Friday, March 15, 2013

மாணவர் போராட்டம் – எனது பார்வையில் – பாகம் 2


மிழகத்தில் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் குறித்து, அதன் துவக்கம், காரணம், தற்போதைய நிலைகளை குறித்து ஏற்கனவே நீங்கள் முதல் பாகத்தில் விரிவாக படித்திருப்பீர்கள்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை, எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் ஒரு முக்கியமான விஷயம், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தான்.

முதல்வர் ஜெ. பற்றி தமிழகம் அறியாததல்ல. எந்த ஒரு விவகாரத்திலும், தனது அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அட்க்குவதில் தயவு தாட்சணியமே பார்த்ததில்லை அவர்.

தலைமை செயலக கட்டிடம் கட்டுவதற்காக, கடற்கரை சாலையிலுள்ள இராணி மேரி கல்லூரியை தகர்க்க முடிவெடுத்தபோது, அந்த கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்கியதிலாகட்டும், பத்திரிக்கையாளர் பேரணியை முறியடித்து முடக்கியதிலாகட்டும், அரசு ஊழியர் தங்களது உரிமைகளை கோரி போரடிய போராட்டத்தை நிர்மூலமாக்கியதிலாகட்டும், ஹிந்து பத்திரிக்கையில் தனது அரசு பற்றிய விமர்சனம் வந்ததற்காக, ஆசிரியர் குழுவின் ஐவரையும் பெங்களூர் வரை விரட்டி சென்று பிடித்து வந்து கைது செய்து காட்டிய உத்வேகத்திலாகட்டும், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆஜராக சென்ற வக்கீல் சண்முகசுந்தரம், கலைஞர் கைது சம்பவத்தை சட்டப்படி விசாரித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி அசோக் குமார் அவர்களை பழிவாங்க அவரது மருமகன் மீதே கஞ்சா வழக்கிட்டு கைது செய்ததாகட்டும், சாலைப்பணியாளர்கள், மக்கள் பணியாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கி, அதை எதிர்த்து போராடிய அந்த அப்பாவி ஏழை தொழிலாளர்களை காவல்துறையை விட்டு நொறுக்கி எடுத்ததாகட்டும்… இவை போன்ற இன்னும் பல பல சம்பவங்களில், தன்னையோ, தனது அரசையோ விமர்சிப்பதை அவர் எந்த அளவுக்கு கடுமையாக கையாள்வார் என்பது தமிழகம் மிக நன்றாக அறிந்த ஒரு விஷயமே.

அவரை விமர்சித்த காரணத்துக்காக, அவரது அரசின் செயல்பாடுகளை எதிர்த்த காரணத்துக்காகவே முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்டராமன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், போன்றோர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவையெல்லாம் தனியே விரிவாக சொல்லப்படவேண்டிய ஒன்று எனினும், அவரது இத்தகைய குணாம்சங்களை கண்டு தான் பெரும் செல்வாக்கு பெற்று வளைய வந்த பல பல அரசியல் தலைவர்களும் அமைதியாக அடிபணிந்து ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள், என்பதை தொடர்ச்சியாக தமிழக அரசியலை கண்டு வருவோர் அறிவர்.

அப்படி இருக்க, தன் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முயலும் மாணவர்களை அவர் எப்படி கையாள்வார் என்பது யூகிக்கக்கூடிய ஒன்றே! அதனால் தான், கலைஞர் அவர்களும் இன்ன பிற நடுநிலையாளர்களும், அடையாள உண்ணாவிரதத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள், நீண்ட கால போராட்டம் என்பது உங்களையும் உங்கள் எதிர்கால வாழ்க்கையையும் சீரழித்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது என எச்சரித்து, போராட்டத்தை கைவிட கோரினார்கள்.

ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்ட களத்திலே தான் இருக்கிறார்கள், விளைவுகள் பற்றிய எந்த கவலையுமின்றி! குறைந்த பட்சம், தங்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்கவேண்டிய மதிமுக, விசி, போன்ற கட்சிகள் கூட அடக்கி வாசிப்பது ஏன் என அவர்க்ள சற்று சிந்தித்து பார்த்து இருக்கலாம்!

சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி நிலையங்கள், மாணவர்களின் இந்த போராட்டத்தை அடுத்து காலவரையின்றி மூடப்பட்டு உள்ளன. கல்லூரி விடுமுறை அறிவிக்க பட்ட அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் மாணவர்கள் என்கிற தகுதியை இழந்து, பொதுமக்கள் என்கிற சமநிலைக்கு வந்துவிடுகிறார்கள். எனவே சட்டவிரோதமாக கூடுவது, அனுமதியின்றி போராட்டம் நடத்துவது போன்ற இந்திய தண்டனை சட்டம் சொல்லும் அத்தனை குற்றங்களுக்கும் மாணவர்களை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க முடியும்.

