Tuesday, September 26, 2017

ஜெ.மரணம் - எங்கே நேர்ந்த தவறு?


திண்டுக்கல் சீனிவாசன்

இந்த பெயர் தான் சில நாட்களாக மிக பிரபலம்


முதல்வராக இருந்த ஜெ. உடல்நிலை குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின் நடந்த அத்தனை நாடகங்களும் நாம் அறிந்ததே. இப்போது சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகவே சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

அதாவது, ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில் அவரை நாங்கள் யாரும் பார்க்கவே இல்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாமே மக்களை பதட்டப்படாமல் வைத்திருப்பதற்காக சொல்லப்பட்ட பொய். என பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார்.

இதன் மூலம் இப்போது மீண்டும் பல பல கேள்விகள் முளைத்து எழுகின்றன.

வெறும் காய்ச்சல் & நீர்ச்சத்து குறைபாடு என சேர்க்கப்பட்ட ஜெ.வுக்கு உண்மையில் என்ன தான் பிரச்சனை?

அப்பல்லோவில் கடைசி வரை கூடவே இருந்து கவனித்து கொண்டது யார். (தினகரன் இப்போது திடீரென்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சசிகலாவை கூட அனுமதிக்கவில்லை என சொல்வதை பார்த்தால் தனியாக கவனிப்பார் யாருமின்றி தான் சிகிச்சை பெற்றாரா?)

உடல் நலம் பெற்று ஓய்வில் இருப்பதாகவும், காவிரி வழக்கு விஷயமாக அப்பல்லோவிலேயே அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், வழக்கறிஞர்களுக்கே வழிகாட்டியதாகவும் செய்தி வெளியிடவேண்டிய நோக்கம் என்ன?

வெறும் மூன்று நாள் தான் சுயநினைவோடு இருந்தார் என தீபக் இப்போது சொல்வது உண்மையானால், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வை ஜெ.தான் செய்தார் எனவும், தேர்தல் ஆணயத்துக்கான பிரமாண பத்திரத்தில் ஜெ. தான் கைரேகை பதித்தார் எனவும் அதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சாட்சி எனவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டது எதற்காக?

ஆளுநர், அமைச்சர்கள் ஏன் அவரது மெய்க்காப்பாளர்கள் கூட பார்க்க அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நிலைமை?

இன்னும் இது போன்ற பல விவகாரமான கேள்விகள் எல்லாம் வராமல் இல்லை.

அப்போதே பலரும் இது பற்றிய சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். திமுக தலைவர் கலைஞர் இன்னும் ஒரு படி மேலே போய், அரசு அதிகாரிகள் நியாயமாக வெளியிட்டிருக்கவேண்டிய அறிக்கைகள், புகைபடங்கள் கூட வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன் என்றே கூட கேள்வி எழுப்பி இருந்தார்.

***

ஜெ. குறித்த சின்ன சின்ன செய்திகள் வந்தப்பவே அதைப் பற்றி விசாரிக்கறதை விட்டுட்டு அப்படி தகவல் தருவோர் மீது நடவடிக்கைன்னு போலீஸ் அறிவிச்சதை விட முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

போலீஸ், அரசின் கீழ் வந்தாலும் அவர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கு. சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு.

தனது துறை அமைச்சரே தவறு செய்தாலும் அதை உளவுத்துறை மூலம் கண்காணித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து சட்டத்தை காக்கும் பொறுப்பு போலீசினுடையது.


ஆனால் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, ஏன் எதனால் என்றெல்லாம் விசாரித்து எங்கேனும் தவறு நடக்கிறதா என கண்காணித்திருக்கவேண்டிய போலீஸ், வாளாவிருந்தது மட்டுமல்ல, அவர் பற்றிய தகவல்களை கூட மறைத்துவிட்டது.

அரசுகள் மாறலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நிரந்தரம். அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலும் கூட அரசு அதிகாரிகள் செயல்படமுடியும். அதனால் தான் அவர்கள் மாநில ஆட்சிப்பணியின் கீழ் அல்லாமல் மத்திய ஆட்சிப்பணியின் கீழ் வருகிறார்கள்.

அவர்களாவது ஜெ. குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். தலைமைச்செயலாளர் தான் அதற்கான பொறுப்பாளர்.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளும் போலீஸ் துறையும் தத்தம் கடமைகளில் இருந்து தவறியதாலேயே நம் முக்கியமான தலைவரை நாம் இழந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போதேனும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடமைகளை உடனடியாக எடுத்து நடந்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதுடன், யாரேனும் இதற்கு காரணமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

அதுதான் அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் இந்திய சட்டம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்துக்கும் அழகு!

***

இப்போது தமிழக அரசு நீதியரசர் ஆறுமுகசாமி அவர்களை விசாரணை நீதிபதியாக அறிவித்து இருக்கிறது.

ஜெ.வுக்கு என்ன நடந்தது, ஏன் எல்லோரும் அனுமதி மறுக்கப்பட்டனர், அத்தனை நாளும் நடந்த விஷயங்கள் யார் கட்டுப்பாட்டில் நடந்தது, அரசு அதிகாரிகளும் போலீசும் ஏன் இப்படி மொத்தமாக கடமை தவறி அடங்கி இருந்தார்கள் என்பன போன்ற கேள்விகளுடன், எயிம்ஸ், லண்டன் டாக்டர், அப்பல்லோ கொடுத்த சிகிச்சை விவரங்களையும் நீதிபதி வெளிக்கொணர்ந்து ஆராய வேண்டும்.

ஜெ. தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர். பெரும்பாலான மக்களால் நேசிக்கப்பட்டவர். அவரது இழப்பில் உள்ள மர்மங்களையும், அதற்கான சதிகள் ஏதும் இருந்தால் அதையும் வெளிக்கொண்டு வருவதோடு, கடமை தவறிய அரசு அதிகாரிகள், உண்மை தெரிந்தும் மறைத்த மற்ற பெரும் தலைவர்கள் என எல்லோர் மீதும் தண்டனைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆசை.

நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இது தான் நடந்தது.. இவர்கள் தான் காரண கர்த்தாக்கள்.. இவர்கள் எல்லோரும் அதற்கு உடந்தை.. இவர்களுக்கு எல்லாம் இது தான் தண்டனை என்கிற பரிந்துரையேனும் குறைந்தபட்சம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறுமில்லை.

நீதிபதி ஆறுமுகசாமி அவர்கள் அதை தக்க விதத்தில் சட்டத்திற்குட்பட்டு  பரிந்துரைப்பார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!


2 comments:

  1. ஏமாளி மக்கள் இருக்கும்வரை ஒன்னும் நடக்காது

    ReplyDelete
  2. Jaya ennamo periya uthama puthiri maathiri sombu adikira.

    ReplyDelete

Printfriendly