவரை கண்டு பேசிய பிறகு அதோடு திருப்தி அடையாமல் அவரது ஸ்டுடியோ முழுக்க பார்க்க வேண்டும்.. அவர் இசை அமைப்பதை தூர நின்று ரசிக்க வேண்டும்..அவரது இசை குழுவினர் இசைப்பது காண வேண்டும் என்றெல்லாம் இன்னும் ஆசைகள் ஒவ்வொன்றாக முளைத்து கொண்டே இருக்கிறது.
இனி வாழ்நாளில் அவரை மீண்டும் சந்திப்பேனா என்பது தெரியாது. ஆனால் அந்த சில நிமிட சந்திப்பு வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாக இருக்கிறது.
இன்றே வாழ்வின் இறுதி என்றாலும் நன்றே என்று நினைக்கும் அளவுக்கு மிக திருப்தியான மனநிலைக்கு அன்று வந்துவிட்டோம். அப்படியான ஒரு உச்ச பட்ச பரவச உணர்வு நிலை அது.
இந்த ஜென்மத்துக்கான மொத்த பிறவிப் பயனும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அடைந்து விட்டோம்.
அப்படி ஒரு மகானுபவத்தை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த நண்பருக்கு எவ்வளவு நன்றி கடன் பட்டு இருக்கிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே புரியும்.
🙏🙏🙏