விடுமுறை விடப்படாத கல்லூரிகளில், போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் முற்றிலுமாக நீக்கப்படும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கிறது. இது எல்லா மாணவர்களையும் உளவியல் ரீதியாக பலவீனமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஸ்பென்ஷன் என இல்லாமல் நேரடியாக டிஸ்மிஸ் என்பது மாணவர்களின் படிப்பையும், எதிர்காலத்தையும், வாழ்க்கை மீதான அவர்களது நம்பிக்கையையும் ஒருசேர ஒட்டுமொத்தமாக ஒடுக்கிவிடும். இதன் வீரியத்தை மாணவர்கள் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அதனால் தான் கலைஞர் அவர்கள், தனது அனுபவத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, இப்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் மாணவர்கள்.

இந்த டிஸ்மிஸ் நடவடிக்கையை நாம் குற்றம் சொல்ல முடியாது. கல்லூரியின் பார்வையில், கல்லூரி விடுமுறை விடப்படவில்லை. மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு முறையான அனுமதியின்றி போராட்ட களத்தில் இருக்கிறார்கள். இது ஒன்றே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போதுமானதாகும். பத்து மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டால், ஆயிரம் மாணவர்கள் உளவியல் ரீதியாக பலவீனப்பட்டு போராட்ட களத்திலிருந்து பின்வாங்குவார்கள் என்பதை அரசு தெளிவாக உணர்ந்து செயல்பட்டதன் பலன் இப்போது தெளிவாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

போராட்ட மாணவர்களில் சிலர், நாங்கள் தமிழக அரசுக்கு எதிராக போராடவில்லை என வலிய விளக்கம் கொடுத்து தமிழக அரசின் நன்னம்பிக்கையை பெற முயற்சிப்பதையும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், தமிழக அரசு தங்களுக்கு முழு ஆதரவு தருவதாக பொய்யுரைப்பதையும் காண முடிகிறது. இது மனதளவில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கத்தை வெட்டவெளிச்சமாக வெளிப்படுத்துவதாகவே ஆட்சியாளர்களும் உணர்ந்திருக்கக்கூடும்!

முன்பே சொன்னது போல, மாணவர்கள் இன உணர்வின் அடிப்படையிலோ, தமிழுணர்வின் அடிப்படையிலோ இந்த போராட்டத்தை துவங்கவில்லை எனபதால், இயல்பாக அப்படியான போராட்டங்களில் காணக்கிடைக்கும் கொள்கை பிடிப்பும், உறுதியும் இந்த போராட்டங்களில் காண இயலவில்லை. குறைந்த பட்சம், ஈழ தமிழர்களின் பால் இயற்கையாகவே ஆதரவும், அன்பும் உள்ளவர்கள் இந்த மாணவர்கள் என்று கூட கருத முடியவில்லை. அப்படி ஏதேனும் இருந்திருந்தால், தமிழகத்திலேயே பல்வேறு இன்னல்களுக்கிடையே, எந்த வித அடிப்படை வசதியுமின்றி வாடும் ஈழ தமிழ் அகதிகளுக்கு ஒருவேளையேனும் உதவி செய்வதோ, ஆதரவு நல்கி ஆறுதல் படுத்துவதோ நடந்திருக்கும். அப்படி கூட அவர்கள் இதுவரை யாரும் ஈடுபட்டதாக தெரியவில்லை.

மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கையை வைக்கும் நோக்கமும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இந்திய அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையானாலும், இந்திய அரசே தனியாக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையானாலும், இந்திய அரசு இலைங்கையை கண்டித்து ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கிகொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையானாலும், அனைத்துமே இந்திய அரசை நோக்கிய கோரிக்கையாக, இந்திய அரசு மட்டுமே செயல்படுத்தக்கூடிய கோரிக்கையாக தான் இருக்கிறது. இருந்தும், டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு சில பிரதிநிதிகள் சென்று உள்துறை செயலாளரையோ, உள்துறை அமைச்சரையோ சந்திக்க முயற்சி செய்வது; அல்லது சென்னையிலேயே மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வைத்து மத்திய அரசிடம் அதை சேர்ப்பிப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை.

எப்படி சிந்தித்தாலும், இது உணர்வுப்பூர்வமானதாகவோ, ஆக்கப்பூர்வமாகவோ முன்னெடுக்கப்படும் போராட்டம் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு வழங்க மாணவர்கள் தவறி விட்டனர்.

போராட்ட குழுவினரிடமே கூட ஒரு ஒற்றுமையின்மையும், கோரிக்கைகளில் நிலவும் வேறுபாடும் ஒரு புறம் எனில், நாளை அரசு தனது வழக்கமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுமேயானால், இப்படி சிதறிக்கிடந்து என்ன செய்ய போகிறார்களோ என்கிற கவலை இன்னொரு புறம் வந்து கலக்கத்தை கொடுப்பதையும் தவிர்க்க முடிவதில்லை. அப்படி ஒரு சூழல் வந்தால் வழக்கம் போலவே, கலைஞர் களமிறங்கி அரசிடம் எதிர்ப்பார் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் உள்ளூர எல்லோருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கிறது. காரணம் இன்றைய தேதியில், தமிழக அரசை துணிச்சலாக எதிர்க்கும் ஒரே ஒரு நபராக அவர் மட்டும் தானே இருக்கிறார்?

