Saturday, March 26, 2016

தமிழக தேர்தல் களம் – 2016

ரு வழியா இப்போதைக்கு ஓரளவு தேர்தல் களம் தயாராயிருச்சு. இன்றைய தேதியில் இது தான் காட்சி

அதிமுக – கூட்டணியில் யாருமில்லை. தனித்து நிற்கிறது (சமக & 132 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

திமுக – காங்; மமகவுடன் கூட்டணி (58 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

தேமுதிக – மநகூ (விசி, மதிமுக, சிபிஎம், சிபிஐ) உடன் கூட்டு

பாமக – தனித்து போட்டி

பாஜக – தனித்து போட்டி

நாம் தமிழர் – தனித்து போட்டி

சிபிஐ (எம்.எல்) – தனித்து போட்டி

தமாகா – கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது. முடிவு தெரியவில்லை

கூட்டி கழிச்சு பார்த்தா அதிமுக ஈஸியா ஜெயிச்சிருவாங்க போல தான் தெரியுது. ஆனா அதில் சில ‘ifs and buts’ இருக்கு.

திமுக காங் ஓரளவு பிராண்டடான நம்பகமான கூட்டணியா இருந்தாலும் அவங்களுக்கு எதுக்காக ஓட்டு போடணும்னு ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டா அதுக்கான தெளிவான பதில் இப்போதைக்கு இல்லை. ஆட்சி மாற்றம் என்கிற ஒற்றை விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்றாங்களே தவிர வேற ஒண்ணும் புதுசா இல்லை. ஆட்சி மாற்றம்னு வெச்சுக்கிட்டாலும் ஏன் திமுக காங் அணிக்கு போடணும்? ஏன் தேமுதிக அணிக்கு போடக்கூடாதுன்னு கேட்டா அதை அவங்களால் ஜஸ்டிபை பண்ண முடியலை. கேட்டா மநகூ கேலிக்கூத்தான கூட்டணினு காமெடி தான் பண்ணிட்டு இருக்காங்க. மத்தபடி “இதுதான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை. அதனால் அதிமுக வேண்டாம். மிச்சம் இருப்பவர்களில் இன்னின்ன கட்சிகளிடம் இதெல்லாம் குறை. அதனால் திமுக காங் கூட்டணிக்கு வாக்கு அளியுங்கன்னு” இதுவரைக்கும் யாரும் உருப்படியா சொல்லலை. தேர்தல் அறிக்கை, அதை தொடர்ந்து அவங்க செய்யும் பிரச்சாரம் எல்லாம் எதை முன்னிறுத்தி அமையுதுன்றதுல தான் திமுக காங் அணிக்கான ஆதரவு இருக்கு. இத்தனை காலத்தை ஏன் இப்படி வீணடிச்சு தேமேன்னு இருந்தாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியலை. இத்தனைக்கும் மிகப்பெரிய இயக்கங்கள். தேர்தலில் நெளிவு சுளிவு அறிஞ்சவங்க வேறே.


தேமுதிகவை தேடி போய் மநகூவை அடகு வைக்குற கடைசி நிமிஷம் வரைக்கும் தமிழகத்தின் புதிய நம்பிக்கையா இருந்த கூட்டணி அது தான். பாலபாரதி எம்.எல்.ஏ சொல்லாமல் சொன்னமாதிரி மிக மிக அருமையான ஒரு வீணையை செஞ்சிட்டு அதை வாசிக்க தெரியாம, பயன்படுத்த துப்பில்லாம குப்பைல தூக்கி போட்ட மாதிரி இருக்கு இப்போதைய நிலைமை. தேமுதிகவை பொறுத்தவரைக்கும் முதல் அமைச்சர் ஆகணும்ன்ற ஒரே குறிக்கோள்தான் டார்கெட்டு. அதை யார் தந்தாலும் அங்கிட்டு சாஞ்சிருப்பாரு. பாமக சொல்லிருந்தா கூட அங்கே போயிருப்பாரு. மத்தபடி முதல்வர் ஆகுற அளவுக்கு என்ன வகையான செல்வாக்கு வளர்த்திருக்கோம். என்ன செயல்திட்டம் வெச்சிருக்கோம்னெல்லாம் அவங்களால சொல்லவே முடியலை. மநகூ எதுக்காக அம்புட்டு அவசரமா கேப்டனை தேடி போய் காலில் விழுந்தாங்கன்றது தேமுதிகவுக்கே தெரியாத புதிர். கிட்டத்தட்ட ஒரு மாற்று அரசியல் அணியா முகிழ்த்து நடுநிலை மக்களிடம் ஓரளவு செல்வாக்கும் வளர்த்துகிட்ட மநகூ திடீர்னு இப்படி சரண்டர் ஆகியிருக்க தேவையே இல்லை.


திருமா, தா.பா, வைகோ, ரங்கராஜன், நல்லகண்ணு, மல்லை சத்யான்னு ஒரு மிகப்பெரிய பிரச்சார பெரும் குழுவே உள்ள ஒரே அணி மநகூ. நான் கூட இவங்க ஒவ்வொரு திசையிலும் பின்னி பெடலெடுத்து பிரச்சாரம் பண்ணினா தனிப்பெரும் தகுதியோட ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்குனு நினைச்சிருக்கேன். மேலும் இந்த அணி தலைவர்கள் மேல எந்த குற்றச்சாட்டும் பெரிசா இல்லை. எந்த அதிருப்தியும் இல்லை. சில சின்ன சின்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதனால் மிக பெரிய நம்பிக்கை இந்த அணி மேல எல்லோருக்கும் இருந்துச்சு.

