Sunday, June 8, 2025

கொடிக்கம்பங்கள் சொல்லும் செய்தி



நீங்க ஹைவே பயணங்களில் அங்கங்கே வரும் சின்ன சின்ன ஊர்களில்/கிராமங்களில் நுழைவு சாலைகளில் பல கட்சி கொடிகள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதை பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா?

ஏன் இத்தனை கொடி கம்பங்கள்? அது ஏன் சில இடங்களில் சில கட்சி கொடிகள் இல்லை? அது ஏன் சில கட்சி கொடி உயரம் அதிகமாக இருக்கு? இப்படி ஏதாவது கேள்வி உங்களுக்குள் எழுந்து இருக்கா?

அதற்கான விடை தெரியணும் என்றால் தமிழ்நாட்டில் காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் வழக்கங்கள் பற்றி அறிய வேண்டும்.

ஒரு ஊரில் எந்த கட்சிகள் செல்வாக்காக இருக்கிறதோ அவர்களின் கொடிகள் ஊர் எல்லையில் நடப்பட்டு இருக்கும். 

அதே ஊரில் பிற கட்சிகளின் ஆதரவாளர்களும் இருக்க கூடும். ஆனால் "கொடி வைக்கும் அளவுக்கு" அங்கே ஆள்பலம் இல்லை என அறியலாம்.

அந்த பகுதியில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் அந்தந்த பகுதிகளில் கொடிக்கம்பம் வைப்பது என்பது கொஞ்சம் சிரமமான செயல். 

சில ஊர்களில் கொடிகளின் உயரம் சொல்லும் அந்த ஊரில் எந்த கட்சி அதிக செல்வாக்கு என்பதை. அதிக செல்வாக்கு உள்ள கட்சிகளின் கொடிகள் உயரமாக இருக்கும். செல்வாக்கு குறைந்த கட்சிகள் உயரமான கொடி நடுவதற்கு கூட பல ஊர்களில் அந்த செல்வாக்கு உள்ள கட்சிகள் சம்மதிக்க மாட்டார்கள். மாநிலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட கட்சிகளுக்கே சில ஊர்களில் செல்வாக்கு இருக்காது. அப்படியான ஊர்களில் அவர்களது கொடி மரம் பிற கட்சிகளின் கொடி மரத்தை விட உயரம் குறைவாகவே இருக்கும். இன்னும் சில ஊர்களில் கொடி வைக்கும் அளவுக்கு மாநிலத்தின் சக்திவாய்ந்த கட்சிக்கே செல்வாக்கு இருக்காது. அந்த ஊரில் வேறு கட்சிகள் செல்வாக்காக இருக்கும்.

இதன் மூலம் ஒரு ஊரில் உள்ள கட்சி கொடிகளை வைத்து அந்த ஊரில் எந்தெந்த கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கு என்பதை ஹைவேயில் பயணிக்கும் போதே கணித்து விட முடியும்.

இப்போது எல்லாம் அப்படி கிடையாது என பொத்தாம் பொதுவாக இதை மறுப்பவர்களும் உண்டு.

பொதுவாகவே தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலம் முழுவதும் பரந்து வியாபித்து இருக்கும் கட்சிகள். எனவே இந்த கட்சிகளின் கொடிகளை கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் காணலாம்.

பரவலாக தேமுதிக, நாதக, மதிமுக ஆகிய கட்சி கொடிகளும் மாநிலம் முழுவதுமே அதிக இடங்களில் காணலாம்.

இவை தவிர வடக்கு & மேற்கு தமிழக மாவட்டங்களில் பாமக கொடிகளும், வடக்கு மாவட்டங்களிலும் அரிதாக சில தென் மாவட்டங்களிலும் விசிக கொடிகள் காணலாம்.

கொடிகள் இல்லை என்றால் அங்கே அந்த கட்சி இல்லை என்றோ அந்த கட்சிக்கான ஆதரவாளர்கள் இல்லை என்றோ அர்த்தம் அல்ல. அந்த கட்சியை விட அதிக செல்வாக்கு உள்ள கட்சிகள் அங்கே இருப்பதால் இவர்களின் கொடிகள் காணப்படவில்லை என சொல்லலாம்.

கட்சிகள் மாநிலம் முழுவதும் கொடி ஏற்று விழா நடத்துவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். எல்லா ஊர்களிலும் "கொடியேற்று விழா" என தனியாக நடத்தி கொடி கம்பம் நடுவதென்பது கிட்டத்தட்ட கட்சி அமைப்பை அந்த ஊரில் நிறுவுவதற்கு சமம். அது சாதாரண கொடி கம்பம் நடும் விழா அல்ல. அதனால் தான் பெரிய தலைவர்களை அழைத்து வந்து விமரிசையாக கொடியேற்று விழா நடத்துகிறார்கள்.
இந்த கட்சி தான் இங்கே எல்லாம் என மக்களுக்கு காட்டுவதற்கும், மக்களுக்கு இந்த கட்சியை அணுகினால் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைப்பதற்கும் இந்த கொடியேற்று விழா உதவுகிறது.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆரம்ப கால அரசியல் என்பதே மாநிலம் முழுவதும் "எல்லா ஊர்களுக்கும்" பயணித்து அங்கே கொடி ஏற்று விழா நடத்துவது, கிளைக்கழகங்கள் அமைப்பது ஆகியவை தான். இதன் மூலம் அந்தந்த ஊர் மக்களை நேரடியாக சந்திப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்கும் அவர்களுக்கு அது உதவியாக இருந்தது.

