Saturday, June 22, 2013

சேது சமுத்திர போர் – நமது கடமை!


சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்றொரு அதிர்ச்சியான அஃபிடவிட்டை தமிழக அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததிலிருந்தே இந்த பதிவை எழுத நினைத்திருந்தேன். ஆனால் திட்டம் குறித்து முழுமையாக அறிந்து தெளிவதில் மிகுந்த கால நேர தாமதமாகிவிட்டது.

சேது சமுத்திர திட்டம் என்பது ஒன்றரை நூற்றாண்டு கனவு. இதை முழுமையாகவும் விரிவாகவும் பதிவாக எழுதுவது இயலாத காரியம். ஏற்கனவே பலரும் இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் எழுதி தள்ளிவிட்டார்கள். எனவே இப்போதைய சூழலை மட்டும் அலசினால் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த திட்டத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஆங்கிலேய அரசின் இளம் பொறியாளர் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் அவர்கள். 18ம் நூற்றாண்டிலேயே அவர் இந்த திட்டம் பற்றி சொன்னாலும், அப்போது பெரிதாக எடுபடாமல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின் 1838ல் தான் திட்டத்துக்கான முதல் தோண்டுதல் தொடங்கியது. அப்போதும் அது அதிக முக்கியத்துவம் பெறாமல் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் 1860லிருந்து திரு. ஆல்ஃபிரட் டண்டாஸ் டெய்லர் அவர்கள் மூலமாக தான் திட்டம் தீவிரமானது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1956ல் முதல் குழு அமைக்கப்பட்டது. திராவிட பேரியக்கத்தின் மிகப்பெரிய கனவான சேது திட்டம், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோதெல்லாம் வலியுறுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, இறுதியாக 2005, ஜூலை 2ல் பிரதமர் திரு.மன்மோஹன் சிங் அவர்களால் துவங்கப்பட்டது.

இந்த வரலாற்று சுருக்கத்திலிருந்தே ‘வைகோவின் கனவு திட்டம்’ என்கிற வாக்கியத்தின் உண்மை தன்மையை உணரலாம். ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என பாரதி பாடிய போது வைகோ இல்லை. திமுக தீவிரமாக சேது திட்டம் பற்றி பேசிய 1950களில் வைகோ இல்லை. 1970களில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் முன்னெடுத்து சென்ற போராட்டங்களில் வைகோ இல்லை. ஆதித்தனாருக்கு பின்னர் திமுகவின் பிரதிநிதியாக சேதுசமுத்திர திட்ட விவரணைகளை கையாண்ட வகையில் தான் வைகோ இந்த விஷயத்துக்குள் வருகிறார். இன்றைக்கு சேது சமுத்திர திட்டம் தனது கனவு திட்டம் என தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி சம்மந்தமேயில்லாத பலரும் இந்த திட்டத்துக்கான கிரெடிட் எடுத்துக்கொள்ள துடிக்கும் அளவுக்கு அப்படியென்ன அது நல்ல திட்டம்?

மன்னார் வளைகுடா பகுதியில் கடல் இருந்தாலும் பெரும் கப்பல்கள் அதில் பயணிக்க முடியாது. காரணம் 36 கிலோமீட்டருக்குள் எதிரும் புதிருமாக இந்திய இலங்கை கரைகள் இருப்பதால், அலைகள் இருவேறு திசைகளில் பயணிப்பதால், கடல்நடுவே பல பல மணல்திட்டுக்கள் இயற்கையாகவே உருவாகியிருக்கின்றன. இவை ராமபிரானால் கட்டப்பட்டவை என ஒரு சாராரும், இயற்கையாக உருவானவை என இன்னொரு சாராரும் இன்னமும் வாதாடிக்கொண்டிருக்கின்றனர். ஆதம்ஸ் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பகுதிக்கு, அவசரம் அவசரமாக ராமர் பாலம் என பெயரிட்டு, மத ரீதியான உணர்வுகளின் பாதுகாப்போடு அந்த பகுதியை பாதுகாக்க மத அமைப்புக்கள் முனைகின்றன.