ஆனா, திடீர்னு கேப்டன் காலில் விழுந்து அவருக்காக எல்லா கொள்கை முடிவுகளையும் மறு பரிசீலனை செஞ்சு பல முடிவுகளை மாத்தி அவருக்கு தகுந்த மாதிரி நெளிஞ்சு வளைஞ்சு குனிஞ்சு நிக்கிறது பார்க்க கஷ்டமா தான் இருக்கு. தமிழ்நாட்டோட அதிர்ஷ்டம் அம்புட்டு தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.


தேமுதிகவை பொறுத்த வரைக்கும் மநகூவை சேர்த்துக்கிட்டாலும் மிக பெரிய பிரச்சனை என்னன்னா அது தனியா 124 தொகுதிகளிலும் ஜெயிச்சாகனும். அப்ப தான்  மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். அதிமுக, திமுக பண / படை பலத்தை எதிர்த்து நின்னு போராட வேண்டி இருக்கும். மிக சிறப்பான பிரச்சார படை இருந்தாலும் கேப்டன் ஒருத்தரின் ஏடாகூடமான ஒரே ஒரு பிரச்சாரம் மொத்த இமேஜையும் கெடுத்திரும். அதனால தான் இப்பவே கேப்டன் பிரச்சாரம் செய்ய மாட்டார்னு தெளிவா சொல்லி இருக்காங்க. பிரச்சாரம் மட்டும் தான் இந்த அணியின் பலம். நம்பகத்தன்மை போனவாரமே போயிருச்சு. வைகோ தன் சுய நலத்துக்காக கூட்டணியை அடமானம் வெச்சது ஏற்கனவே தோழர்களை கடுப்பாக்கி இருக்கு. சிறுத்தைகளின் மௌன உறுமல்கள் இன்னொரு பக்கம். இந்த சூழல்ல சிந்தாம சிதறாம கூட்டணியை கட்டி காக்கவேண்டிய பெரிய பொறுப்பு வைகோவுக்கு இருக்கு. ரெண்டு நாளா பிரேமலதா வேறே வைகோவுக்கு மறைமுகமா கடுப்பை கொடுத்துட்டு வர்றதையும் கவனிக்கணும். ஒரு கட்டத்தில் அதை சகிக்க முடியாம போனா உணர்ச்சி வசப்பட்டு சட்டுனு கூட்டணியை விட்டு வெளிநடப்பு செய்ய கூட வைகோ தயங்க மாட்டாரு. அது மட்டும் நடந்தா வைகோ அதிமுக அணிக்கும் திருமா திமுக அணிக்கும் போய்விட கூட சான்ஸ் இருக்கு.


தமாகா ஓரளவு சில தொகுதிகளில் வாக்கு வங்கி வெச்சிருக்குன்னாலும் தனியா நின்னு ஒரு தொகுதியை வெற்றி கொள்ளும் அளவுக்கு எந்த தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குகள் அதுக்கு இல்லை. அதனால் கூட்டணி தான் பெஸ்டுன்னு புரிஞ்சு வெச்சிருக்காரு வாசன். அந்த மட்டும் சந்தோஷம். ஆனா கட்சியின் செல்வாக்கு லெவல் என்னன்னு தெரியாம 60 வேணும் 80 வேணும்னு கேக்குறது எல்லாம் சரியா படலை. அதிமுக ஓரளவுக்கு தாராளமா 25 தொகுதி வரை தர்றேன்னு சொல்றதே பெரிய விஷயம். ஆனா அதை வேண்டாம்னு முறுக்கிட்டு திமுக பக்கம் வந்தாலோ தேமுதிகவுடன் சேர்ந்தாலோ வாசனுக்கு நஷ்டம் தான்.

பாமக வடக்கு வடகிழக்கு மாவட்டங்களில் ஓட்டை பிரிக்கும். பாஜக 3 தொகுதிகளில் செல்வாக்கு உள்ள தேசிய கட்சி. அங்கே அவங்களும் ஓட்டை பிரிப்பாங்க. ஏற்கனவே அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மூணா பிரிஞ்சு நிக்குது. அதனால் அதிமுகவுக்கு தான் லாபம்.

மார்ச் 29 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டுல தொடர்ந்து நடக்கப்போகும் விசாரணை அதன் தீர்ப்பு தேதி அந்த தீர்ப்பின் தாக்கம் ஒரு பக்கம், உட்கட்சி குழப்பங்களை எந்த அளவுக்கு அம்மாவால திறமையா கட்டுப்படுத்தி அடக்க முடியுதுன்றது இன்னொருபக்கம். இந்த ரெண்டில் ஏதாவது ஒண்ணு பாதகமா போனாலும் ஓட்டு ஸ்விங் ஆகி தேமுதிக பக்கம் சாயும். நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் என்பதால், பிரிந்து நிற்கும் ஓட்டுக்களும் சிதறிக்கிடக்கும் செல்வாக்குகளும் டீபால்ட்டா அதிமுகவை வெற்றி அடைய செய்யும். ஆனா நம்பகத்தன்மை போயிருச்சுன்னா நடுநிலை வாக்காளர்கள் அதிமுகவுக்கு மாற்றா தேமுதிகவை தான் முன்னிலைப்படுத்துவாங்காண்ணு நினைக்கிறேன்.

விஜயகாந்துக்கு அதிர்ஷ்டம் இருக்குனு தான் நினைக்கிறேன்.

அடுத்த பத்து நாளில் நடக்கப்போகிற நிகழ்வுகள் தான் தமிழக வரலாறை தீர்மானிக்க போகுது. பத்து நாள் கழிச்சு மீண்டும் பேசுவோம்.

1 comment:

  1. “நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள்”
    உண்மை. இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். சமீபத்தில் அவர் அடித்த கூத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

    ReplyDelete

Printfriendly