பின்னர் மதிமுக, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகளும் இவ்வாறு கொடி ஏற்றும் நிகழ்ச்சியை எல்லா ஊர்களிலும் நடத்தின. இப்போது பல ஊர்களில் அவர்களின் கொடிகள் இல்லை என்பது அந்த பகுதியில் அந்த கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை பூடகமாக சொல்லும் செய்தி.

கட்சி கொடி மரத்தை அகற்றுவது, வெட்டுவது, வீழ்த்துவது எல்லாம் மிகப்பெரிய விஷயமாக தமிழகத்தில் கருதப்படுகிற ஒன்று. அது கிட்டத்தட்ட கட்சி அமைப்பை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கப்படும். கட்சி கொடி மர விவகாரங்களுக்காகவே பிரச்சனைகள் நடந்த கதைகள் எல்லாம் முன்பு இருந்தது. 

கட்சி கொடி என்பது அத்தனை சென்சிடிவான விஷயமாகும்.

கட்சிக்கு என்று கிளை கழக செயலாளர், மாவட்ட செயலாளர் என இருந்தாலும் ஒரு கட்சியின் அமைப்பு செயலாளரின் பங்கு தான் கட்சி அமைப்பின் வலுவை தீர்மானிக்கும்.

திறமையான அமைப்பு செயலாளர், செயல்வீரரான மாவட்ட செயலாளர் ஒரு கட்சிக்கு மிக முக்கியம். மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் என ஒருவரை நியமிப்பது என்பது அந்த மாநில விஷயங்களை அரசிடம் நேரடியாக கொண்டு சேர்க்க உதவும். ஆனால் மாவட்ட செயலாளரின் பங்கு தான் மாவட்ட அளவில் கட்சியின் அமைப்பை தீர்மானிக்கும். சரியான மாவட்ட செயலாளர் இல்லாத பெரிய கட்சிகள் கூட மற்ற மாவட்டங்களில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தும் அந்த மாவட்ட அளவில் சரியாக மக்கள் செல்வாக்கு பெற முடியாமல் போன வரலாறு எல்லாம் உள்ளது. மாவட்ட செயலாளர் அமைவது எல்லாம் கிட்டத்தட்ட வரம் மாதிரி.

இந்த கொடி மரத்தால் இன்னும் பல பயன்கள் கட்சியினருக்கு உள்ளது. 

பல வருஷங்களுக்கு முன்பெல்லாம் பயணத்தில் சிக்கல், வாகன பழுது போன்ற காரணங்களால் பயணம் தடைபட்டால் அந்த ஊரில் நம் கட்சி ஆட்கள் இருக்கார்களா என கவனித்து அவர்களை அணுக கொடி மரங்கள் உதவியது. தெரியாத ஆட்களாக இருந்தாலும் தங்க வைத்து உதவி செய்து அனுப்புவார்கள். "உறுப்பினர் அடையாள அட்டை" எனும் எளிய கார்டின் அவசியம் புரிந்த நாட்கள் அவை. அப்போதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் குடும்பமாக பரிணமித்து அப்படி தான். 
இது எங்கள் குடும்பத்தில் நடந்த சொந்த அனுபவ அடிப்படையில் சொல்கிறேன். அப்படி ஒரு பயண சிக்கல் தருணத்தில் கோபியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டு இருந்த என் அப்பா பெருமாநல்லூரில் கொடி மரம் பார்த்து ஊரில் விசாரித்து அணுகிய கட்சி தோழர் அப்பாவுக்கு உதவியதோடு பின் நட்பாகி பல வருஷம் எங்கள் குடும்ப நண்பராகவே இருக்கிறார். இப்படி பலர் கட்சி சார்ந்த நண்பர்களாக எங்களுக்கு உண்டு. கட்சியே குடும்பமாக மாறிய கதைகளில் பாதி தெரியாத ஊரில் அறிமுகம் ஏற்படுத்தி கொடுத்த கொடி மரம் காரணமாகக் கூட இருக்கலாம்.

சோஷியல் மீடியாவில் புனை கதைகள், போட்டோ ஷாப் கார்டுகள் மூலமெல்லாம் கட்சியை வளர்க்க முடியாது, என்பதும் கிளைக்கழக அளவில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் துயரங்களில் தேவைகளில் தோளுக்கு தோளாக நின்று தான் கட்சியை வளர்க்க முடியும் என்பது தான் இன்றைக்கும் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள நிதர்சனம்.

இணைய வழியில் கட்சி நடத்தலாம் என நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த கட்சி அமைப்பின் வேர்களும் அதன் நுணுக்கமான அரசியலும் ஒருபோதும் புரியாது.

தமிழ்நாட்டு வாக்காளர்களை அவர்களின் மனநிலையை கணிக்கிறேன் என கிளம்பி 500 பேரிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கி அது தான் 6 கோடி மக்களின் மனநிலை என கட்டமைக்க போராடும் நிபுணர்கள், ஒரு நடை தமிழகம் முழுவதும் பயணித்து பார்த்தாலே மாநிலத்தின் மன நிலை என்ன என்பதை யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே கணித்து விட முடியும்.

இனி பயணிக்கும் போது கொடி மரங்களை கவனியுங்கள். முடிந்தால் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். எந்த ஊரில் எந்த கட்சி என கணித்து பாருங்கள். தேர்தல் முடிவுகளின் போது அநேகமாக உங்கள் கணிப்பு சரியாகக் கூட அமையக்கூடும்.

Printfriendly