Thursday, February 3, 2011

2G - கைது சரியா?

இந்திய ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்கிற பட்டம் மட்டும் தான் பாக்கி!

அட்டகாசமாக அரங்கேறிவிட்டது தொலைதொடர்பு ஊழல், விசாரணை, அறிக்கை, கைது படலங்கள்.

சுருக்கமாக பார்த்தால் ஒரு யூகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது தான் உறுத்துகிற நிஜம்.

மத்திய தணிக்கை அதிகாரி ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதில் 2G அலைக்கற்றைகளை ஏல முறையில் விற்பனை செய்திருந்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என அறிவிக்கிறார்.  அந்த கூடுதல் வருமானம் என்பது சுமார் 1,76,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறார்.  அதாவது, அலைக்கற்றைகளுக்கு அந்த அளவுக்கு தேவை இருந்து, இத்தனை போட்டியாளர்கள் இருந்து, அவர்கள் ஏலத்தில் பங்கேற்று இந்த அளவுக்கு விலையை ஏற்றி இருந்தால், ஒருவேளை அரசுக்கு இந்த கூடுதல் வருமானம் கிடைத்து இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடுகிறார்.  மேலும், இந்த கணக்கீடு ஒரு யுகமான மதிப்பீடு தான் என்றும் அவரே சொல்லி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூக்குரல் இட்டு இன்று ராசாவும் கைது செய்யப்பட்டாயிற்று.

சரி... தணிக்கை துறை இதை மட்டும் தான் சொல்லி இருக்கிறதா?

விவசாயம், கல்வி, பெட்ரோல், சுகாதாரம் போன்ற பலவற்றுக்கும் அரசு தருகிற மானியங்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும் என்று கூட தான் சொல்லி இருக்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அல்ல பல்வேறு மாநில அரசுகளுக்கான தணிக்கை அறிக்கையிலும் இது போன்ற மானியங்களை / கடன் தள்ளுபடிகளை / சலுகைகளை குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.  இதன் அடிப்படையில் மானியங்களை குறைத்து வருவாயை ஈட்டி அரசு கஜானாக்களை நிரப்பி இருக்கலாமே?  அப்படி செய்யாமல் இருந்த அனைவருமே அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தியவர்கள் என்று பட்டயம் கட்டிவிடலாமா?

பொதுவாக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்பது மரபு.  தணிக்கை துறையை பொறுத்த மட்டில், வெறும் வருவாய் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே பார்த்து தணிக்கை செய்து கூடுதல் வருவாய்க்கான வழிகளை சொல்லி வைக்கிற ஒரு ஆலோசனை குழு தானே தவிர, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல.  மானியங்கள் கொடுப்பது என்பது அந்த அந்த துறையை பொறுத்து தேவையை பொறுத்து அரசாங்கங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

இலவச கல்வி கொடுக்கவேண்டும், அதன் மூலம் தான் கல்வி அறிவு வளரும் என்று ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தலாம்.  ஆனால் தணிக்கை துறையை பொறுத்தவரை , கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் விட்ட வகையில் இத்தனை கோடி வருவாய் இழப்பு என்று தான் அறிக்கை தரும்.

2G விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது விசாரணையில் இருக்கிறது. எனினும் தணிக்கை துறை சொல்கிற அளவுக்கான ஊழல் நடைபெற சாத்தியமே இல்லை என்று பாஜக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரே சொல்லி இருக்கிறார்.  அவரது கணிப்பு படி, ஒருவேளை வருவாய் இழப்பு என்பதை  காரணமாக கொண்டாலும் கூட அதிகபட்சம் 30,000 கோடி வரை தான் இருக்கக்கூடும் என்கிறார்.

ஒதுக்கீட்டில் முறைகேடு, லஞ்சம் பெற்று கொண்டு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை தான் நடந்திருக்கக்கூடும் எனபதும், அத்தகைய முறை கேடு என்பது கூட தண்டனைகுரிய குற்றம் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.  அதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை, தக்க ஆதாரங்களுடன் கைது செய்வதை எல்லோருமே ஏற்று கொள்ள தான் செய்வார்கள்.

ஆனால், ஏல முறை ஒதுக்கீட்டை மேற்கொள்ளாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று காரணம் சொல்லி, அதன் பேரில் கைது என்பது நெருடலாகவே உள்ளது.