மற்றொரு புறம், தென் கோடி தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதால் அதை ஈடுகட்ட தூத்துக்குடி துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கும் நோக்கில், இந்த மணல் திட்டுக்களை கொஞ்சம் தகர்த்து ஆழப்படுத்தி பெரிய கப்பல்களை இயக்க முடிந்தால், அதன் அடிப்படையில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்ட கடற்புறங்களில் பல சிறு துறைமுகங்களை ஏற்படுத்தி கடல் வாணிபத்தை பெருக்க முடியும் எனவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்த இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான கடல் எல்லையை நம் போர்க்கப்பல்கள் மூலம் பாதுகாக்க முடியும் (இப்போது வெறும் ரோந்து படகுகள் மட்டும் தான்) எனவும் உணர்ந்து, சேதுக்கால்வாய் திட்டத்துக்காக திராவிட இயக்கங்கள் போராடிவருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம், இலங்கையை சுற்றி சென்னை வர வேண்டிய அவசியம் கப்பல்களுக்கு இருக்காது. மேலும் மேலே சொன்னபடி பல்வேறு சிறு துறைமுகங்களை மாநிலம் முழுதும் ஏற்படுத்துகையில் உட்புற தமிழக தொழிற்சாலைகளிலிருந்து கடல்வணிகம் செய்வது எளிமையாகும். துறைமுகம் சார்ந்த ஊர்களில் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும். அந்த வகையில் தென் தமிழகம் வளர்ச்சிபெறும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் தமிழகம் சார்ந்த பலன்கள். கடற்பாதுகாப்பு, இந்திய பெருங்கடலின் முழுமையான கட்டுப்பாடு ஆகியவை இந்திய தேசம் சார்ந்த பலன்கள்.

அதனால் தான் இந்த திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த திட்டத்தை மறைமுகமாக எதிர்க்கும் இலங்கை, இந்தியாவிலுள்ள பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க போன்ற தங்கள் நண்பர்கள் மூலமாக இந்த திட்டத்துக்கான எதிர்ப்பை பல வகையிலும் முன்வைத்துக்கொண்டிருக்கிறது.

இலங்கை இந்த திட்டத்தை விரும்பாததற்கு வணிக / அரசியல் காரணங்கள் இருக்கிறது.


(கொழும்பு சர்வதேச சரக்கு பெட்டக முனையம்)
 

தற்போது சர்வதேச கண்டெயினர் டிரான்ஷிப்மெண்ட் கொழும்புவில் இருக்கிறது. சென்னை, தூத்துக்குடி, கொச்சி, மங்களூர் போன்ற இந்திய துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்டகங்கள் கூட கொழும்பு சென்று பின் அங்கிருந்து தான் பயணிக்கிறது. சேது கால்வாய் வருமாயின், சென்னையிலிருந்து புறப்படும் கப்பல்கள் கொழும்பு வராமலேயே ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கும். இன்றைய தேதியில் மிக அதிக அளவில் சரக்கு கையாளும் சென்னை துறைமுகத்தின் வாயிலாக கொழும்பு பெற்று வரும் வருமானம் இதனால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

சீனா சமீபத்தில் வெளியிட்ட ‘புளூ புக்’கில் இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியிருப்பதுடன், இலங்கையின் சில துறைமுகங்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது, சீன கடற்படை தளம் அமைப்பது ஆகியன மூலம் இந்தியாவுக்கான மற்றுமொரு செக் வைக்கும் நடவடிக்கையிலும் ராஜீய ரீதியாக இலங்கை முயல்கிறது.

இந்த இரண்டுமே இந்தியாவுக்கு பாதகமானவை. அதனால் தான் பெரும் முதலீடு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முன்வந்தது. சீனா, காங்கேசன் துறையில் மையம் கொள்ளுமாயின், இந்திய போர் கப்பல்கள் பாக் ஜலசந்தி வழியாக அனுதினமும் பாதுகாப்பு ரோந்து சென்றே ஆகவேண்டும். இல்லாவிட்டால், சென்னைக்கும் பெங்களூருக்கும் எந்த நிமிடமும் ஆபத்து தான். இந்திய பெருங்கடலின் மிக வலுவான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யவேண்டும் எனில் பாக் ஜலசந்தியில் இந்திய போர் கப்பல்கள் பயணித்தாக வேண்டும்.

