Saturday, June 27, 2026

வைகோ

 2004 பிப் 7 - மறக்கமுடியாத நாள்

என்னுடைய பிறந்தநாள் என்பதற்காக மட்டும் அல்ல

அன்றைக்கு தான் அண்ணன் வைகோ வேலூர் சிறையில் இருந்து வெளி வந்தார். 

தேர்தல் காலம்

வேலூரில் இருந்து வந்தவர் அன்று மாலை ஷெனாய் நகர் பொதுக்கூட்டத்தில் பேசினார்

நானும் நண்பர்களும் அந்த கூட்டத்தில் இருந்தோம். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தீவிர மதிமுக நிர்வாகி. அவருடன் சென்று இருந்தேன்.

ஏற்கனவே வைகோ அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன். ஓங்கி உயர்ந்து ஆரோகணமும் அவரோகணமுமாக அவர் ஆற்றும் தெள்ளு தமிழ் உரையை அதற்கு முன்பும் சில முறை நேரில் கேட்டு இருக்கிறேன். அதனால் நண்பன் அழைத்ததும் வேலையில் இருந்து நேரே ஷெனாய் நகர் போய்விட்டோம்.

திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

மிகப்பிரமாதமான ஒரு அரசியல் பேருரை.. அன்று அனலாக பொழிந்தது அவரது பேச்சு..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பேச்சின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்க தொடங்குகிறார்..

மூன்று பேரின் பெயர்களை அறிவித்து விட்டு கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்.

மிச்சம் இருக்கும் தொகுதி.. சிவகாசி. 

அவர் தான் வேட்பாளராக இறங்குவார் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்து நிற்க.. 

"நாடாளுமன்ற தேர்தல்.. சிவகாசி தொகுதி.. போட்டியிடும் கட்சி மதிமுக.. போட்டியிடும் சின்னம் பம்பரம்.. போட்டியிடும் வேட்பாளர்..." என்று சொல்லி மேலும் சஸ்பென்ஸ் வைத்தார்..

எங்களுக்கு நெஞ்சு துடிப்பு அதிகரிக்க தொடங்கியது..

தொண்டர்கள் பட்டாசுகளை கொளுத்த தொடங்கினார்கள்..

வானவேடிக்கை முழங்கி கொண்டு இருக்க

"..போட்டியிடும் வேட்பாளர்.. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்.. நன்றி வணக்கம்" என சொல்லி விடு விடுவென்று மேடையை விட்டு இறங்கி விட்டார்

நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றோம்.. அவர் என்ன சொன்னார் என புரியவே சில கணங்கள் ஆகிவிட்டது.



பதவி ஆசைகளுக்கு அதிகாரங்களுக்கு புகழுக்கு என எதற்கும் ஆசைப்படாத.. கொள்கை குன்றாக அன்றைக்கு எங்களுக்கு காட்சி அளித்தார் அண்ணன் வைகோ.

திமுக கூட்டணியில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றது மதிமுக.

ஆனால் அதற்கு அடுத்த ரெண்டு வருஷத்திலேயே 2006 சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதிகள் திமுக ஒதுக்கியும், ஒரே ஒரு தொகுதியை காரணமாக வைத்து அதிமுக அணிக்கு தாவி அங்கே 35 தொகுதிகள் வாங்கி அதில் 6 தொகுதிகள் மட்டுமே வென்றார். ஒருவேளை திமுக கூட்டணியில் நின்று இருந்தால் அதிக தொகுதிகள் வென்று இருப்பார்.

கடைசி நேரத்தில் திமுகவை விட்டு சென்றதும், அதற்கு அவர் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாததும், எனக்கு  அவர் மீதான மதிப்பு சரிய காரணமானது.. 

இப்போதும் அதே போல எந்த விதமான காரணமும் சொல்லாமல் கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார். அது அவரது கட்சியின் நலன் சார்ந்து அவர் எடுத்த முடிவு என புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக தேவையே இல்லாமல் ஸ்டாலின் தன்னை மரியாதைக்குறைவாக நடத்தினார், சரியாக பேசவில்லை என்று எல்லாம் குற்றம் சாட்டி உள்ளது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு அப்படி என்ன சூழல் என எனக்கு தெரியவில்லை.

எத்தனை முறை கைவிட்டு சென்ற போதும்.. திரும்பி வந்த நேரங்களில் ஆரத்தழுவி அவரை ஏற்றுக்கொண்ட இயக்கமாக திமுக இருந்திருக்கிறது.

மீண்டும் அப்படி ஒரு சூழல் வந்தாலும் திமுக அப்படி தான் இருக்கும். அது தான் திமுகவின் பண்பாடு

ஆனால் தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆசை எல்லாம்.. அப்படி ஒரு சூழல் இனி வந்தால் மீண்டும் ஏற்றுக்கொள்ள தேவை இல்லை என்பதே.

நான் மாபெரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்த மற்றும் ஒரு தலைவரை நான் இப்போது வெறும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக பார்க்க நேர்கிறதே என்கிற வருத்தம் இன்றைக்கு எனக்கு உண்டு.

உங்கள் தமிழுக்கும் நீங்கள் எங்களுக்கு புரியவைத்த உலக அரசியல் வரலாற்றுக்கும் நன்றி அண்ணா  🙏🙏🙏

No comments:

Post a Comment

Printfriendly