ஒரு எளிய உதாரணம் சொல்வது இங்கே பொருந்தும்:

2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் BPL, Aircel ஆகிய இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் செல்போன் சேவைக்கான ஒதுக்கீடு பெற்றது.  பின்னர் சில ஆண்டுகள் கழித்து BSNL, Airtel, Reliance (CDMA), Tata Indicom(CDMA) ஆகியவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது.  இவை போக மிச்சம் இருக்கும் அலைவரிசைகள் தான் இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் MTS, Reliance GSM, Tata Docomo, Uninor, Videocon, Idea போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் தங்கள் சேவையை தொடங்கின.

ஒரே தொலை தொடர்பு வட்டத்தில், ஒரே தொழில் நுட்பத்தில் மூன்று முறை ஒதுக்கீடுகள் நடைபெற்றதால், ஒரே மாதிரியான ஒதுக்கீடு விதிமுறைகளும், கட்டணங்களும் தான் இருக்க முடியும் என்பது பொது விதி.  அப்போது தான் போட்டியாளர்களுக்கிடையே சமநிலை (Level Playing Field) இருக்கும். அப்படி இல்லாமல், ஒரே மாதிரியான சேவைக்கான லைசன்சுக்கு வெவ்வேறு வகையான கட்டணங்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு முறைகள் என்று  இருந்தால் அது சரியான வழி முறையாக இருக்க நியாயம் இல்லை.

அனைவருக்கும் ஒரே வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான், தொலை தொடர்பு சேவைக்கான கட்டணமும் சீராக இருக்கும்.  அதில்லாமல், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டால், கட்டண விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, அதிக கட்டணம் உள்ள நிறுவனங்கள் நாளாவட்டத்தில் செயலிழந்து போக கூடிய அபாயம் இருக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் அதே சமயம், ராசா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது போன்ற விசாரணைகள் அவசியமானவையே.

விசாரணையில் என்ன வெளிவருகிறது என்பதில் இருக்கிறது எதிர்கட்சிகளின் எதிர்காலம்!


2 comments:

  1. நல்ல பதிவு. நானும் நம்பவில்லை 1,76,000 கோடி நஷ்டமென்று. ஏலத்தேதி மாற்றி, மாற்றி வைத்தது, டிமாண்ட் டிராஃப்ட் பேமண்ட் என்று கடைசி நேரத்தில் சொன்னது, விலாசமற்ற, முன் அனுபவம் சிறிதுமில்லாத கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது (இன்றைய தேதியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கும்போதே, பேக்ரவுண்ட் செக் செய்யும் காலக்கட்டத்தில், 8 க்கு 8 சதுர அடி பரப்பில் (dubious) விலாசத்தில் முளைத்த காளான் ஆபீஸ்களுக்கு, இந்தியாவின் தொலைதொடர்பு வளத்தை தாரை வார்த்தது, யுனிடெக்-->கலைஞர் டீவி பணப்பரிமாற்றம் (பின்னர் கடனென்று அவசர அவசரமாக திருப்பிக் கொடுத்தது), முறைகேடாக வாங்கிய லைசென்ஸ் மூலம் வாங்கிய ஷேர்களை 4 மடங்குக்கு விற்று காசாக்கியது, வெளிநாடு கம்பெனிகள் (பாக், சீனா, ரஷ்யா, எமிரேட் உட்பட) பணத்துக்கு பங்கை (தொலை தொடர்பை) தாரை வார்த்தது, சாதிக் மரணம், ராசா மூலம் வர்த்தகத் தொடர்பு என்று இதைப் பற்றி அலசியிருக்கலாம்.

    ராசாவின் கைது ஒரு அரசியல் சதி. வழக்கு முடியும் முன் குற்றம் சாட்டப்பட்டவரை சிறையிலடைத்தது என்னவென்று சொல்ல?

    ReplyDelete
  2. Muthiah RamanathanMay 15, 2012 at 7:09 PM

    கிட்டத்தட்ட இதே செய்தியை நான் பல முறை முகநூலில் பதிவு செய்து பலரிடமும் வகை தொகை இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறேன் !

    ReplyDelete

Printfriendly