இந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாததை போலவே, பல கட்சிகளின் ஆதரவும் இல்லை. போராட்ட அறிவிப்பு வந்தபின் சென்று பார்க்காவிட்டால் நன்றாக இருக்காது என்பதற்காக சம்பிரதாயமாக சென்று வாழ்த்தி வந்ததை தவிர தமிழக அரசியல் கட்சிகள் வேறெதையும் செய்ய தயங்குவதற்கு, தமிழக அரசின் மீதான அவர்களது அச்சம் தான் காரணம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

இப்போது இந்த போராட்டத்துக்கு உடனடியாக தேவை படுவது ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொண்டிருக்காமல், எல்லா மாவட்டங்களிலும் ஒரே விதமான கோரிக்கைகள், ஒரே விதமான மன வலிமையை கொடுக்கக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர். மேலும் என்னென்ன கோரிக்கைகள் என்கிற பட்டியல், அதை யாரிடம் சமர்ப்பிப்பது என்கிற தெளிவு, அதை நோக்கிய முன்னெடுப்புக்கள், அதற்கான பொதுமக்களின் ஆதரவு திரட்டுதல் போன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் ஆலோசனைகளையும் கொடுக்கக்கூடிய ஒரு வழி காட்டி தான் இப்போது இந்த போராட்டத்துக்கு உடனடி தேவையானதாக இருக்கிறது. ஒற்றுமை தான் அரசின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் என்பதும், வெற்று விளம்பரங்களுக்காகவும், சுய நற்பலன்களுக்காகவும் சிதறிக்கிடப்பது அரசு நடவடிக்கைகளை எளிதாக்கும் என்பதும் தெரிந்து உணர்ந்துள்ள ஒரு நல்ல வழிகாட்டியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதே இப்போது மிக அத்தியாவசியமாக உணர்கிறேன்.

இது விஷயத்தில் (பிடிக்கிறதோ இல்லையோ) டெசோவின் செயல்பாடுகளை மாணவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐநா மன்றத்தில் தீர்மானம் மூலமாக தான் இலங்கையை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, இந்திய அரசிடமும், ஐநாவிடமும், நேரடியாக விளக்கமான கோரிக்கைகளை கடந்த ஆண்டே சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்துவிட்டு வந்தனர். மேலும், அந்த தீர்மானத்துக்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பொருட்டு பல்வேறு நாடுகளின் தூதர்களையும், பிரதமர்களையும் சந்தித்து இந்த விவகாரத்தின் வீரியத்தை எடுத்து சொல்லி, அவர்களது ஆதரவை பெற்று வந்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் 30 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்ததிலும், அமெரிக்க இந்த ஆண்டு தீர்மானம் கொண்டுவருவதிலும், ஐநா அப்படியான ஒரு தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்வதிலும், இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க தயங்காது என சொல்லியிருப்பதிலும், டெசோவின் திட்டமிட்ட, கடந்த 15 மாதங்களாக அவர்கள் எடுத்த தெளிவான வழிமுறைகளின் பங்கு மிக பெரும்பான்மையாக உள்ளதை மறந்துவிடக்கூடாது. விவரம் தெரியாதவர்கள் விமர்சிப்பதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஆக்கப்பூர்வமாக யார் இந்த தீர்மானத்தை செயலாக்க முடியுமோ அவர்களையெல்லாம் சந்தித்து விளக்கியது தான் இன்றைக்கு விவாதமாக முகிழ்த்திருக்கிறது.

அதுபோலவே, மாணவர்களும் தங்கள் கோரிக்கைகளை ‘உரியவர்களிடத்தில்’ கொண்டு சேர்த்து, அதற்குரிய பிற ஆதரவாளர்களை திரட்டி, தங்கள் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தாலன்றி மாநிலம் தழுவிய இவ்வளவு பெரிய எழுச்சியை மரியாதை செய்ய முடியாது.

வெறுமனே, மஸ்கிடோ மேட் வேண்டும், வங்கி கணக்குக்கு நிதி வேண்டும், பந்தல் வேண்டும், மைக் வேண்டும், உணவு வேண்டும், பெட்சீட் வேண்டும், பிளக்ஸ் பேனர் வேண்டும் என்று கோரிக்கை வைத்துகொண்டிருந்தால், இப்போது மாணவர்களின் இந்த போராட்டம் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் இல்லாமல் ஆகிவிடுமே என்கிற கவலையுடன் அமைகிறேன்!

No comments:

Post a Comment

Printfriendly