எனவே வணிகம், அரசியல் ஆகிய நோக்கில் இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு சேது திட்டத்தை முடக்குவதும், வணிகம், பாதுகாப்பு ஆகிய நோக்கில் இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுப்பதும் ஏன் என்பது அதன் முக்கியத்துவத்தோடு எளிதில் நமக்கு விளங்கும்.

பா.ஜ.க இந்த திட்டத்தை முடக்க ராமரை துணைக்கழைத்து மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டதை பா.ஜ.கவின் தலைவராக இருந்து இந்த திட்டத்துக்கான முதல் கட்ட ஒப்புதலை அளித்த முன்னாள் பாரத பிரதமர் உயர்திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் அவர்களே விரும்பவில்லை. எனினும் அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மூலமாக திட்டத்தை முடக்க எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றிபெறவே செய்தது.


(ஆராயப்பட்ட கால்வாய் பாதைகள்)

உச்சநீதிமன்ற மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு முடக்கப்பட்டதன் காரணமாக மாற்றுவழிகள் சிந்திக்கப்பட்டன. மொத்தம் 6 வழிகள் ஆராயப்பட்டு, ஆடம்ஸ் பாலத்தின் வடக்கிலும், பாம்பன் தீவின் தென்கிழக்கிலுமாக இரண்டு அகழ்வுகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பச்சோரி கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் பொருளாதார ரீதியாகவும், சுற்றுசூழல் நோக்கிலும் இந்த திட்டம் செயற்படுத்தத்தக்கதல்ல என ஒரு குண்டை தூக்கி போட்டதுடன், மொத்த திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது.

இது தொடர்பான வழக்கில் தான் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, எங்களுக்கு இந்த திட்டம் தேவையில்லை என தன் பங்குக்கு ஒரு அஃபிடவிட்டை தாக்கல் செய்திருக்கிறது.

தனது கனவு திட்டம் என சொந்தம் கொண்டாடிய ‘புரட்சி புயல்’ அண்ணன் வைகோ அவர்களும், அன்பு சகோதரியின் ஆட்சேபத்தை எதிர்க்க துணியாமல் முடங்கிவிட்டார்.

தமிழகத்தின் இப்போதைய மிக தலையாய பிரச்சனை சேது சமுத்திர திட்டம் தான். அதனால் தான், கடந்த ஜூன் 3ம் தேதி சென்னையில் தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதை கோடிட்டு காட்டிய திமுக தலைவர் கலைஞர் அவர்கள், அதற்கான போராட்டத்தை ‘சேது சமுத்திர போர்’ என்றே முழங்கினார். நம்மையும், நம் மாநிலத்தையும் காப்பதற்கான போர்.

தமிழர்களாகிய நாம், தமிழகத்தின் நலனை கருதும் அக்கறை இருப்பின் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். மக்கள் பணத்தை செலவழித்து கிட்டத்தட்ட முக்கால் பாக திட்டம் முடிந்துவிட்ட நிலையில் அதை முடக்கி இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் எதிராகவும் செயல்படும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். இந்த திட்டத்துக்கு எதிராக, தமிழக வளர்ச்சிக்கு எதிராக, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்கள் என கண்டறிந்து, கற்றுணர்ந்து அவர்களுக்கான தக்க தண்டனையை தங்கள் வாக்குகளால் வழங்கவேண்டும்.

தமிழர்கள் சுய சிந்தனையும், பகுத்தறியும் திறனும் பெற்றவர்கள் என்பதால், இந்த திட்டம் குறித்து சுயமாகவே சிந்தித்து, அரசியலார் அரசியலுக்காக சொல்லும் புனை கதைகளை புரிந்து நடந்துகொள்வார்களா இல்லையா என்பது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் தானே?
 
மேலும் காண்க:
 
 
 

1 comment:

  1. சேது திட்டம் காலத்தின் கட்டாயம், சிங்கள அரசு இதனைத் தடுக்க இந்திய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி இருக்கும் எனத் தோன்றுகின்றது. அவர்கள் மதக் காரணங்களைக் கூறி இத்திட்டத்தை முடக்க முனைகின்றனர், கொடுமை, தமிழக அரசே இதனைச் செய்வது முட்டாள் தனமானது.

    ReplyDelete

Printfriendly